Showing posts with label தமிழர் திருவிழா. Show all posts
Showing posts with label தமிழர் திருவிழா. Show all posts

Thursday, January 17, 2019

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரியம் வளர்கிறதா? தேய்கிறதா?

தமிழ் பாரம்பரியம் அமெரிக்காவில் வளர்கிறதா? தேய்கிறதா?

               பொங்கல் திருநாளை முன்னிட்டு அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சியான tamerica.tv யில்   சிறப்பு பட்டிமன்றம்  நடந்தது .வாஷிங்டன் பகுதி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் அகத்தியன் பெனடிக்ட் அவர்கள் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு பேசினேன் .
 தமிழ் பாரம்பரியம் அமெரிக்காவில் வளர்கிறதா? தேய்கிறதா?  என்ற தலைப்பில்  நடந்த இந்த நிகழ்ச்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம் .







Monday, January 14, 2019

கரும்பு சாப்பிடுவது எப்படி?


பொங்கல் சிறப்புப்பதிவு -2
இதன் முந்திய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2019/01/blog-post_10.html

எச்சரிக்கை: நீங்கள் எழுபது வயதிற்கு மேற்பட்டவரா? செயற்கைப் பற்தொகுப்பைப் பயன்படுத்துபவரா? அல்லது மிகவும் இனிப்பானவரா? இந்தப்பதிவு உங்களுக்கானதல்ல. மீறிச்சாப்பிட்டு பல் விழுந்தாலோ, தாடை உடைந்தாலோ, சுகர் ஏறினாலோ அது கம்பெனியைச் சார்ந்ததல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Add caption
கரும்புகளில் பலவகை உண்டு. ராமர் கரும்பு, பீச்சிக்கரும்பு அல்லது கருப்புக்கரும்பு, ஆலைக்கரும்பு, கம்பெனிக்கரும்பு ஆகியவை அவற்றுள் சில . ராமர் கரும்பு, ராமர் நாமம் போல கணுக்களைக் கொண்டு லேசான கிரே மற்றும் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் எளிது. அவ்வளவு இனிப்பாக இருக்காது. ஆனால் இவற்றை BJP ஆட்சி வந்தும் கூட இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை.
பீச்சிக்கரும்பு
ஆலைக்கரும்பு என்பது அதே வண்ணத்தில் சிறிது குட்டையாகவும், விட்டம் சிறிதாகவும் இருக்கும். இதனைக் கடித்துச்   சாப்பிடுவது கடினம். இளைஞர்களுக்குக் கூட பல் உடைந்துவிட வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் கரும்பு ஜூஸ் கடைகளில் இதனைத்தான் பயன்படுத்துவார்கள் .  இவற்றை வயலிலேயே தற்காலிக ஆலை அமைத்து வெல்லம் செய்வார்கள்.
ஆலைக்கரும்பு
கம்பெனிக் கரும்பு என்பது தமிழக மெங்கும் உள்ள சர்க்கரை ஆலைகளின் மேற்பார்வையில் அவர்களே கொடுத்த கரும்பை நட்டு விளைவித்து அவர்களுக்கே கொடுத்துவிடுவது. டன்னுக்கு இவ்வளவு என்று விலை கிடைக்கும். இந்தக் கரும்பையும் கடித்துச் சாப்பிடுவது கடினமான காரியம்தான்.
இதனை எல்லாவற்றையும் நான் அனுபவித்தவன் என்ற முறையில் என் பேச்சை கேட்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவற்றுள் கடித்துச் சாப்பிடுவதற்கெனவே விளைவிக்கப்படும் கரும்பு பீச்சிக்கரும்பு அல்லது கருப்புக் கரும்பு. பொங்கல் சமயத்தில் ஏராளமாக வரும் . கரும்பு சாப்பிடவில்லை என்றால் அது பொங்கலே கிடையாது.
முதலில் கரும்பை எப்படி வாங்க வேண்டும்? என்று பார்ப்போம்.
1)   கரும்பு நல்ல திடமானதாக திரமானதாக தரமானதாக இருக்க வேண்டும். அவைதான் நன்கு விளைந்தவையாகும்.
2)   கணுக்களின் இடைவெளி அகலமானதாக இருக்க வேண்டும்.
3)   கரும்பின் தோகைகள் புதிதாக, செழிப்பானதாக, பச்சைப் பசேல் என்று இருக்க வேண்டும்.
4)   நிறம் நல்ல அடர் கருப்பாக இருக்க வேண்டும். கருஞ்சிவப்பு நிறத்தை தவிர்க்கவும்.
5)   உடனே சாப்பிடுவதென்றால் மட்டுமே தோகைகளை நீக்கி வாங்க வேண்டும்.
6)   வெட்டித் துண்டுகளாக வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். உடனே சாப்பிடவில்லையென்றால் காய்ந்து விடும் அல்லது சிவப்பு பூத்து சுவை குன்றிவிடும்.
