Showing posts with label மெக்ஸிகோ பயணம். Show all posts
Showing posts with label மெக்ஸிகோ பயணம். Show all posts

Monday, June 24, 2013

மெக்சிகோ பயணம் 17: நீதானா அந்தக்குயில் ?

David Mora
            திட்டிவாசல் திறக்க, ஆவேசமாக நாலுகால் பாய்ச்சலில் வந்தது காளை. அரை மணியில் சாவதற்கு இவ்வளவு அவசரமா? என்று நினைத்தாலும் வழியில் எதிர்த்து, டேவிட் இருக்கிறாரே, அவ்வளவுதான் இவர் என்று நினைத்தேன்.
         பாய்ந்து வந்த காளையை நோக்கி துணியை உயர்த்திப்பிடிக்க, வந்த காளை துணியை முட்ட தவ்வியதில், டேவிட் குனிய, காளை அவரை தாண்டிக் குதித்தது. ஆத்திரத்துடன் திரும்பி வர, டேவிட் எழுந்து நின்று போக்குக்காட்ட, உதவியாளர்கள் ஓலமிட்டு கையில் ஸ்டம்புடன் ஓடி வர, டேவிட் பாக்சுக்குத்திரும்பினார். இது இவர் ஸ்டைல் போல.
            மீண்டும் நான் எழுந்து நிற்க, பக்கத்தில் இருந்த பெண், “என்னாச்சு” ?என்றாள், உணர்ச்சி வசப்பட்டு உள்ளே குதிச்சிருவேன்னு தப்பா நினைச்சிட்டா போல  இருக்கு. நாமெல்லாம் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாலும் தெளிவோ இருப்போம்னு, பாவம் அவளுக்கு  தெரியாது. இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஏறி ஏறி ஏ………..றி, உஸ் உஸ் பின்னர் இறங்கி இ>>>>றங்கி  கிறங்கி வந்தேன். வெளியிலிருந்த அதே கேட்டுக்குத்திரும்ப வழி தெரியவில்லை. ஒரு பலோமாஸ் வாங்கிவிட்டு திரும்பி மேலே ஏறி வாயிலில் இருந்து பார்த்தேன், செத்துப்போன காளையை இழுத்துச் செல்வது தெரிந்தது.
Manola Mejia
         மூன்றாவது ஆள், நம்ம ஹீரோ மனோலா வர சபை எழுந்து நின்று ஆரவாரிக்க, அதேதான் நடந்தது. உசுப்பேற்றுவது, ஏமாற்றுவது, போக்குக்காட்டுவது, குத்துவது கொல்வது என இதெல்லாம் ஒரு பொழப்பு என்று வெறுத்துப்போய் வெளியே வந்து விட்டேன்.
           இந்த ஒவ்வொருவரும் மீண்டும் ஒருமுறை வேறொரு காளையை கொல்வார்களாம், ஆளுக்கு  ரெண்டு காளை. எங்க ஊர் மயிலக்காளையிடம் வந்து பாருங்கடா என்று சவால்விட்டேன். நம்மூர் காளை ஒரு ரெண்டு தடவை துணியைக் குத்திவிட்டு மூன்றாவது முறை ஆளைக்குத்தி, குடலை உருவும். கண்டிப்பாக இப்படி ஏமாந்து உயிரைவிடாதென்று நினைத்துக் கொண்டே வெளியே வந்தேன். மணி ஆறுதான் ஆனது. ஒரு ஆர்வக்கோளாறுல டிரைவரை எட்டு மணிக்கு வரச்சொல்லிவிட்டேன். நான் வந்த கேட்டை கண்டுபிடிக்க படாதபாடு பட்டு வழி என்றால் “சலுடா”  என்று கண்டுபிடித்து ஒரு வழியாக வெளியே வந்தேன். கேட்வாசிகள், என்ன சீக்கிரமாய் கிளம்பிட்டான்னு ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள்.
    அங்குமிங்கும் பராக்குப் பார்க்க, அங்கு பெரிய மாலோ கடையோ ஒன்றுமில்லை. நேரம் ஆக ஆக குளிர் கூடியது, ஜாக்கெட்டும் இல்லை. அப்போது “ஆல்ப்பிரடோ”, என்று குரல் கேட்க, திரும்பினால், அட நம்ம டிரைவர். எட்டு மணிக்கு வர வேண்டியவன், ஏழு மணிக்கே வந்துவிட்டது எனக்கு பெரிய ஆச்சரியம். கேட்டால், “எனக்கு அப்பவே தெரியும், நீ முழுசாய் இருக்க மாட்டாய் என்று” என்றான். என் முகத்தில் ஒரு அப்பாவிக்களை இருப்பது தெரியும். அது ஸ்பானிஷ் மொழியிலும் எழுதியிருக்கிறது என்று அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
       எனவே, காளைச்சண்டை பாக்கனும்கிற ஆசை இப்படி முடிந்தது. இனிமேல் நம்ம வெஜிடேரியன் ஆகணும்னு நினைத்துக்கொண்டேன். ஐயையோ இனிமேல் நமக்கு ரத்தம் ஆகாதப்பா.
             ஹோட்டலுக்குத்திரும்பி, ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய், ஊருக்கு எடுத்துச் செல்ல, கொய்யாப் பழங்களையும், சிறு ரஸ்தாளி பழங்களையும் வாங்கிக்கொண்டு ரூமுக்குத் திரும்பினேன்.
            ரிஷப்சனில் மீண்டும் ஒரு பெண் குரல் கூப்பிட்டதாகச் சொன்னார்கள். மறுபடியும் கூப்பிட்டால் ரூமுக்கு கனெக்ட் பண்ணச் சொல்லிவிட்டு போனேன். யாரந்தப்பெண், தெரியாமலேயே அல்லது பார்க்காமலேயே திரும்பி விடுவேனோ என்று நினைத்த வண்ணம் உட்கார்ந்திருந்தபோது, போன் ஒலிக்க, பட்டென்று எடுத்து ஹலோ என்றதும், என் மனைவியின் 20 வருடப்பழைய குரல் ஒலித்தது. வழக்கம் போல் “என்ன பார்த்தாய், எப்போது ஃபிளைட், நேரத்திற்கு ஏர்போர்ட் போய்விடு, எத்தனை மணிக்கு நியூயார்க் வருவாய்? எத்தனை மணிக்கு பெஞ்சியை அனுப்ப வேண்டும்?” என்று கேள்விக்கணைகளால் துளைத்தாள். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி முடித்துப்பின், “சற்று நேரத்திற்கு முன் போன் செய்தேன், எப்போது ரூமுக்கு திரும்பினாய்?” ,என்று கேட்டாள். ரெண்டு மூணு தடவை போன் பண்ணியது “நீதானா அந்தக்குயில்” என்று கேட்க, ஆம் என்றாள். ஏன் மெசேஜ் விடவில்லை என்றால், “அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை”, என்றாள். அதானே பார்த்தேன், நமக்கு பெஞ்சாதி தவிர வேறொரு பெண் ஜாதியும் போன் பண்ணாதே என்று நொந்து கொண்டு படுக்கைக்குச் சென்றேன். தூக்கம் வராமல் கிருஷ்ண தேவராயரைப்புரட்ட, அந்த நடனப்பெண்மணியையும் மணம் முடித்து, இரு பெண்களுடனும் இனிதே இல்லறம் நடத்த சுபமாக முடித்துவிட்டார் ராகிரா. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுங்க.
          காலையில் சீக்கிரமே எழுந்து ரெடியாக, டேனியல் ஃபிரெஷாக வந்தான். ஏர்போர்ட்டுக்கு கிளம்பினோம். தயங்கி தயங்கி “அந்த சலவைக்காரி மேட்டர்”, என்றேன். “ நீ சீரியஸாகவா சொன்னாய், இப்போது அதற்கு டைம் இல்லையே “  என்றான். கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாத வருத்தத்தோடு கிளம்பினேன் .போகிற  வழியில்  நடந்து கொண்டிருந்த பழங்குடி மக்களின் குத்தாட்டத்தை சில நிமிடங்கள்  பார்த்துவிட்டு ஏர்போர்ட் சென்று சேர்ந்தோம் .

ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு கையசைத்து, தன்னுடைய பிஸினெஸ் கார்டைக் கொடுத்து விடைபெற்றுக் கிளம்பினான்.
              ஏர்போர்ட்டில், டூட்டி ஃப்ரி கடைகளில் வின்டோ ஷாப்பிங் செய்யும்போது, கையால் செய்யப்பட்ட ஒரு அழகிய, வண்ணமய மணியைப் பார்த்தேன். விலை 100 பீசோ என்றதும் உடனே எடுத்துச் சென்று கவுண்டரில் கொடுத்து கையில் மீதமிருந்த 100 பீசோவை எடுத்து நீட்டினேன். அந்தப் பெண் சிரித்தபடி 100 டாலர் என்றாள். டாலருக்கும் பீசோவுக்கும் ஏன்தான் $ என்ற ஒரே அடையாளத்தை பயன்படுத்துகிறார்களோ என்று நொந்து கொண்டே வேண்டாம் என்றேன். தன் சிரிப்பு மறைய, முதல் போனியே ஃபோனி ஆனதால், முறைத்தாள். சாரி சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

        ஃபிளைட் நேரத்திற்கு கிளம்பி மயாமி சென்றது. இமிக்கிரேசன் படிவத்தில் உண்மையை எழுத, என்னை தனியாகக் கூப்பிட்டு, கொய்யாப்பழங்களை அனுமதிக்க முடியாது என்று எடுத்துக்கொள்ள, “நீயே சாப்பிடு”, என்றேன். வாட் என்று முறைத்து, என் கண் முன்னாலேயே குப்பைத் தொட்டியில் போட்டான். சரி அட்லீஸ்ட் ஒன்றிரண்டு பழங்களை கேட்டு வாங்கி இங்கேயே சாப்பிட்டிருக்கலாம் என்று நினைத்த வண்ணம், நியூயார்க் பிளைட்டில் ஏறி உட்கார்ந்தவுடன், உயிர்த்தெழுந்த என் செல்போன், பார்க்காமல் விட்ட பல ஈமெயில்களை காண்பித்தது. அதில் ஒன்றில் என் மெக்சிகோ பயணத்தைப்பற்றி அறிந்த என் தோழிகளில் ஒருவள், சுஜாதாவின் சலவைக்காரி ஜோக்கை எங்கிருந்தோ கண்டுபிடித்து அனுப்பியிருந்தாள்.
(என்ன முத்து? நலமா? சொல்லு என்ன செய்தி? “சினேகாவின் காதலர்கள்" படப்பிடிப்பு ஆரம்பிச்சாச்சா ? என்ன சலவைக்காரி ஜோக்கா, அது வந்து, சலவைக்காரி தன் கழுதையோடு துணி துவைக்க ஆற்றுக்குப்போனாள். அங்கே ஆற்றில் குனிந்து……… என்ன முத்து சரியா கேட்கலியா, சரிவிடு நேரில் சந்திக்கும்போது சொல்றேன், ஆல்  தி பெஸ்ட் ஃபார் யுவர் ஃபிலிம் ப்ராஜெக்ட், பை முத்து.)
நியூயார்க்கில் இரவு 10.30 மணிக்கு வந்து இறங்கினேன்.
உறைபனிக்குளிர் உடலைத்தொட்டது
வாழ்க்கையின் நிதர்சனம் நெஞ்சைத் தொட்டது.
Welcome Back என்று பெஞ்சி சொன்னது
Welcome back to reality என்று ஒலித்தது.

மெக்சிகோ பயணம் முற்றியது.

விரைவில் எதிர்பாருங்கள்
1)  ராக்கஃபெல்லெர்  எஸ்டேட்
2)  அகஸ்டா , மெய்ன்
3)  போர்ட்டரிக்கோ

4)  கியூபெக் - கனடா

Monday, June 17, 2013

மெக்சிகோ பயணம் 16: முரட்டுக்காளையுடன் நடந்த மூர்க்கச்சண்டை


                 அது காளையா இல்லை குட்டி யானையா என்று யோசிப்பதற்குள் ஒருமுறைப்போடு, மூக்கை விரைத்துக்கொண்டு, புஸ்புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு, வாலை பின்னால் உயர்த்திக் கொண்டு பாயுதய்யா காளை. இதோடு ஒப்பிட்டால் நம்மூர் காளையெல்லாம் ரொம்ப ஏழை பாஸ் .
                 வந்த ஜோரில் நின்றிருந்த உதவியாளர்களை நோக்கிப்பாய அவர்கள் வெடுக்கென்று ஓடி வட்டத்தின் நாலாபுறத்தில் இருந்த பாக்ஸ்களின் மர மறைப்பு களுக்குப்பின் மறைந்தனர். மடேர் மடேர் என்று காளை அந்த மர மறைப்புகளை முட்டியது, என் அடிவயிற்றைப் பிசைந்தது. நல்ல வேளை நல்ல உயரத்தில் உட்கார்ந்திருந்தேன் .மீண்டும் அங்குமிங்கும் ஓடியும், கம்பீரமாய் நிமிர்ந்து சவால் விடுவதைப்போல் பார்த்தது. மெதுவாக நோட்டம் பார்த்த ஆறு உதவியாளர்களும் இரண்டிரண்டு பேராக பிரிந்து, கையில் ஒரு கலர் துணியுடன், அங்குமிங்கும் போக்குக் காட்டுவதும், துரத்தினால் மறைப்புக்குப்பின் மறைவதுமாக சிறிது நேரம் சென்றது.
மீண்டும் மீண்டும் சீண்டி, ஒரு ஏமாந்த சந்தர்ப்பத்தில் தங்கள் கையில் இருந்த சிறிய கிரிக்கெட் ஸ்டம்ப் போல் இருந்த கூர்மையான ஆயுதத்தை கழுத்தில் இருந்த திமிலில் லாவகமாக குத்தினர். பல திசைகளிலுமிருந்தும் வந்து ஆளுக்கொன்றாக ஆறு ஸ்டம்புகளை குத்திவிட்டனர். அவையனைத்தும் கழுத்தில் இருந்து தொங்கியதோடு ரத்தம் வழியத் தொடங்கியது.
          அதற்குள் ஒரு குதிரை வீரன், கையில் நீண்ட ஈட்டியுடன் வந்தான். குதிரைக்கு இருபுறமும் மிகக்கெட்டியாக மெத்தைபோல் மறைப்பு இருந்தது, நம்மூர் பொய்க்கால் குதிரைபோல் தெரிந்தது. அதனைப் பார்த்த காளை, ரத்தம் சொட்டினாலும் கொஞ்சமும் வேகம் குறையாமல் பாய்ந்து வந்து குதிரையை முட்டியது. மறைப்புகள் இருந்ததால் குதிரை தப்பித்தது. இல்லைன்னா அதன் கதி அதோகதிதான். பல குதிரைகள் மாடு முட்டி குடல் தள்ளி உயிரை விட்டதும்   உண்டாம். அது முட்டிய வேகத்தில் குதிரை வீரன் தன் கையில் இருந்த ஈட்டியால் குத்த முயன்றான். ஆனால் காளை முட்டிய வேகம் தாங்காமல் குதிரை அப்படியே மடங்கி கீழே விழ, கூட்டத்தின் ஆரவாரம் அடங்கி நிசப்தமாயிற்று. அடுத்து என்ன நடக்கப்போகிறதென்ற திகில் சூழ்ந்தது. காளையும் மீண்டும் பாய்வதற்கு சீறியது. குதிரை பயந்து போய் சிறுநீர் கழித்து ஏராளமான சாணியைப் போட்டது.

        அப்போது இன்னொரு குதிரை வீரன் வேறு புறத்திலிருந்து வந்து “ஹோஹோ” வென்று சத்தம்போட, காளை அவனை நோக்கி திரும்பியது. முட்டுவதற்கு நாலுகால் பாய்ச்சலில் ஓடி அருகில் வரும்போது, சட்டென்று குதிரையை வேறுபுறம் திருப்பி, தன் பலமனைத்தையும் கையில் கொண்டு வந்து ஈட்டியை ஓங்கி குத்தி ஆழமாக சொருகினான். திடுக்கிட்டுப்போன காளை சற்றே மிரண்டு தள்ளாடியது. அதற்குள் சுதாரித்து எழுந்த முதலாவது குதிரை வீரன், மிக விரைவாக வர, காளை அந்தக் குதிரையை முட்ட சற்றும் தளராமல் திரும்பியது. இந்த முறை ஏமாறாமல், அவன் தன்  பங்குக்கு ஈட்டியை கழுத்தில் குத்தி இறக்க, கூட்டத்தில் ஆகாகாரம்  (ரொம்ப நாள் ஆசை இந்த வார்த்தையை பயன்படுத்துவது) எழுந்தது. குதிரை வீரர்கள் வெற்றிக்கையசைப்புடன் உள்ளே திரும்பினர்.
Fabian Barba

