Showing posts with label அமெரிக்கன் கல்லூரி. Show all posts
Showing posts with label அமெரிக்கன் கல்லூரி. Show all posts

Thursday, January 3, 2019

ஒரு பாடலை எப்படிக் கேட்பது?



முத்தமிழில் ஒரு தமிழ் இசைத் தமிழ். இயல், இசை, நாடகம் என்று சொல்லும்போது, இயலிலிருந்து பிறந்தது இசையென்றும், இசையிலிருந்து வந்தது நாடகம் என்றும் சொல்லலாம். இயலும் இசையும் சேர்ந்ததுதான் நாடகம். பேச்சும் எழுத்தும் இயல் அதாவது கவிதை கட்டுரை கதைகள், நவீனங்கள், பேச்சு, உரை ஆகியவை இயலில் அடங்குபவை. பாடல், இசை, செய்யுள் என்பவை இசையில் உள்ளவை. நாடகம் என்பது தெருக்கூத்திலிருந்து வந்தது. திரைப்படம் என்பது நாடகத்தின் நவீன வடிவம் என்று சொல்லலாம்.
இசை, பாடல் என்று சொல்லும்போது அதில் பலவகை இருக்கின்றன. கர்நாடகம், இந்துஸ்தானி, மெல்லிசை, பக்தி இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை போன்றவை நமக்குத் தெரிந்த சில வடிவங்கள். மேற்கத்திய இசையிலும், பாப், கன்ட்ரி, ஜாஸ், ராக் & ரோல், ரெகே, ராப், ராக், மெட்டல் போன்ற பல வகைகள் இருக்கின்றன.
Add caption
         இதில் நமக்குப் பிடித்த ஒன்று திரையிசை, நாடகத்தின் நவீன வடிவம் தான் திரைப்படம் என்று முன்னரே சொன்னேன். முற்கால நாடகங்களில் வசனங்களை விட பாட்டுக்கள் நிறைய இருக்கும். பாடல் வழியாக உரையாடுவது, செய்திகளைச் சொல்வது, காதலை உணர்த்துவது ஆகியவை நடக்குமென்பதால் அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
P.U.Chinappa 
           ஹரிச் சந்திரா, வள்ளி திருமணம். பக்தப்பிரகலாதன் போன்ற இதிகாசக்கதைகள் நாடகத்திலிருந்து திரைப்படமானதால் அம்மாதிரி திரைப்படங்களிலும் பாடல்கள் நிறைய இருந்தன. நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஆடவும் தெரிந்திருக்க வேண்டும், பாடவும் தெரிந்திருக்க வேண்டும், எனவே ஆரம்பக்காலத்தில் திரைப்படங்களிலும் அவரவர் பாடல்களை அவர்களே பாடினார்கள் . S.G. கிட்டப்பா, P.U. சின்னப்பா, T.R. மகாலிங்கம், தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் இதற்கு உதாரணம். பிறகு பின்னணிப்பாடகர்கள் வந்தபோது இந்த முறை மாறிப்போனது.
தியாகராஜ பாகவதர்
மைக் இல்லாத காலகட்டங்களில் தெருக்கூத்து மற்றும் நாடகங்களில் பாடுபவர்கள் எல்லா மக்களுக்கும் கேட்க வேண்டுமென்பதால் பெருங்குரலெடுத்து (High pitch) பாடுவார்கள். அதாவது எட்டுக்கட்டை, ஒன்பது கட்டை என்று சொல்வார்கள். சினிமாவிலும் ஆரம்பத்தில் இதுவே பிரதி பலித்தது. பின்னர் அதுவும் மாறி மெல்லிசையாக ஆனது.
திரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. 60, 70 பாடல்களிலிருந்து 6, 7 என்று குறைந்து அதன்பின்னர் 5,3,2 என்று   குறைந்து விட்டது. வெறும் பாடல்களினால் படங்கள் ஓடியது என்ற நிலைமை மாறி, இந்தப் பாடல் இந்த இடத்தில் தேவையில்லை என்று தோன்றும் வரைக்கும் வந்துவிட்டது.
இப்போதுள்ள நாளைய தலைமுறையான சிறுவர் சிறுமியர் மற்றும் இதற்குப்பின் பிறக்கும் பிள்ளைகள் திரையிசையை விரும்பிக் கேட்பார்களா என்பது  சந்தேகம் தான்.
ஆனால் நேற்றைய மற்றும் இன்றைய தலைமுறை , M.S. விஸ்வநாதனிடம் ஆரம்பித்து இளையராஜாவிடம் நீண்ட நெடுங்காலம் தஞ்சமடைந்திருந்து பின்னர் A.Rரகுமானை ஆரத்தழுவி அரவணைத்து வாழும் காலமிது. மேடைகளிலும் போட்டிகளிலும் இவை மீண்டும் மீண்டும் ஒலித்து உலகளாவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது.   
“என்னடா நீட்டி முழக்கிக்கிட்டே இருக்க, சீக்கிரம் பாயிண்ட்டுக்கு வாடா பரதேசி”, என்று சொல்லும் உங்கள் குரல் காதில் ஒலிக்கிறது.
ஒரு பாடலை எப்படிக் கேட்பது என்று சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ சென்றுவிட்டேன். நான் எண்பதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கன் கல்லூரி இசைக்குழுவில் இருக்கும்போது இளையராஜா கோலோச்சிய காலம்.