7)   தோகையின் உடன் கீழே இருக்கும் கொழுத்தாடையைச் சாப்பிடக் கூடாது.
8)   அடிக்கரும்பின் வேர் இருக்குமென்பதால் அதனை நீக்கி அடியின் ஒரு சிறு பகுதியை மட்டும் வெட்டிவிட வேண்டும். ஏனென்றால் கரும்பில் சுவை மிகுந்தது அடிக்கரும்பு தான்.
9)   கரும்பை வெட்டும்போதும் துண்டு போடும்போதும் இரு கணுக்களின் இடையே வெட்ட வேண்டும்.
10)               சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது சாப்பிடுவதற்கும், டயட்டிற்கு எளிதாகவும்  இருக்கும்.
கரும்பை எப்போது சாப்பிடலாம்?
1)   காலையில் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்திலோ அல்லது மதிய உணவிற்கும் இரவு உணவுக்கும் இடைப்பட்ட நேரத்திலோ சாப்பிடலாம்.
2)   சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துச் சாப்பிடலாம்.
3)   உணவு உண்பதற்கு சற்று முன்பதாகவோ  சற்று பின்பதாகவோ உடனேயே கரும்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உண்டு முடித்து சிறிது இடைவெளிவிட்டுச் சாப்பிட்டால் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.
கரும்பை எப்படிச்சாப்பிட்ட வேண்டும் ?   
1)   கரும்பை ஜூஸ் பிழிந்து சாப்பிடுவதை விட , முடியுமென்றால் கடித்துச் சுவைத்துச் சாப்பிடுவதே சிறந்த முறை.
2)   கணுக்களில் நடுவிலே வெட்டியிருப்பதால் ஒரு முனையில் கடித்து தோலோடு உரித்து இழுத்து பற்களுக்குக்கிடையே வைத்து சாறு பிழிந்து சாப்பிடுவது நல்லது.
3)   இதன் மூலம் பற்கள் உறுதிப்படும், பற்கள் நாவு மற்றும் ஈறுகள் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் கூட போய்விடும்.
4)   தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவது ஆப்பிள் கொய்யா போன்ற பழங்களை தோல் நீக்கிச் சாப்பிடுவதற்கு சமம். அப்படிச்செய்யாதீர்கள்.
5)   கணுக்களில் பல்லால் கடிக்கும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முடியவில்லையென்றால் கூச்சமோ வெட்கமோ படாது கணுப்பகுதியை வெட்டி எறிந்து விடுவது உத்தமம். பல் உடைந்து, ஈர் கிழிந்து வாய் ரத்த வெற்றிலை போடுவதை விட இது பரவாயில்லை.
6)   மென்று உறிஞ்சியவுடன் சக்கையைக் கவனமாகத் துப்பி விட வேண்டும். இல்லையெனில் தொண்டையில் மாட்டி சோக் ஆவது ஜோக் அல்ல.
7)   போட்டிக்குச் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று முழு சவளத்தையும் ஒரே மூச்சில் சாப்பிடக் கூடாது. வயிறு உப்பி , வாய் புண்ணாகிவிடும்.
8)   சிறிய துண்டுகளாக இடைவெளி விட்டுச் சாப்பிடுவது அவசியம்.
எப்படி சாப்பிடக்கூடாது?
1)   வாயில் ஏற்கனவே புண்களோ கொப்புளங்களோ இருந்தால் கரும்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2)   சாப்பிட்டபின் வாயில் உள்ள சிறு சக்கைத் துகள்களை எங்கிருந்தாலும் தோண்டியெடுத்து துப்பிவிடுதல் நலம். ஒன்றிரண்டு உள்ளே சென்றுவிட்டால் மரணபயம் தேவையில்லை. அது அடுத்த நாள் வந்துவிடும்.
3)   கரும்பு சாப்பிட்டபின் வாயைக் கழுவுகிறேன் பேர்வழி என்று தண்ணீரில் கொப்பளித்தால் வாய் வெந்து கொப்பளித்துவிடும் . ஜாக்கிரதை அதோடு கரும்பு சாப்பிட்டவுடன் மறந்து கூட தண்ணீர் குடிக்கக் கூடாது.
4)   லேசாக உதடுகளை நனைத்து துடைத்துக் கொள்ளலாம்.
5)   உடம்பிலோ ஆடையிலோ பட்டால் பிசுபிசுக்கும். தரையில் பட்டாலும் உடனே துடைத்து விடுவது நல்லது.
6)   கரும்பில் அஸ்கார் பிக் என்ற அமிலத்தன்மை இருப்பதால் இப்படி ஏற்படுகிறது.
7)   வெளிநாட்டுத் தமிழர்கள் டப்பாக்களில் அடைத்துவரும் கரும்பை பூஜைக்கு வேணுமென்றால் பயன்படுத்தலாம். சாப்பிட்டு விடாதீர்கள் தயவு செய்து கேவலமாய் இருக்கும்.
இன்னொரு இனிப்பான செய்தி, கரும்பு விளைவிப்பதில் இந்தியாவுக்கு உலகின் இரண்டாம் இடம். முதலிடத்தில் இருப்பது பிரேசில்.

