Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, April 30, 2020

நியூயார்க்கில் வ(க)சந்தகாலம் :

நியூயார்க்கில் வ(க)சந்தகாலம் :


வீட்டுச்சிறையில்
வெகுகாலம் இருந்த நான் இன்று சற்றே
வெளியில் எட்டிப்பார்த்தேன்.

மண்ணில் புதைத்த கிழங்குகள்
மகிழ்ந்தே முகிழ்த்திருந்தன  !
அவற்றுக்குத்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

வீட்டின் முன்
காவல் தூண்கள் போல்
காத்து நின்ற என்னிரு அசோக மரங்கள்
கரும்பச்சையில் களிப்பாய்
காற்றில் அசைந்தன !
அவற்றுக்குத்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

இலை உதிர்த்து , சில கிளை உளுத்து
உச்சி வரை குச்சியாய் நின்றிருந்த
சாலை மரங்கள்
பச்சையை வெளித்தள்ளி
பரவசமாய்  இசைந்தன !

உருமாறி
பழுப்பேறிய  புற்கள்
 இளம்பச்சையில்
நிறம் மாறி
பச்சைப் போர்வையை
பதவிசாய்  விரித்திருந்தன !

புல்தரையில் மேல்
ஆங்காங்கே
நீல பாணட்டுகள்
ஒளிந்து பார்த்துக்கண்சிமிட்டி
ஒளிர்ந்தன

பட்டுப்போன
என் மனைவியின் ரோஜாச்செடிகள்
பட படவென உயிர்த்தெழுந்து
பசுமையாடை உடுத்தி
மொட்டுக்கள் வருவதற்கு
மெட்டுக்கள் பாடின !

மறந்துபோன ,
இசைபாடும்
இச்சைக்குருவிகள்
பறந்து வந்து மறுபடியும்'
படுக்கையறை ஜன்னலில்
பூமி எழுமுன்
பூபாளம் இசைத்தன!

இவற்றுக்கெல்லாம்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

ஆனால்
கொரானாவுக்கு தெரியவில்லையே .
இது  வசந்த காலம் என்று?

செய்தி வாசிப்பவள்
புன்னகை மாறாமல் சொன்னாள்
இன்றும் நியூயார்க்கில்
புது நோயாளிகள் நான்காயிரம்
புது இறப்புகள் நானூறு என்று !

இதற்கு  ஒரு
சாவு காலம் வந்தால் தான்
நமக்கு இனி எந்த காலமும்
இல்லையென்றால் இந்த
வசந்த காலமும் நமக்கு
கசந்த காலம்தான் !

வெளியே
வசந்த காலமென்றாலும் உள்ளுக்குள்
அசந்த காலமாய் நீளும் இந்நிலை
எப்போது மீளும்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று முடியும் எங்கள் அடிமையின் நேரம் !

பரதேசி ஆல்ஃபி
ஏப்ரல்  30,  2020

Thursday, August 8, 2019

கலைஞர் :அகழ்வாரைத் தாங்கும் நிலம் !





கடந்த சனிக்கிழமை ,2019 ,ஆகஸ்ட் 3 ஆம் தேதி , நியூஜெர்சியில்  பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டம் சார்பில் கலைஞர் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி  நடத்தப்பட்டது .அவ்வமயம் நடந்த  கவியரங்கத்தில் அடியேன் கலந்து கொண்டு வாசித்த  கவிதை இது .

மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும்
பேச்சுக் கொடுத்த தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த மன்றத்திற்கும் 
வணக்கங்கள் பலப்பல.

பெரியார் வட்டத்தில்
இறை வணக்கமா? எனச்சில
புருவங்கள் உயர்வது எனக்குப்
புரிகிறது .
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற
திராவிட முழக்கத்தில்
திரண்ட துகள் நான்
உருண்ட துளி நான்
புரிகிறதா இப்போது
புருவங்கள் தாழட்டும் !

