Thursday, July 14, 2016

அரவிந்த்சாமி ஒரு அதிசயம் !!!!!!!!!!!!!

 ஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1
Fetna -2016
ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்த விடுமுறை நாட்களில் FETNA  (Federation of Tamil Sangams of North America) என்று அழைக்கப்படும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின் 29 ஆம் ஆண்டுவிழா, இந்த வருடம்  நியூஜெர்சியில் உள்ள டிரெண்ட்டன் நகரில் கோலாகலமாக நடந்தேறியது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தமிழ்ச்சங்கம் இதனைப் பொறுப் பேற்று நடத்தும். இந்த வருடம் இதனை நடத்தியது நியூஜெர்சி தமிழ்ச்சங்கம். அதில் நடந்த சில சுவையான நிகழ்வுகளை சில பதிவுகளின் மூலம் பதிய விழைகிறேன்.


ஏறத்தாழ 2000 பேர் நாடு முழுவதிலிருந்து திரளாக வந்து பங்குபெற்றனர். இந்தியாவிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள் வந்து கலந்துகொண்டனர். அதில் ஒருவர் நடிகர் அரவிந்தசாமி. மேடையில் தோன்றி தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் மிகவும் சுவைபட பதில்களைத் தந்து அசத்தினார்.  

அரவிந்த் சாமி நடிகர் மட்டுமல்ல திறமை வாய்ந்த ஒரு தொழிலதிபர். அவருடைய நிறுவனத்தில் தற்சமயம் 4000 பேர் பணிபுரிகிறார்கள். ஒரு நடிகர் என்ற முறையில் மட்டும் அல்லாது ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்ற முறையிலும்  அவர் அழைக்கப்பட்டிருந்தார்.  

சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட புதிய சீசனான, “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"யை நடத்தும் அரவிந்த் சாமியின் திறமையைப் பார்த்து ஏற்கனவே வியப்பில் ஆழ்ந்திருந்த என்னை அவருடைய மற்ற பிறகோணங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

Add caption
சிங்கப்பூரில் நடந்த SIMA அவார்டு நிகழ்ச்சியில் தான் விருது வாங்குவதையும் விடுத்து, ஏற்கனவே ஒத்துக் கொண்டதால்  இங்கே ஃபெட்னா விழாவிற்கு வந்திருந்தார்.

1.   Ramakrishnan Chandrasekaran , Exe.Vice Chairman, Cognizant
2.   N Chandra, CEO, TCS
3.   Eash Sundaram, CIO Jet Blue Airways
4.   Jhansi kandasamy, VP, GE

போன்ற ஜாம்பவான்கள் கலந்துகொண்ட, தமிழ் தொழில் முனைவோர் அமர்வில் உரையாற்றினார். பதின் பருவப் பிள்ளைகளின் அமர்வில் ஒரு சிறப்புரை ஆற்றினார்.

அது தவிர பொது மேடையில் வந்தபோது ஒரு சிறிய நேர்காணலில் பங்கு கொண்டார். Fetna  நிகழ்வுக்கு தயாரான ஆரம்ப சமயத்திலிருந்து, NJ தமிழ்ச்சங்கத்தின் தலைவி உஷா கிருஷ்ணகுமாருக்கு, நியூஜெர்சியிலிருந்து ஒரு பெண், அரவிந்த்சாமியைக் கண்டிப்பாய் கூப்பிடுங்கள் என்று facebook மூலம் வேண்டுகோள் விட்டபடி இருந்தாராம். அரவிந்த்சாமி மேடைக்கு வரும்போது இதனைச் சொல்லி, அந்தப் பெண் கூட்டத்தில் இருந்தால் மேடைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் உஷா. அந்தப் பெண் முந்திய தினமே அரவிந்த் சாமியைப் பார்த்துப் பேசி புகைப்படமும் எடுத்துவிட்டாராம். கல்லூரியில் படிக்கும்போது அரவிந்த்சாமி என்றால் பைத்தியமாம். கல்லூரியைக் கட் அடித்து பல தடவை அவருடைய சினிமாவுக்குப் போயிருக்கிறாராம். அவரும் பலத்த கைதட்டலுக்கிடையே மேடையில் வந்து,  "நேற்று என்னைப் பார்த்தவுடன் என்ன நினைத்தீர்கள் ?", என்ற ஒரு அபத்தமான கேள்வியைக் கேட்க, அரவிந்தசாமி கொஞ்சமும் சளைக்காமல் "இதற்காகத்தான் நியூஜெர்சி வந்தேனோ" என்று தோன்றியது என்று சொல்ல சபை ஆர்ப்பரித்தது.

