Showing posts with label நியூயார்க் பக்கங்கள். Show all posts
Showing posts with label நியூயார்க் பக்கங்கள். Show all posts

Thursday, January 14, 2021

நியூயார்க்கில் பொங்கல் -2021

 


பொங்கலும் வந்தாச்சு

தையும் பொறந்தாச்சு !

 

இன்று காலையில்

ஓட் கஞ்சியை  கொதிக்க விட்டு

பொங்கலோ பொங்கல்னு சொன்னேன் !.

 

என்  செய்வேன்

திங்க

பொங்கலும்  இல்லை

கடிக்க

கரும்பும் இல்லை

பொங்கலுக்கு லீவுமில்லை

போட்டுப்பாக்க  புதுசும் இல்லை !

 

வாழ்த்து மட்டும்

வாட்ஸாப் பூரா கொட்டுது

ஆனால்

வலி தீர இன்னும்

வழியில்லையே !

 

தமிழ்ச்சங்க விழா வரும்

தரமான பொங்கல் தரும்னு நினைச்சேன்

அதுவும் ஆன்லைனாம்

அம்புட்டும் ஜூம் லைனாம்!


கொரானாவும் போகலை

கொடுமைச்சாவும் நிக்கலை

புதுசு  புதுசா வரு து

தினுசு தினுசு  கொல்லுது! 

 

கடைக்கும் போகமுடியலை

கவசத்தையும் கழட்ட முடியலை!

 

தடுப்பூசி வந்தாச்சு ஆனா

நமக்கு வர

நாலஞ்சு  மாசம் ஆகுமாம் !

 

டிரம்ப் போயி

பைடன் வந்தாச்சு

வேலை கிடைக்குமா

வெளிச்சம் வீசுமா ?

 

ரெண்டா பிரிஞ்சு நிக்குது ஜனநாயகம்

ஒண்ணா சேர்க்குமா புது பைடன் நாயகம் !

 

இந்தியாவில்

கார்போரேட்டுகளின் ஆட்சி

கனவுகளைச்சிதைக்குது

விவசாயி ஓலம் காதுல கேக்கலை

விவசாயி சாவு இன்னும் நிக்கலை


 தமிழகத்தில்

அரசியல் சத்தம்

அதிகமா கேக்குது

ஆட்சிக்கு யாரு வரதுன்னு

அடிதடி பேச்சு நடக்குது

 

இப்ப

பல தடவை  வருவாங்க

பாசத்தை காட்டுவாங்க

பரிசுகளும் கொட்டுவாங்க

 

வாங்கி வைத்துக்கொண்டு

வாக்குப்போடும்போது

நோக்கப்படி போடுங்க

 

கேட்ட பணம் கிடைச்சாலும்

ஓட்டை மட்டும் விக்காதீங்க

சன்மானம் கிடைத்தாலும்

தன்மானத்தை

தாரை வாத்திடாதீங்க

 

தை பிறந்தாச்சு

வழியும் பிறக்கும்

நம்புவோம்

எஞ்சியிருப்பது

நம்பிக்கை மட்டும்தானே

 

பொங்கல் நல்வாழ்த்துகள்

அன்புடன்

உங்கள் பரதேசி

ஆல் ஃபிரட் தியாகராஜன்

 

அன்பு நண்பர்களே பொன்விழாக்கண்ட  நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக்குழுத்தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன் ,வெள்ளிதோறும் இலக்கிய உலாக்களை நடத்தத்துவங்கியிருக்கிறோம்.  அனைத்தும் ஆன்லைன் என்பதால் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் , நன்றி .




Thursday, May 7, 2020

கொரோனாவால் விளைந்த நன்மைகள்


கொரோனா பாதிப்பால்  பல தீமைகள் நடந்திருந்தாலும் எனக்கு  சில  நன்மைகளும்  கிடைத்தன .

எச்சரிக்கை :  தயவு செய்து என் மனைவியிடம் சொல்லிவிடாதீர்கள் (ரகசியம் பரம ரகசியம் ).
இந்தக்கணக்கு ஒரு மாதக்கணக்கு .
ஒரு  ஐடியாவுக்காக இந்திய மதிப்பையும்  பக்கத்தில் கொடுக்கிறேன் .

1) முதலில் கட்  ஆனது மெட்ரோ கார்ட்  செலவு       : $ 128.00  -   ரூபாய் 9728.00
2) கார் பெட்ரோல் செலவு                                                   : $ 100.00   -   ரூபாய் 7600.00
3)  ஈஸி   பாஸ் ( டோல்)                                                          : $ 100.00   -   ரூபாய் 7600.00
4) இன்சூரன்ஸ்  டிஸ்கவுன்ட் ( கார் ஓட்டாதனால்     : $ 100.00   -   ரூபாய் 7600.00
5) கார் வாஷ் செலவு ( டிப்ஸ் உட்பட )                             : $   35.00     - ரூபாய் 2660.00
6)  வெளியில் சாப்பிடும் செலவு                                        : $ 200.00   -   ரூபாய் 15200.00
7) ட்ரை கிளீனிங் ( வீட்டில் வேலை செய்வதால்)        : $  60.00    -   ரூபாய் 4560.00
8) ஷு பாலிஷ்  ( டிப்ஸ் உட்பட )                                          : $    6.00     -  ரூபாய்  456.00
9) மாலை நொறுக்குத்தீனி                                                    :  $   60.00    - ரூபாய் 4560.00
10) முடி வெட்டி சாயம் போட ( டிப்ஸ் உட்பட )              :  $    35.00     - ரூபாய் 2660.00
11) பலசரக்கு (பாதிக்கு மேல் மிச்சம் )                              :  $ 200.00   -   ரூபாய் 15200.00
12) வீடு கிளீனிங் (வெளியில் இருந்து வருவார்கள்):    $ 200.00    -   ரூபாய் 15200.00
13) பெடிகுயூர் (மாதம்  ஒரு முறை- டிப்ஸ் உட்பட)       :  $ 25.00   -      ரூபாய் 1900.00
14) பாத மசாஜ் ( மாதமிருமுறை-டிப்ஸ் உட்பட )           : $ 70.00    -     ரூபாய் 5320.00
15) பாடி மசாஜ் (மாதம்  ஒரு முறை- டிப்ஸ் உட்பட)       $  60.00   -      ரூபாய் 4560.00
16)ஷேவிங் ( வாரம் ஒரு முறையாக குறைந்ததால் : $   20.00   -      ரூபாய் 1520.00
17) ஷேரிங் கேப் ( 5X 4X 4)                                                         $80.00     -       ரூபாய் 6080.00

இன்னும் யோசித்தால் அதிகமாய்தான் வரும் .
ஆகமொத்தம்  மிச்சமானது :  $ 824      ரூபாய் 62624.00     



அம்மாடியோய் நானே இவ்வளவு வருமென்று எதிர்பார்க்கவில்லை.
இது தவிர வெளி நாடுகள் பயணம் ஒன்றும்   இல்லை .இனிமேல் எப்போது போகமுடியும் என்றும் சந்தேகமாக இருக்கிறது .கடைசியாய் போனது , செப்டம்பரில் 2019 பிரான்ஸ் , இத்தாலி ( ரோம் , பீசா , வெனிஸ் ,பிளாரென்ஸ் -ஜஸ்ட் மிஸ்டு  கொரோனா  ) நவம்பர் மற்றும் ஜனவரியில் இந்தியா .
அட பரதேசி இப்படி சேமித்த பணத்தை    என்ன செய்கிறாய்?  என்று மகேந்திரன் கேட்பது காதில் விழுகிறது .
கீழ்க் கண்ட நல்ல காரியங்களுக்காக செலவு செய்தேன்  .   இன்னும்  செய்யலாம்  .
1) கூடலூரில்  இருக்கும் என்   சமூகப்பணிக்கு ( www.goodwillcdp.org )
2) மதுரையில் ஊரடங்கால் வாடும் ஏழை மக்களுக்கு சு.வெங்கடேசன் MP. மூலம் உதவி.
3) மதுரையில் அகால மரணமடைந்த என் வகுப்புத்தோழன் குடும்பத்திற்கு ஒரு சிறிய உதவி .

