Showing posts with label பரதேசியின் வாகனங்கள். Show all posts
Showing posts with label பரதேசியின் வாகனங்கள். Show all posts

Wednesday, February 10, 2021

ஹீரோவான பரதேசி !

                                              பரதேசியின் வாகனங்கள் - பகுதி-5

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post_25.html



அவர் என்னுடைய TVS சேம்பைப் பார்த்த பார்வையில் இருந்தது ஏளனமா, இளக்காரமா, கேவலமா? பரிதாபமா ஏமாற்றமா? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. கார் கொண்டு வரவில்லையா? என்று கேட்டதும் கூட சாதாரணமாகத்தான் இருந்து. நல்லவேளை அவர் பின்னால் உட்கார்ந்து கொண்டு TVS -ஐ ஓட்டச்சொல்லி இருந்தால் என்னுடைய நிலைமை திண்டாட்டமாயிருந்திருக்கும். இந்தச் சிறிய உருவம், அவ்வளவு பெரிய ஆஜானுபாகரை பின்னால் உட்கார வைத்திருந்தால் வண்டி சர்வ நிச்சயமாய் குடை சாய்ந்திருக்கும்.

ஐந்து நிமிடத்தில் ஊரை விட்டு வெளியே வந்தோம். ஊர் என்ன ஊர் ஒரு மூன்று நான்கு தெருக்கள் தான் இருக்கும். ஒரு அரைமணிநேரம் கர்ணத்தின் பின்னால் ஓட்டமும் நடையுமாக உப்புச் சத்யாக் கிரகத்தின் போது காந்தியின் பின்னால் போவது போல இருந்தது. போனால் என்னுடைய  டைரக்டர் சுசில் அவர்களின் இடம் வந்தது. மொத்தம் 50 ஏக்கர். அதன் ஒரு பகுதியில் சோளப்பயிர் செழித்து வளர்ந்திருந்தது.

கர்ணத்திடம் ஒரு முறைக்கு இருமுறை வரைபடம் வைத்து அந்த நிலத்தின் அகல நீளத்தைத் தெரிந்து கொண்டு மீண்டும் சென்னைக்கு கிளம்பினேன். வந்து சேர 3 மணியாகிவிட்டதால்  நேராக திருவல்லிக்கேனியின் பேச்சிலர் பேரடைஸ் ரூமில் போய் வியர்வைக் குளியலைப் போக்க குளிர்ந்த தண்ணீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு, தரையில் போடப்பட்டிருந்த மெத்தையில் சாய்ந்தேன். கையில் தி.ஜா.ராவின் மோகமுள் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். முள் கொஞ்சம்  குத்தியது. எட்டு மணி போல் சைலண்ட் மெஸ்ஸுக்குப் போனால் போதும்.



(எலேய் சேகரு அதென்னடா சைலண்ட் மெஸ்? =- அதைப்பத்தி இன்னொரு நாள் சொல்றேன் மகேந்திரா)

அடுத்த நாள் அலுவலகம் சென்றபோது, என்னுடைய டைரக்டர் சுசில் பெர்ஷாத் என்னைத்தேடி வந்தார்.

"என்னாச்சு நேத்து?"

"சார் போய்ப்பார்த்தேன், நிலம் நல்லபடியாக இருக்கிறது”.

“ஆர் யூ ஸ்சுயர்?”,

“நீங்கள் போட்ட சோளப்பயிறும் நன்றாக வளர்ந்து வந்திருக்கிறது. நிலம் முழுவதும்  போட்டால்  கூட நன்கு வளரும்"

"வாட் நான்சென்ஸ்?"

" பெக் யுவர் பார்டன்?"

“நான் எங்க சோளப்பயிர் போட்டேன். இதைத்தான நான் மேலிருந்து பார்த்தேன். யாரோ நிலத்தை ஆக்கிரமித்து பயிர் செய்திருக்கிறார்கள். போச்சு என் நிலம் போச்சு”.

"கவலைப்படாதீங்க, நான் திரும்பப் போய் நிலம் முழுவதையும் சர்வேயர் வைத்து அளந்து சுற்றி கருங்கல் வேலி போட்டு ஒரு போர்டும் வைத்துவிடுகிறேன்”.