செல்வச் சிறப்பில் ஒரு இளவரசன் போல இவரை இவரின் தந்தை வளர்க்கவில்லை. இப்படி வளர்பவர்கள்தான் பிற்காலத்தில் தந்தையினையும் மிஞ்சி உயர்வார்கள். பெற்றோர்கள், என்னையும் சேர்த்து, செய்யும் பெருந்தவறு, எனக்குக் கிடைக்காத, நான் அனுபவிக்காத எல்லாவற்றையும், என் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, அதீத செல்லம் கொடுத்து பிள்ளைகளைக்கெடுத்துவிடுகிறோம். இப்படி வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தம் சொந்த முயற்சியில் வாழத்தெரியாமல் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள். அரச குடும்பத்திலிருந்து சாதாரண குடும்பம் வரை இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆனால் இதற்கு மாறாக, வீட்டில் பல வாகனங்கள் அணிவகுத்து நின்றாலும், அரவிந்தசாமி பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றது அரசுப் பேரூந்தில் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

கல்லூரியில் படிக்கும்போது கூட அவருடைய தினசரி பாக்கெட் மணி வெறும் பத்து ரூபாய் மட்டும்தான். அதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை. அதிகம் கேடடாலும் தந்தை மறுத்துவிட்டதால் எப்படி செலவை சமாளிப்பது என்று யோசித்ததில் பிறந்த ஐடியா தான் 'மாடெலிங்'. ஆரம்ப கால கட்டத்தில், யாரிந்த அழகான வாலிபன் என்று டிவி விளம்பரங்களில் நீங்கள் பார்த்து வியந்திருக்கலாம்.

அந்த விளம்பரத்தைப் பார்த்த மணிரத்தினம் தளபதியில் வாய்ப்புக் கொடுத்தார். தளபதியில் அந்தத் துடுக்கான IAS ஆஃபீசரை யாரும் மறக்க முடியாது. அதன்பின் ரோஜா, பம்பாய் என்று உச்சத்தைத் தொட்டது வெறும் 20 வயதுக்குள். திடீரென்று எங்கே அரவிந்த் சாமி என்று எல்லோரும் தேடிக் கொண்டிருக்கையில், அப்பாவின் கட்டளைக்கிணங்க நார்த் கேரலினா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு வருகிறார். அம்மாவும் அப்பாவும் இறந்துவிட தந்தையின் நிறுவனம் இவர்தலைமேல் விழுந்தது.

அதனை நல்லபடியாக நடத்தி, வளர்த்து, உயர்த்தி ஒரு நல்ல  தொழிலதிபராக வளர்ந்தார். சினிமாவை முழுவதுமாய்க் கைவிட்டார். இதற்கிடையில் ஒரு விபத்தில் முதுகில் டிஸ்க் நழுவ, வாத நோய் தாக்கி, இனிமேல் நடக்க முடியாது போய்விடுமோ என்ற அளவுக்கு படுத்த படுக்கை. ஆனால் அறுவை சிகிசை செய்யாமல் ஆயுர்வேத சிகிசை மட்டுமே செய்து இடைவிடாது கடுமையான உடற்பயிற்சியின் சிறிது சிறிதாக நடக்க ஆரம்பித்து  நன்றாக உடம்பு தேறியதும் ஒரு அதிசயம்தான்.

Add caption
இதற்கிடையில் உடல் பெருத்து 128 கிலோ வரை  போனது. ஒரு பத்திரிக்கையில் எப்படி இருந்த அரவிந்த்சாமி இப்படி ஆயிப்போனாரே என்று இரண்டு படங்களைப் போட்டு கிண்டல் பண்ண, அதற்குக் கொஞ்சம் கூட கோபமோ எதிர்விளைவோ ஆற்றாது, அந்தப் படத்தை தன் ட்ரெட் மில் முன்னால் மாட்டிக் கொண்டு ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டார். திரும்பவும் 80-85 கிலோவுக்கு கொண்டு வந்ததோடு அரை மாரத்தானை 2 தடவை முழுமையாக ஓடி முடித்திருக்கிறார், அந்த முன்படத்தை மாற்றிப்போடும் அளவுக்கு. இதில் எல்லாவற்றையும்விட எனக்கு அவரிடம் பிடித்த அம்சம், பணத்தையோ புகழையோ தலைக்கேற்றாத குணம். சத்தம் செய்யாமல் பலருக்கு செய்யும் உதவி. “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”யில் தான் நினைத்த உறுதிப்பணத்தை ஒரு சிறு தவறால் நழுவவிட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ஏழை ஆசிரியருக்கு தன் சொந்தப் பணத்தைக் கொடுக்க முன்வந்த தயாளம். அரவிந்த்சாமி ஒரு அதிசயம் தான்.  

நமக்குத் தெரியாத சில உண்மைகள்
1.   அர்விந்த் சாமியின் தந்தை  VD சாமி பெரிய  தொழிலதிபர்.
2.   தாயார் வசந்தா தேவி பிரபலமான பரதநாட்டிய கலைஞர்.
3.   VD சாமி தான் சங்கர நேத்ராலயாவின் நிறுவனர்.
4.   இவர்கள் இருவருக்கும் அரவிந்தசாமி வளர்ப்புப்பிள்ளைதான் .
5. தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமார்தான் அரவிந்தசாமியின் தந்தை.

