Showing posts with label சிரிப்பு வருது சிரிப்பு வருது. Show all posts
Showing posts with label சிரிப்பு வருது சிரிப்பு வருது. Show all posts

Monday, May 4, 2020

கொரானா வைரஸ் லாக் டவுன் சமாளிப்புகள்

பரதேசியின் கொரானா வைரஸ்  லாக் டவுன் சமாளிப்புகள்


காலை 8 மணி
ரூ: லேசா தலை வலிக்குது , கொஞ்சம் டீ  போட முடியுமா ?
ப: உனக்குத்தெரியாதா , எனக்கு பாலைப்பார்த்தாலே கொமட்டிட்டு வரும், இல்லைனா போட்டுத் தரமாட்டேனா ?
ரூ: (இந்த மனுசனால ஒரு பிரயோஜனமும் இல்லை)

காலை  11 மணி
ரூ: ஏங்க  சும்மாதான இருக்கீங்க , கொஞ்சம் காய்  வெட்டித்தறீங்களா ?
 ப :என்ன ரூத் , மறந்திட்டியா ?
ரூ: என்ன சொல்றீங்க ?
ப அப்பவே காய்கறியெல்லாம் மொத்தமா வாங்கி வெட்டி ஃபிரீஸ் பண்ணிட்டேன்னு  நீதானே சொன்ன ?
ரூ: (ஆமா இல்லைனாலும்.)

மதியம் 1 மணி
ப : என்ன ரூத் இன்னைக்கி  என்ன சமையல் ?
ரூ : கத்திரிக்காய் சாம்பாரும் ரசமும்
ப: (சாப்பிட்டுவிட்டு ), சாம்பார்ல கொஞ்சம் பெருங்காயம் தூக்கலா இருந்துச்சு , ரசத்தில் கொஞ்சம் கடுகு கருகிருச்சு ?
ரூ: குறை  சொல்லாட்டி உங்களுக்குத் தூக்கம் வராதே  ?
ப: மத்தபடி அப்பளம் , ஊறுகாயெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு , என்ன ப்ராண்ட் ?
ரூ : பால் ,தயிர் , வெண்ணை சாப்பிடாமலே உங்களுக்கு இவ்வளவு கொழுப்பு எப்படி வந்துச்சு ?
ப: எனக்கு கொழுப்பெல்லாம் இல்லை, கொஞ்சூண்டு சுகர் மட்டும்தான் .



மதியம் 2 மணி
ரூ : என்னங்க , பாத்திரம் எவ்வளவு சேர்ந்து போச்சு பாருங்க ? வீட்டிலே இருக்கீங்க கொஞ்சம்  கழுவித்தரக்கூடாதா ?
ப : என்னது பாத்திரம் கழுவனுமா ? ஏன் மார்ச் முதல் வாரம்தான் டிஷ் வாஷர் போட்டமே ? அதுல போட்டிரு
மகேந்திரன் : பரதேசி நீ ஒரு தீர்க்கதரிசிடா
ரூ: ஆமா அத எப்படி போடுறதுன்னு தெரியலையே ?நீங்க கொஞ்சம் வந்து பாருங்க ?
ப: அனிஷா , இங்க வந்து அம்மாவுக்கு டிஷ் வாஷர் போடச் சொல்லிக்கொடு
ரூ: (உட்கார்ந்த இடத்தை விட்டு நகர  மாட்டியே)

2 முதல் 5 மணி வரை தூக்கம் (மனைவிக்குத்தான்)  அப்பாடா எனக்கு கொஞ்சம் ஃபிரீ டைம்

மாலை 5 மணி
ரூ : காலையிலிருந்து இப்படியே பொழுதை போக்கிட்டு இருக்கீங்களே ?கொஞ்சம் வாக்யூம் போடுறீங்களா ?
ப : லொக் லொக் லொக்
ரூ: என்னங்க என்னாச்சு ? (கொரனோ வந்துருச்சோ)
ப: இந்த டஸ்ட் அலர்ஜி திரும்ப வந்துரிச்சுனு நினைக்கிறே ன்
ரூ: (எப்பவும் எதையாவது சொல்லி சமாளிக்கிறானே ?)

மாலை 9 மணி

ரூத் :ஏங்க ஒரு வேளை என்னைப்பிடிக்காமலே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களோ ?
ப: 27 வருஷம் வாழ்ந்து ரெண்டு பிள்ளை பெத்து , பேரன் பேத்தி எடுக்கிற வயசில கேக்கிற கேள்வியா இது ?
ரூ : பின்ன ஏன் என்னப் பார்த்தா  விலகி விலகி போறீங்க?

ப : நான் நம்ம தலைவர்கள் சொல்றத கடைப் பிடிக்கிறேன்
ரூ : அது  என்னாது  ?
ப : சோசியல் டிஸ்டன்சிங்தான்
ரூத் : ( மைண்ட்  வாய்ஸ்) இவனுக்கெல்லாம் கல்யாணம் தேவையா ?
ப : ( மைண்ட்  வாய்ஸ்) ஸ் அப்பாடா ஒரு நாளைக்கடத்திட்டேன் , நாளைக்கு எப்படியோ கடவுளே ?



Thursday, December 12, 2019

நான் தான் அவன், அவன்தான் நான்! சம்பவம் இரண்டு



                              இதற்கு முந்தின பகுதியைப்படிக்க இங்கே சுட்டவும்  
                    https://paradesiatnewyork.blogspot.com/2019/12/blog-post.html
  