"ஓக்கே, ஆமா நேத்து முழுநாளும் உன்னைப் பார்கலேயே"

(என்னடா வாகனத்தைப்பத்திச் சொல்றேன்னு அதப்பத்தி பேசாம ஒரு பதிவே முடியப்போவுது - பொறுமை மகேந்திரா, வருது வருது)

 "சார் போய்ட்டு வர்றதுக்கு நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. அதுக்கப்புறம் ஆபிசுக்கு வந்து சேர ஐந்து மணியாயிடும். அதனால தான் நேரா ரூமுக்குப் போயிட்டேன்"

"எத்தனை மணிக்கு கிளம்பின?"

"எட்டுமணிக்கு"

"ஆமா நீ என்ன வண்டி வச்சிருக்கிற?"

"டி.வி.எஸ் சேம்ப்"

"என்ன மொபட்லயா அவ்வளவு தூரம் போன, அதான் இவ்வளவு நேரமாயிருக்கு. என் ரூமுக்கு வா" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று படிகளில் இறங்கினார். அவருடைய கேபின் கிழே இருந்த யூனிட்டில் இருந்தது. அந்த கண்ணாடி அறையைத்திறந்து உள்ளே போனேன். கண்களால் உட்காரச் சொல்லிவிட்டு, செக்புக்கை எடுத்தார். நம்பினால் நம்புங்க ஒரு பிளாங்க் செக்கை கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, "நீ உடனே போய் ஒரு புல்லட்டை வாங்கிரு" என்கிறார்.

எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது, தயங்கி நின்றேன்.

"என்ன ஆல்ஃபி என்ன தயங்கிற, இது உனக்கு நல்லது. ஒரு அரை நாள்ல வேலையை முடிச்சுட்டு ஆபிஸ் வந்துறலாம்"

"அதுக்கில்ல சார், அது---- ரொம்ப செலவாகும்"

“அதான் பிளாங்க் செக் கொடுத்திருக்கேனே போய் ஒரு ஏஜென்ட்டை பார்த்து விசாரித்து அமௌண்ட்டை எழுதிக் கொடுத்துரு"

"அதுக்கில்ல சார்?"

“ என்ன சொல்லுப்பா?”

"புல்லட் வாங்கினா டிரைவர் வைக்கணுமே?”

"என்ன டிரைவரா?"

"ஆமா சார் என்னுடைய உருவத்துக்கு புல்லட்டெல்லாம் ஓட்ட முடியாது, உருட்டவும் முடியாது, அதான்"

"ஹா ஹா ஹா, உன்னால ஓட்ட முடியாதுன்னு நீ சொல்றத என்னால ஏத்துக்க முடியல", ஓகே ஒரு நல்ல 100CC  பைக் வாங்கிக்க"

(மகேந்திரா இப்ப புரியுதா நான் எங்கிருந்து வரேன்னு?)

நான் தேர்ந்தெடுத்த வண்டி "ஹீரோ ஹோண்டா"

(எலேய் சேகரு ஹீரோ நெனப்பில வாங்கினயா": சேச்சே என் உயரம் எனக்குத் தெரியும், மகேந்திரா)

 அப்போதிருந்த 100CC பைக்குகளில் எனக்கு மிகவும் பிடித்த வண்டி இது. நான் வாங்கியது கறுப்பும் சிவப்பும் கலந்த வண்டி. பார்க்க அம்சமாக இருக்கும். அதோடு நல்ல மைலேஜ் கொடுக்கும். அந்த விளம்பரம் ஞாபகமிருக்கா? ஃபில் இட், ஷட் இட் and ஃபர்கட் இட். இதெல்லாம் விட எனக்குப் பிடித்த மற்றொன்று அதன் சத்தம் புல்லட்டின் தம்பி

போலவே  ஒலிக்கும்.

