Showing posts with label .பயணக்கட்டுரை. Show all posts
Showing posts with label .பயணக்கட்டுரை. Show all posts

Thursday, August 15, 2019

இத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் ! )

இந்திய பயணக் கடிதங்கள்


படித்ததில் பிடித்தது
இந்தியப் பயணக் கடிதங்கள்.
எலிஸா ஃபே, சந்தியா பதிப்பகம்
தமிழில் அக்களூர் ரவி.
இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, கிரேட் பிரிட்டன் என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டிலிருந்து, ஆளும் தரப்பின் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும், இராணுவ வீரர்களாகவும், வியாபாரம் செய்பவர்களாவும்  இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்தவர்கள் ஏராளமானவர்கள்.
இங்கிலாந்திலிருந்து மட்டுமல்ல, ஃபிரான்சு, ஜெர்மனி, ஹாலன்ட் போன்ற பல நாட்டவர் நாடு பிடிக்க இங்கு வந்தனர். வணிகம் செய்ய  வந்தவர்களைச் சொன்னால் கணக்கிலிடங்காது.
Eliza Fay
இப்படி உலகின் பல பகுதிகளிலிருப்பவர்களையும் ஈர்த்திழுக்கும் வகையில் செல்வ வளமிகுந்த நாடாக இருந்தது இந்தியத் திருநாடு.
இங்கிலாந்தின் முதல் நுழைவாயிலாக இருந்தது, கல்கத்தா என்பதால் அதிகளவில் அங்கு ஆங்கிலேயர் வரத்துவங்கினர். அதன்பின் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை அமைந்தபின் சென்னை ஆங்கிலேயர் ஆட்சிக்கும் வர்த்தகத்திற்கும்  மையமானது.  
இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனியின் மையமாக கல்கத்தா விளங்கியபோது அங்கு பிழைப்புத்தேடி வந்த ஒரு வழக்கறிஞர் புதிதாக திருமணமான தன் மனைவியையும் தன்னோடு அழைத்துவந்தார். அந்த மனைவியின் பெயர்தான் எலிஸா ஃ பே (Elissa Fay) விமான வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு ஒரே வழி கப்பற்பயணம் தான்.
எலிஸா ஃபே அவர்கள் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த பயணத்தின் போது ஊரிலிருந்த உறவினர்களுக்கு அவருடைய பயண அனுபவங்களை அப்படியே அவ்வப்போது கடிதங்களாக எழுதினார்.  அந்தக் கடிதங்களில் தன்னுடைய பயணத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளையும், இக்கட்டுகளையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதன் தொகுப்புதான் இந்தப்புத்தகம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் அக்களூர் ரவி அவர்கள். சில இடங்களில் சில ஆங்கிலப்பதங்களை  (slang) அப்படியே மொழி பெயர்த்திருந்தது பொருந்தவில்லை, ஆனால் பெரும்பாலும் நன்றாகவே மொழிபெயர்த்திருக்கிறார்.
Front Cover

1779ல் லண்டனிலிருந்து கிளம்பி காலே வரை வந்த பயணத்தில் அந்தக் காலக்கட்ட வரலாற்று சமூக சூழல்கள் வெளிப்படுகின்றன. அது படிப்பதற்கு ஒரு நாவல் போலச் சுவையாக இருக்கின்றன. அதில் சில  தகவல்களை மட்டும் கீழே தருகிறேன். முழுவதுமாக அறிந்து கொள்ள புத்தகத்தை வாங்கிப்படியுங்கள்.

1)   முதலில் அவர் இந்தியப்பயணத்தை பெரும்பாலும் சாலைவழியாக ஏன் மேற்கொள்ள வேண்டுமென தெரியவில்லை. அதுவும் ஐரோப்பா வழியாக வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
2)   ஐரோப்பாவில் தெருவில் கரடி, முள்ளம்பன்றி போன்றவற்றை வைத்து வித்தைகள் நடந்து கொண்டு இருந்ததையும், கழைக்கூத்தாடிகள் நம் இந்தியாவைப்போல் அங்கு இருந்ததையும் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது.
3)   சாலைப்பயணத்தில் ஒரு சமயம் எட்டுக்குதிரைகள் பூட்டிய அஞ்சல் வண்டியில் இடம் கேட்டு சென்றதாகக் குறிப்பிடுகிறார்.
4)   செயின்ட் டென்னிஸ் என்ற கத்தோலிக்க ஆலயத்தில் புனிதர் தாமஸின் கண், மேரியின் பால் என்று வினோத பொருட்கள் இருப்பதை எழுதி கேலி செய்கிறார்.
5)   பாரிசின் வழியாக பயணம் செய்யும்போது பிரெஞ்சு பேரரசி மேரி அன்டைனட்டைப் பார்த்ததாகவும். அந்தப் பேரரசி  மிகவும் நல்லவள் என்றும் சொல்லுகிறார்.
6)   யூதர்கள் கொல்லப்படுவது சீன் நதியில் தள்ளப்படுவது என்பதையெல்லாம் எழுதி கண்டிக்கிறார்.
7)   பாரிசு நகரில் நுழையும் போது, அது பெரிய ஒரு குப்பைத் தொட்டி போல இருந்தது என்று சொல்கிறார். அங்கு தங்கிய விடுதியை மிகவும் மோசம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் இப்போது பாரிசு எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்பதைப் பார்க்கும்போது நம்நாடும் மிகவும் விரைவில் முன்னேற வேண்டுமெனத் தோன்றுகிறது.
8)   தேயிலை தயாரிக்க அங்கு மண்பாண்டங்கள் பயன்படுத்தப் பட்டன என்கிறார்.
9)   பாரிசில் சலோன் சர் சாவோன் என்ற இடத்தில் பார்த்த லெகான் கோழிகளைப் பற்றி எழுதுகிறார்.
10)               கப்பல் பயணம் செய்யும்போது ஜோடியைப் பிரிந்த புறா தற்கொலை செய்ததைப்பார்க்க நேரிட்டதை உருக்கமாக விவரிக்கிறார்.
11)               அலெக்சாண்டிரியாவில் குதிரைகளை முஸ்லீம்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு கழுதைதான் என்பதைச் சாடுகிறார்.
12)               அங்கு செயின்ட் ஏதோனேசியஸ் என்ற பாரம்பரிய கிறிஸ்துவ ஆலயம் மசூதியாக மாற்றப்பட்டது, கிறிஸ்துவர்களுக்கு தனி வரி ஆகியவைச் சொல்லிச் செல்கிறார்.
13)               சிதைந்துபோயிருந்த கிளியோபாட்ராவின் அரண்மணையைப் பார்வையிட்டதை விளக்குகிறார்.
14)               கெய்ரோவில் உள்ள நைல் நதி, அங்கு நடந்த பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஜோசப்பின் கதையை நினைவு கூர்வதோடு, அங்குள்ள பிரமிடுகளை கட்டியது அடிமையாக இருந்த யூதர்கள் என்று சொல்லுகிறார்.
15)               பெரிய நகரமாக இருந்தாலும் அழகு, மேன்மை மற்றும் ஒழுங்கில்லாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்.
16)               கிறிஸ்தவர்களை அங்கு Frank என்று அழைக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
17)               மோச்சா பாலை நிலப்பயணத்தில் கொள்ளையரிடம் சிக்கி உயிர் தப்பித்து பின்னர் கடற்பயணத்தின் மூலம் மலபார் கள்ளிக்கோட்டைக்கு (calicut) வந்திறங்கியிருக்கிறார். அப்போது அது ஹைதர் அலி வசம் இருந்திருக்கிறது. ஹைதர் அலியின் கேப்டன் அய்ரேஸ் அவர்களை சிறைப்பிடித்து 15 வாரம் அடைத்து வைத்து விட்டிருக்கிறார். அங்கு தேளும் பூரானும் நிறைந்திருந்தனவாம்.
18)               அங்கிருந்து கொச்சி வழியாக இலங்கையின் காலே சென்று பின்னர் சென்னை சென்றடைகிறார்கள்.
19)               சென்னை இத்தாலிய நகரம்   போன்ற மிக அழகிய நகரம் என்றும், மக்கள் விரும்பும் எந்த மதத்தையும் சுதந்திரமாக  அங்கு பின்பற்றலாம் என்று எழுதியிருப்பது பெருமையாக இருந்தது.
20)               சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட் சாலை மரங்கள் சூழ்ந்து அழகாக இருந்தது. அடையாறு ஆலமரம் சென்றது என்று விவரிக்கிறார்.
21)               அதன்பின் கல்கத்தா வந்து சேருகிறார். பூரி ஜெகன்னாதர் உற்சவத்தில் தேரடியில் விழுந்து உயிர்விடும் மக்கள் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள் என்று பின்பற்றப்பட்ட மூடநம்பிக்கையைச் சாடுகிறார்.
22)               ஹுக்ளி நதி தேம்ஸை விட அழகானது  அகலமானது என்று சொல்லுகிறார்.
23)               வில்லியம் கோட்டையில் வாரன் ஹேஸ்டிங்சை சந்தித்தது, அவருடைய மனைவி ஆன் மரியாவுடன் நட்பு பாராட்டியது என்று விளக்குகிறார்.
24)               கல்கத்தாவில் வக்கீல்களின் கட்டணம் இங்கிலாந்தை விட அதிகம் என்று சொல்கிறார்.
25)               சதி, வியாதியஸ்தரை களிமண் பூசிக்கொல்தல் போன்ற கொடிய பழக்கங்களைச் சாடுகிறார்.
          இப்படி இப்புத்தகத்தைப்  படித்தால் அந்தக் கால கட்ட பல சமூக வரலாற்று சூழ்நிலைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