நியூயார்க்கில் கரும்பு கிடைக்கும் இடங்கள்
1)   பெல்ரோஸ் அல்லது ஹிக்ஸ்வில்லில் இருக்கும் நமது தமிழ்க்கடையான மகாராஜாவில் கிடைக்கும் . இல்லையென்றால் அதன் உரிமையாளர் திருச்சிக்கார செந்திலிடம் முறையிடுங்கள். தேவைப்பட்டால் திட்டுங்கள்.
2)   நமது பிள்ளையார் கோவிலின் அருகேயுள்ள கிஸ்ஸனா புலவர்ட்டில் உள்ள கொரியன் கடையில் கருப்பு  கரும்பு கிடைக்கும். (அங்கே போய் கிஸ்ஸனா என்றால் என்ன என்று கேட்பதைத் தவிர்க்கவும். கொரியனும் மார்ஷியல் ஆர்ட்டில் சளைத்தவர்களல்ல. சிறிது கற்றுக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
3)   ஃபிளஷிங்  மெயின் ஸ்டிரீட்டின் அருகே இருக்கும் நூலகத்தின் அருகே மேலேறிச் செல்லும் சாலையில் உள்ள சீனக்கடையில் கரும்பு கிடைக்கும். வெட்டித் துண்டுகளாக வாங்கிச் செல்வது நல்லது. ஏனென்றால் முழுக்கரும்பையும் கொண்டு செல்கிறேன் பேர்வழி என்று சீனப் பெண்  அல்லது ஆணின் சப்பை மூக்கி மேலும் சப்பையாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் , உங்கள் முகம் சப்பையாவது உறுதி. கரும்பே பிரம்பாகிவிடும் அபாயமும் உண்டு. அதோடு வெட்டித்தரும் சீனாக்காரனுக்கோ அல்லது அங்கு வேலை செய்பவனுக்கோ குறைந்தபட்சம் ஒரு டாலர் தராவிட்டால், அவன் பார்க்கும் கீழ்த்தரமான பார்வையில் பொங்கல் மங்கலாகிவி விடும் .
4)   எவ்வளவு முயன்றும் கரும்பு கிடைக்காவிட்டால் யூ டியூப்பில் கரும்பு சாப்பிடுவதைப் பார்த்து வெர்ச்சுவலாக உண்ணத்தலைப்படலாம்.
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


Thursday, January 10, 2019

பொங்கல் சாப்பிடுவது எப்படி?


பொங்கல் சிறப்புப்பதிவு -1

           
             கிறிஸ்மஸ்  மற்றும் புத்தாண்டு முடிந்த கையோடு அவசரமாய் பொங்கல் வந்து விடும்  என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த ஆண்டு ரொம்பவும் சீக்கிரமாய்  வருவது போல் தெரிகிறது .பொங்கல் பண்டிகை மட்டுமல்ல எந்தப் பண்டிகையிலும் நன்றாக சாப்பிடுவது என்பது முக்கியமான மகிழ்ச்சி தரும் விஷயம். இப்போதெல்லாம் பெரும்பாலானவர் பசிக்கும் சாப்பிடுவதில்லை ருசிக்கும் சாப்பிடுவதில்லை. ஏதோ நேரத்திற்குச் சாப்பிட வேண்டுமே என்று அவசர அவசரமாக ஏதோ கடைமைக்குச் சாப்பிடுகிறோம். அதோடு இது எவ்வளவு கலோரி, சுகர் பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்று பயந்து சாப்பிடுபவர்களும் ஏராளம்.
ஆனால் உணவை தேவைப்படும் அளவுக்கு குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் அளவோடு, நிதானமாக, பசித்து, ரசித்து, ருசித்துப் பின் புசித்தோமென்றால் உணவே மருந்தாகும். இல்லையெனில் மருந்தே உணவாகி விடக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மெதுவாக,  மென்று நிதானமாக சாப்பிட்டோ மென்றால் சீரணக்கோளாறு ஏன் வரப்போகிறது? .
பொங்கல் பண்டிகையில் முக்கியமான உணவு இனிப்புப் பொங்கல் மற்றும் வெண்பொங்கலை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறேன் கேளுங்கள்.
என்ன இனிப்புப் பொங்கல்னு சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறுதா? மனுசனுக்கு நாவடக்கம் வேணும். இல்லேன்னா சீக்கிரம் வேறு ஒரு அடக்கம் நடந்திரும். அதான் டாக்டர் சொல்லியிருக்கார்ல, அப்புறம் எதுக்கு நாக்கைத் தொங்கப் போடணும். பேசாம   வெண் பொங்கலுக்கு மாறிடுங்க.
 கடந்த சனிக்கிழமையில் ஃபிளஷிங்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலின் உணவகத்திற்குச் சென்றிருந்தேன்.  அங்கே கைமணக்க நெய்மணக்க சூடான வெண்பொங்கலில் சட்னி மற்றும் சாம்பாரை ஒருங்கிணைத்து ஐவிரல் இணைத்துப் பிசைந்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெள்ளைக் காரர்களை சட்டை செய்யாது கவளங்களை அமைத்து கபக்கினேன். தொட்டுக் கொள்வதற்கு ஆமை வடைகள். அமெரிக்கன் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட இந்த காம்பினேஷன் அபாரமானது. நீங்களும் இந்த கூட்டமைப்பை சாப்பிட்டுப்பாருங்கள்,  உங்களுக்குப் பிடிக்கும். ஆமை வடை என்று மதுரையில் அழைக்கப்படும் பருப்பு வடை இந்தக் கூட்டணிக்கு மிகவும்   அவசியம்.
இதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு இருக்கிறது. அதனை கொஞ்சம் விளாவாரியாகப் பார்ப்போமா?