ஒரு ஞாயிறு மாலை வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, அப்போது மேலே குடியிருந்த என் மனைவியின் தம்பி தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை மரியாதை நிமித்தமாகவோ, அல்லது எங்கள் வீட்டில் சாப்பிடவோ அல்லது நான் சேகரித்து வைத்திருக்கும் கலைப் பொருட்களைப் பார்க்கவோ அழைத்து வருவதுண்டு.
          அன்றைய நாளில் வந்தவரிடம் நடந்த உரையாடலை கீழே தருகிறேன்.
பரதேசி : வாங்க உட்காருங்க
சென்னை : நன்றி சார்
பரதேசி : சென்னையில் என்ன செய்கிறீர்கள்?
சென்னை : லேடி ஆண்டாள் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறேன் சார்.
பரதேசி : மகிழ்ச்சி, நியூயார்க்கிற்கு என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்.
சென்னை: எங்கள் மாணவரோடு கல்விச் சுற்றுலா வந்திருக்கிறோம். அவர்களெல்லாம் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். நான் மட்டும் நண்பரைப் பார்க்க வந்தேன்.
மைத்துனர் : (என்னைக்காட்டி) இவர் தமிழ்ச்சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். நிறைய எழுதுவார், பட்டி மன்றம் பேசுவார் .
சென்னை: அப்படியா எனக்குக்கூட ஒரு எழுத்தாளரைத் தெரியும்?
பரதேசி : அவர் எங்கே இருக்கிறார்?
சென்னை : இங்குதான் நியூயார்க்கில் இருக்கிறார். நியூயார்க்கில் நடக்கும் சில நிகழ்வுகளை சுவையாக எழுதுவார்.
பரதேசி : அப்படியா? அவர் பெயர் என்ன?
சென்னை : இருங்கள் சட்டென ஞாபகம் வரமாட்டேங்குது.  சமீபத்தில் கூட ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரை வந்திருந்தது.
என்று சொல்லிவிட்டு தன கைத்தொலைபேசியில் தேடித்தேடி ஆனந்த விகடனில் வெளிவந்த என்னுடைய ஆர்ட்டிகளை எடுத்துக் காண்பித்தார்.
பரதேசி : அவரை உங்களுக்குத் தெரியுமா?
சென்னை: நெருங்கிய பழக்கமில்லை. ஆனால் ஓரளவுக்குத் தெரியும். அவருடைய பிளாக்கை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.
பரதேசி : எனக்கும் அவரை ஓரளவுக்குத் தெரியும்.
சென்னை : அவர் பெயர் கூட, இருங்கள் பார்த்துச் சொல்கிறேன். ஆம் அவர் பெயர் பரதேசி.
          அப்போது என் மனைவி சமையலறையிலிருந்து வந்து, அந்தப் பரதேசி இவர்தான் என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர். சென்னைக்காரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
முற்றும்.


  

Monday, December 9, 2019

நான் தான் அவன், அவன்தான் நான்! சம்பவம் - ஒன்று.

Image result for confused man cartoon free


இதுபோல ஒருமுறை நடந்தாலே அது ஆச்சரியம்தான். ஆனால் இருமுறை இதுபோல நடந்ததை நினைத்தால் எனக்கே நம்ப முடியவில்லை. அந்த இரண்டு சம்பவங்களையும் சொல்கிறேன், நீங்களே சொல்லுங்கள்.
சம்பவம் - ஒன்று.
          2000 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து நியூயார்க் வந்த புதுசு. கிறித்தவத் தமிழ்க் கோவில் செல்ல ஆரம்பித்த சமயம். அந்தக்கோவிலின் உறுப்பினர் வீட்டில் பிறந்த நாள் விருந்துக்காக என்னை அழைத்திருந்தார்கள். அங்கே அவர்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார்.
          சென்னையில் நன் இருந்த போது குட்வில்  மனிதவள மேம்பாட்டு (Goodwill HRD Consultants  Pvt  Ltd) என்ற நிறுவனத்தை நிறுவி நடத்திவந்தேன். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில்தான் நியூயார்க் வந்திருந்தேன். என்னை அந்த சென்னை நண்பருக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது நடந்த உரையாடலை இங்கு தருகிறேன்.
பரதேசி : வெல்கம் டு நியூயார்க்
சென்னைக்காரர் : தேங்க்யூ, நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?
பரதேசி : ஒரு ஐ.டி. கம்பெனியில் இருக்கிறேன்.
சென்னை: எல்லாரும் பெரும்பாலும்  ஐடி தானே இங்க, எப்ப வந்தீங்க
பரதேசி: நான் வந்து ஒரு ஆறு மாசம் ஆச்சு
சென்னை : அப்படியா இங்க எப்படிப் போகுது?
பரதேசி : பரவாயில்லை.
சென்னை: உங்கள் குடும்பம் எங்கு இருக்கிறாங்க?
பரதேசி : ஊரில்தான் இருக்கிறாங்க, ஹெச் 1 B விசா கிடைச்சதும், அவங்களை வரவழைக்கணும்.
  சென்னை: மேரீட் பேச்சிலர்ன்னு சொல்லுங்க.
பரதேசி : ஹாஹா அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
சென்னை: இந்தியாவில எந்த ஊர்?
பரதேசி : சொந்த ஊர் மதுரைப்பக்கம், ஆனா சென்னையில செட்டிலாகி கொஞ்ச ஆண்டுகள் ஆயிருச்சு.
சென்னை : சென்னையில் எங்க?
பரதேசி : மணப்பாக்கம், போரூர் போகும் வழியில் ராமாபுரம் எதிரில் இருக்கு.
சென்னை: சென்னையில் என்ன பண்ணீங்க?
பரதேசி: ஹெச் ஆர்  தான் சில கம்பெனிகள்ல இருந்தேன்.
சென்னை: ஓ ஹெச் ஆரா உங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குட்வில் தெரியுமா?
பரதேசி: தெரியும்
சென்னை: குட்வில் ஹெச் ஆர்.டி கன்சல்ட்டன்டஸ்?
பரதேசி : நன்றாகத் தெரியும்.
சென்னை : அதன் சி. இ.ஒ. எனக்கு நெருங்கிய நண்பர்.
பரதேசி : அப்படியா?
சென்னை: அவர் சென்னையில் பெரிய ஆள்
பரதேசி : அப்படியா?
சென்னை : பல கம்பெனிகளுக்கு டிரைனிங், ஹெச் ஆர் மற்றும் ரெக்ரூட்மென்ட் செய் கிறார்கள்.
பரதேசி : ம்ம்
சென்னை : என் குளோஸ் ஃபிரெண்டுதான்,  உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் சொல்லுங்கள், அவரிடம்  சொல்கிறேன்.
பரதேசி : அவரை நேரில் பாத்திருக்கீங்களா?
சென்னை: என்ன அப்படிச் சொல்லீட்டிங்க, எனக்கு அவரை நல்லாவே தெரியும்.
பரதேசி : அவர் பெயர்.
சென்னை : அவர் பெயர் ஆல்ஃபிரட் ராஜசேகரன். பக்கத்தில் இருந்த எல்லோரும் சிரிக்க நான் சொன்னேன். அந்த ஆல்ஃபிரட் ராஜசேகரன் தான் நான்.
- சென்னைக்காரருக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துப்போனார்.

அந்த இரண்டாவது சம்பவத்தை அடுத்த முறை சொல்கிறேன் .

தொடரும்

Thursday, January 10, 2019

பொங்கல் சாப்பிடுவது எப்படி?