டி.வி. எஸ் சேம்ப்பை நண்பன் மினிசாமிடம் விற்று விட்டு, ஹீரோ ஹோண்டாவில் பயணம் செய்தேன். என்னுடைய தோற்றம் கெட்டப் எல்லாம் மாறிப்போயிருச்சு. இன்ட்டர்கிராப்ட்டில் இருக்கும் வரை 89 லிருந்து 92 வரை ஹீரோ ஹோண்டாதான் என் வாகனம். அழகாக மட்டுமல்ல கம்பீரமாகவும் இருக்கும். அந்தக் காலக்கட்டத்தின் என்னுடைய அடையாளமாக மாறிவிட்டது அந்த வண்டி.    கொஞ்ச தூரத்தில் நான் வரும்போதே மக்களுக்குத் தெரிந்துவிடும். நான் தான் வருகிறேனென்று.

நான் ஓட்டிய வண்டிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த வண்டி என்று சொல்லலாம். அந்த நேரத்தில் ஒரே சமயத்தில் என் வாழ்க்கையின் இரண்டு திருப்புமுனைகள் நடந்தது. ஒன்று என் திருமணம் நிச்சயமானது. இன்னொன்று வேறு வேலைக்குப் போகும் சந்தர்ப்பம் அமைந்தது.

அப்படியென்றால் ஹீரோ ஹோன்டாவை இழக்க வேண்டுமே?

-தொடரும்.


அறிவிப்பு :

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழு வழங்கும் இலக்கிய உலாவில் வரும் வெள்ளிக்கிழமை( Feb 12nd, 2021) மாலை நடக்கும் நிகழ்வுக்கு உங்களை வரவேற்கிறேன் 



Monday, January 25, 2021

“ஆல்ஃபி என் நிலத்தைக்காணோம்”

பரதேசியின் வாகனங்கள் - பகுதி-4

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post_18.html



"சார் முதல்லயே சொல்லக் கூடாதா? போங்க போங்க”

“ஐயாவிடம் எதும் சொல்லாதீங்க"ஒரு சின்ன சல்யூட் அடித்து  வழியனுப்பினார். நீ வா என்ற ஒருமையும், தம்பி என்று விளித்தலும் மாறிப்போனதை கவனித்திருப்பீர்கள்.

அன்று நடந்ததை நஸீரிடம் சொன்னேன்.

 "முதல்ல உன் முகத்தை பாக்கியராஜ் மாதிரி வைப்பதை மாத்து. ஒரு கூலிங் கிளாஸ் வாங்கிக்க, நல்லா நிமிர்ந்து ஒரு கெத்தா வாப்பா யாரும் உன்னை ஓரங்கட்ட மாட்டாங்க."

"சார் டி.வி.எஸ் சேம்ப்புக்கு நீங்க சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர். ஆமாம் உண்மையிலேயே யாராவது இப்படி பொய் சொன்னா தப்பித்தவறி போலீஸ் செக் பண்ணா என்ன ஆவது". 

 "அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா போலீஸ்ல புரோட்டோ கால், ஹையரார்க்கி ரொம்ப முக்கியம். மேலதிகாரிங்க கீழே உள்ளவர்களை வாடா போடான்னு சொல்றதும், கெட்ட வார்த்தையில் திட்டறதும் ரொம்ப சாதாரணம். இது மாதிரி சின்னக்கேஸுகளுக்கு  அப்படிச் செக் பண்ண மாட்டாங்க. அதோடு அவங்களும் பொய்யோ உண்மையோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஒருவேளை உண்மையா இருந்தா என்ன செய்வதுன்னு நினைச்சுத்தான் சும்மா விட்டுருவாங்க. ஆனா அதுக்கும் மேல உன்ட்டதான் தப்பு இல்லையே. சும்மா ஏதாவது தேறுமாதான்னு தான் உன்னைப்பிடிக்கிறாங்க. அதனால நீ சொல்றத நம்பி உன்னைவிடறதத்தவிர வேறொன்றும் வழியில்லை அவர்களுக்கு"

நன்றாகப்புரிந்தது எனக்கு இது நடந்தது 88-90 களில் இப்போதும் இது ஒர்க் அவுட்டாகுமான்னு தெரியல அதனால இதெல்லாம் இப்போது டிரை பண்ணாதீங்க நண்பர்களே.

இப்படியே போய்க் கொண்டிருக்கும்போது , நான் வேலை பார்த்த இன்ட்டர் கிராப்ட்டின் பகுதியான ஸ்டிச் கிராப்ட்டின் டைரக்டர் சுசில் பெர்ஷாத் என்னைக் கூப்பிட்டிருந்தார். இந்த குடும்பத்தைப்பற்றி சிறிது சொல்லிவிடுகிறேன்.