பலமுறைத் தாக்குதலில், சற்றே சோர்வடைந்த காளை நடுவிலே நின்று கொண்டிருக்கையில், உள்ளே நுழைந்தார் ஃபேபியன் பார்பா  (Fabian Barba). அரங்கு நிறைந்த கரகோஷம். (நன்றி, அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது). கையில் படபடத்த ஒரு பெரிய சதுர துணியுடன், காளையை நெருங்க, காளை சற்று நேரம் முறைத்துவிட்டு பாய்ந்தது. மிக லாவகமாக துணியைச்சுற்ற, காளையும் துணியை முட்டித்தோற்றது. ஒருமுறை இருமுறை அல்ல, பலமுறையும் இதேதான் நடந்தது. முட்டாள் காளை பக்கத்தில் இருக்கும் ஆளை விட்டுவிட்டு துணியையே முட்டி முட்டி தவித்துப்போனது. ஒவ்வொரு முறையும் காளையின் முட்டுதலிலிருந்து தப்பிக்கும் போதும்  சபை ஆரவாரித்தது. சில சமயம், உடம்புக்கு மிக அருகில் முட்டவந்து, துணியை சுழற்றி தப்பித்தது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    சற்று நேரத்தில் காளை தவித்துப்போக இசை உச்சஸ்தாயியை அடைய, ஃபேபியன் பாக்சைத் திரும்பிப் பார்க்க, ஒரு உதவியாளன் வாளுடன் ஓடிவந்தான். ஒரு கையில் வாளுடனும், மற்றொரு கையில் சதுர துணியுடனும் மீண்டும் காளையை நெருங்கி, உசுப்பேற்றி உசுப்பேற்றி, ஏமாந்த ஒரு சமயத்தில் தன் கூரான வாளை கழுத்தில் குத்தி, இறுக்கி இறக்கினார். முழுவாளும் உள்ளே போய்விட மாடு தள்ளாடியது.

அது நேராக இதயத்தை கிழிக்குமாம். தன்னுடைய வாளை மீண்டும் உருவி எடுத்து, காளையை உற்றுப்பார்த்து விட்டு, கையை அசைத்து பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு பாக்சுக்கு திரும்பினார். மற்ற இரு வீரர்களும் அவரை கட்டித் தழுவி வாழ்த்தினர்.
காளை தலை சுற்றி தள்ளாடி, முன்னங்கால் மடங்கி கீழே விழுந்து உயிரை விட்டது. ஓடிவந்த உதவியாளர்கள், காளை செத்துவிட்டதை உறுதி செய்துவிட்டு ஒரு விசிலடித்தவுடன், ஒரு குதிரைவண்டிபோல் ஒன்று வர அதன் பின்பகுதியில் காளையின் கால்களை பிணைத்து அப்படியே தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார்கள். அடப்பாவி மக்கா.

              எனக்கு அதுவரை தெரியாது, காளை அந்த இடத்திலேயே கொல்லப்படுமென்று . கம்பீரமாக வந்த காளை, தன் மொத்த எனர்ஜியையும் இழந்து, கால் மடங்கி விழுந்து உயிர்விட்டது மற்றவர்களுக்கு உற்சாகத்தையும் எனக்கு கண்ணீரையும் வரவழைத்தது.
இதேதான் நடக்குமா என்று பக்கத்தில் கேட்டபோது ஆம்  என்றார்கள். என்ன ஜென்மங்கள், “சான்ட்விட்சுகளை மென்றுகொண்டே சாவைக் கொண்டாடுகிறார்களே, குளிர் பியர்களை உறிஞ்சிக் கொண்டே, கொல்வதை ரசிக்கிறார்களே”, என்று நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
             நான் நம்மூர் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போல் இதுவும் ஒன்று என்று வந்துவிட்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டேன். பணியாளர்கள் சிறு தள்ளு வண்டியில் வந்து ரத்தம் தோய்ந்த மணலை அப்புறப்படுத்தி வேறு மணல் கொட்டி, மீண்டும் கோடுகளை திருத்தினர்.
                அதற்குள் இசை முழங்க, இரண்டாவது வீரர் டேவிட் மோரா நுழைந்தார். என்னது முதலிலேயே நுழைகிறாரே என்று பார்த்தால் காளை ஓடிவரும் திட்டி வாசலுக்கு நேர் எதிரே துணியை கையில் ஏந்தி, முட்டிபோட்டு காத்திருந்தார்.
போய்விடலாம் என்று எழுந்த நான், இதனைப்பார்த்ததும் சரி என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று திரும்பவும் உட்கார்ந்தேன்.


அடுத்த பகுதியில் நிறைவு பெறும்>

Monday, June 10, 2013

மெக்சிகோ பயணம் 15: பப்பாவும் பாப்பாவும் !!!!!!!!!!!!!!!

Souvenir Shop

                 நான்கு மணிக்கு மேல்தான் உள்ளே விடுவோம் என்றார்கள். வெளியே நிறைய சூவினர் (Souvenir) கடைகளும், உணவுக்கடைகளும் இருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டே அங்குமிங்கும் அலைந்ததில் அரைமணிநேரம் விரைவாகக்கடந்தது.              நம்மூர் ஹீரோக்களுக்கு வைப்பதுபோல், அன்றைய நாளில் விளையாடப்போகும் மூன்று வீரர்களுக்கு, பெரிய கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் அழகான சீருடை அணிந்த போலிஸ் படை வந்து இறங்கியது. அதன்பின்னர் ஒரு பெரிய கார் (பென்ட்லே என்று நினைக்கிறேன்) கடந்த போது, கூடியிருந்த கூட்டம் “மன்யோலா மன்யோலா” என்று ஆரவாரித்தது. பக்கத்தில் கேட்டதில் அன்று மோதப்போகும் வீரர் என்றார்கள். கார் கடந்து சென்று, வேற ஒரு வழியில் உள்ளே நுழைந்தது.
Entrance

              வரவர கூட்டம் நிறையச்சேர்ந்து வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். சரி உள்ளே போய்விடலாம் என நினைத்து, நுழைந்தபோது, டிக்கட்டை சரி பார்த்து கிழித்து பாதியை கையில் கொடுத்துவிட்டு என் கையை உற்றுப்பார்த்து, “பப்பாஸ் நோ” என்றான். என்னங்கடா இது நான் தனியாகத்தானே இருக்கிறேன், என்கூட பாப்பா ஒன்றுமில்லையே என்று கலவரமடைந்து 'ஙே' என்று முளித்தேன். அவன் என் கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டை தொட்டுக்காட்டி, “பப்பாஸ் நோ” என்றான். அப்போதுதான் புரிந்தது, சிப்ஸ் பாக்கெட்டை உள்ளே கொண்டுபோக முடியாது என்று. அதோடு அப்போதுதான் தெரிந்தது சிப்ஸ்க்கு இங்கே பெயர்  பப்பாஸ் (Papas) என்பது. ஆனால் இவ்வளவு பெரிய பாக்கெட்டை என்ன செய்வது என்று மீண்டும் வெளியே வந்து பிரித்து கொஞ்சம் சாப்பிட்டேன், முடியவில்லை. என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் அதைக்கொடுக்க, அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பானது.அமெரிக்காவில் இப்படி கொடுப்பது சாத்தியமில்லை, பிச்சைக்காரர்கள் கூட இப்படி ஏற்கனவே பிரித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
                     “கிராசியஸ்” என்ற சிறுவனிடம் புன்சிரிப்போடு தலையாட்டிவிட்டு மறுபடியும் வரிசைக்குச் சென்றேன். பேட்ஜ் அணிந்த பையன் ஒருவன் வழிகாட்ட முன் வந்தான். நடையோ நடந்து மேலே ஏறி, குகைகளை கடந்து உள்ளே நுழைந்தால், ஏயப்பா எவ்வளவு பெரிசு, சர்க்கஸ் மைதானம் போல் வட்டமாக நடுவிலே ஆடுகளம் இருக்க அதனைச்சுற்றிய வட்டங்களில் சிமென்ட் இருக்கைகள் மேலே மேலே இருந்தன.