பொங்கல் சிறப்புப்பதிவு -1

           
             கிறிஸ்மஸ்  மற்றும் புத்தாண்டு முடிந்த கையோடு அவசரமாய் பொங்கல் வந்து விடும்  என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த ஆண்டு ரொம்பவும் சீக்கிரமாய்  வருவது போல் தெரிகிறது .பொங்கல் பண்டிகை மட்டுமல்ல எந்தப் பண்டிகையிலும் நன்றாக சாப்பிடுவது என்பது முக்கியமான மகிழ்ச்சி தரும் விஷயம். இப்போதெல்லாம் பெரும்பாலானவர் பசிக்கும் சாப்பிடுவதில்லை ருசிக்கும் சாப்பிடுவதில்லை. ஏதோ நேரத்திற்குச் சாப்பிட வேண்டுமே என்று அவசர அவசரமாக ஏதோ கடைமைக்குச் சாப்பிடுகிறோம். அதோடு இது எவ்வளவு கலோரி, சுகர் பிரச்சனை, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்று பயந்து சாப்பிடுபவர்களும் ஏராளம்.
ஆனால் உணவை தேவைப்படும் அளவுக்கு குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் அளவோடு, நிதானமாக, பசித்து, ரசித்து, ருசித்துப் பின் புசித்தோமென்றால் உணவே மருந்தாகும். இல்லையெனில் மருந்தே உணவாகி விடக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மெதுவாக,  மென்று நிதானமாக சாப்பிட்டோ மென்றால் சீரணக்கோளாறு ஏன் வரப்போகிறது? .
பொங்கல் பண்டிகையில் முக்கியமான உணவு இனிப்புப் பொங்கல் மற்றும் வெண்பொங்கலை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறேன் கேளுங்கள்.
என்ன இனிப்புப் பொங்கல்னு சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறுதா? மனுசனுக்கு நாவடக்கம் வேணும். இல்லேன்னா சீக்கிரம் வேறு ஒரு அடக்கம் நடந்திரும். அதான் டாக்டர் சொல்லியிருக்கார்ல, அப்புறம் எதுக்கு நாக்கைத் தொங்கப் போடணும். பேசாம   வெண் பொங்கலுக்கு மாறிடுங்க.
 கடந்த சனிக்கிழமையில் ஃபிளஷிங்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலின் உணவகத்திற்குச் சென்றிருந்தேன்.  அங்கே கைமணக்க நெய்மணக்க சூடான வெண்பொங்கலில் சட்னி மற்றும் சாம்பாரை ஒருங்கிணைத்து ஐவிரல் இணைத்துப் பிசைந்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெள்ளைக் காரர்களை சட்டை செய்யாது கவளங்களை அமைத்து கபக்கினேன். தொட்டுக் கொள்வதற்கு ஆமை வடைகள். அமெரிக்கன் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட இந்த காம்பினேஷன் அபாரமானது. நீங்களும் இந்த கூட்டமைப்பை சாப்பிட்டுப்பாருங்கள்,  உங்களுக்குப் பிடிக்கும். ஆமை வடை என்று மதுரையில் அழைக்கப்படும் பருப்பு வடை இந்தக் கூட்டணிக்கு மிகவும்   அவசியம்.
இதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு இருக்கிறது. அதனை கொஞ்சம் விளாவாரியாகப் பார்ப்போமா?

 முதலில் பொங்கல் சூடாக இருக்க வேண்டும். அதிலுள்ள நன்கு வெந்த மிளகுகளை சிலர் பொறுக்கி எடுத்து ஒதுக்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் அது பொங்கலே இல்லை. வெறும் சோறு. ஒரு காலத்தில் நம்மூர் மிளகுக்கு ஐரோப்பாவில் எடைக்கு எடை  தங்கம் கொடுத்திருக்கிறார்கள். மிளகு என்றால் சும்மா இல்லை. மிளகுக்காரம்  மற்ற காரங்களை விட மேலானது உடம்புக்கு நல்லது. தொண்டைச்செருமல் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை சரி செய்துவிடும். சீரணத்திற்கும் நல்லது. அதோடு வெண்பொங்கலில் கருப்பு நட்சத்திரங்களாய் பள பளக்கும் மிளகை எடுத்துப்போட எப்படித்தான் உங்களுக்கு மனசு வருதோ? மிளகை முழுதாக  போடப் பிடிக்கவில்லை என்றால் லேசாக மிக்சியில் பொடித்துப் போடலாம்.
அதில் உள்ள முந்திரிப்பருப்புகள் வெந்திருக்கக் கூடாது. இலேசாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்புகளை பொங்கல் மேல் தூவியிருக்க வேண்டும். பொங்கலைச் சாப்பிடும் போது  முந்திரிப்பருப்பின் மொறுமொறுப்பு கூடுதல் சுவையைக் கொடுக்கும். அதற்காக முந்திரிப்பருப்பை அள்ளிப் போடக் கூடாது. கிள்ளித்தான் போட வேண்டும். அதிகம் போட்டால் பொங்கலின் சுவையைக் கெடுத்துவிடும்.
Image result for ஆமை வடை