முற்றும்

Image result for சுதந்திர நாள் வாழ்த்துக்கள்


Monday, July 15, 2019

பரோட்டாவின் கதை !!!!!!!!



வேர்களைத்தேடி பகுதி 43
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
          
           மதுரைப்பக்கம் பரோட்டாவை புரோட்டா என்றுதான் சொல்வார்கள் என்பதால் நானும் அப்படியே சொல்கிறேன் .

Image result for புரோட்டா
              பொதுவாக புரோட்டாவை மைதா மாவில்தான் செய்வார்கள். சமீபமாக கோதுமை புரோட்டாக்களும் வந்துவிட்டன. முக்கியமாக என்னைப்போன்ற  நடுத்தர மற்றும் ஏழை மக்கள் புரோட்டாவை விரும்பிச் சாப்பிடுவதற்கான காரணம் விலை குறைவு மற்றும் மதியம் 2 புரோட்டா சாப்பிட்டால் இரவு வரை பசி தாங்கும். வயிறு கல்லைத்தின்றது போல் கம்மென்று இருக்கும். மதுரையிலும் அதனருகில் இருக்கும் மற்ற பகுதிகளிலும், புரோட்டா ஆர்டர் செய்தால், அதனைக் கொண்டு வரும் சர்வர்கள் பிய்த்துப்போட வேண்டும். சூடான கல்லிலிருந்து எடுக்கும் போதே புரோட்டா மாஸ்டர்கள் அதனை செங்குத்தாக நிறுத்தி மேலும் கீழும் தட்டி அதனை லூஸாக ஆக்கித்தான் தருவார்கள். அது மிகுந்த சூடாக இருக்கும். எனவே பெரும்பாலும் அப்போதெல்லாம்  எவ்வளவு அழுக்காக இருக்கிறது, கைகள் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்று எப்போதும் பார்த்ததில்லை. அவர்களும் இரு கைகளுக்கு நடுவில் வைத்து மேலும் கீழும் இரண்டு தட்டுதட்டி பிய்த்துப் போடுவார்கள். அது இலையில் பல பகுதிகளாய் பிரிந்து கீழே விழும். ஆனால் நாங்கள் அதனையும் இன்னும் சிறிது சிறிதாக பிய்த்துவிடுவோம். அதன்பின் சூடாக அதன் மேல் சால்னாவை ஊத்தி புரோட்டாவின்   விள்ளல்களை நனைய விடவேண்டும். அது நனைந்து ஊறி சால்னாவை விழுங்கிவிடும். இப்போது திரும்பவும் சால்னாவை ஊற்றி கலகலவென்று பிரட்டி அப்படியே சால்னா சொட்ட வாயில் போட்டால் திவ்யமாக இருக்கும்.
          தொட்டுக்கொள்ள காசு இருந்தால் ,வெங்காயம் சேர்த்த மட்டன் சுக்கா வருவல், அல்லது கோழி 65 அல்லது காசு கொஞ்சம் குறைவாக இருந்தால் முட்டைப்பொரியல் ஆகியவை சிறந்த காம்பினேஷன்.
Related image

          இதில் முக்கியமாக நிதானமாக நன்றாக மென்று சாப்பிட  வேண்டும். அப்படியே விழுங்கக்கூடாது. ஆறிப்போனாலும் நன்றாக இருக்காது. ரொம்ப சூடாக இருந்தாலும் ருசி தெரியாது. எனவே இளஞ்சூட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலையில் இருக்கும்போது ஆறிவிட்டால் தயங்காமல் சர்வரைக் கூப்பிட்டு சூடாக சிறிது சால்னாவை மேலே ஊற்றினால் போதும் திரும்பவும் சூடு கிடைத்துவிடும்.
          நன்றாக இருக்கிறது என்பதற்காக நிறைய சாப்பிடக் கூடாது அதோடு புரோட்டா சாப்பிடுகிற நாளில் கொஞ்சம் சீக்கிரமாக சாப்பிட்டு விடவேண்டும். இரவு 10 மணிக்குச் சாப்பிட்டுவிட்டு 10.30 க்கெல்லாம் படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு முடித்து குறைந்தது மூன்று மணிநேரம் கழித்துத்தான் தூங்கச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் செமிக்காது அடுத்த நாள் படுத்திவிடும். 
          இந்த பரோட்டா தமிழ்நாட்டுக்கு எப்படி வந்ததுன்னு சொல்கிறேன். உண்மையைச் சொன்னா இது தமிழ் நாட்டிலிருந்து தான் மற்ற ஊர்களுக்குப் போயிருக்கிறது.
          தமிழ் நாட்டின் தூத்துக்குடியின் துறைமுகத்தில் இலங்கையைச் சேர்ந்த மூர் என்று சொல்லக்கூடிய தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதர்கள் தான் இந்தப் பரோட்டோவை அறிமுகம் செய்தனர். பின்னர் இங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய  பகுதிகளுக்குச் சென்றது. இங்கிருந்துதான் மலேசியாவுக்குச் சென்றது. அவர்கள் அறிமுகம் செய்து வைத்ததுதான் சால்னா என்று சொல்லக்கூடிய எலும்புக்குழம்பு. சர்வர் நன்கு தெரிந்தவராக இருந்தாலோ அல்லது டிப்ஸ் அதிகம் கொடுத்தால் மட்டும்தான் சால்னாவின் அடியில் இருக்கும் சில எலும்புத்துண்டுகள் கிடைக்கும். இல்லையென்றால் வெறும் குழம்புதான்.