நண்பர்களே, நிச்சயமாய் நீங்களும் இப்படி சேமித்த பணத்தை ஏதாவது நல்ல செயல்களுக்கு பயன்படுத்தலாமே .

  இன்றைய கொரோனா நிலவரம்  May 7th, 2020)
 USA :                                                 New York
Total cases: 1266785.00                    333491
Total deaths: 74962                           25956

Monday, May 4, 2020

கொரானா வைரஸ் லாக் டவுன் சமாளிப்புகள்

பரதேசியின் கொரானா வைரஸ்  லாக் டவுன் சமாளிப்புகள்


காலை 8 மணி
ரூ: லேசா தலை வலிக்குது , கொஞ்சம் டீ  போட முடியுமா ?
ப: உனக்குத்தெரியாதா , எனக்கு பாலைப்பார்த்தாலே கொமட்டிட்டு வரும், இல்லைனா போட்டுத் தரமாட்டேனா ?
ரூ: (இந்த மனுசனால ஒரு பிரயோஜனமும் இல்லை)

காலை  11 மணி
ரூ: ஏங்க  சும்மாதான இருக்கீங்க , கொஞ்சம் காய்  வெட்டித்தறீங்களா ?
 ப :என்ன ரூத் , மறந்திட்டியா ?
ரூ: என்ன சொல்றீங்க ?
ப அப்பவே காய்கறியெல்லாம் மொத்தமா வாங்கி வெட்டி ஃபிரீஸ் பண்ணிட்டேன்னு  நீதானே சொன்ன ?
ரூ: (ஆமா இல்லைனாலும்.)

மதியம் 1 மணி
ப : என்ன ரூத் இன்னைக்கி  என்ன சமையல் ?
ரூ : கத்திரிக்காய் சாம்பாரும் ரசமும்
ப: (சாப்பிட்டுவிட்டு ), சாம்பார்ல கொஞ்சம் பெருங்காயம் தூக்கலா இருந்துச்சு , ரசத்தில் கொஞ்சம் கடுகு கருகிருச்சு ?
ரூ: குறை  சொல்லாட்டி உங்களுக்குத் தூக்கம் வராதே  ?
ப: மத்தபடி அப்பளம் , ஊறுகாயெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு , என்ன ப்ராண்ட் ?
ரூ : பால் ,தயிர் , வெண்ணை சாப்பிடாமலே உங்களுக்கு இவ்வளவு கொழுப்பு எப்படி வந்துச்சு ?
ப: எனக்கு கொழுப்பெல்லாம் இல்லை, கொஞ்சூண்டு சுகர் மட்டும்தான் .



மதியம் 2 மணி
ரூ : என்னங்க , பாத்திரம் எவ்வளவு சேர்ந்து போச்சு பாருங்க ? வீட்டிலே இருக்கீங்க கொஞ்சம்  கழுவித்தரக்கூடாதா ?
ப : என்னது பாத்திரம் கழுவனுமா ? ஏன் மார்ச் முதல் வாரம்தான் டிஷ் வாஷர் போட்டமே ? அதுல போட்டிரு
மகேந்திரன் : பரதேசி நீ ஒரு தீர்க்கதரிசிடா
ரூ: ஆமா அத எப்படி போடுறதுன்னு தெரியலையே ?நீங்க கொஞ்சம் வந்து பாருங்க ?
ப: அனிஷா , இங்க வந்து அம்மாவுக்கு டிஷ் வாஷர் போடச் சொல்லிக்கொடு
ரூ: (உட்கார்ந்த இடத்தை விட்டு நகர  மாட்டியே)

2 முதல் 5 மணி வரை தூக்கம் (மனைவிக்குத்தான்)  அப்பாடா எனக்கு கொஞ்சம் ஃபிரீ டைம்

மாலை 5 மணி
ரூ : காலையிலிருந்து இப்படியே பொழுதை போக்கிட்டு இருக்கீங்களே ?கொஞ்சம் வாக்யூம் போடுறீங்களா ?
ப : லொக் லொக் லொக்
ரூ: என்னங்க என்னாச்சு ? (கொரனோ வந்துருச்சோ)
ப: இந்த டஸ்ட் அலர்ஜி திரும்ப வந்துரிச்சுனு நினைக்கிறே ன்
ரூ: (எப்பவும் எதையாவது சொல்லி சமாளிக்கிறானே ?)

மாலை 9 மணி

ரூத் :ஏங்க ஒரு வேளை என்னைப்பிடிக்காமலே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களோ ?
ப: 27 வருஷம் வாழ்ந்து ரெண்டு பிள்ளை பெத்து , பேரன் பேத்தி எடுக்கிற வயசில கேக்கிற கேள்வியா இது ?
ரூ : பின்ன ஏன் என்னப் பார்த்தா  விலகி விலகி போறீங்க?

ப : நான் நம்ம தலைவர்கள் சொல்றத கடைப் பிடிக்கிறேன்
ரூ : அது  என்னாது  ?
ப : சோசியல் டிஸ்டன்சிங்தான்
ரூத் : ( மைண்ட்  வாய்ஸ்) இவனுக்கெல்லாம் கல்யாணம் தேவையா ?
ப : ( மைண்ட்  வாய்ஸ்) ஸ் அப்பாடா ஒரு நாளைக்கடத்திட்டேன் , நாளைக்கு எப்படியோ கடவுளே ?



Thursday, April 30, 2020

நியூயார்க்கில் வ(க)சந்தகாலம் :

நியூயார்க்கில் வ(க)சந்தகாலம் :


வீட்டுச்சிறையில்
வெகுகாலம் இருந்த நான் இன்று சற்றே
வெளியில் எட்டிப்பார்த்தேன்.

மண்ணில் புதைத்த கிழங்குகள்
மகிழ்ந்தே முகிழ்த்திருந்தன  !
அவற்றுக்குத்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

வீட்டின் முன்
காவல் தூண்கள் போல்
காத்து நின்ற என்னிரு அசோக மரங்கள்
கரும்பச்சையில் களிப்பாய்
காற்றில் அசைந்தன !
அவற்றுக்குத்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

இலை உதிர்த்து , சில கிளை உளுத்து
உச்சி வரை குச்சியாய் நின்றிருந்த
சாலை மரங்கள்
பச்சையை வெளித்தள்ளி
பரவசமாய்  இசைந்தன !

