Friday, May 3, 2013

வசந்த காலம் : ஒரு டைவர்ஸ் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்



ஒரு வழியாக நீண்ட நெடிய குளிர்காலம் கொஞ்சம் முடிவுக்கு வர ஆரம்பித்துள்ளது. வசந்த காலம், குதூகலமாய் ஆனால் மிகமிக மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கே மெல்லிய பச்சை தெரிகிறது. டூலிப்  மலர்கள் பூத்துள்ளது. இதுல விசேஷம் என்னன்னா, இங்க மரங்களில் முதல்ல இலை வருவதில்லை, முழுக்க முழுக்க பூக்கள்தான் பூக்கிறது. அது உதிர்ந்த பின்தான் இலை வருகிறது. மரங்கள் பூக்களை உதிர்த்து , அலர்ஜிகளை விதைக்கும்  காலம் இது. ஆடைக்குறைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து விட்டது .MTA பஸ் /டிரைன் டிரைவர் துவங்கி , NYPD போலிஸ் ஆபிசர்களும் , ஷார்ட்ஸ்  அணியும் நேரம்  இது .

இரவு  எட்டு மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கிறது .நல்ல பழ வகைகள் வரத்துவங்கியிருக்கின்றன. குறிப்பாக பெரி வகைகளான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பிளாக்பெர்ரி, புளுபெரி. அட நம்ம வாழைப்பழம் கூட பெர்ரி வகையாங்கோ.
தலை நகர் வாஷிங்டன் நகரில் நடக்கும் "செர்ரி பிளாசம் " ( cherry Blossom ) திருவிழா உலகப்புகழ் வாய்ந்தது .

 1912-ல் ஜப்பான் நாட்டு அரசாங்கத்தால் , நல்லிணக்க அடிப்படையில் சுமார் 2000 மரங்கள் பரிசாக அளிக்கப்பட்டன . 1935 முதல் இந்த திருவிழா நடைபெறுகிறது.நடுவில் Pearl Harbor-ரில் ஜப்பான், குண்டு போட்டதின் நிமித்தம் , எதிர்ப்பை காட்டும் வண்ணம் பல மரங்கள் பொது மக்களால் வெட்டப்பட்டன . அதோடு  விட்டார்களா ? நாகசாகி , ஹிரோஷிமாவில் அணு குண்டை போட்டதில் ஜப்பான்காரன் மேலும் குறுகிப் போய் விட்டான் .திருவிழாவும் 1941 முதல்  1947 வரை நிறுத்தப்பட்டது .ஆனல் அப்புறம் சமாதானமாகி , திரும்பவும் இன்று வரை நடந்து வருகிறது .1965-ல் ஜப்பான் மேலும் 3800 மரங்களை அளித்தது .சுமார் இரண்டு அல்லது மூன்று வாரமே இருக்கும் இந்த பூக்கள் கண்கொள்ளா காட்சியாகும்.

ஆனால் "மழை விட்டாலும் தூவானம் விடவில்லை" என்பது  போல் இன்னும் குளிர் முற்றிலுமாக போகவில்லை. ஏப்ரல் முடிந்து, மே எட்டிப்பார்த்தும், ஜாக்கெட்டையும், ஸ்வெட்டரையும் இன்னும் கழற்ற முடியவில்லை. இன்னும் காலைப்பொழுதும், மாலைப்பொழுதும் நல்ல குளிர் இருக்கிறது. சென்னையில் டிசம்பர் மாதத்தை ,நியூயார்க் மே மாதம் நினைவூட்டுகிறது. குளிரைப்பார்த்தால் கோடை மிகச் சுருங்கி விடும் போல தெரிகிறது.
நெலமையைப் பாருங்க, சென்னையிலிருக்கும்போது கோடை சுருங்க ஆசைப்பட்டும், நியூயார்க்கில் கோடை குறைவதைப் பற்றி கவலைப்பட்டும், என்ன கொடுமை இது சரவணா? US  கேலண்டர் படி, மார்ச் மாதம் 20 ஆம்  தேதி, வசந்த காலம்  ஆரம்பம்னு சொல்லுது. அதுசரி இத முன்கூட்டியே இயற்கை அன்னைக்கு சொன்னார்களா?. ஒங்கபாட்டுக்கு காலன்டரில் போட்டால்  போதுமா?
 ஷாப்பிங்  மால்களில் குளிர்கால ஆடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, வசந்த மற்றும் கோடை கால ஆடைகள் மட்டுமே உள்ளன. எங்கள் வீட்டுத்தோட்டக்காரர் ஜான் வந்து இலைக் குப்பைகளை அள்ளிப்பெருக்கி, ரோஜாச்செடிகளை வெட்டித்திருத்தி, புல்வெளிக்கு மருந்துபோட்டு, ஒரு  $300 டாலருக்கு பில் கொடுத்துள்ளார். என்ன செய்து என்ன ஆக, முதல்ல களைதான்  வருது. என் மனைவி, பின்னால் உள்ள "கிச்சன் கார்டனில்" காய்கறிகள் போடுவதற்கு ஆயத்தமாகிறாள். அத்தி மரமும் , பெர்சிமன் மரமும் லேசாக துளிர் விட , புதினா பரவி மணம் வீசுகிறது. பிள்ளைகள் "வெகேஷன்" எங்கே போகலாம்? என்று கேட்கிறார்கள். எப்படி சமாளிக்கப்போரேனோ?. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்.

நிறைய விளம்பரங்களும் வர ஆரம்பித்துவிட்டது. "டைவர்ஸ் சேல்" அதில் ஒன்று. விவாகரத்தை கூவிக்கூவி விக்கிறாய்ங்க. $200 டாலருக்கு எல்லாத்தையும் முடிச்சுருவாய்ங்கலாம். மனைவியோ அல்லது கணவனோ யாருக்கு வேணுமோ எதிர்பார்ட்டி வராமயே வாங்கிரலாமாம். வசந்தகாலத்தில் இப்படி ஒரு கேடு காலமா?.

ஒன்னு மட்டும் எனக்கு புரியலை, பலபேரை டேட்டிங் செஞ்சு, சிலபேரோடு "லிவ்விங் டுகெதர்" பண்ணி, ஓரிருவருக்கு குழந்தைகள் பெற்று, ஒருவழியா நாற்பது வயசிலே கல்யாணம் பண்ணலாம்னு முடிவு செஞ்சு, கல்யாணம் முடிந்தவுடன், ஒரே வருஷத்தில் விவாகரத்து பண்ணீராய்ங்க. என்ன இது அநியாயம், ஒரே பொண்டாட்டியோடு குடித்தனம் நடத்தற  நாங்கல்லாம் என்ன கேனப்பயல்களா?. ஆச்சு  வர ஜூலை வந்தா 201 வருஷம் முடிஞ்சு போச்சு. (சாரி, ஸ்பெல்லிங் மிஸ்டேக் 21 என்று திருத்தி வாசிக்கவும்)
குழந்தைன்னு சொன்ன உடனே ஒரு ஜோக் ஞாபகத்திற்கு வருது. ஒரு மனைவி வேலை விஷயமா ஊருக்குப்போன புருஷனுக்கு ஈமெயில் அனுப்பினாளாம், "நீ ஒன்னும் கவலைப்படாதே, ஒன்னோட பிள்ளைகளும், என்னோட பிள்ளைகளும், நம்மோட பிள்ளைகளோட நல்லா வெளையாடிட்டு இருக்காங்க,  பத்தாக்குறைக்கு என்னோட எக்ஸ் பாய்ஃபிரண்டு வந்து அவ்வப்போது பார்த்துக் கொள்கிறான். அதனால நீ மெதுவா உன் வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்தாபோதும் " என்று. உண்மையிலேயே  அதான் இங்க கதி .
இதுல இன்னொரு விளம்பரம் கூட பார்த்தேன். "Who  is my Daddy?" என்று. அது வேறொன்னுமில்ல, குழந்தையோட அப்பா யாருன்னு சந்தேகம் வந்தா, இங்க போய் DNA டெஸ்ட் பண்ணி கண்டுபிடிச்சுரலாம்.