 முதல் சில வட்டங்களில் பிளாஸ்டிக் நாற்காலிகள் இருந்தன. "பிளாசா மெக்சிகோ" என்ற உலகத்திலேயே மிகப்பெரிய காளைச்சண்டை அரங்கமான இதில் ஒரே சமயத்தில் 40,000 பேர் உட்காரலாம், 1946ல் இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
               அந்தப்பையன் என்னை அழைத்துக்கொண்டு நடுவில் இருந்த பாதை வழியே சென்று, இலக்கத்தை சரிபார்த்து அமர வைத்தான். போகாமல் நின்ற அவனைப்பார்த்து, ஓ என்று ஞாபகம் வந்துவிட 10 பீசோ கொடுத்தேன். ஒரு வெட்கச்சிரிப்பு சிரித்து விட்டு அகன்றான் . என்னுடைய சீட் மேலேயும் இல்லாமல்,  கீழே மிக அருகிலும் இல்லாமல் நடுவாந்தரத்தில் இருந்தது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்ப ஆரம்பிக்க, அந்த வெட்டவெளியில் நல்ல தென்றல் சிலுசிலுவென்று வீச ஆரம்பித்து, உடம்பில் சிலிர்ப்பைத் தந்தது. அங்கே நம்மூர் கீத்துக் கொட்டகைகளில் விற்பதுபோல், கைகளில் ஏந்தி பலவித பண்டங்களை விற்றனர். காபி, டீ தவிர ஆங்காங்கே இருந்த வழிகளில் ஐஸ் பியரும் விற்றார்கள். செம்பட்டைத்தலை பாப்பா ஒருத்தி, கறுப்புக் கண்ணாடி அணிந்து, ஏதோ கூவி விற்றுக் கொண்டிருந்தாள். கறுப்புக்கண்ணாடி ஸ்டைலுக்கா இல்லை கண்ணில் கோளாறா?  என்று தெரியவில்லை. எனக்கு முந்தின வரிசையில் வந்த அவள் கூவியதைக் கவனித்தேன்.”பப்பாஸ் பலோமாஸ்” என்றாள். பப்பாஸ் என்றால் சிப்ஸ் என்று சற்றுமுன்னர்தான் கண்டுபிடித்திருந்தேன். பலோமாஸ் என்றால் என்ன என்று தட்டைப்பார்த்த போது, அது பாப்கார்ன் என்பது தெரிந்தது. தட்டில் இரண்டே பொருள் இருந்ததால் பலோமஸ் என்றால் பாப்கார்ன் என்று கண்டுபிடித்த என் அறிவை, வேறுயாரும் மெச்சவில்லை என்பதால் நானே மெச்சிக்கொண்டேன். அதி சிவப்பான பெண்கள் கறுப்புக்கண்ணாடி அணிவது மேலும் அழகை நிச்சயமாய்க் கூட்டுகிறது. ஆனாலும்  சிப்ஸ் விற்பதற்கு கறுப்புக்கண்ணாடி ரொம்பவே ஓவர்.
Music bnd

                 தூரத்தில், எதிர்வரிசையில் மேலே இருந்து ஒரு இசைக்குழு விட்டுவிட்டு வாசித்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு பெண் ஒரு சிறிய புத்தகத்தை எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தாள். அநேகமாக எல்லோரும் வாங்கியதால் நானும் 2பீசோ கொடுத்து வாங்கினேன்.


 புரட்டினால் அதில் அன்று விளையாடவிருக்கும் வீரர்களின் படம், பெயர், சிறு வரலாறு மட்டுமின்றி அன்று வரப்போகும் காளைகளின் படங்கள், பெயர், வயது, எடை மற்றும் உரிமையாளரின் விவரங்கள் ஆகியவை அனைத்தும் கொடுக்கப்பட்டிருந்தன. ஏராளமான விளம்பரங்களும் இருந்தன. கொடுமை என்னன்னா, எல்லாமே ஸ்பானிஷில் இருந்தது. ஆங்கில எழுத்துகள் என்பதால் பல இடங்களில் யூகம் செய்ய முடிந்தது.
           கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பினாலும், அரங்கம் முழுவதுமாக நிரம்பவில்லை.இதற்கிடையில் என்னைத்தாண்டி வந்த 2 இளம் ஜோடிகள் என் அருகில் உட்கார்ந்தனர். என் பக்கத்தில் உட்கார்ந்த பெண் என்னை உரசுவதை தவிர்க்காமல் “ஓலா” என்று சொல்லி பிங்க் ஈறுகளை காண்பித்தாள் (வேனாம் இதெல்லாம் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது). பார்க்க அல்ட்ரா  மாடர்னாக இருந்தாள் என்பதால், ஒருவேளை இவள் உதவக்கூடும் என்ற நப்பாசையுடன் "ஹிஹி இதுதான் முதல்தடவை, இந்த விளையாட்டைப்பற்றி கொஞ்சம் சொல்கிறாயா?" என்றேன். "நோ இன்க்லிஸ்" என்றாள் மறுபடியும் பிங்க் ஈறுகள். போடி இவளே பார்க்கத்தான் படாடோபமாய் இருக்கிறார்கள், ஆங்கிலம் தெரியவில்லை என்று நொந்து கொண்ட சமயத்தில், அவள் பக்கத்திலுள்ள இன்னொருவளிடம் கிண்கிணி கிண்கிணி என்று பேசிவிட்டு என்னைக் காண்பித்தாள்.
இருவரும் மாறி உட்கார்ந்து கொண்டு, இன்னொருவள் "வேர் ஃப்ரம்" என்றாள், நியூயார்க் என்றதும், நம்பாது கோணச்சிரிப்பு சிரித்தாள். "இன்டியன், லிவ்விங் இன் நியூயார்க்" என்றேன். ஓ என்று சொல்லிவிட்டு, காளைச் சண்டையைப்பற்றி தன்  ஓட்டை இங்கிலீஸில் விளக்க முயன்றாள். அவள் சொன்னதில், எனக்கு புரிந்தவை.
       மூன்று வீரர்கள் (டொரெரோ) ஆளுக்கு 2 காளைகளோடு மோதுவார்கள். ஒரு காளைச்சண்டை சுமார் 1/2 மணி நேரம் நடக்கும். ஒவ்வொரு வீரருக்கும் ஆறு உதவியாளர்களும், 2 குதிரை வீரர்களும் உதவுவர். மைதானத்தில் இருவட்டங்கள் வரையப்படும். இன்னர் ரிங் மற்றும் அவுட்டர் ரிங், விளையாட்டு வீரர், காளையுடன் நேரடியாக மோதும்போது இன்னர் ரிங்கில் மோதுவர் என்றாள்.இது போதுமம்மா தாயி, என்று நினைத்து கும்பிட்டு நன்றி சொன்னேன். நடுநடுவில் தன்னையறியாமல் ஸ்பானிஷிக்கு சென்று மன்னிப்புகோரி, ஆங்கிலத்திற்கு வந்து அவள் விளக்கியது வேடிக்கையாக இருந்தது. இதற்கிடையில் மைதானத்தில் சிலர் வந்து, கோடுகளை திருத்தி, நம்மூர்போல் வெள்ளைப்பொடி தூவி பிரித்தனர்.
Procession

                மைதானம் மக்களால் களைகட்ட, பக்கத்தில் இருந்தவர் ஆண்பெண் வித்தியாசம் இல்லாமல், குளிர் பியர்களைக் குடித்து சூடாகிக் கொண்டிருந்தனர். திடீரென்று உச்சஸ்தாயியில் பேண்ட் வாத்தியக்குழு டிரம்பெட்டுகளை இசைக்க, ஒரு ஊர்வலம் கிளம்பி வந்தது. முதலில் ஊழியர்கள் தங்கள் சிறுவண்டிகள் மற்றும் சிறு கருவிகளோடு வந்தனர். அவர்கள் பின்னால் யூனிபார்ம் அணிந்த ஒரு குழு நடந்து வந்தது. அவர்கள் பின்னர் குதிரை வீரர்கள் தங்கள் நீண்ட ஈட்டிகளோடு வர, அவர்கள் பின்னால் காளை வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். பளபளப்பான உடையில் ராஜகுமாரர்கள் போல், இடையில் வாள் அணிந்து வந்தவர்களில் முதலில் ஃபேபியன் பார்பாவும் இரண்டாவதாக டேவிட் மோராவும் மூன்றாவது மனோலா  மேஜியாவும் கம்பீரமாய் நடந்து வந்தனர். கடைசியாக வந்தவரைத்தான் நான் வெளியே இருந்துவந்த காரில் பார்த்தேன்.
மனோலா உள்ளே வந்த மாத்திரத்தில், முழுக்கூட்டமும் எழுந்துநின்று  மன்யோலா மன்யோலா என்று ஆரவாரம் செய்ததில், அரங்கம் மட்டுமல்ல என் காதுகளும் அதிர்ந்து போயின. நடுத்தர வயதில் மற்ற இருவரைக் காட்டிலும் குட்டையாக இருந்த அவருக்கு வரவேற்பு பலமாக இருந்தது. மூவரும் சென்று மறுபுறத்தில் உட்கார்ந்திருந்த யாரோ ஒரு விஐபிக்கு வணக்கம் சொல்லிவிட்டு எனக்கு நேர் கீழே இருந்த ஒரு பாக்சுக்குள் நுழைந்தனர்.
சிறிதுநேரத்திலேயே, எனக்கு நேரே எதிர்ப்புறத்தில் ஒரு திட்டிவாசல் திறக்கப்பட, வருதய்யா ஒரு காளை சீறிக்கொண்டு.


இன்னும் வரும் >>>>>>>>>>>>

Monday, June 3, 2013

மெக்சிகோ பயணம் 14: கோட்டையை யாருப்பா ஒளிச்சு வச்சது ?


