Showing posts with label தேவதானப் பட்டி. Show all posts
Showing posts with label தேவதானப் பட்டி. Show all posts

Monday, May 6, 2019

பிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி !!!!!


Related image
வேர்களைத்தேடி பகுதி 42
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
            தேவி விலாஸ் கடையில் எங்கப்பாவுக்கு மரியாதை கிடைத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தேவிவிலாஸ் கடையின் உரிமையாளரான நாயரின் இரண்டு மகன்களும் என் அப்பாவிடம் படித்தவர்கள்தான். ஒருவர் பெயர் சோமன், இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது. என் அப்பாவுடன் அங்கு சாப்பிட்ட போது எவ்வளவு கட்டாயப்படுத்தியும் சாப்பிட்ட கட்டணத்தை வாங்குவதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். என் அப்பாவும் அதுவரையிலோ, அதற்கும் பின்னரோ அங்கு சாப்பிட்டதில்லை. ஓசியில் கிடைப்பதற்காக ஒவ்வொரு நாளும் செல்லமுடியாதல்லவா? அதனால் தான் அவருக்கு அப்படி ஒரு மரியாதை.
          தேர்வு சமயத்தில் ஒரு ரூபாய் பணத்தோடு முதல் நாள் செல்லும்போது, என்னை அவர்கள் தியாகு வாத்தியார் பையன் என்று கண்டுகொண்டு கூப்பிட்டு அன்போடு உபசரித்தார்கள். எனக்கு ஒரு நப்பாசை. அப்பாவிடம் வாங்காதது போல் என்னிடமும் வாங்க மறுத்தால் என்ன செய்வது என்று யோசித்தாலும் மறுபுறம் அப்படி வாங்காவிட்டால் அந்தப் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று கனவுக் குதிரைகளைக் தட்டி ஓடவிட்டேன்.  மாணிக்கம்பிள்ளை கடையில் கோகுலம், கல்கண்டு அல்லது முத்துகாமிக்ஸ் வாங்கிவிடலாம் என்று முடிவு காட்டினேன். குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் படிக்க அப்போது என் வீட்டில் அனுமதியில்லை. குறிப்பாக குமுதம் ம்ஹும் என்னவென்று தெரியவில்லை. ஆனால் பெண்கள் குமுதத்தை ஆர்வமாக வாங்கிப் படிப்பார்கள். அதுவும் ஏனென்று தெரியவில்லை.
Image result for பிராமணாள் கடை

          தேவி விலாஸ் கடையைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன்.  முதன் முதலாக என்னுடைய அப்பா அங்கு கூப்பிட்டுக் கொண்டு செல்லும்போது நடந்த உரையாடலை இங்கு தருகிறேன். 
          "அப்பா எந்தக் கடைக்குப் போகிறோம்"
          "ஏன் தேவி விலாசுக்கே போகலாம்"
          "ஆனால் நாம் கிறிஸ்தவர்கள் தானே"
          "ஆமாம் அதற்கென்ன?"
          "பிராமணாள் சாப்பிடுமிடம் என்றல்லவா போட்டிருக்கிறது"
          சிரித்துவிட்டு, "பிராமணாள் சாப்பிடுமிடம் என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கிறது".
          "அது என்ன அர்த்தம்ப்பா?"
          "பிராமணர் சாப்பிடுமிடம் என்றால், பிராமணர்கள் மட்டும் சாப்பிடுமிடம் என்று அர்த்தம் இல்லை. இங்கு சைவ உணவு மட்டும் கிடைக்கும் என்று அர்த்தம்"
          அப்போதுதான் அதற்கு அர்த்தம் விளங்கியது. ஏனென்றால் எனக்குத் தெரிந்து அப்போது எங்கள் ஊரில் இருந்த ஒரே பிராமணக்குடும்பம், மேனேஜர் அய்யர் என்று அழைக்கப்பட்ட பரமசிவம் அய்யர் குடும்பம்தான். இந்து நடுநிலைப்பள்ளியை நிறுவிய அவர், அவருடைய இரு மகள்களான அம்மாப்பொண்ணு டீச்சர், முத்து டீச்சர் ஆகியோர்கள் அதே பள்ளியில் வேலை செய்தனர். இதில் முத்து டீச்சர் என்னுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியை.  இது தவிர இவர்களுடைய சகோதரன் வெங்கடராமனும் பின்னர் இங்கு ஆசிரியராகி தன் தந்தைக்குப்பின் பள்ளியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 
          இவர்கள் மட்டும் தான் தேவி விலாசில் சாப்பிடமுடியுமென்றால் கடை நடத்துவதெப்படி? அல்லது எனக்குத் தெரியாமல் வேற யாராவது நிறைய பிராமணர்கள் இருக்கிறார்களா என்று குழம்பியபோது  அப்பாவின் பதில் சந்தேகத்தைப் போக்கியது. இது தவிர இன்னொரு போர்டும் இருக்கும், "பெரு வியாதியுள்ளவர்கள் உள்ளே நுழையக்கூடாது" என்று.  பின்னர்தான் தெரிந்தது அது தொழு நோயாளிகளைக் குறிக்கிறது என்று. இப்போதும் அதே போர்டுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
          தேவி விலாசுக்கு அருகில் இருந்த புதிய கட்டிடத்தில் ஸ்டேட் பேங்க் செயல்பட்டது. அந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரர் மாணிக்கம்பிள்ளை. அவருடைய ஸ்டேஷனரி மற்றும் புத்தகக்கடையும் அதனருகில் இருந்தது. இங்குதான் தினத்தந்தி போன்ற  பத்திரிக்கைகளும் கிடைக்கும். அதில் தேவதானப்பட்டி பற்றிய செய்திகள் எதுவும் இருக்குமென்றால் அதனை தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்புவதும் மாணிக்கம்பிள்ளைதான்.
        இங்குதான் நான் முத்து காமிக்ஸ், கல்கண்டு ஆகிய பத்திரிக்கைகளை வாங்குவேன். மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமைகளில் வரும் முத்து காமிக்சை மாலையில் சீக்கிரம் சென்று வாங்காவிட்டால் கிடைக்காது, விற்றுப்போய்விடும். எனவே முந்தின நாளே போய்ச சொல்லி வைத்துவிடுவேன். அப்படியிருந்தும் சில நாட்கள் கிடைக்காது. அப்போதெல்லாம் கோபமும், அழுகையும் முட்டிக்கொண்டு வரும். மாணிக்கம்பிள்ளையையும் மனதில் திட்டுவேன். எங்கப்பாவை பெயர் சொல்லி அழைக்கும் சிலரில் மாணிக்கம்பிள்ளையும் ஒருவர்.
          அதற்கடுத்த கட்டிடத்தில் நான் சொன்ன அசைவைக்கடை இருந்தது. அங்கே வேறு என்னவெல்லாம் இருந்தது நான் பார்த்ததில்லை. ஆனால் பரோட்டா சால்னாதான் அங்கு ஸ்பெஷல். அங்கே போகும்போது சிறிதுநேரம் நின்று புரோட்டா தட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.
          பொதுவாகச் சொல்வார்கள், ஓயாத கடலின் அலைகள், மலையின் அருவி, குழந்தை, யானையின் அசைவு ஆகியவற்றை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிக்காது என்பார்கள். அதேபோல் இந்தப்புரோட்டா, தட்டுவதையும்  பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
          இந்த உணவு நம் உணவு இல்லையென்றாலும், எங்கிருந்து வந்தது, இதைச் சாப்பிடுவதால் நன்மையா தீமையா என்பதையெல்லாம் மறந்துபோக வைப்பது இதன் சுவைதான்.
          முதலில் மைதா மாவை எண்ணெயும் தண்ணியும் விட்டு நன்றாகப் பிசைவார்கள். பிசைந்து முடிந்தவுடன் அதனை சிறிய உருண்டைகளாக பிடித்து வைப்பார்கள். பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென்று பளபளப்பாக இருக்கும். பெரும்பாலும் புரோட்டோ தட்டுபவர்கள் நல்ல பலசாலியாக இருப்பார்கள்.         அதன்பின் அதனை எடுத்து உள்ளங்ககையில் தட்டையாக்கி, பிரட்டி பிரட்டி பிரட்டிப்போட அதை அப்படியே பரவி மெலிதாக அகலமாக  ஆகிவிடும். பின்னர் அதனை அப்படியே சுருட்டி வைப்பார்கள். அதன்பின் அதனை தட்டையான சட்டியில் வைத்து பொன்நிறமாகும் வரை சுற்றிலும் எண்ணெய் ஊற்றி பொறிப்பார்கள். விருதுநகரில் இதனையே அப்படியே எண்ணெய்ச் சட்டியில் பொரித்து எடுப்பார்கள்.
          இதில் கொத்துப் பரோட்டோ, வீச்சுப்பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டைப் பரோட்டா, போன்ற பல வகைகள் இருக்கின்றன.
          வட இந்தியாவில் லேயராகச் செய்யும் எதையும் பராத்தா என்றுதான் சொல்கிறார்கள். நம் பரோட்டா என்பது முற்றிலும் வேறு வகை. மதுரைப் பகுதியில் இதனை புரோட்டா என்று தான் சொல்வோம். இதனை எப்படிச்சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
- தொடரும்.



