Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Monday, December 23, 2019


போர்க் குதிரையின்  சாகசங்கள் !
 பார்த்ததில் பிடித்தது.
வார் ஹார்ஸ் -2011

Image result for war horse movie

            சமீபத்தில் நெட்ஃபிலிக்சில் பார்த்த அருமையான ஒரு படம் இது. என்னுடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு என்னுடைய ரசனை பிடிபட்டிருக்கும். வரலாற்று சம்பந்தமான படங்கள், பீரியட் படங்கள், போர் பற்றிய படங்கள்/ ஸ்பை மற்றும் திரில்லர் படங்கள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை. எல்லாமே இதற்குள் அடங்கி விட்டது என்றே நினைக்காதீர்கள். இதனுள் அடங்காத எத்தனையோ உண்டு. ரொமான்ஸ், ஃபேண்டஸி, தற்காலிக டிராமா, ஹாரர், காமடி, குடும்ப சென்ட்டிமெண்ட் படங்கள் சுத்தமாக பிடிப்பதில்லை. அதனால் தான் தமிழ் படங்கள் பார்ப்பது நின்று போனது. எப்போதாவது கிரிட்டிக்கள் அக்கெளைம்ய்டு படங்கள் வந்தால் பார்ப்பது மட்டும் தான் தொடர்கிறது.
          மிருகங்களை வைத்து இராம நாராயணன் டைரக்ட் செய்து வெளிவந்த பல படங்களை சிறு வயதில் பார்த்து நொந்து நூலாகியிருக்கிறேன். ஆனால் வார் ஹார்ஸ் என்ற இந்தப் படம் அவற்றுள் மிக மாறுபட்டது. அதோடு இயக்கியது ஸ்டீபன் ஸ்பீல்பர்க் என்றால் பார்க்காமல் விடுவேனா? அதுவும் முதலாம் உலகப்போர் நடந்த சமயம் என்பது மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.
          வார் ஹார்ஸ் என்ற இந்தப்படம் 1982ல் மைக்கேல் மார்பர்கோ (Michael Morpurgo) என்பவர் இதே தலைப்பில் எழுதிய நாவலின் திரை வடிவம். டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ் இந்த நாவலைப் படமாக்கும் உரிமையை டிசம்பர் 2009ல் வாங்கியபின்  மே 2010ல் இதனை ஸ்பீல்பெர்க் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இவர் இரண்டாம் உலகப்போரின் பின்னனியில் நிறையப்படம் இயக்கியிருந்தாலும், முதலாம் உலகப் போரின் பின்னனியில் இயக்கிய முதற்படம்  இதுதான்.


          தேவான், இங்கிலாந்தில்  1912ல் பிறக்கும் இந்தக்குதிரை வளர்ந்து ஏலத்திற்கு வரும்போது டெட் நர்ரகாட்   என்ற விவசாயியும் அங்கே இருக்கிறார். தன்னுடைய நிலச் சொந்தக்காரரும் அங்கு வர ஏற்கனவே நல்ல உறவில் இல்லாத இருவருக்கும் போட்டி ஏறபட்டு அந்த விவசாயி அதிக விலை கொடுத்து அந்தக்  குதிரையை வாங்கி விட நேர்கிறது. மனைவியிடம் அதற்காக திட்டும் விழுகிறது. ஆனால் அவர்களுடைய ஒரே பையன் ஆல்பர்ட் அந்தக் குதிரையின் மேல் பிரியமாகி அதற்கு ஜோயி என்று பெயரிட்டு பராமரிக்கிறான். ஆனால் விவசாயத்தில்  நஷ்ட மடைந்த நர்ரகோட், போர் காலத்தில் குதிரையை விற்றுவிடுகிறார். ஆல்பர்ட் மனமுடைந்து போகிறான். அந்தக்குதிரை எங்கெல்லாம்  போய் போரிலிருந்து எப்படியெல்லாம் தப்பித்து மீண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஆல்பர்ட்டிடம் வந்து சேர்கிறது என்பது தான் கதை. மீதியை சின்னத்திரையில் காண்க.
          பீரியட் படம் அதுவும் வார் படம் என்பதால் ஏகப்பட்ட நடிகர்கள். லீட் கேரக்டரில் நடித்துள்ள அனைவரும் குறிப்பாக குதிரையும் அநாயசமாக நடித்திருக்கிறார்கள்.
66 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 178 மில்லியன் கல்லாக் கட்டியது.
          146 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் டச்ஸ்டோன் பிக்சர்ஸ், டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ், ரிலையன்ஸ் என்டர் டெய்ன் மென்ட்,  ஆம்பிலின்   என்டர் டெய்ன்மென்ட், தி கென்னடி/ மார்ஷல் கம்பெனி ஆகியோர் தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டூடியோ மோஷன் பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபுயூட் செய்ய கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25,  2011-ல் ரிலீஸ் செய்யப்பட்டது.
          லீ ஹால் மற்றும் ரிச்சர்ட் கர்ட்டிஸ், திரைக்கதை எழுத ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கியிருக்கிறார். ஜனுஸ் காமின்ஸ்கி ஒளிப்பதிவு செய்து, மைக்கேல் கான் எடிட் செய்திருக்க ஜான் வில்லியம்ஸ் இசையமைத்திருக்கிறார்.
எமிலி வாட்சன், டேவிட் தூலிஸ், பீட்டர் முலன் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள்.
           மூன்று மாதங்க்களுக்கு மேல் பயிற்சி கொடுக்கப்பட்டு 14 வெவ்வேறு குதிரைகளில் வெவ்வேறு பருவ வயதாக ஜோயி என்ற கேரக்டராக நடித்திருக்கின்றன. இது தவிர போரில் 280 குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் படத்தின் மேல் வெளிவந்த 218 விமர்சனங்களில் 76% இதனைப் பாராட்டித்தள்ளி விட்டன.
          ஸ்பீல்பெர்க் படமென்றாலே விருதுகளுக்குப் பஞ்சமிருக்குமா என்ன? அவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்.
         ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டது. ஆனால் வென்ற விருதுகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
1)   2011 அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் அவார்ட்ஸ் – 2011ன்  சிறந்த படம்.
2)   2012 BMI பிலிம் 2டி அவார்ட்ஸ் – சிறந்த இசையமைப்பு சிறந்த ஒளிப்பதிவு.
3)   59வது மோனன் செளன்ட் எடிட்டர்ஸ் கோல்டன் ரீல் அவார்ட்ஸ் – சிறந்த ஒலிக்கோர்வை
          பீரியட் பிலிம், வார் பிலிம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம்.