 


 

இன்டர்கிராப்ட் மற்றும் ஸ்டிச்கிராப்ட் நிறுவனங்களின் முதலாளிகள் மல்ஹோத்ரா குடும்பத்தினர். இதன் தலைவர் ரவி மல்ஹோத்ரா. எப்பொழுதும் காட்டன் அல்லது லினன் துணியில் வெள்ளை பேண்டும் வெள்ளை சட்டையும் அணிவார். இவர் வருகிறார் என்றாலே தொழிற்சாலை முழுவதும் அமைதியாகிவிடும். பயமல்ல மரியாதை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டியமைத்தவர் இவர். இவருடைய தம்பி ராஜேஸ் மல்ஹோத்ரா. இவர் கொஞ்சம் ஜாலி டைப். ரவி ஆரம்பித்த இன்னொரு நிறுவனத்தின் MD. இவர்களின் தலைமை அலுவலகம் தம்புச் செட்டி தெருவில் இருந்தது. ஆடை ஏற்றுமதி நிறுவனமான இதன் தொழிற்சாலைகளின் ஒரு யூனிட் தம்பிச்செட்டி தெருவிலும் 2 யூனிட்கள் பழைய பிராட்வேயின் அருகிலிருந்த மினர்வா  தியேட்டரின் அருகிலிருந்த டேவிட்சன் தெருவிலும், இன்னொரு பெரிய யூனிட் பாலவாக்கத்தில் இருந்தன. இதில் யூனிட் 1 மற்றும் யூனிட் 3க்கு நான் மனித வள அதிகாரி. இந்த இரண்டு இடத்திலும் எனக்கு அலுவலகம் உண்டு. ரவி மல்ஹோத்ரா ஒரு ரேஸ் பிரியர். இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் முதற்கொண்டு பல கார்கள் இருந்தன. சென்னை சென்டாஃப்  சாலையிலிருக்கும் இவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது நானே எண்ணிப்பார்த்ததில் சுமார் 30 கார்கள் வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. எப்போதாவது நானும் கார் வாங்குவேன்  என்று நினைத்துக்கொண்டேன் .

இவர்களின் செல்லத்தங்கையை மணந்தவர்தான் சுசில் பெர்ஷாத் அவரும் இதில் ஒரு இயக்குநர் . என்னுடைய நேர் முதலாளி. மிகவும் கோபக்காரர் ஆனால் மிகவும் நல்லவர்.

ஒரு நாள் டென்ஷனுடன் அலுவலகம் வந்தவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார்.

“ஆல்ஃபி என்  நிலத்தைக்காணோம்”

“என்ன சார் சொல்லறீங்க”

" நம் நிலத்தில் ஏதோ ஆக்கிரமிப்பு நடந்துள்ளது"

"நீங்கள் டெல்லிக்கு அல்லவா போயிருந்தீர்கள்"

"ஆமா டெல்லியிருந்து வரும் வழியில் பார்த்தேன்"

"ஏர்போர்ட்டிலிருந்து நேரே நிலத்திற்குப் போனீர்களா?"

"இல்லையப்பா பிளேனில் இருந்து பார்த்தேன்"

எனக்கு நம்பமுடியவில்லை. சிரிப்பாக வந்தது. அடக்கிக் கொண்டே கேட்டேன்.

விமானத்திலிருந்து பார்த்தால் எப்படி நம்ம நிலம் என்று தெரியும்?

ஆர் யு ஸ்யுர் ?”

"நூறு சதவீதம் நான் பார்த்தது உண்மை"

"சரி நான் என்ன செய்ய வேண்டும்"

"நீ உடனே போய்ப்பார் நாளைக்கே போய்ப்பார். காலையில் வீட்டுக்கு வந்து டாக்குமென்ட் காப்பியை வாங்கிக் கொள்"

திருப்பெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் கோர்ஸ் அருகிலுள்ள வளர்புரம் என்ற கிராமத்தில் இருந்தது அந்த நிலம். எப்படிப் போய்க் கண்டுபிடிப்பது என்று திகைப்பாக இருந்தது. இருந்தாலும் முதலாளி சொல்லிவிட்டார் என்பதால், காலையில் கிளம்பி அவர்கள் வீட்டுக்குச் சென்று நிலப்பத்திரங்களின் நகலை வாங்கிக் கொண்டு என்னுடைய டி.வி.எஸ் சேம்பில் மெதுவாகக் கிளம்பிப் போய்சசேர்ந்தேன்.