 முதலில் பொங்கல் சூடாக இருக்க வேண்டும். அதிலுள்ள நன்கு வெந்த மிளகுகளை சிலர் பொறுக்கி எடுத்து ஒதுக்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் அது பொங்கலே இல்லை. வெறும் சோறு. ஒரு காலத்தில் நம்மூர் மிளகுக்கு ஐரோப்பாவில் எடைக்கு எடை  தங்கம் கொடுத்திருக்கிறார்கள். மிளகு என்றால் சும்மா இல்லை. மிளகுக்காரம்  மற்ற காரங்களை விட மேலானது உடம்புக்கு நல்லது. தொண்டைச்செருமல் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை சரி செய்துவிடும். சீரணத்திற்கும் நல்லது. அதோடு வெண்பொங்கலில் கருப்பு நட்சத்திரங்களாய் பள பளக்கும் மிளகை எடுத்துப்போட எப்படித்தான் உங்களுக்கு மனசு வருதோ? மிளகை முழுதாக  போடப் பிடிக்கவில்லை என்றால் லேசாக மிக்சியில் பொடித்துப் போடலாம்.
அதில் உள்ள முந்திரிப்பருப்புகள் வெந்திருக்கக் கூடாது. இலேசாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்புகளை பொங்கல் மேல் தூவியிருக்க வேண்டும். பொங்கலைச் சாப்பிடும் போது  முந்திரிப்பருப்பின் மொறுமொறுப்பு கூடுதல் சுவையைக் கொடுக்கும். அதற்காக முந்திரிப்பருப்பை அள்ளிப் போடக் கூடாது. கிள்ளித்தான் போட வேண்டும். அதிகம் போட்டால் பொங்கலின் சுவையைக் கெடுத்துவிடும்.
Image result for ஆமை வடை

பொங்கல் ரொம்பவும் குழையவும் கூடாது, விரைவிரையாக இருக்கவும் கூடாது. இரண்டுக்கும் நடுவில் இருக்க வேண்டும். ரொம்பவும் குழைந்தால் அது கூழ் போல் ஆகிவிடும். நம்போல் இளைஞர்களுக்கு (?) அது சரிவராது.
பொங்கல் சூடாக இருக்க வேண்டும் எனச்சொன்னேன். கையைச் சுட வேண்டும் ஆனால் நாவைச்சுட்டுவிடக் கூடாது அந்த மாதிரி பக்குவத்தில் சூடு இருக்க வேண்டும். அப்புறம் ஒரு வாரம் எந்த சுவையும் தெரியாது.
பொங்கலில் இஞ்சி சேர்ப்பார்கள். இதுவும் ஜீ ரணத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இஞ்சியை சிறிதளவே சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுபவர்கள் இஞ்சி தின்ற எதுவோ போல் ஆகிவிட வாய்ப்புண்டு. இஞ்சியை மிகச் சிறிதாக நறுக்கிச் சேர்த்தால் அது பொங்கலோடு நற்சுவையைத் தரும். பெரிதாகப் போட்டால் அது சுவையைக் கெடுத்து வாயையும் கெடுத்துவிடும், ஜாக்கிரதை.  
முதலில் சட்னியை எப்படிச் சேர்ப்பது என்று சொல்கிறேன். சட்னியில் பலவகைச் சட்னிகள் உள்ளன, பொட்டுக்கடலை தேங்காய், வேர்க்கடலை, புதினா, தக்காளி, மிளகாய், காரச்சட்னி என பலவகைகள் உண்டு. கவனமாக கேளுங்க பொங்கலுக்கு பொட்டுக்கடலை தேங்காய் சட்னி தவிற வேறெதையும் சேர்த்தீங்க  அம்புட்டுத்தான் வாயே கெட்டுறுங்க .
முதலில் தேவையான அளவு பொங்கலை எடுத்து  தட்டில் போட்டு, அதன் மைய பகுதியில் சிறிய குளி ஒன்றை அமைத்து, தேங்காய்ச்சட்னி கெட்டிச்சட்னி அல்லது பக்குவமாக கரைக்கப்பட்ட சட்னியை அதில் ஊற்ற வேண்டும். நிறைய ஊற்றக் கூடாது கவனம். பின்னர் அதனை பொங்கல் முழுவதும் பரவும்படி பிசைய வேண்டும். கவனம் பிசையும் போது உள்ளங்கையில் படக்கூடாது. அந்த சட்னி தாளிக்க உதவும் முழு உளுந்தம்பருப்பும்  ஊறிவிடாமல் மொறுமொறுவென்று இருந்தால் இன்னும் சிறப்பு.
   அடுத்தது சாம்பாரை எப்படிச் சேர்க்க வேண்டுமென சொல்கிறேன். சாம்பாரில் பொதுவாக இரண்டு வகைகளில் விடுதிகளில் சமைப்பார்கள். சாதத்திற்கு ஒன்றும் சிற்றுண்டி அதாவது இட்லி / தோசைக்கு வேறொன்றும்  இருக்கும். இதில் எந்த வித சாம்பாரையும் சேர்த்துக் கொள்ளலாம். சட்னி ஊற்றிப் பிசைந்த பொங்கலில் கொஞ்சம் பெரிய குழி அமைத்து சாம்பாரை தளதளவென்று ஊற்றிப் பிசைய வேண்டும். இப்போது சட்னி சாம்பார் இணைந்த பொங்கல் சமவிகிதத்தில் கலந்திருக்கும். கையில் பிசைந்தால் மட்டுமே இது உத்தமம். இல்லையென்றால் ஒவ்வொரு கவளமும் வேறுவேறு சுவை தந்து சலித்துவிடும். 
பக்கத்தில் மிதமான சூட்டில் ஆமை வடைகளை வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஆமை வடை சூடாக இல்லையென்றால் மைக்ரோவேவில் சூடுபடுத்தும் தப்பைச் செய்துவிடாதீர்கள். ஆமை வடை மெதுவடையாகி சொதப்பிவிடும். சிறிய கிரில் இருந்தால் அதில் சூடு பண்ணுங்கள். இல்லை எனில் தவா அல்லது தோசைச் சட்டியிலும்  சூடு பண்ணலாம். ஏனென்றால் மொறு மொறுப்பு மிக மிக முக்கியம்.
இப்போது ஒரு கவளம் பொங்கலை வலது கையால் எடுத்து வாயில் வைத்து மெதுவாக மென்று தின்று விழுங்கியவுடன், இடது கையில் இருக்கும் ஆமை வடையை ஒரு கடிகடித்து மென்று விழுங்கவும். கவனம் ஸ்பூனில் சாப்பிடுவது அதுவும் பொங்கலன்று சாப்பிடுவது சட்டப்படி குற்றம். இப்படியே மாற்றி மாற்றி சுவையுங்கள். பொங்கலின் மணமும் குணமும் சுவையும் பெரிதும் கூடும் என்பதில் சந்தேகமில்லை. கவனம் அளவு முக்கியம். கை மணக்க நெய் மணக்க வாய் மணக்க சாப்பிடுங்கள் .பொங்கலைக் கொண்டாடி மகிழுங்கள் . சாப்பிட்டு முடித்து கூச்சப்படாது விரல்களை ஒவ்வொன்றாக வாயில் நுழைத்து சுத்தப்படுத்தலாம். அதன் சுவை தனி.   ஆனால் மீண்டும் முகர்ந்து பார்க்கவேண்டாம் .கை மணக்க நெய்  மணக்க என்று சொன்னது தப்பாகி வேறெதுவோ மணக்க வாய்ப்பிருக்கிறது கவனம் . எனவே நாவால் ஏற்கனவே சுத்தப்படுத்திவிட்டாலும் கைகளை நன்றாக கழுவிவிடுவது உத்தமம் .
இப்போது ஆசைப்படுபவர்களுக்காக இனிப்பு பொங்கல் சாப்பிடுவது  எப்படி என்று சொல்கிறேன் ஓகேவா.

