Thursday, May 5, 2016

நானே நானா யாரோதானா?

எழுபதுகளில் இளையராஜா பாட்டு எண்: 31
'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்து பட்டையைக் கிளப்பிய சூப்பர் ஹிட்  பாடல் இது. பாடலை ஒருமுறை கேட்டுவிடுங்கள்.

பாடலின் சூழல்:
தெரிந்தோ தெரியாமலோ, மதுவருந்திய பெண் தன்னை மறந்த நிலையில் தன் மன எண்ணத்தையும், விரக தாபத்தையும் வெளிப்படுத்தும் பாடல் இது.
இசையமைப்பு:

நல்ல ஒரு லீட் கிடார் பீசோடு ஆரம்பித்து, பேஸ் புல்லாங்குழல் சேர்ந்து கொள்ள அதோடு டிரம்சின், ஹையாட்ஸ் சேர்ந்து முடிய, பெண்குரலில் 'நானே நானா' என்று பாடல் ஆரம்பிக்கிறது. பாடல் ஆரம்பித்தவுடன், குரலுக்கு இணையாக காங்கோஸ் இசைக்க ஆரம்பிக்கிறது.  பல்லவி முடிந்த பின் முதலாவது பிஜிஎம், வயலின் குழுமம் மற்றும் கெட்டில் டிரம்ஸ், டிரம்பட், டிரம்ஸ் ஹையாட்ஸ் இணைந்து சீறி முடிய, "ஒருவன் நினைவிலே' என்று சரணம் ஆரம்பிக்க திரும்ப காங்கோஸ் இணைகிறது.
இரண்டாவது BGM -ல் வயலின் துடித்து அடங்க, கெட்டில் டிரம்ஸ் கவாத்து முடிய கிடார் லீட் அப்படியே காதைத் தழுவி இசைத்து முடிக்க "பிறையில் வளர்வதும்" என்று பாடல் ஆரம்பித்து முடிகிறது.
பாடலின் வரிகள்:
நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க..
உலர்ந்த உதடுகள் தனிமைக்கவிதைகள் ஏதோ படிக்க..
மதுவின் மயக்கமே உனதுமடியில் இனிமேல் இவள்தான்,
சரணம்..சரணம்..

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது..
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம். நரகம்.
சரணம்..சரணம்..

நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..
Vaali with Ilayaraja

பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. ஒவ்வொரு வரியிலும் ஒரு பெண்ணின் விரகதாபத்தை சொல்லில் வடித்துள்ளார். கவிஞர், பெண்ணின் மனதுக்குள் புகுந்து இந்தச் சூழ்நிலையில் அவள் எப்படியெல்லாம் உருகுவாள் என்பதை பாடல் வரிகளில் வெளிப்படுத்துகிறார். அவளின் தன்மை முழுவதும் பல்லவியிலேயே வெளிப்படுகிறது.
