Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Thursday, August 29, 2019

கண்ணதாசனின் மோசமான வரிகள் !


Image result for வான் மேகங்களே

வான் மேகங்களே !
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 43

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்

1979ல் வெளிவந்த பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த புகழ்பெற்ற டூயட் பாடல் “வான் மேகங்களே”.
முதலில் பாடலைக் கேளுங்கள்.


பாடலின் பின்னணி:

காதலை வெளிப்படுத்தி, இருவருக்கும் ஒரே சமயத்தில் காதல் தோன்றி, இருவருக்கும் பூரண சம்மதம் என்ற நிலையில் காதலர்களுக்கு வரும் காதல் கனவில் தேவதைகள் புடை சூழ பாடப்படும் பாடலிது.

இசையமைப்பு:

எந்த சந்தேகமில்லாமல் இளையராஜாவின் பாடல் என்று சொல்லக்கூடிய  மெலடியுள்ள பாடல் இது. அவருடைய சிக்நேச்சர் இசையமைப்பை பாடல் முழுதும் பார்க்கலாம். கிட்டார், வயலின் குழுமம், புல்லாங்குழல், கீ போர்டு, வீணை, நாதஸ்வரம், டிரம்ஸ், தவில் மற்றும் தபேலா ஆகிய இசைக்கருவிகள்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாடலின் ப்ரிலூடாக பிசிக்காட்டோ இசையுடன் துவங்கி புல்லாங்குழல், வீணையோடும் அதன்பின் மணியோசையோடும் இசைத்து முடிக்க "வான் மேகங்களே" என்று பெண் குரலுடன் பாடல் ஆரம்பிக்கிறது. குரலுடனும், இசையுடனும் தாளம் சேர்க்க தபேலா இணைந்து கொள்ள பாடல் நம்மை ஆட்கொள்கிறது. பெண் குரல் முடிந்தவுடன் தாளத்தோடு கைகள் இரண்டு முறை தட்டப்பட, "வான் மேகங்களே" என்று ஆண் குரலில் பாடலின் பல்லவி ஆரம்பிக்கிறது. BGM இன்ட்டர்லூடாக மீண்டும் வீணை வயலின் குழுமம், புல்லாங்குழல், தபேலா மூலம் மெல்லிசை இன்னிசையாக ஒலித்து முடிக்க "பாலிலே பழம் விழுந்து" என்று பெண் குரலில் சரணம் ஆரம்பிக்கிறது. இடையில் குயில்  கூவ குயிலோடு இணைந்து பெண் கூவ இந்த முழுச்சரணமும் பெண்குரலில் பாடி முடிகிறது. வயலின் குழுமம், வீணை, பிசிக்காட்டோ இசையுடன் இரண்டாவது BGM  முடிய இப்போது ஆண் குரலில் "தென்றலே ஆசை கொண்டு" என்று இரண்டாவது சரணம் ஆரம்பித்து முழுவதும் ஆண்குரலில் வந்து முடிகிறது. பாட்டு முடியப்போகிறதே என்ற கவலை வரும் போது வழக்கத்திற்கு மாறாக மூன்றாவது சரணமொன்றும் இருக்கிறது. 
மூன்றாவது BGM ல் மணியோசை, நாதஸ்வரம், தவில் போன்ற கல்யாண மங்கல இசை முழங்க "பள்ளியில் பாடம் சொல்லி" என்று மறுபடியும் பெண்குரலில் மூன்றாவது  சரணம் ஆரம்பிக்க, இப்போது இரண்டாவது வரியில் ஆண்குரலும் மாற்றி மாற்றி ஒலிக்க பாடல் இனிதே நிறைவடைகிறது. 

பாடலின் வரிகள்:

வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை
வான மேகங்களே

பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா (2)
பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும்  நேரம் கண்டேன்
வான் மேகங்களே ...

தென்றலே  ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா (2)
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
வா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்
வான் மேகங்களே ....

பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்
பாவையின் கோவில் மணி ஓசையை நீ கண்ணே
தா தன்னன்னா
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ?
வான் மேகங்களே ....

பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். மிகவும் சாதாரண வரிகள்தான். கண்ணதாசனின் கவிதை வரிகள் என்று சொல்லுமளவிற்கு சிறப்பில்லை. ஆனால் மெட்டுக்கு மிகச் சரியாகப் பொருந்துகின்றன. ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் எந்த கனெசஷனும் இல்லை உதாரணத்திற்கு, “தென்றலே ஆசை கொண்டு, “தோகையை கலந்ததம்மா”, என்ற வரிகளுக்கும் அதன் அடுத்த வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . பாடல் முழுவதுமே இப்படித்தான் அடுத்தடுத்த வரிகளுக்கும் எந்த தொடர்புமில்லை. கடைசி வரியில் "பள்ளியின் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்" என்ற வரியில் கண்ணதாசன் லேசாக எட்டிப்பார்க்கிறார். ஏனென்றால் நாயகன் ஒரு பள்ளிக் கூட ஆசிரியர். நாயகி இப்படிச் சொல்லும்போது அதில் இரண்டு அர்த்தங்கள் வருகின்றன. பள்ளி என்றால் படுக்கையறையென்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதற்கடுத்த வரியும் சம்பந்தமில்லை. அதோடு டான் டன்  டன்  டான் என்ற மணியோசைக்குப்பின் "சங்கின் ஓசை கேட்கும் நேரம்" என்று எந்தச் சங்கைச் சொல்கிறார் என்றும் விளங்கவில்லை. ஒரு வேளை இந்த வரிகளுக்கு வேறு அர்த்தம் ஏதாவது இருக்குமென்றால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பாடியவர்கள்:
Ilayaraja with Malaysia Vasudevan


பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி என்ற ஈடில்லாத இரு அற்புதக் குரல்கள். இருவர் குரல்களிலும் சாந்தமும், மகிழ்ச்சியும், பாசமும், காதலும் ஒருங்கே ஒலிக்கின்றன. ஒவ்வொரு சரணத்தின் முதல் வரியும் திரும்ப வரும்போது வரும் அனுக்கங்கள் அத்தனை  அழகு, அத்தனை நளினம். இருவரும் மிக இளமையாக  இருந்தபோது பாடிய குரல்கள் என்பதால் தேன் சொட்டுகிறது.
Image result for malaysia vasudevan with Janaki  old photo

- இளையராஜாவின் ஆகச்சிறந்த எழுபதுகளின் பாடல்களில் இந்தப் பாடல் மிக முக்கியமான ஒன்று. இசையும் குரலும் வரிகளை கடந்து ஒலிக்கின்றது.

தொடரும்


Tuesday, February 5, 2019

சிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி !!!!



இளையராஜா 75 பிறந்த நாள் சிறப்புப் பதிவு
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 42
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

          இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
https://paradesiatnewyork.blogspot.com/2018/12/blog-post.html

பட்டாக்கத்தி பைரவன் (LOL) என்ற படத்திற்காக 1979ல் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.
நடிகர் திலகம் நடித்து வெளிவந்த இந்தப் பாடலில் அவர் டூயட் பாடி நடித்த இந்தப்பாடலைக் கேளுங்கள்.

 நடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்ததுதான். அவருடைய பழைய படங்களை ஒரு காலத்தில் தேடித் தேடி போய் பார்த்து அழுதுவிட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் நீண்ட காலத்திற்குப்பிறகு இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் போது அதுவும் டூயட் பாடலைப் பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது. ஆனால் பாடல் மிகவும் காதுக்கினிய மெல்லிசைப் பாடல்.
இசையமைப்பு:

பாடலின் முன்னிசையாக கிடாரின் நிரடலில் இசையால் பேச ஆரம்பிக்கிறார்  இளையராஜா. அந்த பாஷை விளங்காத ஓசையில் ஒளிந்து  கண்களை மூடிக் கேட்டால், வயலின் குழுமம் அப்படியே ஆர்ப்பரித்து, ஆரவாரித்து இசைக்க, புல்லாங்குழல் இசை வந்து தழுவிச் செல்ல, டிரம்ஸ் இசை கூட்ட, ஆண்குரலில் "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”. பல்லவி இனிதே முடிந்து முதல் BGM ல்  வயலினும், கீபோர்டும் கேள்விகேட்டு பதில் சொல்லி களைத்துப் போன ஒரு நொடியில் பெண்குரலில் "ஹா என்ற ஹம்மிங்குடன் தொடங்கி "நான் காண்பது" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது  BGM -ல் கீபோர்டு, வயலின், கிடார், புல்லாங்குழல் ஆகியவை புதுமையாக இணைந்து விளையாட, திறமையான இசைக் கலைஞர்கள் உட்கார்ந்து ஜாம் செய்து முடிக்க இரண்டாவது சரணம் முடிய ஆண்குரலில் அதே ஹம்மிங்குடன் ஆரம்பித்து, “கல்லானவன்”, என்று ஆரம்பித்து மறுபடியும் பல்லவி பாடி பாடல் நிறைவு பெறுகிறது. ரயில் பயணம், பைக் அல்லது சைக்கிள் பயணம், அல்லது ஜாக்கிங் ஆகியவற்றின் போது பாடுவதற்குப் பொருத்தமான பாடல் இது.
            இந்தப் பாடலைக் கேட்கும்போது இளையராஜாவின் இன்னொரு பாடலான "ஓ மானே மானே மானே உன்னைத்தானே", என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்பல்லவியையும் அந்தப் பாடலின் சரணத்தையும் சேர்த்து பாடிப்பாருங்கள். அப்படியே பொருந்தும். இப்படி இளையராஜா இசையில் நிறைய இரட்டைப் பாடல்கள் இருக்கின்றன. இளையராஜாவின் பாடலில் அவருடைய சொந்தப் பாடல்களின் சாயல் தெரிவதில் வியப்பேதுமில்லை. விவகாரம் என்பது மற்றவரின் பாடலின் சாயலில் தெரிந்தால்தானே.
பாடலின் வரிகள்:
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே..

ஹா
நான் காண்பது....உன் கோலமே
அங்கும்...
இங்கும்....
எங்கும்....!
என் நெஞ்சிலே.... உன் எண்ணமே
அன்றும்....
இன்றும்....
என்றும்...
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ....நீ......நீ......!


