Monday, January 18, 2021

டி ஐ ஜி என் மாமா!

பரதேசியின் வாகனங்கள் பகுதி-3



                   இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்
https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post.html

தொடர்ந்து இரண்டு நாள் மாட்டியதால், மூன்றாவது நாள் மிகுந்த டென்ஷனில் இருந்தேன். ஆனால் அன்றைய நாள் சிக்னல் இருந்ததால் யாரையும் பார்க்காமல் நேராக ஓட்டி வந்து விட்டேன். அடுத்த நாளும் ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. ஒரு வாரம் இப்படிக் கழிந்தது.

ஆனால் அதன்பின் வந்த அடுத்த வாரத்தின் முதல் நாளில் அதே போல் வந்து கொண்டிருக்கும் போது மறந்து போய் அங்கிருந்த போலீஸ்காரரை கண்ணுக்கு கண் பார்த்துவிட்டேன். வழியை மறித்து ஓரங்கட்டச் சொன்னார். எனக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்துவிட்டது. உடனே நீங்க நினைக்கிறது போல எதுவும் நடக்கவில்லை. "சார் டெய்லி இதே தொல்லையாப்போச்சு, எனக்கு வண்டியும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு" அவரிடம் சொல்லிட்டு , ஆனால் கையில் சாவியையும் வைத்துக் கொண்டு விடுவிடென்று எதிர்த்திசையில் நடந்தேன். அதிர்ந்து போன போலீஸ்காரர் என் பின்னால் ஓடி வந்து, "தம்பி கோபப்படாதே வண்டியை  எடுத்துட்டுப்போ, எல்லாம் உங்க பாதுகாப்புக்காகத்தான் இதையெல்லாம் செய்யறோம்”னு சொன்னதைக் கேட்டவுடன் எனக்குக் கோபம் போய்  சிரிப்பு  வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் போனேன். நான் உள்ளே நுழையும்போது, வெளியில் 

புரொடக்சன் மேனேஜர் நஸீர் வந்து கொண்டிருந்தார். "எங்க போன, உன்னைத்தேடினோம், பிரஸ்ஸிங் செக்சனில் ஒரு பிரச்சனை, என்னன்னு போய்ப்பாத்துட்டு என்ட்ட சொல்லு”ன்னு சொன்னார்.

அதுக்கப்புறம் மதியம் லஞ்சுக்குப் பிறகு, அவரைப் பார்க்கும் போது, "என்னப்பா எப்பவும் எல்லோருக்கும் முன்னால வந்துருவ, என்னாச்சு அடிக்கடி லேட்டா வர்றயே? என்ன பிரச்சனை"ன்னு கேட்டார். தினமும் எனக்கு நடக்கும் பிரச்னைகளை அவரிடம்  சொன்னேன். அப்ப அவர் பலமாகச் சிரித்துவிட்டு, அத சால்வ் பண்றதுக்கு ஒரு ஐடியா கொடுத்தார்.

 "சார் இது வொர்க் அவுட் ஆகுமா? அவங்க செக் பண்ணா என்னாகும்?”

"ஒண்ணும் ஆகாது, அவங்க நிச்சயமா செக் பண்ணமாட்டாங்க”,ன்னு சொன்னார். நானும் அத அடுத்த நாள் டிரை பண்ணேன்.

அன்னிக்குப் பிடிச்சா என்ன சொல்றதுன்னு மனசுக்குள் பிராக்டிஸ் பண்ணேன். ஆனாலும் கொஞ்சம் உதறலாத்தான் இருந்துச்சு. அவங்க அசோஸியேஷன்ல பேசி இப்படி தினம் ஒரு இளிச்ச வாயன் வாரான் , அவனிடம் முடிந்த அளவுக்கு கறக்கச்சொல்லி சர்குலர்  அனுப்பிருப்பாய்ங்க போலருக்கு .நெத்தியில் எனக்குத்தெரியாத ஒன்றை அவர்கள் படிப்பது போல எனக்கு சந்தேகமாக இருந்தது  அதே மாதிரி என்னைப் பாத்ததும் போலீஸ்காரர் என்னை ஓரம் கட்டச்சொன்னார். நானும் அவர்ட்ட போய், "சார் என்ட்ட லைசென்ஸ் RC புக், ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் கரெக்டா இருக்கு. ஸ்பீடும் ஸ்லோவாத்தான் வந்தேன். ஆனாலும் தினம் பிடிக்கிறீங்க. இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் அவரை தொந்தரவு பண்ணவேணாம்னு நினைச்சேன். ஆனால் வேற வழியில்லை, அவர்ட்ட சொல்ல வேண்டியதுதான்."




அவர் தெனாவட்டாக சிரித்துக் கொண்டு, "யார்பா அவர்" என்று கேட்டார். "இருங்க வர்ரேன்”,னு சொல்லிட்டு, பாக்கெட்டில் இருந்து, பேப்பர், பேனாவை எடுத்து அவருடைய நேம் பேட்ஜ்,  பார்த்து அவருடைய பேரையும் நம்பரையும் எழுதினேன்.

"என்னப்பா சொல்ற?”, சிறிது குரல் மாறியது.

"எந்த ஸ்டேஷன் சார் நீங்க?