பல குழந்தைகளை, பல பேரிடம் பெற்றுக் கொள்ளலாம். அது ரொம்ப ஈஸி, ஆனால் நீதான் தந்தை என்று நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குழந்தைக்கும், அம்மாவுக்கும், நீ ஜீவனாம்சம் மாதா மாதம் தர வேண்டும். இல்லேன்னா மவனே ஜெயில் தான். அதுக்குத்தான் DNA டெஸ்ட்.
பலபெண்கள் பொழப்பு இப்படித்தான் ஓடிக்கிட்டிருக்கு. அடா அடா அவர்கள் தங்கள் குழந்தைகளைக் கூப்பிட்டு வரும்போது, பாரதியார் பாட்டுத்தான் ஞாபகம் வரும்.
வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
சாம்பல் நிறமொரு குட்டி
கரும் சாந்து நிறமொரு குட்டி 
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
இதற்கிடையில், இங்குள்ள லோக்கல் கிளப்பில், என் மனைவி பேசுவதற்கு ஏற்பாடாகி என்னையும் அழைத்தாள். கிறிஸ்தவப் பெண்ணாக இருந்தாலும், தமிழ்ப் பண்பாட்டை ஒட்டி, தாலி கட்டும் வழக்கத்தையும், தாலியை அணிந்து மகிழ்வதையும், அதனை மதிப்பதும் கணவனை மதிப்பதும் ஒன்றே (?) என்றும் சொல்லி, ஆண்டாண்டு காலமாய் வரும்  இந்த தாலி கட்டும் பழக்கத்தையும் சொல்லி அசத்தினாள். ஓரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த எனக்கும் மிகுந்த பெருமையாய் இருந்தது.
அவளைப் பாராட்டிக் கொண்டே, பெருமிதத்தோடே வீடு வந்து சேர்ந்தோம். உடைகளை மாற்றிய என் மனைவி "சே என்னா கனம்  கனக்குதுன்னு சொல்லி", தாலியைக் கழற்றி மேஜையில் போட்டாள். திடுக்குன்னு போச்சு. ஒரு வாட்டி நல்ல பார்த்துக்கிட்டேன் , அடுத்து கிறிஸ்மஸ் சமயத்தில் தான் வெளியே வரும் .
அட பரவாயில்லை விடுங்க, ஆடைமாற்றியவள் ஆளை மாற்றவில்லை, தாலியைக் கழற்றியவள் இன்னும் இந்தக் கூலியை மாற்றவில்லை. அதுவரைக்கும் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம். என்ன மூணு தடவைன்னு கேட்குறீங்களா அதான் மூணு முடிச்சு போட்டிருக்கேனே. 

Thursday, May 2, 2013

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன் ஐயர்


பதினேழு வயது பிரபாகரன் என்ற துடிப்பு மிகுந்த இளைஞன் எப்படி விடுதலைப்போராட்டத்தில் இணைந்து, ஒரு மிகப் பெரிய இயக்கத்தின் தலைவனாக வளர்ந்தான் என்று அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE), தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOTE), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஆகிய இயக்கங்கள், பிறந்த மற்றும்  வளர்ந்த கதை, ஆகியவை எந்தவித மிகைப்படுத்துதல் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

எழுதிய ஆசிரியர் கணேசன் ஐயர், எப்படியெல்லாம் இயக்கத்திற்காக உழைத்தார், அவரோடு கூட இருந்தவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு எப்படியெல்லாம் தியாகங்கள் செய்தனர் என்று அறியும்போது உணர்ச்சி மேலிடுகிறது.

அதே சமயத்தில், எப்படி, அரசியல் விழிப்புணர்வோ, வழிகாட்டுதலோ இல்லாமல், வெறும் ராணுவக் கட்டமைப்பில் விடுதலையைப்பெற்றுவிடலாம் என தவறான வழியில் சென்ற போராளிகள் அழிந்து மாய்ந்த அவலத்தை நினைக்கும்போது வெறுமைதான் மிஞ்சுகிறது.

இதிலே தங்கள்  வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து  வந்த தோழர்களை ,அற்ப காரணங்களுக்காக , கொன்று குவித்தது இன்னொரு பெரும் தவறு .

மக்களோடு இணைந்து மக்கள் அமைப்பாக, மக்கள் மத்தியில், செல்வாக்கோடு, மக்கள் தரும் உதவியில் வளரும் இயக்கமே விடுதலையைப் பெற்றுத்தர இயலும் என்ற வரலாற்று உண்மையை முன்னரே கற்றுக்கொண்டாலும், தன் கையாலாகாத காரணத்தால் வெறுத்து ஒதுங்கிய பலரில் ஆசிரியரும் ஒருவர்.

அழிந்து போன கனவுகளோடும், உணர்வுகளோடும் இலட்சக்கணக்கான உயிர்களுமல்லவா அழிந்துவிட்டன. ஒரு முழு தலைமுறையல்லவா அழிந்துபோனது. யாரைக் குற்றம் சொல்லி என்ன செய்ய.

Wednesday, May 1, 2013

"ஆன்ச்சி மின்" எழுதிய இரட்டை நாவல்கள்



எம்ப்ரஸ் ஆர்கிட் (EMPRESS ORCHID)


            19ஆம்  நூற்றாண்டின் இறுதியில் சீனாவின் “ச்சிங் டைனாஸ்டி” (Qing  Dynasty)-யில், சகல அதிகாரங்களுடன் விளங்கிய “ஆர்க்கிட்” என்ற பேரரசியின் வரலாற்றுப்புதினம்தான்( Historical Fiction) இந்தப்புத்தகம். “யெகோநளா” (Yehonala) வம்சத்தில், சீனாவின் வறண்ட ஒரு பகுதியின், ஆளுநராகிய விளங்கிய ஒருவரின் மகளாக பிறந்து, அவளது சிறு வயதில் தந்தையை மட்டுமல்லாது, சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து, தாய், தங்கை, தம்பியுடன், பீகிங்கிற்கு அகதியாக வருவதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
            அவள், ஒரு இளம் அழகிய பெண்ணாக உருவெடுத்து, சிறுசிறு வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றியதோடு, மிகச்சிறு வயதில் முதிர்ச்சியையும். நல்ல அனுபவத்தையும் பெறுகிறாள்.
            இதற்கிடையில் பேரரசராக பொறுப்பேற்கும் சியன் ஃபெங் (Hsein  Feng) கிற்கு, பெண், மன்னிக்க, பெண்கள் தேடும் படலம் ஆரம்பிக்கிறது. நாடெங்குமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களில் தேர்வு செய்து, இருநூறாக வடிகட்டி அதில் வரும் நான்கு பேரில் ஒருவராக இவள் தேர்ந்தெடுக்கப்படும் அதிசயம் நடக்கிறது. ஆனாலும்  மூத்த பேரரசியின்  (Dowager Empress- Step mother of the Emperor)   ஆலோசனைப்படி இன்னொரு பெண் ( Lady Nuharoo) பேரரசியாக முடிசூட்டப்பட, மற்ற மூவரும் துணைவிகளாக  (concubine) ஆக்கப்படுகின்றனர். அவர்களில் இரண்டாம் நிலையில் இருக்கிறாள் நம் 17 வயது கதாநாயகி. இருநூறில் மற்ற அனைவருமே அடுத்த நிலையில் துணைவிகளாக, விலக்கப்பட்ட நகருக்கு வருகிறார்கள்.
            தன்னுடைய சர்வைவல் போராட்டத்தில், தாயின் உடல்நிலையைக் காரணம் காட்டி, வெளியே வரும் ஆர்க்கிட், ஒரு விலைமாதின் மேற்பார்வையில் சரசக்கலை  பயின்று, அதன் மூலம் பேரரசரை மயக்குவதோடு, ஒரு குழந்தைக்கும் தாயாகிறாள். பேரரசருக்கு பிறக்கும் ஒரே மகன் இவன்தான்.
அதன் பின்னர் சுகவீனப்படுகிற தம் கணவனுக்கு நிர்வாகத்தில் உதவும் வகையில் உயர்கிறாள். தம் மகனை வளர்ப்பதோடு, தன்னுடைய நிலையை தக்க வைக்க படாதபாடு படுகிறாள். அப்போது பேரரசர் அவளையும் “பேரரசி” நிலைக்கு உயர்த்துகிறார்.

