Monday, March 14, 2016

பெங்களூர் பையனும் மங்களூர் தேவதையும்!!!!!!!!!


சீனாவில் பரதேசி பகுதி-4

இதன் முதல் மூன்று  பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்

          பகுதி  1 :  http://paradesiatnewyork.blogspot.com/2016/02/blog-post_22.html

Feel INN Restaurent

மதுபானத்தைப் பார்த்ததும் பகீரென்றது. நமக்கு டீ காபி குடிச்சே பழக்கம் கிடையாது .இதுல நானாவது விஸ்கியாவது ? . பார்த்ததுக்கே தலை கொஞ்சம் லேசா சுத்துச்சு. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுங்க . இருந்தாலும் சீனாவின் குளிருக்கு ஒரு முறை பருகிப்பார்த்தால்தான் என்ன என்று தோன்றிய ஆர்வத்தைஅடக்கிவிட்டு, அந்த அம்மாவுக்கு என்ன எடுத்துச் சொல்லியும் புரியாததால் பத்து நிமிடம் வெயிட் செய்தேன்.  ஜோஹன்னா  வந்ததும் சொன்னேன். அவள் புரிந்து கொண்டே, மதுவை உள்ளே எடுத்துச் சென்று வாஷ்பேசினில் கொட்டிவிட்டுப் போய்விட்டாள். அவள் அம்மா எடுத்துவந்த பில்லில் மதுவுக்கும் சேர்த்து சார்ஜ் செய்ததால், மீண்டும் ஜோஹன்னாவைக் கூப்பிட வேண்டியதிருந்தது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்று ஒரே திகிலாக இருந்தது.
அடுத்த நாள் எங்கு செல்லலாம் என ஜோஹன்னாவைக் கேட்டேன். "நாளை சீனப்பெருஞ்சுவர் செல்ல ஒரு டூர் இருக்கிறது போகிறீர்களா?’ என்று கேட்டாள். "வெரிகுட் இத இதத்தான் எதிர்பார்த்தேன்" என்றேன். "காலை உணவு மற்றும் மதிய உணவும் இலவசம்" என்றாள். "நான் என்ன, வேணான்னா சொல்லப்போறேன், ஆமா கைடு  ஆங்கிலம் பேசுவார்களா?" என்றேன். 'ஆமாம் கண்டிப்பாய்', என்றாள். உடனே புக் செய்துவிட்டு ரூமுக்குத் திரும்பினேன். அங்கே டிவி ரிமோட்டை எடுத்துப் பார்த்தேன். 120 சேனல்கள் இருந்தன. உடை மாற்றி நன்றாக உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொன்றாக திருப்பினேன். திருப்பினேன் திருப்பினேன், திருப்பிக் கொண்டே இருந்தேன். 120-ம் சீன சானல்கள்.
சரி செல்போனிலாவது மேய்வோம் என்றால் எதுவும் வேலை செய்யவில்லை. வெளியே திரும்பப்போய் வைஃபை பாஸ்வேர்டு வாங்கி திரும்பவும் ட்ரை செய்தேன். ம்ஹீம் அப்பவும் வேலை செய்யவில்லை. கேட்டபின்தான் சொன்னாள், கூகிள், யுடியூப், யாஹூ, ஃபேஸ்புக் போன்ற பல சமூக சாளரங்கள் சைனாவில் தடை பண்ணப்பட்டிருக்கின்றனவாம். அட கஷ்டகாலமே, இதுதான் கம்யூனிசம் போலிருக்குன்னு நினைத்துக் கொண்டே படுக்கப்போனேன்.
காலையில் 7 1/2 மணிக்கு பஸ் வந்துவிடும் என்பதால் அலாரம் வைத்து எழுந்து ரெடியாகி காலை உணவு எங்கே  என்றேன். அங்கேயே உள்ள ரெஸ்டாரன்டில்தான். என்றார்கள். டோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டியில் சிறிதளவு பட்டர் தடவி, கொஞ்சம் பழ ஜெல்லியைத் தடவும் போது, திராவிடன் ஒருவன் உள்ளே வந்தான். “ஹாய்”, என்றான் புன்சிரித்துக் கொண்டே. அவனுக்கும் இன்னொரு இந்தியனை, திராவிடனைப் பார்த்ததில் மகிழ்ச்சி போல இருக்கிறது. ஆவலை அடக்க முடியாமல், “தமிழா?” என்றேன். “இல்லை பெங்களூர், கர்நாடகா”, என்றான். ஆஹா பரவாயில்லை ஒரு இந்தியன் அதுவும் தென் இந்தியன் ஒருவனைப் பார்த்ததில், அதுவும் அவனும் சீனப்பெருஞ்சுவர் வருவதைக் குறித்து, நல்ல கம்பெனி கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தேன். “ஆமாம் உன்னை நான் இதுவரை பார்க்கவில்லையே”, என்றேன். "இரவு லேட்டாகத்தான் வந்தோம்". என்றான். "வந்தோமா அப்படியென்றால்?”, என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ஒரு ஆரிய தேவதை உள்ளே நுழைந்தது, அந்த இடமே வெளிச்சமானது. வந்து பெங்களூர்காரன் பக்கத்தில் அமர, பார்ரா இவனுக்கு அமைந்த அதிர்ஷ்டத்தை என்று நினைத்தேன். ஹனிமூனுக்கு சீனா வந்திருக்கிறார்கள் போல என்று நினைத்தேன். என்னை அறிமுகப்படுத்த,அவள் மிருதுவாய் கைகுலுக்கினாள். மங்களூர் பெண், போர்த்துக்கீசிய நிறத்துடன்,  நம்பெண்களின் லட்சணத்துடன்  இருந்தாள், பெயர் மிதுளா .
சாப்பிட்டு முடிக்கவும் பஸ்வரவும்  சரியாக இருந்தது.