                கோட்டைக்குச் செல்லும்வழி மிகவும் அகலமானதாகவும், இருபுறமும் மரங்கள் அடர்ந்தும் காணப்பட்டது. தூரத்தில் கோட்டை சிறிதளவு தெரிந்தது .வாசலில் உயரமான கப்பில் பைன் ஆப்பிள், தர்ப்பூசனி, வெள்ளரிக்காய், கேண்டலுப்,ஹனி டியூ ஆகியவற்றை வெட்டி விற்றுக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்று வெள்ளையாக, நான் இதுவரை பார்த்தறியாத ஒன்றாக இருந்தது. என்னவென்று கேட்டேன்.அவர்கள் சொன்னது புரியவில்லை. ஆனாலும் சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று வாங்கினேன். எது எடுத்தாலும் 10 பீசோக்கள். வாங்கிச் சாப்பிட்டால், இலேசான இனிப்புடன் நீர்ச்சத்து அதிகமாக, அந்த பசி நேரத்தில் அமிர்தமாக இருந்தது. எப்போதோ எங்கேயோ சாப்பிட்டமாதிரி இருந்தது .பார்க்கிங்  கிடைக்காததால்,  டேனியல் காரிலேயே தங்கிவிட்டான்.

                நுழைவாயிலில் உள்ளே செல்லும்போது, படை பரிவாரத்தோடு, கம்பீரமான அரபுக் குதிரையில் ஆரோகணித்துச் செல்வதுபோல், நினைத்துக்கொண்டு ("நான் கிருஷ்ணதேவராயன்" படித்த எபக்ட் போல ) உற்சாகமாக உள்ளே சென்றேன். வழியில் ஒரு பெரிய சதுக்கம் வந்தது.


 அருகில் வந்ததும் கோட்டை கொஞ்சம் கூட தெரியவில்லை. சதுக்கத்தையும், நீருற்றையும் கடந்து சென்றால், இரு பாதைகள் சென்றன. அதில் ஒன்றில் பெரிய கூட்டம் சென்று கொண்டிருந்தது. ஆடு மந்தையோடு செல்வதுபோல், அவர்களைப்பின்பற்றி சென்றேன். பாதையின் இருமருங்கும் நெருக்கமாக சிறுகடைகளும் தள்ளுவண்டிகளும் இருந்தன. ஆண், பெண், குடும்பங்கள், குழந்தைகள், காதலர்கள் என கோலாகலமாக மகிழ்ச்சியுடன் சென்றனர். ஒருபக்கம் பேட்டரி இரயில் மக்களை ஏற்றிக்கொண்டு  போய்க்கொண்டிருந்தது. 

ஒரு முக்கால் மணிநேரம் நடந்தபின்னும் கோட்டை வருவதாகத்தெரியவில்லை. யாரிடம் கேட்டாலும் உதட்டைப் பிதுக்கினார்கள் மொழிப்பிரச்சனைதான். தவறான வழி என்று பட்சி சொன்னது.
                கோட்டையும் கண்ணுக்குத் தெரியவில்லை. கோட்டை குட்டையாக இருக்குமோ?. ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்களா? என்று நடுத்தெருவில் கூவாத குறை. இறுதியில் ஒருவன் சிக்கினான். அவனிடத்தில், “கோட்டை எங்கே?” என்று கேட்டபோது, “அது இந்த வழியில் இல்லை, திரும்பிப்போ, ஆனாலும் இன்று மூடியிருக்கிறது, மதியம் 3 மணிக்குமேல் தான் திறக்கிறார்கள், புது பிரசிடன்ட் இங்கே பல நாட்டு விருந்தினர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கிறார்” என்றான். “இது என்ன வழி, எல்லோரும் எங்கே போகிறார்கள்” என்றேன். இது சும்மா பொழுதுபோக்கு கடைவீதி, தொடர்ந்து நடந்தால் நகரின் அடுத்த பகுதி வந்துவிடும் என்றான். சரிதான் போங்க.
                          மணி 1 ஆகி பசி வயிற்றைக்கிள்ளியது.திரும்பி நடையோ நடை நடந்து கோட்டைக்குச் செல்லும் குறுக்கு வழியில் நடந்தேன். ஃபெடரல் போலிசியோவால் தடுக்கப்பட்டேன். அனுமதியில்லை என்றார்கள். நம்பினால் நம்புங்கள், கோட்டை (Castle) கண்ணுக்கு தெரியவேயில்லை. உயரமான மரங்கள் அடங்கிய காடுதான் தெரிந்தது. இந்த கேசில் மேக்சிமிலியனை மட்டுமல்ல என்னையும்தான் ஏமாற்றிவிட்டது என்று நினைத்துவிட்டு வெளியேபோக நடையைக்கட்டினேன்.
                    மறுபடியும், அதே கடையில் அந்த வெள்ளை காய் அல்லது பழத்தை எனக்கும் டேனியலுக்கும் இரண்டு வாங்கிக்கொண்டு காருக்குச்சென்றால், டானியல் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பி கப்பைக் கொடுத்து, “இது என்ன காயா இல்லை பழமா ?” என்றேன். “அது காயுமல்ல பழமுமல்ல ஒரு வகைக் கிழங்கு, ஜிக்கமோ என்று பெயர்” என்றான். அப்போதுதான் தேவதானப்பட்டி சந்தையில் எப்போதாவது விற்கும் பூமிக்கிழங்கு ஞாபகம் வந்தது. ஆனால் அது யானைக்கால் போல பெரிதாக இருக்கும்(டேய் சேகரு, உனக்கு வேற உருவகமே  கிடைக்கலியா ?) . மேலே கொஞ்சம் கொஞ்சமாய் சீவி தருவார்கள். அது பூமியில் இருக்கும் இடம், குரங்குகளுக்குத் மட்டுமே தெரியும் என்பார்கள். இதுவும் அதன் ஜாதிதான். ஆனால் இங்கே சிறிய சைசில் அல்லது ஒரு பெரிய சைஸ் டர்னிப்போல இருந்தது. “கேசில் உள்ளே பார்க்க முடியவில்லை” என்றதும், “நினைத்தேன்”, என்றான். “3 மணிக்கு திறப்பார்களாம், ஆனால் நான் காளைச் சண்டைக்கு போக வேண்டுமே”, என்றேன். “ஓ, வெல்  நெக்ஸ்ட் டைம் தென்”, என்றான்.
                 "டேனியல்", தயக்கத்துடன் கூப்பிட்டேன். என்ன? என்றான். “நான் உங்கள் நாட்டு சலவைக்காரி ஒருத்தியைப் பார்க்க வேண்டும்” என்றேன். என்ன? என்று திரும்பி உற்றுப்பார்த்தான். “அப்படிப்பார்க்காதே, ஒரு விஷயம் இருக்கிறது” என்றேன். “லெட்ஸ் ஸி”  என்றான். “ஓகே குட்” என்றேன். “நோ நோ இத வேற லெட்டஸ்ஸி” என்றான்.
                 மணி 2 ஆகியிருந்தது, 3 மணிக்கு மெக்ஸி டூர் ஆட்கள் வத்துவிடுவார்கள். டேனியலிடம் சொல்லி சீக்கிரமாக என் ஓட்டலுக்குத் திரும்பச் சொன்னேன். ஓட்டலுக்கு வந்து சேரும்போது மணி 2.30. டேனியலிடம் விடைபெற்று, இன்னொரு டீல் போட்டேன். வேறென்றுமில்லை, நாளைக்காலையில் ஏர்போர்ட்டில் இறக்கிவிட வேண்டுமென்று. அதோடு சலவைக்காரிகளை சந்திக்க வேண்டுமே.
                      வேகமாக ரூம் சென்று முகம் கழுவி, கீழிறங்கி ரெஸ்டாரண்டுக்கு வந்தேன். மணி 2.45 அதிக கூட்டமில்லை. ஆனால் ஒரு ஐம்பது ஐட்டங்களை பரப்பி வைத்து லஞ்ச் பஃபே என்றார்கள். பழக்கமானவை போல் தெரிந்த சில ஐட்டங்களை எடுத்து வைத்துக்கொண்டு வாயில் வைக்குமுன், “தயகாரஜான்” என்று கோர்ட்டில் கூப்பிடுவது போல் ஒருவன் கூவினான். என் அப்பா பெயரை அமெரிக்காவில் பலபேர் உச்சரிக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள். ஆனால் இவன் கொலை செய்ததுபோல் ஒருவரும் செய்ததில்லை. நான்தான்  என்றேன்/ போகலாமா? என்றான். அடப்பாவி ஒரு கவளம் கூட வைக்கவில்லையே, “நீயும் வந்து சாப்பிடு”, என்றேன். “சாப்பிட்டுவிட்டேன்” என்றான். “சரி ஒரு அரைமணி நேரம் தா”, என்றேன். “பத்து நிமிடம்”, என்று சொல்லி அகன்றான்.
                   அவசரமாக சாப்பிட்டதில் வயிறும் நிறையவில்லை மனமும் நிறையவில்லை. கொஞ்சம் பழங்களை மட்டும் எடுத்து சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. நிறையப்பேரை பிக்கப் செய்யவேண்டியதிருக்கும் என்று நினைத்தபடி ஏறினேன். தடதடத்து வேன் கிளம்பியவுடன், கேட்டபோது நான் மட்டும்தான் என்றான். என்னை ஆல்ஃFரட் என்று அழைக்கும்படி சொல்லிவிட்டு, அவன் பெயர்கேட்டேன், கார்லோஸ் என்றான். லேட்டாகிவிட்டதா என்று கேட்டதற்கு “இல்லை உன் ஷோ 4.30 மணிக்குத்தான்” என்றான். அடப்பாவி, இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்திருந்தால் கொஞ்சம் கூட சாப்பிட்டிருப்பேனே என்று நினைத்து வயிறு எரிந்தேன்.
               மூன்றரை மணிக்கு ஸ்டேடியம் சென்றடைந்தோம். “இது மூன்று மணிநேர ஷோ”, என்று சொல்லி டிக்கட்டை கையில் கொடுத்து “எப்போது வரவேண்டும்” என்றான்.” ஷோ ஏழரைக்கு முடியுமென்றால், நீ ஒரு எட்டு மணிக்கு வா” என்றேன். “அஃப்கோர்ஸ் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், முழுவதையும் பார்த்துவிட்டுத்தான் வருவேன்” என்றேன். “சரி எஞ்ஜாய் திஷோ” என்று சொல்லிவிட்டு அகன்றான்.
வெறும் பிக்கப் டிராப் போல இருக்கிறது. என்னுடைய கேள்விகளை எல்லாம் யாரிடம் கேட்பது என்று நினைத்தபடி, அரங்குக்கு சென்றேன். காளைச்சண்டையை நேரில் பார்க்கப்போவதை நினத்தால் , என் தோள்கள் தினவெடுத்துத்துடித்தது .( என்னது தோள் தினவெடுக்குதா , அங்க வெறும் தோல்தான இருக்கு ?என்னமோ இவனே காளையைப் பிடிப்பது போல ரொம்ப பண்றானே )