Portrait of the Empress Orchid

“விலக்கப்பட்ட நகரில்” (Forbidden City) சிறுபான்மை மஞ்ச்சூரிய இனத்தவர், பெரும்பான்மை சீனர்களை பல நூற்றாண்டுகளாக ஆண்டு வருகின்றனர்.
     விலக்கப்பட்ட நகரின் அமைப்பும், பிரமாண்டமும், நாகரிகமும், ஆடம்பரமும் நம்மை வியக்க வைக்கிறது. நம் தமிழ் அரசர்கள் வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் ஒன்றுமேயில்லை.இந்த நகரில் பேரரசர் தவிர வேற எந்த ஒரு ஆணும் இராத்தங்க முடியாது. இந்த முழு நகரமும் ஏறத்தாழ இரண்டாயிரம் அலிகளால் நிர்வகிக்கப்படுகிறது. தலைமை அலி, அதிக அதிகாரம் பொருந்தியவராய் இருக்கிறார்.
     இதற்கிடையில், இங்கிலாந்து, ரஷ்யா, ஃபிரான்சு (1860) ஆகியோர் சீனாவின் எல்லைப்புறங்களில் தொல்லை கொடுத்து, விலக்கப்பட்ட நகர் வரை முன்னேற, பேரரசர் தன் பரிவாரங்களோடு  தப்பி, தன்னுடைய கோடை அரண்மனையில் தஞ்சம் புகுகிறார். அவமானத்தால் குறுகிப்போகும் பேரரசர் சியன் ஃபெங் தன் இளம் வயதான 31 வயதில் இறந்துபோக, அவருடைய மகன் டுங் சி (Tung Chih) தன் ஐந்தாவது வயதில், பேரரசாக, மூத்த பேரரசி நுகரூ (Empress Nuharoo) மற்றும் பேரரசி ஆர்க்கிட் (Empress Tzu His alias Lady Yehonala) இருவரும் கோ-ரீஜன்ட் (Co-Regent) ஆக நியமிக்கப்படுகின்றனர்.இதிலே வேடிக்கை என்னவென்றால், சீனர்கள் வெள்ளைக்காரர் களை காட்டுமிராண்டிகள்(barbarians) என்று சொல்லுகிறார்கள்.
பேரரசின் சகோதரர் இளவரசர் கங் (Prince Kung) மற்றும் தளபதி யுங் லு (General Yung Lu) உதவியோடு வெள்ளைக்காரர்களோடு உடன்பாடு செய்து, ஏராளமான பணம் கொடுத்து அனுப்பி விட்டதோடு, தலைமை அமைச்சர் செய்யும் சதியையும்  முறியடித்து, விலக்கப்பட்ட நகருக்கு திரும்புவதோடு இந்தப் புத்தகம் முடிவு பெறுகிறது.


தி லாஸ்ட் எம்ப்ரஸ்  (The Last Empress)



     இது ஆன்ச்சி மின் எழுதிய பார்த்து ரசித்த இரட்டை நாவலின் இரண்டாவது புத்தகம். தலைப்பைப் பார்த்ததும், நம்மில் பலபேர் பார்த்து ரசித்த "தி லாஸ்ட் எம்பரர்" திரைப்படம் ஞாபகம் வரும். அதிலே முதல் பகுதியில் தாராளமான படுக்கையில் ஏராளமாய்ப்படுத்துக்கொண்டு, அடுத்த பேரரசரை அறிவித்துவிட்டு  செத்துப்போகும் பேரரசிதான் இந்த நாவலின் கதாநாயகி. நமக்கு ஏற்கனவே அறிமுகமான் எம்ப்ரஸ் ஆர்க்கிட்.
   டுங் சீ (Tung Chih) அழகுப்பெண்களை மணந்தும், ஏராளமான துணைவிகள் இருந்தும், விலைமாதரிடம் சென்று சீசீவேலைகள் செய்து சீக்குகள் வாங்கி,  சின்ன வயதிலேயே ( 19 வயது) சீரழிந்து  செத்துவிட, ஆர்க்கிட் தனது தங்கை மகனான குவாங் சு (Emperor Guang Hsu) வை பேரரசராக்குகிறார்.
     சீனா அப்போது பறந்து விரிந்த பகுதியாக, வியட்நாம், பர்மா, கொரியா, நேபாளம், மஞ்சூரியா  மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளை  ஆண்ட செல்வச் சிறப்பு மிகுந்த நாடாக விளங்கியதால், பல நாடுகளுக்கு அதன் மேல் ஒரு கண். குவாங் சூ பயந்த சுபாவமுள்ள நோஞ்சானாக இருந்தபடியால், ஆர்க்கிட் தான் தொடர்ந்து அரசாங்கத்தை கவனிக்க வேண்டியதிருக்கிறது. அப்போது பேரரசி நுகாரூ  இறந்துபோவதால் எல்லாமே ஆர்க்கிட் தலைமேல்.
     இதற்கிடையில், இளவரசர் செங் தலைமையில் பாக்சர்ஸ் என்று சொல்லப்படும் மஞ்சூரிய இளைஞர்களும், ஜெனரல் டுங் குவான் (Tung  Kuvan) தலைமையில் உள்ள முஸ்லீம் வீரர்களும் இணைந்து, தலைநகரில் உள்ள வெள்ளைக்கார தூதர்கள் தங்கியிருக்கும் பகுதியை தாக்க ஆரம்பித்தனர். இதுதான் சாக்கென்று பிரிட்டிஸ், பிரெஞ்சு, ஜப்பான், ரஷ்யா, ஜெர்மன், இத்தாலி, டச்சு, ஆஸ்டிரியன், ஹங்கேரியன், பெல்ஜியம் மற்றும் அமெரிக்க படைகள் (August, 14, 1900) இலகுவாக சீனப்படைகளை முறியடித்து முன்னேறி, விலக்கப்பட்ட நகரை ஆக்ரமிக்க, மறுபடியும் பேரரசர் பரிவாரங்கள் ஆறு மாதம் அகதிகளாக சுற்றித்திரியும் அவலம் ஏற்படுகிறது.
அதன் பின்னர், ஏராளமான உரிமைகளையும் செல்வங்களையும் விட்டுக்கொடுத்து, பன்னாட்டு ராணுவத்தை வெளியேற்றிவிட்டு மீண்டும் விலக்கப்பட்ட நகரில் பிரவேசிக்கிறது பேரரசரின் பரிவாரங்கள்.
Portrait of the Empress Orchid

            தொடர்ந்து பேரரசர் நோய் வாய்ப்பட்டு, தம் 38 வயதில் பொசுக்கென்று உயிரைவிட, பேரரசி ஆர்கிட்டின் முழு கட்டுப்பாட்டில் சீனப்பேரரசு மீண்டும் வருகிறது.
இப்படியாக, மூன்று பேரரசர்களை பார்த்ததோடு, நான்காவது ஒரு பேரரசரை (Aisin-Gioro Puyi) நியமித்துவிட்டுத்தான் அவர்களின் உயிர் பிரிகிறது. அவரே சீனப்பேரரசின் கடைசி அரசர். அவருடைய வரலாறை "Last  Emperor" படத்தில் பார்க்கலாம். கடைசியில் ஒரு தோட்டக்காரராக ஆகி, சாதாரண குடிமகனாக இறந்து போகிறார்.
இந்தப்புத்தகங்களை படிக்கும்போது, சீனப்பேரரசு எவ்வளவு பெரிய தேசமென்றும், எப்படியெல்லாம் கோலோச்சினார்கள்  என்றும் பெரிய ஆச்சரியங்களை நமக்கு தருகிறது.
இவ்விரண்டையும் படித்துவிட்டு, பின்னர் “Last  Emperor”  திரைப்படத்தை மீண்டும் பார்த்தேன். ஒரு பெரிய வரலாற்றை அறிந்து கொண்ட திருப்தி ஏற்பட்டது.
தற்சமயம் சீன ராணுவம், திபெத்தைப் பிடித்துக் கொண்டது. இந்திய எல்லைப்பகுதிகளில் பெருமளவு ஆக்கிரமித்து வைத்துள்ளது. அருணாசலப்பிரதேசத்தை உரிமை கொண்டாடுகிறது. தலாய் ஓபாமாவுக்கு அபயமளித்தது  அவர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு தொடந்து உதவி வருகிறது. போதாக்குறைக்கு இப்போ லடாக் பகுதியையும் பிடித்து வைத்துள்ளது.இதையெல்லாம் பார்க்கும்போது, வரலாறு திரும்புகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.