வளர்புரம் கிராமத்தின் அதிகாரியைப் பார்த்த போது கர்ணத்தைப் பார்க்கச் சொன்னார். அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்த போது உள்ளிருந்து ஆஜானு பாகனாக ஆறு அடி உயரத்தில் கருத்த உடலில் இடுப்பில் வெறும் வேட்டியுடன் ஒருவர் வந்தார். அறுபது வயதிருக்கும். கர்ணம் இருக்கிறாரா என்ற கேள்வியைக் கேட்டவுடன் விறுவிறுவென்று வெளியே வந்து மூலைக்கு போனார். எனக்கு ஒண்ணும் புரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது. அவர் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலைத்துப்புவதற்கு மூலைக்குச் சென்றார் என்று.

“வாங்க சார் நான்தான் கர்ணம்" என்றார். நான் எதிர்பார்க்கவே யில்லை. வந்த விவரத்தைச் சொன்னேன்.

அப்புறம் திண்ணையில் உட்கார்ந்துடாக்குமென்ட்டைப்  பார்த்தார்.

"அடேய் பரதேசி என்னடா பரதேசியின் வாகனங்கள்" னு தலைப்புப் போட்டுட்டு கதையை எங்கேயோ கொண்டுட்டு போற"

"அட மண்டு மகேந்திரா கொஞ்சம் பொறுமையாக் கேளு"

வெளியே போகும்போதாவது சட்டையைப் போடுவார்னு நினைச்சேன். ஆனா, ஒரு துண்டைத்தோளில் போட்டுட்டு வினோபாஜி மாதிரி டயர் செருப்பைப்போட்டுவிட்டு கர்ணம் கிளம்பினார். வண்டி எங்க நிறுத்தியிருக்கீங்கன்னு கேட்க நான் டி.வி.எஸ் சேம்ப்பை காண்பிக்கவும், “கார் கொண்டு வரலயான்னு”, கேட்டுட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்தார். அவர் பின்னால் நான் ஓடினேன் - தொடரும்.



Monday, January 18, 2021

டி ஐ ஜி என் மாமா!

பரதேசியின் வாகனங்கள் பகுதி-3



                   இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்
https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post.html

தொடர்ந்து இரண்டு நாள் மாட்டியதால், மூன்றாவது நாள் மிகுந்த டென்ஷனில் இருந்தேன். ஆனால் அன்றைய நாள் சிக்னல் இருந்ததால் யாரையும் பார்க்காமல் நேராக ஓட்டி வந்து விட்டேன். அடுத்த நாளும் ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. ஒரு வாரம் இப்படிக் கழிந்தது.

ஆனால் அதன்பின் வந்த அடுத்த வாரத்தின் முதல் நாளில் அதே போல் வந்து கொண்டிருக்கும் போது மறந்து போய் அங்கிருந்த போலீஸ்காரரை கண்ணுக்கு கண் பார்த்துவிட்டேன். வழியை மறித்து ஓரங்கட்டச் சொன்னார். எனக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்துவிட்டது. உடனே நீங்க நினைக்கிறது போல எதுவும் நடக்கவில்லை. "சார் டெய்லி இதே தொல்லையாப்போச்சு, எனக்கு வண்டியும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு" அவரிடம் சொல்லிட்டு , ஆனால் கையில் சாவியையும் வைத்துக் கொண்டு விடுவிடென்று எதிர்த்திசையில் நடந்தேன். அதிர்ந்து போன போலீஸ்காரர் என் பின்னால் ஓடி வந்து, "தம்பி கோபப்படாதே வண்டியை  எடுத்துட்டுப்போ, எல்லாம் உங்க பாதுகாப்புக்காகத்தான் இதையெல்லாம் செய்யறோம்”னு சொன்னதைக் கேட்டவுடன் எனக்குக் கோபம் போய்  சிரிப்பு  வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் போனேன். நான் உள்ளே நுழையும்போது, வெளியில் 

புரொடக்சன் மேனேஜர் நஸீர் வந்து கொண்டிருந்தார். "எங்க போன, உன்னைத்தேடினோம், பிரஸ்ஸிங் செக்சனில் ஒரு பிரச்சனை, என்னன்னு போய்ப்பாத்துட்டு என்ட்ட சொல்லு”ன்னு சொன்னார்.