          அப்போது தேவதானப்பட்டியில் ஒவ்வொரு கடையும்  வேறு வேறு பண்டங்களுக்கு பெயர் பெற்றிருந்தன.
          இட்லி சட்னி என்றால் ஆச்சி கடை அல்லது சுப்பையா கடை. மெயின் ரோட்டிலிருந்து காந்திமைதானம் போகும் வழியில் மூலையில் சாவடியின் அருகில் இருந்தது சுப்பையா கடை. இங்கு உட்கார்ந்து சாப்பிட முடியாதென்றாலும், ஆச்சி கடையில் இட்லி கிடைக்கவில்லை யென்றால் இங்குதான் பார்சல் வாங்குவோம்.
          தேவி விலாஸ் கடையில் தோசையும், பூரியும் நன்றாக இருக்கும். ராகவன் நாயர்  கடையில் போண்டா,  பஜ்ஜி, மற்றும் வடை 11 மணிக்கு சூடாகக் கிடைக்கும். எப்போதும் இங்குதான் வாங்குவோம். அதோடு மேட்டு வளைவிலிருந்து ஒருவர் தள்ளு வண்டியில் மாலை நேரத்தில் மிக்சர், ஓமப்பொடி, பக்கோடா ஆகியவற்றை விற்பார். பெயர் மறந்து விட்டது. நண்பர் கண்ணனுக்கு ஞாபகம் இருந்தால் கீழே குறிப்பிடவும். அவருடைய தள்ளுவண்டியில் வாங்கிச்சாப்பிட்ட பக்கோடாவுக்கு இணையாக வேறெங்கிலும் இதுவரை நான் வாங்கிச் சாப்பிட்டதில்லை.
அதுதவிர மாலை நேரங்களில் சுப்பையா கடையருகில் கிடைக்கும் பருத்திப் பால் பாயாசம். அங்கு சாப்பிட்டதோடு வேறெங்கும் அதன்பிறகு அதனை சாப்பிட்டதேயில்லை.
          புதன் கிழமை சந்தைகளில் கிடைக்கும் சீரணி. அதுவும் எங்கும் கிடைத்ததில்லை. சிறிது மணல் கலந்திருந்தாலும் கருப்பட்டியில் செய்யப்பட்ட இந்தப்பண்டம் மிகவும் சுவை மிகுந்தது.  இவையெதுவும் இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
          இவை தவிர இந்து நடுநிலைப்பள்ளியில் முன்னால் விற்கும் கல்லாமை மாங்காய், கொடை க்கானலிலிருந்து வரும் புளிப்பான பீச்சஸ் பழங்கள், பேரிக்காய்கள், முருகமலைக் காட்டிலிருந்து வரும் இலந்தைப் பழங்கள், நாவற் பழங்கள், ஈச்சம்பழம், வெள்ளரிப் பழம், பனம்பழம், முந்திரி, கொடுக்காப்புளி, அரை நெல்லிக்காய், முழு நெல்லிக்காய், புளியம்பழம், கோவைப்பழம், பக்கத்தில் பெரியகுளம் தோட்டக்கலை நிறுவனத்திலிருந்து வரும் வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா, ராவுத்தர் தோட்டத்திலிருந்து வரும் மணம்  மிகுந்த காசா லட்டு மாம்பழங்கள், வாடிப்பட்டியிலிருந்து வரும் திராட்சைப்பழங்கள், விளாம்பழம், நுங்கு என்று வாயில் எச்சிலை ஊறவைக்கும் பழங்களில் பலவற்றைச் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன.
          இப்படி கிராமத்து நினைவுகளோடு அதன் மண்ணின் மணம், மண்ணின் சுவை இவையெல்லாமே நினைத்துப் பார்த்தால் என்றென்றும் இனிக்கும் நினைவுகளே.
          இந்த நினைவுகளைத் துறந்துவிட்டு நிறையப்பேர்வெளிநாடுகளில் வாழ முயல்கின்றனர். அவர்கள் தங்கள் அடையாளங்களை அழிக்க நினைப்பவர்கள். அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். நாம் நம் நாட்டை, நம் கிராமத்தை, நம் மக்களை, நம் மொழியை நம் சுவைகளைப் போற்றுவோம், மனமகிழ்வோம்.  
          மக்களே மேலே ஏதாவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில்  தெரிவிக்க வேண்டுகிறேன். என் கிராமத்து நினைவுகளில் இன்னும் ஏதாவது இருக்கிறதா என மேலும் தோண்டிப் பார்த்து எடுத்துக் கொண்டு மீண்டும் வருகிறேன்.
-தொடரும்.

பின்குறிப்பு :
நண்பர்களே அதிக வேலைப்பளு மற்றும் இன்னொரு  பட்டப்படிப்பு படிக்க வேண்டியது இருந்ததால் , உங்களை ரொம்ப நாள் சந்திக்கமுடியவில்லை .மன்னிக்கவும் .என்னை மறந்திருக்க மாட்டீர்கள்  என நினைக்கிறேன் .இனிமேல் முடிந்த அளவுக்கு அடிக்கடி வருவேன்.
பரதேசி & நியூயார்க்


Monday, May 6, 2019

பிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி !!!!!


Related image
வேர்களைத்தேடி பகுதி 42
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
            தேவி விலாஸ் கடையில் எங்கப்பாவுக்கு மரியாதை கிடைத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தேவிவிலாஸ் கடையின் உரிமையாளரான நாயரின் இரண்டு மகன்களும் என் அப்பாவிடம் படித்தவர்கள்தான். ஒருவர் பெயர் சோமன், இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது. என் அப்பாவுடன் அங்கு சாப்பிட்ட போது எவ்வளவு கட்டாயப்படுத்தியும் சாப்பிட்ட கட்டணத்தை வாங்குவதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். என் அப்பாவும் அதுவரையிலோ, அதற்கும் பின்னரோ அங்கு சாப்பிட்டதில்லை. ஓசியில் கிடைப்பதற்காக ஒவ்வொரு நாளும் செல்லமுடியாதல்லவா? அதனால் தான் அவருக்கு அப்படி ஒரு மரியாதை.
          தேர்வு சமயத்தில் ஒரு ரூபாய் பணத்தோடு முதல் நாள் செல்லும்போது, என்னை அவர்கள் தியாகு வாத்தியார் பையன் என்று கண்டுகொண்டு கூப்பிட்டு அன்போடு உபசரித்தார்கள். எனக்கு ஒரு நப்பாசை. அப்பாவிடம் வாங்காதது போல் என்னிடமும் வாங்க மறுத்தால் என்ன செய்வது என்று யோசித்தாலும் மறுபுறம் அப்படி வாங்காவிட்டால் அந்தப் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று கனவுக் குதிரைகளைக் தட்டி ஓடவிட்டேன்.  மாணிக்கம்பிள்ளை கடையில் கோகுலம், கல்கண்டு அல்லது முத்துகாமிக்ஸ் வாங்கிவிடலாம் என்று முடிவு காட்டினேன். குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் படிக்க அப்போது என் வீட்டில் அனுமதியில்லை. குறிப்பாக குமுதம் ம்ஹும் என்னவென்று தெரியவில்லை. ஆனால் பெண்கள் குமுதத்தை ஆர்வமாக வாங்கிப் படிப்பார்கள். அதுவும் ஏனென்று தெரியவில்லை.
Image result for பிராமணாள் கடை