Anchee Min (born January 14, 1957) is a Chinese-American painter, photographer, musician, and author who lives in San Francisco and Shanghai. Min has published a memoir, Red Azalea, and six historical novels. Her fiction emphasizes strong female characters, such as Jiang Qing, the wife of Chairman Mao Zedong, and Empress Dowager Cixi, the last ruling empress of China. (www.ancheemin.com)

Tuesday, April 30, 2013

மெக்சிகோ பயணம்-9 : பூர்வ குடிகளும் , ஸ்பானிய ஆதிக்கமும்

     நடமாட்டமில்லாத, இருள் தெருக்களில் அங்குமிங்கும் பயத்துடன் அலைந்ததுதான் மிச்சம். சம்மந்தமில்லாமல், மெக்ஸிகோ  மாஃபியாக்களைப்பற்றி படித்தது ஞாபகம் வந்து தொலைத்து நடுக்கத்தைக் கூட்டியது .எதிர்ப்பட்ட ஓரிருவரிடம் கேட்டாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை. கையில் போனும் கிடையாது. சுமார் ஒரு மணி நேரம் சுற்றியலைந்து அந்தப்பக்கமாக வந்த போலிஸ் வண்டியை நிறுத்தி, அவர்களுக்கு விளக்கி, வந்து சேருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

எச்சரிக்கை: வெளியே செல்லும்போது ஹோட்டலின் முகவரி,மேப்  மற்றும் போன் நம்பர்களை எப்போதும் எடுத்துச் செல்லவும்.

ரூமுக்கு  திரும்பி, ரெண்டு துண்டு கரும்பையும், பழங்கள் சிலவற்றையும் சாப்பிட்டு, வயிறு நிரம்பி, இரவு உணவைத் தவிர்த்து, படுக்கையில் சாய்ந்தபோது, சுற்றிய சுற்றுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது.


டிசம்பர் 1, 2012 சனிக்கிழமை


நேற்று சீக்கிரம் தூங்கிவிட்டதால், அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். (அதாங்க 6 மணி)

     சுறுசுறுப்போடு எழுந்து, இதமான சூட்டில் குளித்து ரெடியாகி, லைட் ஜாக்கெட்டை மறக்காமல் போட்டுக் கொண்டு, இன்டர்நெட் மையத்திற்குச் சென்றேன். காவிரிப் பிரச்சனையும், கரண்ட் பிரச்சனையும் இன்னும் தீரவில்லை. மற்றொரு தீராத பிரச்சனை, கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறிமாறி வெளியிடும் அறிக்கைகள், ஆண்டவா இதுக்கு ஒரு முடிவேயில்லையா?.

    தெருக்களில் ஒரு இனம் தெரியாத பரபரப்பு இருந்தது. Federal Policio  என்று பொறித்த வாகனங்கள் அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தன. என்னவென்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்த வண்ணம் ஹோட்டலுக்கு திரும்பினேன். அங்கே ரிஷப்சனில் ஒருவர் என் பெயரை விளித்து, எனக்கு ஒரு பெண் போன் செய்ததாக சொன்னார். யாராக இருக்கும், ஒருவேளை “எரிக்கா” ஆக இருக்குமோ என்று நினைத்த வண்ணம் உணவுக்கூடத்திற்குச் சென்றேன். யார் போன் செய்தார்கள் எனக்கேட்டு குறித்து வைத்துக்கொள்ளும் ஒரு சிறிய அறிவு அல்லது முயற்சி கூட இல்லையே என நொந்து கொண்டு, வழக்கமான காலை உணவை முடித்து வெளியே வந்து பெஞ்சில் அமர்ந்தேன்.

இன்றும் இக்கி வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தபோது, ஒரு ஸ்மார்ட் ஆன இளைஞன், நேரடியாக என்னிடம் வந்து ஹலோ என்று கைகுலுக்கி எப்பூடி ? என்று ஆச்சரியப்படுத்தினான். “எப்படிரா நேரா என்ட வந்தேன்னு” கேட்டபோது ,அதான் நெத்தியிலே எழுதி இருக்கேன்னு சொல்லி சிரித்தான் .நல்ல ஆங்கிலத்தில்  தன்னை டானியல் என்று அறிமுகப்படுத்தியது மேலும் ஆச்சரியப்படுத்தியது. இக்கியை விட இவனது ஆங்கிலம் நன்றாகவே இருந்தது. விசாரித்ததில் ஆங்கில இலக்கியம் படித்து, சில ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து இப்போது டூரிஸ்ட் கைடாக ஆனதை விளக்கினான். அட நானுந்தேன் ஆங்கில இலக்கியம் படிச்சேன், அதையேன் கேட்குறீங்க,அந்தக் கொடுமையை இன்னொரு நாளைக்கு  சொல்றேன்.

வெளியே வந்து பெரிய பஸ்ஸை எதிர்பார்த்து தேடியபோது, ஒரு சிறிய, மிகச்சிறிய காருக்கு அழைத்துச் சென்றான். என்னாச்சு என்று வினவியபோது, இன்று உன்னையும் சேர்த்து மொத்தம் 3 பேர்தான் என்றான். அந்த  இருவரையும் பிக்கப் செய்தவுடன் நகரை நோக்கி விரைந்தது அந்த குட்டிக்கார் .அப்பாடி அவர்களும் நல்ல ஆங்கிலம் பேசிய ஸ்பானிஷ் தம்பதியர். நான் முன்னே, டேனியல் அருகில் அமர்ந்து கொள்ள , தம்பதியினர் பின்னால் அமர்ந்து கொண்டனர். திருமணம் ஆகி கொஞ்ச காலம்  ஆகியிருக்கனும்னு நினைக்கிறேன் . கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்திருந்தனர் .

அன்று இரண்டு டூர் புக் செய்திருந்தேன். காலையில் மெக்சிகோ சிட்டி டூர், மதியம் ஷோஷிமில்கோ ரிவர் குருஸ்.

மெக்சிகோ நகரில் நுழைபவதற்கு முன் அதன் வரலாற்றுச் சிறு குறிப்பு.

மீண்டும் எச்சரிக்கை, என்  மனைவி போல்  வரலாற்று அலர்ஜி உள்ளவர்கள், இந்தப் பத்தியினைத் தவிர்த்து முன்னேறிச் செல்லவும். இப்ப தெரியுதா, ஏன் நான் தனியா  போனேன்னு , இத்தனைக்கும் அவள் ஹிஸ்ஸ்டோரி மேஜர். ஒரு வேளை  அதனால்தானோ ?. அந்த ஹெர்ஸ்டோரி என்னன்னு தெரியலையே?.(ஆழம் இது ஆழம் இல்லை , அது சேரும் கடலும் ஆழம் இல்லை, ஆழம்  அ து அ ய்யா , இந்த பொம்பளை மனசுதான்யா )

     டோல்டெக் சாம்ராஜ்யம் (Toltec Empire) அழிந்தபோது, “நகுவால்” (Nahuatl) மொழி பேசிய “மெக்சிகா” இன மக்கள் (நன்றாக படிக்கவும் அது “மெக்சிகா” தான்) கி.பி.1325 ஆம்  ஆண்டு, மேற்குப்பகுதியில் இருந்த “டெக்ஸ்காகோ” ஏரியில் இருந்த ஒரு சிறிய தீவில் குடியேறினார்கள். அங்கு ஏற்கனவே வாழ்ந்த மூத்த பழங்குடி மக்களை எதிர்த்தும், தோற்கடித்தும் அழித்தும் குடியேறிய இந்த மக்களே "ஆஸ்டெக்" பழங்குடியினர்  (Aztec).
Aztec Soldier
 தங்களுடைய முதன்மைக் கடவுளான “ஹியூட்ஜிலோபோக்டிலி” (Huitzilopochtli -கவனம் , வாசிக்கும்போது, தாடை ஒடைஞ்சிரப்போறது). தம்மை இங்கு அழைத்து வந்ததாக அவர்கள் நம்பினர்.
 அந்தக்கடவுள்தான் ( God of War and Sacrifice) அவர்களுக்கு, ஒரு அடையாளமாக, ராட்சத கத்தாழையில் கால் பதித்த, பாம்பினைக்கவ்விக் கொண்டிருந்த ஒரு கழுகைக் காண்பித்தாராம்.இதுவே இன்றைய மெக்சிகோ அடையாளம்.