Beijing wonderfull city
Beijing City by night

பீஜீங் நகரத்திற்குள் நுழைவதற்கு முன்னால் சுருக்கமாக அம்மாநகரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
1.    சீனாவின் தலைநகரான பீஜீங், உலகத்தின் மக்கள் தொகை அதிகமாக வாழும் நகரங்களில் ஒன்று.
2.    இது சீனாவின் வடபகுதியில் இருக்கிறது.
3.    மிங் டைனாஸ்டியின் போது (கி.பி 1401) இதன் பெயர் பீஜிங் என்று ஆனது அதன் அர்த்தம் வடக்குத் தலைநகர் என்பது.
4.    இதுதான் ஆங்கிலேயர் காலத்தில் பீகிங் என்றும் அழைக்கப்பட்டது.
5.    கடந்த எட்டு நூற்றாண்டுகளாக இந்நகர்தான் சீனாவின் தலைநகர்என்றாலும், இது மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது.
6.    2013ல் நடந்த கணக்கெடுப்பின்படி 2 கோடியே 12 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள்.
7.    2008ல் இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன மற்றும் 2022-ல் குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடக்க இந்நகர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

Beijing by Night
ஒரு சைனீஸ் கைட் உடைந்த, ஆங்கிலத்தில் எங்களை வரவேற்று அழைத்துச்சென்றான். பஸ் முழுவதும் வெள்ளைகள் இருந்தன. ஹவாயிலிருந்து ஒரு குடும்பம், லண்டனிலிருந்து ஒன்று, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒன்று, ஜெர்மனியிலிருந்து ஒன்று என்று பலநாடுகள் என்றாலும் எல்லோரும் வெள்ளை. அதுதவிர இந்த பெங்களூரைச் சேர்ந்த இருவர் அப்புறம் நான், ஒரு சீன டிரைவர் மற்றும் கைட்.  
எனக்கு முன்னிருந்த இரட்டை இருக்கையில் அந்த பெங்களூர் ஜோடி அமர, நான் அவர்கள் பின்னால் இரட்டை இருக்கையில் ஒற்றையாக அமர்ந்தேன், வேறு வழி.
சைனீஸ் கைட், முதலில் ஒவ்வொரு நாட்டினரையும் கைதட்டி வரவேற்றுவிட்டு, மடமடவென்று பேச ஆரம்பித்தான். அந்த சிங்கிலிஷ்  புரிவதற்கு கொஞ்சம் உன்னிப்பாய் கவனிக்க வேண்டியிருந்தது. சீனப்பெருஞ்சுவரின் வரலாற்றை விளக்கிக் கொண்டிருந்தான். நடுநடுவில் அவன் அடித்த ஜோக்குகளுக்கு யாரும் சிரிக்கவில்லை
நடுவில் ஒரு ஊர் வந்தது. குறுக்கில் மறைத்து டோல்கேட் போல ஒன்று இருந்தது. வழிகாட்டி சொன்னான், “இங்கே நகராட்சியின் விற்பனையகம் இருக்கிறது. இந்த வழிபோகும் அனைவரும் இங்கு இறங்கி கண்டிப்பாய் விற்பனையகத்திற்கு  போக வேண்டும்”, என்றான். கம்யூனிச நாட்டில் இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும் என்று நினைத்து, கண்டிப்பாய் பொருளையும் வாங்க வேண்டுமா ?” என்று நான் கேட்டேன். புன்னகையுடன், "தேவையில்லை, எதுவும் இங்கு வாங்க வேண்டாம், எல்லமே இங்குவிலை அதிகம்”, என்றான்.
வெளியே போய் விற்பனை அரங்கத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வழி நெடுகிலும் பிளாட் பாரத்தில் விற்ற பொருட்களையும் தவிர்த்து வேறு வழியில் வெளியே வந்து  பஸ்ஸீக்குள் ஏறி உட்கார்ந்தேன். எல்லாரும் வந்துவிட பெங்களூர் ஜோடியை மட்டும் காணோம். பின்னர் எங்கள் வழிகாட்டி மீண்டும் இறங்கிப் போய் அவர்களைத்தேடிக் கண்டுபிடித்து கூட்டிவந்தான். உள்ளே ஏறியவுடன் பெங்களூர்காரன் அதே இடத்தில் அமர, மங்களூர் தேவதை என் அருகில் வந்து அமர்ந்தது.


- தொடரும்.

Thursday, March 10, 2016

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே !!!!!!!!

படித்ததில் பிடித்தது


நா.முத்து நிலவன் - அகரம் வெளியீடு.