அதோடு அம்பேத்காரும்
அதில் உள்ளாரே
ஆன்மீக வாதியன்றோ அவர் !.

தோழர் என்று கூப்பிட்டால் - கனிமொழி
தோழர் என்று கூப்பிட்டால்
பாலரும் வருவர் ஏன்
பாராளுமன்றமும் பறந்து வரும் !
இந்தப் பரதேசி வரமாட்டானா?
நன்றி தோழர்.
அந்தக்கனிமொழியையல்ல
இந்தக்கனிமொழி, நம்
சொந்தக் கனிமொழியைத்தான்
சொல்லுகிறேன்!
அந்தக்கனிமொழி
கலைஞரின் ரத்த வாரிசு
இந்தக்கனிமொழி,
கலைஞரின் யுத்த வாரிசு !

கலைஞர் 
அகழ்வாரைத் தாங்கும் நிலம்,
ஆம் அவர் அதோடு
தொட்டனைத்தூறும் அறிவுக் கேணி !

தொண்டு செய்து பழுத்த பழத்தை 
கண்டு உண்டு விண்டு வந்த
கலைஞர் இவர் !.

பேச்சாற்றல் மிகுந்த அண்ணா
மூச்சாற்றால் இல்லாமல்
முடிந்த போன சோகத்தில்
இடிந்து போன தமிழகம்
இருண்டு  போன நேரத்தில்
விடிந்து வந்த வெளிச்சம் இவர்
எழுந்து வந்த சூரியன் இவர் !

கொள்கை என்றால்
வெறும் கொள்ளையென மாறிய
கொடுமையான சமூகத்தில்
பேச்சில் உயிர் மூச்சில்
தமிழ் வீச்சில் வாழ்ந்த
தலைவர் அவர் !

உரையாற்றி சிறைபோற்றி
உரமேற்றி உணர்வூட்டி
கரமுயர்த்தி இனம் காத்த
 கலைஞர் அவர் !

கல்லக்குடி தொடர்ந்து
கல்லறைக்குடி வரை
களம் கண்டு வென்ற
கலைஞர் அவர் !

அரிதாரம் சில பார்த்து
அவதாரம் என நினைத்து
அறிவார்ந்த இவரை
ஆட்சியில்  இருந்து
அகற்றியது
அன்றைய  தமிழகம் .
அகற்றினாலும் அகலாது
அகழ்வாரைத் தாங்கிய நிலமவர் !

அகழ்வாருக்கும்
அன்பு செலுத்தி
இகழ்வாருக்கும்
இன்முகம் காட்டிய
இனமான வீரர் அவர் !

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித்
தூற்றுவார் தூற்றட்டும் என்று
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும்
புன்சிரிப்போடு எதிர்கொண்ட
புனிதர் இவர்!

ஆளுங்கட்சியாக இருந்தாலும்
எதிர்க்கட்சியாக இருந்தாலும்
அகழ்வாரை தாங்கிய நிலமவர் !.

வேதனைகள் பொறுத்து
சோதனைகள் கெலித்து
சாதனைகள் படைத்த
சரித்திர நாயகன் அவர் !

சமரசம் உலவும்
சமத்துவக்கல்வி !
சமூக ஒற்றுமைக்கு
சமத்துவபுரம் !
சமூக மேம்பாட்டுக்கு
இட ஒதுக்கீடு !
செழுமையான தமிழுக்கு
செம்மொழிப்பட்டம் !
உழைப்பவர் முன்னேற
உழவர் சந்தை !
பெண்களுக்கு சொத்துரிமை
பெண்கள் சுய உதவிக்குழு !
                           
சிறுபான்மையோர் போல்
பெருங்கரிசனம் !
மதசார்பின்மை என
சொல்லிக்கொண்டே போகலாம் !

கலைஞர் வாழ்க்கை
காவியமாகும் இவ் வேளை
நம் நாடு
காவிமயமாவதுதான்
கவலையளிக்கிறது
அதனை மாற்ற
மஞ்சள் துண்டணிந்த மாமனிதர்
மறுபடியும் வருவாரா ?