பொங்கல் ரொம்பவும் குழையவும் கூடாது, விரைவிரையாக இருக்கவும் கூடாது. இரண்டுக்கும் நடுவில் இருக்க வேண்டும். ரொம்பவும் குழைந்தால் அது கூழ் போல் ஆகிவிடும். நம்போல் இளைஞர்களுக்கு (?) அது சரிவராது.
பொங்கல் சூடாக இருக்க வேண்டும் எனச்சொன்னேன். கையைச் சுட வேண்டும் ஆனால் நாவைச்சுட்டுவிடக் கூடாது அந்த மாதிரி பக்குவத்தில் சூடு இருக்க வேண்டும். அப்புறம் ஒரு வாரம் எந்த சுவையும் தெரியாது.
பொங்கலில் இஞ்சி சேர்ப்பார்கள். இதுவும் ஜீ ரணத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இஞ்சியை சிறிதளவே சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுபவர்கள் இஞ்சி தின்ற எதுவோ போல் ஆகிவிட வாய்ப்புண்டு. இஞ்சியை மிகச் சிறிதாக நறுக்கிச் சேர்த்தால் அது பொங்கலோடு நற்சுவையைத் தரும். பெரிதாகப் போட்டால் அது சுவையைக் கெடுத்து வாயையும் கெடுத்துவிடும், ஜாக்கிரதை.  
முதலில் சட்னியை எப்படிச் சேர்ப்பது என்று சொல்கிறேன். சட்னியில் பலவகைச் சட்னிகள் உள்ளன, பொட்டுக்கடலை தேங்காய், வேர்க்கடலை, புதினா, தக்காளி, மிளகாய், காரச்சட்னி என பலவகைகள் உண்டு. கவனமாக கேளுங்க பொங்கலுக்கு பொட்டுக்கடலை தேங்காய் சட்னி தவிற வேறெதையும் சேர்த்தீங்க  அம்புட்டுத்தான் வாயே கெட்டுறுங்க .
முதலில் தேவையான அளவு பொங்கலை எடுத்து  தட்டில் போட்டு, அதன் மைய பகுதியில் சிறிய குளி ஒன்றை அமைத்து, தேங்காய்ச்சட்னி கெட்டிச்சட்னி அல்லது பக்குவமாக கரைக்கப்பட்ட சட்னியை அதில் ஊற்ற வேண்டும். நிறைய ஊற்றக் கூடாது கவனம். பின்னர் அதனை பொங்கல் முழுவதும் பரவும்படி பிசைய வேண்டும். கவனம் பிசையும் போது உள்ளங்கையில் படக்கூடாது. அந்த சட்னி தாளிக்க உதவும் முழு உளுந்தம்பருப்பும்  ஊறிவிடாமல் மொறுமொறுவென்று இருந்தால் இன்னும் சிறப்பு.
   அடுத்தது சாம்பாரை எப்படிச் சேர்க்க வேண்டுமென சொல்கிறேன். சாம்பாரில் பொதுவாக இரண்டு வகைகளில் விடுதிகளில் சமைப்பார்கள். சாதத்திற்கு ஒன்றும் சிற்றுண்டி அதாவது இட்லி / தோசைக்கு வேறொன்றும்  இருக்கும். இதில் எந்த வித சாம்பாரையும் சேர்த்துக் கொள்ளலாம். சட்னி ஊற்றிப் பிசைந்த பொங்கலில் கொஞ்சம் பெரிய குழி அமைத்து சாம்பாரை தளதளவென்று ஊற்றிப் பிசைய வேண்டும். இப்போது சட்னி சாம்பார் இணைந்த பொங்கல் சமவிகிதத்தில் கலந்திருக்கும். கையில் பிசைந்தால் மட்டுமே இது உத்தமம். இல்லையென்றால் ஒவ்வொரு கவளமும் வேறுவேறு சுவை தந்து சலித்துவிடும். 
பக்கத்தில் மிதமான சூட்டில் ஆமை வடைகளை வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஆமை வடை சூடாக இல்லையென்றால் மைக்ரோவேவில் சூடுபடுத்தும் தப்பைச் செய்துவிடாதீர்கள். ஆமை வடை மெதுவடையாகி சொதப்பிவிடும். சிறிய கிரில் இருந்தால் அதில் சூடு பண்ணுங்கள். இல்லை எனில் தவா அல்லது தோசைச் சட்டியிலும்  சூடு பண்ணலாம். ஏனென்றால் மொறு மொறுப்பு மிக மிக முக்கியம்.
இப்போது ஒரு கவளம் பொங்கலை வலது கையால் எடுத்து வாயில் வைத்து மெதுவாக மென்று தின்று விழுங்கியவுடன், இடது கையில் இருக்கும் ஆமை வடையை ஒரு கடிகடித்து மென்று விழுங்கவும். கவனம் ஸ்பூனில் சாப்பிடுவது அதுவும் பொங்கலன்று சாப்பிடுவது சட்டப்படி குற்றம். இப்படியே மாற்றி மாற்றி சுவையுங்கள். பொங்கலின் மணமும் குணமும் சுவையும் பெரிதும் கூடும் என்பதில் சந்தேகமில்லை. கவனம் அளவு முக்கியம். கை மணக்க நெய் மணக்க வாய் மணக்க சாப்பிடுங்கள் .பொங்கலைக் கொண்டாடி மகிழுங்கள் . சாப்பிட்டு முடித்து கூச்சப்படாது விரல்களை ஒவ்வொன்றாக வாயில் நுழைத்து சுத்தப்படுத்தலாம். அதன் சுவை தனி.   ஆனால் மீண்டும் முகர்ந்து பார்க்கவேண்டாம் .கை மணக்க நெய்  மணக்க என்று சொன்னது தப்பாகி வேறெதுவோ மணக்க வாய்ப்பிருக்கிறது கவனம் . எனவே நாவால் ஏற்கனவே சுத்தப்படுத்திவிட்டாலும் கைகளை நன்றாக கழுவிவிடுவது உத்தமம் .
இப்போது ஆசைப்படுபவர்களுக்காக இனிப்பு பொங்கல் சாப்பிடுவது  எப்படி என்று சொல்கிறேன் ஓகேவா.

இப்படி வெண்பொங்கலை சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து ஒரு சிறிய தேக்கரண்டியில் கவனம்அன்னக்கரண்டி  அல்ல தேக்கரண்டியில் பாதியளவு இனிப்புப் பொங்கலை எடுத்து லேசாக நுனிநாக்கில் சுவைத்து ஒரு 15 நிமிடம் செலவழித்து சிறிது சிறிதாக உண்ணுங்கள். சுகருக்கும் நல்லது பிகருக்கும்  நல்லது .பொங்கலோ பொங்கல்.
அடுத்த பகுதியில் கரும்பு சாப்பிடுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
தொடரும்



Thursday, November 15, 2018

குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பவர்கள் ஆண்களா , பெண்களா ?

Image result for sun TV aadhavan
Athavan
கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி மாலை நியூயார்க்  தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற தீபாவளித்திருநாள் கொண்டாட்டத்தில் சன் டிவி, காமடி ஜங்ஷன் மற்றும் கொஞ்சம் நடிங்க பாஸ் புகழ் ஆதவன் மற்றும் சந்தியா கலந்துகொண்டார்கள் .அப்போது நடந்த பட்டிமன்றத்தில் அவர்களோடு அடியேன் கலந்து கொண்டு பேசினேன் .
அதன் காணொளிக்காட்சியை  இங்கு கீழே கொடுத்துள்ளேன் .இது சிரித்து மகிழ நடத்தப்பட்ட பட்டிமன்றமோ ஒழிய ஏதேனும் கருத்துக்களை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.




Monday, September 24, 2018

தவளை இனப்பெருக்கம் செய்வது எப்படி ?