முற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய  கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.




Thursday, September 12, 2019

மறந்து போன மகாராஜா !!!!!!



பார்த்ததில் பிடித்தது.
தி பிளாக் பிரின்ஸ்
Image result for the black prince movie


          2017-ல் வெளிவந்த இந்தப்படம் நெட்ஃபிலிக்சில் காணக் கிடைத்தது. இந்தியாவின் கோதுமைக் களஞ்சியமான, ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப் பகுதியின் வரலாறு, மிகவும் சிறப்பானதொன்று.
          பஞ்சாப் என்றதும் முதலில்  நினைவுக்கு வருவது அதன் வீர வரலாறு மற்றும் குரு நானக்சிங் தோற்றுவித்த சீக்கிய மதம். இந்து மற்றும் முஸ்லிம் மதங்களின் நன்மைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த மதத்தைப் பின்பற்றும் சீக்கிய மக்கள் உலகமெங்கும் வாழ்கின்றனர். தலைநகர் அமிர்தசரசில் இருக்கும் தங்கக் கோவில், விடுதலைப்  போராட்டத்தில் கலந்து கொண்ட லாலா லஜபதி ராய், பகத் சிங் ஆகியோரை மறக்க முடியுமா?. ஜெனரல் டயாரல் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிகழ்வான ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய வரலாற்றின் மாறாத வடுவாகும்  . பிரிவினையில் பாதி பாகிஸ்தானுக்குப் போன சோகம், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் குஸ்வந்த்சிங் அவர் எழுதிய டிரைன் டு பாகிஸ்தான். பஞ்சாபின் தலைவர்களான, ஜெயில் சிங், சுர்ஜித்சிங் பர்னாவா மற்றும் சிறந்த பொருளாதார நிபுணரான, இருமுறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோர் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள்.  
Maharaja Ranjith Singh
          பஞ்சாப் வரலாற்றின் ஏட்டை  சற்றே பின்னால் புரட்டினால், பஞ்சாப்பை ஒருங்கிணைத்து ஆண்ட மகாராஜா ரஞ்சித்சிங் வருவார். அவருடைய பரந்து விரிந்த சாம்ராஜ்யம், பஞ்சாப் பகுதி மட்டுமல்லாமல் இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதோடு பிரிட்டிஷ்காரர்களால் அசைக்க முடியாத அளவுக்கு பலம் பொருந்தியவராய் இருந்தார். அவருடைய சாம்ராஜ்யம் அவரோடு ஆரம்பித்து அவரோடு முடிந்துபோனது. அவருக்குப்பின் நடந்த வாரிசுப்போட்டியில் பலபேர் அழிந்துபோக எஞ்சியிருந்த ஒரே மகனான மகாராஜா துலிப் சிங் அவருடைய அம்மாவான மகாராணி ஜின்டன் அவர்களின் பெரும் முயற்சியாலும் பிரிட்டிஷாரின் உதவியாலும் முடிசூட்டிக் கொண்டார். அப்போது அவர் ஐந்து வயதான சிறு குழந்தை. அந்த மகாராஜா துலிப்  சிங்கின் சோக வரலாறுதான் “தி பிளாக் பிரின்ஸ்” அவரைப்பற்றி வந்த புத்தகத்தின் விமர்சனத்தை அடியேன் முன்னொரு காலத்தில் பதிவிட்டிருக்கிறேன். 1849ல்  பிரிட்டிஷ் அரசு பஞ்சாபை தன்னுடைய பகுதியில் இணைத்துக்கொண்டு விவரம் தெரியாத  இளவரசனை பிரிட்டிஷ் மருத்துவரான Dr. ஜான் லாகின் என்பவரிடம் ஒப்படைத்தது.  அவருக்கு 15 வயதாகும் போது இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட போது அங்கு விக்டோரியா மகாராணியின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடமிருந்து ஏராளமான பொக்கிஷங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றன. அதில் மிக உயர்ந்த ஒன்றுதான் கோஷினூர் வைரம்.( https://paradesiatnewyork.blogspot.com/2015/03/blog-post_5.html )
அதிலிருந்து மகாராணிக்கு அந்த இளம் டூலீப் சிங்கிடம் ஒரு கரிசனம் ஏற்பட்டு அன்புடன் நடத்துகிறார். கிழக்கிந்திய கம்பெனியும் அவருக்கு எல்லா வசதிகளையும் செய்து தருகிறது. ஆனால் அவருடைய அம்மா மகாராணி ஜின்டன் இந்தியாவிலேயே வீட்டுச்கிறையில் வைக்கப்படுகிறார் Dr.ஜான்லாகினும் அவருடைய மனைவியும் மகாராஜா டூலீப் சிங்கை தங்கள் மகனாகவே வளர்க்கிறார்கள். ஆனாலும் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்ப முயற்சிக்க, அனுமதி மறுக்கப்படுகிறது.
Related image
Maharaja Duleep Singh
          மீதிக்கதையை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.   
          சத்தின்தர் சர்டாஜ், டுலீப் சிங்காவும், அமண்டா ரூட் விக்டோரியா மகாராணியாகவும் ஷபானா ஆஸ்மி மகாராணி ஜின்டாவாகவும் நடித்திருக்கிறார்கள் சத்தின்தருக்கு இதுதான் முதல் படம்.
          லாஸ்  ஏஞ்செல்சில் உள்ள ஹாலிவுட்டில் இருக்கும் இந்திய இயக்குநர் கவிராஸ் என்பவர் இயக்கியிருக்கிறார்.
          இந்தியாவிலும் இங்கிலாந்திலும் எடுக்கப்பட்ட இந்தப்படத்தை தயாரித்தவர்கள் பிரில்ஸ்டெய்ன் என்டர்டைன் மென்ட் பார்ட்னர்ஸ். இது ஒரே சமயத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எடுக்கப்பட்ட இருமொழிப்படம். பின்னர் பஞ்சாப் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டது. ஜார்ஜ் கல்விஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார்.
          உலகமெங்கிலும் வெளியிடப்பட்டு ஆறுலட்சத்து 33 ஆயிரம் டாலர்கள் வென்றெடுத்த இந்தப்படம், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் வரவேற்கப்பட்டது.
          பரபரப்பாக வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லும்போது மிகவும் மெதுவாகச் சொன்னது சிறிது சலிப்பூட்டியது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாய் அமைத்திருக்கலாம். என்பது என்னுடைய எண்ணம்.
          மற்றபடி இப்படி நம் நாட்டின் வரலாற்று நிகழ்வுகளையொட்டி எடுக்கப்படும் படங்களுக்கு நாம் ஆதரவு அளிப்பது முக்கியமென நினைக்கிறேன்.
          பஞ்சாப் குறிப்பாக மறந்துபோன மகாராஜா டூலிப் சிங்கைப்பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இதனை கொஞ்சம் பொறுமையோடு கண்டு ரசிக்கலாம்.
- முற்றும்.    

