Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

Thursday, August 29, 2019

கண்ணதாசனின் மோசமான வரிகள் !


Image result for வான் மேகங்களே

வான் மேகங்களே !
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 43

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்

1979ல் வெளிவந்த பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த புகழ்பெற்ற டூயட் பாடல் “வான் மேகங்களே”.
முதலில் பாடலைக் கேளுங்கள்.


பாடலின் பின்னணி:

காதலை வெளிப்படுத்தி, இருவருக்கும் ஒரே சமயத்தில் காதல் தோன்றி, இருவருக்கும் பூரண சம்மதம் என்ற நிலையில் காதலர்களுக்கு வரும் காதல் கனவில் தேவதைகள் புடை சூழ பாடப்படும் பாடலிது.

இசையமைப்பு:

எந்த சந்தேகமில்லாமல் இளையராஜாவின் பாடல் என்று சொல்லக்கூடிய  மெலடியுள்ள பாடல் இது. அவருடைய சிக்நேச்சர் இசையமைப்பை பாடல் முழுதும் பார்க்கலாம். கிட்டார், வயலின் குழுமம், புல்லாங்குழல், கீ போர்டு, வீணை, நாதஸ்வரம், டிரம்ஸ், தவில் மற்றும் தபேலா ஆகிய இசைக்கருவிகள்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாடலின் ப்ரிலூடாக பிசிக்காட்டோ இசையுடன் துவங்கி புல்லாங்குழல், வீணையோடும் அதன்பின் மணியோசையோடும் இசைத்து முடிக்க "வான் மேகங்களே" என்று பெண் குரலுடன் பாடல் ஆரம்பிக்கிறது. குரலுடனும், இசையுடனும் தாளம் சேர்க்க தபேலா இணைந்து கொள்ள பாடல் நம்மை ஆட்கொள்கிறது. பெண் குரல் முடிந்தவுடன் தாளத்தோடு கைகள் இரண்டு முறை தட்டப்பட, "வான் மேகங்களே" என்று ஆண் குரலில் பாடலின் பல்லவி ஆரம்பிக்கிறது. BGM இன்ட்டர்லூடாக மீண்டும் வீணை வயலின் குழுமம், புல்லாங்குழல், தபேலா மூலம் மெல்லிசை இன்னிசையாக ஒலித்து முடிக்க "பாலிலே பழம் விழுந்து" என்று பெண் குரலில் சரணம் ஆரம்பிக்கிறது. இடையில் குயில்  கூவ குயிலோடு இணைந்து பெண் கூவ இந்த முழுச்சரணமும் பெண்குரலில் பாடி முடிகிறது. வயலின் குழுமம், வீணை, பிசிக்காட்டோ இசையுடன் இரண்டாவது BGM  முடிய இப்போது ஆண் குரலில் "தென்றலே ஆசை கொண்டு" என்று இரண்டாவது சரணம் ஆரம்பித்து முழுவதும் ஆண்குரலில் வந்து முடிகிறது. பாட்டு முடியப்போகிறதே என்ற கவலை வரும் போது வழக்கத்திற்கு மாறாக மூன்றாவது சரணமொன்றும் இருக்கிறது. 
மூன்றாவது BGM ல் மணியோசை, நாதஸ்வரம், தவில் போன்ற கல்யாண மங்கல இசை முழங்க "பள்ளியில் பாடம் சொல்லி" என்று மறுபடியும் பெண்குரலில் மூன்றாவது  சரணம் ஆரம்பிக்க, இப்போது இரண்டாவது வரியில் ஆண்குரலும் மாற்றி மாற்றி ஒலிக்க பாடல் இனிதே நிறைவடைகிறது. 

பாடலின் வரிகள்:

வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை
வான மேகங்களே

பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா (2)
பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும்  நேரம் கண்டேன்
வான் மேகங்களே ...

தென்றலே  ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா (2)
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
வா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்
வான் மேகங்களே ....

பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்
பாவையின் கோவில் மணி ஓசையை நீ கண்ணே
தா தன்னன்னா
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ?
வான் மேகங்களே ....

பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். மிகவும் சாதாரண வரிகள்தான். கண்ணதாசனின் கவிதை வரிகள் என்று சொல்லுமளவிற்கு சிறப்பில்லை. ஆனால் மெட்டுக்கு மிகச் சரியாகப் பொருந்துகின்றன. ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் எந்த கனெசஷனும் இல்லை உதாரணத்திற்கு, “தென்றலே ஆசை கொண்டு, “தோகையை கலந்ததம்மா”, என்ற வரிகளுக்கும் அதன் அடுத்த வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . பாடல் முழுவதுமே இப்படித்தான் அடுத்தடுத்த வரிகளுக்கும் எந்த தொடர்புமில்லை. கடைசி வரியில் "பள்ளியின் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்" என்ற வரியில் கண்ணதாசன் லேசாக எட்டிப்பார்க்கிறார். ஏனென்றால் நாயகன் ஒரு பள்ளிக் கூட ஆசிரியர். நாயகி இப்படிச் சொல்லும்போது அதில் இரண்டு அர்த்தங்கள் வருகின்றன. பள்ளி என்றால் படுக்கையறையென்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதற்கடுத்த வரியும் சம்பந்தமில்லை. அதோடு டான் டன்  டன்  டான் என்ற மணியோசைக்குப்பின் "சங்கின் ஓசை கேட்கும் நேரம்" என்று எந்தச் சங்கைச் சொல்கிறார் என்றும் விளங்கவில்லை. ஒரு வேளை இந்த வரிகளுக்கு வேறு அர்த்தம் ஏதாவது இருக்குமென்றால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பாடியவர்கள்:
Ilayaraja with Malaysia Vasudevan


பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி என்ற ஈடில்லாத இரு அற்புதக் குரல்கள். இருவர் குரல்களிலும் சாந்தமும், மகிழ்ச்சியும், பாசமும், காதலும் ஒருங்கே ஒலிக்கின்றன. ஒவ்வொரு சரணத்தின் முதல் வரியும் திரும்ப வரும்போது வரும் அனுக்கங்கள் அத்தனை  அழகு, அத்தனை நளினம். இருவரும் மிக இளமையாக  இருந்தபோது பாடிய குரல்கள் என்பதால் தேன் சொட்டுகிறது.
Image result for malaysia vasudevan with Janaki  old photo

- இளையராஜாவின் ஆகச்சிறந்த எழுபதுகளின் பாடல்களில் இந்தப் பாடல் மிக முக்கியமான ஒன்று. இசையும் குரலும் வரிகளை கடந்து ஒலிக்கின்றது.

தொடரும்


Tuesday, February 5, 2019

சிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி !!!!



இளையராஜா 75 பிறந்த நாள் சிறப்புப் பதிவு
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 42
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

          இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
https://paradesiatnewyork.blogspot.com/2018/12/blog-post.html

பட்டாக்கத்தி பைரவன் (LOL) என்ற படத்திற்காக 1979ல் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.
நடிகர் திலகம் நடித்து வெளிவந்த இந்தப் பாடலில் அவர் டூயட் பாடி நடித்த இந்தப்பாடலைக் கேளுங்கள்.

 நடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்ததுதான். அவருடைய பழைய படங்களை ஒரு காலத்தில் தேடித் தேடி போய் பார்த்து அழுதுவிட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் நீண்ட காலத்திற்குப்பிறகு இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் போது அதுவும் டூயட் பாடலைப் பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது. ஆனால் பாடல் மிகவும் காதுக்கினிய மெல்லிசைப் பாடல்.
இசையமைப்பு:

பாடலின் முன்னிசையாக கிடாரின் நிரடலில் இசையால் பேச ஆரம்பிக்கிறார்  இளையராஜா. அந்த பாஷை விளங்காத ஓசையில் ஒளிந்து  கண்களை மூடிக் கேட்டால், வயலின் குழுமம் அப்படியே ஆர்ப்பரித்து, ஆரவாரித்து இசைக்க, புல்லாங்குழல் இசை வந்து தழுவிச் செல்ல, டிரம்ஸ் இசை கூட்ட, ஆண்குரலில் "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”. பல்லவி இனிதே முடிந்து முதல் BGM ல்  வயலினும், கீபோர்டும் கேள்விகேட்டு பதில் சொல்லி களைத்துப் போன ஒரு நொடியில் பெண்குரலில் "ஹா என்ற ஹம்மிங்குடன் தொடங்கி "நான் காண்பது" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது  BGM -ல் கீபோர்டு, வயலின், கிடார், புல்லாங்குழல் ஆகியவை புதுமையாக இணைந்து விளையாட, திறமையான இசைக் கலைஞர்கள் உட்கார்ந்து ஜாம் செய்து முடிக்க இரண்டாவது சரணம் முடிய ஆண்குரலில் அதே ஹம்மிங்குடன் ஆரம்பித்து, “கல்லானவன்”, என்று ஆரம்பித்து மறுபடியும் பல்லவி பாடி பாடல் நிறைவு பெறுகிறது. ரயில் பயணம், பைக் அல்லது சைக்கிள் பயணம், அல்லது ஜாக்கிங் ஆகியவற்றின் போது பாடுவதற்குப் பொருத்தமான பாடல் இது.
            இந்தப் பாடலைக் கேட்கும்போது இளையராஜாவின் இன்னொரு பாடலான "ஓ மானே மானே மானே உன்னைத்தானே", என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்பல்லவியையும் அந்தப் பாடலின் சரணத்தையும் சேர்த்து பாடிப்பாருங்கள். அப்படியே பொருந்தும். இப்படி இளையராஜா இசையில் நிறைய இரட்டைப் பாடல்கள் இருக்கின்றன. இளையராஜாவின் பாடலில் அவருடைய சொந்தப் பாடல்களின் சாயல் தெரிவதில் வியப்பேதுமில்லை. விவகாரம் என்பது மற்றவரின் பாடலின் சாயலில் தெரிந்தால்தானே.
பாடலின் வரிகள்:
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே..