இப்படி வெண்பொங்கலை சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து ஒரு சிறிய தேக்கரண்டியில் கவனம்அன்னக்கரண்டி  அல்ல தேக்கரண்டியில் பாதியளவு இனிப்புப் பொங்கலை எடுத்து லேசாக நுனிநாக்கில் சுவைத்து ஒரு 15 நிமிடம் செலவழித்து சிறிது சிறிதாக உண்ணுங்கள். சுகருக்கும் நல்லது பிகருக்கும்  நல்லது .பொங்கலோ பொங்கல்.
அடுத்த பகுதியில் கரும்பு சாப்பிடுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
தொடரும்



Thursday, September 6, 2018

பாதியில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி !!!!

சங்கங்களின் சங்கமம்

                                      
FETNA -2018 பகுதி 6
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_30.html
மாலையில் சங்கங்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் வந்திருந்த அனைத்து சங்கங்களும் தங்களுடைய பேனர்களை பிடித்து ஆட்டபாட்டத்துடன் ஊர்வலமாய் வந்தனர். நியூயார்க் தமிழ்ச் சங்கத்திலிருந்து அதில் பங்கு கொண்டோம். அப்போதுதான் இத்தனை தமிழ்ச் சங்கங்களிலிருந்து இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது.
பூழிப்பாவை நாடகம்