Companies owned by Arvindsamy :  
1.   Igate Patni
2.   Talent Maximus
3.   Pro Lease India

பின்குறிப்பு :
“நீங்களும் வெல்லலாம் ஒருகோடி” மற்றும் நேரிடைப் பேச்சிலும் தமிழ் உச்சரிப்பில் 'ல,'ழ' சிறப்பாக இருக்கிறது. ஆனால் 'ள' தான் கொஞ்சம் 'ல' வாக ஒலிக்கிறது. கவனித்துப் பார்த்தேன், நன்றாக தமிழ்பேசும் சில தமிழாசிரியர்களுக்குக்கூட இந்தப்பிரச்சனை இருக்கிறது. பயிற்சியினாலும் முயற்சியினாலும் இதனைச் சரி செய்ய முடியும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் தானே. நல்லவேளை இவர், நண்பர் ஜேம்ஸ் வசந்தனிடம் இதுவரை மாட்டிக் கொள்ளவில்லை.

ஃபெட்னா பதிவுகள் தொடரும் 





Monday, July 11, 2016

ஆண் லீயும் பெண் லீயும் !!!!!!!!!!!!

சீனாவில் பரதேசி -15

லீயை ஏற இறங்கப் பார்த்தேன். ஆள் வாட்ட சட்டமாய் உயரமாய் நல்ல எனர்ஜியுடன் இருந்தான். மொத்தத்தில் என்னைப்போல இல்லை. ஆஹா டூரிஸ்ட் கைட் மட்டும் இல்லை, எனக்கு நீ நல்ல பாடி கார்டாகவும் இருப்பாய் என நினைத்துக் கேட்டேன். ( ஆமா நீ பெரிய செலிபிரிட்டி , உனக்கு பாடி கார்டு வேற ஒரு கேடா? : யார்ராது எனக்கு தெரியாம உள்ளே புகுந்தது , மகேந்திரனா  இருக்குமோ இல்லை நம்ம மனசாட்சியா ?  ) 

உன் முழுப்பெயர் என்ன லீ ?.

“பரவாயில்லை உன்னை லீ என்றே கூப்பிடுகிறேன்”.

“உங்க முழுப்பெயர் என்ன ஆல்ஃபி ?”

“பரதேசி ஆல்ஃபிரட்  ராஜசேகரன் தியாகராஜன்”

“வேண்டாம், நான் உங்களை ஆல்ஃபி என்றே கூப்பிடுகிறேன்”.

எப்பூடி என் கிட்டேயா நெருப்புடா , தமிழன்டா என்று நினைத்துக் கொண்டே அவனைப்பார்த்து சிரித்தேன்.

          “லீ நமக்கு முழுதாக அரை நாளுக்கு மேல் இருக்கிறது. என்ன செய்யலாம்? என்ன பார்க்கலாம்?”.

“அப்படி யென்றால் என்ன அமர்த்திவிட்டீர்களா?”

“ஆமாம்”, என்று தலையசைக்கும் போது, ஒரு அல்ட்ரா மாடர்ன் கறுப்புக் கண்ணாடி அணிந்த, ஒரு மஞ்சள் பெண் அதீத புன்னகையுடன் அருகில் வந்தாள். ஐயையோ கொஞ்சம் அவரசப்பட்டுட்டேன் போல.

“ஹாய், யு மஸ்ட் பி ஃரெம் இண்டியா”  

“எஸ் ஐ ஆம்”

“ஐ ஹேவ் பீன் டு பாம்பே, நைஸ் பிளேஸ்”

யா ?”
“இண்டியா இஸ் எ பியூட்டி ஃபுல் கன்ட்ரி”

“எஸ் இண்டீட்”

என்னடாது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா, அட ஆமாங்க ஆமா ,  போன பதிவில் வரிக்கு வரி லீ சொன்ன அதே வார்த்தைகளை அவளும் சொல்ல உங்களை மாதிரியே நானும் திகைத்துப்போனேன்.   (ந்தப்பதிவை படிக்க இங்கே சொடுக்கவும் http://paradesiatnewyork.blogspot.com/2016/07/blog-post.html )
“ஐ ஆம்... லீ ,  *?!@&@%*+.. லீ”   என்றாள்.

என்னாது இவளும் லீயா?

“பரவாயில்லை உன்னை லீ என்றே கூப்பிடுகிறேன்”

“நைஸ்டு மீட் யூ”, என்று கைகுலுக்க, அதற்குள், ஆண் லீ வந்து இந்த பெண் லீயுடன் ஏதோ காரசார சீன பாஷையில் பேசினான். சீனர்கள் சாதாரணமாக பேசுவதே சண்டை போடுவது போல்தான் தெரியும். எனவே உண்மையில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது, ஆண் லீயைப் போல, இந்தப் பெண் லீயும் கைட்தான் போல. ஆண் லீ தன் கஸ்டமரை அபகரிக்க வந்த பெண் லீயுடன் தகராறு செய்வது போல்தான் தெரிந்தது.

