Friday, January 22, 2021

சிறப்பு அழைப்பிதழ்

 அன்பு நண்பர்களே ,

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக் குழுத்தலைவராக அடியேன்   தேர்ந்தெடுக்கப்பட்டு , வெள்ளி தோறும் இலக்கிய உலா நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம் .அந்த வரிசையில் இன்று மாலை ( சனவரி  22, 2021)கிழக்கு நேரம் ஒன்பது மணிக்கு முனைவர் மகா சுந்தர் அவர்கள் பேசுகிறார்.அதன் விவரங்களை கீழே காண்க .



அடுத்து , நாளை சனிக்கிழமை நியூ ஜெர்சியில் இயங்கும் தமிழ் அவை நடத்தும் கருத்தரங்கத்தில் அடியேன் கலந்து கொண்டு "பண்டிகைகள் காட்டும் உறவுகள்: என்ற தலைப்பில் பேசுகிறேன்.இது சனவரி 23 , 2021 கிழக்கு நேரம் காலை  10 மணிக்கு நடைபெறுகிறது .





இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும்படி அன்பாய்  அழைக்கிறேன் .

நியூயார்க் தமிழ்ச்சங்க இலக்கிய  குழு நிகழ்வுகளில் நீங்கள் பங்கு பெற விரும்பினால் , என்னுடைய ஈமெய்லுக்கு தொடர்பு கொள்ளவும் 

alfred_rajsek@yahoo.com 

உங்கள் பரதேசி 



Monday, January 18, 2021

டி ஐ ஜி என் மாமா!

பரதேசியின் வாகனங்கள் பகுதி-3



                   இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்
https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post.html

தொடர்ந்து இரண்டு நாள் மாட்டியதால், மூன்றாவது நாள் மிகுந்த டென்ஷனில் இருந்தேன். ஆனால் அன்றைய நாள் சிக்னல் இருந்ததால் யாரையும் பார்க்காமல் நேராக ஓட்டி வந்து விட்டேன். அடுத்த நாளும் ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. ஒரு வாரம் இப்படிக் கழிந்தது.

ஆனால் அதன்பின் வந்த அடுத்த வாரத்தின் முதல் நாளில் அதே போல் வந்து கொண்டிருக்கும் போது மறந்து போய் அங்கிருந்த போலீஸ்காரரை கண்ணுக்கு கண் பார்த்துவிட்டேன். வழியை மறித்து ஓரங்கட்டச் சொன்னார். எனக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்துவிட்டது. உடனே நீங்க நினைக்கிறது போல எதுவும் நடக்கவில்லை. "சார் டெய்லி இதே தொல்லையாப்போச்சு, எனக்கு வண்டியும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு" அவரிடம் சொல்லிட்டு , ஆனால் கையில் சாவியையும் வைத்துக் கொண்டு விடுவிடென்று எதிர்த்திசையில் நடந்தேன். அதிர்ந்து போன போலீஸ்காரர் என் பின்னால் ஓடி வந்து, "தம்பி கோபப்படாதே வண்டியை  எடுத்துட்டுப்போ, எல்லாம் உங்க பாதுகாப்புக்காகத்தான் இதையெல்லாம் செய்யறோம்”னு சொன்னதைக் கேட்டவுடன் எனக்குக் கோபம் போய்  சிரிப்பு  வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் போனேன். நான் உள்ளே நுழையும்போது, வெளியில் 

புரொடக்சன் மேனேஜர் நஸீர் வந்து கொண்டிருந்தார். "எங்க போன, உன்னைத்தேடினோம், பிரஸ்ஸிங் செக்சனில் ஒரு பிரச்சனை, என்னன்னு போய்ப்பாத்துட்டு என்ட்ட சொல்லு”ன்னு சொன்னார்.

அதுக்கப்புறம் மதியம் லஞ்சுக்குப் பிறகு, அவரைப் பார்க்கும் போது, "என்னப்பா எப்பவும் எல்லோருக்கும் முன்னால வந்துருவ, என்னாச்சு அடிக்கடி லேட்டா வர்றயே? என்ன பிரச்சனை"ன்னு கேட்டார். தினமும் எனக்கு நடக்கும் பிரச்னைகளை அவரிடம்  சொன்னேன். அப்ப அவர் பலமாகச் சிரித்துவிட்டு, அத சால்வ் பண்றதுக்கு ஒரு ஐடியா கொடுத்தார்.

 "சார் இது வொர்க் அவுட் ஆகுமா? அவங்க செக் பண்ணா என்னாகும்?”

"ஒண்ணும் ஆகாது, அவங்க நிச்சயமா செக் பண்ணமாட்டாங்க”,ன்னு சொன்னார். நானும் அத அடுத்த நாள் டிரை பண்ணேன்.