     இந்தச் சிவிப்பிந்திய மக்கள் கலாச்சாரம் மிகுந்தவர். கி.பி.1325லிருந்து 1521 வரை மிகப் பலுகிப்பெருகி, மெக்சிகோ பள்ளத்தாக்கு முழுவதுமாக பரவினர். ஆஸ்டெக் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்து, மீசோஅமெரிக்கா முழுவதிலும் பரவி மெக்சிகோ வளைகுடா மற்றும் பசிபிக் பெருங்கடலைத் தொட்டது.

     அப்படி சீறும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கையில் கி.பி.1519ல் ஸ்பெயின் ராணுவம், மூக்கு வேர்த்து மோப்பம் பிடித்து, ஹெர்னன்  கோர்டஸ் (Hernan  cortes) என்பவரின் தலைமையில் வந்திறங்கியது.
Hernan's Spanish Army attacks Aztec
 அங்கே ஏற்கனவே இருந்த பொறாமை, பூசல்கள், தலைமைக்கான போட்டி(அட அங்கேயுமா ?)ஆகியவற்றை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஹெர்னன், கொஞ்சம் கொஞ்சமாய்ப் ஆக்ரமித்து “டெனோசிட்லான்” முழுவதுமாய் பிடித்துவிட்டான். இன்னொரு முட்டாள் தனமும் நிகழ்ந்தது. அப்போது ஆஸ்டெக் சாம்ராஜ்யத்தை ஆண்ட மோக்டெஜீமா (Moctezuma) என்ற மன்னனும், மக்களும்,
Moctezuma
அவர்களுடைய கடவுளான குவெட்ஜல்கோட்டில் (Quetzalcoatl) வரப்போவதாய் நம்பிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஹெர்னன் வரவும், அந்த முட்டாள் மன்னன், அவன்தான் அந்தக்கடவுள் என்று நினைத்துவிட்டான் . இப்படியாக கிட்டத்தட்ட 250 வருடங்கள் கோலோச்சிய ஆஸ்டெக் சாம்ராஜ்யம் முற்றிலுமாக அழிந்தது.

Aztec surrendering to Hernan

     ஸ்பானிஸ்காரர்கள் அழிந்துபோன “டெனோக்டிட்லன்” நகரத்தை மீண்டும் கட்டி எழுப்பி, மெக்சிகோ சிட்டி என்று பெயரிட்டனர். நாம் மெக்ஸிகோ என்று அழைக்க , அங்கேயுள்ள லோக்கல் ஆட்கள் மெஹிகோ  என்று சொல்லுகின்றனர்.கத்தோலிக்க ஆலயங்கள் எங்கும் எழுப்பப்பட்டு, ரோமன் கத்தோலிக்க மதம், பிரதான மதமாகவும், ஸ்பானிஸ் பிரதான மொழியாகவும் ஆகிப்போனது.

     கி.பி.1629ல் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப்பெருக்குக்குப்பின்னர், நகரைச் சுற்றிலும் இருந்த ஏரி, கொஞ்சம் கொஞ்சமாக வடிகட்டப்பட்டு, முழுவதுமாக ஸ்பெயின் நாட்டுக் காலனியாதிக்கம் நிலைநாட்டப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் மன்னரின் பிரதிநிதியாக, வைஸ்ராய் நியமிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. மெக்சிகோ சிட்டியில், பல பிரபுக்களின்  குடும்பங்கள் சமூக மதிப்போடு வாழ்ந்தன. அவர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், கவுன்ட் (Count) டியூக்(Duke)  என்ற பட்டங்கள் தரப்பட்டன. அவர்கள் தங்களுக்கென்று பல அரண்மனைகளைக் கட்டிக்கொண்டதால், இந்த நகரம் "அரண்மனைகளின் நகரம்" என்றும்  அழைக்கப்படுகிறது (City of Palaces). ஸ்பெயின், மற்ற ஸ்பெயின் காலனிகள், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசிய நாடுகளோடு, வர்த்தகத்தில் ஈடுபட்ட மெக்சிகோ நகரத்தில் செல்வம் கொட்டியது. தங்கள் செல்வத்தை அடுத்தவர்கள் சாப்பிடுவதையும் , தங்கள் நிலைமை  அப்படியே மோசமான நிலைமையில் இருந்ததையும் கொஞ்சம்  லேட்டாக  உணர்ந்த  , பூர்வ குடி மக்கள் கொதித்தெழுந்தனர் .

Friday, April 26, 2013

வைரமுத்துவின்,"மூன்றாம் உலகப்போர்".


 
வைரமுத்து மதுரைக்காரர்,அதுவும் நான் வளர்ந்த ஊராகிய தேவதானப்பட்டியின் மிக அருகில் உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர். என்னுடைய, இள வயதில் அவருடைய புதுக்கவிதைகள் மற்றும் திரைப்படப்பாடல்கள் மூலம் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.எனவே அவருடைய படைப்புகளை விரும்பிப்படிப்பது என் வழக்கம்.வைகை அணை கட்டும் போது இடம் மாற வேண்டிய கட்டாயத்தால் வீடிழந்து, ஊரிழந்து எல்லாவற்றையும் இழந்த  மக்களின் வாழ்வைப்படம் பிடித்துக்காட்டிய அவரின்
“கள்ளிக்காட்டு   இதிகாசம்” எனக்குப்பிடித்த கதை. கருவாச்சி காவியமும் நன்றாகவே இருந்தது.

மூன்றாம் உலகப்போரில் எனக்குப்பிடித்தவை.

1. கதைக்களம் நடக்கும் அட்டணம் பட்டி, அதன் அருகில் வரும் புல்லாக்காபட்டி, தேவதானப்பட்டி ஆகியவை என் சிறுவயதில் சுற்றித்திரிந்த ஊர்கள் என்பதால், ஒரு பெரிய நாஸ்டால்ஜியாவை என்னுள் உருவாக்கியது.
2.விவசாய விளை நிலங்கள்,நீரின்றியும், பராமரிக்க ஆட்களின்றியும், வீட்டு மனைகளாகவும் மற்றும் தொழிற்சா
லைகளாய் 
மாறுவதாலும், ஒரு நாள், சாப்பிடும் உணவையும் நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியகொடுமை நேர்ந்து விடும் என எச்சரிக்கும் விதத்தில் கதையின் போக்கு அமைந்துள்ளது.
3.எந்த ஒரு நன்மை பயக்கும் முயற்சியையும், அரசியல் மற்றும் பண முதலைகள் தடுக்கின்ற வழிவழியாய் வரும் கொடூரங்கள்.
4.குடும்பத்தினுள்ளே,சிறு கார
ங்களால் வீம்பும்,வீராப்பும் வெட்டி ஈகோவும் எப்படி உறவுகளைச்சிதைக்கின்றன  என உணர்த்தும் கதை மாந்தர்கள்.
5.மாறுகின்ற உலகில் மாற முயற்சித்து தோற்கின்ற நம் குக்கிராமங்களின் பரிதாப நிலை.
6.உலகமயம் மற்றும் உலக வெப்பமய மாக்குதலைக் குறித்து கிராமத்திலிருந்து வரும் குரல்,
7.கவிஞர் என்றாலும் கூட  கவிதை, உவமை  உவமேயத்தில் பக்கங்களை நிரப்பாத எச்சரிக்கை உணர்ச்சி.
8. ஆனாலும் உள்ளிருந்து எட்டிப்பார்கும் கவிஞனின் ஆழ் மனம்,மற்றும் பழைய விடலைத்தன குசும்பும் (தன் நாக்கால்,மற்றொரு பெண்ணின் நாக்கில் உள்ள வெற்றிலையை தள்ளி மனைவியிடம் மாட்டிக்கொள்ளும் இடம்).
9.மதுரை மொழியிலிருந்து சற்றே வேறுபட்ட வட்டார வழக்கு நடை.
   