இருவரையும் பார்த்தேன், இந்த பீஜிங் இளவரசி பெண் லீ பியூட்லியாகத் தெரிய அந்த ஆண் லீ அக்லியாக தெரிய கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம்னு நெனைச்சேன். இருவரும் மீண்டும் அருகில் வந்து “எங்கள் இருவரில் உங்களுக்கு கைடாக யார் வேண்டும் ?”, என்று கேட்டார்கள்.

என் மனசு “பெண் லீ பெண் லீ”, என்று அலற அதனை அலட்சியம் செய்து ஆண் லீயைக் காண்பித்தேன். (ஆமா இவரு பெரிய உத்தம புத்திரன் : யார்ரா இது மறுபடியும் நடுவில , எனக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்கு பாஸ்). அதனைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட பெண் லீ அவ்விடம் விட்டு நகர்ந்தாள். அட , அவள் முகத்தில் ஒரு முறைப்போ எரிச்சலோ தெரியவில்லை மாறாக ஆச்சரியம்தான் தெரிந்தது . “போகுதே போகுதே”, என்று என் மனம்பாட பின்னால் திரும்பிப் பார்த்தேன், அங்கே ஒரு இளவயது வட இந்தியன் கேப்பும் ஜீன்சும் அணிந்து வர, இந்தப் பெண் லீ அவனிடம் சென்று.

"ஹாய் யு மஸ்ட் பி ஃபிரம் இண்டியா" என்றாள்.

அடுத்து என்ன பேசியிருப்பார்கள் என்று உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும், பரவாயில்லை அவர்கள் ஜோடிப்பொருத்தம் நன்றாகவே இருந்தது.
'ஓகே லீ என்ன பிளான் ?' என்றேன் ஒரு பெருமூச்சுடன்.

“நமக்கு நேரம் இருக்கிறது. இங்கிருந்து ஒரு அரை மணி நேரப்பயணத்தில் சம்மர் பேலஸ் போகலாம்”.

“சரி ஒரு டாக்சியைப் பிடி”

“வேண்டாம் மெட்ரோவில் போகலாம், விரைவாகவும் சென்றுவிடலாம். கட்டணமும் கம்மி, தவிர இந்தச் சமயத்தில் கூட்டமும் கம்மியாக இருக்கும்”.

“சரி போகலாம்”.

சிறிது தூரம் நடந்து, சப்வே என்று நாங்கள் இங்கே சொல்லக் கூடிய மெட்ரோ ஸ்டேஷனை அடைந்தோம், டிக்கட்டை வாங்கினோம். நியூயார்க்கில் போல அல்லாது தூரத்திற்குத் தகுந்தாற்போல் கட்டணம் வாங்கினார்கள். நியூயார்க்கில் ஐந்து போரோவுக்குள் எங்கே எவ்வளவு தூரம் போனாலும் ஒரே கட்டணம் தான்.

இரண்டு டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைவதற்கு முன்னால் முழுவதுமாக சோதனை பண்ணித்தான் அனுப்பினார்கள்.

“என்னது இங்கே சப்வேயில் கூட சோதனை நடக்கிறதே?”.

“ஆமாம் இங்கே சில புரட்சிவாதிகள் உண்டு”.

“என்னது திருநெல்வேலிக்கே அல்வாவா?”

“வாட்?”

“இல்லை கம்யூனிஸ்ட்டுக்கே எதிராக புரட்சியா?”

“சீனாவில் சில பகுதிகள் தனி நாடு வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள்”.

“ஐயையோ இங்கேயுமா? பயணம் பாதுகாப்பானது தானா ?”

“ ஒன்றும் கவலைப்படாதே, நான் இருக்கிறேன்”.

          சப்வேயைப் பார்த்து அசந்துவிட்டேன். மிகவும் சுத்தமாக புதிதாக, பளிச்சென்று இருந்தது. அதோடு மிகுந்த பாதுகாப்புடன் இருந்தது. எப்படியென்றால் தொடர் வண்டிக்காக காத்திருக்கும்போது, பயணிகளுக்கும் வண்டி வரும் பாதாளத்திற்கும் இடையில் ஒரு கண்ணாடித் தடுப்பு இருந்தது. வண்டி வந்த பின்னர்தான் அது திறந்து வழிவிடுகிறது. அதன் பின் வண்டியின் கதவுகள் திறக்க, நாம் உள்ளே போகலாம். இரண்டுமே தானியங்கிக் கதவுகள். இங்கே நியூயார்க்கில் பள்ளத்தின் ஓரமாக நிற்க வேண்டும். எந்த பாதுகாப்பும் இல்லை. நியூயார்க்கில் வண்டிக்கு காத்திருக்கும் போது பள்ளத்தில், தவறியோ தற்கொலைக்காகவோ, அல்லது சண்டையிலோ உள்ளே விழுந்து இறந்து போன கதைகள் உண்டு.

இதையெல்லாம் பாராட்டி வியந்த வண்ணம் நின்று கொண்டிருந்த போது, வண்டி வந்தது. உள்ளே எல்லாரும் முண்டி அடித்துக் கொண்டு ஏறினர். ஆஹா இதோ ஆசியத்தன்மை வந்துவிட்டதே. வண்டி முழுவதும் ஆட்கள் நிறைந்து உட்கார இடம் கிடைக்கவில்லை.