          தேவி விலாஸ் கடையைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன்.  முதன் முதலாக என்னுடைய அப்பா அங்கு கூப்பிட்டுக் கொண்டு செல்லும்போது நடந்த உரையாடலை இங்கு தருகிறேன். 
          "அப்பா எந்தக் கடைக்குப் போகிறோம்"
          "ஏன் தேவி விலாசுக்கே போகலாம்"
          "ஆனால் நாம் கிறிஸ்தவர்கள் தானே"
          "ஆமாம் அதற்கென்ன?"
          "பிராமணாள் சாப்பிடுமிடம் என்றல்லவா போட்டிருக்கிறது"
          சிரித்துவிட்டு, "பிராமணாள் சாப்பிடுமிடம் என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கிறது".
          "அது என்ன அர்த்தம்ப்பா?"
          "பிராமணர் சாப்பிடுமிடம் என்றால், பிராமணர்கள் மட்டும் சாப்பிடுமிடம் என்று அர்த்தம் இல்லை. இங்கு சைவ உணவு மட்டும் கிடைக்கும் என்று அர்த்தம்"
          அப்போதுதான் அதற்கு அர்த்தம் விளங்கியது. ஏனென்றால் எனக்குத் தெரிந்து அப்போது எங்கள் ஊரில் இருந்த ஒரே பிராமணக்குடும்பம், மேனேஜர் அய்யர் என்று அழைக்கப்பட்ட பரமசிவம் அய்யர் குடும்பம்தான். இந்து நடுநிலைப்பள்ளியை நிறுவிய அவர், அவருடைய இரு மகள்களான அம்மாப்பொண்ணு டீச்சர், முத்து டீச்சர் ஆகியோர்கள் அதே பள்ளியில் வேலை செய்தனர். இதில் முத்து டீச்சர் என்னுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியை.  இது தவிர இவர்களுடைய சகோதரன் வெங்கடராமனும் பின்னர் இங்கு ஆசிரியராகி தன் தந்தைக்குப்பின் பள்ளியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 
          இவர்கள் மட்டும் தான் தேவி விலாசில் சாப்பிடமுடியுமென்றால் கடை நடத்துவதெப்படி? அல்லது எனக்குத் தெரியாமல் வேற யாராவது நிறைய பிராமணர்கள் இருக்கிறார்களா என்று குழம்பியபோது  அப்பாவின் பதில் சந்தேகத்தைப் போக்கியது. இது தவிர இன்னொரு போர்டும் இருக்கும், "பெரு வியாதியுள்ளவர்கள் உள்ளே நுழையக்கூடாது" என்று.  பின்னர்தான் தெரிந்தது அது தொழு நோயாளிகளைக் குறிக்கிறது என்று. இப்போதும் அதே போர்டுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
          தேவி விலாசுக்கு அருகில் இருந்த புதிய கட்டிடத்தில் ஸ்டேட் பேங்க் செயல்பட்டது. அந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரர் மாணிக்கம்பிள்ளை. அவருடைய ஸ்டேஷனரி மற்றும் புத்தகக்கடையும் அதனருகில் இருந்தது. இங்குதான் தினத்தந்தி போன்ற  பத்திரிக்கைகளும் கிடைக்கும். அதில் தேவதானப்பட்டி பற்றிய செய்திகள் எதுவும் இருக்குமென்றால் அதனை தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்புவதும் மாணிக்கம்பிள்ளைதான்.
        இங்குதான் நான் முத்து காமிக்ஸ், கல்கண்டு ஆகிய பத்திரிக்கைகளை வாங்குவேன். மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமைகளில் வரும் முத்து காமிக்சை மாலையில் சீக்கிரம் சென்று வாங்காவிட்டால் கிடைக்காது, விற்றுப்போய்விடும். எனவே முந்தின நாளே போய்ச சொல்லி வைத்துவிடுவேன். அப்படியிருந்தும் சில நாட்கள் கிடைக்காது. அப்போதெல்லாம் கோபமும், அழுகையும் முட்டிக்கொண்டு வரும். மாணிக்கம்பிள்ளையையும் மனதில் திட்டுவேன். எங்கப்பாவை பெயர் சொல்லி அழைக்கும் சிலரில் மாணிக்கம்பிள்ளையும் ஒருவர்.
          அதற்கடுத்த கட்டிடத்தில் நான் சொன்ன அசைவைக்கடை இருந்தது. அங்கே வேறு என்னவெல்லாம் இருந்தது நான் பார்த்ததில்லை. ஆனால் பரோட்டா சால்னாதான் அங்கு ஸ்பெஷல். அங்கே போகும்போது சிறிதுநேரம் நின்று புரோட்டா தட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.
          பொதுவாகச் சொல்வார்கள், ஓயாத கடலின் அலைகள், மலையின் அருவி, குழந்தை, யானையின் அசைவு ஆகியவற்றை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிக்காது என்பார்கள். அதேபோல் இந்தப்புரோட்டா, தட்டுவதையும்  பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
          இந்த உணவு நம் உணவு இல்லையென்றாலும், எங்கிருந்து வந்தது, இதைச் சாப்பிடுவதால் நன்மையா தீமையா என்பதையெல்லாம் மறந்துபோக வைப்பது இதன் சுவைதான்.
          முதலில் மைதா மாவை எண்ணெயும் தண்ணியும் விட்டு நன்றாகப் பிசைவார்கள். பிசைந்து முடிந்தவுடன் அதனை சிறிய உருண்டைகளாக பிடித்து வைப்பார்கள். பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென்று பளபளப்பாக இருக்கும். பெரும்பாலும் புரோட்டோ தட்டுபவர்கள் நல்ல பலசாலியாக இருப்பார்கள்.         அதன்பின் அதனை எடுத்து உள்ளங்ககையில் தட்டையாக்கி, பிரட்டி பிரட்டி பிரட்டிப்போட அதை அப்படியே பரவி மெலிதாக அகலமாக  ஆகிவிடும். பின்னர் அதனை அப்படியே சுருட்டி வைப்பார்கள். அதன்பின் அதனை தட்டையான சட்டியில் வைத்து பொன்நிறமாகும் வரை சுற்றிலும் எண்ணெய் ஊற்றி பொறிப்பார்கள். விருதுநகரில் இதனையே அப்படியே எண்ணெய்ச் சட்டியில் பொரித்து எடுப்பார்கள்.
          இதில் கொத்துப் பரோட்டோ, வீச்சுப்பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டைப் பரோட்டா, போன்ற பல வகைகள் இருக்கின்றன.
          வட இந்தியாவில் லேயராகச் செய்யும் எதையும் பராத்தா என்றுதான் சொல்கிறார்கள். நம் பரோட்டா என்பது முற்றிலும் வேறு வகை. மதுரைப் பகுதியில் இதனை புரோட்டா என்று தான் சொல்வோம். இதனை எப்படிச்சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
- தொடரும்.



Tuesday, April 30, 2019

என் அப்பாவின் பூரி டெக்னிக் !!!!