ஹா
நான் காண்பது....உன் கோலமே
அங்கும்...
இங்கும்....
எங்கும்....!
என் நெஞ்சிலே.... உன் எண்ணமே
அன்றும்....
இன்றும்....
என்றும்...
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ....நீ......நீ......!


ஹா
கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்...
நீ.....
நாம்..
            

     
       பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கவிஞரின்  பொன்வரிகள் என்று ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் பாடலின் சந்தத்திற்கு எழுதுவதில் அவருக்கு இணை அவரே. வரிகள் முழுவதும் அப்படியே இசையில் உட்கார்கின்றன. "கண்ணே உன்னை எண்ணி கல்லானவன் பூவாகிறேன்" என்று சொன்னதில் கவிஞர் எட்டிப்பார்க்கிறார். அதே போல் “பூவாசமும் பொன் மஞ்சமும்”, என்று சொல்லும்போது திருமணததையும் முதலிரவையும் சுட்டிக்காட்டும்போது ஆஹா இது கண்ணதாசன் என்று தோன்றுகிறது.
பாடலைப்பாடியவர்கள்:

SPB with Ilayaraja 
சிவாஜிக்கு SPB பாலுவின் குரலும் நன்றாகவே இருக்கிறது. SPB க்கு ஜோடியாக ஜானகி கேட்கவே வேண்டாம். இருவரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். இது ஒரு மாதிரியான எதிரொலிப்பாடல் என்பதால் பாடுவது கொஞ்சம் சிரமம். ஆனால் இருவருமே அநாயசமாக பாடி அசத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் புதிது புதிதான முயற்சியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.
இளையராஜா இசையால் ( மட்டும்) இன்னும் அதிகம் பேசவேண்டும் என விரும்பும் ஒரு ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
தொடரும்

Thursday, December 6, 2018

இளமையெனும் பூங்காற்று !!!



எழுபதுகளில்  இளையராஜா பாடல் எண்: 41
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_4.html

Image result for பகலில் ஒரு இரவு

1979-ல் வெளிவந்த 'பகலில் ஒரு இரவு' என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து புகழ்பெற்ற பாடல் இது.
பாடலைக் கேட்டுவிடுவோம் முதலில்.


பாடலின் பின்னணி:
மேற்கத்திய இசையின் பாணியில், இளமைத்துடிப்புடன் தான் கொண்ட மோகத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆணின் பாடல் இது.
இசையமைப்பு:
இந்தப்பாடலை ஒரு கோரஸ் பாட்டு என்று சொல்லலாம். ஏனென்றால் பாடல் முழுதும் கோரஸ் குரல்கள் ஏதோ காதல் தேவதைகள் கானம் பாடுவது போல் வந்து பாடலுக்கு மெருகூட்டுகின்றன. இதனை ஒரு கிட்டார் பாடல் என்றும் சொல்லலாம். கிடார் இசை  பாடல் முழுவதும் விரவி இதயத்தின் ஏதோ ஒரு சொல்லக்கூடாத அல்லது சொல்லத் தெரியாத ஒரு பகுதியைச் சுண்டிவிடுகிறது. இவை தவிர கீபோர்டு, வயலின்கள், புல்லாங்குழல், பெல்ஸ், டிரம்ஸ் போன்றவை பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இளையராஜாவின் முக்கிய கருவியான தபேலா இந்தப் பாடலில் எங்கும் வரவில்லை. எங்கும் பயன்படுத்த வாய்ப்பும் இல்லை. அதற்குப் பதிலாக பேங்கோஸ் பாடல் முழுதும் வருகிறது. இளையராஜாவின் பாடல்களில் அதிகமாக பேங்கோஸ் பயன்படுத்தப்பட்ட கடைசிப்பாடல் இதுவென சொல்லலாம். அதன்பின்  டிரிப்பிள் காங்கோஸ் ஐத்தான் அவர் அதிகமாகப் பயன்படுத்தினார். அதே மாதிரி இந்தப்பாடலின் இன்னொரு புதுமை என்னவென்றால் இந்த மாதிரிச் சூழலுக்கு இன்னும் மெதுவான மெட்டுதான் பெரும்பாலும் பொருந்தும். உதாரணம் "நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்" போன்ற இளையராஜாவின் பாடல்கள்.  அதற்கு மாறாக இந்தப்பாடல் துள்ளல் இசையுடன் அமைந்த ஒரு வேகப்பாடல். அதோடு இந்தச் சமயத்தில் அதிகமாக பாடப்பட வேண்டிய டூயட் பாடல் இல்லாமல் இது சோலோவாக ஒலிக்கிறது.