"என்னடா எண்பதுகளில் தொடக்கம் முடக்கம்ணு சொல்லிக்கிட்டு, ஏன் சரியான ஆண்டை சொல்லிற வேண்டியது தானே?"
“யாருன்னு தெரியல ஆனா  நல்லாத்தான்யா கேள்வி கேக்கிறிங்க. சரிப்பா சொல்லிர்றேன், 81 ஜூனில் ஆரம்பிச்சு 84 ஏப்ரல்ல என்னோட இளங்கலைய முடிச்சேன்”. இப்ப திருப்திதானே. வயசைக் கண்டுபிச்சிட்டியோன்னோ? .
நாங்கள் புதிதாக பாடல் ஹிட்டானால், அதனை இசைக்குழுவில் பாடுவதற்கு குழுவாக உட்கார்ந்து பயிற்சி செய்து பழகுவோம். அப்போது பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்போம்.
முதலில் என்ன சுருதி என்று பார்ப்போம். அந்த சுதியில் எங்களுடைய பாடகர்கள் பாடமுடியுமா என்று கேட்டு, சிறிதளவு கூட்டியோ அல்லது குறைத்தோ சுதியை அமைத்துக் கொள்வோம். இல்லேனா சுதியே சதியாயிடும்.  அதற்கப்புறம் என்ன குரல் என்று பார்ப்போம். பொதுவாக யேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்ற மலையாளக் குரலில் பாட ஒருவனும், எஸ்பிபி குரலில் பாட ஒருவரும், இளையராஜா குரலில் பாட ஒருவரும், மலேசியா குரலில் பாட ஒருவரும் டி. எம். எஸ் குரலில் பாட இருந்தனர். ஆனால் பெண் குரல்களில் எல்லாப் பாடகிகளுக்கும் ஒரே பெண்தான். பெரும்பாலும், வெளியிலிருந்துதான் கூப்பிடுவோம். மேடைக்கச்சேரிகளில்  ஒரு பெண் இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியினிமித்தம் பாடுவது அவ்வளவு சிறப்பாய் இல்லா விட்டாலும்  வெளியிலிருந்து கூப்பிடுவோம் .அம்மாவால் பத்திரமாய் அடைகாக்கப்படும் ஒரு தளிர் பெண்ணும் கூட வருவாள் .அதோடு அச்சு அசலில் ஜானகி குரலில் பாட அருமையான பையன் ஒருவன் இருந்தான். அவர்கள் பாடலைக் கேட்கும் போது பாடகரின் நுணுக்கம், அணுக்கம், சங்கதி, எந்த இடத்தில் மூச்சை எடுப்பது என்பவற்றைப் பார்த்துக் கொள்வார்கள்.
கீபோர்டு அல்லது ஆர்கன் வாசிப்பவன் ஆர்கன் லீட் மற்றும் கார்டு புரகெரசன் (chord progression) பார்த்துக் கொள்வான். லீட் கிட்டார் வாசிப்பவன், கிட்டார் லீடு எங்கெல்லாம் வருகிறது என்று கேட்டு வாசித்துப் பழகுவான்.
அதுபோலவே பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார் வருவதை அந்த இருவரும் பார்த்துக் கொள்வார்கள். இளையராஜா பாடல்களில் பேஸ்  கிட்டார் இசையே லீட் போல வரும். இதுதவிர புல்லாங்குழல், கிளாரினெட், ஷெனாய்,  பெல்ஸ், கீபோர்டு லீடு, சின்தசைசர் போன்றவை எங்கெல்லாம் எப்படியெல்லாம் வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
இவற்றை முடித்துவிட்டால் ஸ்கின் செக்சன் அதாவது தோல் கருவிகள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று கேட்க வேண்டும். டிரம்ஸ், தபேலா, டிரிப்பிள் காங்கோ, தும்பா, கடசிங்காரி,  மிருதங்கம், டோலக் , பேங்கோஸ், பம்பை, உடுக்கை ஆகியவையே இவை.
இவைகளோடு டைமிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்   என்று சொல்லக்கூடிய தாளம், மொராக்கோஸ், கப்பாஸ், ஜால்ரா டாமரின் போன்ற இசைக்கருவிகளும் எங்கே வருகின்றன என்று தனியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை இதற்காக பாடலைப் பலமுறை கேட்க வேண்டிய திருக்கும், ஒவ்வொரு  முறையும் வேறுவேறு கருவிகளையும் கேட்பதற்கு காதுகளை பழக்கப்படுத்த முடிந்தால் மட்டுமே இசையை நன்கு ரசிக்க முடியும்
இப்படியெல்லாம்தான் இசை உருவாகிறது. எனவே இனிமேல் ஒரு பாட்டைக் கேட்கும்போது ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனித்துக் கேட்டுப்பாருங்கள். இன்னும் நன்றாக ரசிக்கலாம். இசை மட்டுமே இசைப்பவர்க்கும் , பாடுபவர்க்கும் , கேட்பவர்க்கும் ஒருங்கே இன்பமளிக்கும் ஒன்று. இசையால் வசமாகா இதயமுண்டோ? .
முற்றும்.