Related image


வேர்களைத்தேடி பகுதி 26
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_17.html

அறிவியல் முனியாண்டி வாத்தியார் ஒரு கார்ட்டூன் போல இருப்பார். எப்போதும் மொட்டைத்தலை, மொட்டையென்றால் வழுக்கை அல்ல முடியை ஒட்ட வெட்டியிருப்பார். ஒட்டிய சட்டையும் அதைவிட தோலோடு ஒட்டிய பேன்ட்டும் அணிந்திருப்பார். அந்த பேண்ட்டும் கணுக்கால் வரைதான் இருக்கும். எப்போதும் ஒரு மந்தகாசமான புன்னகையுடன் இருப்பார். கோபம் வந்து பிரம்பால் அடிக்கும்போது கூட அந்தப்புன்னகை மாறாமல் இருக்கும். எனவே அவர் எப்போது கோபமாக இருப்பார். எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லவே முடியாது. பெரும்பாலும் மதிய நேரங்களில் அவர் வகுப்பு வரும். ஒன்பதாவது வகுப்பென நினைக்கிறேன். வெயிலால் தகதகக்கிற ஓட்டுக் கூரையின் கீழே சூடாக இருக்கும் டெஸ்க்குகளில் அதைவிட சூடான அறிவியலைச் சொல்லித்தரும் போது  எங்களுடைய மண்டையும் சூடாகித் தலை சுற்றும். அதனால்தான் அறிவியலை எனக்குப் பிடிக்காமலேயே போய்விட்டது போலிருக்கிறது.
அன்று அரையாண்டு பரீட்சைப் பேப்பரைக் கொண்டு வந்திருந்தார். எல்லோருக்கும் மண்டையும் உடலும் மேலும் சூடானது. சிலர் ஒற்றை இலக்க மதிப்பெண்கள், சிலர் பூஜ்யம் என சிலருக்கு  மைனஸ் மார்க்கும் போட்டுவிடுவார். நான் சரா சரியாக 50 லிருந்து 60 வரை வாங்குவேன். சில சமயங்களில் குறைந்தாலும் 40க்கு கீழ் குறைந்ததில்லை. மற்றவற்றில் எல்லாம் 70-80 என்று வாங்கும் நான் அறிவியலில் என்றுமே குறைந்த மதிப்பெண் தான். எனவே இவன் டாக்டராக ஆக முடியாதென எப்போதும் என் அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். “ஐயா ஆளை விடு சாமி”,ன்னு மனசுக்குள் சொல்லிக்கொள்வேன். இந்த மனசுக்குள் சொல்லிக் கொள்வது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. வேலையில் பாஸிடம், வீட்டில் பாஸிடம், ஆலயத்தில் பாஸிடம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அவ்வப்போது வாட்ஸாப்பில்,மாணவர்களின் வித்தியாசமான பதிலை, வெறும் வினாக்களை பத்தி பத்தியாக எழுதும் மாணவர்கள், சொந்தக்கதைகளை எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களை கெஞ்சியும், மிரட்டியும் எழுதும் மாணவர்கள் என்று பலபேரைப் பார்த்திருப்பீர்கள்.
இப்படி வித்தியாசமாக எழுதும் விடைகளை எல்லார் முன்னாலும் வாசித்துவிடுவார் முனியாண்டி. அதனால் தான்  எல்லோரும் மண்டை காய்ந்து உட்கார்ந்திருந்தோம் . பெண் மாணவிகளும் அங்கு இருப்பர் என்பதால் எங்களுக்கு மிகவும் அவமானமாய்ப் போய்விடும்.
என்முறை வந்தபோது என்னைக் கூப்பிட்டு கையை நீட்டச்சொல்லி ஒரு அடி அடித்தார். ஐயையோ ஊத்திக்குச்சு  போல என்று நினைத்துக் கொண்டே அடியை வாங்கிவிட்டு பேப்பரைப்பார்த்தேன் . பார்த்தவுடன், “சார் 55 மார்க் சார்” என்றேன் ஏன் அடித்தார் என்பது புரியாமல்.
“கரெக்ட்டாத்தேன் அடிச்சிருக்கேன். வாத்தியார் மகனுக்கு இதெல்லாம் பத்தாது", என்கிறார். என்னத்தைச் சொல்றது வாத்தியார் மகனாப் பிறந்தது என் குத்தமா சொல்லுங்க. மார்க் ஓரளவுக்கு பரவாயில்லை என்பதால் எனக்கு அவ்வளவாய் அவமானமாய் இருக்கவில்லை. ஆனாலும் உள்ளங்கை பழுத்தது ,வலித்தது .
அதன்பின்தான் அந்த சம்பவம் நடந்தது. “எழுவனம்பட்டி முத்துக்கருப்பன்”, என்று ஆசிரியர் சொன்ன போது, அவன் எழுந்து நின்று இரண்டு கைகளிலும் எச்சிலைத்துப்பி தேய்த்துவிட்டுக்கொண்டான். அடி வாங்க ரெடியாகிட்டான் போலத் தெரிஞ்சுது.
அவனுடைய வினாத்தாளை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு பகபகவென்று சிரித்தார். நாங்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் முழித்தோம். முத்துக்கருப்பன் கலவரமாக நின்று கொண்டிருந்தான். அவர் விடைத்தாளின் ஒரு பக்கத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். “டேய் எல்லோரும் கேளுங்கடா, தவளை இனப்பெருக்கம் செய்வதை விவரிக்க என்பது கேள்வி. அதுக்கு நம்ம முத்துக்கருப்பன் எழுதியிருக்கிறான் கேளுங்கடா”.
"ஒரு நல்ல நாளில் ஒரு ஆண் தவளையும் பெண்தவளையும் தனியாகப் போய்க் கொஞ்சநேரம் விளையாடும். அதன்பின் கொஞ்சம் இருட்டத் துவங்கியதும் ஆண் தவளை, பெண் தவளையின் முதுகின் மீது ஏறி சிறிது நேரம் உட்கார்ந்திருக்கும். அதன்பின் பெண்தவளையின் வயிறு வீங்கும். சுமார் 10 மாதம் கழித்து பெண் தவளை குட்டிகள் போடும்", என்பதை அவர் சத்தமாய்ப் படிக்கும்போது எங்களுக்கெல்லாம் சிரிப்புத்தாங்க முடியாமல் போனது. பெண்களுக்கெல்லாம் முகமெல்லாம் சிவந்து குனிந்து கொண்டனர்.
Related image

முத்துக் கருப்பனுக்கு மட்டும் ஒன்றும் புரியவில்லை. சரியாகத்தானே எழுதியிருக்கிறோம் என்று அவன் பல நாள் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அன்றிலிருந்து ஆசிரியர் முதற்கொண்டு எல்லோரும் அவனை முத்துக்கருப்பன் என்பதை விட்டுவிட்டு தவளைக்கருப்பன் என்று கூப்பிட ஆரம்பித்தோம்.
அதனை இன்று நினைத்தால் முத்துக்கருப்பனின் இன்னெசென்ஸ்  என்ற வெகுளி அல்லது அப்பாவித்தனம் தான் என்று தெரிகிறது. அவன் எழுதியது மட்டுமல்ல. அப்படித்தானே நடந்திருக்க முடியும் என்று அவன் நம்பினான். ஆசிரியர் பெயர் உண்மையான பெயர் என்றாலும் மாணவன் பெயரை மாற்றியே குறிப்பிட்டிருக்கிறேன். யாருக்குத் தெரியும் அவனே பெரிய அறிவியல் அறிஞனாக  இல்லை அறிவியல் ஆசிரியராக ஆயிருக்கலாம் இல்லையா?
இந்த மாதிரி பல மாணவர்கள் இருந்தார்கள் மிகுந்த விவரமுள்ள சிலர், ஒன்றும் தெரியாத பலர், நடுவில் இருந்த என்னைப்போல் சிலர் என்று தவளைக்கருப்பனின் விடையை நினைக்கும் போது எனக்கு இப்போதும் புன்னகை வருகிறது. குறிப்பாக "ஒரு நல்ல நாளில்" என்று அவன் எழுதியதை நினைத்தால் அவன் எவ்வளவு அப்பாவியாக இருந்தான் என்பதை நினைத்து எனக்கு மிகுந்த ஆச்சரியமாக  இருந்தது.
Indian village kids, Indian village children, Rajasthan village