Monday, November 26, 2018

ஆவிகள் நடமாடும் அதிசயப்பாறை !


வேர்களைத்தேடி பகுதி 33
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 

ஸ்லூஸ் என்பது என்னவென்றால் நீண்ட வாய்க்காலில் நீர் செல்லும்போது சாலை ஏதாவது குறிக்கிட்டால் அதனைத்தாண்டி நீர் செல்வதற்கு பாதாள வாய்க்கால் அமைத்திருப்பார்கள். ஒருபுறம் நீர் திடீரென்று வேகம் கூடி சுழன்று கீழிறிங்கி மறுபுறம் சுழன்று கொப்பளித்து வந்து வாய்க்காலில் தொடர்ந்து செல்லும். இதில் வெளியே வரும் பகுதியில் சிறிது ஆழம் இருக்குமென்பதால் அதில் மேலிருந்து கீழே குதித்து விளையாடுவார்கள். வேகமாக உள்ளே குதித்தாலும் நீர் வேகமாக சுழன்று மேலே வருவதால் குதித்தவர்களை அப்படியே மேலே கொண்டுவந்து தள்ளிவிடும். எனவே இது உற்சாகம் கொடுக்கும் விளையாட்டு. ஆனாலும் நீச்சல் தெரிய வேண்டும். மூச்சடக்கவும் வேண்டும். அதே சமயம் நீர் உள்ளே போகும் வழியில் குதித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். பாதாளத்தில் உள்ள அடர்ந்த பாசிகளில்  போய் செருகிவிடும். உயிர் போகவும் அதிகபட்ச வாய்ப்பு உண்டு.
நானெல்லாம் இவற்றை ஆர்வத்தோடு வேடிக்கை பார்ப்பதோடு சரி.  எனக்குத்தான் தண்ணீர் இருந்தால் நீச்சலடிக்கத் தெரியாதே(?)  அதோடு வாய்க்காலுக்கோ ஆற்றுக்கோ குளிக்கப்போனாலும் கையில் ஒரு மக்கை (Mug) எடுத்துப் போகும் ஆள் நான்.

Image result for டம்டம் பாறை

சரி டாம்டாம் பாறை அல்லது டம்டம் பாறை வரும்போது அதனைப் பற்றித் தெரிந்த டிரைவர்கள் அங்கு இறங்கி அங்கிருக்கும் பாறையையும் மரத்தையும் கும்பிட்டுவிட்டு திருநீறு குங்குமம் வைத்துவிட்டுத்தான் நகர்வார்கள். ஏனென்றால் அந்த இடம் ஒரு ஹேர்பின் பெண்ட் என்பதனால் கட்டுப்பாட்டை இழந்த எத்தனையோ வண்டிகள் அங்கிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு எத்தனையோ வாகனங்கள் கீழே விழுந்து உயிர்ச்சேதம் ஆகியிருக்கின்றன. அதனால் அங்கு பல ஆவிகள் குடியிருக்கிறதாகவும், அவைகளைக் கும்பிட்டுக் கடக்கவில்லையென்றால், திரும்பி வரும்போது தள்ளிவிட்டுவிடும் என்று ஒரு பயம் அங்கு நிலவுகிறது. அதோடு அந்தப்பாறையில் பழங்காலத்தில் உயிரைப்பலி கொடுப்பார்கள் அல்லது நிறைய தண்டனைகள், கொலைகள் அங்கே நடந்திருக்கின்றன என்றும் சொல்லுகிறார்கள்.
Related image