பின்குறிப்பு .வேலைப்பளு மற்றும் விடுமுறை காலங்கள் என்பதால் இந்தப்பக்கம் வரமுடியவில்லை .இனிமேல் பரதேசியின் பிறாண்டல்கள் தொடரும். நண்பர்கள் அனைவருக்கும் என்னுடய இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் .



Monday, June 25, 2018

சௌபாவும் நானும்!!!! பகுதி 2

Related image
Sowba 

இதன் முந்தைய  பகுதியைப்படிக்க இங்கே சுட்டவும்
http://paradesiatnewyork.blogspot.com/2018/06/blog-post_18.html
செளபாவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் கஞ்சா போன்ற வேற வஸ்துக்கள் புகைப்பதில்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும், முதல் முறை தெரியாமல் கஞ்சா நிரப்பிய சிகரெட்டைக் குடித்ததால் தலை சுற்றி நாவறண்டு மிகவும் பயந்து போனார். செளபாவை கைத்தாங்கலாப் பிடித்துக் கொண்டு கீழிறங்கி வந்தேன். யாரோ இனிப்பு சாப்பிட்டால் சரியாய்விடும் என்றும் மற்றொருவன் சூடாக ஒரு காப்பி குடித்தால் ஓரளவுக்குத் தெளியும்  என்று சொன்னதால் கல்லூரியின் எதிரே இருந்த மல்லிகை காபி பாருக்கு அழைத்துச் சென்று இனிப்பு போண்டா ஒன்றையும் காபியையும் வாங்கிக் கொடுத்தேன். போண்டாவை ஓரிறு கடி கடித்துவிட்டு வேண்டாம் என்று சொன்னவர் காபியை முழுவதுமாகக் குடித்தார். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த இனிப்பு எதிர் வினையாற்ற அங்கிருந்து மெதுவாக நகர்ந்து பக்கத்தில் இருக்கும் ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். கேட்டுக்கேட்டு டூட்டி டாக்டரிடம் சென்றோம்.
செளபா கண்ணை மூடிக்கொண்டு தியான நிலையில் இருக்க, என்ன நடந்தது என்று அந்த இளம் டாக்டரிடம் சொன்னேன். அவர் ஒன்றும் சொல்லாமல் படக்கென்று எழுந்து எங்கோ போய் கொஞ்சம் முதிய ஒரு டாக்டரை அழைத்து வந்தார்.
அமெரிக்கன் கல்லூரி மாணவன் தானே, என்று கேட்டுவிட்டு என்னைப்பார்த்து கண்ணாபிண்ணா வென்று கத்த ஆரம்பித்தார். “ஏண்டா நீயெல்லாம் படிக்க வந்தியா இல்ல கஞ்சா குடிச்சு சீரழிய வந்தியா, எந்த ஊரு நீ, உங்கப்பா அம்மா....”, என்று தொடர்ந்து பேச நான் பல முறை தடுத்தும் முடியவில்லை. பின்னர் அந்த இளம்டாக்டர் குறுக்கிட்டு, அவன் இல்லை இவன்தான் குடித்தது என்று செளபாவைக் காண்பிக்க, டாக்டருக்கு மேலும் கோபம்  வந்தது. “அமெரிக்கன் காலேஜ் ரொம்பக் கெட்டுப்போச்சு எல்லாப் பயல்களும் கஞ்சா குடித்து கெட்டுப் போறாய்ங்க. எந்த ஊருடா? ஓ ஹால்டலா யாரு இன்சார்ஜ் யார் பிரின்ஸ்பல் ஓ P.T. செல்லப்பாவா? போனைப் போடு வார்டனை   இங்கே கூப்பிடு”, என்று ஒரே அல்லோகலப்படுத்தி விட்டார். செளபாவின் தியான நிலை தொடர, நான்தான் வேர்த்து விறுவிறுத்து ரொம்ப பயந்துபோனேன். படக்கென்று காலில் விழுந்து அவர் பேசுவதை தடுத்தி நிறுத்தி என் தரப்பு நியாயத்தை நான் சொல்லி முடிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.
ஒரு வழியாக சமாதானம் ஆன டாக்டர். ஊசி ஒன்றைப் போட்டு சில மருந்து மாத்திரைகளைத் தந்து எச்சரித்து அனுப்பினார்.
