Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Tuesday, May 26, 2020

பஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் !



எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 44
வா பொன் மயிலே

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்


RAJA CHINNA RAJA POONTHALIRE INBAKANIYE - Lyrics and Music by ...
Add caption
1979ல் வெளிவந்த பூந்தளிர் என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து புகழ் பெற்ற பாடல் இது.  இது பாடலைக் கேளுங்கள்.


பாடலின் பின்னனி:

காதல் கொண்ட இளைஞன் காதலின் மயக்கத்திலும், ஏக்கத்திலும் காதலியை வர்ணித்துப்பாடும் பாடல் இது. சினிமாப்பாடல்களில் அந்தக்காலக்கட்டத்தில் இதைத் தவிர்க்கமுடியுமா ?

இசையமைப்பு:

எழுபதுகளில் வந்த இளையராஜாவின் இசையமைப்பில் உதித்த மெல்லிசை மெலடி பாடல் இது என்று சொல்லலாம். பெல்ஸ், டிரம்ஸ், புல்லாங்குழல் ஆகியவை ஒரு வெஸ்டர்ன் அமைப்பில் ஒலிக்க, டிரம்ஸில் கெட்டிலில் பிரஸ் வைத்து ஒரு ஜாஸ் இசை போல ஆரம்பித்து முடிய, பாடல் ஆண்குரலில் "வா பொன்மயிலே" என்று ஆரம்பிக்கிறது. அப்போது தபேலா சேர்ந்து கொள்ளும் போதுதான் ஆஹா இது இளையராஜா என்று பொறி தட்டுகிறது. பல்லவி இரண்டாம் முறை ஒலிக்கும் போதுதான் கிராண்ட் வயலின் குழுமம் சேர்ந்து கொண்டு வரிகளுக்குப் பதில் சொல்வது போல் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் ஒலித்து பாடலை ரிச் ஆக்குகிறது. முதல் பிஜிஎம்மில் வயலின் குழுமம், புல்லாங்குழல், டிரம்ஸ் ஆகியவை ஒலித்து முடிய சரணத்தில் தபேலே சேர்ந்து கொள்கிறது. 2ஆவது பிஜிஎம்மில் கீபோர்டு வயலின் பெல்ஸ் ஒலித்து முடிக்க 2-ஆவது சரணத்திலும் தபேலா வந்து வேறுபடுத்திக் காண்பிப்பது இளையராஜாவின் பிரதான ஸ்டைல். இதுவே MSV காலத்திலும் இருந்தது.
பாடலின் வரிகள்:
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ
பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ
அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Panchu Arunachalam with Ilayaraja
பாடலை எழுதியவர் மறைந்த பஞ்சு அருணாசலம் அவர்கள். பாடலை எழுதும்போது அவருக்கு என்ன வயது என்று தெரியவில்லை. ஆனால் உணர்வுகளுக்கும் கற்பனைக்கும், கவிதைக்கும்,காதலுக்கும் வயது ஒரு தடையில்லை   அல்லவா. அட அடா நம் கவிஞர்கள் தான் பெண்களை மானென்றும் மயிலென்றும் எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள். இந்தக் காரியத்தில் இவர்களுக்கு தயக்கமுமில்லை, அலுப்புமில்லை, எப்போதும் ஒருவித மயக்கம்தான். இங்கு வெறும் மயில் கூட இல்லை. பொன் மயில் என்று கூறுகிறார். நிறத்தைச் சொல்கிறார். நம் ஆண்களுக்குத்தான் சிவப்பு அல்லது பொன்னிறம் என்றால் பெரும் கிரக்கமயிற்றே. அதனாலல்லவா சிவப்பாக்கும் கீரிம்கள் இந்தியாவில் பெரும் வியாபாரமாக இருக்கிறது. இந்த மாயையிலிருந்து எப்போதுதான் நாம் மீளுவோமோ ?. அதற்கடுத்த வரிகளில், கண்ணழகு, முன்னழகு தேர், கனி, இளமையின் நளினமே, இனிமையின் உருவமே என்று வர்ணித்துத் தள்ளி விடுகிறார். “இளமையின் நளினமே " என்ற வரி சிந்திக்க வைத்து கற்பனைக்குதிரைகளைத் தட்டிவிட்டது. அடுத்த சரணத்திலும் மேனியின் மஞ்சள் நிறத்தை சிலாகித்து ஆரம்பிக்கிறார். "உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ" என்ற வரிகள் சிலிர்க்க  வைக்கின்றன. எளிமையான வரிகளுக்குச் சொந்தக்காரர் பஞ்சு அருணாச்சலம்.
பாடலின் குரல்:

Add caption
எஸ்.பி.பியின் இளமைக்கால குரல் சொக்க வைக்கிறது. இளைஞனின் மனதை இளமைக்குரலில் வெளிப்படுத்தும்போது, இளமையுடன் இனிமையும் சேர இனிக்கிறது பாடல். எனக்கு ஒரு சந்தேகம். இந்த மாதிரிப் பாடல்களின் டியூனை யாரை நினைத்து இளையராஜாவும், யாரை நினைத்துக் கொண்டு பஞ்சுவும்,   யாரை மனதில் கொண்டு எஸ்.பி.பியும் பாடியிருப்பார்கள்?. இப்படி உருகித்தள்ளியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் டிரேட் மார்க் மெலடியில் உதித்த இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் நம் மனதை வருடுகிறது, வருடும். மீண்டும் கேட்டுப் பார்த்தால் உண்மை இதனை உணர்த்தும்.
- தொடரும்




Thursday, January 3, 2019

ஒரு பாடலை எப்படிக் கேட்பது?