பாடல் வரிகள்:
இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2)
ஒரே வீணை ஒரே ராகம்…

1. தன்னை மறந்து மண்ணில் விழுந்து,
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு,
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம்,
கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை

2. அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்,
கேட்க நினைத்தாள் மறந்தாள்,
கேள்வி எழும் முன் விழுந்தாள்,
எந்த உடலோ எந்த உறவோ? - இளமை

3. மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே,
கொஞ்சி சுவைத்த கிளியே,
இந்த நிலைதான் என்ன விதியோ? - இளமை
Image result for Ilayaraja with kannathasan young


          பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். முதலிரண்டு வரிகளிலேயே கவித்துவம் பொங்கி வந்துள்ளது. பூங்காற்றைப் போல வரும் புத்திளமை, புதுப்பாட்டு ஒன்றைப்பாடினால் எப்படி இருக்குமோ அதனைத்தான் இந்த வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இசையின் இளமைக்கு மேலும் இளமை சேர்க்கிறது கண்ணதாசனின் வரிகள். முதல் சரணத்தில் "தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமையெனும் மலர் மீது விழுந்த வண்டு,  தன் கண்ணை இந்துபோனது" என்ற அழகான உருவகம் கவிஞரின் அழகியல் கற்பனையை வெளிக்காட்டி விளக்க வைக்கிறது. அதேபோல் இரண்டாவது சரணத்தில், "கேட்க நினைத்தாள் மறந்தாள், கேள்வி எழுமுன் விழுந்தாள்" என்று தலைவியின் நிலையையும் தலைவன் மூலமே வெளிப்படுத்துகிறார்.
கடைசி சரணத்தில், “மங்கை இனம் மன்னன் இனம் தவிர வேறு என்ன குலம் குணம் தேவைப்படுகிறது. தேகம் துடித்துவிட்டால் கண்கள் குருடாகிவிடும் எனச் சொல்லும்போது "Love is blind" என்பதைத்தான் தன் சொந்த வரிகள் மூலம் சொல்லுகிறார் கண்ணதாசன். கண்ணதாசன் ஆங்காங்கே தன முத்திரை வரிகளைப்பதித்துள்ள மற்றொரு சிறந்த பாடல் இது.

பாடலின் குரல்:
Image result for SPB with Ilayaraja young

இளமைப்பாட்டை இளமைக்குரலில் பாடியுள்ளது. S.P. பாலசுப்பிரமணியம் அருமையாக மட்டுமல்ல அசால்ட்டாக என்று சொல்வோமே அப்படி அநாயசமாக பாடியிருக்கிறார். இளையராஜா, கண்ணதாசன் SPB  இவர்களின் கூட்டு முயற்சியில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான  இந்தப்பாடலுக்கு திரையில் வெளிவந்த காட்சிப்படுத்துதல் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆனால் அதையெல்லாம் மீறி ஹிட்டான இளையராஜாவின் பாடல்களில் இது சிறந்த இடத்தைப் பிடித்த பாடல்.
எழுபதுகளில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்களில் சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்தால் அவற்றில் இது முன் வரிசையில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
- தொடரும். 

Thursday, October 4, 2018

ஜென்சியின் இசைப் பயணம் பாதியில் முடிந்து போனது ஏன்?

Related image


எழுபதுகளில்  இளையராஜா பாடல் எண்: 40
இரு பறவைகள் மலை முழுவதும்
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_13.html
1979-ல் வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்து புகழ்பெற்ற பாடல் இது.முதலில்   பாடலைக்கேளுங்கள்.


பாடலின் சூழல்:
மகிழ்ச்சியான சூழ்நிலையில், இயற்கையுடன் ஒன்றிணைந்து, அதனை சிலாகித்தும் காதல் கொண்ட தன்  மன ரம்மியத்தை வெளிப்படுத்தியும் பாடுகின்ற பாடல் இது.
இசையமைப்பு:
Image result for ilayaraja young photos

குதூகல மன நிலை இந்தப்பாடலில் தெளிவாகத் தெரியும் வண்ணம் இளையராஜா இசையமைத்திருக்கிறார். பாடலின் இடையே வரும் கோரஸ்கள் பாடலுக்கு வலுசேர்க்கும் இவ்விதமாக அமைந்திருக்கின்றன. கோரஸுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலுடன் வயலின் குழுமமும்  புல்லாங்குழலும் இணைந்து முன்னிசையை முடிக்க, "இரு பறவைகள் மலை முழுதும்", என்று பாடல் ஆரம்பிக்கிறது. முதலாவது BGM -ல்  டிரம்ஸ், கிடார், கீபோர்டு ஆகியவற்றுடன் மறுபடியும் கோரஸ் வந்து ஒலித்து முடிய, "சாரல் தூவும் முகில்களும்" என்று முதலாவது சரணம் ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM-ம் அதே போல் ஒலிக்க இரண்டாவது சரணம் "பூவில் பொங்கும் நிறங்களே" என்று ஆரம்பித்து முடிந்து மீண்டும் பல்லவி வந்து கோரஸுடன் பாடல் நிறைவு பெறுகிறது .
பாடலின் வரிகள்:
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம் (இரு பறவைகள்)

1)சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும் (2)
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோடு கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே (இரு பறவைகள்)

2) பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன்
அங்கங்கே எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும் இனி நானென்றும்
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
லலலாலா லாலா லலல்லலா(இரு பறவைகள்)
Image result for Ilayaraja with kannadasan

பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். இயற்கையை வியந்து எழுதிய பாடலில் கண்ணதாசனுக்கு அவ்வளவு ஸ்கோப் இல்லாதது போல் தெரிகிறது. சாதாரண வரிகள் தாம் என்றாலும்  சந்தங்களில் அழகாக உட்காருகிறது.
தோட்டத்தில் கனிமரங்கள் இருந்து அதனை நன்கு கவனித்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உற்று உற்றுப் பார்த்தாலும் தெரியாமல் சில பழுத்த கனிகள் இலை மறைவில் மறைந்திருக்கும். என் நியூயார்க் வீட்டுத் தோட்டத்தில் உள்ள அத்திமரத்தில் நான் கண்டுபிடிக்க முடியாத சில பழங்களை என் மனைவி  கண்டுபிடித்துக் கொண்டு வருவாள்.
"இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன", என்னும் வரிகளில் நேரடியாக வரும் அர்த்தத்தில் அப்படித்தோன்றுகிறது. ஆனால் காதலில் கனிந்த இரு மனங்களையும் சேர்த்து கண்ணதாசன் அப்படி உவமையாகச் சொல்வது சற்று உற்றுப் பார்த்தால் தெரியும். இலை முடிய கனிகளை கண்டுபிடிப்பது போன்று அது அவ்வளவு கடினமல்ல. அதன் அடுத்த வரிகளைக் கேட்கும் போது இன்னும் அது சுலபமாக புரிந்து விடும், "அது கண்கள் சொல்லும் ரகசியம், இது தெய்வம் தந்த அதிசயம்". காதலும் காமமும் தெய்வம் தந்த அதிசயம் என்பது எவ்வளவு உண்மையான கூற்று. அதே போல இரண்டாவது சரணத்தில் இருவர் மனதும் ஒன்றாகிவிட்டன என்பதனை "எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன் அங்கங்கே எனைப்போல அவர் காண்கிறார்", என்று சொல்லி "நீயென்றும் இனி நானென்றும் அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா", என்று அழியா உறவை அழகாகச் சொல்வதில்தான் கண்ணதாசன் தெரிகிறார். இப்போது புரிகிறதா, சாதாரண வரிகளுக்குள் இருக்கும் அசாதாரணமான உண்மை, கண்ணதாசன் என்றால் சும்மாவா?
பாடலின் குரல்:
Image result for ilayaraja with jency

பாடலைப்பாடியவர் ஜென்சி அவர்கள். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த படங்களில் நல்ல பல பாடல்களை பாடியிருக்கிறார். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல். 1978ல் ஆரம்பித்த அவருடைய இசைப் பயணம் 1982ல் முடிந்துபோனது துரதிர்ஷ்டம் தான். ஜென்சியை கேரளாவிலிருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்திய ஜேசுதாஸ் அவர்களே சித்ராவையும் கொண்டு வந்து இளையராஜாவிடம் பரிந்துரை செய்தபடியால் அப்போதிருந்து சித்ரா ஜென்சியின் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
1983ல் திருமணமானதுதான் காரணமா? அவரைக் கேட்டால் ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டதால் இதனை விட்டுவிட்டேன் என்று சொன்னார்.
திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட கிறித்துவ கணவன் இவர் திரைப்படங்களில் பாடுவதை விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். வாய்ப்புக் கேட்டுப் போவதில் எனக்கு விருப்பமில்லை, எனவே கிடைத்த ஆசிரியர் வேலைக்குப் போய்விட்டேன் என்று ஒரு  பேட்டியில்  தெரிவித்திருக்கிறார்.
அதிகப் பாடல்கள் பாடியதால் கிடைத்த நட்சத்திர அந்தஸ்தை தலைக்கேற்றி இளையராஜாவிடம் பிணக்கு கொண்டு அவருக்கு வேண்டுமென்றால் என்னை கேரளாவிலிருந்து வரவழைக்க ஆளனுப்பட்டும் என்று சொல்லவிட்டுச் சென்றதால் இளையராஜா அப்படியே கை கழுவி விட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு.
இது எல்லாவற்றுக்கும் மேலாக இளையராஜா ஜென்சி மேல் ஒரு தலைக்காதல் கொண்டு விரும்பியதால், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருப்பதால் அவரிடமிருந்து ஒதுங்கி கேரளாவுக்குத் திரும்பியதாகச் சிலர் சொல்லுகிறார்கள். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை மக்களே.
ஆனால் ஜென்சியின் குரலைப் பிடித்த அளவுக்கு அவரின் உச்சரிப்பு எனக்குப் பிடிக்கவில்லை. ல,, ழ மற்றும் ன்,ண் ஆகியவை நன்றுதான் என்றாலும் ர, , வின் உச்சரிப்பு மிகக் கொடுமையாக இருக்கிறது. இதே பிழை சித்ராவிடமும் இருக்கிறது. ஆனால் இவ்வளவு மோசமில்லை. ஜேசுதாசுக்கு சில இடங்களில் ழ வும் பல இடங்களில் ''வும் வராது. வெளி மாநிலங்களிலிருந்து பாட வந்தவர்களின் உச்சரிப்புச் சுத்தம் என்று  சொன்னால் பி.சுசிலா அம்மாவைச் சொல்லலாம். ஆனால் தமிழில் பேசத்தான் இத்தனை நாட்களாகியும் வரவில்லை. பழைய பாடகிகளில் வாணி ஜெயராமின் உச்சரிப்பு மிகச் சுத்தமாக இருக்கும்.
ஜானகி கூட ஆசை என்பதை ஆஷை என்றுதான் உச்சரிப்பார். அந்தக் காலத்துப் பாடகர்கள் மட்டுமல்ல இந்தக் காலத்து கர்நாடக சங்கீதப் பாடகர்களும் இதே உச்சரிப்புப் பிழையைச்  செய்கிறார்கள்.அதுபோல் SP. பாலசுப்ரமணியம் மற்றும் மனோவின் உச்சரிப்பு நன்றாகவே இருக்கும். தமிழ் உச்சரிப்பை ஆரம்பத்தில் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இருந்தது AR.ரகுமான்தான்.
உற்சாகத்துடன் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலைக் கேட்டால் உங்கள் மனதும் களிப்பாகி  அதே உற்சாகம் தொற்றிக் கொள்வதோடு உங்களை இளமைக் காலத்திற்கும் இந்தப் பாடல் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
தொடரும்