அவர் சொல்வது உண்மைதான். அப்போது அமெரிக்கன் கல்லூரியில் கஞ்சாப் பழக்கம் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர் தவிர உள்ளே கேம்பசில் மற்றவர் நடமாட்டம் அதிகமிருக்கும். கஞ்சா விற்பவர்களும் குடிப்பவர்களும் இதில் அடங்குவர். கல்லூரியின் ஏராளமான மரங்களின் அடியே புகைத்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பார்க்கலாம். இந்தப் பழக்கத்துக்கு அடிமையான என்னுடைய சீனியர்கள், ஜூனியர்கள் என்று சில பேரை சாவு வரைக்கும் இந்தப் பழக்கம் இழுத்துச் சென்றது.
ஆனால் பி.டி. செல்லப்பா மிகவும் முயன்று இதனை முற்றிலுமாக மாற்றியமைத்தார். மரத்தடியில் மட்டுமல்ல எங்குமே புகைக்க முடியாத நிலையைக் கொண்டு வந்தார். அக்காலத்தில் மற்றவர் உள்ளே வருவது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது.
இப்படி செளபாவுடன் என்னுடைய நினைவுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அதன் பிறகு உசிலம்பட்டி சிசுக்கொலை, சீவலப்பேரி பாண்டி என்று பல கட்டுரைகளை ஜூவியில் எழுதி எல்லோருக்கும்  தெரிந்த பத்திரிக்கையாளர் ஆனார். ஆனந்த விகடன் குழுமத்தின் அப்போதைய தலைவரான சீனிவாசன் அவர்களின் செல்லப்பிள்ளை ஆகி, ஒரு கட்டத்தில் ஆவி, ஜூவி  போன்ற பத்திரிகைகளின் மதுரையின் விற்பனைப் பிரதிநிதியாகி ஏராளமான பணம் ஈட்டினார். வறுமையில் வளர்ந்து வாழ்ந்த அவர் தோட்டம் துரவு என்று வளர்ந்தார்.
இதற்கிடையில் உருகி உருகிக் காதலித்த தன் அன்புக்குரியவரை மணந்தார். அந்தச் சமயத்தில் ஜாதி மாறி நடந்த பெரிய புரட்சித் திருமணம் இது. ஆனால் ஏதோ சில காரணங்களால் திருமண வாழ்க்கை இவருக்கு சரியாக அமையவில்லை. புரட்சித் திருமணம் வெகு சீக்கிரம் வறட்சித் திருமணம் ஆகி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தாயிடமும் தந்தையிடமும் மாறி மாறி வாழ்ந்த இவர்களின் பையன் தகாத வழியில் சென்று கடைசியில் கொலை வரை சென்றது, அவரோடு நெருங்கிப் பழகிய எங்கள் எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.  
நான் சென்னையில் இருந்து மதுரை செல்லும் போது செளபாவை  போய்ப் பார்ப்பது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக அவர் யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் . ஒருமுறை சென்னையிலிருந்து என்ன வாங்கி வரட்டும் என்று போன் செய்த போது "ஒன் மென் ஷோ" என்ற பெர்ஃபியும் கேட்டார். நான் அதனைக் கொண்டு சென்று கொடுக்கும் போது " ஏன்  ஒன்  மேன் ஷோ" என்று கேட்டபோது, "ஆம் ஆல்ஃபி இப்ப நான் நடத்துவது ஒன்  மேன் ஷோதானே", என்று தான் பிரிந்து வாழ்வதை வேடிக்கையாகச் சொன்னார்.
சமீபத்தில் நண்பன் சையது அபுதாகிர்  தொடங்கிய 1981-84 வாஷ்பர்ன் நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து எங்களோடு அனுதினம் உரையாடிக் கொண்டிருந்தார். குழுவில் எல்லோருக்கும் இது பேரதிர்ச்சி.