அப்புறம் அந்த விடைத்தாளை  நான் வாங்கிப் பார்த்தேன். பல கேள்விகளுக்கு சொந்தமான விடைகளை எழுதிஇருந்தான். அதில் ஆச்சரியம் தரும் இன்னொரு தகவல் என்னவென்றால் முனியாண்டி ஆசிரியர் அந்த விடைக்கு 1/2 மதிப்பெண்கள் கொடுத்திருந்தார்.
பள்ளியில் நான் விளையாடிய  விளையாட்டுக்கள் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். விளையாட்டு என்றால் வெறும் விளையாட்டுதான். நீங்க நினைக்கிற எந்த விளையாட்டும் நான் விளையாடல, அதற்கு விவரமும் பத்தாது. சாமர்த்தியமும் இல்லை.
- தொடரும்.

Thursday, July 19, 2018

தாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி !!!!

8 Most Irritating Habits Of Indian Husband


                          "தாய்லாந்துக்கு போய்விட்டு வரவா?”, என்று மனைவியிடம் கேட்டேன். அதன் பின் என்ன நடந்தது என்று சொல்வதற்கு முன்னால் அதன் பின்னணியைச் சொல்லிவிடுகிறேன். முகமது சதக் குழுமத்தின் அங்கமான பன்வேவ் கம்ப்யுட்டிங் (Openwave Computing LLC, New York) என்ற மென்பொருள் நிறுவனத்தில் நான் வேலை பார்ப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது இக்குழுமத்தின் மொத்த மதிப்பீடு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் பெருகியிருக்கிறது. முகமது சதக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையில் பிறந்த 'முகமது சதக்' தான் என்னுடைய நிறுவனத்தின் தலைவர். லாங் ஐலண்டில் எம்பிஏ படிக்க வந்து, படித்து முடித்தவுடன் ஆரம்பித்த நிறுவனம்தான் பன்வேவ்.
முகமது சதக்கின் அண்ணன் "அஸ்லாம் ஹூசைன்" தான் சென்னையில் உள்ள பன்வேவ் நிறுவனத்தின் "ஆஃப்  ஷோர்" மையத்தின் எம்டி (MD). இவருடைய பையன் ஜலாலுதீன் இரு வருடங்களுக்கு முன்னர் சித்தப்பாவைப் போலவே எம்பிஏ படிக்க நியூயார்க் வந்தார். அப்போதிருந்தே நிறுவன நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ள நேரம் கிடைக்கும்போதெல்லாம் நியூயார்க் மிட்டவுனில் உள்ள எங்கள் நிறுவனத்திற்கு வருவார். படித்து முடித்தவுடன் இங்கேயே முழுநேர வேலையில் சேர்ந்தார்.
இதற்கிடையில் ஜலாலுக்குத் திருமணம் நிச்சயமாகி அது 2018 மே மாதம் 9-ஆம் தேதி என்று முடிவானது. ஜலால் என்னைக் கண்டிப்பாகக் கலந்து கொள்ளக் கேட்டுக் கொண்டதினிமித்தம் நானும் போவதற்கு முடிவு செய்தேன்.
என் மனைவியிடம் சொல்ல, “சித்திரையில் அக்னி நட்சத்திரத்தில் போகாதே, கருகி விடுவாய், நானும் கண்டிப்பாய் வரமுடியாது”, என்று மறுத்துவிட்டாள். போய்த்தான் ஆக வேண்டும் என்று சொல்ல, “நீ வேண்டுமென்றால் போய்விட்டுவா”, என்று சொல்லிவிட்டாள்.
எப்பொழுதும் இந்தியா போகும் வழியில் ஏதாவது ஒரு நாட்டின் வழியாகச் சென்று அங்கே சில நாட்கள் தங்கிச் செல்வது என் வழக்கம் என்று உங்களுக்குத்தெரியும். இதற்கு முன்னர் இப்படி நான் பார்த்தது தான், லண்டன், சீனா, இலங்கை ஆகியவை. இந்தத் தடவையும் ஏதாவது ஒரு நாட்டின் வழியாகச் செல்லலாம் என்றபோது தாய்லாந்து ஞாபகம் வந்தது. "ஆனா அன்ட் தி கிங்" (Anna and  the  King) என்ற படத்தை சில வருடங்களுக்கு முன்னால் பார்த்ததிலிருந்து தாய்லாந்து என்னுடைய பக்கெட் லிஸ்ட்டில் இடம் பெற்றது.
அங்குள்ள பிரமாண்ட புத்தர் கோவில்கள், அரண்மனை மற்றும் மிதக்கும் அங்காடி ஆகியவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை. நம்புங்க பாஸ், அட நம்புங்க சிஸ் இதைத்தவிர வேறொன்றும் அல்லது வேறெங்கும் போவதற்கு எந்த ஐடியாவும் இல்லை.
தாய்லாந்து போகும் இந்தத் திட்டத்தை நண்பர்களிடம் சொன்னேன்.
"டேய் தனியாவா போற, ஏண்டா நாங்கெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து போறப்ப பெரிய உத்தமன் மாதிரி நான் வரலன்னு சொன்னே".
"அடேய் என்னோட ஆர்வங்கள் பார்க்க விரும்பும் இடங்கள் எல்லாம் வேறடா. உங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராது. அதனாலதான் நான் உங்க கூட வரல "
நம்பிட்டோம்,ஏலேய் ஏடாகூடமா எதையாவது செஞ்சு மாட்டிக்காதே ஆமா சொல்லிட்டோம், ஆமா உன் மனைவிட்ட சொல்லிட்டியா?”.
"இல்லடா இனிமேத்தான் சொல்லணும்".
“அடப்பாவி இன்னும் சொல்லலயா, அடேய் தாய்லாந்துக்கு தனியாய் போறேன்னு சொன்னா எந்த மனைவிதான் விடுவா?.
“அப்ப நீங்கெல்லாம் ஒண்ணாப் போகும்போது என்னடா சொல்லிட்டு போனீங்க?”.
"நாங்க சிங்கப்பூர்னு சொல்லிட்டுத்தான் தாய்லாந்து போனோம்".
“அதெல்லாம் முடியாதுறா இதுக்குப்போய் பொய் யெல்லாம் சொல்லத்தேவையில்ல. அதுதவிர பொய் சொல்லிட்டு அதை மெயின்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம்”.
"என்னவோடா நாங்க சொல்றத சொல்லிட்டோம், நீ அப்புறம் உன்பாடு உன் மனைவி பாடு"
இப்போது வீட்டில்  மனைவியிடம்
அப்ப இந்தியாவுக்கு நீ வரலையா?” 
“லூசாப்பா நீ இந்த வெயில்ல யாராவது இந்தியாவுக்குப் போக முடியுமா?”
“நான்தான் சொன்னேனே, இந்தக் கல்யாணம் அவசியம் போக வேண்டிய ஒண்ணு”.
“சரி அதான் போய்ட்டுவான்னு சொல்லிட்டேன்ல”.
 “தேங்க்ஸ் அதோட போற வழில தாய்லாந்துக்கு போய்ட்டு அப்புறம் சென்னைக்குப் போலாம்னு இருக்கேன்”. (தயங்கி தயங்கி மிகவும் தயங்கிக் கேட்டேன்)
“தாய்லாந்துக்கா, சரி போய்ட்டு வா ஆனா பத்திரம்"
என் கற்பனைக்கு சடுதியாக சிறகுகள் முளைக்க, நான் வானவீதியில் பறக்க ஆரம்பித்தேன்.
எந்தச் சண்டையோ, கேள்வியோ, எதுக்கு? அங்க என்ன இருக்கு? என்று எந்த விசாரணையும் இல்லாம, சரின்னு சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சரியம். நண்பர்களிடம் சொன்னால் அவர்களுக்கும் ஆச்சரியம்தான்.
அதனால் கண்கள் பனிக்க, இதயம் நனைய நான் நினைத்தேன். என் மனைவிக்குத்தான் என் மேல் எவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு என்றும் பாத்திரவானாக இருப்பேன். ஒழுக்கம் காப்பேன் உத்தமனாய் நடப்பேன் என்று உளமாற உறுதி கூறினேன். அப்படியே போய்த்திரும்பி வந்துவிட்டேன். என் மனைவியின் மீது அன்பும் மதிப்பும் கூடியது.
திரும்ப நியூயார்க் வந்து சேர்ந்தபின் ஒரு நாள் நான் பாத்ரூமில் இருந்தபோது வெளியே என் மனைவி தன் தோழியிடம் தலைவாரிக் கொண்டே ஸ்பீக்கர் போனில் பேசிக் கொண்டிருந்தாள். பல விஷயங்களைப் பற்றிப்  பேசிவிட்டு என்னுடைய பயணம் பற்றிய பேச்சு வந்தது.
"ஏண்டி எப்படி நீ தாய்லாந்துக்கு  அவரை  தனியா அனுப்பின? நானெல்லாம் இந்த மாதிரி தப்பை செய்யவே மாட்டேன்".
“அடப்போடி முசப்பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பாத்தா தெரியாதா?".
நான் உள்ளே திடுக்கிட்டதில் ஒரு சில துளிகள் தொடையில் விழுந்தன. அதோடு எனக்கு ஒரு சில சந்தேகங்கள் எனக்கு உதித்தன. 
1.   இந்தப் பழமொழியை இவள் எங்கே கற்றுக் கொண்டாள்?
2.   இந்தப்பழமொழியில் முயல் யார்? நாய் யார்?
3.   தாய்லாந்து போவதற்கு முன்னால் இதனைக் கேட்டிருந்தால் ஒருவேளை என்ன நடந்திருக்குமோ?
மகேந்திரன் : “டேய் சேகர்எனக்கு ஒரு சந்தேகம்  தொடையில் விழுந்தது கண்ணீரா சிறு நீரான்னு சொல்லாம முடிச்சிட்டியே?”
(விரைவில் எதிர்பாருங்கள் தாய்லாந்தில் பரதேசி)