அன்னிக்குப் பிடிச்சா என்ன சொல்றதுன்னு மனசுக்குள் பிராக்டிஸ் பண்ணேன். ஆனாலும் கொஞ்சம் உதறலாத்தான் இருந்துச்சு. அவங்க அசோஸியேஷன்ல பேசி இப்படி தினம் ஒரு இளிச்ச வாயன் வாரான் , அவனிடம் முடிந்த அளவுக்கு கறக்கச்சொல்லி சர்குலர்  அனுப்பிருப்பாய்ங்க போலருக்கு .நெத்தியில் எனக்குத்தெரியாத ஒன்றை அவர்கள் படிப்பது போல எனக்கு சந்தேகமாக இருந்தது  அதே மாதிரி என்னைப் பாத்ததும் போலீஸ்காரர் என்னை ஓரம் கட்டச்சொன்னார். நானும் அவர்ட்ட போய், "சார் என்ட்ட லைசென்ஸ் RC புக், ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் கரெக்டா இருக்கு. ஸ்பீடும் ஸ்லோவாத்தான் வந்தேன். ஆனாலும் தினம் பிடிக்கிறீங்க. இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் அவரை தொந்தரவு பண்ணவேணாம்னு நினைச்சேன். ஆனால் வேற வழியில்லை, அவர்ட்ட சொல்ல வேண்டியதுதான்."




அவர் தெனாவட்டாக சிரித்துக் கொண்டு, "யார்பா அவர்" என்று கேட்டார். "இருங்க வர்ரேன்”,னு சொல்லிட்டு, பாக்கெட்டில் இருந்து, பேப்பர், பேனாவை எடுத்து அவருடைய நேம் பேட்ஜ்,  பார்த்து அவருடைய பேரையும் நம்பரையும் எழுதினேன்.

"என்னப்பா சொல்ற?”, சிறிது குரல் மாறியது.

"எந்த ஸ்டேஷன் சார் நீங்க?

"யாருப்பா அவர்"

"அலெக்சாண்டார், டிஜிபி"

அவர் கொஞ்சம் கலவரமாகி, "அவரை உனக்கு எப்படித்தெரியும்"

“அவர் என்னோட அங்கிள்

“உங்க பேர்?” மரியாதை கூடியது.

“என்னோட பேர் ஆல்ஃபிரட்”

 இரண்டு பெரும் இங்கிலீஸ் பேர்னால அந்தப் போலீஸ்காரர் ரொம்பப்  பயந்து போய்,

"சார் முன்னால சொல்லக்கூடாதா" வண்டியை எடுத்துட்டு போங்க சார்" மரியாதை ரொம்ப கூடிப் போனது.

நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு கொஞ்சம் கெத்தாகவே வண்டியை எடுத்துட்டுப் போனேன். போய் நஸீர் சார்ட்ட சொல்லி, ரெண்டு பேரும் நல்லாச் சிரித்தோம்.

அதுக்குள்ள நானும் வண்டி ஓட்டறதுல கொஞ்சம் தேறி, ஓரமாய் ஓட்டாமல் ரோட்டின் நடுவில் ஓட்ட ஆரம்பிச்சேன். ஓரிரு முறை அவர் பேரை யூஸ் பண்ணேன். ஓரிரு முறை என்னை வழியில் பார்த்த அதே போலீஸ்காரர் மெல்லிய ஒரு சல்யூட் வைத்ததாக ஞாபகம்.

அதுக்குள்ள எனக்கு ரொம்ப வேண்டியவர் சந்திரசேகர் என்பவர் சென்னையின் வடபழனி பகுதியின் அஸிஸ்டண்ட்  கமிசனராகப் பதவியேற்றதால் எனக்கு தெனாவட்டு மேலும் கூடிப்போனது.  

இந்த சந்திரசேகர் என்னுடைய முதுகலை வகுப்புத் தோழியின் சகோதரர். இவரை நான் படிக்கும் போதிருந்தே நன்றாகத் தெரியும். சமீபத்தில்தான் DIG ரேங்கில் ஓய்வு பெற்றார் இன்னும் சொல்லப்போனால் இவருடைய மனைவிதான் தமிழச்சி தங்கப் பாண்டியன், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர். இவர்களுக்கு கலைஞர் தலைமையில் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த திருமணத்தில் நானும் கலந்து கொண்டேன்.  இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சுமதி என்ற தமிழச்சி தங்கப்பாண்டியனின் இளைய சகோதரர்தான் தங்கம் தென்னரசு, தமிழக கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். இவர்கள்  குடும்பம் முழுவதும் எனக்கு நெருக்கமானவர்கள்.

 

கொஞ்சம் நாட்கள் எந்த பிரச்சனையில்லாமல் வண்டி ஓடியது. எந்த வண்டின்னு கேட்டீங்கன்னா இரண்டு வண்டியும்தான் ஒன்று வாழ்க்கை வண்டி மற்றொன்று என்னுடைய வாகனமான கிரே கலர் டிவிஎஸ் சேம்ப். அதில் ஏறி ஓட்டும்போது ஒரு சேம்பியன் போலத் தோன்றவில்லை என்றாலும், சென்னையின் சாலைகளை எல்லா முறைகளிலும் அறிமுகப்படுத்திய வண்டி அதுதான்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு மறுபடியுமாக அதே இடத்தில் ஓரங்கட்டப்பட்டேன். இப்போது கொஞ்சம் தைரியம் அதிகமாகி விட்டது.

"என்ன சார் எதுக்கு நிறுத்தச் சொல்றீங்க “

"தம்பி லைசென்ஸ், RC Book எல்லாம் எடு"

"அதான் எதுக்குன்னு கேட்டேன்?"

"தம்பி மேலிடத்து உத்தரவு, எல்லாத்தையும் செக் பண்றோம்".