முக்கிய அறிவிப்பு :

நண்பர்களே விடுமுறைப்பயணமாக வரும் செப்டம்பர் 15 முதல் 29 வரை பிரான்ஸ் , ரோம் , மற்றும் இத்தாலியில் உள்ள பாரிஸ், ரோம், வாடிகன், பிளாரென்ஸ் , பைசா , வெனிஸ் ஆகிய நகரங்களுக்கு செல்கிறேன்.அதனால்  பதிவுகள் இரண்டு  வாரங்களுக்கு  வராது .இந்த நகரங்களில்  வாழும் தமிழ் மக்கள் , நண்பர்கள் ஈமெயிலில்  தொடர்பு கொண்டால் சந்திக்கலாம் , நன்றி .
alfred_rajsek@yahoo.com 

Thursday, April 18, 2019

கிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி !!!!!!!!!



பார்த்ததில் பிடித்தது.
சிட்டகாங்
Image result for Chittagong movie

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய நாடெங்கிலும் பலவிதமான கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றுள் சில அமைப்பு சார்ந்தவை பல தன்னிச்சையாக எழுந்த கிளர்ச்சிகள். அப்படி நடந்த பல போராட்டங்கள் பலருக்கும் தெரியாது. குறிப்பாக தென்னிந்தியாவின் வாஞ்சி நாதனையும், திருப்பூர் குமரனையும் வட இந்தியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோல் சிட்டகாங் என்னுமிடத்தில் நடந்த மாபெரும் எதிர்ப்பு நிகழ்ச்சிதான் இந்த திரைப்படம். நெட் பிலிக்சில் இருப்பதால் எனக்குப் பார்க்க கிடைத்தது. அந்த சிட்டகாங் எனும் ஊர் இப்போது பங்களாதேசத்தில் இருக்கிறது.
2012ல் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றி நான் இதற்கு முன் கேள்விப்படவில்லை. படத்தின் நிகழ்வைப் பற்றியும் எனக்கு முன்னால் தெரியாது.
இது 1930ல் கிழக்கு வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த கிளர்ச்சி அல்லது போர் என்று கூட சொல்லலாம்.
Image result for Surya sen of Chittagong