நிலம் காத்தவர் இப்போது
நிலத்தின் உள்ளே !
களம் கண்டவர் இன்று
கல்லறையின் உள்ளே !
இனம் காத்தவர் இப்போது
இருட்டுப் பெட்டிக்குள் !

தாங்கிய நிலமவர் இப்போது
தூங்கிய நிலமானார் !

ஆனால்
சூரியனுக்கு அழிவேது!
சந்திரனுக்கு முடிவேது!
உலகமிருக்கும் வரை தமிழ்
உணர்வுகள் இருக்கும் வரை
திராவிடக் களம்  இருக்கும் வரை
கலைஞரும் இருப்பார்!
 அவர் தம்
நினைவைப் போற்றுவோம்
கனவைக்காப்பாற்றுவோம் !

மிகைநாடி மிக்க கொளல்  என
தக்க கருத்தை தந்துவிட்டேன்
வாய்ப்புக்கு நன்றி
வணக்கம்
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
நன்றி வணக்கம்.

 முற்றும் 

Image may contain: 1 person


Thursday, March 29, 2018

பரதேசியின் ஹைக்கூ கவிதைகள் / முயற்சிகள்


Image result for H1 B lottery
அமெரிக்க கனவு
அழிந்து போனது
ஹெச்1பி லாட்டரி!

கைக்கெட்டியது
வாய்க் கெட்டவில்லை
கான்சுலேட்டில் 221ஜி!

லாட்டரி கிடைத்தும்
அதிர்ஷ்டமில்லை
ஹெச்1பியில் ஆர்.எஃப் இ,!

பச்சை அட்டை
பலிக்குமா
புதிய அரசாங்கம்!

உடைக்கும் லேயர்
பிராஜெக்ட்டுக்கும்  லேயர்
நியூயார்க்!

இன்று வெள்ளைப்பனி ஆஹா
நாளை தொல்லைப்பனி சீச்சீ
பிளாக் ஐஸ் !

பாஸ்போர்ட் மாறலாம்
முகம் மாறுமா?
அமெரிக்க குடியுரிமை

காலையில் ஓட்மீல்
மாலையில் பாஸ்தா
இரவில் இளையராஜா



சுவர் கட்டுவேன்
பவர் காட்டுவேன்
ஒருநாள் மாட்டுவேன்

சப்வேயில் உட்கார இடம் ஆஹா
ஓடிப்போய் இடம்பிடித்தால்
ஓரத்தில் ஹோம்லஸ்

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் ஈமெயில்
அட்லீஸ்ட்  ஒரு வாட்ஸ் அப் மெசேஜ்

வேற்றுமையில் ஒற்றுமை
ஆளுக்கொரு சங்கம் அமைப்போம்
அமெரிக்கத் தமிழன்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே - திரை
அரங்கம் செல்வோம்
ரஜினி படம்.

சாதம் ஒரு வாரப் பழசு
சாம்பார் ஒரு மாதப்பழசு
அமெரிக்க ஃபிரிட்ஜ்

ஜாக்கிங் செல்வோம்
சைக்கிள் ஓட்டுவோம்
எல்லாமே ரூமுக்குள்.

அழுக்கு மூட்டை மீனாட்சி
மூஞ்சி கழுவி நாளாச்சு
பிராஜக்ட் டெலிவரி !

தமிழனும் தமிழனும்
ஒன்று சேர்ந்தால்
வேறு என்ன ஆங்கிலம்தான் !  


Thursday, February 8, 2018

பொங்கலும் செங்கலும் !!!!!