புதுக்கோட்டையில் நடந்த பதிவர் சந்திப்பில்தான், முத்துநிலவன் அவர்களை நேரில் சந்தித்தேன். ஆனால் முன்னரே அவரைப் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன் ஆனால் படிக்கும் வாய்ப்பு இந்தப் புத்தகத்தின் மூலம்தான் வாய்த்தது.
முத்துநிலவன் அவர்களுக்கு பல கோணங்கள் உண்டு. எழுச்சிப் கவிஞர், தலைமை ஆசிரியர் , பேச்சாளர், பதிவர் என்பதெல்லாம் தாண்டி, அவர் ஒரு ஆசிரியர் அதுவும் தமிழாசிரியர் என்பதுதான் என்னை மிகவும் கவர்ந்த அம்சம்.
கவிஞர் முத்துநிலவன் 
இந்தப்புத்தகம் முழுவதும் தமிழாசிரியரின் எண்ண ஓட்டங்கள், தமிழின் மேலுள்ள பற்று, ஆங்கில மோகத்தின் மேலுள்ள வெறுப்பு, பள்ளிக் கல்வியின் பிற்போக்குத் தனத்தின் மேலுள்ள கசப்பு, ஆதங்கம், மாணவர்களின் எதிர்காலத்தைக் குறித்த கவலை என்று உண்மை உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்டுரைகள் காணப்படுகின்றன. ஆங்காங்கே வெளிப்படும் அவர் நகைச்சுவை உணர்ச்சி ரசிக்க வைத்தன.
புத்தகத்தைப் படிக்கும்போது அதே உணர்வு, என்னையும் தொற்றிக் கொள்வது வெகு இயல்பாகவே நடந்தது. ஒரு ஆசிரியக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் இருவழித் தாத்தாக்கள், பாட்டி, அம்மா, அப்பா, தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அத்தைகள், மாமாக்கள் மர்றும் என் மனைவி முதற்கொண்டு என் குடும்பத்தில் ஏராளமான ஆசிரியர்கள் உண்டு. இதில் என் அப்பா விசேஷமானவர். அவருக்கு மாணவனாகவும் இருந்த என் அனுபவத்தின் மூலம் முத்துநிலவன் என்ற ஆசிரியரிடம் என் அப்பாவின் உழைப்பு, சிந்தனை மற்றும் முற்போக்கு எண்ணங்களை அப்படியே பார்க்க முடிந்தது.
with Muthu Nilavan and Prabakar at Pudukottai 

   அந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்த அம்சங்களை வழக்கம்போல் புல்லட்பாய்ண்ட்டில் தருகிறேன்.
1.    "முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே" என்ற தலைப்பிலேயே அவர் தன் எண்ணத்தை அருமையாக வெளிப்படுத்தி யோசிக்க வைத்துவிடுகிறார்.
2.    "என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்" என்று சொல்லி இன்றும் பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் மெக்காலே கல்வியைச்சாடி, அது கிளிப்பிள்ளைகளின் கல்வி அதனால் அறிவு வளர சாத்தியமேயில்லை  என்கிறார்.
3.    மேலும் IPS, IAS, ITI, AIMS ஆகியவற்றில் படித்தவர் கூட மெக்காலேவின்  செல்லப்பிள்ளைகள் என்று சொல்லுகிறார்.
4.    ஆசிரியர் உமா மகேஸ்வரியைக் கொன்றது ஒரு மாணவன் மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் அதில் பங்கு இருக்கிறது என்கிறார் (Partners in crime)
5.    ஆசிரியர் சங்கங்களின் கடமை வெறும் ஊதிய உயர்வுக்கு போராடுவது மட்டுமல்ல என்று இவர் சொல்வது எத்தனை பெரிய உண்மை. அவர்களுடைய தலையாய நோக்கம் நல்ல கல்விக்காகவும் போராடுவதாக அல்லவா இருக்க வேண்டும்.
6.    நம்பள்ளிகள், "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாடலை ஒப்பிக்காமல் விளையாடப்போன மாணவனுக்கு தண்டனை தரும் பள்ளிகளாகவே இருக்கின்றன.
7.    நாளை பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான அவர்களின் விமர்சனம்தானே.
8.    Progress card என்பது படிப்புக்கு மட்டுமே இருப்பதன்றி மற்ற திறமைகள், விளையாட்டு போன்றவற்றையும் மதிப்பிடுவதாக இருக்க வேண்டும் என்கிறார்.
9.    தொலைக்காட்சியின்  ரியாலிட்டி ஷோக்களில், 5 வயதுக் குழந்தை காமரசம் சொட்டும் பாடலை முக்கி முனகிப்பாடுவதை ரசிக்கும் அளவுக்கு நாம் தரம் தாழ்ந்துவிட்டோம்.
10.  சுவையாக இருக்க வேண்டிய கல்வி சுமையாக மாறிப்போனதைப் பத்தி யாராவது சிந்தித்திருக்கிறோமா?
11.  வாழ்க்கையைக் கொடுக்கும் கல்வி மருந்தாகவும், வாழ்க்கையைக் கெடுக்கும் படங்கள் விருந்தாகவும் இருப்பதற்கு காரணமென்ன?
12.  விருதுகளை விண்ணப்பித்து வாங்கலாமா? எப்போதும் மெளனமாக இருப்பதற்காகத்தான் நல்லாசிரியர் விருதா?  
13.  மனிதரைப் படித்தால்தானே மனிதன் ஆக முடியும், பன்முகத்திறமையை வளர்க்காது பள்ளி கல்லூரி வாழ்க்கைகள் முடிந்துவிடும் அவலத்தை சுட்டிக் காட்டுகிறார்.
14.  தமிழ் உச்சரிப்பு, எழுத்துப் பிழைகளைத்தவிர்க்க எளிய உபாயங்களைச் சொல்லுகிறார். இலக்கணம் ஒரு பெருஞ்சுமையாகவே இருக்கின்றன என்கிறார்.
15.  பெயர் எழுத்துகளை அப்படியேதான் எழுதவேண்டும், மாற்றி எழுதவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
16.  விடைத்தாள்கள் திருத்தும்முறை கணினி முறையில் வர வேண்டும் என்கிறார்.
17.  அரிச்சந்திரன் கண்ணகி கதைகள், கற்புடைமை, சாதி,குலம் என்பவை பிற்போக்குத்தனம் என்று சாடுகிறார்.
18.  பாடத்திட்டத்தில் ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கல்வியை சுமையானது என்பதை மாற்றி சுவையானதாக ஆக்கலாம் என்கிறார்.
19.  தமிழ் வழிக்கல்வி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார்.
20.  தமிழில் ஏன் பலர் தோல்வியடைகிறார்கள் என்பதை விளக்குகிறார்.