உருமாறி
பழுப்பேறிய  புற்கள்
 இளம்பச்சையில்
நிறம் மாறி
பச்சைப் போர்வையை
பதவிசாய்  விரித்திருந்தன !

புல்தரையில் மேல்
ஆங்காங்கே
நீல பாணட்டுகள்
ஒளிந்து பார்த்துக்கண்சிமிட்டி
ஒளிர்ந்தன

பட்டுப்போன
என் மனைவியின் ரோஜாச்செடிகள்
பட படவென உயிர்த்தெழுந்து
பசுமையாடை உடுத்தி
மொட்டுக்கள் வருவதற்கு
மெட்டுக்கள் பாடின !

மறந்துபோன ,
இசைபாடும்
இச்சைக்குருவிகள்
பறந்து வந்து மறுபடியும்'
படுக்கையறை ஜன்னலில்
பூமி எழுமுன்
பூபாளம் இசைத்தன!

இவற்றுக்கெல்லாம்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

ஆனால்
கொரானாவுக்கு தெரியவில்லையே .
இது  வசந்த காலம் என்று?

செய்தி வாசிப்பவள்
புன்னகை மாறாமல் சொன்னாள்
இன்றும் நியூயார்க்கில்
புது நோயாளிகள் நான்காயிரம்
புது இறப்புகள் நானூறு என்று !

இதற்கு  ஒரு
சாவு காலம் வந்தால் தான்
நமக்கு இனி எந்த காலமும்
இல்லையென்றால் இந்த
வசந்த காலமும் நமக்கு
கசந்த காலம்தான் !

வெளியே
வசந்த காலமென்றாலும் உள்ளுக்குள்
அசந்த காலமாய் நீளும் இந்நிலை
எப்போது மீளும்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று முடியும் எங்கள் அடிமையின் நேரம் !

பரதேசி ஆல்ஃபி
ஏப்ரல்  30,  2020

Thursday, December 12, 2019

நான் தான் அவன், அவன்தான் நான்! சம்பவம் இரண்டு



                              இதற்கு முந்தின பகுதியைப்படிக்க இங்கே சுட்டவும்  
                    https://paradesiatnewyork.blogspot.com/2019/12/blog-post.html
  
ஒரு ஞாயிறு மாலை வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, அப்போது மேலே குடியிருந்த என் மனைவியின் தம்பி தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை மரியாதை நிமித்தமாகவோ, அல்லது எங்கள் வீட்டில் சாப்பிடவோ அல்லது நான் சேகரித்து வைத்திருக்கும் கலைப் பொருட்களைப் பார்க்கவோ அழைத்து வருவதுண்டு.
          அன்றைய நாளில் வந்தவரிடம் நடந்த உரையாடலை கீழே தருகிறேன்.
பரதேசி : வாங்க உட்காருங்க
சென்னை : நன்றி சார்
பரதேசி : சென்னையில் என்ன செய்கிறீர்கள்?
சென்னை : லேடி ஆண்டாள் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறேன் சார்.
பரதேசி : மகிழ்ச்சி, நியூயார்க்கிற்கு என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்.
சென்னை: எங்கள் மாணவரோடு கல்விச் சுற்றுலா வந்திருக்கிறோம். அவர்களெல்லாம் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். நான் மட்டும் நண்பரைப் பார்க்க வந்தேன்.
மைத்துனர் : (என்னைக்காட்டி) இவர் தமிழ்ச்சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். நிறைய எழுதுவார், பட்டி மன்றம் பேசுவார் .
சென்னை: அப்படியா எனக்குக்கூட ஒரு எழுத்தாளரைத் தெரியும்?
பரதேசி : அவர் எங்கே இருக்கிறார்?
சென்னை : இங்குதான் நியூயார்க்கில் இருக்கிறார். நியூயார்க்கில் நடக்கும் சில நிகழ்வுகளை சுவையாக எழுதுவார்.
பரதேசி : அப்படியா? அவர் பெயர் என்ன?
சென்னை : இருங்கள் சட்டென ஞாபகம் வரமாட்டேங்குது.  சமீபத்தில் கூட ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரை வந்திருந்தது.
என்று சொல்லிவிட்டு தன கைத்தொலைபேசியில் தேடித்தேடி ஆனந்த விகடனில் வெளிவந்த என்னுடைய ஆர்ட்டிகளை எடுத்துக் காண்பித்தார்.
பரதேசி : அவரை உங்களுக்குத் தெரியுமா?
சென்னை: நெருங்கிய பழக்கமில்லை. ஆனால் ஓரளவுக்குத் தெரியும். அவருடைய பிளாக்கை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.
பரதேசி : எனக்கும் அவரை ஓரளவுக்குத் தெரியும்.
சென்னை : அவர் பெயர் கூட, இருங்கள் பார்த்துச் சொல்கிறேன். ஆம் அவர் பெயர் பரதேசி.
          அப்போது என் மனைவி சமையலறையிலிருந்து வந்து, அந்தப் பரதேசி இவர்தான் என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர். சென்னைக்காரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
முற்றும்.


  

Monday, December 9, 2019

நான் தான் அவன், அவன்தான் நான்! சம்பவம் - ஒன்று.