முத்தமிழில் ஒரு தமிழ் இசைத் தமிழ். இயல், இசை, நாடகம் என்று சொல்லும்போது, இயலிலிருந்து பிறந்தது இசையென்றும், இசையிலிருந்து வந்தது நாடகம் என்றும் சொல்லலாம். இயலும் இசையும் சேர்ந்ததுதான் நாடகம். பேச்சும் எழுத்தும் இயல் அதாவது கவிதை கட்டுரை கதைகள், நவீனங்கள், பேச்சு, உரை ஆகியவை இயலில் அடங்குபவை. பாடல், இசை, செய்யுள் என்பவை இசையில் உள்ளவை. நாடகம் என்பது தெருக்கூத்திலிருந்து வந்தது. திரைப்படம் என்பது நாடகத்தின் நவீன வடிவம் என்று சொல்லலாம்.
இசை, பாடல் என்று சொல்லும்போது அதில் பலவகை இருக்கின்றன. கர்நாடகம், இந்துஸ்தானி, மெல்லிசை, பக்தி இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை போன்றவை நமக்குத் தெரிந்த சில வடிவங்கள். மேற்கத்திய இசையிலும், பாப், கன்ட்ரி, ஜாஸ், ராக் & ரோல், ரெகே, ராப், ராக், மெட்டல் போன்ற பல வகைகள் இருக்கின்றன.
Add caption
         இதில் நமக்குப் பிடித்த ஒன்று திரையிசை, நாடகத்தின் நவீன வடிவம் தான் திரைப்படம் என்று முன்னரே சொன்னேன். முற்கால நாடகங்களில் வசனங்களை விட பாட்டுக்கள் நிறைய இருக்கும். பாடல் வழியாக உரையாடுவது, செய்திகளைச் சொல்வது, காதலை உணர்த்துவது ஆகியவை நடக்குமென்பதால் அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
P.U.Chinappa 
           ஹரிச் சந்திரா, வள்ளி திருமணம். பக்தப்பிரகலாதன் போன்ற இதிகாசக்கதைகள் நாடகத்திலிருந்து திரைப்படமானதால் அம்மாதிரி திரைப்படங்களிலும் பாடல்கள் நிறைய இருந்தன. நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஆடவும் தெரிந்திருக்க வேண்டும், பாடவும் தெரிந்திருக்க வேண்டும், எனவே ஆரம்பக்காலத்தில் திரைப்படங்களிலும் அவரவர் பாடல்களை அவர்களே பாடினார்கள் . S.G. கிட்டப்பா, P.U. சின்னப்பா, T.R. மகாலிங்கம், தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் இதற்கு உதாரணம். பிறகு பின்னணிப்பாடகர்கள் வந்தபோது இந்த முறை மாறிப்போனது.
தியாகராஜ பாகவதர்
மைக் இல்லாத காலகட்டங்களில் தெருக்கூத்து மற்றும் நாடகங்களில் பாடுபவர்கள் எல்லா மக்களுக்கும் கேட்க வேண்டுமென்பதால் பெருங்குரலெடுத்து (High pitch) பாடுவார்கள். அதாவது எட்டுக்கட்டை, ஒன்பது கட்டை என்று சொல்வார்கள். சினிமாவிலும் ஆரம்பத்தில் இதுவே பிரதி பலித்தது. பின்னர் அதுவும் மாறி மெல்லிசையாக ஆனது.
திரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. 60, 70 பாடல்களிலிருந்து 6, 7 என்று குறைந்து அதன்பின்னர் 5,3,2 என்று   குறைந்து விட்டது. வெறும் பாடல்களினால் படங்கள் ஓடியது என்ற நிலைமை மாறி, இந்தப் பாடல் இந்த இடத்தில் தேவையில்லை என்று தோன்றும் வரைக்கும் வந்துவிட்டது.
இப்போதுள்ள நாளைய தலைமுறையான சிறுவர் சிறுமியர் மற்றும் இதற்குப்பின் பிறக்கும் பிள்ளைகள் திரையிசையை விரும்பிக் கேட்பார்களா என்பது  சந்தேகம் தான்.
ஆனால் நேற்றைய மற்றும் இன்றைய தலைமுறை , M.S. விஸ்வநாதனிடம் ஆரம்பித்து இளையராஜாவிடம் நீண்ட நெடுங்காலம் தஞ்சமடைந்திருந்து பின்னர் A.Rரகுமானை ஆரத்தழுவி அரவணைத்து வாழும் காலமிது. மேடைகளிலும் போட்டிகளிலும் இவை மீண்டும் மீண்டும் ஒலித்து உலகளாவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது.   
“என்னடா நீட்டி முழக்கிக்கிட்டே இருக்க, சீக்கிரம் பாயிண்ட்டுக்கு வாடா பரதேசி”, என்று சொல்லும் உங்கள் குரல் காதில் ஒலிக்கிறது.
ஒரு பாடலை எப்படிக் கேட்பது என்று சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ சென்றுவிட்டேன். நான் எண்பதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கன் கல்லூரி இசைக்குழுவில் இருக்கும்போது இளையராஜா கோலோச்சிய காலம்.