நியூயார்க்   தமிழ்ச்  சங்கத்தின் சார்பாக பொங்கல் விழா கடந்த பெப்ரவரி 3ஆம் தேதி  சிறப்பாக நடந்தேறியது .அதில் கவிஞர் சிவபாலன் தலைமையில்   நடந்த “கவிதை பாடு குயிலே” என்ற நிகழ்ச்சியில் அடியேன் தந்த கவிதையை(?) இங்கே உங்களுக்கு படிக்கத்தருகிறேன்

                                 Video Courtesy :  Mr Chinna Periasamy, NY
                                 Video Editing : Mr.Vish Cornelius , CA

பொங்கலும் செங்கலும் !!!!!
வணக்கம்
மூச்சுக் கொடுத்த ஆண்டவனுக்கும்
பேச்சுக்கொடுத்த தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த சபைக்கும்
வணக்கங்கள் பலப்பல.

தலைவர் வணக்கம் (கவிஞர் சிவபாலன்)
தேசம் கட்டுவதில் இவர்  ராசபரம்பரை ;ஆனால்
நேசம் காட்டுவதில்  இவர் பாசப்பரம்பரை
நியூயார்க்கின் கவிமகன்
பெயரில் சிவமகன் ( சிவபாலன் )
தமிழ்ச்சங்கத்தில் எனக்கு தலைமகன்
(அவர் செயலாளர் நான் இணைச்செயலாளர்)
இலங்கையின் திருமகன், அதற்கும் மேல்
இவர் தமிழ்நாட்டின் மருமகன்!
வணக்கம்

இந்தியாவில்,
பட்டங்கள் பல பெற்றிருந்தும்; உயர்
பதவியில் நிலைத்திருந்தும்
பஞ்சம் பிழைக்க அமெரிக்கா வந்த
பரதேசி நான்!

கேட்டைத் திறக்கும் வாட்ச்மேன்
காரைத் திறக்கும் டிரைவர்
சல்யூட் அடிக்கும் செக்யூரிட்டி
டிக்டேட் செய்ய செக்ரட்டரி  
அனைத்தையும் விட்டுவிட்டு
அமெரிக்கா வந்து என்னதான் கண்டேன்?

பண்டிகை வந்தால் ஒரு
பரவசம் இல்லை !




இந்தியாவில்
எந்த விழாவையும் என்
சொந்த விழாவாக கொண்டாடிய எனக்கு 
எந்த விழாவும் இங்கு
நொந்த விழாவாகத்தான் கழிந்தது.

தீபாவளிக்குப் பட்டாசில்லை
பட்சணமில்லை, பலகாரமுமில்லை
கொண்டாடுவதற்கு  லீவுமில்லை   

பட்சணமும் பட்டாசும் கேட்டால்  
வாட்சப்பில் அனுப்புகிறாள்  என்
வாழ்க்கைத்துணைவி
என்ன செய்ய?

தசராவுக்குக் கொலுவில்லை
தமிழுக்கும் மதிப்பில்லை
விஜயதசமியும் விட்டுப்போனது
சரஸ்வதி பூஜையும்
சடுதியில் மறந்தது.

அடுத்து வந்த
கிறிஸ்மசுக்கும் பலகாரமில்லை,
எங்கேடா அதிரசம்?
என்று கேட்டான்
என் நண்பன்

கொதிரசம் கூட கிடைக்காத இடத்தில்
அதிரசத்திற்கு எங்கே போவது  ?
என்றேன்
புத்தாடை கூட
புதைந்துபோனது
கொத்தாடைகளுக்குள் !!!! ( Layer dress due to cold weather)




நெய்முறுக்கு இல்லையென்றால்
கைமுறுக்காவது கொடு என்றால்
கையை முறுக்குகிறாள் என்
காதல் மனைவி !! 

அவள் கையை அல்ல
என் கையை
நெய்முருக்கும்
பொய்முருக்காய் போன
நிலைமை  என் தலைமை.

பொங்கலும் வந்தது
கரும்பு தேடி
கடையெல்லாம் அலைந்தும்
கடிக்க ஒரு துண்டு கூட
கண்ணில் படவில்லை.