இவர்களைபோலுள்ள ஆசிரியர்கள் பாடத்திட்டக்குழுவிலோ, பாடங்களை எழுதும் குழுவிலோ இல்லாதது கல்வித்துறைக்கே துரதிர்ஷ்டம் என்று சொல்லுவேன். மாணவர், ஆசிரியர் மட்டுமல்ல அதிகாரிகளும், அமைச்சர்களும் படிக்க வேண்டிய நூல் இது.முற்றும் 
முற்றும் .


Monday, March 7, 2016

மஞ்சள் இளவரசியும் மது பானமும் !!!!!!!!!!!!!!

சீனாவில் பரதேசி - பகுதி 3

இதன் முதல் இரண்டு பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்

Feel Inn, Beijing.

முகத்தில் அடித்த குளிரையும் மீறி மூக்கில் ஒருவித ரசாயன நெடிபோல் ஒன்று ஏறியது. சில நிமிடங்களிலேயே மூக்கு எரிவது போல் தெரிந்தது. அவசரமாக உள்ளே நுழைந்தால் அந்த சீனப்பெண் கை இரண்டையும் தூக்கிக் கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தாள். முகம் கொள்ளா புன்னகையுடன் வரும் அவள், கிட்டத்தட்ட என்மேல் விழுந்து, என் கைப் பையைப் பிடுங்கினாள்.  ஆஹா பையை நான் தரவில்லை. என் மனைவி வாங்கிக் கொடுத்த ரோலக்ஸ் கடிகாரம் உள்ளே இருந்தது. விலையை மட்டும் கேட்காதீர்கள்.  ஆனால்  கர்நாடக முதல்வர் சீதாராமையா கட்டும்  வாட்சை விட விலை கம்மிதான்.
Hublot watch worth 70 Lakhs in Indian Rupees.

அவளுடைய உற்சாகம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதுதான் வேறு  ஏதோதோ  சந்தேகங்களையும்  கொடுத்தது. ஒரு வேளை நான்தான் அங்கு வந்த முதல் கெஸ்ட்டோ என்றும் சந்தேகப்பட்டேன். ஆனால் பின்னர் தெரிந்தது, அங்கே எல்லா ரூமும் நிரம்பிவிட்டது. நான்தான் கடைசியாக இருந்த ஒரு ரூமுக்கு வந்த ஆள். ஒரு வேளை ஹோட்டல் நிரம்பிவிட்டது என்று சந்தோஷமாகக்கூட   இருக்கலாம் .
"வெழ்கம் து ப்பீஜிஸ் ஐ ஆம் ஜோகன்னா" என்றாள். அவள் ஆங்கிலம் பேசியது அதைவிட ஆச்சரியமளிக்க, நல்லவேளை தப்பித்தேன், பீஜிங்கில் 5 நாட்களை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது. அந்த விடுதியை நடத்திவருவது ஒரு நடுவயதுப்பெண்ணும், அவர் மகளான இந்தப்பெண்ணும்தான் என்று தெரிந்துகொண்டேன். நிறத்திலும் சரி குணத்திலும் சரி தங்கமான பெண்.மணத்தில் தான் கொஞ்சம் கோளாறு.ஆனால் அங்கே இருந்த எல்லா சீனர்கள் மேலும் அதே வாடை அடித்தது .போகப்போக பழகிவிடும் என்று நினைத்தேன் .ம்ஹூம் கடைசி வரை என்னால்  அதை சகிக்க முடியவில்லை .
With Johanna and her Mom