பூழிப்பாவை நாடகம் துவங்கும்போது யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் நவீன நாடகம் என்பதன் அறிமுகமோ அனுபவமோ பெரும்பாலோருக்கு இல்லை. இதன் வடிவம் கிட்டத்தட்ட ஒரு நவீன ஓவியம் போன்றது. பார்ப்பவரின் கற்பனைத்திறனுக்கும் சவால் விடுவதுதான் இரண்டு வடிவங்களும். பார்க்கிறவரின் கற்பனைத்திறனும் படைப்பவரின் கற்பனைத்திறனும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் போது தான் அதன் பொருள் என்னவென்று விளங்கும். தமிழ்ச்சங்க நண்பர்களுடன் உட்கார்ந்து   இருந்தேன்.
என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் இருந்த நாங்கள்  அனைவரும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தோம்.  பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது. நடிகர்களின் நடிப்பு ஒரு உயிர்ப்புத் தன்மையுடன் இருந்தது. இது எங்கள் அனைவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம்.
சஞ்சய் சுப்ரமணியன்
அது முடிந்தபின் கர்நாடக இசைக் கலைஞரான சஞ்சய் சுப்ரமணியனின் தமிழிசைக் கச்சேரி நடந்தது. அரங்கில் கொஞ்சப்பேரே இருந்தாலும் இருந்தவர் அனைவரும் நன்கு ரசிப்பவராகவே தெரிந்தது. கூட்டமில்லாத நிலையினை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சஞ்சய் அவர்கள் நல்ல இசையினை அனுபவித்துக் கொடுத்தார். ஆனால் தமிழிசை என்றிருந்தாலும், பெரும்பாலும் பக்தியிசைப் பாடல்களாவே இருந்தன . சரியாக இரவு 11 மணிக்கு அவர் பாதி பாடிக் கொண்டிருக்கும் போதே ஒலிபெருக்கிகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் கடைசிப் பாடலை ஒலிபெருக்கி இல்லாமலேயே பாடி முடித்தார். அமெரிக்காவில் நேரக்கட்டுப்பாடு மிக முக்கியம். நியுஜெர்சியில் நடந்த இளையராஜா நிகழ்ச்சியிலும் இப்படித்தான் சரியாக 10 மணிக்கு எல்லாவற்றையும்  நிறுத்திவிட்டார்கள். எல்லோரும் திகைத்து நிற்க மனோ வந்து குட்நைட் சொன்னபோதுதான் கச்சேரி முடிந்துவிட்டது என்று தெரிந்தது. இதனைப்பற்றி ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
சஞ்சய் சுப்பிரமணியத்தின் இசையோடு ஃபெட்னா 2018 இனிதே நிறைவு பெற்றது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை (Federation of Tamil Sangams of North America) வின் 31-ஆவது ஆண்டுக் கூடுகை இதுவாகும். ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்தக் கூடுகை. இது தவிர மாதாந்திர இலக்கியக் கூட்டம் தொலைபேசியில் கான்ஃபிரன்ஸ் அழைப்பாக நடக்கும். இந்த ஆண்டு ஃபெட்னா வை பொறுப்பேற்று நடத்தியவர்கள் டல்லாஸ் டெக்சஸில் செயல்படும் மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கம். இதற்கு பக்கத்திலுள்ள கீழ்க்கண்ட மற்ற சங்கங்கள் உதவியாக இருந்தன.  
1)   டல்லஸ்  தமிழ் மன்றம்.
2)   சான் ஆன்டானியோ  தமிழ்ச்சங்கம்.
3)   ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்.
4)   கிரேட்டர் ஹியூஸ்டன் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி.
5)   பாரதி கலை மன்றம் மற்றும் ஹியூஸ்டன் தமிழ்ப்பள்ளி.
6)   மெட்ரோபிளக்ஸ் தமிழ் அக்காடெமி.
7)   காப் பெல் தமிழ் மையம்.
8)   பிளானோ தமிழ்ப்பள்ளி.
9)   கொங்கு தமிழ்ப்பள்ளி.
10)               வித்யா விகாஸ் பள்ளி.
11)               பாலா தத்தா தமிழ்ப்பள்ளி.
12)               அவ்வை தமிழ் மையம்.
13)               இலங்கைத் தமிழ் சங்கம்.

வந்திருந்த முக்கிய விருந்தினர்கள்.
1)   முனைவர் மருதநாயகம் தமிழ்ப் பேராசிரியர்.
2)   திரு மம்மது - இசை ஆய்வாளர்.
3)   பேராசிரியர் ஞான சம்பந்தன்.
4)   சுப வீரபாண்டியன்.
5)   பூவுலகு சுந்தர்ராஜன்.
6)   எழுத்தாளர் சு.வெங்கடேசன்.
7)   திருமதி ரேவதி - இயற்கை விவசாய ஆராய்ச்சியாளர்.
8)   Dr. சுந்தர பாலசுப்ரமணியம் - திருமூலர் பிரணாயாமா.
9)   இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
10)               நடிகர் கார்த்தி.
11)               இசையமைப்பாளர்  ஹிப் ஹாப் ஆதி.
12)               பாடகர்கள் கார்த்திக், சக்திஸ்ரீ, டிரம்ஸ் சிவமணி.
13)               ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது மற்றும் இளையராஜா.
14)               கவிஞர் அறிவு மதி.
15)               கவியமூர்த்தி, ஐ.பி.எஸ்.
16)               பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.
17)               கர்நாடக இசைப்பாடகர் சஞ்சய் சுப்ரமணியம்.
18)               நடனத்தாரகை - நர்த்தகி நடராஜ்.
19)               நாட்டுப்புற இசைக்கலைஞர்கள்  முனைவர் அருள்செல்வி மற்றும் ஆனந்த்.
20)               மணல் மகுடி இயக்குநர் முருகபூபதி.
21)               தமிழிசைப் பாடகர்கள். ஆக்காட்டி ஆறுமுகம், அந்தோணி தாசன். மற்றும் சுகந்தி கருப்பையா.
22)               முனைவர் G விஸ்வநாதன், வேந்தர் VIT பல்கலைக்கழகம்.
23)               நடிகர்கள் ஆரி, வைபவ்.
24)               உலகத்தமிழ் அறிஞர்கள் Dr. கார்கா சட்டர்ஜி, Dr. ஃபிரான்சஸ் ஹாரிசன், பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் முனைவர் சுபாஷினி.