"நான் நான்தானா, இல்லை வேறு யாரோவா? இல்லை மெல்ல மெல்ல மாறிப்போனேனா?" என்ற வரிகளை இணைத்து, கவித்துவத்தை சிறிது குழைத்து, எதுகை மோனையை கொஞ்சம் அழைத்து, பாடல் வரும்போது நம்மை அறியாமல் சிலிர்க்கிறது. இரண்டாவது சரணத்தில் கவிஞரின் முத்திரை விழுகிறது.
'பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும், பிரிவதில் தவிப்பதும் ஒரே மனது'
அதுமட்டுமல்லாமல் அடுத்த வரிகளில், பருவ வயதில் இரவு மட்டுமல்ல, பகலும் விரகம்தான், அது நரகம் தான் என்று சொல்லும்போது கவிஞர் சூழலை அப்படியே படம் பிடிக்கிறார். வாலிக்கு இணை இவரே.
பாடலின் குரல்:
Vani Jaeyaram
பாடலைப்பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள். வாணி ஜெயராம் பாடிய பல சிறந்த பாடல்களில் இது மிகவும் வித்தியாசமான பாடல். இந்தப் பாடலும், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி' என்ற படத்தில் வந்த "என்னுள்ளில் எங்கோ" என்ற பாடலும் ஒரே விரக சூழலை வெளிப்படுத்திய இளையராஜாவின் பாடல்கள். தெள்ளிய குரல் தெளிவான உச்சரிப்பு தெவிட்டாத இனிமையோடு ஒலிக்கிறது பாடல். தேன் தடவிய குரலை கொஞ்சம் மதுவும் நனைத்தால் எப்படி ஒலிக்குமோ அப்படியே ஒலிக்கிறது பாடல்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் (FETNA) நடத்திய, நியூயார்க்கில் நடந்த விழாவில் வாணிஜெயராம் கச்சேரியில் இந்தப்பாடலைப் பாடியது இன்னும் என் கண்முன்னால் தெரிகிறது, காதுகளில் ஒலிக்கிறது. வாணி ஜெயராம் நம் தமிழுக்குக் கிடைத்த சிறந்த தமிழ்ப் பாடகி. இவருக்கு இன்னும் சிறந்த இடம் கிடைத்திருக்க வேண்டும் என்பது என் ஆதங்கம்.
நல்ல மேற்கத்திய தரத்தில், நம் மெல்லிசை இணந்து இசையமைக்கப்பட்ட இந்தப்பாடல், இளையராஜா இசையமைத்த பாடல்களில் சொல்லக்கூடிய சிறந்த பாடல்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கிறது. அதே போல வாணிஜெயராம் பாடிய சிறந்த பாடல்களில் ஒன்றாகவும் இது அமைகிறது.