ஒரு பள்ளிக் கூட ஆசிரியரான சூரியா சென் என்பவரின் தலைமையில் 50 பள்ளி மாணவர்கள் ஏற்படுத்திய கிளர்ச்சி இது. சிட்டகாங் நகரின் ஒரு இரவில் இவர்கள் போய் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றி அதிலிருந்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து ஒரு சிறு ராணுவம் போல் செயல்படுகிறார்கள். கைப்பற்றியதோடு அங்கே இந்திய தேசியக் கொடியை ஏற்றி விடுதலையைக் கொண்டாடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த மெஷின் துப்பாக்கிகள் ஆயுதக் கிடங்கில் இல்லை. அடுத்த நாளே கல்கத்தாவிலிருந்து பெரும் படை வந்தது. எனவே இவர்கள் தப்பியோடி காட்டுக்குச் சென்று அரணமைத்தார்கள்.
உயரமான இடத்தில் இருந்ததால் முன்னேறி வந்த முதலாவது படைப் பிரிவை அவர்கள் துவம்சம் செய்ய முடிந்தது. ஆனால் அடுத்தடுத்த படைகள் வரவர தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் தங்கள் மாணவர் படையைக் கலைத்துவிட்டுப் பிரிந்து சென்று தலைமறைவாகினர். ஆனால் 14 வயதான ஜின்கு என்பவன் பிடிபடுகிறான். ஆனால் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்டாலும் அவன் மற்றவர்களை காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இறுதியில் பிடிபட்ட சிலரோடு அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறான்.
Related image
Add caption
23 வயதில் வெளியே வந்தாலும் திரும்பவும் புரட்சியில் ஈடுபடுகிறான். மாணவர்களின் எழுச்சி அவர்களை வழி நடத்திய ஆசிரியர் ஆகியோர் இணைந்து செய்த இந்தப் புரட்சி ஆங்கிலேயரை அச்சப்பட வைத்தது. இப்படி பல அடிகள் அங்குமிங்கும் எங்கும் பட்டதால்தான் இறுதியில் சுதந்திரம் தர சம்மதித்தார்கள். எந்த இடத்திலும் செயற்கைத்தன்மை தெரியாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தவர் பேடபிரட்டா பெயன் (Bedabrata Pain) என்பவர். இவரோடு கூட இருந்து கதையை எழுதியவர் ஷோனாலி போஸ். சூரியா சென்னாக மிகைபடுத்தாத நடிப்பை வெளிப்படுத்தியவர் மனோஜ் பாஜ்பயி.
Image result for manoj bajpai
Manoj Bajpayee 
2012ல் வெளிவந்த இந்தப்படம் ஒரே சமயத்தில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரு பீரியட் படத்திற்குத் தேவையான இசையை அமைத்தவர்கள் சங்கர் ஈஷன் லாய். இதில் சங்கர் என்பவர் நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவரான சங்கர் மகாதேவன்தான்.
அருமையான ஒளிப்பதிவைக் கொடுத்தவர் எரிக் ஜிம்மர் மேன் என்பவர்.
உலகத்திலேயே மிகச்சிறிய வயதில் புரட்சி செய்த ஜின்கு (14 வயது) வாக நடித்த பையன் சுபோத் ராய் என்பவன்.
திரையிடப்பட்டு நன்கு வரவேற்கப்பட்ட இந்தப்படம் பல திரைப்பட விருதுகளை அள்ளியது. அறுபதாவது தேசிய திரைப்பட விழாவில் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றது.
சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது பேடபிரட்டா பெயினுக்குக் கிடைத்தது. மேலும் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது சங்கர் மகாதேவனுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது பிரசூன் ஜோசிக்கும் கிடைத்தது.
ரூபாய் 45 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறை அறிய ஆவலுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.   
முற்றும்

Thursday, March 14, 2019

பிலிப்பைன்சை ஆக்கிரமிக்க போட்டிபோட்ட ஸ்பெயினும் அமெரிக்காவும் !!!!!!


பார்த்ததில் பிடித்தது

1898 அவர் லாஸ்ட் மென் இன் தி பிலிப்பைன்ஸ் (1898 Our Last Men in the Philippines)         