“என்ன இது மதிய நேரத்தில் இவ்வளவு கூட்டம், கூட்டம் இருக்காதுன்னு சொன்னியே”.

“இதெல்லாம் ஒரு கூட்டமேயில்லை”

“என்ன கூட்டமில்லையா?”

“ ஆமாம் பீக் நேரத்தில் நிற்கக் கூட இடம் கிடைக்காது”.

“சரி அதை விடு , அந்த பெண் லீயிடம் என்ன பேசினாய்?”

““நானும் அவளும் காலையிலிருந்து நின்று கொண்டிருந்தோம். நீங்கள் தான் முதல் கஸ்டமர்”.

“ஆமாம் ஒரு பெண்ணுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியது தானே? பாவம் அவளிடம் ஏன் சண்டை போட்டாய்?”

“என்ன சண்டைபோட்டேனா, இல்லவே இல்லை அவளுக்கு கஸ்டமர் கிடைக்க வாழ்த்துச் சொல்லிவிட்டு, ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் வீட்டுக்குப்போ என்றேன்”

“அவளை வீட்டுக்குப் போகச்சொல்ல நீ யார்?”

“ஏனென்றால் நான் தான் அவளுடைய அப்பா”

தொடரும்


Thursday, July 7, 2016

முல்லைக்குத் தோள் கொடுத்த பரதேசி !!!!!!!!

crowded Penn Station
E train Crowd 

நியூயார்க் சப்வேயில் பயணம் செய்வது அனுதினமும் சாகசம் நிறைந்தது. முடிவு பண்ணிட்டா ரெண்டு பிரச்சனை. முதலில் எந்தப்பக்கம் போகிறது என்பதை நன்கு பார்த்து முடிவு செய்து பின்னர்தான் உள்ளே நுழையணும். இல்லேன்னா எதிர்ப்பக்கம் போயிருவோம். எந்தப்பக்கம்னு முடிவு பண்ணிட்டா, ரெண்டு பிரச்சனை. வண்டியில் முன்புறம் ஏறுவதா, பின்புறம் ஏறுவதானு, நல்லா பார்த்து றனும். இல்லேன்னா ஒவ்வொரு பகுதியும் வேறு ஒரு தெருவில கொண்டுபோய் விட்டுறும், அப்புறம் அல்லாடனும்.

அதுக்கப்புறம் உள்ளே ஏறும்போது ரெண்டு பிரச்சனை. காலியா இருக்கா, கூட்டமா இருக்கானு. காலியா இருந்தா ஏறக்கூடாது. ஆஹா அதிர்ஷ்டம்னு ஏறினீங்கன்னா, அங்க மூலையில் ஒரு ஹோம்லஸ் படுத்திருக்கும்.  என்னான்னா அந்த வண்டியின் கேரேஜில் உள்ள நறுமணம் ஓசியில நாசியைத்துளைச்சி, மாஸ் காண்பிச்சு, மூக்கில நுழைஞ்சு மூளை வரைக்கும் ஏறிரும்.
Inside the train
தப்பிச்சு அடுத்த கேரேஜில் ஏறினா பாதிக்கப்பட்ட பலரும் கூட்டமாய் கண்ணு கலங்கிப்போய், மூக்கை மூடிட்டு இருப்பாய்ங்க. மிச்ச சொச்ச வாடை அவங்க மேலேயும் லேசா அடிக்கும்.

 கேரேஜில ஏறிட்டீங்கன்னா ரெண்டு பிரச்சனை. உட்கார இடம் இருக்கா இல்லையான்னு. நின்னுட்டு வரதுன்னா ரெண்டு பிரச்சனை. பிடிக்கிறதுக்கு கம்பி எட்டுமா இல்லையான்னு. உட்கார இடம் கிடைச்சா ரெண்டு பிரச்சனை. ரெண்டு பக்கமும் 2 அசுரர்கள் இல்லேன்னா அசுரிகள் உட்கார்ந்து உங்களை நசுக்க, பிதுக்க பாத்துட்டு இருக்காங்களா, இல்லை ரெண்டு பக்கமும் ரெண்டு தேவதைகள் நாசூக்காய் உட்கார்ந்து பட்டும் படாமலும் இருக்காங்களான்னு.

அபூர்வமாக சிலசமயம் ஓர சீட்டும் கிடைக்கும். இதுல என்ன விசேஷம்னா பிரச்சனை ஒரு பக்கம்தான் வர சான்ஸ் இருக்கு. அப்படி ஒரு அதிர்ஷ்ட நாள்ல, சப்வே காரில் ஓர சீட் கிடைச்சு சாவகாசமா  உட்கார்ந்து, ஏதாவது எழுதலாம்னு பேனா பேப்பரை எடுத்தேன். பக்கத்தில் ஒரு கடோத்கஜன் தொடைகளை விரித்து உட்கார்ந்திருக்க, நான் பல்லி போல் ஓர சீட்டில் ஒட்டிக்கொண்டு இருந்தேன்.  