- தொடரும்.

Monday, May 2, 2016

விலக்கப்பட்ட நகரும் விளக்கப்பட்ட வரலாறும் !!!!!!!!

சீனாவில் பரதேசி -9
View of the Hall of Supreme Harmony from the south
The Hall of Supreme Harmony)
வின்ட்டரில் சம்மரை அமர்த்தியது தவறு என்று நினைக்கும்போது மறுபுறம் யாருக்கோ அவர்கள் செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தாள். "சம்மர், புதிய, மொழி தெரியாத இடத்தில் எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைவிட்டு எங்கேயும் போகாதே”, என்றேன்.
"சிறு பிள்ளைபோல் இருக்கிறாய் நீ என்னைப் பார்க்கா விட்டாலும் நான் உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கவலைப்படாதே"என்று முதுகில் தட்டிவிட்டு விரலை நீட்டினாள். நானும் கொஞ்சமும் வெட்கமில்லாமல் அதைப் பிடித்துக் கொண்டு பின்னால் சென்றேன்.
அந்தக் குளிரிலும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். இந்த விலக்கப்பட்ட நகரின் சீனப்பெயர் 'சிஜின் செங்' (Zijin cheng) என்பது. இதன் அர்த்தம் "Purple Forbidden City". 1576-ஆம் ஆண்டிலிருந்து இந்த அரண்மனைக்கு இந்தப் பெயர்தான். ஆனால் பொதுவாக பெய்ஜிங்கில் இதன் பெயர் 'குகாங்க்' (Gugong). இதன் தமிழாக்கம் "முன்னாள் அரண்மனை" என்பதாகும். இப்பொழுது, "அரண்மனை மியூசியம்" என்றும் அழைக்கப்படுகிறது.
Emperor Zhu Di.
பேரரசர் ஹோங் வு-வின்( Hong Vu) மகன் ஸூ டி (Zhu Di) யாங்க்லி பேரரசர் ஆனபோது, அவன் தலைநகரத்தை நான்ஜிங் (Nanjing)-லிருந்து பீஜிங்குக்கு மாற்றினான்.  அந்த வருடமான 1406ல் தான் இந்த அரண்மனை கட்ட  ஆரம்பிக்கப்பட்டதாம்.  கட்டிமுடிக்க 14 ஆண்டுகள் ஆயிற்றாம்.
1644-ல் அது மஞ்சூரியரின் வசம் வந்தது. அப்போது அரண்மனையின் சில பகுதிகள்  எரியூட்டப்பட்டன. சிறிது காலத்தில் சீனா முழுவதும் மஞ்சூரியரின் ஆதிக்கத்தில் வந்தது. பின்னர் மஞ்சூரியரின் சிங் பரம்பரை (Qing Dynasty) ஆளத்தலைப்பட்ட போது, அரண்மனையைப் புதுப்பித்து அதில் வாழத்துவங்கினர். ஒவ்வொரு  அரண்மனைக் கட்டடத்தின் மேலேயும் பட்டுத்துணியில் சீன மற்றும் மஞ்சு மொழியில் அதன் பெயர்கள் மாற்றி எழுதப்பட்டன.   
Portrait of Tzu-hsi by Hubert Vos, 1906
Empress Cixi
 ஓப்பியம் போரில் ஆங்கில- பிரெஞ்சு கூட்டுப்படை, அரண்மனையை ஆக்ரமித்து போர் முடியும்வரை உள்ளேயே தங்கியிருந்தனர். 1900ல் பாக்ஸர் புரட்சி நடக்கும்போது பேரரசி சிக்ஸி (Empress Orchid alias Cixi)  இந்நகரத்தை விட்டு வெளியேற வேண்டியநிலை வந்தது. இவரைப்பற்றி விவரமாக என்னுடைய முன்னாள் பதிவில் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த  நிலை நீடித்தது.  (http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_1.html )
மொத்தம் 24 பேரரசர்கள் ஆண்ட இந்த இடம், 1912ல் கடைசிப் பேரரசரான புயீ (Puyi) பதவியிறக்கம் செய்யப்பட்டதோடு தன் முக்கியத்துவத்தை இழந்தது. ஆனால் புதிய சீனக்குடியரசோடு பண்ணப்பட்ட ஒப்பந்தத்தின்படி புயீ உள்ளே பின்பகுதியில் இருந்த வளாகத்தில்  (Inner court) தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார். மற்ற இடங்களெல்லாம் பொது இடங்கள் ஆயின. அதன் பின்னர் 1924ல் நடந்த ஒரு புரட்சியின் பின் அவர் வெளியேற்றப்பட்டார். 