"என்னடா எண்பதுகளில் தொடக்கம் முடக்கம்ணு சொல்லிக்கிட்டு, ஏன் சரியான ஆண்டை சொல்லிற வேண்டியது தானே?"
“யாருன்னு தெரியல ஆனா  நல்லாத்தான்யா கேள்வி கேக்கிறிங்க. சரிப்பா சொல்லிர்றேன், 81 ஜூனில் ஆரம்பிச்சு 84 ஏப்ரல்ல என்னோட இளங்கலைய முடிச்சேன்”. இப்ப திருப்திதானே. வயசைக் கண்டுபிச்சிட்டியோன்னோ? .
நாங்கள் புதிதாக பாடல் ஹிட்டானால், அதனை இசைக்குழுவில் பாடுவதற்கு குழுவாக உட்கார்ந்து பயிற்சி செய்து பழகுவோம். அப்போது பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்போம்.
முதலில் என்ன சுருதி என்று பார்ப்போம். அந்த சுதியில் எங்களுடைய பாடகர்கள் பாடமுடியுமா என்று கேட்டு, சிறிதளவு கூட்டியோ அல்லது குறைத்தோ சுதியை அமைத்துக் கொள்வோம். இல்லேனா சுதியே சதியாயிடும்.  அதற்கப்புறம் என்ன குரல் என்று பார்ப்போம். பொதுவாக யேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்ற மலையாளக் குரலில் பாட ஒருவனும், எஸ்பிபி குரலில் பாட ஒருவரும், இளையராஜா குரலில் பாட ஒருவரும், மலேசியா குரலில் பாட ஒருவரும் டி. எம். எஸ் குரலில் பாட இருந்தனர். ஆனால் பெண் குரல்களில் எல்லாப் பாடகிகளுக்கும் ஒரே பெண்தான். பெரும்பாலும், வெளியிலிருந்துதான் கூப்பிடுவோம். மேடைக்கச்சேரிகளில்  ஒரு பெண் இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியினிமித்தம் பாடுவது அவ்வளவு சிறப்பாய் இல்லா விட்டாலும்  வெளியிலிருந்து கூப்பிடுவோம் .அம்மாவால் பத்திரமாய் அடைகாக்கப்படும் ஒரு தளிர் பெண்ணும் கூட வருவாள் .அதோடு அச்சு அசலில் ஜானகி குரலில் பாட அருமையான பையன் ஒருவன் இருந்தான். அவர்கள் பாடலைக் கேட்கும் போது பாடகரின் நுணுக்கம், அணுக்கம், சங்கதி, எந்த இடத்தில் மூச்சை எடுப்பது என்பவற்றைப் பார்த்துக் கொள்வார்கள்.
கீபோர்டு அல்லது ஆர்கன் வாசிப்பவன் ஆர்கன் லீட் மற்றும் கார்டு புரகெரசன் (chord progression) பார்த்துக் கொள்வான். லீட் கிட்டார் வாசிப்பவன், கிட்டார் லீடு எங்கெல்லாம் வருகிறது என்று கேட்டு வாசித்துப் பழகுவான்.
அதுபோலவே பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார் வருவதை அந்த இருவரும் பார்த்துக் கொள்வார்கள். இளையராஜா பாடல்களில் பேஸ்  கிட்டார் இசையே லீட் போல வரும். இதுதவிர புல்லாங்குழல், கிளாரினெட், ஷெனாய்,  பெல்ஸ், கீபோர்டு லீடு, சின்தசைசர் போன்றவை எங்கெல்லாம் எப்படியெல்லாம் வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
இவற்றை முடித்துவிட்டால் ஸ்கின் செக்சன் அதாவது தோல் கருவிகள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று கேட்க வேண்டும். டிரம்ஸ், தபேலா, டிரிப்பிள் காங்கோ, தும்பா, கடசிங்காரி,  மிருதங்கம், டோலக் , பேங்கோஸ், பம்பை, உடுக்கை ஆகியவையே இவை.
இவைகளோடு டைமிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்   என்று சொல்லக்கூடிய தாளம், மொராக்கோஸ், கப்பாஸ், ஜால்ரா டாமரின் போன்ற இசைக்கருவிகளும் எங்கே வருகின்றன என்று தனியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை இதற்காக பாடலைப் பலமுறை கேட்க வேண்டிய திருக்கும், ஒவ்வொரு  முறையும் வேறுவேறு கருவிகளையும் கேட்பதற்கு காதுகளை பழக்கப்படுத்த முடிந்தால் மட்டுமே இசையை நன்கு ரசிக்க முடியும்
இப்படியெல்லாம்தான் இசை உருவாகிறது. எனவே இனிமேல் ஒரு பாட்டைக் கேட்கும்போது ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனித்துக் கேட்டுப்பாருங்கள். இன்னும் நன்றாக ரசிக்கலாம். இசை மட்டுமே இசைப்பவர்க்கும் , பாடுபவர்க்கும் , கேட்பவர்க்கும் ஒருங்கே இன்பமளிக்கும் ஒன்று. இசையால் வசமாகா இதயமுண்டோ? .
முற்றும்.