அந்த இடத்திலிருந்து கீழே விழுந்தால் உயிர் தப்புவது அரிதுதான். ஆண்டிற்கு ஓரிறு முறை விபத்து நடந்ததென கேள்விப்படுவோம். இப்போது எப்படி என்று தெரிவில்லை.
எத்தனையோ சமயங்களில் பஸ்கள் அங்கிருந்து உருண்டு விழுந்து நேரே மஞ்சாறு அணையில் விழுந்திருக்கின்றன. பக்கத்தில் இருக்கும் மஞ்சளாறு ஊரில்   வசிப்பவர்கள் வந்து பலபேரைக் காப்பாற்றியிருக்கிறார்களாம். அதோடு ஒரு சிலர் இறந்தவர்களின் அல்லது காயம்பட்டவர்களை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அவர்களின் ஆபரணங்கள் பொருட்கள் ஆகியவற்றை கவர்ந்து சென்றதாகவும் கதைகள் இருக்கின்றன.
Related image
Thanks to Dinakaran
மஞ்சளாறின் மேலே உள்ள மலைப்பகுதிகளில் அதிகமாக தேக்கு மரங்கள் இருப்பதால் இது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதி. எனக்குத் தெரிந்து சந்தன மரங்கள் இங்கு அதிகமில்லை. தேக்கு மரங்கள் தவிர தைல மரங்கள் என்று சொல்லக்கூடிய யூக்கலிப்டஸ் மரங்கள் அதிகம் உண்டு. அந்தப்பக்கம் வாகனங்கள் செல்லும்போது தைல வாசனை மூக்கைத்துளைக்கும்.
இந்த மலையில் குரங்குகள், நரி, காட்டுப்பன்றி, மான்கள் காட்டெருமை, கழுதைப்புலி மற்றும் சிறுத்தைகள் இருக்கின்றன. அவைகள் நீர் அருந்துவதற்கு அணைப்பக்கம் வரும். பெரும்பாலும் இரவு வேளைகளில் வரும். கொடைக்கானல் மலையில் ஏறும்போதே அங்கே சுவர்களில் பலகுரங்குகள் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த மலையில் விளையும் தேக்கு மரங்கள் அதிகமாக கடததப்படுகின்றன. அதனை தடுத்து நிறுத்துவதற்கு வனத்துறையே நான் சிறுவனாக இருந்தபோது புலிக்குட்டிகள் அல்லது சிறுத்தைக்குட்டிகளைவிட்டு ஊரில் தண்டோரா போட்டது ஞாபகமிருக்கிறது.
                 மஞ்சளாறு அணை ஒரு சிறிய ஆனால் அழகான அணை. அதனைச்சுற்றி ஒரு அழகிய பூங்காவும் அமைத்திருந்தார்கள். ஆனால் அப்போதே (1970களில்) போதிய பராமரிப்பு இல்லாமல் பொம்மைகள் கைகளையும் கால்களையும் இழந்து காணப்படும். இப்போது எப்படியென்று தெரியவில்லை. ஆனால் அணியின் மேலேறி நடந்தால் மிக ரம்மியமாக இருக்கும். ஒருபுறம் பரந்த வெளி. மறுபுறம் மாபெரும் நீர்த்தேக்கம். அதன் மறுபுறம் பசுமை சூழ்ந்த ஆற்றில் மலைகள். கொஞ்சம் உற்றுப்பார்த்தால் மலைச்சாலை தெரியும். இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அந்தச் சாலையில் எறும்பு ஊர்வது போல வாகனங்கள் செல்வது தெரியும். பின்புறம் தொலைவில் தலையாறும் தெரியும். தேவதானப்பட்டி வழியாக பெரியகுளம் செல்லும் டவுன்பஸ்கள் மஞ்சளாரில் இருந்து கிளம்புகின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் வந்து செல்லும். சாலை அப்போதெல்லாம் படுமோசமாக இருக்கும். நாங்கள் நடந்தும் சென்றிருக்கிறோம். அப்படிச்  செல்லும்போது சுவையான கோவைப்பழங்கள் கிடைக்கும். சாப்பிட்டால் வாயெல்லாம் சிவப்பாகிவிடும். முள்குத்தாமல் கவனமாக எடுக்க வேண்டும். முள்ளை கவனிக்கத் தவறினாலும் வாய் சிவப்பாகிவிடும் ரத்தத்தால் .கத்தாழைப்பழங்கள்( Cactus fruit) கேட்பாரின்றி இருக்கும்.
மஞ்சளாறில், பொதுப்பணித்துறையில் வேலைபார்க்கும் இன்ஜினியர்கள் அலுவலர்களின் பிள்ளைகள் அங்கிருந்து காலை கிளம்பும் டவுன்பஸ்ஸில் தேவதானப்பட்டிக்கு பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு அங்கே குவார்ட்டர்ஸ் உண்டு.
அதுமட்டுமல்லாமல் இலங்கையிலிருந்து வந்த அகதிகளுக்கும் அங்கே அரசு குடியிருப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அங்கேயும் குடியிருந்து கொண்டு பல ஆண்டுகளாக இலங்கைத்தமிழர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் ஊரில் எப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ ,இங்கு வந்து கஷ்டப்படுகிறார்கள்.
இந்தியா தமிழகம் தவிர பிறநாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்சு, கனடா, இங்கிலாந்து,  ஸ்விட்சர் லாந்து ஆகிய பல நாடுகளில் புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் பெரும் வசதி வாய்ப்புகளோடு சிறப்பாக வாழ்கிறார்கள். தமிழ்ச்சங்கங்கள் போல அவர்களுக்கென தனி அமைப்புகளும் செயல்படுகின்றன.
வனத்திலிருந்து தப்பி தேவதானப்பட்டி ஊருக்குள் வந்து வாழ்ந்து சாமியாகிப்போன ஒரு குரங்கைப் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
- தொடரும்.

Monday, November 12, 2018

ஜமீன்தார் தலையை காவு வாங்கிய காமாட்சி அம்மன் !!!!


Image result for காமக்காள் அரண்மனை
வேர்களைத்தேடி பகுதி 31
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.  
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_29.html
காமக்காள் திவசம் ( நன்றி தினமலர்)
               பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீந்தார் மனைவி காமக்காள் என்பவர் தனது ஒரே மகனான பொம்முலிங்கசாமி என்ற மகனுடன் கோயிலுக்குள் இருக்கும் காமக்காள் அரண்மனை எனும் கட்டிடத்தில் வசித்து வந்தார். காமக்காள் தன் பக்தியின் வலிமையால் அம்மனுடன் நேரடியாகப் பேசும் பேறு பெற்றாள். இரவில் தன் தாயார் தனியாகச் சென்று வருவதில் சந்தேகமடைந்த மகன் தாயைக் கோபித்துக் கொண்டார். அவன் அம்மா உண்மையைக் கூறிய நிலையிலும் நம்பாமல் தானும் அம்மனைக் காண வேண்டுமென்று பிடிவாதம் செய்தான். அன்றிரவு காமக்காள் மகனை அழைத்துக் கொண்டு சென்றார். காமாட்சியம்மனை நேரில் கண்ட அவன் மண்டை வெடித்துச் சிதறி இறந்தான்.
Image result for காமக்காள் அரண்மனை