"சார் நானும் மேலிடம் தான் என் மேல ஏதாவது தப்பிருந்தா சொல்லுங்க. இந்தாங்க லைசென்ஸ் RC புக் எல்லாம், நல்லாப்பாருங்க"

"தம்பி ஸ்பீடு"

"சார் உங்களுக்கே நல்லாத்தெரியும் நான் மிக மெதுவாத்தான் வந்தேன். நாங்கல்லாம் நல்ல குடும்பம் சார். அப்படி அடாவடியாக ஓவர் ஸ்பீட் போகமாட்டேன்.

"என்ன தம்பி மேலிடம்ற, யாருப்பா நீ"

"சந்திரசேகர் தெரியுமா?"

“யாருப்பா அவர்”

"சந்திரசேகர் ஐபிஎஸ், வடபழனி ஏ.சி"

"ஆமா ஐயாவைத் தெரியும் ஆனா நீங்க"

"நான் ராஜசேகர் சந்திர சேகரோட தம்பி"

அப்புறம் நடந்ததை அடுத்த பகுதியில் சொல்றேன்.    

 

தொடரும்

 

Thursday, January 14, 2021

நியூயார்க்கில் பொங்கல் -2021

 


பொங்கலும் வந்தாச்சு

தையும் பொறந்தாச்சு !

 

இன்று காலையில்

ஓட் கஞ்சியை  கொதிக்க விட்டு

பொங்கலோ பொங்கல்னு சொன்னேன் !.

 

என்  செய்வேன்

திங்க

பொங்கலும்  இல்லை

கடிக்க

கரும்பும் இல்லை

பொங்கலுக்கு லீவுமில்லை

போட்டுப்பாக்க  புதுசும் இல்லை !

 

வாழ்த்து மட்டும்

வாட்ஸாப் பூரா கொட்டுது

ஆனால்

வலி தீர இன்னும்

வழியில்லையே !

 

தமிழ்ச்சங்க விழா வரும்

தரமான பொங்கல் தரும்னு நினைச்சேன்

அதுவும் ஆன்லைனாம்

அம்புட்டும் ஜூம் லைனாம்!


கொரானாவும் போகலை

கொடுமைச்சாவும் நிக்கலை

புதுசு  புதுசா வரு து

தினுசு தினுசு  கொல்லுது! 

 

கடைக்கும் போகமுடியலை

கவசத்தையும் கழட்ட முடியலை!

 

தடுப்பூசி வந்தாச்சு ஆனா

நமக்கு வர

நாலஞ்சு  மாசம் ஆகுமாம் !

 

டிரம்ப் போயி

பைடன் வந்தாச்சு

வேலை கிடைக்குமா

வெளிச்சம் வீசுமா ?

 

ரெண்டா பிரிஞ்சு நிக்குது ஜனநாயகம்

ஒண்ணா சேர்க்குமா புது பைடன் நாயகம் !

 

இந்தியாவில்

கார்போரேட்டுகளின் ஆட்சி

கனவுகளைச்சிதைக்குது

விவசாயி ஓலம் காதுல கேக்கலை

விவசாயி சாவு இன்னும் நிக்கலை


 தமிழகத்தில்

அரசியல் சத்தம்

அதிகமா கேக்குது

ஆட்சிக்கு யாரு வரதுன்னு

அடிதடி பேச்சு நடக்குது

 

இப்ப

பல தடவை  வருவாங்க

பாசத்தை காட்டுவாங்க

பரிசுகளும் கொட்டுவாங்க

 

வாங்கி வைத்துக்கொண்டு

வாக்குப்போடும்போது

நோக்கப்படி போடுங்க

 

கேட்ட பணம் கிடைச்சாலும்

ஓட்டை மட்டும் விக்காதீங்க

சன்மானம் கிடைத்தாலும்

தன்மானத்தை

தாரை வாத்திடாதீங்க

 

தை பிறந்தாச்சு

வழியும் பிறக்கும்

நம்புவோம்

எஞ்சியிருப்பது

நம்பிக்கை மட்டும்தானே

 

பொங்கல் நல்வாழ்த்துகள்

அன்புடன்

உங்கள் பரதேசி

ஆல் ஃபிரட் தியாகராஜன்

 

அன்பு நண்பர்களே பொன்விழாக்கண்ட  நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக்குழுத்தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன் ,வெள்ளிதோறும் இலக்கிய உலாக்களை நடத்தத்துவங்கியிருக்கிறோம்.  அனைத்தும் ஆன்லைன் என்பதால் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் , நன்றி .




Monday, January 11, 2021

லஞ்ச் காசும் லஞ்சக் காசும் !

பரதேசியின் வாகனங்கள் பகுதி -2

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/1.html

 



இதுவரை நான் வளர்ந்த ஊரான தேவதானப்பட்டியில் ஒரு நாள் கூட ஓட்டாத என் சைக்கிள் வாகனத்தை, பக்கத்து ஊரான பெரியகுளம், படித்த ஊரான மதுரை,(ஆனால் படித்து முடித்த பின்தான்) முதல் வேலை கிடைத்த சாட்சியாபுரம், சிவகாசி, 2-ஆவது வேலை செய்த வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, அதன் பின் சென்னையில் செய்த இரு வேலைகள் என சைக்கிள் வாகனம் கைகொடுத்தது, மன்னிக்க கால் கொடுத்தது. என் வாழ்க்கை உருண்டோட சக்கரம் கொடுத்தது என்றும் சொல்லலாம்.