                                                      பிடிக்காதவை

1.பல இடங்களில் உலக வெப்பமயமாக்குதலை எழுதும் இடங்களில் கட்டுரை போல ஒலிப்பது.
 2. வெளிநாட்டுக்காரர்கள் சொல்லிக்கொடுத்து நாம் கேட்க வேண்டிய நிலை. (அமெரிக்கப்பெண் எமிலி மற்றும் ஜப்பானியப் பையன் இஷிமுரா ஆகியோரின் பாத்திர அமைப்புகள்).
3. கொஞ்சம் படித்தாலும்,உண்மை நிலை மறந்து,வெள்ளைத்தோலில் மயங்குவது.(சின்னப்பாண்டி, எமிலி மேல் காதல் கொள்வது)
4. பெரிதான வாய்ப்புகளின் மூலம் வருங்காலத்தில் ஊரை முன்னேற்ற வாய்ப்புக்கள் வந்தாலும்,தன்னுடைய சிறு நிலத்தில் உழன்று காணாமல் போகும் எதிர்காலம்,
5.எந்த ஒரு நம்பிக்கை ஒளியையும் தராது போவதால் கடைசியில் எழும் வெறுமை.

 
 

Wednesday, April 24, 2013

NYPD ( நியூயார்க் போலிஸ் டிபார்ட்மென்ட்)

    பாஸ்டனில் சமீபத்தில் நடந்த மராத்தான் ஓட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு  தீவிரவாதிகளில் ஒருவன்  கொல்லப்பட்டான் மற்ற ஒருவன் உயிரோடு வளைக்கப்பட்டான் .48 மணி நேரத்தில் இது சாதிக்கப்பட்டது .
Add caption
    கடந்த ஞாயிறன்று ( ஏப்ரல் 20, 2013) நியூயார்க்கில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றதால் , NYPD உஷாரானது .கேன்சல் செய்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்க்க ,ஓட்டம் எந்த பிரச்னையும் இன்றி நடந்து முடிந்தது .
        நாங்கள் நியூயார்க் வந்த புதிதில். குயின்சில் (Queens) உள்ள ஜமைக்காவில் முதல் மாடியில் குடியிருந்தோம். ஒரு நாள் மாலை, வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். எங்கள் தெரு முனையில் திரும்பும்  போது NYPD கார் ஒன்று எங்கள் வாசலில் நின்றதோடு, இரண்டு போலிஸ்காரர்கள் மேலேறிச் செல்வதைப்பார்த்தேன்.
      என் வீட்டுக்கா, இருக்காது என்று நினைத்தாலும், BP எகிற, ஓடி வந்து நானும் மூச்சுமுட்ட ஏறினேன். மேலே ஒரே இருட்டாக இருந்தது மேலும் திகிலூட்டியது. என் மனைவி கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் அவள் “போன், போலிஸ்,  அபிஷா” என்று உளற, “முதலில் லைட்டைப்போடு” என்றேன். அங்கே என் சின்னப்பெண் அபிஷா (அப்போது நான்கு வயது) என் வீட்டு லேண்ட் லைனை கையில் பிடித்திருந்தாள்.



    எனக்கு எல்லாம் உடனே விளங்கிவிட்டது. நம் ஊரில் அவசர உதவி 100 போல இங்கே 911. எந்த எமர்ஜன்சி என்றாலும் 911 அடிக்க, பக்கத்தில் உள்ள போலிஸ் உடனே வர, ஆம்புலன்ஸ் அடுத்த நொடியில்  வந்து நிற்கும். லைட்டெல்லாம் அணைத்து விட்டு,  டிவி பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், என் பெண் அவள் சித்தப்பாவை மிஸ் செய்ததால், தானாக போனை எடுத்து, இந்தியாவிற்கு டயல் செய்ய, 91அடிப்பதற்கு பதில் 911அடித்து விட்டாள். போலீசாரின் வேகத்தை கவனித்தீர்களா? என் மகள் போனை கீழே வைப்பதற்கு முன், போலிஸ் வந்துவிட்டது. ஆச்சரியம், மிரட்டல் உருட்டல் எதுவுமில்லை, சிரித்துக்கொண்டே, இனிமேல் கவனமாக டயல் செய்யச்சொல்லிவிட்டு போயே போய் விட்டனர். 
       NYPD என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற நியூயார்க் போலிஸ் டிபார்ட்மென்ட், உலகத்திலேயே தலைசிறந்த போலிஸ் நிறுவனங்களில் ஒன்று. 
சுமார் 85 லட்சம் மக்கள் வாழும், உலகத்தின் மிகப்பெரிய நியூயார்க் பெருநகரத்தின், சட்ட ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றை செயல்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு NYPD யைச் சார்ந்தது.அதோடு தீவிரவாத கண்காணிப்பையும் FBI மற்றும் CIA யோடு இணைந்து செய்கிறது. 
இதன் கமிஷனரான ரேய் கெல்லி,புதிதாக பயன்படுத்தவிருக்கும் ஹைடெக் சாதனங்களைப்பற்றி, சமீபத்தில் சிட்டி கௌன்சிலில் உரையாற்றினார், அந்த புதிய முறைகளைப்பற்றி கீழே கொடுத்துள்ளேன். 
டேட்டா பேஸ் : NYPD புதிதாக ஒரு மிகப்பெரிய டேட்டா பேஸை உருவாக்கியிருக்கிறது. இதில், வாகனங்களின் லைசென்ஸ் பிளேட்கள், போலிஸ் கேமராக்கள், அரெஸ்ட் ரெகார்ட்ஸ் ஆகிய பல தகவல்கள் தொகுக்கப்பட்டு பராமரிக்கப்படும். முதலில் தனித்தனியாக இருந்தவை இப்பொழுது ஒரே தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான பொதுத்தகவல்கள், இனி ஒரே டேட்டா பேஸில் விரல் நுனியில் கிடைக்கும். இது  மைக்ரோசாஃப்ட்  நிறுவனத்தின் உதவியில்  செயல்படுத்தப்படுகிறது.இப்போதைக்கு கெளன்ட்டர் டெரரிசம் யூனிட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வசதி படிப்படியாக மற்ற யூனிட்டுகளுக்கும் விரிவு படுத்தப்படும். இந்த டேட்டா பேஸில் நான் இருக்கிறேனா இல்லையா? என்று தெரியவில்லையே. 