Image result for confused man cartoon free


இதுபோல ஒருமுறை நடந்தாலே அது ஆச்சரியம்தான். ஆனால் இருமுறை இதுபோல நடந்ததை நினைத்தால் எனக்கே நம்ப முடியவில்லை. அந்த இரண்டு சம்பவங்களையும் சொல்கிறேன், நீங்களே சொல்லுங்கள்.
சம்பவம் - ஒன்று.
          2000 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து நியூயார்க் வந்த புதுசு. கிறித்தவத் தமிழ்க் கோவில் செல்ல ஆரம்பித்த சமயம். அந்தக்கோவிலின் உறுப்பினர் வீட்டில் பிறந்த நாள் விருந்துக்காக என்னை அழைத்திருந்தார்கள். அங்கே அவர்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார்.
          சென்னையில் நன் இருந்த போது குட்வில்  மனிதவள மேம்பாட்டு (Goodwill HRD Consultants  Pvt  Ltd) என்ற நிறுவனத்தை நிறுவி நடத்திவந்தேன். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில்தான் நியூயார்க் வந்திருந்தேன். என்னை அந்த சென்னை நண்பருக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது நடந்த உரையாடலை இங்கு தருகிறேன்.
பரதேசி : வெல்கம் டு நியூயார்க்
சென்னைக்காரர் : தேங்க்யூ, நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?
பரதேசி : ஒரு ஐ.டி. கம்பெனியில் இருக்கிறேன்.
சென்னை: எல்லாரும் பெரும்பாலும்  ஐடி தானே இங்க, எப்ப வந்தீங்க
பரதேசி: நான் வந்து ஒரு ஆறு மாசம் ஆச்சு
சென்னை : அப்படியா இங்க எப்படிப் போகுது?
பரதேசி : பரவாயில்லை.
சென்னை: உங்கள் குடும்பம் எங்கு இருக்கிறாங்க?
பரதேசி : ஊரில்தான் இருக்கிறாங்க, ஹெச் 1 B விசா கிடைச்சதும், அவங்களை வரவழைக்கணும்.
  சென்னை: மேரீட் பேச்சிலர்ன்னு சொல்லுங்க.
பரதேசி : ஹாஹா அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
சென்னை: இந்தியாவில எந்த ஊர்?
பரதேசி : சொந்த ஊர் மதுரைப்பக்கம், ஆனா சென்னையில செட்டிலாகி கொஞ்ச ஆண்டுகள் ஆயிருச்சு.
சென்னை : சென்னையில் எங்க?
பரதேசி : மணப்பாக்கம், போரூர் போகும் வழியில் ராமாபுரம் எதிரில் இருக்கு.
சென்னை: சென்னையில் என்ன பண்ணீங்க?
பரதேசி: ஹெச் ஆர்  தான் சில கம்பெனிகள்ல இருந்தேன்.
சென்னை: ஓ ஹெச் ஆரா உங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குட்வில் தெரியுமா?
பரதேசி: தெரியும்
சென்னை: குட்வில் ஹெச் ஆர்.டி கன்சல்ட்டன்டஸ்?
பரதேசி : நன்றாகத் தெரியும்.
சென்னை : அதன் சி. இ.ஒ. எனக்கு நெருங்கிய நண்பர்.
பரதேசி : அப்படியா?
சென்னை: அவர் சென்னையில் பெரிய ஆள்
பரதேசி : அப்படியா?
சென்னை : பல கம்பெனிகளுக்கு டிரைனிங், ஹெச் ஆர் மற்றும் ரெக்ரூட்மென்ட் செய் கிறார்கள்.
பரதேசி : ம்ம்
சென்னை : என் குளோஸ் ஃபிரெண்டுதான்,  உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் சொல்லுங்கள், அவரிடம்  சொல்கிறேன்.
பரதேசி : அவரை நேரில் பாத்திருக்கீங்களா?
சென்னை: என்ன அப்படிச் சொல்லீட்டிங்க, எனக்கு அவரை நல்லாவே தெரியும்.
பரதேசி : அவர் பெயர்.
சென்னை : அவர் பெயர் ஆல்ஃபிரட் ராஜசேகரன். பக்கத்தில் இருந்த எல்லோரும் சிரிக்க நான் சொன்னேன். அந்த ஆல்ஃபிரட் ராஜசேகரன் தான் நான்.
- சென்னைக்காரருக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துப்போனார்.

அந்த இரண்டாவது சம்பவத்தை அடுத்த முறை சொல்கிறேன் .

தொடரும்

Monday, November 25, 2019

எடப்பாடியுடன் பரதேசி !!!!!



நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர்களுடன் எடப்பாடி 
கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்திய தீபாவளி விழாவில் வெளியாடப்பட்ட மலரில் வெளிவந்த என்னுடைய பதிவு .