இன்னும் வரும் >>>>>>

Tuesday, May 28, 2013

மெக்சிகோ பயணம் 13: உசுப்பேத்தி உசுப்பேத்தியே உயிரை எடுத்திட்டாய்ங்க

Emperor Maximillian



       மெக்சிகோ சுதந்திரம் பெற்று, குடியரசாகி இருந்தாலும், அதிலுள்ள மக்களில் இருபிரிவு இருந்தனர். பழங்குடி மக்களும் சுதேசிகளும் குடியரசை ஆதரித்தாலும், அங்கேயே வாழ்ந்து, பழந்தின்று கொட்டைபோட்ட ஸ்பானிஷ் மேற்குடியினரும், பெருந்தன நிலக்கிழார்களும் மீண்டும் அரசாட்சியினையே விரும்பினர். எனவே இருவருக்கும் எப்போதும் மோதல் இருந்து கொண்டே இருந்தது. இருவருக்கும் தனித்தனி ராணுவமும் இருந்தது.
      இதற்கிடையே ஆஸ்திரிய நாட்டின் அரசவம்சத்தில் பிறந்து, ஆர்ச் டியூக் பதவியிலிருந்த, ஃபெர்டினன்ட் மேக்ஸிமிலியனை தங்களது பேரரசர் ஆகவேண்டுமென, மெக்சிகோவின் முடியாட்சியை விரும்பும் "Monarchist" சிலர் கேட்டனர். அவர்களுக்கு ஐரோப்பா முழுதும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தலைமை தேவைப்பட்டது. இது நடந்தது 1859ல். அப்போது அவர் ஆஸ்திரிய நாட்டின் ராணுவத்தின் "கமாண்டர் இன் சீஃப்" ஆக பெரிய அந்தஸ்தில் இருந்ததால் அதனை தவிர்த்துவிட்டார். அதே கோரிக்கை மீண்டும் 1861ல் எழுந்த போதும், மறுத்துவிட்டார்.
      ஆனால் விதி அவரை விடவில்லை. மோனார்கிஸ்ட்டுகளுடன் இணைந்து ஃப்ரென்ச் ராணுவம், சுதேசிகளை முறியடித்து மெக்சிகோ சிட்டியை ஆக்ரமித்தது. அப்போது ஃபிரெஞ்ச் நாட்டை ஆண்ட மூன்றாவது நெப்போலியனும் இணைந்து கேட்டுக்கொண்டதால், கி.பி. 1863ல் மெக்சிகோவின் பேரரசராக, மேக்சிமிலியன் ஒத்துக்கொண்டார். அதன் மூலம் ஆஸ்திரியாவில் இருந்த அவருடைய பட்டம் மற்றும் பதவிகளை துறக்க நேர்ந்தது.
      1864, ஏப்ரல் மாதம் அவருடைய அரண்மனை இருந்த மிராமேர் என்ற இடத்தைவிட்டு எஸ். எம். எஸ். நோவாரா என்ற கப்பலில் மெக்சிகோவுக்கு பயணப்பட்டார். அவருக்குத் துணையாகவும், பாதுகாவலாகவும், ஆஸ்திரிய போர்க்கப்பலான SMS பெலோனா , ஃபிரென்ச் போர்க்கப்பலான தீமிஸ் , இம்பீரியல் யாட் ஃபாண்டசி  ஆகியவை துணைக்கு வந்தன . இந்த முயற்சிக்கு அப்போது இருந்த  போப்பாண்டவர் பயஸ் IX  என்பவரின் ஆசியும் இருந்தது. வழியில் வந்த, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்த ஜிப்ரால்டர், விக்டோரியா மகாராணியின் ஆணைப்படி, மேக்சிமில்லியனின் கப்பல் கடக்கும்போது, பீரங்கிகளை வெடித்து மரியாதை செலுத்தியது.

       இதனையெல்லாம் பார்த்து மிகவும் மகிழ்ந்த மேக்ஸிமிலியன், மிகுந்த உற்சாகத்துடன் தன் மனைவியுடன் வெரகுருஸ் என்ற இடத்தில் கி.பி.1864 மே மாதம் 21ஆம் தேதி இறங்கினார். அரசாட்சியினை விரும்பும் மக்கள் திரளாகக்கூடி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். செப்பல்டப்பெக் கோட்டை அவரது அதிகாரபூர்வ இல்லமாயிற்று.


ஆனால் பெனிட்டோ ஜுவாரஸ்-ஐ  பிரசிடண்ட்டாக கொண்டு இயங்கிய சுதேசி அரசாங்கம், அவரை மன்னராக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதனால் ஒரு நாட்டில் இரண்டு அரசாங்கம் இருக்கும் நிலைமை , மேக்ஸிமிலியனுக்கு பெரும் தலைவலியாய்  இருந்தது. தொடர்ந்து மோதல்கள் இருந்துகொண்டே இருந்ததால் முடிசூட்டக்கூட அவருக்கு நேரமில்லாமல் போய்விட்டது.

President Benito Juarez

    “என்னுடைய ஆட்சியை, ஏற்றுக்கொண்டால் பொதுமன்னிப்பு கொடுத்து பிரதமராக ஆக்குவேன்” என்று மேக்ஸிமிலியன் கொடுத்த வாக்குறுதியை ஏற்க பெனிட்டோ மறுத்துவிட்டார்.
       இதற்கிடையில் மேக்சிமிலியன் பலவிதமான் சீர்திருத்தங்களை நாட்டிலே ஏற்படுத்தினார். பெனிட்டோ ஏற்படுத்திய பல மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டார். குறுகிய காலமாகிலும் ,சிறுபான்மை மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தார்.
ஆனால் குடியாட்சியைச்சேர்ந்த பெனிட்டோ, பேரரசரின் விசுவாசிகளை பிடித்துகொல்ல ஆரம்பித்தார். மேக்சிமிலியனும் வேற வழியின்றி அதே தவறைச் செய்தார்.
அப்போதுதான் அமெரிக்கா (வழக்கம்போல் )மூக்கை நுழைத்து, பெனிட்டோவுக்கு உதவ முன்வந்தது. அத்தோடு மூன்றாம் நெப்போலியனை தன்  ஃபிரெஞ்ச் துருப்புகளை திரும்ப அழைத்துக்கொள்ள நிர்ப்பந்தித்தது.
அமெரிக்க உதவியோடு குடியரசுப்படைகள் வெல்வது நச்சயம் என்ற நிலை வந்தபோது, மேக்சிமிலியனின் விசுவாசிகள் பலர் அவரைவிட்டு விலகிச்சென்றனர். இறுதியாக 1866ல் நெப்போலியனும் தன் படைகளை திரும்ப அழைத்ததோடு, மேக்சிமிலியனையும் ஆஸ்திரியாவுக்கே திரும்புமாறு வேண்டினார்.
ஆனால் தன் விசுவாசிகளை கைவிட்டு ஓடுவதற்கு மேக்சிமிலியன் மறுத்துவிட்டார்.
      மேக்சிமிலியனின்  மனைவி கரோல்ட்டா (Her Imperial Majesty Empress Carolta) ஐரோப்பாவுக்கு திரும்பி பல நாடுகளில் உதவி கேட்டார். ஒருவரும் உதவி செய்ய முன்வராததால் அவர் மெக்சிகோ திரும்பவேயில்லை.