சென்னையில் முதல் வேலை மாமாவின் கன்ஸ்ட்ரக்சன்  கம்பெனியில் சூப்பர்வைசர். இரண்டாவது வேலை அரசினர் மருத்துவ மனையோடு இணைந்திருந்த சைக்கியாட்ரிக் டிபார்ட்மென்ட்டல் நடந்த ICMR (Indian Council of Medical  Research) நடத்திய பிராஜெக்ட்டில் டேட்டா கலெக்ஷன் வேலை. இது WHO  என்ற வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் நிதியில் நடந்தது. கீழ்ப்பாக் கார்டனில் என் மாமா வீட்டில் தங்கியிருந்த போது தான் இந்த இரண்டு வேலை, செய்தேன். பின்னர் மனிதவளமேம்பாட்டு வேலைகளில் இருந்த ஆர்வம் காரணமாக அதனைவிட்டுவிட்டு இன்ட்டர் கிராப்ட்டில் சேர்ந்தேன். மாமா வீட்டிலிருந்து  சைக்கிளில் வந்து ஆற்காடு  சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு, அங்கிருந்து நேராக ஒரு பஸ்ஸில் பாரிமுனை சென்று, என் அலுவலகத்திற்கு நடந்து சென்றுவிடுவேன். என்னுடைய அலுவலகம் ஆர்மேனியின் தெருவிலும் இன்னொரு யூனிட் பிராட்வே அருகில் இருந்த டேவிட்சன் தெருவில் மினர்வா தியேட்டர் அருகிலும் இருந்தது.  இந்த இரண்டு அலுவலகங்கிலும் எனக்கு  இருக்கைகள்  உண்டு . இங்கு  வேலை செய்த ஆண்டு 1988 முதல் 1992 வரை .

பேச்சிலர் வாழ்க்கை தொடர்ந்த போது என் அம்மா, "தம்பி உனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கோயேன்" என்று சொன்னார்கள். "ஸ்கூட்டரா அது வேண்டாம்மா, அது எனக்குப் பிடிக்காது" என்றேன். "அப்ப உனக்குப்பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள் ,நான் பணம் தருகிறேன்." என்று சொன்னார்கள்.

சிறு வயதில் புல்லட் எனக்குப் பிடித்திருந்தாலும் அதனை ஓட்டும் அளவுக்கு மனதில் தைரியமில்லை, உடலில் வலுவுமில்லை என நினைத்து முதலில் TVS போன்ற மொபெட் வாங்கலாம் என முடிவு செய்தேன். ஷோ ரூமுக்குச் சென்றபோது TVS 50 ஐ விட புதிதாக வந்திருந்த TVS சேம்ப் பார்க்க நன்றாக இருந்தது. அப்போது பாரிமுனையில்    இருந்த "இன்ட்டர்கிராப்ஃட் செளத் எக்ஸ்போர்ட்ஸ்" என்ற கம்பெனியில் மனிதவளத்துறையில் "பெர்சனல் (Personnel) ஆஃபிசராக சேர்ந்த சமயம்.   

என் மகன் ஒரு ஆஃபிசரா(?) ஆயிட்டான்ற ஒரு சந்தோஷத்தில் எங்கம்மா எனக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டாங்க. 

.




டி.வி. எஸ் சேம்ப் ஒரு நல்ல வண்டி. குறைந்த செலவு, பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கும். டி.வி.எஸ் சேம்ப் வாங்கியவுடன் வீட்டிலிருந்தே வண்டியை ஓட்டிக் கொண்டு பூந்தமல்லி சாலை வழியாக நேராகச் சென்று, சென்ட்ரல் ஸ்டேஷன் தாண்டிச் சென்று அப்படியே பாரிமுனை செல்வது என் வழக்கம். மிக மெதுவாகத்தான் செல்வேன். அதாவது மிகமிக மெதுவாகத்தான் செல்வேன். இடதுபுற ஓரம்தான் செல்வேன். ஆரம்பத்தில் சில சைக்கிள்காரர்கள் என்னை முந்திச் சென்றிருக்கிறார்கள். ஏன்  சில சமயம் நடந்து போகிறவர்கள் கூட கடந்து போயிருக்கிறார்கள். அதனைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் நான் பாட்டுக்கு தேமேன்னு ஓட்டிச் சென்ற முதல் நாள் சென்ட்ரல் ஸ்டேஷனைத் தாண்டும் போதுஒரு டிராஃபிக் போலீஸ் வழிமறித்தார். லைசென்ஸ், RC புக் எல்லாம் செக் செய்தபின், "எவ்வளவு பணம் வச்சிருக்க?" என்றார்.

“எதுக்கு சார்?”

“ஃபைன் கட்டறதுக்கு?”

“எதுக்கு  ஃபைன் சார்?”

"எப்பா ஸ்பீடா வந்துட்டு எதுக்கு ஃபைன்னு கேக்கிற"

"என்னாது ஸ்பீடா வந்தேனா? நடக்கிறவன் கூட என்னை முந்திப் போனான், என்ன சார் சொல்றீங்க?"

"சரி சரி வளவளன்னு பேசாதே, சார்ஜன்ட்ட போனா நூறு ரூபாய்க்கு மேல ஆகும்".