நான் எதிர்பாராத ஒன்று அன்று நடந்தது. 2019 செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழக முதல்வர் நியூயார்க் வருகிறார். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி ஃபெட்னா அமைப்பை தமிழக அரசு அணுக (Fetna - Federation of Tamil Sangams of North America)
 ஃபெட்னா அமைப்பு உள்ளூர் அமைப்பான நியூயார்க் தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொண்டது.
ஃபெட்னா அமைப்பின் பொருளாளாளராகப் பதவி வகிக்கும் விஜயகுமார் இதற்கான முதல் ஈமெயில் அனுப்பினார். இவர் நியூயார்க்காரர், நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் இந்நாள் ஆலோசகர். அதன்பின் நியூயார்க் குயின்சில் உள்ள ராஜதானி உணவகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்த போதும் அடியேனும் கலந்து கொண்டேன்.
எடப்பாடியின் நியூயார்க் வருகை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று செப்டம்பர் 3 ஆம் தேதி  மதியம் 2 மணிக்கு நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் கூட்டம். அதன்பின் மாலை ஏழு மணிக்கு நடந்த அமெரிக்க வாழ் தமிழர் கூட்டம். அழைப்புப் பெற்றவர் மட்டுமே இரண்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள முடியும். இதில் இரண்டுக்குமே எனக்கு அழைப்பு வந்தது. நடைபெற்ற இடம் நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியின் பரபரப்பு மிகுந்த டைம் ஸ்கொயர் சதுக்கத்திலிருந்த நியூயார்க் மேரியட்  மார்கிஸ் என்ற சொகுசு ஓட்டலின் 9ஆவது மாடி. 
அன்றைய தினம் விஜயகுமார் தொடர்பு கொண்டு, “கொஞ்சம் சீக்கிரம் வரமுடியமா? சிறிது உதவி தேவைப்படுகிறது” என்றார். என்னுடைய அலுவலகம் இருந்த பகுதிக்கு மிகவும் அருகில்தான் டைம்ஸ் கொயர் என்பதால் 1 மணிக்கெல்லாம் அங்கு சென்று சேர்ந்தேன். அப்பொழுதே மக்கள் வரத்தொடங்கிவிட்டனர். அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ  என்ற இரண்டு ஊர்களுக்கு மட்டுமே   முதல்வர் வந்ததால், அட்லான்ட்டா, டெக்சஸ் , வாஷிங்டன்  டி.சி. நியுஜெர்சி, வர்ஜினியா, கனடிக்கட் என்று பல மாநிலங்களிலிருந்து வந்திருந்தனர் .
வரவேற்புப் பகுதியில் நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர் அரங்கநாதன் என்ற ரங்காவும் துணைப் பொருளாளர் குமார ராஜாவும் ஏற்கனவே அழைப்புப் பெற்று, ஏற்றுக்கொண்டு ரிஜிஸ்டர் செய்தவர்களை பட்டியலில் சரிபார்த்து பேட்ஜ் ஸ்டிக்கர்களை வழங்கிக் கொண்டிருந்தனர். விஜயகுமார் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் மகிழ்ந்து என்னை அழைத்துக் கொண்டு போய் ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவர் பெயர் நீரஜ் மீத்தல். அவர் பெயரும் தோற்றமும் வட இந்தியராகத் தெரிந்தாலும் தமிழில் பேசினார். சிறிது உடைந்த தமிழ் என்றாலும் நன்றாகவே பேசினார். அவர் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் & எக்ஸ்போர்ட் புரமோஷன் பீரோ கைடன்ஸ் என்ற அமைப்பின் MD  IAS அதிகாரி .
Image may contain: 25 people, including Ranganathan Purushothaman, Vijay Vijayakumar, Kathirvel Kumararaja and Alfred Thiagarajan, people smiling, people standing
With IAS officers
அவர் என்னிடம்  "இதோ பாருங்கள் , உள்ளே குறைந்த அளவே இருக்கைகள் உள்ளன. செக்யூரிட்டி இஸ்யூ வேற இருக்கு. பேட்ஜ் இல்லாத யாரையும் உள்ளே விடாதீர்கள். அதோடு இப்போது யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம். 1.30 மணிக்கு மேல் விடுங்கள்", என்று சொல்லிவிட்டு மேலும் உள்ளே உள்ள சீட்டிங் அரேஞ்மென்ட்ஸ்களை விளக்கிவிட்டுச் சென்றார். என்னடாது பரதேசிக்கு வந்த சோதனை. சி.எம். மீட்டிங்குக்கு ஒரு என்ட்ரி கிடைத்தது என்று வந்தால் இங்கு கிடைத்தது என்டரி இல்லை சென்ரி என்று நினைத்து சிரிப்பும் கடுப்பும் ஒன்றாக வந்தது. இதனை நான் செய்ய முடியுமா? என்று யோசிக்கவும் முடியாமல் சிறிது நேரத்திலேயே கூட்டம் அலைமோதியது.
"பேட்ஜ் இருக்குதா? கேன் ஐ  சி யுவர் பேட்ஜ்? பிளீஸ் புட் யுவர் பேட்ஜ் அப், சாரி வித்தவுட் பேட்ஜ், யு கேன்னாட் கோ இன், பிளீஸ் கோ டு தி ரிஜிஸ்ட்ரேஷன் டு கெட் யுவர் பேட்ஜ், மன்னிக்க பேட்ஜ் அவசியம் , இப்போது உள்ளே போகமுடியாது"
இதெல்லாம் அடுத்த ஒரு மணிநேரம் நான் சொன்ன டயலாக்குகள்.
"என்னுடைய நண்பர் உள்ளே இருக்கிறார். இன்விடேஷன் வந்தது. ஆனால் என் பெயர் அங்கு இல்லை. நான் அந்த IAS அதிகாரிக்கு வேண்டியவன். நான் வெளியூரிலிருந்து வருகிறேன். உள்ளே விடுங்கள். எனக்கு பேட்ஜ் தேவையில்லை, நீங்கள் தமிழ்நாடு கவர்ன்மெண்டா ?”.
மேலே சொன்னவை நான் கேட்டவை.
சிறிது சிறிதாக என் மவுசு கூடியது. தடுத்து நிறுத்துவது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
இதில் சிலர் எனக்குத் தெரிந்தவர்கள், சிலர் என்னைத் தெரிந்தவர்கள். அவ்வப்போது மித்தல் வந்து, “உள்ளே உள்ள இருக்கைகளை விட இருமடங்கு வெளியே வந்திருக்கிறார்கள். பார்த்துக்கொள்”, என்று வேறு சொல்லிவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் சூட்டில் வந்தார். அங்கு வந்த பெரும்பாலும் அப்படித்தான் வந்திருந்தார்.
"எக்ஸ்யூஸ் மி, பேட்ஜ் பிளீஸ்"
"ஐ ஆம் தி சீஃப் செக்ரட்டரி ஆஃப் தமிழ்நாடு"
"சாரி, சரி உள்ளே போங்கள்.",
அவர்தான் ஷண்முகம் ஐ.ஏ.எஸ்  அதற்கடுத்து ஒரு பெண் வந்தார். எந்தவிதத்திலும் ஐ.ஏ.எஸ் அதிகாரி போலத்தெரியவில்லை. அதோடு பலபேர் என்னைச் சுற்றிலும் நின்று கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை மட்டும் உள்ளே விட்டால் என் மதிப்பு என்னாவது?
"கேன் ஐ சி யுவர் பேட்ஜ்"
"ஐ ஆம் தி செக்ரட்டரி டு தி சி.எம்"
பிறகுதான் தெரிந்தது அவர்கள்தான் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் முதல்வரின் தனி செயலாளர்.
இப்படி நான் தடுத்து நிறுத்தியவர்களில் கீழே உள்ள சிலரும் அடங்குவர்.
Dr. சந்தோஷ் பாபு, ஐ.ஏ.எஸ் -பிரின்சிபல் செக்ரட்டரி,
திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் பிரின்சிபல் செக்ரட்டரி, இண்டஸ்ட்ரீஸ் டிபாட்.
கடைசியாக நான் தடுத்தது நிறுத்தியது கான்சுலர் ஜெனரல் ஆஃப் நியூயார்க்.
சில வெள்ளைக்காரர்களையும் கூட மித்தல் வந்து சொன்னதாதால்  தான் உள்ளே விட்டேன். இவர்களையெல்லாம் எனக்கு முன்னப்பின்ன பார்த்ததில்லை. நானென்ன செய்வது.
அதற்கப்புறம், தொழிற்துறை மந்திரி, MC சம்பத், பால் வளத்துறை மந்திரி, ராஜேந்திர பாலாஜி, வருவாய்த்துறை மந்திரி, R.B.உதயகுமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் உள்ளே வரவில்லை. மூவருமே சூட்டில் இருந்தனர். அதன்பிறகு, இவர்கள் போய், முதல்வர் எடப்பாடியைக் கூப்பிட்டு வந்தனர். மந்திரிகளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் புடை சூழ வணக்கம் போட்ட கையை எடுக்காமல் எடப்பாடி வந்தார்.
அவசரமாக விஜய்குமாரைக் கூப்பிட்டு , “அதோ அங்கு வருபவர் எவருக்கும் உள்ளே இடமில்லை”, என்று சொன்னேன். அவர் சிறிது முறைத்துவிட்டுப்பின்னர் படக்கென்று சிரித்துவிட்டுச் சொன்னார், "ஆல்ஃபி நீ செஞ்சாலும் செய்வ" என்று. வந்த அவர்கள் எனக்கும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு உள்ளே நுழைய, நானும் சேர்ந்து நுழைந்தேன் . விழா இனிதே நடந்து முடிந்து இரவு விருந்தும் அளிக்கப்பட்டது . கொஞ்சம்  இருங்க என் பால்ய நண்பன் ஊரிலிருந்து  கூப்பிடுகிறான்.
என்ன மகேந்திரா என்ன கேட்கிற?
என்னது 2700 கோடிக்கு கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் உண்மையா இல்லையாவா?
ஏம்பா சும்மா இருக்க மாட்டியா?
முற்றும்
பின்குறிப்பு : ஐரோப்பா  மற்றும் இந்தியா போய்  வந்ததிலிருந்து எழுதுவதற்கும் பதிவிடுவதற்கும் ஒரு சோர்வு .நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால் திரும்பவும் ஆரம்பிக்கிறேன்.பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகும் என்று.


Thursday, September 5, 2019

நியூயார்க்கில் பூரான் !