பின்குறிப்பு .வேலைப்பளு மற்றும் விடுமுறை காலங்கள் என்பதால் இந்தப்பக்கம் வரமுடியவில்லை .இனிமேல் பரதேசியின் பிறாண்டல்கள் தொடரும். நண்பர்கள் அனைவருக்கும் என்னுடய இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் .



Thursday, December 6, 2018

இளமையெனும் பூங்காற்று !!!



எழுபதுகளில்  இளையராஜா பாடல் எண்: 41
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_4.html

Image result for பகலில் ஒரு இரவு

1979-ல் வெளிவந்த 'பகலில் ஒரு இரவு' என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து புகழ்பெற்ற பாடல் இது.
பாடலைக் கேட்டுவிடுவோம் முதலில்.


பாடலின் பின்னணி:
மேற்கத்திய இசையின் பாணியில், இளமைத்துடிப்புடன் தான் கொண்ட மோகத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆணின் பாடல் இது.
இசையமைப்பு:
இந்தப்பாடலை ஒரு கோரஸ் பாட்டு என்று சொல்லலாம். ஏனென்றால் பாடல் முழுதும் கோரஸ் குரல்கள் ஏதோ காதல் தேவதைகள் கானம் பாடுவது போல் வந்து பாடலுக்கு மெருகூட்டுகின்றன. இதனை ஒரு கிட்டார் பாடல் என்றும் சொல்லலாம். கிடார் இசை  பாடல் முழுவதும் விரவி இதயத்தின் ஏதோ ஒரு சொல்லக்கூடாத அல்லது சொல்லத் தெரியாத ஒரு பகுதியைச் சுண்டிவிடுகிறது. இவை தவிர கீபோர்டு, வயலின்கள், புல்லாங்குழல், பெல்ஸ், டிரம்ஸ் போன்றவை பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இளையராஜாவின் முக்கிய கருவியான தபேலா இந்தப் பாடலில் எங்கும் வரவில்லை. எங்கும் பயன்படுத்த வாய்ப்பும் இல்லை. அதற்குப் பதிலாக பேங்கோஸ் பாடல் முழுதும் வருகிறது. இளையராஜாவின் பாடல்களில் அதிகமாக பேங்கோஸ் பயன்படுத்தப்பட்ட கடைசிப்பாடல் இதுவென சொல்லலாம். அதன்பின்  டிரிப்பிள் காங்கோஸ் ஐத்தான் அவர் அதிகமாகப் பயன்படுத்தினார். அதே மாதிரி இந்தப்பாடலின் இன்னொரு புதுமை என்னவென்றால் இந்த மாதிரிச் சூழலுக்கு இன்னும் மெதுவான மெட்டுதான் பெரும்பாலும் பொருந்தும். உதாரணம் "நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்" போன்ற இளையராஜாவின் பாடல்கள்.  அதற்கு மாறாக இந்தப்பாடல் துள்ளல் இசையுடன் அமைந்த ஒரு வேகப்பாடல். அதோடு இந்தச் சமயத்தில் அதிகமாக பாடப்பட வேண்டிய டூயட் பாடல் இல்லாமல் இது சோலோவாக ஒலிக்கிறது.

பாடல் வரிகள்:
இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2)
ஒரே வீணை ஒரே ராகம்…

1. தன்னை மறந்து மண்ணில் விழுந்து,
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு,
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம்,
கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை

2. அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்,
கேட்க நினைத்தாள் மறந்தாள்,
கேள்வி எழும் முன் விழுந்தாள்,
எந்த உடலோ எந்த உறவோ? - இளமை

3. மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே,
கொஞ்சி சுவைத்த கிளியே,
இந்த நிலைதான் என்ன விதியோ? - இளமை
Image result for Ilayaraja with kannathasan young


          பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். முதலிரண்டு வரிகளிலேயே கவித்துவம் பொங்கி வந்துள்ளது. பூங்காற்றைப் போல வரும் புத்திளமை, புதுப்பாட்டு ஒன்றைப்பாடினால் எப்படி இருக்குமோ அதனைத்தான் இந்த வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இசையின் இளமைக்கு மேலும் இளமை சேர்க்கிறது கண்ணதாசனின் வரிகள். முதல் சரணத்தில் "தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமையெனும் மலர் மீது விழுந்த வண்டு,  தன் கண்ணை இந்துபோனது" என்ற அழகான உருவகம் கவிஞரின் அழகியல் கற்பனையை வெளிக்காட்டி விளக்க வைக்கிறது. அதேபோல் இரண்டாவது சரணத்தில், "கேட்க நினைத்தாள் மறந்தாள், கேள்வி எழுமுன் விழுந்தாள்" என்று தலைவியின் நிலையையும் தலைவன் மூலமே வெளிப்படுத்துகிறார்.
கடைசி சரணத்தில், “மங்கை இனம் மன்னன் இனம் தவிர வேறு என்ன குலம் குணம் தேவைப்படுகிறது. தேகம் துடித்துவிட்டால் கண்கள் குருடாகிவிடும் எனச் சொல்லும்போது "Love is blind" என்பதைத்தான் தன் சொந்த வரிகள் மூலம் சொல்லுகிறார் கண்ணதாசன். கண்ணதாசன் ஆங்காங்கே தன முத்திரை வரிகளைப்பதித்துள்ள மற்றொரு சிறந்த பாடல் இது.

பாடலின் குரல்:
Image result for SPB with Ilayaraja young

இளமைப்பாட்டை இளமைக்குரலில் பாடியுள்ளது. S.P. பாலசுப்பிரமணியம் அருமையாக மட்டுமல்ல அசால்ட்டாக என்று சொல்வோமே அப்படி அநாயசமாக பாடியிருக்கிறார். இளையராஜா, கண்ணதாசன் SPB  இவர்களின் கூட்டு முயற்சியில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான  இந்தப்பாடலுக்கு திரையில் வெளிவந்த காட்சிப்படுத்துதல் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆனால் அதையெல்லாம் மீறி ஹிட்டான இளையராஜாவின் பாடல்களில் இது சிறந்த இடத்தைப் பிடித்த பாடல்.
எழுபதுகளில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்களில் சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்தால் அவற்றில் இது முன் வரிசையில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
- தொடரும். 