தன் ஒரே மகன் தலை வெடித்து இறந்ததைக் கண்ட காமக்காள் அம்மனிடம், “ எனக்கு இருந்த ஒரு மகனையும் எடுத்துக் கொண்டாயே. இனி நான் இறந்த பிறகு எனக்குச் செய்ய வேண்டிய திவசக் காரியங்களை  யார் செய்வார்?” என வருந்திக் கேட்டாள். உடனே அம்மன், “ வருத்தமடையாதே, நீ இறந்த பின் நாயக்கர் சமுதாயத்தவரைக் கொண்டே உனக்கு திவசமிடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாள். காமக்காள் தை மாதம் இரத சப்தமியில் மரணமடைந்தாள்.
       அம்மனின் வாக்குப்படி ராஜகம்பளம் நாயக்கர்கள் திவசமிட்டனர். காமக்காள் மற்றும் அவள் மகன் சமாதிகள் இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.
மகா சிவராத்திரி விழா
ஒவ்வொரு ஆண்டும் தை மாத இரத சப்தமியில் கோயிலில் காமக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது. திவசம் முடிந்த அன்றே கோயிலின் ஆண்டுத் திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. மகா சிவராத்திரியை முதல் தினமாகக் கொண்டு எட்டு நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழா தேனி மாவட்டத்திலுள்ள கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இத்திருவிழாக் காலமான எட்டு நாட்களும் கோயிலுக்கு தனிப் பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றன.
ஆடிப்பள்ளயம் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திங்களில் முதல் மூன்று நாட்கள் ஆடிப்பள்ளயத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ராஜகம்பளம் நாயக்கர் சமுதாயத்தின் “தேவராட்டம்” நிகழ்வு சிறப்பாக இருக்கும். இது தவிர சித்திரை வருடப் பிறப்பு, விஜயதசமி, கார்த்திகைத் திருநாள், தைப்பொங்கல் போன்ற பிற விழாக்காலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிற நாட்களில் இந்தக் கோயிலில் தினசரி பூசைகள் நடைபெற்று வருகின்றன.
சிறப்புகள்
·         கோயிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூசை செய்யப்படுகிறது.
·         கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் சிறப்பான ஒன்றாக உள்ளது.
·         அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை.
·         அன்ன நைவேத்தியம் செய்யப்படுவதில்லை.
·         கோயிலில் நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது.
·         கோயிலில் விளக்குக்காகப் பக்தர்களிடம் காணிக்கையாகப் பெறப்படும் நெய் இங்குள்ள மண்பானைகளில் ஊற்றி வைக்கப்படுகின்றன. இந்த நெய்யிற்கு எறும்பு, ஈ, வண்டு என்று எதுவும் வருவதுமில்லை, மொய்ப்பதும் இல்லை.
·         திருவிழாக் காலத்தில் கோயிலில் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் நெய் சேகரிப்புக்காக சுமார் ஐம்பது மண்பானைகள் வைக்கப்படுகின்றன. இவையனைத்தும் எட்டு நாட்கள் திருவிழாவில் நிரம்பி விடுகின்றன.
·         தேவதானப்பட்டியைச் சுற்றிலுமுள்ள சில கோயில்களுக்கு இங்கிருந்து நெய் மற்றும் நைவேத்தியப் பொருட்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
·         வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் குச்சு வீடு கலசத்திற்குக் கூரை வேயப்படும் போது ராஜகம்பளம் சாதியினர் தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காமாட்சிப் புல்லால் கூரை வேய்கின்றனர்.
·         காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் போன்றே இங்கும் பூசை மண்டபத்தின் முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. இங்கும் கௌளி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இத்தோடு காமாட்சியம்மன் புராணம் முடிகிறது .அடுத்த பகுதியில் மஞ்சளாற்றைக்குறித்துப் பார்ப்போம்.
தொடரும்




Monday, October 22, 2018

அசுரனைக்கொன்ற காமாட்சி !!!!


Image result for வச்சிரதந்தன்

வேர்களைத்தேடி பகுதி 29
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.          
https://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_8.html
தல வரலாறு ( நன்றி தினமலர்)
            கோவிலின் சிறப்புகளைச் சொல்வதற்கு முன் அதன் தல வரலாறை சொல்வது முக்கியம் என்பதால் அதனை இந்தப்பதிவில் பார்த்து விடலாம் .
            இந்து சமயக் கதையின்படி, முன்பொரு காலத்தில், காஞ்சனா எனும் காட்டுப்பகுதியை, சூலபாணி எனும் அசுர மன்னன் வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான். அதில் தனக்குத் தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன், தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்பதும் ஒன்று. இந்த தவத்தின் பலனால் அவனுக்கு வலிமையான ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு வச்சிரதந்தன் எனும் பெயரிட்டு வளர்த்து வந்தான். பின்னர் அவனை அப்பகுதியின் அரசனாக்கினான். அவனுக்கு மாங்குசானன் என்பவன் அமைச்சராகவும், துட்டபுத்தி என்பவன் தளபதியாகவும் இருந்தனர். இவர்களிருவரின் ஆலோசனைப்படி காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும், வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால் அவனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.
              பாதிக்கப்பட்டவர்கள் அவனுடைய தொல்லைகள் பற்றி பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். அவரும் வச்சிரதந்தனை அழிக்க தேவேந்திரனை அனுப்பி வைத்தார். தேவேந்திரன் வச்சிரதந்தனின் தளபதியான துட்டபுத்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது படையையும் இழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான். இப்படி ஓடிய தேவேந்திரன் வச்சிரதந்தனை பராசக்தியால்தான் அழிக்க முடியும் என்று கருதி பிற தேவர்களுடன் பராசக்தி காமாட்சியம்மனாக எழுந்தருளியுள்ள காஞ்சிபுரம் சென்று அன்னையிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற காமாட்சியம்மன் அவனை அழிக்கப் புறப்பட்டார். வங்கிசபுரி வரும் வழியில் பன்றிமலை என்ற வராகமலையில் இறங்கி துர்க்கையை வச்சிரதந்தனுடன் போரிட அனுப்பி வைத்தார்.
Image result for அசுரன்

         துர்க்கை அங்கிருந்து புறப்பட்டு வங்கிசபுரி வந்து வச்சிரதந்தனுடன் போர் புரிந்தார். அவனுடைய தலையைத் துண்டித்தார். மீண்டெழுந்து சிங்கத்தலையுடன் நின்றான். அதையும் துண்டித்தார். பின்னர் புலி, கரடி, காட்டெருமை என ஒவ்வொரு தலையுடன் தோன்ற அனைத்தையும் துண்டித்தார் துர்க்கை. இவனை ஒழிக்க காமாட்சியம்மனாலேயே முடியும் என்ற நோக்குடன் துர்க்கை அங்கிருந்து திரும்பினார்.
            துர்க்கை தோல்வியுடன் திரும்பியது கண்டு காமாட்சியம்மன் கோபத்துடன் துர்க்காதேவியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வங்கிசபுரி வந்தார். வச்சிரதந்தன் ஏவிய ஆயுதங்கள் காமாட்சியம்மனை மூன்றுமுறை வலம் வந்து அவனிடமே திரும்பிச் சென்றது. வச்சிரதந்தனும் அந்த அம்மனை வணங்கினான். பின்னர் அம்மனுடன் போரிடத் தொடங்கினான். துர்க்கையுடன் போரிட்டது போல் பல்வேறு தலைகளுக்கு மாறினான். காமாட்சியம்மன் துர்க்கையிடம் வச்சிரதந்தன் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தவுடன் அதைக் காலால் நசுக்கி அழித்து விடும்படி கூறி வச்சிரதந்தனின் தலையைத் துண்டித்தார். துர்க்கையும் அந்தத் தலையைக் காலால் நசுக்கி அழித்தார். அசுரன் மறுதலை எடுக்க முடியாமல் அழிந்தான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
                     அசுரனது தலையை மிதித்த இடம் தலையாறு எனவும், மூளை சிதறிப் போய் விழுந்த இடம் மூளையாறு எனவும், குலைகாய் ஈரல் விழுந்த இடம் குலையூத்து எனவும், உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை எனவும் பெயர் பெற்றன. இன்றும் இந்தப் பகுதியில் இந்தப் பெயர்கள் வழக்கத்திலுள்ளன.
               வங்கிசபுரிக்கு அருகில் வேகவதி என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஆறு மாணிக்கமலைத் தொடரிலிருக்கும் தலையாறு எனுமிடத்தில் மூங்கில் காடுகளுக்கிடையே பாய்கிறது. அசுரனைக் கொன்ற அம்மன் யௌவன வடிவம் கொண்டு இந்நதி அருகில் தவமிருந்தாள். அசுரனைக் கொன்ற பாவம் அம்மனுக்கு நீங்குவதற்காக சப்த கன்னியர்கள், தெய்வப் பெண்கள், துர்க்கை அனைவரும் சேர்ந்து ஆயிரத்தெட்டு தங்கக் குடங்களில் நீரெடுத்து வாசனைத் திரவியங்களுடன் மஞ்சளும் கலந்து அபிசேகம் செய்தனர். கன்னித் தெய்வமாய் பொலிவுறும் காமாட்சியம்மனுக்கு அபிசேகம் செய்த மஞ்சள் நீர் ஆற்றில் கலந்ததால் வேகவதி ஆறாக இருந்த ஆறு மஞ்சளாறு எனப் பெயர் மாற்றமடைந்தது. அம்மன் தலையாற்றின் மூங்கில் காடுகளில் தவமிருந்த இடத்தில் சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இது “அம்மா மச்சு” என்று அழைக்கப்படுகிறது.
இன்னும் கொஞ்சம் தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
தொடரும்










Monday, October 8, 2018

திருவிழாவில் சாப்பிட்ட பீம புஷ்டி அல்வா !!!!!