"என்ன சார் நான் ஸ்பீடா போகவேயில்லியே"

"சரி, இருக்கறத கொடுத்துட்டு போ"

பாக்கெட்டில் கையில் விட்டால் லஞ்ச்சுக்கு வச்சிருந்த 10 ரூபாய் பணம் இருந்தது, லேசாக வெளியே தெரிந்தவுடன் அதனைப்பறித்துக் கொண்டு "போ தம்பி, பாத்துப்போ" என்று சொன்னார், அந்தத் திறமையான, நியாயமான, நேர்மையான போலீஸ்காரர். இது என் முதல் நாள் அனுபவம். வழிப்பறிக் கொள்ளை என்பது இதுதானோ? நானும் நொந்து கொண்டே சிறிது தூரம் உருட்டிக் கொண்டு போய், அப்புறம் மெதுவாக ஏறி ஓட்டிக் கொண்டு ஒரு மணி நேரம்  தாமதமாய்ப் போய்ச் சேர்ந்தேன். அன்னைக்கு சனிக்கிழமை.

அடுத்த வாரம் திங்கட் கிழமை இன்னும் கொஞ்சம் சீக்கிரமாய்க் கிளம்பினேன். சென்ட்ரல் நெருங்கியவுடன் சிறிது பதற்றமாக இருந்தது. மூளையில் உதித்த பதற்றம் முதலில் என் கண்களுக்கு டிரான்ஸ்பர் ஆக, பிறகு அங்கிருந்து வந்து அதன் மூலம் நான் பிடித்திருந்த ஹேண்டில் பாருக்கு வந்து, அங்கிருந்து சக்கரங்களுக்கு வந்து, அதன் பின் வண்டி, நான் இரண்டும் இலேசாக நடுங்க ஆரம்பித்தோம். ஓட்டிக் கொண்டு சென்றாலும் உருட்டிக் கொண்டு செல்வதைப் போல்தான் தெரிந்தது.

மீண்டும் அதே இடம். ஆனால் வேறொரு போலீஸ்காரர் நிறுத்தினார். உடனே வண்டியின் சாவியை எடுத்துக்  கொண்டார்.

"லைசென்ஸ் RC புக் எடுப்பா" மறுபடியுமா? என்று நினைத்துக் கொண்டு எடுத்துக் கொடுத்தேன்.

"புது லைசன்ஸா"

"ஆமா சார்"

"பார்த்து வரணும்"

"சரி சார்"

"எவ்வளவு வச்சிருக்க?"

"எதுக்கு சார்?"

"இல்ல சார்ஜன்ட்ட போனா ஃபைன் எகிறும்".

"எதுக்கு சார் ஃபைன்?"

"என்னப்பா தம்பி தெரியாதமாதிரி கேக்குற, ரெட் லைட்ல வந்தியே"

"இல்லியே சார் நான் கிரீன்லதான் வந்தேன், அதுவும் ரொம்ப   மெதுவா வந்தேன்"

"சரி சரி ஒரு அம்பது ரூபாவைக் கொடுத்துட்டு நகரு"

"சார் நேத்தே கொடுத்திட்டேன்?

 என்னப்பா கதை விட்ர, யார்ட்ட கொடுத்த    எதுக்கு கொடுத்த  ?"

"நான் 10 கிலோ மீட்டர் ஸ்பீட்ல வந்ததை ஓவர்ஸ்பீட்ன்னு ஒரு போலீஸ்காரர் சொல்லி என்னோட லஞ்ச் காசைப் லஞ்ச காசாய்ப்  புடிங்கிட்டார். நேத்து கடன் வாங்கி லஞ்ச் சாப்பிட்டேன்".

"யாருப்பா அவர்? சரி அத விடு, காலைவெயில் கடுமையாய் இருக்கு, பக்கத்து கடையில ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு போ", நான் நடக்கத்தொடங்க, “தம்பி கொஞ்சம் நில்லு எத்தனைன்னு கேட்காமயே போற”தலைகளை எண்ணிவிட்டு “மொத்தம் ஏழு வாங்கிட்டு வா”.

எனக்குத்தூக்கி வாரிப்போட்டது

"சார் என்ட்ட அவ்வளவு காசில்ல"

"சரி எவ்வளவு இருக்கு?”

எல்லாப் பாக்கெட்லயும் செக் செஞ்சு, "சார் இவ்வளவுதான் இருக்கு”, என்று ஒரு 2 ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டினேன்.

"பரவாயில்லை”, என்று சொல்லிவிட்டு ஆனால் அந்த 2 ரூபாயையம் புடுங்கிவிட்டுத்தான் சாவியைக் கொடுத்தார்.

அடுத்த நாள் என்ன நடந்ததுன்னு, அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

- தொடரும்.

 

 


Thursday, January 7, 2021

ஒல்லிக்கால்களும் ஓட்டிய வண்டிகளும் !

 

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பரதேசி  மீண்டும் வருகிறான் ,ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் . 

பரதேசியின் வாகனங்கள் - பகுதி 1



நம்முடைய இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடவுள்களுக்கு பிரத்யேகமாக (டேய் இது வடமொழிச்சொல்) அல்லது தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம் உண்டு. முருகனுக்கு மயில், விநாயகருக்கு எலி(?) (பாவம் அந்த எலி) அய்யப்பனுக்கு புலி, கிருஷ்ணருக்கு பருந்து, சிவனுக்கு காளை, எமனுக்கு எருமை என்று சொல்லிக்கொண்டே போகலாம். "இயேசு கிறிஸ்துவுக்கு பெரும்பாலும் நடைப்பயணம் என்றாலும், தான் கொல்லப்படுவதற்கு முன்பதாக எருசலேம் நகருக்குள் நுழையும் போது கோவேறு கழுதையில் வந்தார் என்று விவிலியம் சொல்லுகிறது. மேலும் 2-ஆவது முறை அவர் வரும் போது, மேகங்கள் மீது வருவார் என்றும் சொல்லுகிறது.