Image result for கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பூரி
Thank you Venkat
வேர்களைத்தேடி பகுதி 41
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
            சாப்பாட்டுக் கதைகளின் வரிசையில் அடுத்து எனக்கு ஞாபகம் வருவது ஆப்பக்கடைகள். ஆச்சி இட்டலிக்கடை போலவே ஒன்றிரண்டு ஆப்பக்கடைகளும் இருந்தன. இவை இருந்தவை என்னுடைய  வீட்டிலிருந்து வலதுபுறச்சந்தில் நுழைந்து வாணிகச்செட்டியார் (இங்குதான் எண்ணெய்ச் செக்காடும்) தெருவைக் கடந்து சென்றால் அந்தத் தெரு முழுவதும் உருது பேசும் முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர். சிலர் அவர்களை பட்டாணியர் என்பர். தேவதானப்பட்டியில் வாழும் தமிழ் முஸ்லீம்களை விட இவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். இவர்கள் நிறத்தால் மேலும் வெளுத்தவர்கள். அங்கேதான் என் வகுப்புத் தோழனான சிராஜுதீன் வீடு இருந்தது. அவனைப் பார்க்க அங்கு போகும் போதெல்லாம் காலையிலும் மாலையிலும் தெருவிலிருக்கும் ஆப்பக்கடைகளை பார்ப்பேன். தெருவில் உட்கார்ந்து, தீமூட்டி தண்ணியாய் கரைத்த மாவில் ஆப்பம் சுடுவார்கள். களி மண்ணால் செய்த ஆப்பச்சட்டியைத்தான் பயன்படுத்தவார்கள் . சூடான சட்டியில் தண்ணியான ஆப்ப மாவை ஊற்றி சட்டியைக் துணி சுற்றிய கையில் பிடித்து மாவு சட்டியில் பரவும்படி மேலும் கீழும் அசைப்பார்கள். மாவு பரவியவுடன் அடுப்பில் வைத்து அதன் மேல் ஒரு மூடியை வைத்துவிடுவார்கள். சில நொடிகளில் வெந்துவிடும் ஆப்பத்தை ஒரு கூர்மையான ஸ்பூனை  வைத்து ஒரு ஓரமாக நோண்டினால் ஆப்பம் அப்படியே வந்துவிடும். இதில் ஆப்பத்தைத் திருப்பிப்போட மாட்டார்கள். வட்ட வடிவமாக சிறிது பொன்னிறமாக சுற்றிலும் மெலிதானதாகவும் நடுவில் கொஞ்சம் தடியாகவும் ஆயிரம் சிறு துளைகளைக் கொண்டதாகவும் இருக்கும். சற்றே  இனிப்பாக இருக்கும் ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால் சொதி அல்லது சட்னி தருவார்கள். எனக்கு அப்போதிருந்தே இனிப்பு ஆகாதென்பதால், ஆப்பம்  எனக்கு அவ்வளவு விருப்பமான உணவல்ல. சில சமயங்ககளில் என் அம்மா வாங்கிவரச் சொல்வார்கள்.
Related image

          மற்றொரு  சாப்பாட்டுக்கடை தேவிவிலாஸ் ஓட்டல். ஓட்டல் என்றால் சாப்பிடுமிடம் என்றுதான் ரொம்ப நாளாக நினைத்திருந்தேன். ஏனென்றால் தேவதானப்பட்டியில் சாப்பிடுமிடத்தை ஓட்டல் அல்லது கிளப் கடை என்று சொல்வார்கள். சென்னைக்கு வந்தபின்தான் ஓட்டல் என்றால் தங்குமிடம் எனவும் ரெஸ்ட்டாரண்ட் என்றால்தான் சாப்பாட்டுக்கடை என்று தெரியவந்தது. தேவதானப்பட்டிக்கு பிழைப்புக்காக வந்த இரு மலையாள நாயர் சகோதரர்கள் முதலில் டீக்கடை ஆரம்பித்து பின்னர் அதனையே சாப்பிடுமிடமாக விரிவு செய்தார்கள். பின்னர் தனித்தனி கடைகளை அருகருகில் அமைத்துக் கொண்டனர். அருகில் என்றால் ஒரு 10 அடி தள்ளி. அதில் ஒன்றின் பெயர்தான் தேவிவிலாஸ். சின்ன வயதிலிருந்து அங்கு  சென்று சாப்பிட வேண்டும் என்று எனக்கு ஆசை. எங்கப்பாவிடம் அதனைச் சொன்னேன். அவரும் ஒரு நாள் மாலையில் என்னைக் கூப்பிட்டுக் கொண்டு சென்றார். முன் கடைக்கு முன்னால் பெரிய கீற்றுக் கொட்டகை, கடந்து சென்றால் ஒரு மூலையில் டீ, காப்பி விற்கும் இடம். அதன் நேர் எதிரே உரிமையாளர் உட்காரும் கல்லா மேசை. அதனைத்தாண்டி உள்ளேபோனால் பழைய சதுர மார்பிள் மேசைகள் போட்டு சுற்றிலும் ஸ்டூல்கள் இருக்கும். அங்கே நடுநாயகமாக இருந்த கண்ணாடிக் கதவுகள் இருந்த அலமாரியில் பூரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதனருகில் வடை, போண்டா, இனிப்புருண்டைகள் இருக்கும்.
             என் அப்பா உள்ளே நுழையும்போது நாயர் எழுந்து நின்று வரவேற்றார், அதோடு கடையில் இருந்த வேலை செய்பவர்கள் மட்டுமல்ல, சாப்பிட்டுக் கொண்டிருந்த பலரும் சற்றே எழுந்து என் அப்பாவை வரவேற்றனர். என் அப்பாவுக்கு எல்லோரும் கொடுத்த மரியாதை எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஊர் முழுவதும் அப்பா மேல் ஒரு மரியாதை இருந்தது. சிறந்த ஆசிரியர் என்பதால் மட்டுமல்ல தன் ஆசிரியப்பணியை வெறும் கடமையாக எண்ணாது தன் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து சொல்லிக் கொடுப்பவர் என்பதால் அந்த மரியாதை.
       என் அப்பாவிடம், "எனக்கு பூரி வேண்டும்" என்றேன்.வேண்டாம் அதனை காலையில் சுட்டிருப்பார்கள், தோசை சாப்பிடலாம் என்று சொல்லி 2 ஸ்பெஷல் தோசை ஆர்டர் செய்தார். காரமான கெட்டிச்சட்னி, சாம்பார் சகிதம் தோசை நன்றாகவே இருந்தது.
Image result for Poori masala
Courtesy Swasthi
                    தோசை சுவையாக இருந்தாலும் என் கண் என்னவோ உருண்டையாக உப்பிய நிலையில் வைக்கப்பட்டிருந்த பூரி மேலேயே இருந்தது. ஏனென்றால் இட்டலி தோசை வீட்டில் கிடைக்கும். பூரி பொங்கல்தான் வெளியே கிடைக்கும் என்பதால். அதன்பின்னர் நான் ஒன்பது, பத்தாவது படிக்கும்போது தேர்வுகள் வரும் தினங்களில் என்னை ஊக்கப்படுத்துவதற்காக தினமும் 1 ரூபாய் அப்பா தருவார். அதனை எடுத்துக்கொண்டு தேவிவிலாஸ் சென்று பூரி கேட்டேன். என்னுடைய நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியது. உப்பிய பூரியில் நடுவில் ஓட்டை போட்டு உள்ளே சூடான பூரிக்கிழங்கை வைத்துக் கொடுத்தனர்.
          இதில் நான் அறிந்து கொண்டது என்னவென்றால் உருளைக்கிழங்கு விலை மலிவாக இருக்கும்போது மசாலாவில் கிழங்கு அதிகமாகவும், வெங்காயம் கம்மியாகவும் இருக்கும். வெங்காயம் விலை குறையும்போது வெங்காயம் அதிகமாகவும் கிழங்கு குறைவாக இருக்கும். வெங்காயம் அதிகமாகவும், கிழங்கு குறைவாக இருக்கும்போதும் என்னைப் பொறுத்தவரையில் சுவை கூடுதலாக இருக்கும்.
          எப்பொழுதும்  பூரி சாப்பிட்டதால் நான் போனால், "வா சேகர்" என்று வரவேற்று நான் சொல்லாமலேயே பூரி மசாலாவை கொண்டு வந்துவிடுவார்கள். ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக பொங்கல் கேட்டேன் அதுவும் சுவையாகவே இருந்தது. சட்னியும் சாம்பாரையும் இணைத்து வடையுடன் சாப்பிட்டேன் வீட்டில் வந்து சொன்னபோது, அப்பா சொன்னார். "இனிமேல் பொங்கல் சாப்பிடாதே" என்று. ஏனென்று கேட்டதற்கு முந்தின நாள் சாதம் மிஞ்சிவிட்டால் அதில்தான் அடுத்தநாள் பொங்கலோ அல்லது லெமன் சாதம், புளி சாதம் என்று செய்துவிடுவார்கள். எனவே அதைச் சாப்பிடக் கூடாது" என்று சொன்னார். அதிலிருந்து பூரி மட்டும்தான் சாப்பிடுவேன். தேர்வுக்காலங்களில் மட்டும் என் அப்பாவிடமிருந்து கிடைக்கும் சலுகை என்பதால், தேர்வு சமயங்களில் வரும் பதட்டத்தை வெகுவாக நீக்கினேன். ஆஹா பூரி கிடைக்குமே என்ற எண்ணம்.
இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது, அது என்னுடைய அப்பாவின் இன்னொரு டெக்னீக்காகத்தான் தெரிகிறது. அதனால் அவர் எதிர் பார்த்த  பலனும் கிடைத்தது என்றே நினைக்கிறேன். தேவிவிலாஸ் கடையின் பூரி மற்றும் மசாலாவின் சுவை என் நாவில் மட்டுமல்ல மனதிலும் நிலைத்து நிற்கிறது.
          அதற்கு அருகில் எங்கள் பேரூராட்சித் தலைவராக பலவருடம் இருந்த தி.மு.கவைச்  சேர்ந்த D.K.ராஜேந்திரன் அவர்கள் அலுவலகம்  இருக்கும். அதனருகில் இன்னொரு கடை இருந்தது. முஸ்லீம் நடத்திய அந்தக் கடையில் பரோட்டா நன்றாக இருக்கும். அதனைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்