Thursday, September 20, 2018

கண்ணதாசனை ஏமாற்றிய அண்ணாதுரை ?

Image result for கவியரசு கண்ணதாசனின் பாடல் பிறந்த கதை


படித்ததில் பிடித்தது
கவியரசு கண்ணதாசனின் பாடல் பிறந்த கதை
தேடல் எஸ். முருகன்.
கண்ணதாசன் பதிப்பகம்
இது அரிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய புத்தகம். இதனைத்தொகுத்து எழுதிய தேடல் எஸ் முருகனின் பெயரிலேயே இவர் தேடுவதில் சிறந்தவர் என்று தெரிகிறதே. அதனை இந்தப் புத்தகத்தில் நிரூபித்தும் காட்டியிருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு மேலும் சிறப்பூட்டுவது போல அமைந்திருக்கிறது ,எம்ஜியார் அவர்களின் முன்னுரை. என்னதான் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கண்ணதாசனை அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தவர் அல்லவா. அதுதவிர கண்ணதாசன் அவர்களின் சொந்த விமர்சனமும் இதில் இடம்பெற்றிருக்கிறது. தான் எட்டாவது வரை மட்டுமே படித்தது போன்ற சில தகவல்களை வெளிப்படையாகவே சொல்லிச்செல்கிறார். கண்ணதாசன் ஒரு திறந்த புத்தகம் என்றுதான் நம் எல்லோருக்கும் தெரியுமே.
இவை தவிர எஸ்.பி.முத்துராமன், முக்தா சீனிவாசன், இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கண்ணதாசனைப்பற்றி எழுதும் நினைவுகளும் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
ஒரு கவிஞனை மற்ற கவிஞர்கள் பாராட்டுவது மிகவும் சிறந்த விஷயமல்லவா? கவிஞர்கள் மு.மேத்தா, பாஸ்கரதாசன், ஆரூர்தாஸ், வைரமுத்து, சௌந்தரா கைலாசன், இரா. வேலுச்சாமி, கல்பனாதாசன், வாலி, பாபு என்று பலர் எழுதிய கவிதைகளும் இப்புத்தகத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
இந்தப் புத்தகத்தில் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களின் சூழல், எந்த நிலையில் அதை எழுதினார், அதன் பின்னணி என்ன என்று சொல்லப்பட்டிருக்கிறது .
நான் பிடித்து ரசித்த சில பின்னணித் தகவல்களை இங்கே கொடுக்கிறேன். இவை இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டும் என நம்புகிறேன்.
1.   படிக்காத மேதை படத்தில் வரும் பாடலான "ஒரே ஒரு ஊரிலே" என்ற பாடலை வங்கிக்குப்போகும் அவசரத்தில் எழுதியிருக்கிறார்.
2.   'எலந்தைப்பழம்' என்ற பாடலை மிகுந்த பசியோடு இருக்கும் போது எழுதினாராம்.
Related image