                     
          பிலிப்பைன்ஸ் தேசம் நூறாண்டுகள் ஸ்பெயினிடம் அடிமைப்பட்டு இருந்தது. இங்கிலாந்துக்கு அடுத்த படியாக அதிக காலனிகளைக் கொண்டது ஸ்பெயின். அமெரிக்கா, கனடா தவிர பல வட அமெரிக்க தென் அமெரிக்க நாடுகளை ஸ்பெயின் பிடித்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது. அந்த ஸ்பானிய கலோனிய ஆட்சியை எதிர்த்து பிலிப்பைன்சின் புரட்சிப்படை 1896ல் தன் கலகத்தை ஆரம்பித்தது.  
          போர்ட்டரிக்கோவை ஆக்கிரமித்திருந்த ஸ்பானிய ஆட்சியை முறியடித்து அமெரிக்கா அதனைப் பிடித்துக் கொண்டது. எனவே ஸ்பானிய அமெரிக்க சண்டை ஆரம்பித்தது. பிலிப்பைன்சிலும் அமெரிக்கப்படை, ஸ்பானிய ஆதிக்கத்தை எதிர்க்க, பிலிப்பைன்சின் புரட்சிப் படை அமெரிக்கப் படையோடு கைகோர்த்தது. இந்தக் கூட்டு எதிர்ப்பை சமாளிக்க முடியாத ஸ்பெயின் 1897ல் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டது. இதற்கு முன்னர் சண்டை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது புரட்சிப் படைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க லூட்டினன்ட் யோசே மோட்டாவின் தலைமையில் 50 காசோடர்களை பேலர் என்ற இடத்திற்கு அனுப்பியது. இது நடந்தது செப்டம்பர் 1897ல்.
Add caption
          பேலர் என்ற இந்த இடம் லஜான் என்ற இடத்தின் கிழக்குக் கடற்கரையில் மணிலாவிலிருந்து சுமார் 225 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை நகரம். இந்த நகரத்தை கடல்வழி அணுகுவதுதான் சுலபம். நிலவழி மிகவும் ஆபத்தான காடுகள் சூழ்ந்த பகுதி. 
          இந்த 50 பேர் கண்காணிப்புத் தளங்கள் அமைத்து அந்த வழியே யாரும் புகுந்துவிடாதபடி பாதுகாத்தார்கள். ஆனால் அக்டோபரில் அவர்களுடைய நிலைகள் புரட்சிப்படையால் தாக்கப்பட்டு அதில் லூட்டினன்ட் மோட்டா உட்பட ஏழுபேர் உயிரிழக்க, பலபேர் காயமுற்றனர்.
          பின் வாங்கிய மீதப்பேர்  பாலரில் இருந்த ஒரு கத்தோலிக்க ஆலயத்தில் நுழைந்து அதையே கோட்டைபோல் அமைத்துக் கொண்டனர். சுற்றிலும் குழி வெட்டி அரணமைத்து இரவும் பகலும் விழிப்புடன் காவல் காத்தனர். புரட்சிப் படை அவர்களை முற்றுகையிட்டது. இது ஜூலை 1  1898ல் ஆரம்பித்து ஜூன் 1899 வரை ஒரு வருடகாலம் நீடித்தது.
          ஸ்பானிய படை அமெரிக்கப்படையுடன் சமாதானம் செய்து கொண்டு தன் படைகளை பிலிப்பைன் நாட்டிலிருந்து விலக்கிக் கொண்டனர். புரட்சிப் படைகளுக்கு உதவி செய்ய வந்த அமெரிக்கப்படை பிலிப்பைன் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டது. அதனால் பிலிப்பைன் நாட்டுப் புரட்சிப் படைக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கும் சண்டை ஆரம்பித்தது.
          இது எதுவுமே தெரியாமல் வெளியுலகிலிருந்து முற்றிலுமாக வெட்டப்பட்ட நிலையில் பாலரில் உள்ளே ஸ்பானியர் இருந்தனர்.
          பலமுறை பல பேர் எடுத்துச் சொல்லியும், பத்திரிகைகளை அனுப்பியும், உள்ளே நோயால் உணவின்மையால் வாடி பலபேர் மடிந்தும் சரணடையாமல், எஞ்சிய ஸ்பானியப் படை உள்ளே தாக்குப் பிடித்தது. ஏனென்றால் உள்ளே பொறுப்பில் இருந்த மார்ட்டின் செரெசோ (Martin Cerezo) எதையும் நம்பத்தயாரில்லை.  ஒரு கட்டத்தில் உணவு சேமிப்பும் தீர்ந்துவிட ஆலய வளாகத்தில் பயிரிட்டுக்கிடைக்கும், பூசணிக்காய், இலை, ஆரஞ்சுகள், வாழைத்தண்டு, பெப்பர், தக்காளி ஆகியவற்றை உண்டு சமாளித்தனர். அதன்பின் அதுவும் முடிந்து போய் நீர் எருமைகளைக் கொன்று சாப்பிட்டனர். தோலை காலணி யாக்கிப் பயன்படுத்தினர். பின்னர், தெருநாய்கள், பூனைகள், ஊர்வன காக்கைகள் ஆகியவற்றையும் உண்ண ஆரம்பித்தனர்.
Martin Cerezo)
          கடைசியில் மார்ட்டினின் நெருங்கிய நண்பன் பத்திரிக்கையில் கொடுத்த  விளம்பரத்தைப் பார்த்துத்தான் சரணடைய ஒப்புக் கொண்டான். ஆலயத்தில் நுழைந்த போது 50 பேர் இருந்தனர். 11 மாத முற்றுகையில் 14 பேர் வியாதியால் இறந்தனர். 2 பேர் காயங்களால் இறந்தனர். நான்கு பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அதில் 2 பேர் பிடிக்கப்பட்டு எதிர் அணிக்கு உதவியதால் உள்ளேயே தூக்கிலிடப்பட்டார்கள். வெளியே வரும்போது 30 பேர் தன் இருந்தனர்.
          அப்போதிருந்த பிலிப்பைன் நாட்டின் முதல் ஜெனரல் எமிலியோ அகினல்டோ அவர்களை குற்றவாளிகளாகக் கருதாமல் நண்பர்களாக கருதவேண்டும் என்று சொன்னதால் அவர்கள் வெளியே வரும்போது மரியாதை செலுத்தப்பட்டது.
          மூன்று மாதம் கழித்து அவர்கள் பார்செலோனா வந்து சேர்ந்தபோது வெற்றி வீரர்களாக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மார்ட்டின் இதனை புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம்தான் இது. 2016 டிசம்பரில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் அலெயாண்ரோ ஹெர்னன்டலே, இயக்கியவர் சால்வடோர் கேல்வோ. மார்டினாக லுயிஸ் டோசர் அற்புதமாக நடித்திருக்கிறார்.
பீரியட் சினிமாக்கள் மற்றும் வரலாற்றை ரசிப்பவர்களுக்கு இந்த ஸ்பானிய மொழித் திரைப்படம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-முற்றும்.


Thursday, February 7, 2019

தீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் !!!!!!!!!


பார்த்ததில் பிடித்தது   
 ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்
            First they killed my Father

          
நெட் பிலிக்சில்  கிடைத்த  இன்னொரு அற்புதப்படம் இது. அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் முடிவில்லாத உக்கிரப் போர் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாப்போரை எந்த ராணுவம் வெல்ல முடியும்? இருபுறமும் கடுமையான சேதம். அதே சமயத்தில் பக்கத்து நாடான கம்போடியாவில் ஒரு கம்யூனிய தீவிரவாத இயக்கமான கெமர் ரூஜ்-ன் (Khmer Rouge) போல் பாட்டின் (Pol pot)  படைகள் நாட்டை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்தனர். கம்போடியாவின் ஜனநாயக அரசுக்குச்சாதகமாக அமெரிக்க ராணுவம் உதவிவந்தது.
Pol Pot
          இதற்கிடையில் வியட்நாமின் போரை நிறுத்த அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடத்த இந்த முடிவில்லாத போரை அப்போது அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன்  நிறுத்தி ராணுவத்தை தாய் நாட்டுக்கு வரவழைத்தார். அதே சமயத்தில் கம்போடியாவில் இருந்த அமெரிக்கப்படையும் வாபஸ் பெற்றதோடு தன்னுடைய கான்சுலேட்டையும் காலி செய்தது.
Loung ung
          அதன்பின் அரசுப் படைகள், கெமர் ரூஜின் தாக்குதலுக்கு தாக்குப்  பிடிக்க முடியாது ஒளிந்து ஓடினர். இது நடந்தது 1975ல். இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட ஐந்துவயது இளம் பெண் தான் பட்ட கஷ்டங்களை பின்னாளில் 2000ல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.  அவர் பெயர் லுங் உங் (Loung ung) அப்புத்தகத்தின் பெயர்தான் "First they killed my Father?" அந்தக் கதைதான் 2017ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