Puren - who has died aged 96 - was the youngest brother of the final Qing monarch Puyi (above), who ruled for four years until 1912
Puyi, The Last Emperor.
1925 முதல் இந்த அரண்மனை வளாகம் மியூசியமாக மாற்றப்பட்டது. 1933ல் ஜப்பான் சீனாவை ஆக்ரமிக்க முயன்றபோது, அரண்மனையின் மதிப்பு மிகுந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அவற்றில் பாதி இங்கு கொண்டுவரப்பட மீதி தைவானுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்போது அவை தாய்பெய்-ல் உள்ள தேசிய அரண்மனை மியூசியத்தில் இருக்கின்றன.
1949-ல் சீனாவில் மக்கள் குடியரசு ஏற்பட்ட சமயம், புரட்சி வேகத்தில் அரண்மனையின் சில பகுதிகள் தகர்க்கப்பட்டன.  ஆனால் அப்போதிருந்த சீன அதிபர்  ஜோவு என்லாய் (Premier ZHOU ENLAI) ஒரு ராணுவப்பிரிவை அனுப்பி அரண்மனையைப் பாதுகாக்க  ஆணையிட்டார்.
நகரின் நடுவில் இருக்கும்படி அமைக்கப்பட்ட இந்த அரண்மனை வளாகம் 3153 அடி நீளமும் 2470 அடி அகலமும் கொண்டது. 980 கட்டடங்களையும் அதில் 8886 அறைகளும் இருக்கின்றனவாம். ஒரு காலத்தில் 9999 அறைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.
எப்படி மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலை மையமாக வைத்து முழு நகரும் வடிவமைக்கப்பட்டதோ, அதே வகையில்தான் இந்த அரண்மனையை மையமாக வைத்து பீஜிங் நகர் கட்டமைக்கப்பட்டது.
View ogf the Tongzi moat, Forbidden City, Beijing
Tower in the corner
இந்த வளாகம் முழுவதுமாக கோட்டைச் சுவரால் சூளப்பட்டு இருக்கிறது. இந்தச்சுவர் 26 அடி உயரமும், அடியில் 28 அடி அகலமும், மேலே 22 அடி அகலமும் கொண்டவை. அதன் நான்கு மூலைகளிலும் அழகாக வடிவமைக்கப்பட்ட டவர்கள் இருக்கின்றன. இந்த சுற்றுச்சுவரின் நான்கு புறங்களிலும் நான்கு பெரிய நுழைவாயில்கள் இருக்கின்றன. தென்புறம் இருக்கும் பிரதான புராதன நுழைவாயிலுக்குப் பெயர் மெரிடியன் கேட். இதன் வழிதான் நான் உள்ளே வந்தது. மற்ற நுழைவாயில்களின் பெயர்கள் முறையே டிவைன் மைட் (Divine Might), ஈஸ்ட் குளோரியஸ் கேட் மற்றும் வெஸ்ட் குளோரியஸ் கேட். இதில் என்ன சிறப்பு என்றால், ஒவ்வொரு வாயிற்கதவும் நன்கு வேலைபாடுடன் அமைந்திருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொன்றும் 9 வரிசையில் ஆன தங்க ஆணிகளால் வடிவமைக்கப்பட்டது.
Looking back to the Meridian Gate from the north
Golden River
நான் பார்த்த முதல் அத்தானி மண்டபத்தின் பெயர் 'திஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனி' (The Hall of Supreme Harmony) என்பது. இதற்குச் செல்லும் வழியில் சிறுசிறு பாலங்கள் இருந்தன. அதன் கீழே ஒரு சிறிய ஓடை போன்று ஓடிக் கொண்டிருந்தது. அதன் பெயர் 'தங்க நீர் ஆறு'  (Golden Water River).
இந்த முழு நகரமும் அவுட்டர் கோர்ட் மற்றும் இன்னர் கோர்ட் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நிகழ்வும் அவுட்டர் கோர்ட்டில் நடக்கும். இன்னர் கோர்ட் என்பது பேரரசர் மற்றும் அவர் குடும்பம் வாழுகின்ற இடம். அவர் குடும்பம் தான் ரொம்பப் பெரிசே.