Tuesday, April 23, 2019

பாட்டி இட்லி சுட்ட கதை !!!!!



வேர்களைத்தேடி பகுதி 40
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
Related image

          மீன் கதையை எழுதிக் கொண்டிருக்கும்போதே தேவதானப்பட்டியில் வெளியே சாப்பிட்ட சில தருணங்கள் ஞாபகம் வந்தது. முதலாவதாக ஆச்சி இட்லிக்கடை. பாட்டி வடை சுட்டதுபோல் இது பாட்டி இட்லி சுட்ட கதை.
          எங்கள் வீட்டில் பெரும்பாலும் உணவு வெளியில் சாப்பிடுவதில்லை. ஆனால் எப்போதாவது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, இல்லை மாவாட்டுவதற்கு நேரமில்லை என்றால் என்னை ஆச்சி இட்லிக்கடைக்கு அனுப்புவார்கள். கடை என்றால் பெரிய கடையில்லை. அவருடைய ஒரு அறை வீட்டின் வெளியே போடப்பட்ட சிறு கீற்றுக் கொட்டகை. ஆச்சி தனியாகத்தான் வாழ்ந்து வந்தார். அவருடைய உறவினர்கள் பற்றிப் பெரிதாகத்  தெரியவில்லை. இந்து நடுநிலைப்பள்ளியின் அருகேயுள்ள தெருவிலிருந்து கோட்டையன் கோவில்   அல்லது கொண்டைத்தாத்தா கோவிலுக்குச் செல்லும் வழியில் இடது புற மூலையில் இருந்தது ஆச்சி கடை. இங்கே காலையில் இட்லி மட்டும்  கிடைக்கும். எத்தனை மணிக்கு கடை திறப்பார் என்று தெரியாது. ஆனால் நான் ஒரு ஏழு அல்லது ஏழரை மணிக்குச் செல்லும்போது அங்கே வியாபாரம் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும். அங்கே பலபேர் இட்லிக்காக  காத்துக் கொண்டிருப்பார்கள்.
          ஆச்சி ஒல்லியாக உயரமாக இருப்பார். வளர்த்த காதில் ஒன்ருமிருக்காது. தும்பைப்பூ போன்ற வெள்ளைச்சேலை அணிந்திருப்பார். ரவிக்கை கிடையாது.  சின்ன இடமாக இருந்தாலும் சாணி மெழுகி சுத்தமாக இருக்கும். கரி அடுப்பில் ஒரு அலுமினிய இட்லிப் பாத்திரம் அதனருகில் சிறு மரமனையில் ஆச்சி உட்கார்ந்திருப்பார். சுருங்கிய நெற்றியில் தோன்றும் முத்துமுத்தான வியர்வையை அவ்வப்போது சேலைத்தலைப்பால் துடைத்துக் கொள்வார். வாயில் ஒரு பல் கூட இல்லை. ஆனால் பேச்சில் குழறல் இருக்காது. இட்லிச்சட்டியைத்திறந்து   ஆவி பறக்க தட்டுகளை கீழே வைத்து இலேசாக நீர் தெளித்து வெறுங்கையிலேயே இட்லிகளை  எடுத்துவிடுவார். அதனால்தானோ அவரின் இரு கைகளும் வெள்ளையாக இருக்கும். கைகள் அல்லது கால்கள் அதிகமாக நீரில் புழங்கினால் சேத்துப்புண் என்று வெள்ளையாக வரும். ஆச்சிக்கு இருந்தது அதுவில்லை  என நினைக்கிறேன் நம்புகிறேன்.
          இட்லிகள் தும்பைப்பூ போல் வெள்ளைவெளேரென்று சரியான அளவில் மல்லிகைப்பூப்போல மெதுவாக இருக்கும். அப்போது 1970களில்  ஆரம்பத்தில் ஒரு இட்லி ஐந்து பைசா என்று நினைக்கிறன். ஆச்சி கடையில் மெதுவான இட்லி மட்டுமல்ல சட்னியும் விசேஷம் தான் இரண்டு வகையான சட்னி இருக்கும். தேங்காய் பொட்டுக்கடலை போட்டு அரைத்த சட்னியும், காரச்சட்டினியும் இருக்கும். தேங்காய்சட்னி  மிகவும் தண்ணியாக இருக்கும். ஆனால் இட்லியில் தோய்த்துச் சாப்பிட்டால் சுவை அள்ளும். காரச்சட்னி சிறிது கொத்சு போல இருக்கும். காரம் மூளைக்கு ஏறும். ஆச்சி கடையில் நான் பார்த்து . இட்டலிகள் சட்டியிலிருந்து எடுக்கப்பட்டு பாத்திரத்திற்குப் போனதேயில்லை. நேராக வாங்குபவர்களிடம் போய்விடும். அங்கேயே ஓரமாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு மட்டும் ஒரு சிறு வாழை இலையின் அடியில் ஒரு தினப்பத்திரிகை வைத்து கையில் கொடுப்பார்கள். அதே இரண்டு வகை சட்னிதான். இட்லியும் அளவும் தரமும் சட்னிகளின் சுவையும் என்றும் ஒரே மாதிரி இருக்கும் கைப்பக்குவம். வாங்க வருபவர்கள் கையில் இட்டலிக்கும் சட்னிக்கும் பாத்திரம் கொண்டுவர வேண்டும். அப்போது பிளாஸ்ட்டிக்கெல்லாம் கிடையாது. எப்போதும் அடுத்து எனக்கு என்று மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஆச்சி முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு யாருக்கும் எந்த சலுகையும் காட்ட மாட்டார். அதையும் அன்பாகவே செய்வார். அங்கேயே சாப்பிடுபவர்களுக்கும் அதே வரிசைதான்.
          அந்த வயதிலும் உழைத்துச் சாப்பிட்ட அவர் ஒரு உண்மையான தொழிலாளி. தொழிலாளி என்று சொல்வதைவிட அவரை ஒரு போராளி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
          எப்போதும் ஒரே மெனுதான், ஒரே இட்டலிப் பாத்திரம்தான், 9 மணிக்குள் மொத்தமாக தீர்ந்து விடும் . ஆச்சிக்கு பெரியதாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. ஒரு நேரம் மட்டும்தான். அவரை வாழ்வை நடத்துவதற்கு அது போதுமானதாக இருந்திருக்கும். மற்ற நேரத்தில் என்ன செய்வார் என்று யோசித்திருக்கிறேன்.
          ஒரு நாள் கடைவீதியில் பார்த்துக் கேட்டுவிட்டேன். அதனை அவருடைய வார்த்தைகளில் சொல்கிறேன். "சேகர் நல்லா  இருக்கியா? பாத்து ரொம்ப நாளாச்சு, டீச்சரும் வாத்தியாரும் நல்லா இருக்காங்களா என்ன கேட்ட? மத்த நேரத்தை எப்படி செலவழிக்கிறேன்னா? காலைல நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சு குளிச்சு ரெடியாகி பாத்திரங்களை துலக்கி, மாவை நல்லா கரைச்சு வச்சிருவேன். தேங்காய் துருவி, சட்னிகளைச் செஞ்சுட்டு அடுப்பு பத்தவச்சு இட்லிச்சட்னியை வைக்கிறதுக்குள்ள ஆளுக  வந்திருவாக. ஆறு மணியிலிருந்து 8.30- 9 மணிக்கெல்லாம் மாவு முழுதும் தீர்ந்திரும் சில வேளையில் 8 மணிக்கெல்லாம் தீர்ந்திரும். ஆனாலும் நிதம் அதே அளவுதான்”.
          " ஏன் ஆச்சி கொஞ்சம் அளவைக் கூட்டலாம்ல, தினமும் குறைஞ்சது 10 பேராவது ஏமாந்து போறாங்கள்ள, ".
“இல்ல சேகரு அளவைக் கூட்டிட்டா, இட்லியோட தரம் குறைஞ்சு போகுமோன்னு பயம். அதனாலதான் எனக்குத்தெரிஞ்ச அளவிலயே நான் செய்யுறேன். அப்புறம்  என்ன செய்வேன்னு கேட்டல்ல பண்ட பாத்திரங்களை விளக்கி வைப்பேன். அதுக்குள்ள பத்துக்கு மேலாயிரும். அப்புறம் கடைக்குபோய் அடுத்த நாளுக்கு தேவையான அரிசி, உளுந்து, உப்பு, மிளகாய், தேங்காய், புளின்னு எல்லா மளிகை சாமானும் வாங்கிட்டு வருவேன். அதுக்குள்ளே மத்தியானம் ஆயிரும். அப்புறம் சோறுபொங்கி சாப்பிட்டிட்டு சித்த நேரம் படுப்பேன். நாலு மணிக்கெல்லாம் எழுந்து மாவாட்டி வைத்துவிட்டு எல்லா பாத்திரங்களையும் ரெடி பண்ணி வைத்துவிட்டு இரவு உணவை உண்டுவிட்டு சீக்கிரமாக எட்டு மணிக்கெல்லாம் படுத்துவிடுவேன்”.
Image result for காது வளர்த்த ஆயா
Courtesy : Google
          " ஏன் ஆச்சி தினமும் அரிசி உளுந்து வாங்கனும். ஒரு மாசத்துக்கு வாங்கிப்போட வேண்டியதுதானே. நாடார் கடையில அக்கவுண்ட் வச்சுட்டா மாசாமாசம் மொத்தமா கொடுத்திரலாம்ல"
          “நாடார் கடையில கேட்டுப்பார்த்தேன். அதெல்லாம் மாசச்சம்பளம் வாங்குற கவர்ன்மென்ட் உத்தியோகஸ்தர்களுக்கு மட்டும் தான் தருவாகலாம். அதோட எதுக்கு கடனை வாங்கனும்.  கடனைக் கட்டாம பொசுக்குன்னு போயிட்டேன்னா, அந்தக்கடனை யார் கட்டறது?.”
          ஆச்சி நல்லாத்தான் யோசிக்குதுன்னு நெனைச்சேன். அதற்கப்புறம் +1 +2 படிக்கறதுக்கு காந்திகிராமம் போயிட்டேன். பொங்கல் லீவுக்கு ஊருக்கு வரும்போது, எங்கம்மாவுக்கு அன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் இருக்குன்னு சொல்லி சீக்கிரம் போகனும்னு சொன்னாங்க.
நான் சொன்னேன் "பரவாயில்லம்மா, நான் ஆச்சி கடையில இட்லி  வாங்கிட்டுவரேன்”னு சொன்னேன்.