3.   கண்ணதாசனுக்கு காமராஜர் மேல் பெரிய பற்று இருந்தது. தி.முக.வில் மனக்கசப்புடன் இருந்த போது காங்கிரசுக்குப் போகும் எண்ணத்தில் காமராஜரை நேரில் சந்திக்கத் தயக்கப்பட்டு இருக்கும்போது எழுதிய பாடல்தான், "அந்த சிவகாமி மகனிடம்  சேதி சொல்லடி" என்ற பாடல். இந்தப்பாடல் மூலம் அந்தச் செய்தியை காமராஜரும் புரிந்து கொண்டு அதற்குப் பதில் சொன்னது ஒரு ஆச்சரிய நிகழ்வுதான். அதோடு "எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகனே", “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" மற்றும் "ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" போன்ற பாடல்கள் காமராஜரை மனதில் வைத்து அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்று சொல்கிறார் புத்தக ஆசிரியர்.
4.   கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் “கன்னியின் காதலி” என்னும் படத்தில் வந்த கலங்காதிரு மனமே"  அதைத்தனக்குத் தானே எழுதிக் கொண்டாராம். S.M. சுப்பையா நாயுடு இசையில் வந்த இந்தப் படத்தின் இயக்குநர் கோவையைச் சேர்ந்த ராம்நாத். 
5.   கண்ணதாசன் ஒரு மிக்சர் பொட்டலத்தில் அண்ணாதுரை எழுதிய "கல்லைத்தான் மண்ணைத்தான், காய்ச்சித்தான் குடிக்கத்தான்" என்ற உரையை படிக்க நேர்ந்த உடன்  எழுதிய பாடல்தான் "அத்தான் என் அத்தான்" என்ற பாடல். பாடல் முழுவதும் "தான் தான்" இரு வரும்படியாக இந்தப் பாடலை கவிஞர் எழுதியிருப்பார்.
Image result for anna with karunanidhi

6.   சென்னை மாநகரத் தேர்தலில் கண்ணதாசன் தன் சொந்தப் பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவழித்து கடுமையாக உழைத்தாராம். ஆனால் வெற்றி கிட்டியதும் அண்ணா, கருணாநிதிக்கு கணையாழி அணிவித்துப் பாராட்ட  நொந்துபோன நிலையில் கண்ணதாசன் எழுதிய பாடல்தான் "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்".
7.   கண்ணதாசன் தயாரித்து 'கவலையில்லாத மனிதன்” படம் தோல்வியடைந்தபின்  எழுதிய பாடல் "சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்".
8.   கவிஞர் ஒரு வேலை விஷயமாக ஒரு கிராமத்தில் போய் தங்கியிருக்கும் போது, காலையில் கேட்ட கோயில் மணியின் நினைவாக எழுதியதுதான் "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்".
9.   தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து துவண்டு கவலைப்பட்ட நேரத்தில் எழுதிய பாடல் "கலைமகள் கைப்பொருளே, உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ"
10.                தன் முதல் காதலியின் ஞாபகமாக எழுதியது தான் "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா" என்ற பாடல்.
11.                சிவாஜி பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட அண்ணா அப்போது வேறு கட்சியில் இருந்த கண்ணதாசனைப் பார்த்து “எங்கிருந்தாலும் வாழ்க” என்று சொன்னாராம். அதன் நினைவாக எழுதப்பட்ட பாடல்தான் "எங்கிருந்தாலும் வாழ்க  உன் இதயமும் அமைதியில் வாழ்க" ,என்ற பாடல்.
12.                ஒரு விழாவில் மேடையில் இருக்கும் போது தன் முன்னால் காதலி தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்ததின் ஞாபகமாக "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்" என்ற பாடலை எழுதியிருக்கிறார்.
13.                தன் மனைவி பொன்னம்மா, ஞாபகமாக, "தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா" என்ற பாடல் பிறந்திருக்கிறது.
14.                Sleep Dwell upon thine Eyes என்ற சேக்ஷ்பியரின் வரிகளை ஒட்டி "தூக்கமும் கண்களைத்தழுவட்டுமே" என்று எழுதியிருக்கிறார்.
15.                தன் முதல் காதலி நினைவாக "காலங்களில் அவள் வசந்தம்" ,என்று பாடினாராம்.
Image result for kannadasan with Anna


16.                M.S. விஸ்வநாதன், பிரிந்துபோன ராம மூர்த்தியை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எழுதிய பாடல்தான் "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?".
17.                நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்காக பெங்களூரில் ரூம் போட்டு தங்கியிருந்த சமயத்தில் ஒரு வாரமாகியும் பாட்டெழுதாமல் இருந்த கண்ணதாசனை எம்.எஸ்.வி கடிந்து கொண்டாராம். அப்போது உடனே எழுதிய பாடல்தான் "சொன்னது நீதானா, சொல் சொல் சொல்".
கண்ணதாசன் மற்றும் திரைப்படப் பாடல்களின் ரசிகர்கள் இந்தப் புத்தகத்தில் புதையல் எடுக்கலாம்.  
முற்றும்.

Thursday, January 11, 2018

கண்ணதாசனின் காதலும் காமமும் !!!!

Image result for Muthal iravu movie
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 37
“மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_30.html

          1979ல் வெளிவந்த “முதல் இரவு” என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.