Thursday, March 8, 2018

பரதேசியின் சொந்த ஊர் எது?

Image result for confused man  free cartoon


"ஹல்லோ எலேய் பரதேசி என்னலே என்ன செய்ற?"
(வந்துட்டான்யா வந்துட்டான்யா நாரத மகேந்திரன்)
"நல்லாருக்கியா மகேந்திரா ஊரும் உறவுகளும் சுகமா?"
"அட அதவிடுறா ஏதோ வேரைத் தேடின்னு ஒரு பதிவு எழுதிட்டு இருக்கியாமே?"
"ஆமாடா ஏன்டா நீ படிக்கிறதில்லையா?"
"நான் வயக்காட்டு வெள்ளாமையல பிஸியா இருந்தேன்.  பயக சொன்னாய்ங்க. அது சரிடா உன் சொந்த ஊர் எது?"
"என்னடா இப்படிக் கேட்டுட்ட, தேவதானப்பட்டிதான் என் சொந்த ஊரு, உனக்கும் அதான்"
"இல்லடா பிறந்த ஊரைத்தான சொந்த ஊர்னு சொல்வாய்ங்க”.
“அப்படிப்பார்த்தா என் பிறந்த ஊரு திண்டுக்கல்லு, வளர்ந்த ஊருதான் தேவதானப்பட்டி".
"அப்ப உனக்கு சொந்த ஊர்னா திண்டுக்கல்லுன்னுதான சொல்லனும்"
"இருந்தாலும் வளர்ந்த ஊரை விட்டுற முடியுமா? இப்படி வேணா வெச்சுக்கலாம் பிறந்த சொந்த ஊரு திண்டுக்கல், வளர்ந்த சொந்த ஊரு தேவதானப்பட்டி".
"அப்ப திண்டுக்கல்லுல இருந்ததை விட தேவதானப்பட்டில இருந்ததுதான அதிகம் இல்லையா? எவ்வளவு வருஷம் இருந்த?"
"ஆமாடா பத்தாப்பு படிக்கறவரை அங்க தான் இருந்தேன். பதினஞ்சு  வருஷம் இருந்தேன்னு வச்சுக்கலாம்".
"அது சரி திண்டுக்கல்லு அப்ப யாரு ஊரு?"
"அடேய் அது எங்கம்மா ஊருடா"
"அப்ப உங்கப்பா பிறந்த ஊர்?"
"அது மதுரை”
 “அப்ப நீ சொந்த ஊரு மதுரைன்னுதான சொல்லணும்? "
"அப்படியும் வச்சுக்கலாம்டா, அதோட மதுரையில அமெரிக்கன் கல்லூரி 3 வருஷம் சமூகப்பணிக்கல்லூரி 2 வருஷம் இப்படி கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷம் மதுரையில்தான் இருந்தேன். களிமண்ணா வந்த என்னை கடைந்தெடுத்து உருவாக்கியது அமெரிக்கன் கல்லூரிதான்.அதனால் தான் இந்தியா வந்தா மதுரைக்கு வராம திரும்பினதில்லை . அதனாலதான் இப்பவும் மதுரைக்காரன்னு பெருமையா சொல்றேன். அதோட அப்ப திண்டுக்கல்லும் சரி, தேவதானப் பட்டியும் சரி எல்லாமே மதுரை மாவட்டமாத்தேன் இருந்துச்சு"