உள்ளே நுழைந்தவுடன் பார்த்த ஒரு அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏர்போர்ட்டுக்கு 160 யுவான் என்று எழுதியிருந்தது. ஆஹா 360க்கு  தப்பித்து 260 கொடுத்தாலும் அதுவும் அதிகம் ஆகிவிட்டது அப்போதுதான் தெரிந்தது.  ஜாக்கிரதை மக்களே, திரும்பிப்போகும்போது நான் 80 யுவான் மட்டுமே கொடுத்தேன். சைனாவில் பேரம் என்பது மலைக்கும் மடுவுக்கும் என நான் புரிந்து கொண்டேன்.
என் சூட்கேஸ்களை அவள் தர தர வென்று இழுத்துக் கொண்டு முன்னால் போக அவள் பின்னால் ஆடு போல் நடந்து சென்றேன். கிரவுண்ட் ஃப்ளோரில் மொத்தம் 2 வரிசையில் ரூம்கள் இருந்தன. சில ரூம்கள் மட்டுமே பாத்ரூம் அட்டாச்சுடு.  மற்றவை வெறும் அறைகள் அல்லது டார்மிட்டரி என்று சொல்லப்படும் பொது அறைகள். அவர்கள் குளிப்பதற்கும் மற்றவற்றுக்கும் வெளியே பொது கழிப்பறைகள் மற்றும் குறுகிய அறைகள் இருந்தன.
போகும் வழியில் இடதுபுறமும் ஒரு பெரிய வாஷ் பேசின் இருந்தது. அதற்குள் தலையைவிட்டபடி ஒரு பெண் இருந்தாள். அவளுடைய உடம்பு எங்கள் வழியை மறைக்க, ஜோஹன்னா அவளுடைய முதுகில் தொட்டு என்னவோ சீனமொழியில் சொல்ல, அவள் நிமிர்ந்தாள். நீண்ட கூந்தலில் ஈரம் சொட்டச் சொட்ட தலை நிமிர்ந்து கூந்தலை ஒதுக்கிக் கொண்டே புன்னகைத்தாள். ஏதோ  ஒரு பாரதிராஜா படத்தில் பார்த்த சீன் ஞாபகம் வந்தது.  தன் கூந்தலை கழுவிக் கொண்டிருந்தாள்போல. முடிதவிர எல்லாம் மஞ்சள் நிறம், பற்கள் உட்பட. அது போல பல மாணவிகள் அங்கே தங்கியிருக்கிறார்கள் என பின்னர் அறிந்தேன்
ரூமின் உள்ளே நுழைந்தேன். மேலே ஒரு ஹீட்டர் நல்லவேளை வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது.ஒரு சிறிய அறை ஒருவர் படுக்க ஒரு கட்டில், கட்டிலின் ஒரு புறம் ஒரு சிறிய சைட் டேபிள், அதன் மேல் ஒரு இரவு விளக்கு, எதிரே சுவரில் டிவி. உடைகளை மாட்டுவதற்கு ஒரு அலமாரி. அவ்வளவுதான் ரூம். ஒரு சின்னப் பையன்( ?) தங்குவதற்கு அதுவே தாராளம். பெட்டிகளை ஓரமாக வைத்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தேன். பாத்ரூமில் ஒரு சின்ன வாஷ்பேசின், ஒரு டாய்லட் இருந்தது. ஆனால் குளிப்பதற்கு வசதி இல்லை.
அதைப் பார்த்துவிட்டு ஐயையோ என் நிலைமையும், வழியில் பார்த்த பெண்போலத்தான் குளிக்கணுமோ என்று பயந்து உடனே அவசரமாக வெளியே வந்து, "ஜோகன்னா பாத்ரூமில் குளிக்க வசதியில்லை”, என்று சொன்னேன். அவள் அங்கே தானே இருந்தது என்று சொல்லி என் முதுகுப்புறத்தைப்பற்றி தள்ளிக் கொண்டே வந்தாள், விளையாட்டுப் பிள்ளை. உள்ளே வந்து பாத்ரூமில் நுழைந்து, “இதோ இருக்கிறதே”, என்றாள். அவள் காட்டிய வலப்புறத்தில் மேலே ஹீட்டர் போல ஒரு வஸ்துவில் ,குழாய் போல ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது. டாய்லட் சீட்டை மூடிவிட்டு, “நீ உட்கார்ந்து கொண்டே குளிக்கலாம்", என்றாள். அந்த சிறிய ரூமில் அதுவே இரண்டும் எனப்புரிந்து கொண்டேன். குளிக்கும் போது டாய்லட் கவரை மறக்காமல் மூடச் சொன்னாள். இல்லாவிட்டால் குளிக்கும் நீர் டாய்லட் உள்ளே போய் நிரம்பிவிடும் அபாயம் இருக்கிறது.  
மணி அப்போதே இரவு ஏழு மணியாகியிருந்தது. உள்ளே  உடைமாற்றி ஒரு குளியல் போட்டுவிட்டு  ரிஷப்ஷனை ஒட்டி இருந்த சிறிய ரெஸ்டாரண்டுக்கு வந்தேன். ரெஸ்டாரண்ட் முழுவதும் ஏற்கனவே  தங்கியவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருந்தன.  
மேலே சைனாவின் காகித பலூன்கள் தொங்கிக் கொண்டிருந்தன. “ஹாய்”  என்ற நட்புக்குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தால், வலது மூலையில் உள்ள உயரமான  மேஜையில் ஐரோப்பிய தேவதை ஒன்று எழுந்தருளியிருந்ததை  அப்போதுதான் பார்த்தேன்.
'இந்தியாவா?, என்று கேட்க, 'ஆம் ஆம்என்றேன்.பாம்பேயில் ஒரு மாதம் தங்கியிருந்ததாகச் சொல்லி, நமஸ்தே என்று  கைகூப்பினாள். நானும் நமஸ்தே என்று சொன்னேன்.
Feel Inn Restaurent
அந்த பரதேவதை ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருக்கும் ஸ்பானிய குயில். முதல் ஆறு மாதம் வேலை செய்வது, மீதியுள்ள ஆறுமாதம் தனியாகவே உலகம் சுற்றுவது. வயது ஒரு 20 லிருந்து 25க்குள் இருக்கும். அதற்குள் ஒரு டஜன் நாடுகளைப் பார்த்துவிட்டாள். 
"ரெஸ்டாரண்ட் உணவு எப்படி ?" என்று கேட்டேன். “நாத் பேத்”, என்றாள். ஸ்பானியப் பெண் என்றாலும் ஆங்கிலம் நன்றாகவே பேசினாள். பீஜிங் வந்து ஏற்கனவே 15 நாட்கள் ஆகிவிட்டனவாம். எனக்கு உதவி செய்யமுடியுமா? என்று கேட்பதற்குள் குட்நைட் சொல்லிவிட்டு அவள் சென்றுவிட,
ஜோகன்னாவின் அம்மா வந்து மெனுகார்டைக் கொடுத்தாள். “எந்த இரவு உணவு நன்றாக இருக்கும்”, என்று கேட்டு அவளுக்கு ஒன்றும் புரியாததால், " கிவ்மி சம்திங் டு  டிரிங் ஃபர்ஸ்ட்”, என்று வார்த்தையிலும் சைகையிலும் சொன்னேன். சடுதியில் ஒரு உயரமான கிளாஸில் விஸ்கி வந்தது.