பாடலின் பின்னணி:
          இளம் காதலர்கள் இணைந்து போகும்  ரயிலில் டூயட் பாடுவது போல் அமைக்கப்பட்ட பாட்டு இது.
இசையமைப்பு :
Image result for ilayaraja in muthal iravu movie

          இரண்டு உப்புத்தாளை தாளம் தப்பாது உரசினால் வரும் ரயில் போகும் சத்தத்தில் ஆரம்பிக்கிறது பாட்டு, பின்னர் ரயில் கூவும் சத்தம் வருகிறது. பின்னர் அதனுடன் கிடார் ரிதம்  ஸ்ட்ரம்மிங் இணைந்து அதே ரயில் சத்தம் போல் ஒலிக்க ,ஊஊஊ என்று ரயில் கூவுவது போல் பெண் குரலில் ஹம்மிங் வருகிறது. ஹம்மிங், ஃபேட் ஆகி முடியும் போது “மஞ்சள் நிலாவுக்கு”, என்று ஆண்குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. பல்லவி ஆரம்பிக்கும்போது காங்கோ ஒரு வித்தியாச ரிதம் பேட்டர்னில் சேருகிறது.அடுத்த வரியில் "இது முதல் உறவு" என்று பெண் குரல் சேர்ந்துகொள்ள இருகுரலும் "இந்தத் திருநாள்  தொடரும் தொடரும்” என்று மாறி மாறி பாட பல்லவி முடிகிறது.
          அதன்பின் வரும் முதல் BGM ல் வயலின் குழுமம், புல்லாங்குழல், கீ போர்டு, தபேலா மற்றும் காங்கோ ஆகியவை கலந்து கட்டி ஒன்றின் மேல் ஒன்று உட்கார்ந்து பாடலின் அதே மூடை மெயின்டெய்ன் செய்து முடிக்க, சரணம் "ஆடுவது பூந்  தோட்டம்" என ஆண் குரலில் ஆரம்பிக்கிறது. பல்லவி போலவே சரணத்திலும் ஆண் /பெண் குரலின் ஹம்மிங்கோடு முதல் சரணம் முடிகிறது. இரண்டாவது BGM ல் ஒலிக்கும் புல்லாங்குழல், வயலின் குழுமம், கிடார் ஆகியவை முதல் BGMக்கு முற்றிலும் மாறாக எங்கெங்கோ சென்று அலைந்து திரும்பவும் பழைய சுருதிக்கு வந்து சேர 2--ஆவது  சரணம் "வீணையென நீ மீட்டு" என பெண்குரலில் ஆரம்பிக்கிறது, முதல் சரணம் போலவே ஆண்பெண் குரல்கள் மாறி  மாறி ஒலிக்க ஊ ஊ என்று ஹம்மிங்குடன் ரயில் சத்தம் வர அப்படியே ரயில் தூரத்தில் சென்று மறைகிறது.

வரிகள்:
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
 இது முதல் உறவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அணைக்கின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்
ஊஊஊ ……

வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஊஊஊ
மஞ்சள் நிலாவுக்கு

Related image


          இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இதை எழுதும் போது  கோப்பையும் கோலமயிலும் துணையாக இருந்தனவா என்று தெரியாது. ஆனாலும் காதல் சொட்டும் இந்தப் பாடலில் காமத்தை சற்றே குழைத்து உள்ளே அமைத்திருக்கிறார். பல்லவியிலேயே இதுதான் முதல் உறவு என்று சொல்வதோடு இதுதான் முதல் கனவு என்றும் சொல்லி காதலர்களுக்கு  காதல்தான் எல்லாம் என்று சொல்லியிருக்கிறார். முதல் சரணத்தில் வழக்கமான வரிகள் என்றாலும் இரண்டாவது சரணத்தில், "மேனியை வீணையாக்கி  பாட்டொன்றை மீட்டு என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரிகளில் வேண்டாம் விவகாரமாகப் போய்விடும். ஆனால் இதனைப் படிக்கும் போது கண்ணதாசன் காதல்தாசனா? இல்லை காமதாசனா? என்று விளங்கவில்லை. காமமின்றி காதல் ஏது? ஆனால் காதலின்றி காமம் தீது.
குரல்:
Image result for jayachandran with susila
Jeyachandran with P Susila 
          இசையினிமைக்கு குரலினிமை சேர்த்தவர்கள், ஜெயச்சந்திரனும் பி.சுசிலாவும் குறிப்பாக எல்லா மலையாளிகளின் பேஸ் குரல்களில் ஒரு சோகம் ஒளிந்திருக்கும். இந்தப்பாடலில் உற்சாகமாக ஆரம்பித்தாலும் 2-ஆவது சரணத்தில் "எந்நாளும் உறவினரை பிரிவும் இல்லை" என்ற வரிகளில் சோகம் ஓடிவிடுகிறது. பி.சுசிலா தனது இனிமையான குரலில் பாடலுக்கு அழகு சேர்க்கிறார். சேட்டைகள் இல்லாத ஆனால் இளமை ததும்பும் குரல்.
இளையராஜா அசால்ட்டாக இசை அமைத்திருக்கும் இந்தப் பாடல் அப்படியே ரயில் பயணத்தைக்  காதுகளில் ஒலித்து கண்கள் முன் கொண்டு வருகிறது. இந்தப் பாடலை ரயில் பயணம் செய்யும் போது கேட்டுப் பாருங்களேன். என்ன டூயட் பாட துணை வேண்டுமா? அய்யய்யோ அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.
இன்னும் வரும்>>>>