Image result for பூரான்
இன்று காலையில் அதனைப் பார்த்துவிட்டேன். அதுவும் என் வீட்டில், அதுவும் என் படுக்கையறையில், அதுவும் படுக்கையறையில் உள்ள குளியலறையில்,
டேய் மேலே சொல்லு, அதுவும் அதுவும்னு சொல்லி கழுத்தறுக்கிற, இதுல ஃபிளாஷ்பேக் டெக்னிக் வேற நீயெல்லாம் எழுதோணும்  நாங்கெல்லாம்  படிக்கோணும்னு எங்க தலைவிதி”
 “என்னது இது கோயம்புத்தூரில் எனக்கு பெர்சனலா யாரையும் தெரியாதே. யாரெல்லாம் எங்கிருந்தெல்லாம் அட்டாக் பண்ணுவாய்ங்கன்னு தெரியலையே , சரி தொடருவோம்”
Image result for moth
Moth
நியூயார்க்கில் நாங்கள் வாழும் வாழ்க்கை, ஒன்று அதீத குளிர், 30,40ன்னு போகும் அதுக்கு முன்னால மைனஸ்னு போட மறந்துட்டேன். வெயில் காலத்தில் இந்த ஆண்டு 107, 108ன்னு போய் மண்டை காய்ஞ்சிறுச்சு .
எப்படா இந்த குளிர் முடியும்னு காத்திருந்து காத்திருந்து வெயில் வந்தவுடனே, அய்யய்யோ இதுக்கு குளிரே பரவாயில்லைன்னு  தோணுற மாதிரி இருக்கு. இதுல வெய்யில் காலம் வந்தவுடனே ஊர்ல இருக்குற எல்லா பூச்சிகளும், கொசுவும் படை யெடுத்து வந்துரும். பேர் தெரியாத பல பூச்சிகளும், ஊர்வன பறப்பனவும் இதுல அடக்கம். இத்தனைநாள் எங்கதான் இருந்துச்சுகளோ, வெயில் காலம்தானேன்னு ஒரு காத்தாட  ஜன்னலைத்திறக்க முடியாது, கதவைத்திறக்க முடியாது. எல்லாத்துலயும் கவனமா வலையடிச்சு  வச்சிட்டுத்தான் திறப்போம். அப்படியும் சில பூச்சிகளும், கொசுக்களும் உள்ளே வந்துறும், பழங்கள்ள கருப்பு நிறத்தில் சிறுசிறு பழக்கொசு வந்திரும் .பின்னாடி தோட்டம் வேற இருக்கிறதால சில புழுக்களும் பூச்சிகளும் இருக்கும்.
இதுல என் மகள்கள் இருக்காள்களே அய்யய்யோ சின்ன பூச்சியைப் பாத்தாக்கூட அழுது அமர்க்களப்  படுத்திடுவாள்க. இப்போ சமீபத்தில் நடந்ததைச் சொல்றேன்.
Image result for small fruit fly

ஜூலை 4ஐக் கொண்டாட நியூயார்க்கோட தலைநகரம் ஆல்பனிக்குப் போயிருந்தோம். என்ன குழம்புதா , நியூயார்க் சிட்டி வேற ,நியூயார்க் ஸ்டேட் வேற .நியூயார்க் ஸ்டேட்லதான்  நியூயார்க் சிட்டி  இருக்கு. சில இடங்களுக்கு மட்டும்தான் ஊர் பேரும்  ஸ்டேட் பேரும் ஒரே மாதிரி இருக்கும்.உதாரணத்திற்கு  கலிஃபோர்னியா மாநிலத்தில்  கலிஃபோர்னியா  என்ற பெயரில் ஊர் கிடையாது .நியூயார்க் ஸ்டேட்டோட  தலை நகர்தான் ஆல்பனி .இப்ப புரியுதா மக்களே ? 
ஒரு 3 மணி நேரம் டிரைவ். ராத்திரி ஒரு 10.30 மணிக்குப் போய் சேர்ந்தோம். பொண்ணுங்க பெரியவங்க ஆயிட்டாங்கன்னு அவளுக இரண்டு பேருக்கும் தனிரூம். எனக்கும் என் மனைவிக்கும் தனிரூம். செக் இன் பண்ணும்போது தெரிஞ்சது, எதிர்பார்த்தது போலவே இதுவும் குஜராத்தைச் சேர்ந்த மோடிக்குச் சொந்தக்காரங்க நடத்துற ஓட்டல். அதாங்க பட்டேல் வகையறா. ஒரு விதத்தில் ஒரு இந்தியன் நடத்துற ஓட்டல்னு பெருமையா இருந்துச்சு. ரூமுக்குப்போனா சரியா மெய்ன்டெய்ன் பண்ணாம இருந்துச்சு.  பெருமையா நினைச்ச நெனப்பு உடனே அசிங்க நினைப்பா ஆயிப்போச்சு.
என் மனைவி வேற "ஏங்க இங்க மூட்டைப்பூச்சி இருக்குமா?" என்றாள். ஏற்கனவே கடுப்பில் இருந்த நான் "அதெல்லாம் இருக்காது" என்றேன் மேலும் கடுப்புடன், "இந்த பெட்ஷிட்டெல்லாம் துவைச்சதா?" இது ரெண்டாவது கேள்வி. பேசாம இருந்தேன். "இதுக்குத்தான் பெட்ஷீட்டை எடுத்துட்டு வரலாம்னு சொன்னேன்" என முணு முணுத்தாள் "காரில் தலைகாணி வச்சிருக்கேன். எடுத்துட்டு வாங்க" என்றாள். நானும் கீழே போய் எங்க தலையணைகளை எடுத்துட்டு வந்து கொடுத்தேன்.. மணியைப் பார்த்தால் 11.30 ஆயிருச்சு. இதுக்கு மேலே வேற ரூம் போய்த் தேட முடியுமா?