பேரவை நிகழ்வில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை கீழே தருகிறேன்.
1)   முக்கிய அரங்கில் தஞ்சைப் பெரியகோவிலை பிரமாண்டமாக வடிவமைத்தது மிகவும் சிறப்பு.
2)   உணவு ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. குறிப்பாக ஒவ்வொரு நேரமும் மதுரை, தஞ்சாவூர், சென்னை உணவு என்று அசத்தினர். 
3)   ஒளி,ஒலி அமைப்புகள் மிகச்சிறப்பாக இருந்தன.
4)   கவிஞர் அறிவுமதியின் வரிகளுக்கு நர்த்தகி நடராஜன் அவர்கள் நடனமும், திருக்குறள் நடனமும், '' பாடல் நடனமும் மிகவும் நன்றாக இருந்தன.
5)   தமிழில் கையழுத்துப் போட்டு நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை நல்ல ஐடியா.
6)   வந்திருந்த விருந்தினர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் கொடுக்கப்பட்ட தின்பண்டங்கள், பழங்கள் அடங்கிய பை நல்ல முயற்சி.
7)   சிறுவர் சிறுமியர் மற்றும் பதின்ம பிள்ளைகளை விழா முழுவதும்  அறிவிப்புகள் செய்யப்பயன்படுத்தியது சிறப்பு.
8)   மிகவும் சிறப்பாக நடந்த TEF Talk நிகழ்ச்சி நன்றாக அமைந்தது.
9)   வரவேற்பு அமைப்புகள் மற்றும் ஃபோட்டோ பூத்கள் நன்றாக இருந்தன.
10)               சு.வெங்கடேசன், கலியமூர்த்தி ஐ.பி.எஸ், ஹிப்ஹாப் தமிழா ஆகியோரின் உரை மிகவும் அருமையாக இருந்தன.
குறையென்று சொன்னால், ஏராளமான நிகழ்ச்சிகள் இருந்ததால் எந்த நிகழ்ச்சியையும் முழுமையாக நடத்த முடியாமல் நேரத்தட்டுப்பாடு இருந்தது. அதனைத் தவிர டல்லஸ், டெக்சஸில் நடந்த ஃபெட்னா பேரவை நிகழ்ச்சி ஒரு சிறப்பு மாநாடு என்பதில் சந்தேகமில்லை.
- முற்றும் .

மீண்டும் 2019 ஆம் ஆண்டு சிகாகோவில் நடக்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் பெட்னா 2019ல் சந்திப்போம்.

Thursday, August 30, 2018

அசத்திய அந்தோணிதாசனும் சொதப்பிய கார்த்திக்கும் !!!!