Thursday, September 13, 2018

டி.எம்.எஸ்ஸுக்கும்; இளையராஜாவுக்கும் என்ன தகராறு ?


Image result for நல்லதொரு குடும்பம்
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 39
சிந்து நதிக்கரை ஓரம்.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post.html

இளையராஜா இசையமைத்து 1979-ல் வெளிவந்த “நல்லதொரு குடும்பம்” என்ற திரைப்படத்தில் அமைந்த இனிமையான பாடல் இது.முதலில் பாடலைக்கேட்போமா ?




பாடலின் சூழல்:
திரைப்படங்களில் காதல், சோகம், அன்பு, வீரம், வெற்றி, தோல்வி என்ற பல சூழ்நிலைகளுக்கேற்ப பல பாடல்கள் இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் காதலுக்காக இசையமைக்கப்பட்ட பாடல்கள் தான் அதிகம் என நினைக்கிறேன். ஒரு பாடல் அல்லது இசையின் மூலம் காதல் உணர்வுகளை சொல்வது வசனங்களின் மூலம் சொல்வதை விட சுலபம். ஏனென்றால் காதல் மட்டுமல்ல காமத்தையும் பாடல் மூலம் சொல்வது எளிதென்று நினைக்கிறேன். அப்படி காதலை வெளிப்படுத்தும் இன்னொரு பாடல்தான் இது.
இசையமைப்பு:
அருமையாக அமைந்த இந்த மெல்லிசைப் பாடலில்  அதற்கேற்ப இசையமைத்ததோடு இசைக்கருவிகளையும் இதமாக பதமாக பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா. பாடலுக்கு முன் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான ஒரு மனநிலையைக் காண்பிக்கும் விதத்தில் வீணை, வயலின்கள், புல்லாங்குழல் மற்றும் கீபோர்டு இசைக்க "சிந்து நதிக்கரை ஓரம்" என்று பெண்குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. இனிய குரலுக்கு இசை கூட்ட தபேலா சேர்ந்து கொள்கிறது. அதற்குப் பதில் சொல்ல ஆண்குரல் ஒலிக்ககிறது. தேவனும் தேவியும் பாடிமுடிக்க முதல் BGM ஆரம்பிக்கிறது. ஏற்கனவே முன்னிசையில்  (Prelude) பயன்படுத்தப்பட்ட வீணையை சும்மா இருக்க விடுவானேன் என்று இன்டெர்லுடிலேயும்  பயன்படுத்தியிருக்கிறார். வயலின்கள், வீணை, புல்லாங்குழல் மற்றும் பேஸ் கோரஸ் ஒலித்து முடிக்க "மஞ்சள் மலர் பஞ்சனைகள்" என்று பெண் குரலில் சரணம் ஆரம்பிக்கிறது. 2ஆவது BGM எங்கெங்கோ ஊர்வலம் போய் சம்பந்தமில்லாதது போல் ஒலித்து மீண்டும் வந்து பாடலில் இணைய 2-ஆவது சரணம் "தெள்ளுதமிழ் சிலம்புகளை" என்று ஆண் குரலில் வருகிறது. 2-வது சரணத்தில் தபேலாவின் நடை மாறி உருட்டி உருட்டி ஒலிக்கிறது.
          பின் இரு குரலிலும் சிந்து நதி தவழ்ந்து சலசலத்து பாடல் நிறைவு பெறுகிறது.
பாடலின் வரிகள்:   
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்

மஞ்சள் மலர் பஞ்சனைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோவை எந்தன் சீர் வரிசை
சொல்லி கொடுத்தேன் அதை அதை
அள்ளி கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா

தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக்கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் நிதம் நிதம்
சோலைவெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா..
        பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். பாடல் எழுதியவுடன் சிந்துநதியில் ஷுட்டிங் எடுத்தார்களோ. இல்லை ஏற்கனவே அங்கு படப்பிடிப்பை திட்டமிட்டதால் சிந்துநதிக்கரை என்று எழுதினாரோ தெரியவில்லை. அல்லது பாரதி போலவே கண்ணதாசனுக்கும் சிந்துநதிமேல்  ஒரு ஈர்ப்பு இருந்திருக்கலாம். திராவிட நாகரிகம் பிறந்த இடமல்லவா. பல்லவியில் "பூவைப்போல  சூடினான்" என்ற வரி நன்றாக இருந்தது. பாவை பூவைச்சூடுவது இயல்பு. அந்தப் பாவையையே ஒருவன் பூவைப்போல் சூடிக் கொள்வது என்பது கண்ணதாசனின் அழகிய கற்பனை. முதல் சரணத்தில் அதிக ரகசியங்களை மேலோட்டமாக சாதாரண வரிகளில் சொல்லிச் செல்கிறார் .
அதுபோலவே இரண்டாம் சரணத்தில் குளித்து முடித்து ஈரத்துடன் இருக்கும் கூந்தல் மயக்கம் தருவதாக நினைத்து “கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான்  கொடுத்தேன்" என்பது அவருக்கே உரிய போதையுள்ள கற்பனை. பாடல் முழுவதும் கண்ணதாசனின் வரிகள்  இசைக்கு இசைவாக உட்காருகின்றன.
பாடலின் குரல்:
Image result for Ilayaraja with TMS