          தீவிரவாதிகளின் ராணுவம் ஃபுனோம் பென் (Phnom Penh) என்ற கம்போடியாவின் தலை நகரில் நுழைவதிலிருந்து படம் துவங்குகிறது. அந்த ஐந்து வயதுச் சிறுமி கம்போடிய அரசின் ராணுவ உயர் அதிகாரியான ஒருவரின் ஐந்து குழந்தைகளின் கடைசிக் குழந்தை. ராணுவ கேப்டன் என்பதால் தீவிரவாத ராணுவம் நிச்சயம் சுட்டுக் கொன்றுவிடும் என்பதால் தன் அடையாளங்களையும் பாஸ்போர்ட்டையும் நீக்கிவிடுகிறான்.
          தீவிரவாத ராணுவம், யாரும் நகருள் வாழக்கூடாது எல்லோருக்கும் பொதுவான விவசாயத்தில் ஈடுபட்டு பலனை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற நினைப்பில் நகர் வாழ் மக்கள் அனைவரையும் வெளியேற்றுகிறார்கள். தங்கள் சொத்து  சுகமிழந்த மக்கள் அப்படியே நடந்தே வெளியேறுகிறார்கள். போகிற வழியிலேயே பசியினாலும் தொத்து வியாதியாலும் பலர் இறந்துவிடுகின்றனர். ஒரு முகாமில் அடைக்கப்படும் அவர்கள், பகலில் கடுமையான வேலை செய்தாலும் சரியான உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஏனென்றால் விளைச்சல் முழுவதும் தீவிரவாதிகளின் படைகளுக்கே சென்று விடுகின்றன.
          முகாமில் எப்படியோ தந்தையைப் பற்றி அறிந்து கொண்ட தீவிரவாதிகள் அவரைக் கொன்றுவிடுகின்றனர். மற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற அவளின் தாய் முடிவெடுத்து அவர்களை வெவ்வேறு திசைகளில் அனுப்பிவிடுகிறாள். அதில் 5 வயதுப் பெண்ணாகிய அவளும் 9 வயது பெண்ணான அவள் அக்காவையும் படையில் சேர்த்து கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.
          இறுதியில் மீண்டும் வியட்நாம் ராணுவம் உள்ளே நுழைந்து தீவிரவாத இயக்கத்துடன் போர் புரிகிறது. அதற்குள் கெமர் ரூஜ் இயக்கத்தின் தவறான கொள்கைகளால் 20  லட்சம் பேர் மடிந்து போயினர். இதில் யார் யார் தப்பித்தார்கள்? இந்தக் குழந்தை எப்படித்தப்பித்தது? தன்னுடைய சகோதர சகோதரர்களை கண்டுபிடித்ததா என்பதை சின்னத்திரையில் காண்க.

          இதனை இயக்கியது ஏஞ்சலினா ஜோலி என்ற ஏஞ்சல் என்பது படம் முடிந்து வந்த டைட்டிலைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இது நெட்பிலிக்சின் ஒரிஜினல் படம். கம்போடிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் ஏஞ்சலினா கம்போடிய நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்திருக்கிறார். அதோடு இந்தச் சமயத்தில் சிக்கி உயிர் பிழைத்த பலரையும் அவர்களுடைய குழந்தைகளையும் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கம்போடியாவில் ரிலீஸ் செய்யப்பட இந்தப்படம் மிகவும்  தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் திரைப்படமா அல்லது டாக்குமென்டரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படம் இருக்கிறது.

          குறிப்பாக அந்த ஐந்து வயதுக் குழந்தையாக நடித்த பெண் தன் உணர்ச்சிகளை இயல்பாகப் காட்டி லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கிறார். அந்தக் குழந்தைக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்
-முற்றும்.
முக்கிய அறிவிப்பு: 

அலுவலகப்  பணி நிமித்தமாக மெக்ஸிகோவில் உள்ள குவடாலாஹாராவுக்கு  செல்வதால் வரும் வாரத்தில் (பெப்ருவரி 9 முதல் 16 வரை )  பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின்  தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Tuesday, February 5, 2019

சிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி !!!!



இளையராஜா 75 பிறந்த நாள் சிறப்புப் பதிவு
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 42
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

          இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
https://paradesiatnewyork.blogspot.com/2018/12/blog-post.html

பட்டாக்கத்தி பைரவன் (LOL) என்ற படத்திற்காக 1979ல் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.
நடிகர் திலகம் நடித்து வெளிவந்த இந்தப் பாடலில் அவர் டூயட் பாடி நடித்த இந்தப்பாடலைக் கேளுங்கள்.

 நடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்ததுதான். அவருடைய பழைய படங்களை ஒரு காலத்தில் தேடித் தேடி போய் பார்த்து அழுதுவிட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் நீண்ட காலத்திற்குப்பிறகு இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் போது அதுவும் டூயட் பாடலைப் பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது. ஆனால் பாடல் மிகவும் காதுக்கினிய மெல்லிசைப் பாடல்.
இசையமைப்பு:

பாடலின் முன்னிசையாக கிடாரின் நிரடலில் இசையால் பேச ஆரம்பிக்கிறார்  இளையராஜா. அந்த பாஷை விளங்காத ஓசையில் ஒளிந்து  கண்களை மூடிக் கேட்டால், வயலின் குழுமம் அப்படியே ஆர்ப்பரித்து, ஆரவாரித்து இசைக்க, புல்லாங்குழல் இசை வந்து தழுவிச் செல்ல, டிரம்ஸ் இசை கூட்ட, ஆண்குரலில் "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”. பல்லவி இனிதே முடிந்து முதல் BGM ல்  வயலினும், கீபோர்டும் கேள்விகேட்டு பதில் சொல்லி களைத்துப் போன ஒரு நொடியில் பெண்குரலில் "ஹா என்ற ஹம்மிங்குடன் தொடங்கி "நான் காண்பது" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது  BGM -ல் கீபோர்டு, வயலின், கிடார், புல்லாங்குழல் ஆகியவை புதுமையாக இணைந்து விளையாட, திறமையான இசைக் கலைஞர்கள் உட்கார்ந்து ஜாம் செய்து முடிக்க இரண்டாவது சரணம் முடிய ஆண்குரலில் அதே ஹம்மிங்குடன் ஆரம்பித்து, “கல்லானவன்”, என்று ஆரம்பித்து மறுபடியும் பல்லவி பாடி பாடல் நிறைவு பெறுகிறது. ரயில் பயணம், பைக் அல்லது சைக்கிள் பயணம், அல்லது ஜாக்கிங் ஆகியவற்றின் போது பாடுவதற்குப் பொருத்தமான பாடல் இது.
            இந்தப் பாடலைக் கேட்கும்போது இளையராஜாவின் இன்னொரு பாடலான "ஓ மானே மானே மானே உன்னைத்தானே", என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்பல்லவியையும் அந்தப் பாடலின் சரணத்தையும் சேர்த்து பாடிப்பாருங்கள். அப்படியே பொருந்தும். இப்படி இளையராஜா இசையில் நிறைய இரட்டைப் பாடல்கள் இருக்கின்றன. இளையராஜாவின் பாடலில் அவருடைய சொந்தப் பாடல்களின் சாயல் தெரிவதில் வியப்பேதுமில்லை. விவகாரம் என்பது மற்றவரின் பாடலின் சாயலில் தெரிந்தால்தானே.
பாடலின் வரிகள்:
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே..

ஹா
நான் காண்பது....உன் கோலமே
அங்கும்...
இங்கும்....
எங்கும்....!
என் நெஞ்சிலே.... உன் எண்ணமே
அன்றும்....
இன்றும்....
என்றும்...
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ....நீ......நீ......!


ஹா
கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்...
நீ.....
நாம்..
            

     
       பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கவிஞரின்  பொன்வரிகள் என்று ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் பாடலின் சந்தத்திற்கு எழுதுவதில் அவருக்கு இணை அவரே. வரிகள் முழுவதும் அப்படியே இசையில் உட்கார்கின்றன. "கண்ணே உன்னை எண்ணி கல்லானவன் பூவாகிறேன்" என்று சொன்னதில் கவிஞர் எட்டிப்பார்க்கிறார். அதே போல் “பூவாசமும் பொன் மஞ்சமும்”, என்று சொல்லும்போது திருமணததையும் முதலிரவையும் சுட்டிக்காட்டும்போது ஆஹா இது கண்ணதாசன் என்று தோன்றுகிறது.
பாடலைப்பாடியவர்கள்:

SPB with Ilayaraja 
சிவாஜிக்கு SPB பாலுவின் குரலும் நன்றாகவே இருக்கிறது. SPB க்கு ஜோடியாக ஜானகி கேட்கவே வேண்டாம். இருவரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். இது ஒரு மாதிரியான எதிரொலிப்பாடல் என்பதால் பாடுவது கொஞ்சம் சிரமம். ஆனால் இருவருமே அநாயசமாக பாடி அசத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் புதிது புதிதான முயற்சியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.
இளையராஜா இசையால் ( மட்டும்) இன்னும் அதிகம் பேசவேண்டும் என விரும்பும் ஒரு ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
தொடரும்