இப்படி கடவுள்களுக்கே வாகனம் தேவைப்பட்ட போது, பரதேசிக்கும் வாகனம் தேவைப்படுமல்லவா? அவை களைப்பற்றியதுதான் இந்தத்தொடர் .

அந்தக் காலத்தில் இப்போதுள்ளது போல் தள்ளுவண்டி ( stroller)  இல்லை. தவழாத மற்றும் தவழும் காலத்தில் என் அம்மாவின் இடுப்பும், என் அப்பாவின் தோளும் தான் என் வாகனங்கள். இவை போன்ற சுகமான, பாதுகாப்பான வாகனங்கள் என்றும் கிடைக்காது.

அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து உலகத்தைப் பார்ப்பது எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பதை அனுபவித்துப் பார்த்தவருக்குத்தான் தெரியும். உலகமே உன் கால்களின் கீழே இருப்பது போலவே தெரியும். என்னுடைய பக்கத்து வீட்டு நண்பர்களையெல்லாம் விட உயரமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத்தரும். அதோடு மிகுந்த தன்னம்பிக்கையைத்தரும். மற்ற சிறுவர் சிறுமிகளை துச்சமாக மதிக்குமளவிற்கு கொஞ்சம் ஓவராகவே தோன்றும். இப்போது ஒரு பாட்டு ஞாபகம் வருகிறது. "பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா, சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே, கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது".

அப்பாவின் தோளில் ஏறுவது  பெரும்பாலும் உடம்பு சரியில்லாத சமயத்தில்தான்  அதற்கும் முன்னால் நடந்தது ஞாபகமில்லை. ஆனால்  என் அப்பா அடிக்கடி இதைச் சொல்வார். எனக்கு ஐந்து வயது அப்போது என் இரண்டாவது தம்பி ராஜமனோகர்  பிறந்த சமயம் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் அவனைப் பார்ப்பதற்காக என் அப்பா என்னைத் தோளில் தூக்கிச் செல்லும்போது, அப்பா அதான் இப்ப தம்பி பிறந்துட்டான்ல, இனிமே  என்னைத் தூக்க வேணாம், தம்பியைத்தூக்கணும்ல , என்னை இறக்கி விடுங்கள்" என்று சொன்னேனாம். அந்த வயதில் கூட அப்படித் தோன்றியது ஆச்சரியம்தான்.

 


அதன்பின்னர் கொஞ்சம் தட்டுத்தடுமாறி நான் நடக்க  ஆரம்பித்த போது, எங்கப்பா ஒரு மூன்று சக்கர (Three Wheeler) வாகனம் வாங்கிக் கொடுத்தார். ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டாம். நடை வண்டியைத்தான் சொல்லுகிறேன். அது கொடுத்த தைரியத்தில் வீடெங்கிலும் அதனை வைத்து நடை பழகினேன். அப்படி நான் நடந்ததில் என்னை விட பெருமை கொண்டது என்  அம்மா . கொஞ்சம் தடுமாறினால்  கூட பதறி  விடுவார்கள். வெளியே தனியாகச் செல்ல அனுமதி இல்லை. அந்த வண்டி எனக்குப் பின் என் தம்பிகள் இருவருக்கும் உதவிப் பின் யாருக்கோ கொடுக்கப்பட்டது.  

          அதன்பின் வந்த முதல் வாகனம் என்னுடைய கால்கள். குச்சிக்கால்கள் என்றாலும் துடுக்கானவை, வேகமானவை. ஆனால் விவேகமானவை என்று சொல்லமுடியாது, ஏனென்றால் ஆங்காங்கே விழுந்து வாரியதில் சுமார் 32 விழுப்புங்களின் தழும்பு முட்டியில் இருக்கிறது. இது பழுவேட்டரையரின் தழும்புகளை விட குறைவா அல்லது அதிகமா என்று யாராவது சொல்லுங்களேன்.



         அப்புறம் வந்தது குதிரை சவாரி. நான் ஒன்றும் இளவரசன் இல்லை, குதிரையேற்றம், யானையேற்றம் பழக. எல்லாம் வாயில்தான் .ஆனால் சிறிது குதித்து குதித்து கால்களை மாற்றிப்போட்டு ஒரு இரண்டு கால் குதிரை எப்படி ஓடுமோ அப்படி ஓடுவேன் .கைகளில் கடிவாளம் இருப்பது போல வைத்துக்கொள்வேன் .சும்மா  சொ ல்லக்கூடாது என் குதிரை சும்மா பஞ்சகல்யாணி போல பறக்கும் ,  ஓடும் நடக்கும் ,மிதக்கும். வாயின் ஓசை அதற்கேற்றாற்போல மாறும் . சில சமயம் குதிரையாகவும் சில சமயம் குதிரையை ஓட்டுபவனாகவும்  மல்ட்டை  டாஸ்கிங் செய்யும் .ஆஹா ஆஹா அது ஒரு சுகானுபவம் .

கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்து ஓடியாடி  நடக்கும்போது கிடைத்த அடுத்த வாகனம் டயர் வண்டி. பங்க்சர் ஆகி பலவித ஒட்டுப்போட்டு மேலும் ஒட்டுப்போட முடியாத சூழலில் முற்றிலும் கைவிடப்பட்டு, தூக்கியெறியப்படும் நிலை வரும்போது அதற்கு இரண்டு பயன்கள், ஒன்று மார்கழி மாதத்தில் குளிர்காய கொளுத்தப்படுவதற்கு, அல்லது போகிப்பண்டிகை அன்றைக்கு அதிகாலையில் எரிக்கப்படுவதற்கு. இந்த இரண்டும் இல்லையென்றால் என்னைப்போன்ற உற்சாக சிறுவர்களுக்கு அவை வண்டியாய் மாறும். பெட்ரோல் தேவையில்லை, டீசல் தேவையில்லை. நம் உடலில் உள்ள எனர்ஜி கையின் வழியாக குச்சிக்கும், குச்சியின் வழியாக டயருக்கும் சென்று நம் கால்களின் வேகத்திற்குப் போட்டி போட்டுக் கொண்டு பறக்கும். இடது புறம் திரும்ப வேண்டுமென்றால் டயரின் வலதுபுறத்தில் லேசாக தொட்டால் போதும்.  அதேபோல் வலது புறம் தொட்டால் இடதுபுறம் திரும்பும். அதை கொஞ்சம் நாசூக்காகச் செய்யவேண்டும் .அதற்கெல்லாம் கொஞ்சம் அனுபவம் வேண்டும் .இல்லா விட்டால் சாக்கடைக்கு பறிகொடுக்க வேண்டியதிருக்கும் .

அந்தக் காலகட்டத்தில் அம்மா கடைக்குப் போகச் சொன்னால் தட்டாமல் கிளம்பிவிடுவேன். அதுதான் வாகனம் இருக்கிறதே. நடந்து வருபவர்கள், சைக்கிளில் வருபவர்கள் மேலெல்லாம் முட்டாமல் டயர் வண்டியை ஓட்டிச் செல்வது ஒரு திறமைதான்.

கற்பனையில் காலை உதைத்து வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் வாயில் என்ஜின் உதர ஆரம்பிக்கும். இரு கைகளிலும் ஹேண்டில்களை பிடித்தால் கியர் போடாமலேயே வண்டி பறக்கும். இஞ்சின் ஒலியோடு ஹார்ன் ஒலியும் வாயிலேயே வரும். பிறகு வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு வண்டியை ஒரு ஓரத்தில் பார்க் செய்தாலும், எஞ்சினின் துடிப்பு உதடுகளில் சிலநேரம் தங்கியிருக்கும்.



ரொம்ப நாளாக இப்படித்தான்  சைக்கிள்தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். மகேந்திரன் தான் சொன்னான், “ஏண்டா ஓட்டுறது ஓட்டுற  ஒரு மோட்டார் பைக் ஓட்டக்கூடாதான்னு”, அதன் பின் மோட்டார் பைக் ஓட ஆரம்பித்தது. ரொம்ப நாளைக்கப்புறம் தான் கண்டுபிடிச்சேன் அது புல்லட்னு.  என்னவோ அப்போதிருந்து இப்போது வரை ஸ்கூட்டர் ஓட்டறது எனக்குப் பிடிக்க வேயில்லை. மேன்லியாவும்  தெரியல, பாய்லியாகவும் தெரியல. ஸ்கூட்டார் ஓட்றவங்க தப்பா எடுத்துக்காதீங்க, எனக்கு அப்படித்தோணுச்சு.

அப்புறம் காந்தி கிராமத்தில் +2 படிக்கும்போதும் அமெரிக்கன் கல்லூரியில் BA சமூகப்பணிக்கல்லூரியில் MSW என்று படிக்கும் போது எனக்கு வாகனமா இருந்தது சைக்கிள் கேரியர் என்ன புரியலயா? சைக்கிளில் பின்னாலுள்ள கேரியல்தான் உட்கார்ந்து போவேன்.  இன்னும் புரியலயா? யாராவது  சைக்கிளில்    போகும்போது பின்னாடி உட்கார்ந்து போவேன். அட இன்னுமா புரியல? எனக்கு அப்பல்லாம் சைக்கிள் ஓட்டத்தெரியாதுங்க. முதுகலை முடித்தவுடன் தான் சைக்கிள் கலை கைவந்தது. இது நிறையப் பேருக்குத் தெரியாது. இத எப்படி சமாளிச்சேன், அப்புறம் எப்படிக்கத்துக்கிட்டேன்றது ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். அதைப்படிக்க இங்க சுட்டவும்.  http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_26.html

பழகியபின் சைக்கிள்தான் என் வாகனமாக பல வருடங்கள் இருந்தது. சாட்சியாபுரம் சமுகப்பணியாளர் வேலை, கிருஷ்ணகிரியில் திட்டமேலாளர் வேலை,  அப்புறம் சென்னைக்கு வந்து என் மாமாவிடம் சூப்ரவைசர் வேலை எல்லாத்துக்கும் சைக்கிள் தெரியலன்னா, அந்த வேலையெல்லாம் செய்திருக்கவே முடியாது. அதுக்கப்பறம் தான் எங்கம்மா எனக்கு TVS சேம்ப் வாங்கிக்கொடுத்தாங்க.

அதைப்பத்தி அடுத்த பகுதியில் சொல்றேன்.

 

-தொடரும்.

 

Tuesday, May 26, 2020

பஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் !



எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 44
வா பொன் மயிலே

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்


RAJA CHINNA RAJA POONTHALIRE INBAKANIYE - Lyrics and Music by ...
Add caption
1979ல் வெளிவந்த பூந்தளிர் என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து புகழ் பெற்ற பாடல் இது.  இது பாடலைக் கேளுங்கள்.


பாடலின் பின்னனி:

காதல் கொண்ட இளைஞன் காதலின் மயக்கத்திலும், ஏக்கத்திலும் காதலியை வர்ணித்துப்பாடும் பாடல் இது. சினிமாப்பாடல்களில் அந்தக்காலக்கட்டத்தில் இதைத் தவிர்க்கமுடியுமா ?

இசையமைப்பு:

எழுபதுகளில் வந்த இளையராஜாவின் இசையமைப்பில் உதித்த மெல்லிசை மெலடி பாடல் இது என்று சொல்லலாம். பெல்ஸ், டிரம்ஸ், புல்லாங்குழல் ஆகியவை ஒரு வெஸ்டர்ன் அமைப்பில் ஒலிக்க, டிரம்ஸில் கெட்டிலில் பிரஸ் வைத்து ஒரு ஜாஸ் இசை போல ஆரம்பித்து முடிய, பாடல் ஆண்குரலில் "வா பொன்மயிலே" என்று ஆரம்பிக்கிறது. அப்போது தபேலா சேர்ந்து கொள்ளும் போதுதான் ஆஹா இது இளையராஜா என்று பொறி தட்டுகிறது. பல்லவி இரண்டாம் முறை ஒலிக்கும் போதுதான் கிராண்ட் வயலின் குழுமம் சேர்ந்து கொண்டு வரிகளுக்குப் பதில் சொல்வது போல் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் ஒலித்து பாடலை ரிச் ஆக்குகிறது. முதல் பிஜிஎம்மில் வயலின் குழுமம், புல்லாங்குழல், டிரம்ஸ் ஆகியவை ஒலித்து முடிய சரணத்தில் தபேலே சேர்ந்து கொள்கிறது. 2ஆவது பிஜிஎம்மில் கீபோர்டு வயலின் பெல்ஸ் ஒலித்து முடிக்க 2-ஆவது சரணத்திலும் தபேலா வந்து வேறுபடுத்திக் காண்பிப்பது இளையராஜாவின் பிரதான ஸ்டைல். இதுவே MSV காலத்திலும் இருந்தது.
பாடலின் வரிகள்:
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ
பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ
அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Panchu Arunachalam with Ilayaraja
பாடலை எழுதியவர் மறைந்த பஞ்சு அருணாசலம் அவர்கள். பாடலை எழுதும்போது அவருக்கு என்ன வயது என்று தெரியவில்லை. ஆனால் உணர்வுகளுக்கும் கற்பனைக்கும், கவிதைக்கும்,காதலுக்கும் வயது ஒரு தடையில்லை   அல்லவா. அட அடா நம் கவிஞர்கள் தான் பெண்களை மானென்றும் மயிலென்றும் எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள். இந்தக் காரியத்தில் இவர்களுக்கு தயக்கமுமில்லை, அலுப்புமில்லை, எப்போதும் ஒருவித மயக்கம்தான். இங்கு வெறும் மயில் கூட இல்லை. பொன் மயில் என்று கூறுகிறார். நிறத்தைச் சொல்கிறார். நம் ஆண்களுக்குத்தான் சிவப்பு அல்லது பொன்னிறம் என்றால் பெரும் கிரக்கமயிற்றே. அதனாலல்லவா சிவப்பாக்கும் கீரிம்கள் இந்தியாவில் பெரும் வியாபாரமாக இருக்கிறது. இந்த மாயையிலிருந்து எப்போதுதான் நாம் மீளுவோமோ ?. அதற்கடுத்த வரிகளில், கண்ணழகு, முன்னழகு தேர், கனி, இளமையின் நளினமே, இனிமையின் உருவமே என்று வர்ணித்துத் தள்ளி விடுகிறார். “இளமையின் நளினமே " என்ற வரி சிந்திக்க வைத்து கற்பனைக்குதிரைகளைத் தட்டிவிட்டது. அடுத்த சரணத்திலும் மேனியின் மஞ்சள் நிறத்தை சிலாகித்து ஆரம்பிக்கிறார். "உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ" என்ற வரிகள் சிலிர்க்க  வைக்கின்றன. எளிமையான வரிகளுக்குச் சொந்தக்காரர் பஞ்சு அருணாச்சலம்.
பாடலின் குரல்:

Add caption
எஸ்.பி.பியின் இளமைக்கால குரல் சொக்க வைக்கிறது. இளைஞனின் மனதை இளமைக்குரலில் வெளிப்படுத்தும்போது, இளமையுடன் இனிமையும் சேர இனிக்கிறது பாடல். எனக்கு ஒரு சந்தேகம். இந்த மாதிரிப் பாடல்களின் டியூனை யாரை நினைத்து இளையராஜாவும், யாரை நினைத்துக் கொண்டு பஞ்சுவும்,   யாரை மனதில் கொண்டு எஸ்.பி.பியும் பாடியிருப்பார்கள்?. இப்படி உருகித்தள்ளியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் டிரேட் மார்க் மெலடியில் உதித்த இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் நம் மனதை வருடுகிறது, வருடும். மீண்டும் கேட்டுப் பார்த்தால் உண்மை இதனை உணர்த்தும்.
- தொடரும்