பாடலைப் பாடியவர்கள் டி.எம் செளந்திரராஜன் P.சுசிலா ஆகிய மறக்கமுடியாத ஜோடிக்குரல்கள். மிகவும் உச்சஸ்தாயி பாடுகிற டி.எம். எஸ்க்கு இந்தப்பாடலில் கீழ் ஸ்தாயி கொடுத்திருக்கிறார் இளையராஜா. இருவருக்கும் அதுவும் நன்றாகவே பொருந்தி யிருக்கிறது. இளையராஜாவுக்கும் டி.எம்.எஸ்ஸுக்கு  தகராறு வந்ததால்தான் அதிக பாடல்கள் அவருக்குக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். பாடல் வெற்றி பெறுவதற்கு என் குரல்தான் அவரின் இசையை விட காரணம் என்று சொன்னதாகக் கேள்வி. அதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் தன் முதற்படத்திலேயே டி.எம்.எஸ்ஸுக்கு பாடல் கொடுத்தவர் இளையராஜா. ஆனால் டி.எம்.எஸ் சிவாஜி, இளையராஜா, காம்பினேஷனில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நினைவில் என்றும் நிற்பவை.
Image result for Ilayaraja with TMS

சில பாடல்களைக் கீழே கொடுக்கிறேன்.
1.   அன்னக்கிளி உன்னைத்தேடுதே - அன்னக்கிளி
2.   நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம்
3.   அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - தீபம்
4.   நேரமிது நேரமிது - ரிஷி மூலம்.
5.   ஐம்பதிலும் ஆசை வரும் - ரிஷிமூலம்
6.   பேசாதே, வாயுள்ள ஊமை - தீபம்
7.   தேன் மல்லிப்பூவே - தியாகம்
8.   உலகம் அது இருட்டு
9.   ராஜா யுவராஜா - தீபம்.
10.                பட்டதெல்லாம் போதுமா? நல்ல தோர் குடும்பம்.
        எனக்குத் தெரிந்து சிவாஜியின் படங்கள் குறைந்ததாலும் எம்ஜியார் நடிப்பதை நிறுத்தியதாலும்தான் டி.எம்.எஸ்ஸுக்கு வாய்ப்புகள்  குறைந்தன. அதோடு வயதும் ஆனதால் குரலில் ஒருவித தழுதழுப்பும் வந்தது என்பதால்தான் மலேசிய வாசுதேவன் சிவாஜிக்குப் பாட ஆரம்பித்தார் என நினைக்கிறேன்.
 யாரிடம்தான் இளையராஜா சண்டை போடவில்லை. ஆனால் நமக்கு தேவை அதுவல்ல, இன்று கேட்டாலும் என்று கேட்டாலும்  ரசிக்க முடிகிற இந்த மாதிரிப் பாடல்களை கேட்டு மகிழ்வது மட்டும்தான் ரசிகர்களான நமக்குத் தேவை.
-தொடரும்.

Thursday, August 30, 2018

அசத்திய அந்தோணிதாசனும் சொதப்பிய கார்த்திக்கும் !!!!