டேய்ஸ் இன் எல்லா இடத்திலயும் நல்லா இருக்குமே. இந்த நாதாரி குஜராத்திக நல்ல ஓட்டலை வாங்கி நாசம் பண்ணிட்டாங்களேன்னு நினைச்சு கோவம் கோவமா வந்துச்சு. ஆனாலும் வெளியே காட்டிக்கல. நேரா என் பொண்ணுங்க ரூமுக்குப் போய் கதவைத்தட்டிக் கேட்டேன். வேற ரூமுக்கு போயிரலாமான்னு. “பரவாயில்ல டாடி இது ஓக்கே தான்”னு சொன்னாங்க. திரும்ப என் ரூமுக்கு வந்து ஒரு குளியில போட்டுட்டு  வந்து படுத்தேன். பெட்ஷீட் மேல ஒரு மாத் இருந்தது. என் மனைவுக்குத் தெரியாம அதை நசுக்கித்தள்ளிவிட்டேன். என் மனைவி ராத்திரி பூராத் தூங்கல. அது எனக்கு எப்படித் தெரியும்னு கேக்கறீங்களா? ஏன்னா நானும் தூங்கல.   ஆனா இரண்டு பேருமே வெளியே காட்டிக்கல, இப்ப தெரியுதுங்களா ஏன் என் மனைவி எங்கேயுமே பயணம் வர்றதில்லன்னு. அவளுக்கு விடுதி பெட்ல படுக்கிறது, பாத்ரூம் போறதெல்லாம் வேற யாரோ ஒருவர் பயன்படுத்தியத யூஸ் பன்ற மாதிரி ஒரு அருவெறுப்பு. பிறகு எப்படி பயணம் போக முடியும். காலைல அவளுக்கு நல்ல ஜுரம். அவளை ரூமில் விட்டுட்டு நாங்க மூணு பெரும் குளிச்சி ரெடியாகி வெளியே கிளம்பினோம். அன்னைக்குத்தான் ஜூலை 4, சுதந்திர தினம். இரவு வாண வேடிக்கையெல்லாம் அமர்க்களமா இருக்கும். நான் வண்டியை ஓட்ட, என் சின்னப்பெண் வழக்கம்போல என் பக்கத்திலயும், பெரிய பெண் பின்னாலையும் உட்கார்ந்திருந்தாங்க. திடிர்னு பின்னாலிருந்த பெரிய பெண் அலற ,நான் திரும்பிப் பார்க்க கார் சிறிது தடுமாறியது. அலறல் அதிகமாக நான் அவசரமாக காரை ஓரங்கட்டி குதித்துப்பின்னால் சென்று காரை சடக்கென்று திறந்தேன். வெளியே பாய்ந்து வந்த பெரியவள் மேலேயும் கீழேயும் குதிக்க, நானும் என் சின்னப்பொண்ணும் என்ன என்ன ஆச்சுன்னு நெனைச்சு திகைச்சுப் போனோம். அதற்குள் பெரியவள் கண்களிலிருந்து கண்ணீர் தண்ணீராய் வடிய உதடுகள் துடித்து அழுதாள்.
வேற ஒண்ணுமில்லங்க, காரின் பின்புறத்தில் ஒரு சிறிய  மிகச்சிறிய வண்டு வந்துருச்சு, அதுக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். பின்புறத்தில் அந்த வண்டு மயங்கி இருந்தது. அதனை எடுத்து வெளியே விட்டபின் தான் அவளுடைய ஆர்ப்பாட்டம் அடங்குச்சு. இந்தக் கொடுமையை நான் எங்க போய்ச் சொல்ல. நல்லவேளை அவ காரை ஓட்டலை இல்லேன்னா நாங்க மூணுபேரும் ஆக்சிடெண்ட்ல பரலோகம் போயிருப்போம். அதுக்கப்புறம், பெரியவ அவ முடி, முதுகு எல்லாத்தையும் செக்கப் செய்யச்சொல்லி அப்புறம்தான் காரில் ஏறினாள்.
இதுல நான் வீட்டுக்குள்ள பூரானைப் பார்த்தேன்னு தெரிஞ்சது, இவ வீட்டைக் காலி பண்ணிட்டு போயிடுவா. பூரானை பத்தி கூகுள் பண்ணேன். அவை ரொம்பவும் சாதுவானவை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் பிரச்சனையே இல்லை. அப்படியே கடிச்சாலும் ஒரு 48 மணிநேரத்திற்கு சிவப்புத்தடிப்பு இருந்து அப்புறம் சரியாப்போயிரும் உயிருக்கு ஆபத்து கிடையாது . பூரான் வீட்டுத்தோட்டத்தில் இருந்தாலும் நல்லதுதான்.  பூச்சிகள், மாத்களை அது பிடிச்சுச் சாப்பிடும்னு போட்டிருந்துச்சு.
ஆனாலும் அதப்பாத்ததிலிருந்து எனக்கு உடம்புல ஏதோ ஊர்றமாதிரியே இருந்துச்சு, அதோட எனக்கு கொசு கடிச்சாலே பசு கடிச்சமாதிரி வீங்கிறும்.
பல்லு விளக்கின கையோடு, பாத்ரூமை லேசா திறந்துவச்சிட்டு, லைட்டை ஆஃப் செய்திட்டு கொட்ட கொட்ட முளிச்சிருந்தேன். நல்லவேளை வீட்டில எல்லாரும் ஏற்கனவே வேலைகளுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. அரை மணி நேரத்துல ஒரு தடவை வெளியே வந்துச்சு, நான் ஓடிப்போய் அடிக்கறதுக்குள்ள ஓடிப்போய் பதுங்கிருச்சு. இங்கதான் உட்கார்ந்திருக்கேன். என்ன செய்யறதுன்னு தெரியல. எப்ப வெளியே வரும்னு தெரியல ஆஃபிசில் ஏகப்பட்ட வேலையிருக்கு . ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்களேன்.
- முற்றும்.