அதுக்கப்புறம் மதியம் லஞ்சுக்குப் பிறகு, அவரைப் பார்க்கும் போது, "என்னப்பா எப்பவும் எல்லோருக்கும் முன்னால வந்துருவ, என்னாச்சு அடிக்கடி லேட்டா வர்றயே? என்ன பிரச்சனை"ன்னு கேட்டார். தினமும் எனக்கு நடக்கும் பிரச்னைகளை அவரிடம்  சொன்னேன். அப்ப அவர் பலமாகச் சிரித்துவிட்டு, அத சால்வ் பண்றதுக்கு ஒரு ஐடியா கொடுத்தார்.

 "சார் இது வொர்க் அவுட் ஆகுமா? அவங்க செக் பண்ணா என்னாகும்?”

"ஒண்ணும் ஆகாது, அவங்க நிச்சயமா செக் பண்ணமாட்டாங்க”,ன்னு சொன்னார். நானும் அத அடுத்த நாள் டிரை பண்ணேன்.

அன்னிக்குப் பிடிச்சா என்ன சொல்றதுன்னு மனசுக்குள் பிராக்டிஸ் பண்ணேன். ஆனாலும் கொஞ்சம் உதறலாத்தான் இருந்துச்சு. அவங்க அசோஸியேஷன்ல பேசி இப்படி தினம் ஒரு இளிச்ச வாயன் வாரான் , அவனிடம் முடிந்த அளவுக்கு கறக்கச்சொல்லி சர்குலர்  அனுப்பிருப்பாய்ங்க போலருக்கு .நெத்தியில் எனக்குத்தெரியாத ஒன்றை அவர்கள் படிப்பது போல எனக்கு சந்தேகமாக இருந்தது  அதே மாதிரி என்னைப் பாத்ததும் போலீஸ்காரர் என்னை ஓரம் கட்டச்சொன்னார். நானும் அவர்ட்ட போய், "சார் என்ட்ட லைசென்ஸ் RC புக், ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் கரெக்டா இருக்கு. ஸ்பீடும் ஸ்லோவாத்தான் வந்தேன். ஆனாலும் தினம் பிடிக்கிறீங்க. இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் அவரை தொந்தரவு பண்ணவேணாம்னு நினைச்சேன். ஆனால் வேற வழியில்லை, அவர்ட்ட சொல்ல வேண்டியதுதான்."




அவர் தெனாவட்டாக சிரித்துக் கொண்டு, "யார்பா அவர்" என்று கேட்டார். "இருங்க வர்ரேன்”,னு சொல்லிட்டு, பாக்கெட்டில் இருந்து, பேப்பர், பேனாவை எடுத்து அவருடைய நேம் பேட்ஜ்,  பார்த்து அவருடைய பேரையும் நம்பரையும் எழுதினேன்.

"என்னப்பா சொல்ற?”, சிறிது குரல் மாறியது.

"எந்த ஸ்டேஷன் சார் நீங்க?

"யாருப்பா அவர்"

"அலெக்சாண்டார், டிஜிபி"

அவர் கொஞ்சம் கலவரமாகி, "அவரை உனக்கு எப்படித்தெரியும்"

“அவர் என்னோட அங்கிள்

“உங்க பேர்?” மரியாதை கூடியது.

“என்னோட பேர் ஆல்ஃபிரட்”

 இரண்டு பெரும் இங்கிலீஸ் பேர்னால அந்தப் போலீஸ்காரர் ரொம்பப்  பயந்து போய்,

"சார் முன்னால சொல்லக்கூடாதா" வண்டியை எடுத்துட்டு போங்க சார்" மரியாதை ரொம்ப கூடிப் போனது.

நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு கொஞ்சம் கெத்தாகவே வண்டியை எடுத்துட்டுப் போனேன். போய் நஸீர் சார்ட்ட சொல்லி, ரெண்டு பேரும் நல்லாச் சிரித்தோம்.

அதுக்குள்ள நானும் வண்டி ஓட்டறதுல கொஞ்சம் தேறி, ஓரமாய் ஓட்டாமல் ரோட்டின் நடுவில் ஓட்ட ஆரம்பிச்சேன். ஓரிரு முறை அவர் பேரை யூஸ் பண்ணேன். ஓரிரு முறை என்னை வழியில் பார்த்த அதே போலீஸ்காரர் மெல்லிய ஒரு சல்யூட் வைத்ததாக ஞாபகம்.

அதுக்குள்ள எனக்கு ரொம்ப வேண்டியவர் சந்திரசேகர் என்பவர் சென்னையின் வடபழனி பகுதியின் அஸிஸ்டண்ட்  கமிசனராகப் பதவியேற்றதால் எனக்கு தெனாவட்டு மேலும் கூடிப்போனது.  

இந்த சந்திரசேகர் என்னுடைய முதுகலை வகுப்புத் தோழியின் சகோதரர். இவரை நான் படிக்கும் போதிருந்தே நன்றாகத் தெரியும். சமீபத்தில்தான் DIG ரேங்கில் ஓய்வு பெற்றார் இன்னும் சொல்லப்போனால் இவருடைய மனைவிதான் தமிழச்சி தங்கப் பாண்டியன், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர். இவர்களுக்கு கலைஞர் தலைமையில் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த திருமணத்தில் நானும் கலந்து கொண்டேன்.  இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சுமதி என்ற தமிழச்சி தங்கப்பாண்டியனின் இளைய சகோதரர்தான் தங்கம் தென்னரசு, தமிழக கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். இவர்கள்  குடும்பம் முழுவதும் எனக்கு நெருக்கமானவர்கள்.

 

கொஞ்சம் நாட்கள் எந்த பிரச்சனையில்லாமல் வண்டி ஓடியது. எந்த வண்டின்னு கேட்டீங்கன்னா இரண்டு வண்டியும்தான் ஒன்று வாழ்க்கை வண்டி மற்றொன்று என்னுடைய வாகனமான கிரே கலர் டிவிஎஸ் சேம்ப். அதில் ஏறி ஓட்டும்போது ஒரு சேம்பியன் போலத் தோன்றவில்லை என்றாலும், சென்னையின் சாலைகளை எல்லா முறைகளிலும் அறிமுகப்படுத்திய வண்டி அதுதான்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு மறுபடியுமாக அதே இடத்தில் ஓரங்கட்டப்பட்டேன். இப்போது கொஞ்சம் தைரியம் அதிகமாகி விட்டது.

"என்ன சார் எதுக்கு நிறுத்தச் சொல்றீங்க “

"தம்பி லைசென்ஸ், RC Book எல்லாம் எடு"

"அதான் எதுக்குன்னு கேட்டேன்?"

"தம்பி மேலிடத்து உத்தரவு, எல்லாத்தையும் செக் பண்றோம்".

"சார் நானும் மேலிடம் தான் என் மேல ஏதாவது தப்பிருந்தா சொல்லுங்க. இந்தாங்க லைசென்ஸ் RC புக் எல்லாம், நல்லாப்பாருங்க"

"தம்பி ஸ்பீடு"

"சார் உங்களுக்கே நல்லாத்தெரியும் நான் மிக மெதுவாத்தான் வந்தேன். நாங்கல்லாம் நல்ல குடும்பம் சார். அப்படி அடாவடியாக ஓவர் ஸ்பீட் போகமாட்டேன்.

"என்ன தம்பி மேலிடம்ற, யாருப்பா நீ"

"சந்திரசேகர் தெரியுமா?"

“யாருப்பா அவர்”

"சந்திரசேகர் ஐபிஎஸ், வடபழனி ஏ.சி"

"ஆமா ஐயாவைத் தெரியும் ஆனா நீங்க"

"நான் ராஜசேகர் சந்திர சேகரோட தம்பி"

அப்புறம் நடந்ததை அடுத்த பகுதியில் சொல்றேன்.    

 

தொடரும்