கடோத்கஜன் தொடையை விரித்துக் கொண்டே போக, நான் என் உருவத்தை சுருக்கிக் கொண்டே போக, ஒரு சமயத்தில் என் ஒத்தை நாடி சரீரம் அரை நாடி சரீரமாக அடங்கி ஒடுங்கி ஒதுங்கியது. அடச்சீ இதுக்கு நின்னுக்கிட்டே இருக்கலாம்னு நெனைச்ச போது ஜீரோ சைசில் ஒரு ஸ்பானிய தேவதை எனக்கு முன்னால் நின்று கொண்டு இதையெல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டே சிரித்துக்கிட்டே இருந்தது.

இதுக்கிடையில யூனியன் டர்ன்பைக் வந்துவிட, கடோத்கஜன் மிகவும் முயன்று எழுந்து வெளியேறினான். என் பக்கத்தில் இன்னும் ரெண்டுபேர் உட்கார இடம் இருப்பது போல் தெரிந்தது. அந்த ஸ்பானியப் பெண் புன்னகை மாறாமல் பக்கத்தில் உட்கார்ந்தாள். பக்கத்தில் உட்கார்ந்த அவளைப் பார்த்து "கொமாஸ்தாஸ் ?" என்றேன். "பியன்" என்று சொல்லிவிட்டு புன்னகைத்தாள். மெக்ஸிகோவில் கற்றுக் கொண்டது அப்போது உதவியது.

நானும் கொஞ்சம் ஆசுவாசப்பட்டு மீண்டும் அரை நாடி உடம்பை ஒத்தை நாடியாக மாற்றி சரியாக உட்கார்ந்து பேப்பரை எடுத்து எழுத ஆரம்பிச்சேன்.

எழுதுவதை அந்தப் பெண் உத்து உத்துப் பார்த்ததால், நான் நிதானப்பட்டு முடிந்தவரை அழகாக எழுத ஆரம்பித்தேன். அவள் கண்கள் விரிய என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, "என்ன மொழி இது?”, என்று கேட்டாள்.


நானும், "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே" என்று ஆரம்பித்தவுடன் அவள் சிறியதாக ரோஸ் நிற ஈறுகள் தெரிய ஒரு கொட்டாவியை விட்டாள். நானும் விடாமல் எம்மொழியாம் செம்மொழியைப் பற்றி மேலும் கூற முற்பட, அவள் தூங்கிவிழ ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வந்த அவள், ஒரு கட்டத்தில் என் வலதுபுற தோளில் தலைவைத்து மூசு மூசுன்னு தூங்க ஆரம்பித்தாள். பாவம் சிறு பெண் என்று நினைத்து நானும் வாளாவிருக்க, அவள் விட்ட சிறு குறட்டை காதுக்கருகில் இருந்ததால் கொஞ்சம் பெருங்குரட்டை போலவே கேட்டது.

என்னுடைய அரட்டை தாங்காமல் வந்த குறட்டை என்பதால் நானும் பொறுத்துக் கொண்டேன். என்னடா இது, இந்த பரதேசி தோள்ல யாரோ ஒரு பிறதேசி தூங்கிட்டு இருக்கேன்னு, யாரும் பாத்தா என்னை தப்பா நினைச்சுருவாங்களேன்னு வேற பயமாயிருந்துச்சு. தொடர்ந்து எழுதினால் தோள் அசைவு ஏற்பட்டு அவள் எழுந்துவிடப் போகிறாள் என்று நினைத்து எழுதுவதையும் நிறுத்திவிட்டேன். இதுல நம்ம ஸ்டாப் வந்துட்டா என்ன செய்யறதுன்னு வேற ஒரு பக்கம் ஓடிட்டிருந்துச்சு.

தமிழன் வரலாற்றை தாராளமாகச் சொல்ல நினைத்த நான், தாரகை தூங்கி விட்டதால் சிறிது ஏமாந்து போனாலும், “முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, இந்தக்  கிள்ளைக்கு தோள் கொடுத்தான் பரதேசி”, என்று நினைத்து நம் தமிழ்க் கலாச்சாரத்தை காத்த வள்ளல் போல் பெருமையுடன் கண்களை மூட, அருகில் இருந்த கதகதப்பாலோ, இல்லை நேத்து ராத்திரி லேட்டா தூங்கினதாலோ, நானும் கொட்டாவி விட்டேன்.

இந்தக் கொட்டாவி என்ற கெட்டாவி வந்தால், தூக்கமும் வந்துடும்னு தெரிஞ்சும் முடிஞ்சளவு உஷாரா இருந்தும், எப்படியோ நானும் தூங்கிட்டேன். 

34-ஆவது தெரு வந்துவிட்டதுன்னு கன்டக்டர் சொல்றது PA சிஸ்டத்தில கேட்டவுடனே டக்குன்னு முழிப்பு வந்துருச்சு. வலது தோள் கனமாவே இருந்துச்சு. ஆஹா இன்னும் இந்தப்பெண்ணோட ஸ்டாப் வரலை போலிருக்குன்னுன்னு நினைச்சு ஓரக்கண்ணால பார்த்தேன்.