தொடரும்.

Thursday, March 3, 2016

ரஜினியின் சிறந்த டூயட் பாடல் !!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா :பாட்டு 29 
கண்மணியே காதல் என்பது
Aarilirunthu Arubathu Varai
இளையராஜா இசையமைத்த “ஆறிலிருந்து அறுபது வரை” என்ற படத்தில் வரும் பாடல் இது. ரஜினிக்கு அமைந்த படங்களிலேயே "ஆறிலிருந்து அறுபதுவரை" ஒரு வித்தியாசமான படம் என்பது போல அவருக்கு அமைந்த சிறந்த டூயட் பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.பாடலைக்கேட்போம்.


பாடலின் சூழல்:
காதலனும் காதலியும் பாடும் பாடல், காதலில் ஆரம்பித்து, கல்யாணம் வரை நீளும் பாடல் இது.
இசையமைப்பு:
Add caption
ரயில் பயணம் செய்யும்போது பாடுவது போல் அமைக்கப்பட்ட இந்தப் பாடலில் வாழ்க்கைப்பயணம் ஆரம்பிப்பது போல் பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது. காதலில் ஆரம்பித்து, கல்யாணம் பின் பஞ்சனை என்று பாடலும் பயணம் செய்கிறது. கேட்பவர்களும் அதனுடன்  பயணம் செய்யும் ஒரு சுகமான அனுபவம் இந்தப்பாடல் மூலம் கிடைக்கிறது.
டிரம்சில் பயணம் ஆரம்பிக்க, எக்கோ எஃபக்டுடன் கிடார் லீட் ஒலிக்க வழக்கம்போல் வயலின் குழுமம் இசைக்க, பெண்குரலில் "கண்மணியே காதல் என்பது" என்று ஒரு நீண்ட BGM வருகிறது. ஆண்குரல் பெண்குரல் கோரஸ்கள் இணைக்கப்பட்டு முடியும்போது முதல் சரணம், "மேளம் முழங்கிட” என்று ஆரம்பிக்கிறது. முதல் சரணம் முழுவதும் பாடும் குரல்களுக்கு மேலேயே கோரஸ்குரல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. 2-ஆவது BGM-ல் தவில், நாதஸ்வரம் முழங்க அநேகமாக திருமணம் நடக்கிறது என்று நினைக்கிறேன். அதன்பின் முதலிரவு சீனாகத்தான் இருக்கவேண்டும். 2-ஆவது சரணம் அதனை உறுதிப்படுத்த, ஒரு நல்ல இசைப் பயணம் அருமையாக முடிகிறது.  
பாடலின் வரிகள்:
கண்மணியே காதல் என்பது கற்பனையோ,
 காவியமோ, கண் வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
,பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட  
காலமும் வந்ததம்மா  நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்
பாடிடும் எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க, சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது
 காரணம் நீ அறிவாய் ,தேவையை நான் அறிவேன்
நாளொரு வேகமும்  மோகமும் தாபமும்
வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க 
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
 தோரணமாய் ஆடிடுவேன்

திரை உலகுக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம்
Ilayaraja with Panchu Arunachalam

பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம் அவர்கள். பாடலின் மெட்டுக்கு அதிகமாக வார்த்தைகள் தேவைப்படும் இந்தப்பாடலுக்கு பொருத்தமான வார்த்தைகளை கச்சிதமாக அமைந்திருகிறார். "காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ", என்பதில் அவரின் கவித்துவம் வெளிப்படுகிறது. ஆயிரம் காலம் என்பது அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைதான்.மற்ற வரிகளும் ஆங்காங்கே அமைதியாக அமர்கிறது.
பாடலின் குரல்கள்:
Ilayaraja with Janaki and SPB
SPB, ஜானகி பாடிய இன்னுமொரு மறக்க முடியாத டூயட் பாடலிது. இந்தப்பாடலைப் பாடுவதற்கு நிறைய மூச்சு வேண்டும். இவ்விருவருக்கும்தான் அந்தப்பிரச்சனையே இல்லையே. அதோடு இந்தப்பாடலில் வரும் ஆண், பெண் கோரஸ்கள், ஹம்மிங்குகள் இவர்கள் குரலுக்கு மெருகூட்டுகின்றன. மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் காதலன் காதலிபாடும் அந்த மூடை மெட்டும்  இவர்களின் குரலும் நன்றாகவே வெளிப்படுத்துகின்றன.
இந்தப் பாடலின் வரிகள் போல, ஆயிரம் படங்கள் கண்ட இளையராஜாவின் இசையும் ஆயிரம் காலமும் வாழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- அடுத்த மாதம் இன்னுமொரு பாடலின் மூலம் சந்திக்கும் வரை விடைபெறுவது பரதேசி அட் நியூயார்க்.