Image result for sowba funeral


மதுரையின் அருகில் இருக்கும் செளபாவின் பெரிய தோட்டம் பத்திரிக்கைத்துறை திரைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் பல பிரபல மனிதர்கள் வந்து கொண்டாடிச் செல்லும் இடமாக இருந்தது. இறுதியில் அந்த இடத்திலேயே தன் மகனைப்புதைக்கும் அளவுக்குப் போனது காலத்தின் கொடுமை. அதோடு நெருங்கிப்பழகிய பல பிரபலங்களில் ஒருவர் கூட உதவிக்கரம் நீட்டாதது கொடுமையிலும் கொடுமை.
சில நெருங்கிய நண்பர்களான நண்பர் பிரபாகர், வனராஜ் ஆகியோர் அவரைச் சிறையில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். அப்போது கூட  சொத்தை எழுதிவைத்துவிட்டு தற்கொலை பண்ணிக் கொள்ளப் போகிறேன் என்று மிகுந்த விரக்தியோடு சொல்லியிருக்கிறார்.
இது கிட்டத்தட்ட தற்கொலைதான். மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்து ஏற்கனவே சர்க்கரை வியாதி முற்றிய ஒருவருக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுத்துவிட்டது. நண்பர்களை மீளாத்துயரில் ஆற்றிவிட்டு மறைந்தார் செளபா.
"யாருக்கும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டான்" என்று அவரின் அம்மா சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.
நம்பமுடியாத தொடர் நிகழ்வுகளைத் தொடர்ந்து செளபா மறைந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர எங்களைப்போன்றோருக்கு நீண்ட காலம் ஆகும்.
-முற்றும்.

முக்கிய அறிவிப்பு :
நண்பர்களே டல்லாஸ் , டெக்சாஸ் மாநகரத்தில் நடக்கும் பெட்னா  நிகழ்வில்  ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடக்கும் கருத்துக்களத்தில்

  பங்கு கொள்கிறேன்  .ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை அங்குதான் இருப்பேன்.மின்னஞ்சல் ( alfred_rajsek@yahoo.com) மற்றும் அலைபேசியில் (212-363-0524)தொடர்பு கொள்ளுங்கள்  சந்திக்கலாம் . 
Image result for fetna convention
Add caption

Monday, June 18, 2018

சௌபாவும் நானும்!!!!