Thursday, November 29, 2018

ஈராக் போர் பற்றிய திரைப்படம் மணல் கோட்டை


பார்த்ததில் பிடித்தது
சேன்ட் கேஸில்
Sand Castle 2017 poster.jpg
"மனக்கோட்டை கட்டாதே" என்று சொற்றொடரை பலமுறை கேட்டிருக்கின்றேன். "மணல் கோட்டை நிற்காது" என்று சொல்வதையும் கவனித்திருக்கிறோம். Sand Castle அதாவது "மணற் கோட்டை" என்ற பெயர் கொண்ட இந்தத்திரைப்படம் என் ஆர்வத்தைத் தூண்டியதால் நெட்பிலிக்சில் இதனை சமீபத்தில் பார்த்தேன்.
எனக்குப் பிடித்த திரைப்படங்கள்  மற்றும் புதினங்களில் முதலிடம் பிடித்திருப்பது வரலாறு, மற்றும் வரலாற்றைத் தழுவிய நவீனங்கள். இரண்டாவது இடம் பீரியட் படங்கள் மற்றும் வார் மூவீஸ் என்றழைக்கப்படும் போர் சார்ந்து எடுக்கப்பட்டவை. மூன்றாவது வகையில் திரில்லர் என்று சொல்லப்படும் திகில் கதைகள் (பேய்ப்படங்களைத் தவிர்த்து). இதுதவிர, காதல், சென்டடிமென்ட் என்று வேறு எதையும் எனக்குப் பிடிப்பதில்லை. ஏலேய் (பரதேசி உனக்கு வயசாகிப் போச்சுடோய்) அதனால்தானோ என்னவோ எந்தத் தமிழ்ப் படத்தையும் என்னால் முழுதாகப்பார்க்க முடியாமல் 5-10 நிமிடங்களில் “தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே" என்ற நிலைக்குப் போய் விடுகிறேன். ஒன்றிரண்டு படங்கள் விதிவிலக்கு.
அப்படிப் பார்த்த ஒரு படம் தான் Sand Castle. ஈராக்கில் நடந்த யுத்தத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையும் கருத்து வேறுபாடுகளும் உண்டு. அமெரிக்காவுக்கு இது தேவையில்லாத வேலை என்று பலர் சொல்லலாம். நான் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் ஈராக்கில் அமைதி திரும்புவதற்காக பல அமெரிக்க வீரர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வை எடுத்துக்காட்டுவதே இந்தப்படம்.
தன்னுடைய படிப்புக்குப் பணம் தேவைப்படுவதால் ஆர்மி ரிசர்வில் சேர்ந்த மேட் என்ற ஒருவனை மையப்புள்ளியாக வைத்து திரைப்படம் ஆரம்பிக்கிறது. இவனுக்கு ஒரு வருமானம் தேவைப்பட்டது. ஆனால் போர்முனைக்குச் செல்வதில் விருப்பமில்லை ஏனென்றால் உயிர் மீது பயம். தலையில் தானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டும், கையில் கட்டுப் போட்டுக் கொண்டு நடித்து போர் முனைக்குப்  போவதில் இருந்து விலக்குப் பெற முயன்றும் ஒன்றும் உதவவில்லை. அவன் எங்கே போக மிகவும் பயந்தானோ அங்கேயே அதாவது ஈராக்கின் தலைநகர் பாக்தாத்துக்கு  அனுப்பப்பட்டான். வந்து இறங்கியவுடனே யுத்தத்தின் நடுவில் மாட்டிக் கொண்டு ஆனால் தப்பித்துவிடுகிறான்.
சில நாட்கள் கழித்து பாக்குபா என்ற ஊருக்கு இவனுடைய குழு அனுப்பப்படுகிறது. அங்கே சமீபத்தில் நடந்த போரில்  ஊரின் தண்ணீர் டேங்க் உடைந்துவிட அந்தப் பாலைவன ஊர் நீரில்லாமல் தவித்து வந்தது. பொதுமக்களிடம் நற்பெயரைப் பெற, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒரு குழுவை அங்கே அனுப்பினார்கள். அங்கே இயங்கிய ஒரு இஞ்சினியர் குழுவோடு வேலை செய்வதும் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதும் இவர்களின் வேலை. அதோடு அங்கிருந்த நீரை லாரி டேங்க்களில் நிரப்பி பக்கத்து ஊருக்கு குடிநீரும் வழங்க வேண்டும்.
இவர்கள் முயற்சியை தடுக்க நினைத்த உள்ளூர் தீவிரவாதிகளின் தொல்லை ஒருபுறம். ஊரிலிருந்து இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களை அவர்கள் கொல்ல இந்தப்பணி மேலும் கடினமாகிறது.
பின்னர் இதையெல்லாம் எப்படி சமாளித்தாள், நீர் டேங்கை சரி பண்ண முடிந்ததா? எவ்வளவு உயிர்பலி நடந்தது? கதாநாயகன் தப்பித்தானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் காண்க.
Image result for chris roessner
Chris Roessner
ஏப்ரல் 2017-ல் நெட்பிலிக்சில்  வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியவர் ஃபெர்னான்டோ   கொய்ம்பரா (Fernando Coimbra). எழுதியவர் கிறிஸ் ரோஸ்னர் (Chris Roessner) ,அருமையான இசையைக் கொடுத்தவர் ஆடம் பீட்டர்ஸ். 
A young, Caucasian man with short, dark hair and facial stubble wearing a black shirt speaks into a microphone against a grey and blue background.
Nicholas  Hoult
அப்பாவி சோல்ஜராக நிக்கலஸ் ஹொல்ட் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய சார்ஜன்ட்டாக கிளன் பாவல் நடித்திருக்கிறார்.. இது தவிர லோகன் மார்ஷல் கிரீன் மற்றும் ஹென்ரி காவில்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இதில் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இதை எழுதிய கிரிஸ் ராஸ்னர் அவர்களின் சொந்த அனுபவம் இது. ஆமாம் அவர் ஈராக் போரின் போது அங்கிருந்த ஒரு கிராமத்திற்கு நீர் கொடுக்கும் விதத்தில் ஈடுபட்ட நடந்த நிகழ்வுகளை எழுத அந்த தனிப்பட்ட அனுபவம் தான் இந்தப் படத்தின் கருவாக அமைந்தது.
பெரிதாக பாராட்டப்படவில்லை யென்றாலும்  இதுபோல் போர் சம்பந்தப்பட்ட (War movie)  திரைப்படங்களில் ஆர்வமுள்ளவர்களும், போரின் போது ஈராக்கில் நடந்த உண்மை நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் இதனைப் பார்க்கலாம்.
முற்றும்

முக்கிய அறிவுப்பு :

கீர்த்தனை பாடும்  நிகழ்ச்சிக்காக மூன்று நாள் பயணமாக கனடா செல்கிறேன் .கனடா நண்பர்கள் வாருங்களேன் சந்திக்கலாம் .