பாத்தா இது அந்த ஸ்பானிஸ் பொண்ணு மாதிரி தெரியல.

இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சு பாத்தப்பதான் தெரிஞ்சது. இப்ப என் தோள்ல படுத்திருந்தது ஜீரோ சைஸ் தேவதை இல்லை, இது பீரோ சைஸ் கடோத்கஜி. தலை மொட்டை, அவ்வளவு அகலமான ஆழமான மூக்கு ஒன்றை நான் இதுவரை இவ்வளவு குளோசப்ல பார்த்ததே இல்லை. கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டா நானே உள்ளே போயிருவேன் போல இருந்தது.

என்னடாது என் தோள் என்ன பப்ளிக் பிளாட்பாரமான்னு நினைச்சு, அசைச்சு அசைச்சு எழுந்தேன். வாயில் லேசாக ஜொள் வடிய  சிரித்தாள்.




மக்களே இப்ப வலது தோளும் ஒரு வாரமா வலிக்குது. திரும்பவும் உள்ளே எலும்பில் கீரல்?.

முற்றும்.


Tuesday, July 5, 2016

சொர்க்கத்தின் வாரிசு !!!!!!!!!!!!!

 சீனாவில் பரதேசி:14
Paradesi at Temple of Heaven

மாடர்ன் உடை தரித்த ஆண்மகன், தரையில் புரளும் நீள உடையணிந்த பெண். அவளின் பின்புறத்தில் ஒரு மிகவும் நீளமான சிவப்பு நிற துணி. இவர்கள் இருவரும் காதலர்கள் போல முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். கிட்டப்போய் பார்த்தவுடன் தான் தெரிந்தது ஏதோ விளம்பரப்படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

சரி நாம் இப்போது சொர்க்கத்தின் கோவிலைப்பற்றிய விவரங்களைத் தொடர்வோம். மிங் மற்றும் ஸிங்  பரம்பரையைச் சேர்ந்த பல பேரரசர்கள் இங்கு வந்து தம் தொழுகைகளை ஏறெடுப்பார்களாம். குறிப்பாக சொர்க்கத்தை நோக்கி ஏறெடுக்கப்படும் ஜெபம் நல்ல அறுவடையை வேண்டி ஏறெடுக்கப்படுமாம். “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல்உயரும், நெல் உயர  குடி உயரும், குடி உயர கோன் உயர்வான்” என்று தமிழில் அந்தக் காலத்தில் படித்தது ஞாபகம் வந்தது.


ஏனென்றால் நான் ஏற்கனவே தெரிவித்தபடி, சீனப்பேரரசர் சொர்க்கத்தின் பிரதி நிதியாக கருதப்பட்டார். அதனால் அவர் நேரடியாக சொர்க்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும், அவரின் வேண்டுதல் சொர்க்கத்தில் உடனடியாக ஏற்கப்படும் என்ற மூட நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

வருடத்திற்கு இருமுறை பேரரசர் தன் பரிவாரங்களோடு அரண்மனை விட்டு இங்கு தங்குவாராம். இங்கே அதற்கேற்ற உடைகளை அணிந்து, மாமிசம் தவிர்த்து விரதமிருந்து தன் பிரார்த்தனைகளை ஏறெடுப்பாராம். சாதாரண பொதுமக்கள் உள்ளே வருவதற்கோ இந்த பிரார்த்தனைகளைப் பார்ப்பதற்கோ அனுமதியில்லை. இந்த சம்பிரதாயங்கள் எள்ளளவும் குறையாத வண்ணம் நடத்தப்படுமாம். ஏனென்றால் ஒரு சிறு தவறு நடந்தால் கூட அது அபசகுணமாக கருதப்படுமாம்.

இங்குள்ள சதுரவடிவ கட்டிடங்கள் பூமியையும், வட்ட வடிவ கட்டிடங்கள் சொர்க்கத்தையும் குறிக்கின்றன. இந்த முழு வளாகமும் இவ்வாறு பூலோகத்தையும் மேலோகத்தையும் குறிக்கும் வண்ணமும், பிரித்துக் காட்டும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

நடுவில் இருந்த வட்டவடிவமான “ஹால் ஆஃப் பிரேயர்” உட்புறத்தில் நான்கு தூண்களையும், நடுப்புறத்தில் 12 தூண்களையும், வெளிப்புறத்தில் 12 தூண்களையும் கொண்டதாக இருந்தது. இது முறையே நான்கு காலநிலையும் (கோடை, வசந்தம், இலையுதிர் மற்றும் குளிர் காலங்கள்) 12மாதங்களையும், 12 மணி நேரத்தையும் குறிக்கிறது. குறிப்பாக இதன் அமைப்பு சூரியக் கோளை குறிக்கிறதாம். வெளிப்புற 12 தூண்கள் சந்திர (லூனார்) மாதங்களைக்குறிக்கின்றன.