-தொடரும்.

Monday, February 29, 2016

சீனாவில் முதல் ஏமாற்றம் !!!!!!!!!!!

சீனாவில் பரதேசி - பகுதி -2
Velupillai Prabhakaran.jpg
பிரபாகரன்
" பிரபாகரன்   உயிரோடுதான் இருக்கிறார் என்று  தமிழ்நாட்டில் வைகோ போன்ற சிலர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  நீங்கள் உள்ளுர்க்காரர் என்பதாலும் தமிழ் என்பதாலும், அங்கே என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா?" ,என்றேன்.
மாந்தன் சொன்னார்,  "பிரபாகரன் வீரசொர்க்கம் அடைந்தார்", என்றுதான் நாங்கள்  நினைக்கிறோம். ஆனால் அந்த மாவீரருக்கு சாவு இருக்கிறதா என்ன ?.  பிரபாகரன் என்ற  லெஜண்டுக்கு சாவில்லை", என்றார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனாலும் இலங்கை போகும் திட்டம் இருந்ததால் நாமே நேரில் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டேன் .
With Maanthan in Doha Airport

இப்படி மீதியான நேரம் சுவையாகவே கழிய, மறுபடியும் விமானம் ஏறி மதியம் 2 மணியளவில் பீஜிங் வந்து சேர்ந்தேன். அந்த நிமிடத்திலிருந்து பிரச்சனை  ஆரம்பித்தது வேறு என்ன பிரச்சனை, மொழிப்பிரச்சனைதான். விமான நிலைய அலுவலர்கள், போலீஸ்காரர்கள், ஏன் மிலிட்டரி ஆட்களுக்குக்  கூட ஆங்கிலம்  ஒரு அச்சரம் தெரியவில்லை. அவர்களுக்குத்தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தை  "நோ இங்கிலிஸ்"  என்பது தான். ஆனால்  அவர்களுடைய மிடுக்குக்கு மட்டும் பஞ்சமில்லை.
Beijing Airport

ஆட்டு மந்தை  போல் கூட்டத்தோடு  கூட்டமாக இமிக்ரேஷனில் நின்றேன்.ஏற்கனவே  பாஸ்போர்ட்டில் விசா அடித்திருந்த பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு, என் முறை  வரும்போது நீட்டினேன். நல்லவேளை எந்தக்கேள்வியோ  பதிலோ ஒன்றுமில்லை. ஒரு புன்னகை இல்லை, ஒரு வரவேற்பு இல்லை. இறுகிய முகத்துடனேயே  கொடுத்த பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். என்ன நாடு இது ?. கம்யூனிச நாடு என்பதற்காக இப்படியா? ஒருவேளை எனக்கு வாய்த்த ஆள்தான் அப்படியா என்று சுற்றி முற்றிப்பார்த்தால், எல்லாக் கவுன்ட்டரிலும்  அதே கதைதான். ஒரு பேச்சு மூச்சு         காணோம். அங்கே  வழிகாட்டுவதற்கும் யாருமில்லாததால் நானும் கூட்டத்தோடு போனேன். கீழிறங்கி அங்கே இருந்த ஒரு டிரைனில் ஏறி பெட்டிகளை எடுக்கும் இடத்திற்கு வந்தேன். ஒரு டிராலியில் பெட்டிகளை அடுக்கி எடுத்து, டாக்ஸி, கேப், கார் ஹோட்டல் டிராப் என்று பலவிதத்தில் கேட்டுக் களைத்து நின்றபோது, 'இன்ஃபர்மேஷன் டெஸ்க்' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைப் பார்த்து அவசர அவசரமாக  அங்கு சென்றேன்.
Beijing Capital International Airport Terminal 3 is one of the world’s most environmentally sustainable airport terminal buildings.(c)PID
Beijing Airport - Aerial view