இந்த ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனியில்தான் பதவியேற்பு, திருமணம் போன்ற  முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். அடிப்பகுதி வெள்ளைப் பளிங்காலும் மற்றவை மரத்தாலும் அமைந்த மூன்று அடுக்குமாளிகை இது. 98 அடி உயரம் கொண்ட இதுதான் விலக்கப்பட்ட நகரில் உள்ள எல்லா கட்டடங்களையும் விட பெரியது.
அதன் பின்புறம் இறங்கினால் வரிசையாக இதே போன்ற பலவிதமான கட்டடங்கள் வந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர், ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு பயன்பாடுகள். வாருங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

- தொடரும்.

Thursday, April 28, 2016

பரதேசியின் அடுத்த பயணம் எங்கே?

flight travel

“ஹலோ, பரதேசியா பேசுறது?”
“என்னடா மகேந்திரா, என்ன ரொம்ப நாளாச்சு?”
“நீயோ ஒரு பரதேசி உன்னை எந்த ஊர்ல பிடிக்கிறது?”
“டேய் நீ என்னை பாராட்டுறியா, இல்லை கலாய்க்கிறயா?”
“உன் வசதிப்படி வச்சுக்கடா?”
“உன்ட்ட பேசக்கூடாதுன்னு நெனச்சேன்?”
“ஏண்டா நான் என்ன செஞ்சேன் ?”
“என்ன செய்யலன்னு கேளு? “
“டேய் என்னடா புதிர்போடுற?”
“ஏன்டா, இவ்வளவு தூரம் மதுரை வரைக்கும் வந்திருக்க, திண்டுக்கல் வேற போயிருக்க, தேவதானப்பட்டிக்கு ஏன்டா வரல ?, பெரிய டவுன்காரரு ஆயிட்டயோ, பட்டி தொட்டிக்கெல்லாம் வரமாட்டியோ? “.
“அப்படியில்லடா, தேவதானப்பட்டிக்கு கண்டிப்பா வரணும்னு  நெனச்சப்ப, அங்க பசங்கெல்லாம் அரைப் பரீட்சை எழுதறாங்கன்னு சொன்னாங்க, அதான் வரல”.
“ஏண்டா அப்ப நானுமா அரைப்பரீட்சை எழுதிட்டு இருந்தேன்?”.
“நீ எங்க அரைப்பரீட்சை எழுதறது, அதான் கால் பரீட்சையிலயே கோட்டைவிட்டுட்டு ...?”
“டேய் வேணாம் பழசை கிளறாதே?”
“அதோட நான் எந்த  நாட்டுக்கும், ஊருக்கும் போகணும்னு நெனச்சாலும் அந்த நாட்டுக்கு ஏதாவது பிரச்சனை வந்துறுது. அப்படி நான் தேவதானப்பட்டிக்கு வந்து ஏதாவது உனக்கு பிரச்சனை ஆயிருச்சுன்னா என்ன செய்யறதுன்னு நினைச்சுதாண்டா  வரல”.
“அட என்னடா கதைவிடுற?”
“ஆமாடா மாப்ள நான் சொல்றதக் கேளு”
“ சரி சொல்றா  சொல்றா”.
 “சென்னைக்கு நான் நவம்பர்லயே வரவேண்டியது. ஆனா பேயாத மழை ஓயாது பேஞ்சி, செம்பரம்பாக்கம் கீழ்ப்பாக்கம் வரை பாஞ்சி, ஒரே வெள்ளக்காடா ஆயிப்போச்சி, அதனாலதான்  டிக்கட்டை மாத்திப்போட்டேன்.”
People walk through a flooded street in Chennai, India, Thursday, December 3, 2015. Heaviest rainfalls in more than 100 years have devastated swathes of the southern Indian state of Tamil Nadu, with thousands forced to leave their submerged homes and schools, offices.
Flooding in Chennai
“ஐயையோ அவனா நீ?”
அவனேதான். சரி போற வழியில பாரீசுக்கு போகலாம்னு நெனச்சிருந்தேன். அதுக்குள்ள ஐசிஸ் ஆளுங்க, குண்டைப்போட்டு ஒரே ரணகளமாயிப்போச்சு”.
Vigil in Paris for attack victims
Paris Bomb blast
“அட அப்புறம்?”
செளத் அமெரிக்கால இன்னும் பாக்காத நாடு பல இருக்கு, எதுக்காவது போகலாம்னு நெனெச்சா, சிகா வைரஸ் இருக்கு, சிக்கா ஆயிருவீங்கன்னு சொல்லிட்டாய்ங்கே”.

“அட சிகாவுக்கு காரணமான சகா நீதானா?”
“சரி வேணாம்னு விட்டுட்டுத்தான் சீனா வழி இந்தியாவுக்கு வரலாம்னு டிக்கட்டைப் போட்டேன். கிறிஸ்மஸ்சை  70 டிகிரி வெயில்ல சூப்பராக் கொண்டாடிட்டு, சீனா போனா அங்க 20 டிகிரில குளிர் வாட்டி எடுத்துருச்சு. அதோட காத்தும்  கெட்டுப்போய், (Pollution) நான் போன இடத்துக்கெல்லாம் முகமூடி போட்டுட்டு போற  மாதிரி ஆயிப்போச்சு. நல்ல வேளை ஒண்ணும் ஆகல”.
Paradesi in China