"யாருப்பா அவர்"

"அலெக்சாண்டார், டிஜிபி"

அவர் கொஞ்சம் கலவரமாகி, "அவரை உனக்கு எப்படித்தெரியும்"

“அவர் என்னோட அங்கிள்

“உங்க பேர்?” மரியாதை கூடியது.

“என்னோட பேர் ஆல்ஃபிரட்”

 இரண்டு பெரும் இங்கிலீஸ் பேர்னால அந்தப் போலீஸ்காரர் ரொம்பப்  பயந்து போய்,

"சார் முன்னால சொல்லக்கூடாதா" வண்டியை எடுத்துட்டு போங்க சார்" மரியாதை ரொம்ப கூடிப் போனது.

நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு கொஞ்சம் கெத்தாகவே வண்டியை எடுத்துட்டுப் போனேன். போய் நஸீர் சார்ட்ட சொல்லி, ரெண்டு பேரும் நல்லாச் சிரித்தோம்.

அதுக்குள்ள நானும் வண்டி ஓட்டறதுல கொஞ்சம் தேறி, ஓரமாய் ஓட்டாமல் ரோட்டின் நடுவில் ஓட்ட ஆரம்பிச்சேன். ஓரிரு முறை அவர் பேரை யூஸ் பண்ணேன். ஓரிரு முறை என்னை வழியில் பார்த்த அதே போலீஸ்காரர் மெல்லிய ஒரு சல்யூட் வைத்ததாக ஞாபகம்.

அதுக்குள்ள எனக்கு ரொம்ப வேண்டியவர் சந்திரசேகர் என்பவர் சென்னையின் வடபழனி பகுதியின் அஸிஸ்டண்ட்  கமிசனராகப் பதவியேற்றதால் எனக்கு தெனாவட்டு மேலும் கூடிப்போனது.  

இந்த சந்திரசேகர் என்னுடைய முதுகலை வகுப்புத் தோழியின் சகோதரர். இவரை நான் படிக்கும் போதிருந்தே நன்றாகத் தெரியும். சமீபத்தில்தான் DIG ரேங்கில் ஓய்வு பெற்றார் இன்னும் சொல்லப்போனால் இவருடைய மனைவிதான் தமிழச்சி தங்கப் பாண்டியன், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர். இவர்களுக்கு கலைஞர் தலைமையில் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த திருமணத்தில் நானும் கலந்து கொண்டேன்.  இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சுமதி என்ற தமிழச்சி தங்கப்பாண்டியனின் இளைய சகோதரர்தான் தங்கம் தென்னரசு, தமிழக கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். இவர்கள்  குடும்பம் முழுவதும் எனக்கு நெருக்கமானவர்கள்.

 

கொஞ்சம் நாட்கள் எந்த பிரச்சனையில்லாமல் வண்டி ஓடியது. எந்த வண்டின்னு கேட்டீங்கன்னா இரண்டு வண்டியும்தான் ஒன்று வாழ்க்கை வண்டி மற்றொன்று என்னுடைய வாகனமான கிரே கலர் டிவிஎஸ் சேம்ப். அதில் ஏறி ஓட்டும்போது ஒரு சேம்பியன் போலத் தோன்றவில்லை என்றாலும், சென்னையின் சாலைகளை எல்லா முறைகளிலும் அறிமுகப்படுத்திய வண்டி அதுதான்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு மறுபடியுமாக அதே இடத்தில் ஓரங்கட்டப்பட்டேன். இப்போது கொஞ்சம் தைரியம் அதிகமாகி விட்டது.

"என்ன சார் எதுக்கு நிறுத்தச் சொல்றீங்க “

"தம்பி லைசென்ஸ், RC Book எல்லாம் எடு"

"அதான் எதுக்குன்னு கேட்டேன்?"

"தம்பி மேலிடத்து உத்தரவு, எல்லாத்தையும் செக் பண்றோம்".

"சார் நானும் மேலிடம் தான் என் மேல ஏதாவது தப்பிருந்தா சொல்லுங்க. இந்தாங்க லைசென்ஸ் RC புக் எல்லாம், நல்லாப்பாருங்க"

"தம்பி ஸ்பீடு"

"சார் உங்களுக்கே நல்லாத்தெரியும் நான் மிக மெதுவாத்தான் வந்தேன். நாங்கல்லாம் நல்ல குடும்பம் சார். அப்படி அடாவடியாக ஓவர் ஸ்பீட் போகமாட்டேன்.

"என்ன தம்பி மேலிடம்ற, யாருப்பா நீ"

"சந்திரசேகர் தெரியுமா?"

“யாருப்பா அவர்”

"சந்திரசேகர் ஐபிஎஸ், வடபழனி ஏ.சி"

"ஆமா ஐயாவைத் தெரியும் ஆனா நீங்க"

"நான் ராஜசேகர் சந்திர சேகரோட தம்பி"

அப்புறம் நடந்ததை அடுத்த பகுதியில் சொல்றேன்.    

 

தொடரும்

 

6 comments:

  1. ஆகா! பகீர்னு பன்ச் கொடுத்திட்டீங்களே, அவருக்கு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கிரேஸ்.

      Delete
  2. தம்பின்னு சொல்லி இருக்க வேண்டாமோ...பக்பக்குனு இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. பக் பக்குனு இருக்கே ஸ்ரீராம் .


      Delete
  3. ஒருவேளை கேட்டவர் அவரின் சொந்தமோ...?!

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியும் இருக்கலாமோ ?

      Delete