Image result for confused man  free cartoon
Add caption
"அப்ப சென்னை?"
"சென்னையை மறக்க முடியுமா? வேலைக்காக 1988ல் இங்கு வந்து வந்ததிலிருந்து  சிறந்த அனுபவம் கொடுத்தது சென்னைதான், சொந்தக் கம்பெனி வக்கிற அளவுக்கு வளந்தது, வளர்த்தது சென்னைதான. அதோட புகுந்த ஊரும்  சரி புகுந்த வீடும் அமைஞ்சது சென்னைதான்"
"புகுந்த வீடா என்னடா சொல்றா"
"இல்லடா கல்யாணம் செஞ்சதும் சென்னைதான, அதைச் சொன்னேன்”.
“ஓ நீ அங்க வர்றியா/ ஆமா நீ சென்னையில எத்தனை நாள்றா இருந்த"
"டேய் 1988-லிருந்து  2000 வரைக்கும் சென்னைதான, கணக்கு பண்ணா ஒரு 11-12 வருஷம் சென்னையிலதான இருந்தேன்".
"அப்ப சென்னையைக் கூட உன்னோட சொந்த ஊர்னு சொல்லலாம்னு  சொல்லு"
"சொல்லலாமே தப்பேயில்ல, டேய் டேய் மகேந்திரா என்னடா குழப்புற?"
"அப்ப திண்டுக்கல்லுல ஆரம்பிச்சு அப்புறம் தேவதானப்பட்டி, பின்ன மதுரை அதன்பின் சென்னை அப்புறம்?"
"அப்புறம் நியூயார்க் வந்தேன்".
"ஏண்டா சென்னையை விட்டுப்போன? சென்னை பிடிக்கலயா?
"சேச்சே அப்படிச் சொல்ல முடியாது. எந்த ஊரையும் பிடிக்காம விட்டுட்டு வரல உயர் படிப்புக்கும் வேலை வாய்ப்பையும் தேடித்தேன் ஒவ்வொரு இடமா போனேன்".
"ஆமா நியூயார்க் எப்படா போன?"
"2000-த்தில இங்க வந்தேன்"
"2000-யிரமா அப்ப நீ போய் 18 வருஷம் ஆயிருச்சா?"
"ஆமாடா நாள்தான் ஓடு ஓடுன்னு ஓடுதே"
"அப்ப நீ திண்டுக்கல், தேவதானப்பட்டி,மதுரையில இருந்ததைவிட நியூயார்க்கில இருந்ததுதான் அதிகம்னு தெரியுது".
"அட ஆமா மகேந்திரா, இந்தக்கணக்கை இதுவரை நான் போட்டுப்பாக்கல"
“அதுசரி அப்ப நியூயார்க்தான் உனக்கு சொந்த ஊர் ஆயிப் போச்சுன்னு சொல்லு"
"மகேந்திரா எத்தனை வருஷம் இங்க இருந்தாலும் நான் இந்தியன்கிறதும் தமிழன்கிறதும் மாறாது. நான் தமிழன்தான், நான் மதுரைக்காரன்தான் என் சொந்த ஊர் தேவதானப்பட்டிதான். இதை எப்பவும் மாத்தமுடியாதுடா, மறக்கவும் முடியாது, மறக்கவும் கூடாது”.
“நல்லாச் சொன்னடா, ஆமா உனக்கு நியூயார்க் பிடிச்சிருக்கா?”
"பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியாது, பிடிக்கலன்னும் சொல்லமுடியாது"
"என்னடா புதிர் போடுற"
"என்ன இருந்தாலும் எத்தனை வருஷம் இருந்தாலும், நியூயார்க்கும் அமெரிக்காவும் எனக்கு வெளிநாடு தானடா. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?"
சரிதான் போ, அப்ப திரும்ப வந்துற வேண்டியது தானே".
"அது முடியாதுன்னு தான் நெனைக்கிறேன்"
"ஏண்டா?"
"இது ஒரு புலிவாலைப்பிடிச்ச கதைரா. பிடிச்சுட்டு இருக்கிறதும் கஷ்டம், புடியை  விடுறதும் கஷ்டம். பிள்ளைகள் இங்க வளர்ந்ததனால அவளுக வரமாட்டேங்கறாங்க. அவங்க பக்கத்தில நாங்க இருக்கறதுதானே நல்லது",
“சரிதாண்டா ஆனா சும்மா சொல்லக்கூடாது. உன் கதை அபாரம்டா, திண்டுக்கல், தேவதானப்பட்டி, மதுரை, சிவகாசி, கிருஷ்ணகிரி, சென்னை இப்ப நியூயார்க். அதுலயும் ஊர் ஊராச் சுத்துற. உனக்கு பரதேசிங்கிற பேரு ரொம்ப பொருத்தம்டா. ஆமா யார்றா இந்தப் பேரை உனக்கு வெச்சது?”
“வேற யாரு நாந்தேன்?”
“அடுத்து எங்கடா போற?”
“சொல்றேன்”.
மார்ச் 24, 25 - டொரன்டோ, கனடா - கிறிஸ்தவ இசை  மாலை
ஏப்ரல் 15 : சித்திரை விழா, நியூயார்க் தமிழ்ச்சங்கம்
ஏப்ரல் 21: தமிழ் ஜெப்பர்டி - நியூயார்க் தமிழ் அக்காதெமி
ஏப்ரல் 24-27 - தாய்லாந்து
ஏப்ரல் 28-29 : சென்னை
ஏப்ரல் 30 மே 1,2 : திருவனந்தபுரம்  
மே 3-4 : சென்னை
மே 4 : மதுரை
மே 5 : ராமநாதபுரம்
மே 6: மதுரை
மே 7-8 : சென்னை
மே 9 : நியூயார்க்
மே 26-27 : நியூஜெர்சி தமிழ்நாடு பெளன்டேஷன்
ஜூன்  30 - ஜூலை 4 Fetna  டல்லாஸ், டெக்சஸ் 

“டேய் சேகரு நீ பரதேசியே தாண்டா”
 முற்றும்
முக்கிய அறிவிப்பு 

டொரோண்டோவில்  நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)