Thursday, August 1, 2019

பரதேசி ஒரு தெருப்பொறுக்கி


Image may contain: one or more people and outdoor
"சேகர் என் இரத்தம் கொதிக்குதுடா"
"அய்யய்யோ மகேந்திரா, என்னாச்சுடா, BP  செக் பண்ணியா?"
"டேய் கிண்டலா உனக்காகத்தான் என் மனசு கொதிக்குதுடா"
"ஏண்டா மகேந்திரா? எதுக்கு?"
"யார்றா சொன்னா உன்னை தெருப்பொறுக்கின்னு?, பரதேசின்னு சொன்னதையே என்னால தாங்க முடியல"
"பரதேசின்னு எனக்கு நானேதானடா பேர் வச்சேன் , நான்  பரதேசி தானடா,  சொந்த தேசம்விட்டு, வந்த தேசத்திலும் நொந்து, ஊர் ஊராகக்  சுத்தும் என்னை  பரதேசின்னு சொல்றதுதான் சரி"
"சரி, பரதேசிய விடு, தெருப்பொறுக்கின்னு சொல்றது?"
"ஆமாடா நான் தெருப்பொறுக்கிதான்"
"என்னடா உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா, பைத்தியக்கார ஆஸ்பத்திரியில வேலை கிடைச்சதுன்னு நீ சொல்லும்போதே நான் பயப்பட்டேன்"
"இல்லடா சுய நினைவோடதான் சொல்றேன்"
"யார்ரா உன்னை அப்படிக் கூப்பிட்டது"
'வேற யார் என் பார்யாள் தான்"
"அதுக்கு நீ ஒன்னும் எதிர்த்துக் கேக்கலயா"
"எதுக்குடா எதிர்க்கணும்?"
"என்னடா சொல்ற?”
"அவ  சொல்றது உண்மைதான அதனால சரிதான்னு ஒத்துக்கிட்டேன்.
அப்ப நீ நெசமாவே  தெருப்பொறுக்கிதானா ?"
"ஆமடா ஆமா"
"அய்யோ ஒரே குழப்பமா இருக்கே, டே சேகரு என்னடா அமெரிக்கா போய் இப்படி தெருப்பொறுக்கியா ஆயிட்டியே"
"இருடா விளக்கமா  சொல்றேன். கொஞ்சம் பொறுமையாக்கேளு"
"சீக்கிரம் சொல்றா, தூக்கம் வேற வருது"
          "நான் தெருவுல போகும்போது பல பொருட்கள் கிடைச்சிருக்கு. வாலட் கிடைச்சிருக்கு. அதப்பத்தி ஏற்கனவே என்னுடைய வலைப்பதிவில சொல்லிருக்கேன்"
"அதை என்னடா செஞ்ச"
          "அதை அவங்கவங்கட்ட  சேத்திட்டேன். சில சமயம் முக்கிய டாக்குமென்ட்ஸ் கிடைச்சிருக்கு . அதனையும் அவரவர்ட்ட கொடுத்திட்டேன். ஆனா சிறு சிறு பொருள் கிடைக்கும் அதை யாருக்குச் சொந்தம்னு தெரியாது. அதனால நானே வச்சுக்குவேன். இல்லைனா சர்ச்சுக்கு கொடுத்துருவேன்."
"வேற என்னென்ன கிடைச்சிருக்கு"
"பென்னி, நிக்கல், டைம், குவார்ட்டர், டாலர் பில் இப்படி நிறையக் கிடச்சிருக்கு"
          "அடேய் பரதேசி அங்கபோய் குவார்ட்டர் அடிச்சிப் பழகிட்டயா. அதுவும் தெருவில இருந்தா எடுத்துக் குடிக்கிற, நீ உண்மையிலயே தெருப்பொறுக்கிதாண்டா".
          "டேய் நான் குவார்ட்டர்ன்னு சொன்னது, அந்தக்குவார்ட்டர் இல்லடா, இங்க 25 பைசாவ குவார்ட்டர்னு சொல்லுவாங்க"
"அப்படி விளக்கமாச் சொல்லு,  அப்ப மத்ததத்தைப் பத்தியும் சொல்லு"
          "நிக்கல்னு (Nickel) சொன்னா அஞ்சு பைசா, டைம் (Dime) னு சொன்னா 10 பைசா, பென்னின்னு (Penny) சொன்னா ஒரு பைசா"
"சரி சில்லறையை விடு டாலர் நோட்டுக்கள் ஏதாவது கிடைச்சிருக்கா" 
"ஒரு டாலர் பில்லிருந்து 50 டாலர் பில் வரை கிடைச்சிருக்கு"
"அடேய் யாருக்கு வேணும் பில் டாலர் நோட்டைப்பத்திச் சொல்றா"
          "அடலூசு மகேந்திரா, டாலர் பில்னா டாலர் நோட்டுன்னு அர்த்தம். அத இங்க பில்னு (Bill) தான் சொல்வாய்ங்க"
"கைல நிக்காம செலவு ஆயிரதனால பில்னு சொல்றாய்ங்களோ"
“பரவாயில்லை மகேந்திரா நல்லா யோசிக்கிற"
          “50 டாலர் பில் வரை கிடைச்சுதா பரவாயில்லரா பரதேசி, பொறுக்கியே காலத்தை ஓட்டிரலாம் போல"
          "நீ சொல்றது உண்மைதாண்டா,  பொறுக்கியே காலத்தை ஓட்டுறவங்களும் இருக்காய்ங்க".
"என்னடா சொல்ற அங்கேயுமா?"
          "நிச்சயமா உதாரணத்திற்கு இங்கல்லாம் புதுப்பொருள் வாங்குனா பழைய பொருளை வெளியே வச்சுருவாய்ங்க, அது வேலை செய்ற  தரத்துல இருந்துச்சுனா, அது ஒரு ஸ்லிப் எழுதி வச்சிருவாய்ங்க. தேவைப்பட்டவங்க எடுத்துக் கொள்ளலாம்". சில பொருள்களை வெளியே வச்சுட்டு ஃப்ரீன்னு எழுதி வெளியே வச்சுருவாங்க".
          "அப்படியா என்ன மாதிரி பொருள் அப்படி வெளியே கிடைக்கும்?”
“ கட்டில், மெத்தை, கப்போர்டு, டிவி, மைக்ரோவேவ், மேசை, நாற்காலிகள், அலமாரி போன்ற பல பொருட்கள் கிடைக்கும். இதுல சில மெத்தை செய்யும் கம்பெனிகள் அவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு போய், உள்ளே இருக்கிறதை எடுத்து ரீசைக்கிளிங்  செய்து புது மெத்தை தைச்சு வித்துருவாய்ங்க. அது மட்டுமல்லாமல் இரும்பு காயலான் கடைக்காரங்க ஒரு டிரக்கில் நாலு தெரு சுத்துனா போதும் நிறைய கிடைச்சுரும். வீட்டுக்கழிவுகள் மற்றும் ரீசைக்கிளிங் தினங்களில் இப்படிப்பட்ட ட்ரக்குகளைப் பார்க்கலாம்.       
          “அது தவிர பிளாஸ்டிக் பாட்டில்கள், மற்ற பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கிற நாட்களில் பலபேர் தள்ளு வண்டிகளில் வந்து பிளாஸ்ட்டிக்  பாட்டில்களை மட்டும் பிரித்து எடுத்துட்டு போயிருவாங்க . ஏன்னா கடைகள்ள சில மெஷின்  வச்சிருப்பாங்க. அதுல போய் ஒவ்வொண்ணா போட்டா, ஒரு பாட்டிலுக்கு 5 சென்ட் கிடைக்கும். ஒரு வாரத்துல நூத்துக்கணக்கில் இவங்க சம்பாரிச்சுருவாங்க.
          "அப்படியா பரவாயில்லையே. ஆமா பரதேசி, டாலர் பணம் கிடந்தா கீழ எடுக்கிறது ஓக்கே. ஏண்டா ஒரு பைசா கிடைச்சாக்கூட  எடுக்கிற?"
          என்னடா அப்படி சர்வசாதாரணமா சொல்லிட்ட, 1982க்கு முன்ன அடிச்ச பென்னின்னா முழுசா காப்பர். அதோட மதிப்பு இப்ப 3 லிருந்து 4 பென்னி. தங்கம், வெள்ளிக்கு அப்புறம் காப்பர்தான் இப்ப விலை கூடிட்டிருக்கு. 1960-க்கு மேலே பென்னி கிடைச்சா அதோட விலை எகிறும். சில பென்னி ஆயிரம் டாலர் வரை போகும் தெரியுமா?
          "என்னடா சொல்ற இதுல இவ்வளவு விஷயம் இருக்கா" அப்படின்னா வொர்த் இல்லைனா தூக்கிப் போட்டிருவியா"
          “நோ நோ, அப்படிச் செய்ய மாட்டேன். ஏன்னா மோடி புண்ணியத்தில் நம்ம பொருளாதாரம் நல்லா இருக்கு”.
"என்னது பொருளாதாரம் நல்லா இருக்கா ? சொல்லவே இல்லை ,இங்க பெரிய பெரிய கோடீஸ்வரனெல்லாம்  தற்கொலை பண்ணிட்டு செத்துட்டு இருக்காய்ங்க உனக்குத்தெரியாதா ? "
          "அடே ரூபாய் மதிப்பு குறைய குறைய டாலர் மதிப்பு கூட்டிட்டுத்தான் இருக்கு, அதனால எங்க NRI  பொருளாதாரத்தைச் சொன்னேன்"
"ஓ அப்படி ஒரு ஆங்கிள் இருக்கா?
          அதனால கீழே பென்னி கிடைச்சாலும் அதோட இந்திய மதிப்பு 70 காசுடா, விடுவேனா? –
“ ஹலோ, ஹலோ எங்கடா போன? பயபுள்ள தூங்கிட்டான் போல இருக்கு”
முற்றும்

அறிவிப்பு .
வரும் 
சனிக்கிழமை ஆகஸ்ட் 3ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடக்கும் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் அடியேன் கலந்து கொண்டு கவிதையொன்று வாசிக்கிறேன் ..அருகில் வசிக்கும் நண்பர்கள் உங்களுக்கு விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். 


Image may contain: 1 person
Add caption