FETNA -2018 பகுதி 5.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_23.html
அல்லது தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் கவிதைகளை மட்டும் நான் உன்னிப்பாக கவனித்திருக்கலாம்.
ஹார்வர்டு தமிழ் இருக்கையின் வெற்றிவிழா நடந்தது. உலகத்தமிழர் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் அதிசயங்கள் நடத்தலாம் என்பது இதன் மூலம் விளங்கியது. இந்தக்குழு இதோடு விடுவதாய்த் தெரியவில்லை.  உலகின் அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்களியும் தமிழ் இருக்கைகளை அமைத்துவிட்டுத்தான் ஓய்வார்கள் போலத்தெரிகிறது. இதோ அடுத்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் தமிழ் இருக்கை அமைக்க உழைக்கத் துவங்கிவிட்டனர். இதில் முக்கியமான பணியாற்றிய மருத்துவர் ஜானகிராமன் மற்றும் மருத்துவர் சுந்தரேசன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.    
சிறிய வயதிலேயே தன்னுடைய முதல் நாவலான காவல் கோட்டத்திற்கு சாகித்ய அக்காடெமியின் விருது பெற்ற சு.வெங்கடேசன் கீழடி அகழ்வாராய்ச்சியைக் குறித்தும் தொன்மையான தமிழர் வரலாறு எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது மறைக்கப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கினார். வெளிநாடுகளில் தமிழ் இருக்கை அமைப்பதோடு வெளிநாடு வாழ் தமிழரின் கடமை முடிந்துவிடாது என்பதை உணர்த்தும் போக்கில் அந்த உரை அமைந்தது. தமிழகத்திலும் ஒரு கண் இருக்க வேண்டும்.  இந்த நாவலைப் படித்து நான் எழுதிய உரையைப் படிக்க இங்கே சுட்டவும். http://paradesiatnewyork.blogspot.com/2014/02/blog-post_19.html
இதற்கிடையில் பக்கத்தில் நடந்த இணை நிகழ்வில் திரு. மம்மது அவர்களின் இசை உரையும் நாடகம் பற்றிய பேராசிரியர் ஞானசம்பந்தனின் உரையும் கேட்டு மகிழ்ந்தேன். தமிழிசை மற்றும் கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற மம்மது தன்னுடைய பேத்தி பாடல்களைப் பாட அதனின் ராக தாளங்களை விவரித்துப் பேசினார்.
இவரும் பேராசிரியர் மருதநாயகமும் ஃபெட்னா முடிந்த கையோடு நியூயார்க் வந்து நியூயார்க் தமிழ்ச்சங்கம் ஏற்பட்டு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். இது எங்களுடைய ஆலயமான இம்மானுவேல் லுத்தரன் திருச்சபையின் அரங்கில் நடந்தது.
பின்னர் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. பாடகர் கார்த்திக், டிரம்ஸ் சிவமணி மற்றும் பாடகி சத்திஸ்ரீ கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி, பிரபலமான பேஸ் கிட்டார் வாசிக்கும் கீத் பீட்டர்ஸ் இதற்கு வாசித்தது ஆச்சரியம் அளித்தது.
திரும்பிப்பார்த்தால் அரங்கு முதன்முறையாக நிரம்பி வழிந்தது. எந்த இணை நிகழ்வும் இல்லாமல் இளைஞர், சிறியவர்கள் தவிர இதற்கென்றே வந்தவர்கள் போல ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
பாடகர் கார்த்திக்கின் எனர்ஜியை நான் நேரில் சிலமுறை பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகள் முன்பு சென்னை காமராஜர் அரங்கில் லஷ்மண் ஸ்ருதி அவர்கள் வழங்கிய "சென்னையில் திருவையாறு" என்ற நிகழ்ச்சியில் கார்த்திக் வழங்கிய கர்நாடக இசைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அவரது ஆலாபனை மிக நீண்டது. அதன்பின்பு நியுஜெர்சியில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெகுவாக ரசித்தேன். http://paradesiatnewyork.blogspot.com/2014/06/blog-post_12.html
ஆனால் இந்த முறை கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி என்னைக் கவரவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் சில வருடங்களுக்கு முன்னர் பாடிய அதே பாடல்களை அதே ஸ்டையில் பாடியதால் வெறுத்துவிட்டேன். அவர் பாடிய பாடல்கள் மட்டுமல்ல சில  பழைய பாடல்களும் அதே பாடல்கள் வந்தன. ஓகே கண்மணியில் வந்த சினாமிக்கா தவிர எல்லாம் பழையன. சக்திஸ்ரீ யாவது வேறு பாடல்கள் பாடுவாரென நினைத்தால் அவரும் அதே பாடல்களை பாடியதால் அயர்ந்துவிட்டேன்.
ஆனால் சிறப்பம்சமாக டிரம்ஸ் சிவமணி வந்து கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அவர் கொண்டு வந்திருந்த பல இசை கருவிகளை வாசித்து அசத்தி விட்டார். இத்தனை தோல் கருவிகளை எப்படிக்கொண்டு வந்தார் என்பது ஆச்சரியமாக இருந்தது. சிவமணியும் இல்லையென்றால் சுத்தப்போர்தான். ஆனால் கார்த்திக் சக்திஸ்ரீ இசை நிகழ்ச்சியை முதன்முறையாகப் பார்த்தவர்கள் மிகவும் ரசித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதோடு அன்றைய நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
அந்தோணிதாசன்
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 1, 2018 காலையில் ஃபெட்னா அமைப்பின் நிர்வாகக்குழு கூடியது. அதில்  அடுத்த தலைவராக வாஷிங்டன் DC பகுதியைச் சேர்ந்த சுந்தர் குப்புசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலோ சண்டை சச்சரவோ இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

நான்காவது நாளில் முக்கிய நிகழ்வாக பிரபல நாட்டுப்புறப்பாடகர்கள் ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் அந்தோணிதாசன் அளித்த இசை நிகழ்ச்சி பட்டையைக் கிளப்பியது. நாதஸ்வரம் இல்லாமல் சீவாளி போன்ற ஒன்றை வாயில் வாசித்தது சோபிக்கவில்லை. நாதஸ்வரமும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்தோணிதாசன் பாடி மிகப்பிரபலமடைந்த சொடக்கு மேலே சொடக்கு போடுது என்ற பாடலையும் பாடினார். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கலியமூர்த்தி  அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.

Image result for kaliyamoorthy ips
கலியமூர்த்தி 
இன்னொரு அதிரவைத்த நிகழ்ச்சி நர்த்தகி நடராஜ் அவர்களின் பரதநாட்டியம். வெகு சிறப்பாக இருந்தது. அவர் நாட்டியத்திற்கு வந்த கதை நெகிழ வைக்கும் கதை.
Related image
நர்த்தகி நடராஜ்
அடுத்து மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக முருக பூபதியின்மணல் மகுடி நாடக நிலம்” வழங்கிய பூழிப்பாவை நடைபெற்றது. தெரு நாடகம் (Street Theater) அடிப்படையில் 80 களில் நான் நிஜ நாடக இயங்கங்களில் பெரிதும் கலந்து கொண்டு இருக்கிறேன். இப்போது அது மிகச்சிறப்பான வடிவத்தில் உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அதனைப்பற்றி இன்னும் தெளிவாக அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.
தொடரும்

Thursday, January 11, 2018

கண்ணதாசனின் காதலும் காமமும் !!!!

Image result for Muthal iravu movie
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 37
“மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_30.html

          1979ல் வெளிவந்த “முதல் இரவு” என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.