Image result for பீம புஷ்டி அல்வா


வேர்களைத்தேடி பகுதி 28
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post.html
தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டி சேவை செய்வதற்காக தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் இது தெய்வதானப்பட்டி என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தேவதானப்பட்டி என்று ஆனது. எனவே இங்கே நிறைய கோவில்கள் உண்டு. பிள்ளையார் கோவில், கொண்டைத்தாத்தா கோவில், முத்தாளம்மன் கோயில், ஐயப்பன் கோவில், பத்ரகாளி கோயில், கிருஷ்ணன் கோவில் எனப் பல கோவில்கள் இங்கே இருக்கிறது.
மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் என்பது தேவதானப் பட்டியின் அருகில் ஓடும் மஞ்சளாறு அணையின் கரையில் ஊருக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. மாசி மாதத்தில் நடக்கும் இந்தத் திருவிழா மிகப்பெரிய அளவில் நடக்கும். ஊரே அந்த ஒரு வாரம் ஒரு சிறு நகரம் போல் மாறிவிடும்.
வத்தலக்குண்டு மற்றும் பெரியகுளம் நகரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவை தவிர தேவதானப்பட்டிக்குள் வரும் பெரும்பாலான டவுன் பஸ்கள் நடுவில் கோவில் சென்று திரும்பும். தேவதானப்பட்டியின் அருகே சுமார் 1 1/2 கி.மீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் திடீரென்று புற்றீசல் போல 'ஜட்கா' என்று சொல்லக்கூடிய குதிரை வண்டிகள் ஏராளமாக வந்துவிடும். தேவதானப்பட்டி பஸ்ஸ்டான்டிலிருந்து கோவில் வரை சென்று வரும் சில வாடகைக்கார்கள் கூட வந்துவிடும்.
இக்கோவிலின் பரம்பரை  அறங்காவலர்களாக பாண்டியர் பரம்பரையில் வந்த தேவதானப்பட்டி ஜமீன்தார் அவர்களின் மகன்கள் கனகராஜ் பாண்டியன் தனராஜ் பாண்டியன் இருந்து வருகிறார்கள். வசதி வாய்ப்பில் அவர்கள் நொடிந்து போயிருந்தாலும் அவர்களுக்குரிய முதல் மரியாதையை கோவில் நிர்வாகம் அளிக்கத்  தவறுவதில்லை.
திருவிழா நடக்கும் ஐந்து நாட்களும் ஊர் விழாக்கோலம் பூண்டிருக்கும். பலவிதமான கடைகள் கோவிலைச் சுற்றி முளைத்திருக்கும். அதில் முழுச்சந்தை போல், துணிமணிகள், விளையாட்டு சாமான்கள், பொம்மைக் கடைகள், தின் பண்டங்கள் போன்றவை இருக்கும்.
ஒரு நாள் மாட்டுத்தாவணியும் மற்றொரு நாள் குதிரைத் தாவணியும் நடக்கும். பல ஊர்களிலிருந்து  பலவகையான ஆடுகள், மாடுகள் என்று ஒரு நாளும், குதிரைகள் வந்து குவியும் நாளாக இன்னொரு நாளும் நடக்கும். வாங்குவதும் விற்பதும் ஏராளமாக நடக்கும் இங்கு கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும். பல நூறு ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இப்போதும் இது நடக்கிறது என்றே நினைக்கிறேன்.
இந்தக் கோவிலின் பரம்பரை பூசாரிகளாக இருப்பது சர்க்கரைத் தேவர் குடும்பம். நான் வாழ்ந்த வளர்ந்த அதே தெருவான  சின்னப்ப நாடார் தெருவில் என் வீட்டுக்குப் போகும் வழியில் அவர்கள் வீடு இருக்கிறது. அவர்களின் மூத்த புதல்வன் முருகேசன் எனக்கு ஒரு வயது பெரியவர். 2-வது மகனான கணேசன் எனக்கு ஒரு வயது சிறியவர். கடைசி மகன் பத்மநாபன். சர்க்கரைத்தேவர் இறந்துபோனபின் இவர்கள்தான் இப்போது கோவிலின் பூசாரிகளாக இருக்கின்றனர்.
Image result for pithukuli murugadas
பித்துக்குளி முருகதாஸ்
சிறிய வயதில் நடந்தும் குதிரை வண்டியிலும் பலமுறை கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு நாள் மாலையிலும் கலை நிகழ்ச்சிகளாக, கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் ஆகியவை நடக்கும். சிறப்பு நிகழ்ச்சியாக இரவில் பித்துக்குளி முருகதாஸ் கச்சேரி  பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. இவர் யாரென்றால் தேவரின் 'தெய்வம்” என்ற திரைப்படத்தில் "நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை" என்ற பாடலை தோன்றிப்பாடியவர். ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே பாடும் இவருக்கு கண் தெரியாது. ஆனால் மிக அழகாகப் பாடக்கூடியவர்.


கோவிலுக்கு அருகில் ஓடும் மஞ்சளாறு நதியில் சிறிதளவாவது தண்ணீர் எப்போதும் ஓடும். கோவில் திருவிழாவின் போது மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் போதுமான அளவு திறந்து விடுவார்கள் என நினைக்கிறேன். நேராக மக்கள் ஆற்றுக்குப்போய் நீராடியோ அல்லது கைகால்கள் கழுவிவிட்டோ மேலேறுவார்கள். ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச்  சென்று வணங்கிவிட்டு பின்னர் காமாட்சியம்மன் கோவிலுக்குச் செல்லுவார்கள்.