          “என்னடா உனக்குத் தெரியாதா, ஆச்சி செத்துப்போச்சு. இட்லி வியாபாரம்லாம் முடிச்சுட்டு சாமான் வாங்கிவச்சுட்டு படுத்த கிழவி எந்திரிக்கவேயில்லை. மகராசி நல்ல சாவுதான்னு” அம்மா சொன்னாங்க. செருப்பை மாட்டிக் கொண்டு உடனே அந்த இடத்துக்குப்போனேன், குடிசையின் வாசல்ல பூட்டுத் தொங்கி அந்தத் தெருவே வெறிச்சுனு இருந்துச்சு.
தொடரும்

Monday, April 15, 2019

மீன் கதை !!!!


Image result for ஜிலேபி கெண்டை
வேர்களைத்தேடி பகுதி 39
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
            எங்கள் ஊரான தேவதானப்பட்டியில் அப்போதெல்லாம் கோழிக்கடை இருக்காது. விவசாயம் சார்ந்த ஊரானதால் பல வீடுகளிலும் கோழி வளர்ப்பார்கள்.  வான் கோழியும் வளர்ப்பார்கள். எனவே தேவைப்பட்டால் சேவலையோ விடைக்கோழியையோ அறுத்து சமைத்து விடுவார்கள். எனவே தனியாக கோழிக்கறிக்கடை இருக்காது. நாட்டுக் கோழிகளை வளர்ப்பவர்களிடமே வாங்கிக் கொள்ளலாம். எங்கம்மா  அவ்வளவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆயா என்று நாங்கள் அழைக்கும் எங்கள் அம்மாவின் அம்மா எங்களோடுதான் இருந்தார்கள். மிக அருமையாக சமைப்பார்கள். அறுசுவை உணவை அரை மணியில் சமைத்துவிடுவார்கள். சைவம் அசைவம் இரண்டும் சூப்பராக இருக்கும். ஆட்டுக்கறிக்குழப்பு வைத்தால் கைமணக்க, வாய் மணக்க மிக அருமையாக இருக்கும். அவருக்கு மசாலா அரைத்துத் தருவது மட்டும்தான் என் அம்மாவின் வேலை. ஆட்டுக்கல் அம்மிக்கல் இரண்டும் இருக்கும், மசாலா தேங்காய் ஆகியவற்றை அம்மிக்கல்லிலும், ஆட்டுரலில் இட்லி தோசைக்கு மாவு மற்றும் தேங்காய் பொட்டுக்கடலை சட்னியும் அரைத்துக் கொடுப்பது அம்மாவின் வேலை. கோழிக்கறி வேண்டுமென்றால் பக்கத்து ஊர்களான பெரியகுளம் அல்லது வத்தலகுண்டு போய் எங்கப்பா வாங்கிவருவார்.
Image result for அயிரை மீன்
அயிரை மீன்
          ஆயா இருக்கும்வரை சுவையான உணவுக்குப் பஞ்சமில்லை.  அதன்பிறகு முழுப்பொறுப்பும் என் அம்மாவின் மேல் விழுந்தது. ஆரம்பத்தில் சோறு குழைந்துவிடும், காரம் / உப்பு அதிகமாகிவிடும். மிகுந்த  நேரம் பிடிக்கும். இதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் படிப்படியாக முன்னேறி நன்றாக சமைக்கக் கற்றுக் கொண்டார். மட்டன் குழம்பு, குருமா, மட்டன் ஃபிரை, காரக் குழம்பு, மொச்சைக்குழம்பு, புளிக்குழம்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, சாம்பார் ஆகியவை கிட்டத்தட்ட எங்கள் ஆயாவின் கைப்பக்குவத்திற்கு இணையாக வந்துவிட்டது. ஆனால் சில சமையல் அம்மாவுக்கு வரவேயில்லை.  பலகாரங்கள் செய்வது, பிரியாணி செய்வது, கோழி வெட்டுவது இதெல்லாம் அவர்களுக்கு கடைசிவரை வரவேயில்லை.
          இன்னொன்று எங்கம்மா செய்வது மீன்குழம்பு, இது எப்பவும் இருக்காது எப்போதாவது விடுமுறை தினங்களில் செய்வார்கள். எங்கள் ஊரில் மீன்கடை என்று இல்லை. ஆனால் தெருக்களில் விற்றுக்கொண்டு வருவார்கள். அருகில் எந்தக் கடலும் இல்லாததால் ஆறு, குளம், கிணறு ஆகிய மீன்கள் மட்டும்தான் வரும். விரால் மீன், கெண்டை, கெளுத்தி, குரவை, ஜிலேபி கெண்டை, அயிரை ஆகியவைதான் வரும். இதில் எங்கம்மா அடிக்கடி செய்வது ஜிலேபிக்கண்டை மீன். இன்னொரு வகை மீன் குரவை. விரால் எப்போதாவது தான் கிடைக்கும்.
          இந்த ஜிலேபிக்கெண்டை மீன் செய்கிற நாளும் அதன்பின் ஒருவாரம் மீன் கவிச்சி வீடுமுழுதும் நிறைந்து எரிச்சலைத்தரும். அதனாலேயே எனக்கு மிகுந்த ஐயரவு ஏற்பட்டது. (ஐயரவு என்பதற்கும் ஐயர் என்பதற்கும் எந்த சம்பந்தமும் நேரடியாக இல்லையென்பது என்பதை  தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )
Image result for விரால் மீன்
விரால்