ஹா
கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்...
நீ.....
நாம்..
            

     
       பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கவிஞரின்  பொன்வரிகள் என்று ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் பாடலின் சந்தத்திற்கு எழுதுவதில் அவருக்கு இணை அவரே. வரிகள் முழுவதும் அப்படியே இசையில் உட்கார்கின்றன. "கண்ணே உன்னை எண்ணி கல்லானவன் பூவாகிறேன்" என்று சொன்னதில் கவிஞர் எட்டிப்பார்க்கிறார். அதே போல் “பூவாசமும் பொன் மஞ்சமும்”, என்று சொல்லும்போது திருமணததையும் முதலிரவையும் சுட்டிக்காட்டும்போது ஆஹா இது கண்ணதாசன் என்று தோன்றுகிறது.
பாடலைப்பாடியவர்கள்:

SPB with Ilayaraja 
சிவாஜிக்கு SPB பாலுவின் குரலும் நன்றாகவே இருக்கிறது. SPB க்கு ஜோடியாக ஜானகி கேட்கவே வேண்டாம். இருவரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். இது ஒரு மாதிரியான எதிரொலிப்பாடல் என்பதால் பாடுவது கொஞ்சம் சிரமம். ஆனால் இருவருமே அநாயசமாக பாடி அசத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் புதிது புதிதான முயற்சியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.
இளையராஜா இசையால் ( மட்டும்) இன்னும் அதிகம் பேசவேண்டும் என விரும்பும் ஒரு ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
தொடரும்

Thursday, December 6, 2018

இளமையெனும் பூங்காற்று !!!



எழுபதுகளில்  இளையராஜா பாடல் எண்: 41
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_4.html

Image result for பகலில் ஒரு இரவு

1979-ல் வெளிவந்த 'பகலில் ஒரு இரவு' என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து புகழ்பெற்ற பாடல் இது.
பாடலைக் கேட்டுவிடுவோம் முதலில்.


பாடலின் பின்னணி:
மேற்கத்திய இசையின் பாணியில், இளமைத்துடிப்புடன் தான் கொண்ட மோகத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆணின் பாடல் இது.
இசையமைப்பு:
இந்தப்பாடலை ஒரு கோரஸ் பாட்டு என்று சொல்லலாம். ஏனென்றால் பாடல் முழுதும் கோரஸ் குரல்கள் ஏதோ காதல் தேவதைகள் கானம் பாடுவது போல் வந்து பாடலுக்கு மெருகூட்டுகின்றன. இதனை ஒரு கிட்டார் பாடல் என்றும் சொல்லலாம். கிடார் இசை  பாடல் முழுவதும் விரவி இதயத்தின் ஏதோ ஒரு சொல்லக்கூடாத அல்லது சொல்லத் தெரியாத ஒரு பகுதியைச் சுண்டிவிடுகிறது. இவை தவிர கீபோர்டு, வயலின்கள், புல்லாங்குழல், பெல்ஸ், டிரம்ஸ் போன்றவை பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இளையராஜாவின் முக்கிய கருவியான தபேலா இந்தப் பாடலில் எங்கும் வரவில்லை. எங்கும் பயன்படுத்த வாய்ப்பும் இல்லை. அதற்குப் பதிலாக பேங்கோஸ் பாடல் முழுதும் வருகிறது. இளையராஜாவின் பாடல்களில் அதிகமாக பேங்கோஸ் பயன்படுத்தப்பட்ட கடைசிப்பாடல் இதுவென சொல்லலாம். அதன்பின்  டிரிப்பிள் காங்கோஸ் ஐத்தான் அவர் அதிகமாகப் பயன்படுத்தினார். அதே மாதிரி இந்தப்பாடலின் இன்னொரு புதுமை என்னவென்றால் இந்த மாதிரிச் சூழலுக்கு இன்னும் மெதுவான மெட்டுதான் பெரும்பாலும் பொருந்தும். உதாரணம் "நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்" போன்ற இளையராஜாவின் பாடல்கள்.  அதற்கு மாறாக இந்தப்பாடல் துள்ளல் இசையுடன் அமைந்த ஒரு வேகப்பாடல். அதோடு இந்தச் சமயத்தில் அதிகமாக பாடப்பட வேண்டிய டூயட் பாடல் இல்லாமல் இது சோலோவாக ஒலிக்கிறது.

பாடல் வரிகள்:
இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2)
ஒரே வீணை ஒரே ராகம்…

1. தன்னை மறந்து மண்ணில் விழுந்து,
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு,
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம்,
கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை

2. அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்,
கேட்க நினைத்தாள் மறந்தாள்,
கேள்வி எழும் முன் விழுந்தாள்,
எந்த உடலோ எந்த உறவோ? - இளமை

3. மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே,
கொஞ்சி சுவைத்த கிளியே,
இந்த நிலைதான் என்ன விதியோ? - இளமை
Image result for Ilayaraja with kannathasan young


          பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். முதலிரண்டு வரிகளிலேயே கவித்துவம் பொங்கி வந்துள்ளது. பூங்காற்றைப் போல வரும் புத்திளமை, புதுப்பாட்டு ஒன்றைப்பாடினால் எப்படி இருக்குமோ அதனைத்தான் இந்த வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இசையின் இளமைக்கு மேலும் இளமை சேர்க்கிறது கண்ணதாசனின் வரிகள். முதல் சரணத்தில் "தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமையெனும் மலர் மீது விழுந்த வண்டு,  தன் கண்ணை இந்துபோனது" என்ற அழகான உருவகம் கவிஞரின் அழகியல் கற்பனையை வெளிக்காட்டி விளக்க வைக்கிறது. அதேபோல் இரண்டாவது சரணத்தில், "கேட்க நினைத்தாள் மறந்தாள், கேள்வி எழுமுன் விழுந்தாள்" என்று தலைவியின் நிலையையும் தலைவன் மூலமே வெளிப்படுத்துகிறார்.
கடைசி சரணத்தில், “மங்கை இனம் மன்னன் இனம் தவிர வேறு என்ன குலம் குணம் தேவைப்படுகிறது. தேகம் துடித்துவிட்டால் கண்கள் குருடாகிவிடும் எனச் சொல்லும்போது "Love is blind" என்பதைத்தான் தன் சொந்த வரிகள் மூலம் சொல்லுகிறார் கண்ணதாசன். கண்ணதாசன் ஆங்காங்கே தன முத்திரை வரிகளைப்பதித்துள்ள மற்றொரு சிறந்த பாடல் இது.

பாடலின் குரல்:
Image result for SPB with Ilayaraja young

இளமைப்பாட்டை இளமைக்குரலில் பாடியுள்ளது. S.P. பாலசுப்பிரமணியம் அருமையாக மட்டுமல்ல அசால்ட்டாக என்று சொல்வோமே அப்படி அநாயசமாக பாடியிருக்கிறார். இளையராஜா, கண்ணதாசன் SPB  இவர்களின் கூட்டு முயற்சியில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான  இந்தப்பாடலுக்கு திரையில் வெளிவந்த காட்சிப்படுத்துதல் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆனால் அதையெல்லாம் மீறி ஹிட்டான இளையராஜாவின் பாடல்களில் இது சிறந்த இடத்தைப் பிடித்த பாடல்.
எழுபதுகளில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்களில் சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்தால் அவற்றில் இது முன் வரிசையில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
- தொடரும். 

Thursday, October 4, 2018

ஜென்சியின் இசைப் பயணம் பாதியில் முடிந்து போனது ஏன்?

Related image


எழுபதுகளில்  இளையராஜா பாடல் எண்: 40
இரு பறவைகள் மலை முழுவதும்
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_13.html
1979-ல் வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்து புகழ்பெற்ற பாடல் இது.முதலில்   பாடலைக்கேளுங்கள்.


பாடலின் சூழல்:
மகிழ்ச்சியான சூழ்நிலையில், இயற்கையுடன் ஒன்றிணைந்து, அதனை சிலாகித்தும் காதல் கொண்ட தன்  மன ரம்மியத்தை வெளிப்படுத்தியும் பாடுகின்ற பாடல் இது.
இசையமைப்பு:
Image result for ilayaraja young photos

குதூகல மன நிலை இந்தப்பாடலில் தெளிவாகத் தெரியும் வண்ணம் இளையராஜா இசையமைத்திருக்கிறார். பாடலின் இடையே வரும் கோரஸ்கள் பாடலுக்கு வலுசேர்க்கும் இவ்விதமாக அமைந்திருக்கின்றன. கோரஸுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலுடன் வயலின் குழுமமும்  புல்லாங்குழலும் இணைந்து முன்னிசையை முடிக்க, "இரு பறவைகள் மலை முழுதும்", என்று பாடல் ஆரம்பிக்கிறது. முதலாவது BGM -ல்  டிரம்ஸ், கிடார், கீபோர்டு ஆகியவற்றுடன் மறுபடியும் கோரஸ் வந்து ஒலித்து முடிய, "சாரல் தூவும் முகில்களும்" என்று முதலாவது சரணம் ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM-ம் அதே போல் ஒலிக்க இரண்டாவது சரணம் "பூவில் பொங்கும் நிறங்களே" என்று ஆரம்பித்து முடிந்து மீண்டும் பல்லவி வந்து கோரஸுடன் பாடல் நிறைவு பெறுகிறது .
பாடலின் வரிகள்:
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம் (இரு பறவைகள்)

1)சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும் (2)
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோடு கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே (இரு பறவைகள்)

2) பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன்
அங்கங்கே எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும் இனி நானென்றும்
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
லலலாலா லாலா லலல்லலா(இரு பறவைகள்)
Image result for Ilayaraja with kannadasan

பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். இயற்கையை வியந்து எழுதிய பாடலில் கண்ணதாசனுக்கு அவ்வளவு ஸ்கோப் இல்லாதது போல் தெரிகிறது. சாதாரண வரிகள் தாம் என்றாலும்  சந்தங்களில் அழகாக உட்காருகிறது.
தோட்டத்தில் கனிமரங்கள் இருந்து அதனை நன்கு கவனித்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உற்று உற்றுப் பார்த்தாலும் தெரியாமல் சில பழுத்த கனிகள் இலை மறைவில் மறைந்திருக்கும். என் நியூயார்க் வீட்டுத் தோட்டத்தில் உள்ள அத்திமரத்தில் நான் கண்டுபிடிக்க முடியாத சில பழங்களை என் மனைவி  கண்டுபிடித்துக் கொண்டு வருவாள்.
"இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன", என்னும் வரிகளில் நேரடியாக வரும் அர்த்தத்தில் அப்படித்தோன்றுகிறது. ஆனால் காதலில் கனிந்த இரு மனங்களையும் சேர்த்து கண்ணதாசன் அப்படி உவமையாகச் சொல்வது சற்று உற்றுப் பார்த்தால் தெரியும். இலை முடிய கனிகளை கண்டுபிடிப்பது போன்று அது அவ்வளவு கடினமல்ல. அதன் அடுத்த வரிகளைக் கேட்கும் போது இன்னும் அது சுலபமாக புரிந்து விடும், "அது கண்கள் சொல்லும் ரகசியம், இது தெய்வம் தந்த அதிசயம்". காதலும் காமமும் தெய்வம் தந்த அதிசயம் என்பது எவ்வளவு உண்மையான கூற்று. அதே போல இரண்டாவது சரணத்தில் இருவர் மனதும் ஒன்றாகிவிட்டன என்பதனை "எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன் அங்கங்கே எனைப்போல அவர் காண்கிறார்", என்று சொல்லி "நீயென்றும் இனி நானென்றும் அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா", என்று அழியா உறவை அழகாகச் சொல்வதில்தான் கண்ணதாசன் தெரிகிறார். இப்போது புரிகிறதா, சாதாரண வரிகளுக்குள் இருக்கும் அசாதாரணமான உண்மை, கண்ணதாசன் என்றால் சும்மாவா?
பாடலின் குரல்:
Image result for ilayaraja with jency

பாடலைப்பாடியவர் ஜென்சி அவர்கள். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த படங்களில் நல்ல பல பாடல்களை பாடியிருக்கிறார். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல். 1978ல் ஆரம்பித்த அவருடைய இசைப் பயணம் 1982ல் முடிந்துபோனது துரதிர்ஷ்டம் தான். ஜென்சியை கேரளாவிலிருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்திய ஜேசுதாஸ் அவர்களே சித்ராவையும் கொண்டு வந்து இளையராஜாவிடம் பரிந்துரை செய்தபடியால் அப்போதிருந்து சித்ரா ஜென்சியின் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
1983ல் திருமணமானதுதான் காரணமா? அவரைக் கேட்டால் ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டதால் இதனை விட்டுவிட்டேன் என்று சொன்னார்.
திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட கிறித்துவ கணவன் இவர் திரைப்படங்களில் பாடுவதை விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். வாய்ப்புக் கேட்டுப் போவதில் எனக்கு விருப்பமில்லை, எனவே கிடைத்த ஆசிரியர் வேலைக்குப் போய்விட்டேன் என்று ஒரு  பேட்டியில்  தெரிவித்திருக்கிறார்.
அதிகப் பாடல்கள் பாடியதால் கிடைத்த நட்சத்திர அந்தஸ்தை தலைக்கேற்றி இளையராஜாவிடம் பிணக்கு கொண்டு அவருக்கு வேண்டுமென்றால் என்னை கேரளாவிலிருந்து வரவழைக்க ஆளனுப்பட்டும் என்று சொல்லவிட்டுச் சென்றதால் இளையராஜா அப்படியே கை கழுவி விட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு.
இது எல்லாவற்றுக்கும் மேலாக இளையராஜா ஜென்சி மேல் ஒரு தலைக்காதல் கொண்டு விரும்பியதால், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருப்பதால் அவரிடமிருந்து ஒதுங்கி கேரளாவுக்குத் திரும்பியதாகச் சிலர் சொல்லுகிறார்கள். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை மக்களே.
ஆனால் ஜென்சியின் குரலைப் பிடித்த அளவுக்கு அவரின் உச்சரிப்பு எனக்குப் பிடிக்கவில்லை. ல,, ழ மற்றும் ன்,ண் ஆகியவை நன்றுதான் என்றாலும் ர, , வின் உச்சரிப்பு மிகக் கொடுமையாக இருக்கிறது. இதே பிழை சித்ராவிடமும் இருக்கிறது. ஆனால் இவ்வளவு மோசமில்லை. ஜேசுதாசுக்கு சில இடங்களில் ழ வும் பல இடங்களில் ''வும் வராது. வெளி மாநிலங்களிலிருந்து பாட வந்தவர்களின் உச்சரிப்புச் சுத்தம் என்று  சொன்னால் பி.சுசிலா அம்மாவைச் சொல்லலாம். ஆனால் தமிழில் பேசத்தான் இத்தனை நாட்களாகியும் வரவில்லை. பழைய பாடகிகளில் வாணி ஜெயராமின் உச்சரிப்பு மிகச் சுத்தமாக இருக்கும்.
ஜானகி கூட ஆசை என்பதை ஆஷை என்றுதான் உச்சரிப்பார். அந்தக் காலத்துப் பாடகர்கள் மட்டுமல்ல இந்தக் காலத்து கர்நாடக சங்கீதப் பாடகர்களும் இதே உச்சரிப்புப் பிழையைச்  செய்கிறார்கள்.அதுபோல் SP. பாலசுப்ரமணியம் மற்றும் மனோவின் உச்சரிப்பு நன்றாகவே இருக்கும். தமிழ் உச்சரிப்பை ஆரம்பத்தில் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இருந்தது AR.ரகுமான்தான்.
உற்சாகத்துடன் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலைக் கேட்டால் உங்கள் மனதும் களிப்பாகி  அதே உற்சாகம் தொற்றிக் கொள்வதோடு உங்களை இளமைக் காலத்திற்கும் இந்தப் பாடல் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
தொடரும்