இங்கிருந்த எல்லாக் கட்டிடங்களிலும் விதானத்தில் சொர்க்கத்தை குறிக்கும் வகையில் ஒருவித நீல நிற டைல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

அதோடு கிழக்குப் பகுதியில் உள்ள கல்லில் உருவாக்கப்பட்ட ஏழு நட்சத்திரங்கள், புராதன சீனாவின்  ஏழு மலைகளைக்குறிக்கின்றன. டிராகன் வடிவில் உள்ள நான்கு தூண்களும் நான்கு காலங்கள் மற்றும் புராதன சீன அரண்மனையின் வடிவமைப்பை ஒட்டி அமைக்கப்பட்டன. ஒரு வழியாக சொர்க்கக்கோயிலை பார்த்து முடித்து வெளியே வர நடந்தேன்.

Tribal dance 

கோயிலைச் சுற்றியுள்ள அந்த உயரமான மரங்கள் அமைந்த பூங்கா மிகப்பெரியது. ஏறத்தாழ 660 ஏக்கர் பரப்பளவு உடையது. நான்கு புறங்களும் வழியுள்ள இந்த பூங்காவின் வழியாக வெளியே வரும் பாதையில் நடந்து வரும் போது வழியெங்கிலும் பலவித விளையாட்டு மைதானங்கள் இருந்தன. ஏராளமான பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். உடற்பயிற்சிகள் செய்பவர்களையும் காண முடிந்தது. அங்கே ஒரு இடத்தில், ஒரு சிறிய இசைக்குழு ஒரு வித இசையை இசைத்துக் கொண்டிருக்க நிறைய ஜோடிகள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலும் நடுவயதுக்காரர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் விதவிதமான ஆடைகளை உடுத்தி தலைபாகைகளையும் அணிந்திருந்தனர். அன்றைய நாள் சூரியன் வெளியே வந்திருந்தான், குளிர் அவ்வளவாய் இல்லை.  

கேட்டதில் அவர்கள் எல்லாம் விதவிதமான இன (tribes) மக்கள் என்றும், அவர்களுடைய கலாச்சாரத்தை நினைவு படுத்தும் வண்ணமும், பறைசாற்றும் வண்ணமும் இப்படி பொது இடத்தில் கூடி ஆடி மகிழ்வார்களாம்.

அதற்குள் எதிரே நான் ஏற்கனவே பார்த்த விளம்பரப் படப்பிடிப்பு குழு அங்கேயும் வந்து சில படங்களை எடுத்துக் கொண்டிருந்தது.



நான் வெளியே வந்தேன். "ஹலோ ஃபிரண்ட்" என்று குரல் கேட்டது. யாராது பீஜிங்க்கில் நம்மை ஃபிரண்ட் என்று கூப்பிடுகிறது என்று நினைத்துக் கொண்டே திரும்பினேன். அங்கே நடுத்தர வயது நபர் ஒருவர் நின்று கொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“யு மஸ்ட் பி ஃபிரம் இண்டியா?”

“எஸ், ஐ ஆம்”

“ஐ கேவ் பீன் டு பாம்பே, நைஸ் பிளேஸ்”

“இஸ் இட் ?”

“இண்டியா இஸ் எ பியூட்டி ஃபுல் கன்ட்ரி”

“எஸ் இண்டீட்” 

“மை நேம் இஸ் லீ அண்ட் யு ஆர்?

“ஐ ஆம் ஆல்ஃபி”

“நைஸ் டு மீட்யு”

“சேம் ஹியர் அஸ் வெல்”

இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம். ஆங்கிலத்தில் உரையாடுவது அத்தனை மகிழ்ச்சியை எப்போதும் அளித்ததில்லை. இனி நடந்த உரையாடலை தமிழிலேயே கொடுக்கிறேன்.

“எவ்வளவு நாள் சைனாவில்?”

“ஒரு வாரம்”.

“என்னெல்லாம் பார்த்தாகிவிட்டது?”

“சீனப் பெருஞ்சுவர், விலக்கப்பட்ட நகரம் பார்த்துவிட்டேன். இன்று மூன்றாம் நாள் இதோ டெம்ப்பிள் ஆஃப் ஹெவனைப் பார்த்தாகிவிட்டது”.

“ஓ இன்னும் பார்க்க நிறைய இடம் இருக்கிறது. ஆமாம் உங்களுக்கு கைட் வேண்டுமா? நேரம் இருக்கிறது சம்மர் பேலஸை நீங்கள் இன்றே பார்த்துவிடலாம்”.

“எவ்வளவு செலவாகும்னு தெரியலயே”.

“அதிகம் இல்லை ஒரு நாளைக்கு 210 - யுவான் அதுதவிர மெட்ரோ ரயில் செலவு”.

“ஆஹா பரவாயில்லையே உங்களுக்கு யாராவது தெரியுமா?”

"நான் தான் அந்த கைட்", என்றான் லீ.


-தொடரும்.