Empress Carolta

    மேக்சிமிலியனின்  8000 விசுவாசப்படைகள் அவரைக்காத்து நின்று முற்றுகையை சிலகாலம் சமாளித்தது. இதற்கிடையில் வழக்கம்போல் ஒரு எட்டப்பன் கதவைத்திறந்துவிட, குடியரசுப்படைகள் உள்ளே புகுந்து, எதிர்ப்போரை அழித்து மேக்சிமிலியனை  சிறைப்பிடித்தது.
      பல  நாட்டு மன்னர்களும், தலைவர்களும் மேக்சிமிலியனை கொல்லவேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தும், அவை அனைத்தையும் புறக்கணித்த பெனிட்டோ ஜுவாரஸ், மேக்சிமிலியனுக்கு   மரண தண்டனை  கொடுத்தார் . மேக்சிமிலியனை ,1867 ஜூன் 19ம் தேதியன்று சுட்டுக்கொன்றனர். Viva Mexico, Vivala Independence என்று சொல்லி உயிரைவிட்டார். அவரோடு கொல்லப்பட்ட இரண்டு விசுவாச தளபதிகளான மிகுவேல் மிராமன், லியனார்டோ மார்கஸ் ஆகிய இருவரும், Long Live  the Emperor என்று சொல்லி உயிரைவிட்டனர்.

      அத்தோடு மெக்சிகோவின் முடியாட்சி முற்றிலுமாக ஒரு முடிவுக்கு வந்தது.
அவருடைய உடல் எம்பாம் செய்யப்பட்டு பல நாட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த அடுத்த வருடம் ஆஸ்திரிய அரசு வில்கெம்  என்ற தனது அட்மிரலை அனுப்பி அவரது உடலை பெற்றுக்கொண்டது எந்தக்கப்பலில் முடிசூட தயக்கத்தோடு வந்தாரோ அதே கப்பலான SMS  நோவாரா என்ற கப்பலில் அவருடைய பூத உடல் ஆஸ்திரியாவுக்கு திரும்பி , வியன்னாவில் உள்ள அரசவம்ச கல்லறையில் 1868 ஜனவரியில் புதைக்கப்பட்டது.
        அவருடைய இறப்பை இறுதிவரை ஒத்துக் கொள்ளாத அவர் மனைவி, மனம் பிறழ்ந்து இத்தாலியில் உள்ள மிரமேர் கோட்டையிலும், பெல்ஜியத்தில் மெய்ஸூவில் இருக்கும் கோட்டையிலும், தனியாக தன் எஞ்சிய வாழ்க்கையைக்கழித்து ஜனவரி 1927ல் இறந்து போனார்.
இப்படி சும்மா இருந்தவரை உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ஆசைகாட்டி அழித்தது சமுதாயம்.எம்ப்பெரர் மேக்ஸிமிலியன் வாழ்ந்த அந்த கோட்டையை பார்க்கப்போவது ஒரு புல்லரிப்பைத்தந்தது .வாருங்கள் கோட்டைக்குப் போவோம்.

இன்னும் வரும் ...........

Tuesday, May 21, 2013

மெக்சிகோ பயணம் 12 : எய்ட்ஸ் ஃப்ரீயா அல்லது ஃப்ரீ எய்ட்ஸா?


     டிசம்பர் 2, 2012

      நேற்று போட்ட டீல்படி டேனியல், காலை எட்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். நானும் அதற்கு முன்பே விரதம் முறிக்கும் காலை உணவை (அதாங்க பிரேக் ஃபாஸ்ட்) முடித்து காத்திருந்தேன். தன்னுடைய கருப்பு கலர் ஃபோர்டில், ஒரு கருப்பு கலர் டி ஷர்ட் போட்டுக்கொண்டு , இந்த கருப்பு கலர்  ஆளை ( நாந்தேன் )கூப்பிட வந்திருந்தான் . “ஓலா அமிகோ” என்று கைகுலுக்கி முன்பகுதியில் அமர்ந்தேன். “இன்று ஞாயிற்றுக்கிழமை டிராஃபிக் அவ்வளவாக இருக்காது” என்றபடி பறந்தான். வழியெங்கும் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சான் ஏஞ்சல் செல்வதாக திட்டம். “எவ்வளவு நேரமாகும்” என்று கேட்டபோது அரை மணி நேரம் ஆகுமென்றான். “அப்படியென்றால் ஒரு மணி நேரம் தானே?” என்று சிரித்தேன். அவன் சிரிக்காமல்,“ இன்று அப்படியாகாது” என்றான். வெளியே லேசான குளிர் இருந்தது.
அந்தச்சமயத்தில் வலதுபுறம் வரிசையாக மோட்டல்கள் வந்தன. அவனிடம் விசாரிப்பதற்கு முன், வழியில் ஒரு பெண், காரின் முன்பகுதியில் ஏறி நின்றுகொண்டு கையாட்டிக் கொண்டிருந்தாள். கொடுமை என்னவென்றால், வெறும் ஜட்டி பிரா மட்டுமே அணிந்திருந்தாள். அதிர்ந்து போனேன்? “அழகான மாடல் போன்றிருக்கும் இவள் ஏன் இங்கு இப்படி அலங்கோலமாக நிற்கிறாள்?” என்று கேட்டேன். டானியல் சொன்னான், “இதுதான் பிக்கப் ஏரியா, இங்கு பிக்கப் செய்துவிட்டு, பக்கத்திலிருந்த மோட்டலுக்கு செல்வார்கள்”. இந்தப்பகுதி மோட்டல்களில் நாள் கணக்கில் மட்டுமல்லாது மணிக்கணக்கிலும் அறைகள் கிடைக்குமாம்.
ஏய் ஏய் உங்க கற்பனைக்குதிரைகளை நிறுத்துங்க. டேனியலிடம் நான் போட்ட டீல் இதில்லை. இன்று காலையில் மெக்ஸி டூரில் நான் ஏதும் புக்பண்ணவில்லையாதலால் டேனியலும் இன்று காலை ஃப்ரீயாய் இருந்ததால், சில பார்க்கத்தவறிய இடங்களை அரைநாளில் பார்த்துவிடலாம் என்று அவனிடம் பேரம்பேசி தனியாக அமர்த்திக்கொண்டேன். அதுதாங்க டீல். வேறொன்னுமில்லை என்னை நம்புங்க.
         இந்த புராதன தொழில் ,இவ்வளவு ஓபனாக நடக்கிறதே, என்று நினைத்த வண்ணம் டேனியலிடம், "அது சரி இதெல்லாம் எய்ட்ஸ் ஃப்ரீயா அல்லது ஃப்ரீ எய்ட்ஸா? என்றேன், டேனியல் பலமாக சிரித்து (அப்பாடா சிரித்துவிட்டான்), “எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றான். “ஏஞ்சல் பகுதின்னு சொல்லிட்டு , இப்படி சாத்தான் பகுதிக்கு கூட்டிட்டு வரியேன்னு” கேட்டேன்.நல்லவேளை சாமி நான் லுத்தரன், மார்மன் அல்ல என்று நினைத்தபடி, " கண் போன போக்கிலே கால் போனாத்தான தப்புன்னிட்டு ,இன்று ஞாயிற்றுக்கிழமை, சர்ச்சுக்கு காரை விடு, முதலில் , கருமம் , இந்தப்பாவத்தைஎல்லாம் தொலைக்க வேண்டும் " என்று சொன்னேன். இன்று நிறைய சர்ச்சுக்குப் போகிறோம் என்றான். சோதனைக்கென்றே ஒவ்வொரு  தெரு  முனையிலும் ஓரிருவர் நின்றிருந்தனர் .  விரைவாக கடந்து ,சான் ஏஞ்சல் என்ற கலோனியல் பகுதியில் இருந்த பிரமாண்டமான சர்ச்சுக்கு சென்றோம்.