நன்றி தினகரன் 


மஞ்சளாறும் அதையொட்டி அமைந்திருக்கும் மாஞ்சோலைகளும் அழகான பச்சைப் பசேலென காட்சியளிக்கும் மரங்கள் சூழ்ந்த அந்த இடம் மனதுக்கு மிகுந்த இதமளிக்கும் இடம்.
எங்கம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு பலமுறை திருவிழாவிற்குப் போயிருக்கிறேன். ஓலையால் செய்யப்பட்ட சிறிய சொப்புகள், களிமண்ணால் செய்யப்பட்ட குதிரை, சிறிய விளையாட்டு அடுப்பு, சொப்புகள் ஆகியவற்றை விருப்பமுடன் கேட்டு வாங்கிக் கொள்வேன். இது தவிர ஓலையில் செய்த பீப்பி, பலூன், கடிகார மிட்டாய் எனப் பலவற்றை வாங்குவேன். பிளாஸ்ட்டிக் சாமான்களும் அப்போதுதான் அதிகமாக வரத்துவங்கியிருந்தன.
இன்னொரு முக்கிய பொருள் நாங்கள் கட்டாயம் வாங்குவது 'பீமபுஷ்டி அல்வா” என்பது. இந்தமாதிரி சுவையான அல்வாவை நான் எங்கும் சாப்பிட்டதில்லை. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல குழகுழவென்று இருக்காது. சுவையோ அபாரமாமிருக்கும். இந்தக் கடைக்கு நான் சென்றது அல்வா வாங்க மட்டுமல்ல. அதன் பின்னே உள்ள படத்தில் பீமன் கதாயுதத்துடன் நிற்க , மல்யுத்த வீரர்கள் போலக் காட்சியளிக்கும் பலர் வரிசையில் நிற்பதுபோன்று இருக்கும். பெரிய போட்டோ பிரேமில் அதே மாதிரி இன்னொரு காட்சியும் வைத்திருப்பார்கள்.
Related image

இந்த அல்வாவைச் சாப்பிட்டவர்கள் பீமனைப் போல் புஷ்டியாகி பலம் பெறுவார்கள் என்று சொல்வது போல் அந்தப் படங்கள் அமைந்திருக்கும். ஆண்டுதோறும் எது தவறினாலும் பீமபுஷ்டி அல்வாக்கடை வரத்தவறாது. அந்த அல்வாவை இன்றுவரை நான் வேறெங்கும் பார்த்ததில்லை.
ஒல்லியாக இருக்கும் நான் பீமனைப்போல் பலம் பெறுவேன் என்ற நப்பாசையில் சிறிய வயதில் பலமுறை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். ம்ஹும் ஒன்றும் நடக்கவில்லை. பிற்காலத்தில் சர்க்கரை நோய் வந்ததுதான் மிச்சம்.
அதுசரி காமாட்சியம்மன் கோவிலில் கதவுக்குத்தான் பூஜை நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? சாமியை உள்ளே பார்க்க முடியாது. மீறி பார்த்தவர்கள் தலை வெடித்துச் சிதறியிருக்கிறதாம். அடுத்த வாரம் அதனைப்பற்றி விரிவாகச் சொல்கிறேன்.
தொடரும்

Monday, October 1, 2018

சடுகுடு விளையாட்டில் சாதித்த(?) பரதேசி !!!!!


Image result for kabaddi in village
வேர்களைத்தேடி பகுதி 27

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_24.html

இந்து நடுநிலைப்பள்ளியில் நான் படிக்கும்போது அதற்கென்று ஒரு விளையாட்டு மைதானம் இருந்ததில்லை. பள்ளியின் தகவல் பலகையில் விளையாடுமிடம் சந்தைப் பேட்டை என்று போட்டிருக்கும். அது பள்ளியை விட்டு கொஞ்சம் தூரத்தில் இருந்ததால் அங்கு எங்களை யாரும் கூப்பிட்டுப்போன ஞாபகம் இல்லை. எனவே நான் அதிகபட்சம் அங்கு விளையாடியது, கோலிக்குண்டு, குலை குலையா முந்திரிக்காய். கிட்டிப்புள், பம்பரம், நொண்டி, கிளித்தட்டு போன்ற அவுட்டோர் விளையாட்டுகளும், பல்லாங்குழி, பரமபதம், சொட்டாங்கல் கூட்டாஞ்சோறு போன்ற இண்டோர் விளையாட்டுக்கள் மட்டும்தான். இதைத்தவிர பொன் வண்டு  வளர்ப்பது, வண்ணத்துப்பூச்சி பிடித்து நூல் கட்டி வைத்துக் கொள்வது, புளிய விதையில் ஒற்றையா ரெட்டையா, தீப்பெட்டிப்படம் மற்றும் சிகரெட் அட்டைகள் வைத்து விளையாடும் மங்காத்தா ஆகியவையும் உண்டு.