பாடலின் பின்னணி:
          இளம் காதலர்கள் இணைந்து போகும்  ரயிலில் டூயட் பாடுவது போல் அமைக்கப்பட்ட பாட்டு இது.
இசையமைப்பு :
Image result for ilayaraja in muthal iravu movie

          இரண்டு உப்புத்தாளை தாளம் தப்பாது உரசினால் வரும் ரயில் போகும் சத்தத்தில் ஆரம்பிக்கிறது பாட்டு, பின்னர் ரயில் கூவும் சத்தம் வருகிறது. பின்னர் அதனுடன் கிடார் ரிதம்  ஸ்ட்ரம்மிங் இணைந்து அதே ரயில் சத்தம் போல் ஒலிக்க ,ஊஊஊ என்று ரயில் கூவுவது போல் பெண் குரலில் ஹம்மிங் வருகிறது. ஹம்மிங், ஃபேட் ஆகி முடியும் போது “மஞ்சள் நிலாவுக்கு”, என்று ஆண்குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. பல்லவி ஆரம்பிக்கும்போது காங்கோ ஒரு வித்தியாச ரிதம் பேட்டர்னில் சேருகிறது.அடுத்த வரியில் "இது முதல் உறவு" என்று பெண் குரல் சேர்ந்துகொள்ள இருகுரலும் "இந்தத் திருநாள்  தொடரும் தொடரும்” என்று மாறி மாறி பாட பல்லவி முடிகிறது.
          அதன்பின் வரும் முதல் BGM ல் வயலின் குழுமம், புல்லாங்குழல், கீ போர்டு, தபேலா மற்றும் காங்கோ ஆகியவை கலந்து கட்டி ஒன்றின் மேல் ஒன்று உட்கார்ந்து பாடலின் அதே மூடை மெயின்டெய்ன் செய்து முடிக்க, சரணம் "ஆடுவது பூந்  தோட்டம்" என ஆண் குரலில் ஆரம்பிக்கிறது. பல்லவி போலவே சரணத்திலும் ஆண் /பெண் குரலின் ஹம்மிங்கோடு முதல் சரணம் முடிகிறது. இரண்டாவது BGM ல் ஒலிக்கும் புல்லாங்குழல், வயலின் குழுமம், கிடார் ஆகியவை முதல் BGMக்கு முற்றிலும் மாறாக எங்கெங்கோ சென்று அலைந்து திரும்பவும் பழைய சுருதிக்கு வந்து சேர 2--ஆவது  சரணம் "வீணையென நீ மீட்டு" என பெண்குரலில் ஆரம்பிக்கிறது, முதல் சரணம் போலவே ஆண்பெண் குரல்கள் மாறி  மாறி ஒலிக்க ஊ ஊ என்று ஹம்மிங்குடன் ரயில் சத்தம் வர அப்படியே ரயில் தூரத்தில் சென்று மறைகிறது.

வரிகள்:
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
 இது முதல் உறவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அணைக்கின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்
ஊஊஊ ……

வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஊஊஊ
மஞ்சள் நிலாவுக்கு

Related image


          இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இதை எழுதும் போது  கோப்பையும் கோலமயிலும் துணையாக இருந்தனவா என்று தெரியாது. ஆனாலும் காதல் சொட்டும் இந்தப் பாடலில் காமத்தை சற்றே குழைத்து உள்ளே அமைத்திருக்கிறார். பல்லவியிலேயே இதுதான் முதல் உறவு என்று சொல்வதோடு இதுதான் முதல் கனவு என்றும் சொல்லி காதலர்களுக்கு  காதல்தான் எல்லாம் என்று சொல்லியிருக்கிறார். முதல் சரணத்தில் வழக்கமான வரிகள் என்றாலும் இரண்டாவது சரணத்தில், "மேனியை வீணையாக்கி  பாட்டொன்றை மீட்டு என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரிகளில் வேண்டாம் விவகாரமாகப் போய்விடும். ஆனால் இதனைப் படிக்கும் போது கண்ணதாசன் காதல்தாசனா? இல்லை காமதாசனா? என்று விளங்கவில்லை. காமமின்றி காதல் ஏது? ஆனால் காதலின்றி காமம் தீது.
குரல்:
Image result for jayachandran with susila
Jeyachandran with P Susila 
          இசையினிமைக்கு குரலினிமை சேர்த்தவர்கள், ஜெயச்சந்திரனும் பி.சுசிலாவும் குறிப்பாக எல்லா மலையாளிகளின் பேஸ் குரல்களில் ஒரு சோகம் ஒளிந்திருக்கும். இந்தப்பாடலில் உற்சாகமாக ஆரம்பித்தாலும் 2-ஆவது சரணத்தில் "எந்நாளும் உறவினரை பிரிவும் இல்லை" என்ற வரிகளில் சோகம் ஓடிவிடுகிறது. பி.சுசிலா தனது இனிமையான குரலில் பாடலுக்கு அழகு சேர்க்கிறார். சேட்டைகள் இல்லாத ஆனால் இளமை ததும்பும் குரல்.
இளையராஜா அசால்ட்டாக இசை அமைத்திருக்கும் இந்தப் பாடல் அப்படியே ரயில் பயணத்தைக்  காதுகளில் ஒலித்து கண்கள் முன் கொண்டு வருகிறது. இந்தப் பாடலை ரயில் பயணம் செய்யும் போது கேட்டுப் பாருங்களேன். என்ன டூயட் பாட துணை வேண்டுமா? அய்யய்யோ அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.
இன்னும் வரும்>>>>