 இங்குள்ள சர்ச்சுகள் எல்லாமே பெரிது மிகப்பெரிது. மிக அழகாக தங்க நிறத்தில் (தங்கம்தானோ?) அலங்கரிக்கப்பட்ட ஆல்டர் முன் முழங்காற்படியிட்டு ஜெபித்து, மனசு லேசானபின் எழுந்து திரும்பினேன்.

சான் ஏஞ்சல்
    மெக்சிகோ நகரின் அருகில் உள்ள சான் ஏஞ்சல்  என்பது ஒரு காலத்தில் ஸ்பானிஷ் காலனி. ஹிஸ்பானிக்ஸ் வருவதற்கு முன்னால் இது ஆஸ்டெக் மக்கள் வசித்த
டெனிட்லா என்றழைக்கப்பட்ட ஒரு கிராமம். ஸ்பானிஷ் குடியேறிய பின்னர், 1617-ல் இங்கே எல் கார்மன் என்ற கான்வென்ட்  உருவானது . சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த கான்வென்ட்  ஒரு கோட்டையாக உருவெடுத்தது. அமெரிக்கர்களோடு சண்டையும் இங்கேதான்  நடந்தது. இப்போது இது ஒரு மியூசியம்.

     சான் ஏஞ்சல் பகுதி முழுவதும் பல பழைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அனுமதி இலவசம். உள்ளே பல படங்கள், ஓவியங்கள், ராணுவ தளவாடங்கள், போர் வாள்கள், துப்பாக்கிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. போர்க்காலத்தில் பயன்படுத்திய பீரங்கிகள்,


 பாதாள அறைகள், சுரங்கங்கள் ஆகியவை இருந்தன. பாதாள அறைகளில் இருந்த மம்மிகளைப் பார்க்க, அன்று காவலிருந்த செக்யூரிட்டி மம்மிகள்  அனுமதிக்கவில்லை.

      இந்தப் பகுதிகளில் எரிமலைகள் இருந்து வெடித்ததாம். அதிர்ச்சியுடன் எப்போது என்றபோது 2000 வருடங்களுக்கு முன் என்றனர். அப்பாடா தப்பித்தேன் என்று நினைத்து, காருக்குத் திரும்பினோம்.
அங்கிருந்து நேராக மெக்சிகோ சிட்டி டெளன் டவுனுக்கு சென்று பார்க் செய்துவிட்டு (எச்சரிக்கை :காரில் ஏதும் வைக்கவேண்டாம்), சிறிது தூரம் தெருக்களை தாண்டி நடந்தவுடன் மாபெரும் சதுக்கம் வந்தது. நடுவில் ஏராளமான வெற்று இடத்தின் நடுவில் மெக்சிகோவின் கொடி உயரமாய் பறக்க, அதன் ஒரு பகுதியில் இருந்தது மெட்ரோபாலிடன் கதீட்ரல்.

 இதுவே மெக்சிகோவின் பழமையானதும் (கி.பி.1573) பெரிதானதும்  ஆகும். இதுதான்  மெக்சிகோவின் ரோமன் கத்தோலிக்க ஆர்ச் டயோசிஸின் தலைமையகமும்  ஆகும்.  ஸ்பெயினில் உள்ள காதிக் கதீட்ரல்களின் அடிப்படையில் ஸ்பானிஷ் ஆர்க்கிடெக்ட் "கிளாடியோ டி ஆர்ஸ்னிகா" (Claudia de Arciniega) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

        நான்கு அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் பிரமாண்டமான தூண்களையும் சிலைகளையும் பல ஆல்டர்களையும் உடையது. இதில் உள்ள இரண்டு மணிக்கோபுரங்களில் 25 மணிகள் உள்ளன. பெல் டவருக்கு ஒரு வழிகாட்டி அழைத்துப்போக, ஸ்பைரல் படிக்கட்டுகளில் ஏறி ஏறி ஏறி ஏறி தலை கிறுகிறுத்துப்போனது.
       மெக்சிகோ டெளன் டவுனில் உள்ள பல கட்டிடங்களைப் போலவே கத்தீட்ரலும் சிறிது சிறிதாக புதைந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு புதைகிறது என்பதைக்கண்டுபிடிக்க பெல் டவரிலிருந்து ஒரு உருளையில் ஒரு உருக்குக் கம்பியை கட்டி வைத்திருந்தனர். அதன் மறுபகுதியில்  ஒரு துளை அமைக்கப்பட்டு கீழே கீழே தரையில் புதைக்கப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு 5 செ.மீ புதைகிறதாம்.

கதீட்ரலில் இரண்டு பெரிய ஆல்டர்களும் 16 சிறிய சேப்பல்களும் உள்ளன. ஒவ்வொரு சிறிய ஆல்டரும் ஒவ்வொரு புனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உள்ளே நடந்த வழிபாட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
          அங்கிருந்த 18 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய இரண்டு ஆர்கன்கள் சிறப்பு வாய்ந்தவை. கிரிப்ட் என்று சொல்லப்படுகிற, பாதாள அறையில் பல முந்தைய ஆர்ச் பிஷப்புகள் புதைக்கப்பட்டிருந்தனர்.
1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீயில் பெரும் பகுதி அழிந்து பின்னர் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது என்று சொன்னது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு சுவடும் தெரியவில்லை.
 ஸ்பெயின் படையை வழிநடத்திவந்த ஹெர்னன் கார்டஸ், ஆஸ்டெக் பேரரசை முற்றிலுமாக முறியடித்ததின் ஞாபகமாக, அவர்களுடைய போர்க்கடவுளின் ஆலயமான டெம்ப்லோ மேயரை (Templo  Mayor) அழித்து, அதே கற்களை பயன்படுத்தி அதன்மேலேயே கட்டப்பட்டது தான் இந்த கதீட்ரல். அடப்பாவிகளா வெற்றிச்சின்னமாக , அமைதிச் சின்னமான ஆலயத்தையா கட்டுவது ?நல்லவேளை ஆஸ்டெக் மக்களில் இன்று கர சேவகர்கள் இல்லை. தப்பித்தது மெக்சிகோ சிட்டி.
      டெம்ப்லோ மேயரின் சில பகுதிகளை அப்படியே விட்டு வைத்துள்ளனர். அது கதீட்ரலுக்கு பின்புறத்தில் இருக்கிறது. அதன் பல நிலைகளையும் சென்று பார்த்தேன்.
கதீட்ரலுக்கு அருகில் உள்ள வெட்ட வெளியில், புராதன உடையணிந்த ஒரு ஆஸ்டெக் பழங்குடி ஆள் ஒருவர் ஒருவித டிரம்மை தொடர்ந்து அடித்து ஒலியெழுப்ப, 

இன்னொருவர் சாமியாடி, வரிசையாக வந்தவர்களுக்கு தலையில் இறகுக்குவியலை வைத்து மந்திரித்தார். “போகிறாயா?” என்று டேனியல் கேட்க, “ஐயா ஆள விடு, ஏற்கனேவே காலையில் இருந்து மந்திருச்சி விட்ட மாதிரித்தான் இருக்கேன்” என்று சொல்லி நகர்ந்தேன். 
       ஆலயத்தின் அருகில் பலர் பெட்டி போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு விசையைச் சுற்ற அதில் இசைப்பாடல் வந்தது. இனிமையாக இருந்தது. அவர்கள் கிட்டே போனால் இசையை நிறுத்திவிட்டு காசு கேட்டனர். காசு கொடுக்க இசை தொடர்ந்தது. நான் சுற்றலாமா? என்று டேனியல் மூலம் கேட்டபோது அவன் மறுத்துவிட்டான். (அவனோ பிச்சைக்காரன் ,நானோ பரதேசி)

கதீட்ரலின் அருகிலேயே மற்றொருபுறம் "நேஷனல் பாலஸ்" இருந்தது. அங்குதான் பிரசிடன்ட் ஆபிஸ் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் இருந்தன. அங்குள்ள ஒரு மியூசியத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மெக்சிகோ ஓவியரான Diego Rivera வின்,  ஓவியங்கள் நிறைய இருக்கின்றனவாம். அன்று அனுமதியில்லை.
அதனை முடித்து, அங்கிருந்து சப்பல்டெபக்  கோட்டைக்குச் சென்றோம். (Chapultepec Castle). இங்குதான் பேரரசர் மேக்சிமிலியன் தங்கியிருந்தாராம். மேக்சிமிலியன் வெளியிட்ட சில நாணயங்கள் என்னிடத்தில் உண்டு. மேக்சிமிலியன் கதை மனதை உருக்கும் ஒரு சோகக்கதை.

இன்னும் வரும் …….