ஆப்பரேஷன் சேஃப்டி கேப் (Operation Safety Cap)
            நம்மூரில் போல் எல்லா மருந்துகளையும், இங்கே மருந்தகங்களில் வாங்கிவிட முடியாது. சில மருந்துகளை மருத்துவரின் மருந்துச்சீட்டு (Prescription)இல்லாமல் தலை கீழாக நின்னாலும் வாங்கவிட முடியாது. சில போதை  வஸ்துகளும் மருந்து போல் செயல்படுவதால், அவைகளுக்கு டிமாண்ட் அதிகம். எனவே அடிக்கடி ஃ பார்மஸிகளில் கொள்ளை போய் விடுகிறது. இதற்கென்றே தனிப்பட்ட திருட்டுக்கும்பல் மற்றும் வாடிக்கையாளர் இருப்பதாக கேள்வி
    இந்த புதிய ஆப்பரேஷன்மூலம், சிட்டியில் உள்ள ஆறாயிரம் மருந்தகங்களும் கண்காணிப்பில் கொண்டுவரப்படும். அதோடு இவைகளுக்கு NYPD மூலம் சில பாட்டில்களும் கொடுக்கப்படும். இதிலே விசேஷம் என்னவென்றால்,இதிலே ஜிபிஎஸ் டிராக்டிங்  டிவைஸ் பொருத்தப்படும்.திருடன் இதனை திருடினால்,இதனை வைத்து பொருளையும்,இடத்தையும் அதன் மூலம் திருடியவனையும் கண்டுபிடித்து விட முடியும். இனிமேல் மருந்து வாங்கினால் பாட்டிலை மாற்றிவிட வேண்டும், எதுக்கு வம்பு.
CCTV கேமராக்கள் :
                  ஏற்கனவே பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இப்போது அதி முக்கிய இடங்கள் மற்றும் டூரிஸ்ட் அதிகமாக வரும் இடங்களில் பொருத்துவதற்காக NYPD, 650 புதிய கேமராக்களை வாங்கியிருக்கிறது.இதன் விலை 9.4மில்லியன் டாலர்கள் (டாலர் வெள்ளை மாளிகையின்  தோட்டத்தில் விளைவது போல் தெரிகிறதே).இந்த அதி நவீன "டிஜிட்டல் கண்கள் ". ஐபி மெகா பிக்சல் டெக்னாலஜி கொண்டது. இது மிகத்துல்லியமான படங்களையும், வீடியோக்களையும் எடுப்பதோடு தேடும் லிஸ்டில் உள்ளவர்களையும்  போட்டுக்கொடுத்து விடும். இனி மேல் டைம்ஸ் கொயர் போகிறவர்கள், கொஞ்சம் மேக்கப் தாராளமாக போடவும்.
சோஷியல் நெட்வெர்க் மானிடர்:
    ஜூவனைல் ஜஸ்டிஸ் டிவிசன் (Juvenile Justice Division) என்ற NYPD​ -அமைப்பில் உள்ள துப்பறியும் நிபுணர்களுக்கு, இரவும் பகலும் ஒரே வேலை. ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரை கண்காணிக்க வேண்டும்.( ஆஹா ஜாலியான வேலை) நவீன கால கிரிமினல்களும், கேங்குகளும், இப்போது தாங்கள்  திட்டமிடுவது, பேசிக்கொள்வது இவற்றின்  மூலம் தான் என்று கண்டுபிடித்ததால் இந்த முடிவு. இவர்கள் பயன்படுத்தும், சங்கேத கோட் வார்த்தைகளைக்கண்டுபிடிக்க ஒரு புதிய டிக்ஸனரி உருவாக்கப்பட்டு,புதிய  வார்த்தைகள் அனுதினமும் சேகரிக்கப்படுகிறது. ஃபேஸ் புக்கிலேயோ   அல்லது வெறெந்த சமூக வலை தளங்களிலோ, இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அதன் நதிமூலம் ரிஷிமூலம் எங்கிருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப்பகுதியில் உள்ள NYPD காப்போ அல்லது டிடெக்டிவ்வோ  உஷார் படுத்தப்பட்டு, ஆளை மடக்கி விடுவார்கள்.இதிலே விஷேசம் என்னன்னா, நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்து விடும். இரவும் பகலும் இன்டர்நெட்டில் வாழ்க்கையை சேட்டில் ஓட்டிக் கொண்டிருக்கும் நண்பர்களே, தோழிகளே உஷார்!  உஷார்!  உஷார்!.
கன் ரேடியேஷன் டிடெக்டர்:
          ஜனவரி 2013 முதல் நகரத்தின் சில பகுதியில் இந்த சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. "டெராஹெர்ட்ஸ் இமேஜிங் டிடெஷன் சிஸ்டம்" (Terahertz Imaging Detection System ) என்று அழைக்கப்படும் இந்த காமெராவின் 16அடிக்குள் யார் சென்றாலும், அவர் துப்பாக்கி வைத்திருந்தால், ஆடையை  ஊடுருவிச்சென்று படமெடுத்துவிடுவதோடு, உடனடியாக உஷார்ப்படுத்திவிடும். உடலின் எந்தப் பகுதியிலும் இனிமேல் துப்பாக்கியை மறைத்து விட முடியாது. ஒழுங்கா உள்ளாடைகளை உடுத்திச் செல்லுங்கப்பா இனிமேல்.

Monday, April 22, 2013

மெக்சிகோ பயணம் -8 குவாடலுப் சன்னதி (நவம்பர் 30, 2012)




     International என்று எழுதப்பட்டிருந்த உணவகத்திற்குப் போய்ச் சேரும்போது மணி 2:30. அது வரை எப்படித்தாக்குப்பிடித்தேன் என்று தெரியவில்லை.


     வாசலில் ஆஸ்டெக் ராஜகுமாரனும், ராஜகுமாரியும் நின்று வரவேற்றார்கள். இருவரும் அத்தனை அழகு. உடைகள்தான் சற்று விரசமாக இருந்தது. உள்ளே சென்றபோது, பலவித உணவுகள், சூப், சாலடுகள், பழவகைகள் என ஏராளமாக இருந்தது. Buffet -150 பீசோ என்றார்கள். முதலில் சிறிது மக்காச்சோள ரசத்தை (Corn soup) அருந்தினேன். வயிற்றிரைச்சல் குறைந்தது. ராஜகுமாரி, ராஜகுமாரனுக்கு கொடுத்த முத்தத்தைப்பார்த்த வயிற்றெரிச்சல் மட்டும் அப்படியே இருந்தது. இருவரும் காதலர்கள் போலும்.


 பலவிதமான இறைச்சி வகைகளைத் தவிர்த்து (எதுக்கு ரிஸ்க்?) அரிசிச்சாதம் (அதான பார்த்தேன்) எடுத்து, கொஞ்சம் மொச்சைக் குழம்பை (கிட்னி பீன்ஸ்) வைத்து சாப்பிட்டேன். ருசியாகவே இருந்தது. நல்ல பசியில்  , ஒரு பிடி பிடித்து விட்டேன் .வயிறும் மனதும் நிறைய, மீண்டும் சென்று, சாலடு வகைகள் மற்றும் பழ வகைகளை எடுத்துக்கொண்டு, இல்லை இல்லை, குவித்துக் கொண்டு வந்தேன். பாதி சாப்பிட்டவுடன் நெஞ்சும் நிறைந்தது. மீதியை குற்ற உணர்ச்சியுடன் பார்த்தேன். வேஸ்ட் செய்ய விருப்பமில்லை, கட்டிச் செல்லவும் அனுமதியில்லை, வருத்தத்துடன், யாரும் பார்க்காத சமயத்தில் சட்டென்று கொட்டினேன். எதிர்பாராது அதனைப் பார்த்துவிட்ட,  என் சக பயணியிடம் எனது டிரேட் மார்க் அசட்டுச்சிரிப்புடன் மழுப்பிவிட்டு  நகர்ந்தேன் .

     திடீரென்று காதைப்பிளக்கும் டிரம் இசையுடன், இளவரசியும் இளவரசனும் குத்தாட்டம் போட்டனர். மிகவும் இயற்கையான உற்சாகமான ஆட்டம். போட்டோ  எடுக்க நினைத்து தோற்றேன். அசைவுகள் மிக துரிதமாக இருந்தன.

மீண்டு வந்தபின் அங்கிருந்த கேக் மற்றும் டெசர்ட் வகைகளை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். எதுக்கும் ஒரு அளவு வேணும்ல பாஸ், என்னோட ஸ்டிரக்செர்  போயிரும்ல.

     அருமையாக நடனம் ஆடிய அவர்களை பாராட்டிவிட்டு, போட்டோ எடுத்துக்கொண்டேன். ஒரு 20 பீசோ கொடுத்தேன்.”கிராசியஸ்” என்று ராஜகுமாரி திருவாய் மலர்ந்தார். எங்களுடைய அடுத்த இடமான குவாடலுப் சன்னதிக்கு பஸ் கிளம்பியது .

     குவாடலுப் சன்னதி (Guadalupe Shrine- The Basilica of our Lady Guadalupe ) என்பது ரோமன் கத்தோலிக்கர்களின் ஒரு புனித இடம். இது மெக்சிகோ நாட்டின் தேசிய சன்னதி (National Shrine) ஆகும். மெக்சிகோ நாட்டின் 85 சதவிகிதம் கத்தோலிக்கர்கள்  ஆவார்கள் .இதனை (La villa) லா வில்லா என்றும் அழைக்கின்றனர்.

எச்சரிக்கை: வரலாறு படிக்கும்போது எரிச்சல் அடைபவர்கள் வருகின்ற பத்தியை கடந்து செல்லவும்.