“சரி இலங்கைக்குப்போனியே அங்க எதும் ஆச்சா?”
“என்னடா ரொம்ப ஆர்வமாக் கேக்குற. எதாவது ஆனாத்தான் உனக்கு நல்லா இருக்குமோ, இலங்கையில ஏற்கனவே ஆனதெல்லாம் பத்தாதா?, இப்பத்தான் அங்கேயே கொஞ்சம் அமைதி வந்துருக்கு. ஆனாலும்  நான் இருந்த சமயம்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வந்திருந்தார் .என்ன நடக்குமோ தெரியலை ?”.
19
Nawaz in Srilanka
“சரி அதைவிடு சென்னையிலயும் மதுரையிலையும் ஒண்ணும் கலைல?”
சென்னையில ரெண்டு நாள்தான் இருந்தேன். மதுரைக்கு என்னைப் பார்க்க வரவேண்டிய என் கிளாஸ்மேட்டு ஜெய்ராமுக்கு ஆக்சிடன்ட் ஆயி கால்ல கட்டுப் போட்டுட்டு உட்கார்ந்துட்டான்”.
“ஐயையோ, ஆமா மைசூருக்கு வேற போனயே?
ஆமாடா மைசூருக்குப்போய் அங்கிருந்து கூடலூருக்கு போனேன். அதுக்கு முந்தின நாள் தான் அங்க மதயானை உள்ளே புகுந்து ஒருத்தனே கொண்டே போடுச்சு”. “மதயானையா? எந்த மதம்?”
டேய் உனக்கு என்ன லந்தாப் போச்சா?”.


“ஆமா ஏப்ரல் வந்தா ஏதாவது வெளிநாட்டுக்குப் போவியே எந்த நாட்டுக்குப் போகப்போற?”
“எகிப்துக்குப் போலாம்னு நெனச்சேன், அதுக்குள்ள  அங்கு ஒரு விமானத்தைக் கடத்திட்டாய்ங்க. பெல்ஜியத்திற்கு ஒரு நண்பர் கூப்பிட்டார்”.
“அட அங்கதான் விமான நிலையத்துல ஐசிஸ் தாக்கி நூறுபேருக்கு மேல செத்துட்டாய்ங்களே”.
“பார்ரா, உனக்கே உலக விஷயம் தெரியுது”.
“சரி சிரியா போக வேண்டியதுதானே உனக்கு சரியா இருக்கும்”.
“ஏலே மகேந்திரா வயசானாலும் உன் குறும்பு போலடா?”
“அப்ப என்னதாண்டா செய்யப்போற?”
“பேசாம வீட்டுலயே உட்காரவேண்டியதுதான்”.
“சரிடா கூப்பிட்டதை மறந்துட்டேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா”.
“ஆமாடா ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்தனால யாரும் மறக்கமாட்டாய்ங்கறாங்க. ரொம்ப தேங்க்ஸ்ரா”.
“நான்ல உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ரா”.
“என்னடா தேங்க்ஸ் ரொம்ப நீளமா இருக்கு.எதுக்குரா இவ்வளவு நீள தேங்க்ஸ்? “
“அது ஒண்ணுமில்ல, நீ தேவதானப்பட்டிக்கு வராததுக்குத்தான்”.
“அடப்பாவி மகேந்திரா”.

முற்றும்.

பின்குறிப்பு:
உங்கள் யார் ஊருக்காவது  நான் வரணுமுன்னு நெனச்சா, கடுதாசி போடவும்.  

Monday, April 25, 2016

பேரரசரின் நுழைவாயிலில் மாட்டிக்கொண்ட பரதேசி !!!!!!!