சௌபாவும் நானும்!!!!
Image result for sowba
செளபா என்கிற சவுந்திரபாண்டியன்
"ஆல்ஃபிஈஈஈஈ” சாகும் தருவாயில் இருக்கும் யாரோ ஒருவர் உயிர் தவிப்பில் கதறுவதைப்போல அந்தக்குரல் கேட்டது. வாஷ்பர்ன் ஹாலில் அன்று மாத விருந்து. அமெரிக்கன் கல்லூரியில் இருக்கும்   வாஷ்பர்ன் ஹால் ஒரு சிறப்பு வாய்ந்த மாணவர் விடுதி. அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நிறைய விடுதிகள் இருக்கின்றன. ஜம்ரோ ஹால் என்பது பி.யு.சி  இருந்த காலத்தில் மிகச்சிறப்பாய் செயல்பட்டதாம். அது கல்லூரியின் பின்னால் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் இருக்கிறது. அதற்கு முன்னால்  இருப்பது டட்லி ஹால் என்ற புதிய கட்டிடம். பாருங்கள் புதியகட்டிடம் என்று நான் சொன்னது நான் படிக்கும்போது. ஆனாலும் இப்போதும் 100 வருடப் பழமையான மற்ற விடுதிகளை நோக்கும் பொது இது புதிதுதான். இது சைவ விடுதி. இது தவிர “வேலஸ் ஹால்” என்ற ஒன்றும் மாணவியருக்கு வேலி சூழ்ந்த மற்றொரு விடுதியும் இருக்கின்றன.
இதில் மிகவும் பிரபலமானது 'வாஷ்பர்ன் ஹால்'. இது ஒரு அசைவ விடுதி வெள்ளிக்கிழமை தவிர தினமும் ஆட்டுக்கறிதான். சதுர  வடிவில் இரு தளங்கள் கொண்ட இந்தக் கட்டிடம்தான் மாணவரின் முதல் சாய்ஸ், இது கிடைக்கவில்லையென்றால் தான் மற்ற விடுதிகளுக்குப் போவார்கள். அமெரிக்கன் கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளும் இங்கே தங்கிப் படித்தது நான் செய்த பாக்கியம் என்பேன்.
இங்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் குழு, பொதுச் செயலாளர் தலைமையில் இயங்கும். ஒரு வார்டன்,அவருக்கு பக்கத்தில் ஒரு பங்களா. அவர் தவிர மூன்று அல்லது நான்கு கண்காணிப்பாளர்கள் (சூப்பரின் டென்டென்ட்) உள்ளேயே தங்கியிருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் புதிதாய்ச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்களாய் இருப்பார்கள். 
Image result for washburn hall, Madurai
வாஷ்பர்ன் ஹால்
இந்த வாஷ்பர்ன் ஹாலில் தினமும் நடப்பது விருந்துதான் என்றாலும் மாதமொருமுறை பெரிய விருந்து நடக்கும். மட்டன் பிரியாணி, கோழி வருவல், ஐஸ்கிரீம் பீடா என்று அமர்க்களப்படும்.
அன்று உண்டு களித்து உண்ட மயக்கத்தில் தூங்குவதா இல்லை திங்கள் பரீட்சைக்குப் படிப்பதா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தான் அந்தச் சத்தம் கேட்டது. ஹாஸ்டலில் பெரும்பாலும் யாருமில்லை. உண்டு முடித்து வெளியே திரைப்படத்துக்குப் போயிருப்பார்கள். எனக்கு திங்கள் முதல் பீரியட்டில் ஒரு பரீட்சை (Quiz) இருந்ததால் நான் எங்கும் வெளியே செல்லவில்லை படிக்க உட்கார்ந்தாலும் கண்கள் சுழற்றி சுழற்றி அடித்ததால் படிக்கவும் முடியவில்லை.
"டேய் ஆஃல்பி சீக்கிரம் வா" என்று மறுபடியும் அந்தக்குரல் கேட்க, என் அரைமயக்கம் முற்றிலுமாய்த் தெளிந்து இப்போது யார் கூப்பிடுவது என்று எனக்கு உடனே தெரிந்தது. கீழ்த்தளத்தில் இருந்த என் ரூமுக்கு நேர் எதிரே மேல் தளத்தில் இருந்த ரூமில் இருந்து ஜன்னல் வழியாக கூப்பிட்டது செளபாதான்.
செளபா என்கிற சவுந்திரபாண்டியன் அப்போது தமிழ் இலக்கியம் படிக்கும் இரண்டாமாண்டு மாணவன். பேராசிரியர் சாலமன் பாப்பையா துறைத்தலைவராய் இருந்த போது அங்கு மிகவும் பிரபலமாய் இருந்த மாணவன். என்னையும் தமிழ்த்துறையில் சேர்க்க செளபா முயன்றதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.
ஜூனியர் விகடனின் முதலாமாண்டு மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் அமெரிக்கன் கல்லூரியிலிருந்து மதுரைப் பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் தான் செளபா. இடது சாரிப் பாசறையில் வளர்ந்ததால் நல்ல பேச்சுத் திறமை வாய்க்கப்பெற்றவர். சந்தக் கவிதை எழுதும் திறமையும் இருந்தது. சங்கரையா போன்ற தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. கம்யூனிஸ்ட் மேடைகளில் ஒரு மாணவப் பேச்சாளராய்க் கலக்கியதால் கல்லூரிகளுக்கிடையே நடந்த பல பேச்சு, கவிதைப் போட்டிகளில் பலமுறை பரிசுகள் பெற்றவர். அவருடைய சந்தக் கவிதைகளில் புரட்சிக் கனல் தெறிக்கும். “நியூட்ரான் பல்லுடனும் ஹைட்ரஜன் நாக்குடனும்” என்று தொடங்கும் அவரது கனல் கவிதை இன்றும் செவிகளில் ஒலிக்கிறது.
“உன்னிடத்தில் என்னைத் தந்துவிட்டேன்
எந்தன் உள்ளமெல்லாம் பூத்ததே
உந்தன் சின்ன விழி சிந்தும் புன்னகையில்
ஒளி மின்னலிடை மின்னும் மென்னகையில்
எந்தன் ஜீவனுக்கும் வேர்த்ததே.
என்று அவர் எழுதிய பாடலுக்கு என்னுடைய கிடாரில் கார்ட்ஸ் அமைத்து இசையமைக்க முயன்றது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இதெல்லாம் நடந்தது 1982ல். 1981 ஜூன் முதல் 1984 ஏப்ரல் வரை நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன்.