     புனித யுவான்  டியாகோ என்பவர் ஆஸ்டெக் மதத்திலிருந்து, ரோமன்  கத்தோலிக்க மதத்திற்கு கி.பி 1531ல் மாறினார். இந்த இடத்தில் மாதா அவருக்கு காட்சி கொடுத்து, தனக்கு ஒரு கோயிலை அங்கு கட்டப் பணித்ததாகவும், அங்கிருந்த பிஷப் நம்ப மறுத்து அடையாளம் கேட்டபோது, யுவான் கொடுத்த மலர்கள் பிஷப்பின் கவுனில் விழுத்து அடையாளம் ஏற்படுத்தியதாம். அந்தத்துணி இன்னமும் இருக்கிறது. இது நடந்தது டிசம்பர் 12,1531. எனவே அதே தேதியில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுகிறார்கள்.

பழைய பேராலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு : கி.பி. 1531.

கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு :கி.பி 1709.

முக்கிய கட்டிடப்பொறியாளர் (Architect) :Pedro de Arrieta

ஆலயத்திற்கு பேராலய அந்தஸ்து கொடுத்த வருடம் : 1904.

கொடுத்தவர் - போப் பயஸ்.

புதிய பேராலயம் கட்டிய வருடம் :  1974 - 76.

ஆர்க்கிடெக்ட் : Pedro Ramirez Vazquez

(ஆஸ்டெக் ஸ்டேடியம் மற்றும் ஆந்த்ரபாலஜி மியூசியம் கட்டியவர்)

இருக்கை வசதி - ஒரே நேரத்தில் 10,000 நபர்கள்.

பழைய பேராலயம், நான் இதுவரை பார்த்திராத கட்டிடக்கலையாக இருந்தது. உள்ளே போனால், கலை நுணுக்கங்களுடனும், வேலைப்பாடுகளோடும் மனதை அள்ளியது. மேலும் கற்பனை செய்ய முடியாத அளவு, பெரிய ஓவியங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் கேன்வாஸ் துணியில் வரையப்பட்ட எண்ணெய் ஓவியங்கள். (Oil Paintings). சிறிது நேரத்தில் என் தலை சுற்றுவது போலவும், கீழேவிழுந்துவிடுவதைப் போலவும் உணர்ந்தேன். ஐயையோ இந்த சர்க்கரை தன் வேலையைக் காட்டுகிறது, மதியம் கொஞ்சம் ஓவரா சாப்பிட்டு விட்டேனோ ? என்று நினைத்த போது இக்கி வந்து என்னைப்பிடித்தார். பின்னர், அவர் விளக்கியபோதுதான், இது சர்க்கரை அல்ல என்று புரிந்தது.

முழு மெக்சிகோ நகரமும் அக்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை ஆக்ரமித்துக் கட்டப்பட்டது. எனவே அதன் அடிப்பூமி மிகவும் மிருதுவான மண்ணைக்கொண்டது.




எனவே பல இடங்களில் பழைய கட்டடங்கள் பூமியின் நெகிழ்ச்சியில் உள்ளே அமிழ் கின்றன. இந்த ஆலயமும் அவ்வாறே ஒரு இடத்தில் உள்ளே இறங்கிப்போய் ஏற்ற இறக்கமாய்  இருந்தது. ஓவியங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நகர்ந்ததால் ,இறக்கத்தில் தடுமாறி மயக்கம் என்று நினைத்துவிட்டேன்   (அப்பாடா நல்லவேளை ஏசுவே )

அந்த ஆலயத்தை அப்படியே தூக்கி நிமிர்த்திவிட முயன்று, அது லேசாக விரிசல்விடத்துவங்கியதால், அப்படியே விட்டுவிட்டு, புதிய பேராலயம் அமைக்கப்பட்டது. பல வருடங்கள் பூட்டப்பட்ட பழைய ஆலயம் சமீபத்தில் தான் திறக்கப்பட்டதாம் . (ஆகா எனக்காகத்தான்)

புதிய பேராலயம் தூண்கள் இல்லாமல் மிகவும் திறமையான மாடர்ன் ஸ்டைலில் கட்டப்பட்டிருந்தது. உள்ளே ஏராளமான மக்கள் வீற்றிருக்க, திருப்பலிகள் ஸ்பானிஷில் தொடர்ந்து நடைபெற்றன. இப்புதிய கட்டடம் அமிழாதபடி, புதுடெக்னாலஜியில் கட்டப்பட்டிருந்தது. அதன் பைப் ஆர்கன் மிகப்பெரியது . சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தேன்.

வெளியில் இருந்த மிகப்பரந்த திறந்த வெளியில் போப் ஜான் பாலின் பிரமாண்ட சிலை இருந்தது. அங்கிருந்த ஆலயக்கடையில் ஓரிரண்டு நினைவுப்பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்தேன். நமது குரூப் அங்கே ரெடியாக இருந்தது. கூட வந்த சக பயணிகள் இப்போது கொஞ்சம் அறிமுகமடைந்து புன்சிரித்தனர்,பேசத்தான் முடியவில்லை.


     இந்த தடவை முதலில் என்னைத்தான் இறக்கிவிட்டனர். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, இக்கியின் கையில் ஒரு 50 பீசோவை (அதிகமா? குறைவா?) திணித்துவிட்டு இறங்கினேன். மணி 7 தான் ஆகியது.

ரூமுக்கு சென்று முகம் கழுவி வெளியே வந்தேன். கொஞ்சம் பழங்கள் வாங்கலாம் Tropical பகுதி என்பதால் சல்லிசாக கிடைக்கும் என நினைத்து, பக்கத்தில் உள்ள மார்க்கெட்டின் முகவரியைப் பெற்றுவிட்டு வந்தேன். (எச்சரிக்கை: தெரு விளக்குகள் அவ்வளவு அதிக ஒளி தருவதில்லை.).


ஒரு வழியாக கண்டுபிடித்து உள்ளே நுழைந்தேன். சிப்ஸ் எங்கே இருக்கும் என்று கேட்டேன். மறுபடியும் அதே பிராப்ளம் , நான் என்ன சொல்கிறேன் என்று யாருக்கும் விளங்கவில்லை. சடுதியாக காய்கறிப்பகுதியில் சென்று ஒரு உருளைக்கிழங்கு எடுத்து சைகையில்  வெட்டி , வாணலியில் இட்டு வறுத்துக்காட்டி  எங்கே சிப்ஸ்? என்று கேட்டேன் . ஊஹீம் ஒன்ணும் பேரல. ஆனால் என்னைப்பார்த்து சிறு கலவரத்துடன் நகர்ந்தனர் . ஒரு வேலை பைத்தியம்னு நெனைச்சிட்டாய்ங்க போல. முழு கடையையும் 40 நிமிடங்கள் சுற்றி சிப்சை  கண்டுபிடித்தேன் . பாக்கெட்டில் ஆங்கில வார்த்தைகள் ஏதுமில்லை . பின்னர் மறுபடியும் காய்கறி பகுதிக்குச் சென்றேன்.

ஆஹா, கொய்யாப்பழம்,சல்லிசான விலையில். நியூயார்க்கில் கொய்யாப்பழம் ஒரு பவுண்டு -(சுமார் 1/2 கிலோ) 4 அல்லது 5 டாலர் இருக்கும். பெரிசு பெரிசா இருக்கும். சாப்பிட்டால் சள்ளென்று ஒரு சுவையும் இருக்காது . ஊர் திரும்பும்  போது வாங்கிக்கொண்டு  போக வேண்டும் என்று நினைத்தபடி, ஒரு மூன்று கிலோ கொய்யா வாங்கினேன் . உள்ளே சிவப்பான, சிந்தாமணி  சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருந்தது. அதில் கொஞ்சம் வாங்கிக்கொண்டு, சிறிய ரஸ்தாளியும்,அத்திப்பழமும் வாங்கினேன். திரும்பினால் ,நன்கு விளைந்த கரும்பு வெட்டி வைத்திருந்தார்கள் . ஒரு நான்கை வாங்கிக்கொண்டு ஹோட்டல் திரும்ப தெருவில் நடந்தால், ஹோட்டலைக் காணவில்லை .