சீனாவில் பரதேசி -8

மிகப்பெரிய மைதானத்தை தாண்டினால் ஐந்து பெரிய வாயில்கள் இருந்தன. மாபெரும் சுவர்களைக் கொண்டு மிக உயரமாக இருந்தன. கண்மூடித்திறப்பதற்குள் சம்மர்’, அதாங்க அந்த வழிகாட்டிப் பெண்ணின் பெயர், எந்த வழியில் நுழைந்தாள் என்று கண்டுபிடிக்க வில்லையாரைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருந்தார்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தில் அவளை எப்படிக் கண்டுபிடிப்பது ?. 400 யுவான் அவ்வளவுதான் ஸ்வாஹா என்று நினைத்துக் கொண்டே, நடுவில் இருந்த  வாயில் மூலமாக நுழைந்தேன். எங்கிருந்தோ வந்த சீன ராணுவ வீரன் ஒருவன் வந்து என்னைத்  தடுத்தான். அவன் கையில் இருந்த ஸ்டென் கன் எண்ணெய் போட்டுத்துடைத்ததால் பளபள வென்று மின்னியது.” அவன் எதோ கோபமாகச் சொன்னான். ஏதுடா வம்பாப்போச்சு? ஒரு மண்ணும் புரியவில்லை .நல்லவேளை என்னுடைய நுழைவுச்சீட்டு என் கையில் இருந்தது. எடுத்துக் காண்பித்து,” உள்ளே போக வேண்டும்”, என்றேன்.
அதற்குள் சம்மர் ஓடி வந்து அவனிடம் ஏதோ சொல்லி விட்டு என் கையைப் பிடித்து இழுத்து வெளியே வந்து வலது ஓரம் இருந்த மற்றொரு வாயிலின் மூலம் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.  
"எங்கே போனாய் என்னைவிட்டுவிட்டு”,
”நீ பின்னால் வருகிறாய் என்று நினைத்துத்தான் உள்ளே போனேன்”
“என்னாச்சு, ன் என்னை உள்ளே விடமாட்டேன்கிறார்கள் ?.
 "யாராவது இந்த வாயிலில் நுழைகிறார்களா   ?.
 அப்போதுதான் கவனித்தேன். வரும் டூரிஸ்ட் எல்லோரும் நடுவாயிலை விட்டுவிட்டு வலது அல்லது இடது புறம் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கெல்லாம் கூட்டம் அதிகமாய் இருந்ததால் நான் நடுவில் நுழைந்தேன்.  
அவள் பின்னர் சொன்னாள், “இந்த நடுவில் உள்ள வாயிலின் பெயர் "Emperor Gate" சக்ரவர்த்தி அரண்மனையை விட்டு வெளியே செல்லும்போதும், உள்ளே வரும்போதும் இந்த வழியில் தான் போவார். அவர் கூட வரும் சில உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதுவும் அவரோடு வரும்போது மட்டுமே அந்த வாயிலைப் பயன்படுத்த முடியும். தப்பித்தவறி வேறு யாராவது அந்த வாயிலில் நுழைந்தால் கழுவிலேற்றி விடுவார்கள்", என்றாள்.நான் என் கழுத்தைத் தடவிக் கொண்டே, “அந்தக் காலம் தான் முடிந்துவிட்டதே”, என்றேன். “இல்லை இப்போது சீன அதிபர் அமைச்சர்கள் மற்றும் உயர் ராணுவ தளபதிகள் மட்டுமே அதில் நுழையமுடியும்",என்றாள்.  
அதே போல் எந்த எந்த வாயிலில் யார் யார் நுழையமுடியும் என்று தனிச் சட்டங்கள் இருந்ததையும் கூறினாள்.
உள்ளே நுழைந்ததும் இன்னொரு பெரிய மைதானம் வந்தது. அதன் முடிவில் ஒரு பிரம்மாண்டமான கட்டடம் இருந்தது. எனக்கு Last Emperor சீன் ஞாபகத்திற்கு வந்தது. அவளிடம் கேட்டவுடன், சிரித்துக் கொண்டே "நீ சொல்வது சரிதான். இதுதான் தர்பார் மண்டபம். சக்ரவர்த்தி தன்னுடைய படைவீரர்களின் அணிவகுப்பை இங்கிருந்துதான் பார்வையிடுவார். வெளிநாட்டுத் தூதுவர்களை இங்குதான் சந்திப்பார். மேலும் பொது விழாக்கள் இங்குதான் நடைபெறும்", என்று சொன்னாள். குறைந்தபட்சம் 1 லட்சம் படைவீரர்கள் அணிவகுப்புச் செய்யும் அளவுக்கு அந்த மைதானம் பெரியது. அந்த பிரம்மாண்டமான அத்தாணி மண்டபத்திற்கு ஏறிச் செல்ல படிக்கட்டுகள் இருந்தன.
Paradesi with Male Lion or Two male Lions