FETNA -2018 பகுதி 5.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_23.html
அல்லது தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் கவிதைகளை மட்டும் நான் உன்னிப்பாக கவனித்திருக்கலாம்.
ஹார்வர்டு தமிழ் இருக்கையின் வெற்றிவிழா நடந்தது. உலகத்தமிழர் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் அதிசயங்கள் நடத்தலாம் என்பது இதன் மூலம் விளங்கியது. இந்தக்குழு இதோடு விடுவதாய்த் தெரியவில்லை.  உலகின் அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்களியும் தமிழ் இருக்கைகளை அமைத்துவிட்டுத்தான் ஓய்வார்கள் போலத்தெரிகிறது. இதோ அடுத்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் தமிழ் இருக்கை அமைக்க உழைக்கத் துவங்கிவிட்டனர். இதில் முக்கியமான பணியாற்றிய மருத்துவர் ஜானகிராமன் மற்றும் மருத்துவர் சுந்தரேசன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.    
சிறிய வயதிலேயே தன்னுடைய முதல் நாவலான காவல் கோட்டத்திற்கு சாகித்ய அக்காடெமியின் விருது பெற்ற சு.வெங்கடேசன் கீழடி அகழ்வாராய்ச்சியைக் குறித்தும் தொன்மையான தமிழர் வரலாறு எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது மறைக்கப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கினார். வெளிநாடுகளில் தமிழ் இருக்கை அமைப்பதோடு வெளிநாடு வாழ் தமிழரின் கடமை முடிந்துவிடாது என்பதை உணர்த்தும் போக்கில் அந்த உரை அமைந்தது. தமிழகத்திலும் ஒரு கண் இருக்க வேண்டும்.  இந்த நாவலைப் படித்து நான் எழுதிய உரையைப் படிக்க இங்கே சுட்டவும். http://paradesiatnewyork.blogspot.com/2014/02/blog-post_19.html
இதற்கிடையில் பக்கத்தில் நடந்த இணை நிகழ்வில் திரு. மம்மது அவர்களின் இசை உரையும் நாடகம் பற்றிய பேராசிரியர் ஞானசம்பந்தனின் உரையும் கேட்டு மகிழ்ந்தேன். தமிழிசை மற்றும் கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற மம்மது தன்னுடைய பேத்தி பாடல்களைப் பாட அதனின் ராக தாளங்களை விவரித்துப் பேசினார்.
இவரும் பேராசிரியர் மருதநாயகமும் ஃபெட்னா முடிந்த கையோடு நியூயார்க் வந்து நியூயார்க் தமிழ்ச்சங்கம் ஏற்பட்டு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். இது எங்களுடைய ஆலயமான இம்மானுவேல் லுத்தரன் திருச்சபையின் அரங்கில் நடந்தது.
பின்னர் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. பாடகர் கார்த்திக், டிரம்ஸ் சிவமணி மற்றும் பாடகி சத்திஸ்ரீ கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி, பிரபலமான பேஸ் கிட்டார் வாசிக்கும் கீத் பீட்டர்ஸ் இதற்கு வாசித்தது ஆச்சரியம் அளித்தது.
திரும்பிப்பார்த்தால் அரங்கு முதன்முறையாக நிரம்பி வழிந்தது. எந்த இணை நிகழ்வும் இல்லாமல் இளைஞர், சிறியவர்கள் தவிர இதற்கென்றே வந்தவர்கள் போல ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
பாடகர் கார்த்திக்கின் எனர்ஜியை நான் நேரில் சிலமுறை பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகள் முன்பு சென்னை காமராஜர் அரங்கில் லஷ்மண் ஸ்ருதி அவர்கள் வழங்கிய "சென்னையில் திருவையாறு" என்ற நிகழ்ச்சியில் கார்த்திக் வழங்கிய கர்நாடக இசைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அவரது ஆலாபனை மிக நீண்டது. அதன்பின்பு நியுஜெர்சியில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெகுவாக ரசித்தேன். http://paradesiatnewyork.blogspot.com/2014/06/blog-post_12.html
ஆனால் இந்த முறை கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி என்னைக் கவரவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் சில வருடங்களுக்கு முன்னர் பாடிய அதே பாடல்களை அதே ஸ்டையில் பாடியதால் வெறுத்துவிட்டேன். அவர் பாடிய பாடல்கள் மட்டுமல்ல சில  பழைய பாடல்களும் அதே பாடல்கள் வந்தன. ஓகே கண்மணியில் வந்த சினாமிக்கா தவிர எல்லாம் பழையன. சக்திஸ்ரீ யாவது வேறு பாடல்கள் பாடுவாரென நினைத்தால் அவரும் அதே பாடல்களை பாடியதால் அயர்ந்துவிட்டேன்.
ஆனால் சிறப்பம்சமாக டிரம்ஸ் சிவமணி வந்து கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அவர் கொண்டு வந்திருந்த பல இசை கருவிகளை வாசித்து அசத்தி விட்டார். இத்தனை தோல் கருவிகளை எப்படிக்கொண்டு வந்தார் என்பது ஆச்சரியமாக இருந்தது. சிவமணியும் இல்லையென்றால் சுத்தப்போர்தான். ஆனால் கார்த்திக் சக்திஸ்ரீ இசை நிகழ்ச்சியை முதன்முறையாகப் பார்த்தவர்கள் மிகவும் ரசித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதோடு அன்றைய நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
அந்தோணிதாசன்
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 1, 2018 காலையில் ஃபெட்னா அமைப்பின் நிர்வாகக்குழு கூடியது. அதில்  அடுத்த தலைவராக வாஷிங்டன் DC பகுதியைச் சேர்ந்த சுந்தர் குப்புசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலோ சண்டை சச்சரவோ இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

நான்காவது நாளில் முக்கிய நிகழ்வாக பிரபல நாட்டுப்புறப்பாடகர்கள் ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் அந்தோணிதாசன் அளித்த இசை நிகழ்ச்சி பட்டையைக் கிளப்பியது. நாதஸ்வரம் இல்லாமல் சீவாளி போன்ற ஒன்றை வாயில் வாசித்தது சோபிக்கவில்லை. நாதஸ்வரமும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்தோணிதாசன் பாடி மிகப்பிரபலமடைந்த சொடக்கு மேலே சொடக்கு போடுது என்ற பாடலையும் பாடினார். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கலியமூர்த்தி  அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.

Image result for kaliyamoorthy ips
கலியமூர்த்தி 
இன்னொரு அதிரவைத்த நிகழ்ச்சி நர்த்தகி நடராஜ் அவர்களின் பரதநாட்டியம். வெகு சிறப்பாக இருந்தது. அவர் நாட்டியத்திற்கு வந்த கதை நெகிழ வைக்கும் கதை.
Related image
நர்த்தகி நடராஜ்
அடுத்து மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக முருக பூபதியின்மணல் மகுடி நாடக நிலம்” வழங்கிய பூழிப்பாவை நடைபெற்றது. தெரு நாடகம் (Street Theater) அடிப்படையில் 80 களில் நான் நிஜ நாடக இயங்கங்களில் பெரிதும் கலந்து கொண்டு இருக்கிறேன். இப்போது அது மிகச்சிறப்பான வடிவத்தில் உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அதனைப்பற்றி இன்னும் தெளிவாக அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.
தொடரும்