என்னடா கொடுமை என்று
வெறும் கையுடன்
வீட்டுக்கு வந்து
சர்க்கரைப் பொங்கல் கிடைக்குமா? என்று
சன்னமாகக் கேட்டேன்

மெல்லிய குரலில் கேட்டாலே, கோபத்தில்
துள்ளி எழுவாள்  என்
துணைவி
இதில்
வல்லிய குரலில் கேட்டால் என்
வாழ்க்கை முடிந்துவிடாதோ?
அதனால் தான்
சர்க்கரைப் பொங்கல் கிடைக்குமா? என்று
சன்னமாகக் கேட்டேன்

வெல்லம் இல்லை என்றாள்  
செய்வதற்கு உனக்கு
உள்ளம் இல்லை என்று சொல் என்று
சத்தமாக ஆனால்
உள்ளத்திற்குள் மறுகினேன்
இல்லத்திற்குள் குறுகினேன்

பின்ன வெளிப்படையாகவா சொல்ல முடியும் ?
பொங்கல் தராவிட்டால்
பரவாயில்லை கோபத்தில்
பொங்கி எழுந்து
செங்கல்லோ
கருங்கல்லோ
எடுத்துவிட்டால்?
என் செய்வான் இந்தப் பரதேசி. 

அதன் பின்
லேட்டாய் வந்தாலும்
லேட்டஸ்ட்டாய் வந்தது
தமிழ்ச்சங்கம் நடத்துகிற
தைப்பொங்கல் விழா.

ஆஹா
வீட்டுக்குள் வந்தபோதே தமிழ்
நாட்டுக்குள் வந்ததுபோல் ஒரு ஜொலிப்பு
அரங்கத்துள் வந்தபோதே
அருந்தமிழ்த் தேன் பாய்ந்த ஒரு களிப்பு

பட்டுகள் அணிந்த
சிட்டுகள் எங்கும் !
சிறகுகள் முளைக்காத
சிறு தேவதைகள் தங்கும்!
ஓடியும் ஆடியும் பாடியும்
இங்கு மகிழ்ச்சி பொங்கும்

எல்லாவற்றிக்கும் மேல்
சர்க்கரைப் பொங்கலும் கிடைத்தது புதுச்
சக்தியும் எனக்கிங்கு கிடைத்தது. 

ஓரமாய் கரும்பையும் பார்த்தேன் அதில்
ஒரு சிறு பகுதி கிடைக்குமா என வேர்த்தேன்.


கரும்பைக்
கண்டு மகிழ்ந்தேன், ஒரு
துண்டு கிடைத்தால் அதை
உண்டு மகிழ்வேன்

திருவிழாக்கள் கொண்டாட ஆசையா? நியூயார்க்
தமிழ்ச் சங்க விழாக்களுக்கு வாருங்கள்
தரமான நிகழ்ச்சிகளைப் பாருங்கள்
உடனே உறுப்பினராய்ச் சேருங்கள்

உங்கள்
உள்ளக்கிடக்கைகளை
ஆண்டவனிடம் சொல்லவேண்டாம்
அரங்க நாதனிடம் சொல்லுங்கள்
ஏனெனில்
ஆண்டவனுக்கு முந்தி
அருள் பாலிப்பார் எம் தலைவன்
அரங்க நாதன். ஏனெனில்
அவர் புருஷர்களின் உத்தமன் ( அரங்கநாதன் புருஷோத்தமன் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்)
  
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.
ஆயிரம் மைல்கள்கடந்து வந்தாலும்  
அன்னைத்தமிழ் நம்மில் குறைவதில்லை.

தமிழால் இணைவோம்
தமிழால் மகிழ்வோம்.
பொங்கல் வாழ்த்துக்கள்
மீண்டும்
முத்தமிழ் விழாவாக  
முத்திரை பதிக்கும்
சித்திரை விழாவில் மீண்டும்
சந்திப்போம்
நன்றி
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய  பாரத மணித்திரு நாடு
வாழிய புகுந்த அமெரிக்க நாடும்

நன்றி வணக்கம் .