அதன் இருபுறமும் இரு சிங்கங்கள் இருந்தன. அதில் எது ஆண், எது பெண் ? என்று சொல்லி கண்டு பிடிக்கச் சொன்னாள். உற்று உற்றுப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளிடமே கேட்டேன். அவள் விளக்கிச் சொன்னாள் எனக்கு வலதுபுறம் இருப்பது ஆண் என்றும் இடதுபுறம் இருப்பது பெண் சிங்கம் என்று சொன்னாள். “எப்படிக்கண்டுபிடிப்பது”, என்றேன். “ஒரு  உருண்டையான பந்தின் மேல் கால் வைத்து இருப்பது ஆண் என்றும் , ஒரு குட்டியின் மேல் கை வைத்திருப்பது பெண் சிங்கம்”, என்றும் சொன்னாள்.
Female Lion

 அந்தப்பந்து உலகத்தைக்  குறிக்கும் என்றும் ஆண் சிங்கம் சக்தியையும் அதிகாரத்தையும் குறிக்கும் என்றாள்.அவள் சொன்னபின்தான் விளங்கியது.  அதோடு சீன புராணங்களில் சிங்கத்திற்கு முக்கிய இடம் உண்டு என்றும் , இவை எங்களின் காவல் தெய்வங்கள் என்றும் சொன்னாள் .

அந்தக்கட்டடத்தின் இருபுறமும் மிகப் பிரம்மாண்டமான தாமிர அண்டாக்கள்   இருந்தன? ஆனால் காலியாக இருந்தன. "இது எதற்கு என்று யூகிக்க முடிகிறதா?" என்று கேட்டாள். "நான் படைவீரர்களுக்கு கஞ்சி ஊத்துவதற்கு இருக்கும்,"  என்றேன். அவள் என்னை புதிராகப் பார்த்துவிட்டு, “இல்லை பெரும்பாலான கட்டிடங்கள் மரத்தால் கட்டுப்பட்டு இருப்பதால், இலகுவாய் தீப்பற்றிக் கொள்ளும். அப்படி திடீரென்று வரும் தீயை அணைப்பதற்காக இந்த அண்டாக்களின் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். இங்குள்ள எல்லாக் கட்டடங்களிலும் இருபுறமும் அதனைக் காணலாம்", என்று சொன்னாள். கட்டடத்தின் முகப்பின் மேலே வெல்வெட்டில் சீன மொழியில் கட்டடத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. படிகளின் மேலே ஏறிச் செல்லும்போது கட்டடத்தின் இருபுறமும் விதானத்தின் ஓரத்தில் புறா, குரங்கு, ஓணான் என்று பல உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன, அவள் சொன்னாள், ஒவ்வொரு கட்டடத்திலும் வாழும் மனிதர்களின் அந்தஸ்த்துக்கு ஏற்றவாறு நிறைய வடிவங்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. உதாரணமாக குரங்கு உருவத்திற்கு நீண்ட வாழ் நாள் என்று அர்த்தம் என்றாள்.

மண்டபத்தின் உள்ளே பார்த்தால் மிகப்பெரிய உயரமான சிம்மாசனம் இருந்தது. பல படிகளில் ஏறித்தான் அதில் உட்கார முடியும். தகதகவென்று ஜொலித்தது. தர்பார் மண்டபத்தில் பேரரசர் மட்டுமே அமர முடியும். மற்ற எல்லோரும் நின்று கொண்டுதான் இருக்க முடியும். சிம்மாசனத்தின் இருபுறமும் மரவேலைப் பாடுடன் நறுமணம்  எழுப்ப புகைபோடும் சாதனங்கள் இருந்தன.
லாஸ்ட் எம்ப்பரர் படத்தில் அந்தச் சிறுபையன் படிகளில் விரைவாக ஏறி மேலே உட்காரும் காட்சி என் கண்முன் வந்தது.
அந்த அறை முழுவதும் சுவர்களிலும், கூரைகளிலும், தூண்களிலும் வண்ணமிகு கலவைகளில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தன. சிம்மாசனத்தைப் பார்த்து வியந்து படம் எடுத்து விட்டுத் திரும்பினால் சம்மரைக் கானோம், ஐயையோ மறுபடியுமா?

தொடரும்