தேவதானப்பட்டி உயர் நிலைப்பள்ளி

ஆனால் உயர் நிலைப்பள்ளியில் விளையாடுமிடமும் ஆடுகளங்களும் தனித்தனியாக அமைக்கப்பட்டு அதற்கு உடற்பயிற்சி ஆசிரியரும் இருந்தார். டென்னிக்காய்ட், பேட்மிண்ட்டன், சாஃப்ட் பால், வாலிபால், கபடி, கால்பந்து ஆகியவற்றுக்கு தனித்தனி களங்கள் இருந்தன. என்னுடைய அப்பா ஒரு சிறந்த  வாலிபால் பிளேயர், மதுரை பசுமலையில் விடுதியில் தங்கிப்படிக்கும் போது வாலிபால் மற்றும் கால்பந்து விளையாடுவதில் சிறந்து இருந்திருக்கிறார். தேவதானப்பட்டியிலும், சந்தைப் பேட்டையில் இயங்கிய கைப்பந்துக் கழகத்தில் உறுப்பினராக பலவிதமான மேட்ச்களில் பங்கு கொண்டிருக்கிறார். அப்பா அவர்கள் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். களத்தில் ஷாட் அடிப்பவர்களுக்கு பந்தை லிஃப்ட் செய்து கொடுப்பது அவர் பணி, அவ்வளவு உயரம் இல்லையென்பதால் ஷாட் அடிப்பதில் ஈடுபடவில்லை என்று நினைக்கிறேன்.
அம்மாவும் திண்டுக்கல் புனித ஜோசப் கான்வென்ட்டில் படித்தபோதும் சரி மதுரை கேப்ரன் ஹாலில் படிக்கும்போதும் சரி ட்ராக் விளையாட்டுகளில் ஈடுபட்டு பலபரிசுகளை வாங்கியிருக்கிறார்களாம்.
என் வீட்டில் நான் மட்டும்தான்  விளையாட்டில் ஆர்வமாக இருந்தேன். ஆனால் மிகவும் ஒல்லியாக இருந்தால் அந்த அளவுக்கு பெரியதாக விளையாடமுடியாமல் போனது.
டென்னிக்காய்ட்டில் அதிகமாக விளையாடி பல பரிசுகள் பெற்றதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஏதோ ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.
அதே போல கபடியிலும் நன்றாக விளையாடுவேன் என்பதை இப்போது சொன்னால் என் மனைவி உட்பட யாரும் நம்பமாட்டேன் என்று சொல்லுகிறார்கள்.
தேவதானப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் பின்புறமுள்ள பல களங்களில் கபடி மைதானம் தான் கடைசி. அப்போது பக்கத்தில் ஒரு மரம்  கூட இருக்காது. கொஞ்ச தூரத்தில் இருந்த சரளைக்  கரடில்  கூட கொஞ்சம் புதர்கள்தான் இருக்கும். நிழல் என்பது கிஞ்சித்தும் இல்லாத வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் எங்களுக்கு விளையாட்டு பீரியட்டில் மட்டுமல்லாது பல சமயங்களில் பள்ளி முடிந்தவுடன் கூட விளையாடுவோம். வகுப்புகள் நான்கு  மணிக்கு முடிந்துவிடுமென்பதால் 4 மணியிலிருந்து 5 - 5.30 வரை விளையாடுவோம். ஆறு மணிக்கெல்லாம் இருட்டத் துவங்கி விடுமென்பதால் கொஞ்ச நேரத்திற்கு முன்னாலேயே ரக்கட்டி விடுவோம்.
அந்தக் கபடி மைதானம் நல்ல செம்மண் சரளைக் காட்டில் ஒரு குழி போல் வெட்டி மணல் போட்டிருப்பார்கள் பல நேரங்களில் விளையாட்டு வகுப்பில் நாங்கள் செல்வது அங்குள்ள மைதானங்களில் கல் பொறுக்குவதற்குத்தான். குறிப்பாக மழை பெய்து முடிந்தவுடன், உயரத்திலிருந்து ஓடிவரும் நீர்  மைதானங்களை சரளைக் கற்களால் நிரப்பிவிடும். ஒன்றுக்கும் உதவாத கரடென்பதால்தான் தேவதானப்பட்டி ஜமீன்தார் தாராளமாகக் கொடுத்துவிட்டார் போலத் தெரிகிறது.
கண்ணன், வெங்கடேசன், மாரியப்பிள்ளை மகேந்திரன் இன்னும் பலர் விளையாடுவோம். பத்தாவது வரை அரைக்கால் டிரவசுர் தான் போடுவோம். இப்போதும் என் இரு முழங்கால்களிலும் பல  விழுப்புண்களைப் பார்க்கலாம். இதில் வெங்கடேசன் ஒரு புறமும் மாரியப்பன் மறுபுறமுமாக அணித்தலைவர்களாக இருப்பார்கள். கண்ணனும் நன்றாக விளையாடுவான். மாரியப்பிள்ளை பாடிச் செல்லும்போது மிகவும் ஆக்ரோசமாகச் செல்வான். எதிரில் உள்ளவர்கள் அவனை நெருங்க முடியாது. கோடு ஏறியவுடன் அவர்களை எல்லைக்கோடு வரை நெருக்கிச் சென்றுவிடுவான். அதன்புறம் திரும்பும்போது போக்குக்காட்டி மறுபடியும் பின் சென்று அந்தரத்தில் எகிறி பின்புறமாக ஒரு உதை விடுவான். அதில் பலருக்கு காயம் பட்டிருக்கிறது. பிடித்தாலும் விலாங்கு மீன் போல் துள்ளிவந்து விடுவான். அதனால் நான் எப்போதும் மாரியப்பன் அணியில் இருப்பேன் .அவன் வராவிட்டால் வெங்கடேசன் அணிக்குப்போய்விடுவேன் . ஜெயிக்கற அணியில் இருப்பதுதானே வீரம் .
பாடுவதை விட பிடிப்பது எனக்கு எளிது. கோட்டின் அருகே நின்றுகொண்டு பாடிவருபவர்கள் காலை, கோட்டின் மேல் வைக்கவிட்டு குனிந்து அப்படியே கெண்டைக் காலைப் பிடித்துவிடுவேன். அவன் காலை உதறுவதற்குள் மற்ற குழுவினர் அப்படியே ஓடிவந்து ஒரே அமுக்காக அமுக்கி விடுவார்கள். இந்த என் டெக்னிக் அணியில் அதிகம் பேர் இருக்கும்போது தான் எடுபடும். சில சமயங்களில் நான் தனியாக இருக்கும்போது  யாராவது பாடி வந்தால் நேரத்தை வீணடிக்காமல் ,எந்த சாகசத்திலும் ஈடுபடாமல் கையைத் தொட்டு அவுட்டாகி விடுவேன். எனக்கு எது எவ்வளவு முடியும் என்பதில் எனக்கு எப்போதுமே சந்தேகம் வந்ததில்லை. பெரிய ரிஸ்க்குகளை எடுத்ததுமில்லை. கபடியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் அப்படித்தான்.
கபடி தவிர டென்னிக்காய்ட் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதுதவிர எப்போதாவது ஷாட்பால்  விளையாடியிருக்கிறேன். அமெரிக்கா வந்தபோது இங்கு ஆடும் பேஸ் பால் கிட்டத்தட்ட அதே போல் இருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
கேரம், செஸ் போன்றவை பின்னர் கற்றுக் கொண்டேன். இப்போதும் என் வீட்டில் கேரம் போர்டு இருக்கிறது, எப்போதாவது விளையாடுவது உண்டு. ஆலயக்கேம்ப்புகள் வரும்போது அதனை எடுத்துச் சென்று  டோர்னமென்ட் போல விளையாடுவது உண்டு.
தேவதானப்பட்டியில் வடக்குத் தெருவில் தேவர் இளைஞர் அமைப்பு சார்பாக மாநில அளவில் கபடிப் போட்டி நடக்கும். அதற்கு பல ஊர்களிலிருந்து டீம்கள் வந்து இறங்கும். மதுரை காவல்துறை அணி சிறப்பாக விளையாடி கப்பை பலமுறை பெற்றுள்ளது. இந்த மாதிரி பெரிய போட்டிகளில் நான் பார்வையாளனாக கலந்து கொள்வதோடு நிறுத்திக்கொள்வேன் என்பதால்தான் இன்னும் முழுசாய் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
ஆனால் இவ்வாறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டியது என் வீட்டில் எங்கம்மா அப்பாவுக்குப் பின் நான் ஒருவன் மட்டும்தான். அடுத்த வாரம் திகில் கதையான தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் பற்றிச் சொல்கிறேன்.
-தொடரும்.



Monday, September 24, 2018

தவளை இனப்பெருக்கம் செய்வது எப்படி ?

Related image


வேர்களைத்தேடி பகுதி 26
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_17.html