அங்கு உட்கார்ந்திருந்த ஒரு முதிய பெண், "இவன் எதுக்கு இங்க வரான் ?"  என்று நினைப்பது போலவே என்னைப் பார்த்து, வேண்டா வெறுப்பாக மறுபுறம் திரும்பியது. நானும் வம்படியாகப் போய், "என் ஹோட்டல் போக வாடகைக்கார் வேண்டும்" என்றேன். "நோ இங்கிலிஸ்" என்று சொன்னார். எனக்கு கெட்ட கோபம் வந்துவிட்டது. “why the hell then you are sitting here ?" என்று கத்தியபோது, உடனே என் மனம் சொன்னது" டேய் பைத்தியக்கார ஆஃல்பி, நீ இருப்பது கம்யூனிச நாடு கொஞ்சம் அடக்கிவாசி", என்று.  
அப்போது வாலண்டியர் என்று போட்டு ID கார்டு அணிந்த ஒருவன் என்னிடம் வந்தான். "யு நீட் எனி ஹெல்ப் ?".
வாடா சாமி உன்னைத்தான் தேடிட்டிருந்தேன் என்று சொல்லிவிட்டு, கைகுலுக்கிவிட்டு, “ஹோட்டலுக்குப் போக வேண்டும், கவர்ன்மென்ட் டாக்சி ஸ்டேன்ட் எங்கேயிருகிறது ?", என்றேன். அவனுக்கு கவர்ன்மென்ட்  என்ற வார்த்தையை எத்தனை முறை விளக்கியும் புரியவில்லை. அதன்பின்னர் உடைந்த ஆங்கிலத்தில் சொன்னான், "எங்கே போவதாய் இருந்தாலும் சீனமொழியில் எழுதி வைத்துக்கொள்", என்று.
Top 5 best airports in the world ?
என்னுடைய “ஃபீல் இன்” அட்ரஸை முதல்வேலையாக அவனிடம் கொடுத்து சீன மொழியில் எழுதிக் கொண்டேன். பின்னர் அவன் உதவியுடன், டாலர்களை சீன யுவான் - ஆக (yuan) மாற்றிக்கொண்டேன், ஒரு டாலருக்கு 6 யுவான். பின்னர் அவன் யாரிடமோ போனில் பேசிவிட்டு சொன்னான், “உங்கள் ஹோட்டலுக்கு போக 360 யுவான் ஆகும்”, என்று. அது ஏர்போர்ட்டிலிருந்து தூரமாம். நானும் சரியென்றதும் என்னுடைய பெட்டிகளில் ஒன்றைக் கைப்பற்றிக் கொண்டு விறுவிறு வென்று நடந்தான். அவன் பெட்டியோடு போய்விட்டால் என்ன செய்வது என்று அவனோடு ஓடினேன். ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தோம். சரியான குளிர்காற்று முகத்தில் தாக்கியது. ஆஹா இதற்கு நியூயார்க்கே பரவாயில்லையே என்று நினைக்குமளவிற்கு குளிர். அதோடு காற்றில் ஒரு காரமான மணம். சுவாசிக்கும்போது மூக்கு சற்றே எரிந்த மாதிரி இருந்தது.
20 நிமிடங்கள் காத்திருந்தும் டாக்ஸி வராததால், எப்போது வரும் என்று அவனைக் கேட்டேன். இதோ வருகிறது இதோ வருகிறது என்று சொல்லி இன்னும் 10 நிமிடங்கள் ஓடிவிட, நான் குளிரில் கிட்டத்தட்ட விரைத்துவிட்டேன். பற்கள் தாளமிட, தாடைகள் உறைய, மூக்கு வேறு மிகவும் எரிந்தது. அதற்கு மேல் தாங்க முடியாமல், அவனிடம் சொன்னேன், "அடேயப்பா என்னால் தங்க முடியவில்லை, நான் மீண்டும் உள்ளே செல்கிறேன்" என்றேன். “320 கொடுங்கள் போதும்”, என்றான். அப்போதுதான் எனக்குச் சந்தேகம் தட்ட " உண்மையில் இவன் யார் ?", என்று நினைத்துவிட்டு, மடமடவென்று என் பொருட்களைக் கைப்பற்றி இழுத்துக்கொண்டே மீண்டும் உள்ளே நுழைந்தேன்.அங்கே ஒரு சீனப் போலிஸ்காரன் நின்றிருந்தான். நான் அவனை நோக்கிப் போவதைப் பார்த்த அந்த தன்னார்வலன் (volunteer) அப்படியே நழுவினான். அப்போதுதான் தெரிந்தது, அந்த தன்னார்வலன் நன்னார்வலன் அல்ல என்று. நல்லவேளை நஷ்டம் எதுவும் இல்லை என்று தேற்றிக்கொண்டு, அந்த போலிஸ்காரனிடம் சீனமொழியில் எழுதியிருந்த என் ஹோட்டல் அட்ரஸை காட்டி சைகையில் போகவேண்டும் என்று சொன்னேன். அவன் மறுபுறம் உள்ள எஸ்கலேட்டரைக் காட்டினான். அது கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே டாக்சி சர்வீசஸ் என்று எழுதியிருந்ததைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சுடன், சென்று என் அட்ரஸைக் காட்டினேன். 260 யுவான் என்றார்கள். ஆஹா நல்வேளை கொஞ்ச நேரத்தில் நூறு  யுவானை இழந்திருப்பேன்.ரசீது கொடுத்துவிட்டு, அவர்களே கொண்டுவிட்டு டிரைவரிடம் அட்ரஸைக் காட்டி போகச் சொன்னார்கள்.
டிரைவரிடம் பல முறை பேச முயற்சி செய்தும், அவன் மூச்சுக்கூட  விடாததால் முற்றிலும் கைவிட்டு, மெளனத்தைக் கடைப்பிடித்தேன். 40 நிமிட பயணமும் மெளனமாகவே கழிந்தது. வெளியே பெரும் கட்டிடங்கள் தெரிந்தன. ஆனால் எல்லா இடமும் ஒரு சாம்பற்கலரில் இருந்தது. சந்துக்குள் இருந்த என் ஹோட்டலுக்குள் நுழைந்தேன். நுழைந்ததும் என் கண்ணில் பட்டது, ஏர்போர்ட் டிராப் 160 மட்டும் என்று. அட இங்கேயும்   100 யுவான் ஏமாந்து விட்டேனே என்று நொந்து போனேன் .பிறகு பரவாயில்லை 200 போக இருந்த இடத்தில் நூறுதானே போனது என்றெண்ணி மனதை தேற்றிக்கொண்டேன் .அதற்குள் உள்ளிருந்து ஒரு விடலைப் பெண் என்னை நோக்கி இரு கைகளையும் விரித்து   நீட்டிக்கொண்டு  ஓடிவந்தாள். ஃபீல் இன் என்றால், அய்யய்யோ ஒரு வேளை ஒரு மாதிரியான இடமோ  என்று பயந்து நின்றேன் .

தொடரும்