Thursday, September 13, 2018

டி.எம்.எஸ்ஸுக்கும்; இளையராஜாவுக்கும் என்ன தகராறு ?


Image result for நல்லதொரு குடும்பம்
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 39
சிந்து நதிக்கரை ஓரம்.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post.html

இளையராஜா இசையமைத்து 1979-ல் வெளிவந்த “நல்லதொரு குடும்பம்” என்ற திரைப்படத்தில் அமைந்த இனிமையான பாடல் இது.முதலில் பாடலைக்கேட்போமா ?




பாடலின் சூழல்:
திரைப்படங்களில் காதல், சோகம், அன்பு, வீரம், வெற்றி, தோல்வி என்ற பல சூழ்நிலைகளுக்கேற்ப பல பாடல்கள் இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் காதலுக்காக இசையமைக்கப்பட்ட பாடல்கள் தான் அதிகம் என நினைக்கிறேன். ஒரு பாடல் அல்லது இசையின் மூலம் காதல் உணர்வுகளை சொல்வது வசனங்களின் மூலம் சொல்வதை விட சுலபம். ஏனென்றால் காதல் மட்டுமல்ல காமத்தையும் பாடல் மூலம் சொல்வது எளிதென்று நினைக்கிறேன். அப்படி காதலை வெளிப்படுத்தும் இன்னொரு பாடல்தான் இது.
இசையமைப்பு:
அருமையாக அமைந்த இந்த மெல்லிசைப் பாடலில்  அதற்கேற்ப இசையமைத்ததோடு இசைக்கருவிகளையும் இதமாக பதமாக பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா. பாடலுக்கு முன் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான ஒரு மனநிலையைக் காண்பிக்கும் விதத்தில் வீணை, வயலின்கள், புல்லாங்குழல் மற்றும் கீபோர்டு இசைக்க "சிந்து நதிக்கரை ஓரம்" என்று பெண்குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. இனிய குரலுக்கு இசை கூட்ட தபேலா சேர்ந்து கொள்கிறது. அதற்குப் பதில் சொல்ல ஆண்குரல் ஒலிக்ககிறது. தேவனும் தேவியும் பாடிமுடிக்க முதல் BGM ஆரம்பிக்கிறது. ஏற்கனவே முன்னிசையில்  (Prelude) பயன்படுத்தப்பட்ட வீணையை சும்மா இருக்க விடுவானேன் என்று இன்டெர்லுடிலேயும்  பயன்படுத்தியிருக்கிறார். வயலின்கள், வீணை, புல்லாங்குழல் மற்றும் பேஸ் கோரஸ் ஒலித்து முடிக்க "மஞ்சள் மலர் பஞ்சனைகள்" என்று பெண் குரலில் சரணம் ஆரம்பிக்கிறது. 2ஆவது BGM எங்கெங்கோ ஊர்வலம் போய் சம்பந்தமில்லாதது போல் ஒலித்து மீண்டும் வந்து பாடலில் இணைய 2-ஆவது சரணம் "தெள்ளுதமிழ் சிலம்புகளை" என்று ஆண் குரலில் வருகிறது. 2-வது சரணத்தில் தபேலாவின் நடை மாறி உருட்டி உருட்டி ஒலிக்கிறது.
          பின் இரு குரலிலும் சிந்து நதி தவழ்ந்து சலசலத்து பாடல் நிறைவு பெறுகிறது.
பாடலின் வரிகள்:   
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்

மஞ்சள் மலர் பஞ்சனைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோவை எந்தன் சீர் வரிசை
சொல்லி கொடுத்தேன் அதை அதை
அள்ளி கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா

தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக்கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் நிதம் நிதம்
சோலைவெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா..
        பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். பாடல் எழுதியவுடன் சிந்துநதியில் ஷுட்டிங் எடுத்தார்களோ. இல்லை ஏற்கனவே அங்கு படப்பிடிப்பை திட்டமிட்டதால் சிந்துநதிக்கரை என்று எழுதினாரோ தெரியவில்லை. அல்லது பாரதி போலவே கண்ணதாசனுக்கும் சிந்துநதிமேல்  ஒரு ஈர்ப்பு இருந்திருக்கலாம். திராவிட நாகரிகம் பிறந்த இடமல்லவா. பல்லவியில் "பூவைப்போல  சூடினான்" என்ற வரி நன்றாக இருந்தது. பாவை பூவைச்சூடுவது இயல்பு. அந்தப் பாவையையே ஒருவன் பூவைப்போல் சூடிக் கொள்வது என்பது கண்ணதாசனின் அழகிய கற்பனை. முதல் சரணத்தில் அதிக ரகசியங்களை மேலோட்டமாக சாதாரண வரிகளில் சொல்லிச் செல்கிறார் .
அதுபோலவே இரண்டாம் சரணத்தில் குளித்து முடித்து ஈரத்துடன் இருக்கும் கூந்தல் மயக்கம் தருவதாக நினைத்து “கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான்  கொடுத்தேன்" என்பது அவருக்கே உரிய போதையுள்ள கற்பனை. பாடல் முழுவதும் கண்ணதாசனின் வரிகள்  இசைக்கு இசைவாக உட்காருகின்றன.
பாடலின் குரல்:
Image result for Ilayaraja with TMS

பாடலைப் பாடியவர்கள் டி.எம் செளந்திரராஜன் P.சுசிலா ஆகிய மறக்கமுடியாத ஜோடிக்குரல்கள். மிகவும் உச்சஸ்தாயி பாடுகிற டி.எம். எஸ்க்கு இந்தப்பாடலில் கீழ் ஸ்தாயி கொடுத்திருக்கிறார் இளையராஜா. இருவருக்கும் அதுவும் நன்றாகவே பொருந்தி யிருக்கிறது. இளையராஜாவுக்கும் டி.எம்.எஸ்ஸுக்கு  தகராறு வந்ததால்தான் அதிக பாடல்கள் அவருக்குக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். பாடல் வெற்றி பெறுவதற்கு என் குரல்தான் அவரின் இசையை விட காரணம் என்று சொன்னதாகக் கேள்வி. அதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் தன் முதற்படத்திலேயே டி.எம்.எஸ்ஸுக்கு பாடல் கொடுத்தவர் இளையராஜா. ஆனால் டி.எம்.எஸ் சிவாஜி, இளையராஜா, காம்பினேஷனில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நினைவில் என்றும் நிற்பவை.
Image result for Ilayaraja with TMS

சில பாடல்களைக் கீழே கொடுக்கிறேன்.
1.   அன்னக்கிளி உன்னைத்தேடுதே - அன்னக்கிளி
2.   நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம்
3.   அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - தீபம்
4.   நேரமிது நேரமிது - ரிஷி மூலம்.
5.   ஐம்பதிலும் ஆசை வரும் - ரிஷிமூலம்
6.   பேசாதே, வாயுள்ள ஊமை - தீபம்
7.   தேன் மல்லிப்பூவே - தியாகம்
8.   உலகம் அது இருட்டு
9.   ராஜா யுவராஜா - தீபம்.
10.                பட்டதெல்லாம் போதுமா? நல்ல தோர் குடும்பம்.
        எனக்குத் தெரிந்து சிவாஜியின் படங்கள் குறைந்ததாலும் எம்ஜியார் நடிப்பதை நிறுத்தியதாலும்தான் டி.எம்.எஸ்ஸுக்கு வாய்ப்புகள்  குறைந்தன. அதோடு வயதும் ஆனதால் குரலில் ஒருவித தழுதழுப்பும் வந்தது என்பதால்தான் மலேசிய வாசுதேவன் சிவாஜிக்குப் பாட ஆரம்பித்தார் என நினைக்கிறேன்.
 யாரிடம்தான் இளையராஜா சண்டை போடவில்லை. ஆனால் நமக்கு தேவை அதுவல்ல, இன்று கேட்டாலும் என்று கேட்டாலும்  ரசிக்க முடிகிற இந்த மாதிரிப் பாடல்களை கேட்டு மகிழ்வது மட்டும்தான் ரசிகர்களான நமக்குத் தேவை.
-தொடரும்.

Thursday, March 1, 2018

ரஜினிகாந்தின் துள்ளல் பாடல் !


எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 38
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/01/blog-post_11.html#comment-form

Image result for நான் வாழவைப்பேன்
'         'நான் வாழவைப்பேன்' என்ற திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்து ஹிட்டான ஒரு பாடல் இது. 1979ல் இந்தப்படம் வெளியானது. பாடலைக் கேளுங்கள் மற்றவற்றை பிறகு பேசுவோம்.




நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கதா நாயகனாக நடித்த இந்தப் படத்தை நான் பார்த்த ஞாபகம் இருக்கிறது. படத்தின் நடுவில் ரஜினிகாந்த் வருவார். இந்தப் பாடல் மூலம் அவரது கதா பாத்திரம் அறிமுகப்படுத்தப்படும். புயல் மாதிரி ரஜினி வரும்போதே இவன் பெரிய ஆளாக வருவான் என்று தோன்றியதும் ஞாபகத்துக்கு வருகிறது. துள்ளலும் துடிப்புமாக ரஜினி வரும்போது மக்களின் கவனம் முழுவதுமாக ரஜினியிடம் சென்றதும் இயல்பாக நடந்தது.
Image result for Ilayaraja with Rajini