அறிவியல் முனியாண்டி வாத்தியார் ஒரு கார்ட்டூன் போல இருப்பார். எப்போதும் மொட்டைத்தலை, மொட்டையென்றால் வழுக்கை அல்ல முடியை ஒட்ட வெட்டியிருப்பார். ஒட்டிய சட்டையும் அதைவிட தோலோடு ஒட்டிய பேன்ட்டும் அணிந்திருப்பார். அந்த பேண்ட்டும் கணுக்கால் வரைதான் இருக்கும். எப்போதும் ஒரு மந்தகாசமான புன்னகையுடன் இருப்பார். கோபம் வந்து பிரம்பால் அடிக்கும்போது கூட அந்தப்புன்னகை மாறாமல் இருக்கும். எனவே அவர் எப்போது கோபமாக இருப்பார். எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லவே முடியாது. பெரும்பாலும் மதிய நேரங்களில் அவர் வகுப்பு வரும். ஒன்பதாவது வகுப்பென நினைக்கிறேன். வெயிலால் தகதகக்கிற ஓட்டுக் கூரையின் கீழே சூடாக இருக்கும் டெஸ்க்குகளில் அதைவிட சூடான அறிவியலைச் சொல்லித்தரும் போது  எங்களுடைய மண்டையும் சூடாகித் தலை சுற்றும். அதனால்தான் அறிவியலை எனக்குப் பிடிக்காமலேயே போய்விட்டது போலிருக்கிறது.
அன்று அரையாண்டு பரீட்சைப் பேப்பரைக் கொண்டு வந்திருந்தார். எல்லோருக்கும் மண்டையும் உடலும் மேலும் சூடானது. சிலர் ஒற்றை இலக்க மதிப்பெண்கள், சிலர் பூஜ்யம் என சிலருக்கு  மைனஸ் மார்க்கும் போட்டுவிடுவார். நான் சரா சரியாக 50 லிருந்து 60 வரை வாங்குவேன். சில சமயங்களில் குறைந்தாலும் 40க்கு கீழ் குறைந்ததில்லை. மற்றவற்றில் எல்லாம் 70-80 என்று வாங்கும் நான் அறிவியலில் என்றுமே குறைந்த மதிப்பெண் தான். எனவே இவன் டாக்டராக ஆக முடியாதென எப்போதும் என் அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். “ஐயா ஆளை விடு சாமி”,ன்னு மனசுக்குள் சொல்லிக்கொள்வேன். இந்த மனசுக்குள் சொல்லிக் கொள்வது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. வேலையில் பாஸிடம், வீட்டில் பாஸிடம், ஆலயத்தில் பாஸிடம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அவ்வப்போது வாட்ஸாப்பில்,மாணவர்களின் வித்தியாசமான பதிலை, வெறும் வினாக்களை பத்தி பத்தியாக எழுதும் மாணவர்கள், சொந்தக்கதைகளை எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களை கெஞ்சியும், மிரட்டியும் எழுதும் மாணவர்கள் என்று பலபேரைப் பார்த்திருப்பீர்கள்.
இப்படி வித்தியாசமாக எழுதும் விடைகளை எல்லார் முன்னாலும் வாசித்துவிடுவார் முனியாண்டி. அதனால் தான்  எல்லோரும் மண்டை காய்ந்து உட்கார்ந்திருந்தோம் . பெண் மாணவிகளும் அங்கு இருப்பர் என்பதால் எங்களுக்கு மிகவும் அவமானமாய்ப் போய்விடும்.
என்முறை வந்தபோது என்னைக் கூப்பிட்டு கையை நீட்டச்சொல்லி ஒரு அடி அடித்தார். ஐயையோ ஊத்திக்குச்சு  போல என்று நினைத்துக் கொண்டே அடியை வாங்கிவிட்டு பேப்பரைப்பார்த்தேன் . பார்த்தவுடன், “சார் 55 மார்க் சார்” என்றேன் ஏன் அடித்தார் என்பது புரியாமல்.
“கரெக்ட்டாத்தேன் அடிச்சிருக்கேன். வாத்தியார் மகனுக்கு இதெல்லாம் பத்தாது", என்கிறார். என்னத்தைச் சொல்றது வாத்தியார் மகனாப் பிறந்தது என் குத்தமா சொல்லுங்க. மார்க் ஓரளவுக்கு பரவாயில்லை என்பதால் எனக்கு அவ்வளவாய் அவமானமாய் இருக்கவில்லை. ஆனாலும் உள்ளங்கை பழுத்தது ,வலித்தது .
அதன்பின்தான் அந்த சம்பவம் நடந்தது. “எழுவனம்பட்டி முத்துக்கருப்பன்”, என்று ஆசிரியர் சொன்ன போது, அவன் எழுந்து நின்று இரண்டு கைகளிலும் எச்சிலைத்துப்பி தேய்த்துவிட்டுக்கொண்டான். அடி வாங்க ரெடியாகிட்டான் போலத் தெரிஞ்சுது.
அவனுடைய வினாத்தாளை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு பகபகவென்று சிரித்தார். நாங்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் முழித்தோம். முத்துக்கருப்பன் கலவரமாக நின்று கொண்டிருந்தான். அவர் விடைத்தாளின் ஒரு பக்கத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். “டேய் எல்லோரும் கேளுங்கடா, தவளை இனப்பெருக்கம் செய்வதை விவரிக்க என்பது கேள்வி. அதுக்கு நம்ம முத்துக்கருப்பன் எழுதியிருக்கிறான் கேளுங்கடா”.
"ஒரு நல்ல நாளில் ஒரு ஆண் தவளையும் பெண்தவளையும் தனியாகப் போய்க் கொஞ்சநேரம் விளையாடும். அதன்பின் கொஞ்சம் இருட்டத் துவங்கியதும் ஆண் தவளை, பெண் தவளையின் முதுகின் மீது ஏறி சிறிது நேரம் உட்கார்ந்திருக்கும். அதன்பின் பெண்தவளையின் வயிறு வீங்கும். சுமார் 10 மாதம் கழித்து பெண் தவளை குட்டிகள் போடும்", என்பதை அவர் சத்தமாய்ப் படிக்கும்போது எங்களுக்கெல்லாம் சிரிப்புத்தாங்க முடியாமல் போனது. பெண்களுக்கெல்லாம் முகமெல்லாம் சிவந்து குனிந்து கொண்டனர்.
Related image

முத்துக் கருப்பனுக்கு மட்டும் ஒன்றும் புரியவில்லை. சரியாகத்தானே எழுதியிருக்கிறோம் என்று அவன் பல நாள் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அன்றிலிருந்து ஆசிரியர் முதற்கொண்டு எல்லோரும் அவனை முத்துக்கருப்பன் என்பதை விட்டுவிட்டு தவளைக்கருப்பன் என்று கூப்பிட ஆரம்பித்தோம்.
அதனை இன்று நினைத்தால் முத்துக்கருப்பனின் இன்னெசென்ஸ்  என்ற வெகுளி அல்லது அப்பாவித்தனம் தான் என்று தெரிகிறது. அவன் எழுதியது மட்டுமல்ல. அப்படித்தானே நடந்திருக்க முடியும் என்று அவன் நம்பினான். ஆசிரியர் பெயர் உண்மையான பெயர் என்றாலும் மாணவன் பெயரை மாற்றியே குறிப்பிட்டிருக்கிறேன். யாருக்குத் தெரியும் அவனே பெரிய அறிவியல் அறிஞனாக  இல்லை அறிவியல் ஆசிரியராக ஆயிருக்கலாம் இல்லையா?
இந்த மாதிரி பல மாணவர்கள் இருந்தார்கள் மிகுந்த விவரமுள்ள சிலர், ஒன்றும் தெரியாத பலர், நடுவில் இருந்த என்னைப்போல் சிலர் என்று தவளைக்கருப்பனின் விடையை நினைக்கும் போது எனக்கு இப்போதும் புன்னகை வருகிறது. குறிப்பாக "ஒரு நல்ல நாளில்" என்று அவன் எழுதியதை நினைத்தால் அவன் எவ்வளவு அப்பாவியாக இருந்தான் என்பதை நினைத்து எனக்கு மிகுந்த ஆச்சரியமாக  இருந்தது.
Indian village kids, Indian village children, Rajasthan village

அப்புறம் அந்த விடைத்தாளை  நான் வாங்கிப் பார்த்தேன். பல கேள்விகளுக்கு சொந்தமான விடைகளை எழுதிஇருந்தான். அதில் ஆச்சரியம் தரும் இன்னொரு தகவல் என்னவென்றால் முனியாண்டி ஆசிரியர் அந்த விடைக்கு 1/2 மதிப்பெண்கள் கொடுத்திருந்தார்.
பள்ளியில் நான் விளையாடிய  விளையாட்டுக்கள் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். விளையாட்டு என்றால் வெறும் விளையாட்டுதான். நீங்க நினைக்கிற எந்த விளையாட்டும் நான் விளையாடல, அதற்கு விவரமும் பத்தாது. சாமர்த்தியமும் இல்லை.
- தொடரும்.