அதோடு வாஷ்பர்ன் ஹால் வார்டன் “ஜான் சகாயம்” அவர்கள் அனுமதியோடு என்னுடைய முயற்சியில் வெளிவந்த கையெழுத்துப் பிரதியான “வாஷ்ஜேர்ன்” என்ற பத்திரிக்கைக்கு நான் எடிட்டராகவும் என்னுடன் செளபா மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து பணியாற்ற நண்பர் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் பிரபாகர் அவர்கள் தன்னுடைய லே அவுட் மற்றும் சித்திரங்களால் சிறப்பித்தார். செமஸ்டருக்கு ஒரு முறை அது அச்சிலும் வந்தது.
செளபா எல்லாவற்றையும் கவிதையிலேயே வெளிப்படுத்த முயல்வார். ஒரு சமயம் அறையில் சிகரெட் பிடித்ததால் மிகவும் கட்டுப் பாடுகளை எதிர்பார்க்கும் வார்டன் ஜான் சகாயம், ரூமை விட்டு வெளியே போகச் சொல்ல, செளபா இப்படி எழுதினார்.
“அதிகாலையில்
அறையைவிட்டு வெளியே செல்ல
ஆணையிட்டார்
அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர்” என்று.
நினைவுகள் எங்கேயே போய்விட்டன. ஆல்ஃபி என்று அதிரடியாகக் கூப்பிட்டதும், தலை தெறிக்க ஓடிச் சென்று மேலே ஏறி செளபாவின் ரூமுக்குள் நுழைந்தேன். பாதி உடல் கட்டிலிலும் மீதி உடல் கீழேயும் கிடக்க செளபாவின் கண்கள் ஒரு பக்கம் மேலே இழுத்துக் கொண்டிருக்க, நாக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. நான் உடனே ஓடி தண்ணீரைக் கொண்டு போய்க் கொடுத்து,
“என்ன செளபா, என்னாச்சு?” என்றேன். பதறியபடி
“ஆல்ஃபி நான் சாகப்போகிறேன், என்னைக் காப்பாத்து” என்று உறக்கக்கத்தினார்.
“வாங்க உடனே ஆஸ்பத்திரிக்குப் போகலாம்” என்று சொல்லி கைத் தாங்கலாக அழைத்துச் சென்றேன். என்னுடைய செட் என்றாலும் வயதில் மூத்தவர் என்பதால் நீங்க வாங்க என்று பேசியே பழகி விட்டேன்.
என்னாச்சு என்று கேட்டபோதுதான். ரூமில் அவருடைய ரூம்மேட் வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் குடித்ததாகவும் ஆனால் அதின் உள்ளே இருந்தது கஞ்சா என்று தெரியவில்லை என்றும் சொன்னார். எனக்குப் பகீரென்றது.
- தொடரும்.   

நண்பர்களே வருகின்ற சனிக்கிழமை ( ஜூன் ௨௩ ) மாலை நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் கோடை விழாவில் அடியேன் பங்கு பெற்றுப்பேசும் பட்டிமன்றம் நடக்க இருக்கிறது .நியூயார்க் , நியூ ஜெர்சியில் வாழும் நண்பர்களை அன்போடு அழைக்கிறேன் .