பாடல் ஒருவகை 'கிளப் பாடல்' எனலாம். இப்போது குத்துப்பாடல் ஒன்று அவசியம் எல்லாப் படத்திலும் இருப்பது போல அப்போது கிளப் பாடல் (CLUB DANCE SONG) இருக்கும். கிளப் டான்ஸ் பாடல்களுக்கெனவே ஆட்டக்கார நடிகைகள் இருந்தனர். இப்போது கதாநாயகிகளே  அந்த வேலையைச் செய்துவிடுவதால் ஆட்ட நடிகைகளுக்கான தேவைகள் இல்லாமல்  போனது.
ஒயின் ஷாப் பார் போன்ற ஒரு இடத்தில் இந்தப் பாடல் ஒரு ஆட்டமும் கூத்துமாக இருக்கும். அதற்கென இசையமைக்கப்பட்டிருக்கும் பாடல்களில் கிடார், டிரம்ஸ், டிரம்பெட் போன்ற இசைக்கருவிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதே மாதிரியான இந்த துள்ளலான கிளப் பாடலுக்குத் தேவையான எல்லாவற்றையும் இளையராஜா  பயன்படுத்திருப்பார்.  

பாடலின் வரிகள்:
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

ஆகா நான் தான் மைக்கேல்
அடி நீதான் மை கேர்ள்


நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கைப் பாடங்களை
நடிப்பேன் உந்தன் மன்றத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
நாடகமா இன்னும் சாகசமா
இந்த ஊடல்கள் எனக்கு ஆகாதம்மா!


பொன்னாக மின்னும் நான் தொட்டது
உன் மீது எந்தன் கை பட்டது
இனிமேல் உன்னை யார் விட்டது
இளமை சுகங்கள் வேர்விட்டது
பெண்ணே எந்தன் எண்ணப்படி - அடி
கண்ணே என்னைக் கட்டிப்பிடி
பூங்கொடியே சிறுமாங்கனியே
உன் கண்களில் ஆயிரம் காதல் கதை


எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலையிடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி என்றும் என்னோடுதான் இந்த
ராஜா உந்தன் பின்னோடுதான்
காவலில்லை ஒரு கேள்வியில்லை
இது ராத்திரி நேர ராஜாங்கமே

Image result for vaali with Ilayaraja


பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இந்த மாதிரி பாடல்கள் எழுதுவது தமக்கு கை  வந்த கலை என்பதை நிரூபித்து இருக்கிறார்  ஆனால் குடிக்கும்போது தத்துவங்கள் வெளிப்படுமென்பதை பாடலில் அமைத்திருக்கிறார். முதலாவது சரணத்தில் “நில்லாமல் சுழலும் பூமி இது, எல்லோரும் நடிக்கும் மேடையிது, போட்டேன் நானும் வேஷங்களை, படித்தேன் வாழ்க்கைப் பாடங்களை” என்பவை அருமையான வரிகள். அதோடு 2-ஆவது சரணத்தில், “எல்லாமே புதுமை என் பாணியில் சொல்லாமல் புரியும் என் பார்வையில்”, என்பது ரஜினியைப் பற்றிய வாலியின் புரிதல் போலவே ஒலிக்கிறது.
பாடலின் குரல்:

Image result for ilayaraja with yesudas old picture

பாடலின் குரல் ஜேசுதாஸ் அவர்கள். இந்த மாதிரிப் பாடல்களுக்கு ஜேசுதாசின் குரல் பொருந்தும் என நிரூபித்தவர் இளையராஜா. சிவாஜியின் குரலிலிருந்து ரஜினிக்கு கொஞ்சம் வித்தியாசம் கொடுக்க வேண்டும் என நினைத்தும் இந்தப் பாடலைக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஜேசுதாஸ் இந்தப் பாடலை நன்றாகவே பாடியிருக்கிறார். அதோடு அவரின் குரலில் இயற்கையாக அமைந்திருக்கும் சோகம் இந்த மாதிரி தத்துவம் கலந்த பாடல்களுக்கு பொருத்தமாகவே இருக்கிறது.    
ஏனோ தெரிவியவில்லை குடிப்பதுபோல் , அல்லது குடித்துவிட்டுப் பாடுவது போல் அமைந்த பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்து விடுவது மக்களின் பொதுவான மனநிலையை குறிக்கவில்லை என்றே நம்புகிறேன். உதாரணத்திற்கு கீழே சில பாடல்களைக் கொடுக்கிறேன்.
1.   சொர்க்கம் மதுவிலே
2.   தண்ணித்  தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்
3.   வா மச்சான் வா வண்ணாரப் பேட்டை
4.    ஒய்  திஸ் கொலவெறி
இப்படி குடியை கொண்டாட்டமாக நினைத்து அதில் அழிந்து போய் வாழ்க்கையே திண்டாட்டமாக அமைந்த பல கதைகளை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. இப்படி பார்ட்டி கெட்டுகெதர் திருவிழா என்றால் குடிப்பது என்பது வழக்கமாகிவிட்டது. உண்மையான மகிழ்ச்சி இதுவல்ல என்பதை மக்கள் எப்போது தான் உணர்வார்களோ.
தொடரும்