          ஒரு சமயம் முதுகலை படிக்கும் சமயம் என்னுடைய வீட்டிற்கு என் வகுப்பு நண்பர்கள் வந்து ஒரு நான்கு நாள் தங்கியிருந்தனர். அவர்களை வைகை அணை, மஞ்சளாறு அணை,  காமாட்சியம்மன் கோவில், கும்பக்கரை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். கோடை விடுமுறை என்பதால் அம்மாவும் வீட்டில் தான் இருந்தார்கள். நான் கேட்காமலேயே அவர்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவ வகை செய்து அசத்தினார்கள். ஒரு நாள் மட்டன் குழம்பு, மறுநாள் சிக்கன், இன்னொரு நாள் சாம்பார், மட்டன் ஃபிரை, கடைசி நாளில் மீன்குழம்பு செய்திருந்தார்கள். அந்த மீன் வழக்கமாகச் செய்யும் மீன் இல்லை. ஏதோ ஒன்றை தெருவில் விற்பவன்  தலையில் கட்டிவிட்டான் என்று நினைக்கிறேன். ஆனால் சுவை நன்றாகத்தான் இருந்தது. வளவளவென்ற தோலுடன் குறுகலாக உருண்டையாக இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிண்டல் பிடித்த சேலம் ரவி, "டேய் உங்கம்மா மீன் வாங்கறதுக்குப் பதிலா பாம்பு வாங்கிச் சமைச்சிருங்காங்கடா.ஆனால் அதுவும் நல்லாத்தான் இருக்கு" என்று காதில் சொன்னான். ஏற்கனவே நாற்றமுடைத்த மீனை பிடிக்காமல் இருந்த மனதை இந்த பாம்பு உவமை பலமாகத்தாக்கியதால் அன்றிலிருந்து மீன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதன்பின் தொடர்ந்து ஹாஸ்டலிலும் தனியாகத்தங்கியும் இருந்ததால் மீனைத் தொடவில்லை. ஆனால் என் மனைவி ஒரு மீன் பிரியை, ஒவ்வொரு தடவை மீன் செய்யும்போதும் குற்ற உணர்ச்சியால் என்னைச்சாப்பிட வற்புறுத்துவாள். மதியம் கொடுத்தால் இரவு சாப்பிடுகிறேன் என்றும் இரவு கொடுத்தால், இரவில் வேண்டாம் என்றும் சொல்லித் தப்பித்துவிடுவேன்.
          ஆனால் மீன் உணவு மிகவும் நல்லது. ஆட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி, ஆகியவற்றில் கோழிக்கறி என்பது மற்றவற்றைவிட நல்லது என்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ரெட்மீட் என்று சொல்லப்படுகிற ஆட்டுக்கறி,பன்றிக்கறி, மாட்டுக்கறியை ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் கோழிக்கறி இதில் சேராது. இவையெல்லாவற்றையும் விட மீன் உணவு நமது நாட்டிலேயே மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் சைவ உணவாக கருதப்படுவதோடு பிராமணர்களும் சகஜமாகச் சாப்பிடுகிறார்கள். அங்குள்ள ஐயர்களுக்கு எந்த ஐயரவும் இல்லை. அதோடு மற்ற அசைவ உணவுகளை விட மீன் விலை குறைவு என்பதால் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ்வருமான உள்ளவர்கள் மீன் அதிகம் சாப்பிடுவதால் உடல்நிலை திடமாக ஆரோக்யமானவர்களாக இருக்கிறார்கள்.
          என் அமெரிக்கன் கல்லூரி வகுப்புத்தோழன் ராஜசேகர் மதுரை சாரதா மெஸ்ஸின் கிளையை சென்னையில் ஆரம்பித்து நடத்தி வருகிறான். மதுரை சாரதா மெஸ்ஸின் இரண்டு சிறப்பம்சங்கள் என்னவென்றால் மண்பானை சமையல், மற்றும் அயிரைமீன் குழம்பு, இதற்காக தினமும் மதுரையில் இருந்து அயிரை மீன் வருவதோடு விரால் மீனை அவனே வளர்க்கிறான். நான் சென்னையில் இருந்தபோது சாரதா மெஸ்ஸீக்கு அடிக்கடி  செல்வேன். முதல் காரணம் அங்கு கிடைக்கும் சீரக சம்பா பிரியாணி, பரோட்டா மற்றும் மட்டன் சுக்கா வருவல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுதவிர 2வது காரணம் உடனே காசு கொடுக்கத்தேவையில்லை. அங்கு அயிரை மீன் குழம்பு சாப்பிடுவதற்காகவே  MLA-க்கள் பலர் வருவார்கள் என்றாலும் நான் ஒரு நாள் கூட அயிரை மீனை  அங்கு சாப்பிட்டதில்லை. ஆனால் மீன் வகைகளில் நெய்மீன் கருவாடும், நெத்திலிக்கருவாடும் எனக்கு இன்னும் பிடிக்கிறது. எந்தவித தயக்கமின்றி சாப்பிடுகிறேன்.
          போனமாதம் டாக்டரிடம் சோதனை செய்யப்போயிருந்த போது, எல்லாம் முடிந்து ரிசல்ட்டைப் பார்த்த டாக்டர்,
“உங்களுக்கு புரதச் சத்து கம்மியாக இருப்பதால் பால் சாப்பிட வேண்டும்”,
 “ஐயோ பால் சாப்பிடமாட்டேன்டாக்டர்”,
“அதோடு மீன் எண்ணெய் சத்து குறைவதாக இருப்பதால் மீன் சாப்பிடவேண்டும்”, “அய்யயோ மீனும் சாப்பிடமாட்டேன்”.
என்னய்யா உன்னோட தொல்லையாகப்போச்சு  என்று நினைத்தமாதிரி அவர்கள் முகம் சொல்லியது .கொஞ்சம் யோசித்துவிட்டு ஒருநாளைக்கு மூன்று வேளையும் ஒமேகா மாத்திரை 1000MG சாப்பிடச் சொல்லிவிட்டார்கள்.
தொடரும்