Monday, November 10, 2014

நடிகர் திலகத்துடன் இளையராஜா !!!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா பாட்டு 8  - அந்தப்புரத்தில் ஒரு மகாராணி.
1977ல் வெளிவந்த தீபம் என்ற படத்தில் வந்த அழகான பாடல் இது. சிவாஜியுடன் இளையராஜா இணைந்த முதல் படம் இது.
நடிகர் திலகம் நடித்த ஒரு சில படங்களுக்குத்தான் இளையராஜா இசையமைத்திருக்கிறார். அதன்பின் கதா நாயகன் தவிர சில கேரக்டர் ரோல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அப்போது நடிகர் திலகத்தின் இறங்கு முகம். ஆனால் இளையராஜாவுக்கு அது ஏறுமுகம்.பாடலைக் கேளுங்கள் முதலில்.


இசைக்கோர்வை:
 வயலின்கள் சரசரவென இசைக்க ஆரம்பிக்க கீபோர்டு இசை குறுக்கிட, லேட்டாக வந்த புல்லாங்குழல் அதனுடன் இழைய, அதற்கு வயலின்கள் பதில் பேச, இரண்டும் சுகமாக ஒன்றுக்கொன்று பேசி கொஞ்சத் துவங்க, பின்னர் வீணை /கிதார் அதற்கு அணை போட கம்பீரமான குரலில் "அந்தப்புரத்தில் ஒரு மகாராணி" என்று சிவாஜி இல்லை இல்லை TMS குரலில் ஆரம்பிக்கிறது பாடல்.  “காமன் திருச்சபைக்கு” காதலி வழிகேட்டதை காதலன் சொல்லி முடிக்க, கிடார் வந்து சிற்றிசை வாசித்து முடித்தவுடன், "சாமந்தி பூக்கள் மலர்ந்தன" என்று ஜானகி அனுபல்லவியை ஆரம்பிக்க தபேலா இணைந்து சுறுசுறுப்பான நடையில் தாளம் இசை கூட்டுகிறது .ஆண்குரலும் பெண்குரலும் மாறி மாறி ஒலிக்க அனுபல்லவி முடிந்து பல்லவி பெண்குரலில் ஒலித்து, மூன்றாவது வரியில் “அன்னம் தலைகுனிந்து நிலம் பார்த்தாள்”, என்று அவளின்  வெட்கத்தை வெளியிட  முதல் BGM ஆரம்பிக்கிறது.
வயலின்கள், கீபோர்டு, புல்லாங்குழல் ஆகியவற்றின் சங்கமங்கள் முடிந்து "சங்கு வண்ண கழுத்துக்கு" என்று சரணம் ஆரம்பிக்கும் போது, உருட்டலுடன் தபேலா சேர்ந்து கொள்கிறது. "குங்குமத்தின் இதழில்" இன்னொரு உருட்டலுடன் தபேலா நடை மாறி, சரணம் முடிய பல்லவி மீண்டும் வருகிறது.
இம்முறை பெண்குரல் முதலில் வர ஆண்குரல் பதில் சொல்ல 2-ஆவது BGM வருகிறது. பூபாள இசை போல் ஆரம்பித்து புல்லாங்குழல் இசை வந்து, பின்னர் வீணையின் நாதம் வந்து பின்னர் வயலின்கள் "ஆராரிரோ" என்ற பாடலின் முடிவில் வரும் ராகத்தை வாசிக்க, 2-ஆவது சரணம், "முத்துச்சிப்பி திறந்தது" என்று ஆரம் பிக்கிறது. ஆண்குரலும் பெண்குரலும் மாறி மாறிப் பாட - "அங்கே தென்பொதிகை" - என்ற வரியில் இரு குரல்களும் இணைந்து ஒருவரையொருவர் தாலாட்ட தபேலாவின் முத்தாய்ப்புடன் முடிகிறது பாடல்.
குரல்கள்:
  1. TMS
கண்ணை மூடிக்கேட்டாலும் சிவாஜி கணேசன் பாடுவதைப் போலவே ஒலிக்கிறது T.M செளந்தரராஜனின் குரல். கிட்டப்பா சின்னப்பா, உடையப்பா, தியாகராஜ பாகவதர் T.R.மகாலிங்கம் போன்ற ஹைபிட்ச் நாடகக்குரல்களின் வரிசையில் அதன் கடைசி வாரிசுக்குரலாக வந்து மறைந்தது TMS-ன் குரல். எட்டுக்கட்டையில் எந்த சிரமமோ பிசிறோ இல்லாத கம்பீரக்குரல் TMS-ன் குரல். அவர் மதுரைக்காரர் என்பதில் எனக்கு இன்னும் பெருமை.
மேடை நாடகங்களில் மைக் இல்லாமல் பாடியதால்  மக்களுக்கு கேட்க வேண்டும் என்பதால் ஹைபிட்ச்சில் பாடினார்கள். ஆனால் பின்னர் வந்த பல மெலோடியஸ் மெல்லிசைப் பாடல்களிலும் அவர் குரல் இனிமையாகவே ஒலித்தது. TMS -ல் எனக்குப்பிடித்தது பாவமும் உச்சரிப்பும் தான்.  
TMS-க்கு ஜோடியாக வருவது நம் ஜானகியின் குரல். TMS குரலோடு இணைந்தும் இழைந்தும், குழைந்தும் வரும் ஜானகியின் குரல், இந்தப்பாடலில் மிகவும் இனிமையாக ஒலிக்கிறது. குரலில் அன்பு, காதல், வெட்கம் மயக்கம், என்று அனைத்தும் குழைத்த கலவையாக ஒலிக்கிறது. மேலும் ஒரு திருமணமான பரவசத்தில் இருக்கும் சிறு பெண்ணின் குரலாக அமைந்துள்ளது ஜானகியின் குரல். தன் குரல் மூலம் நடிப்பதில் ஜானகிக்கு இணை யாருமில்லை.
பாடல் வரிகள்:

அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவன் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவன் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ...ஆராரி...ராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

  1. கவிஞர் புலமைப்பித்தன்
பாடலை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்ஜியாருக்கு பல பாடல்களை எழுதிப்புகழ் பெற்றவர் இவர். பழைய பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்களில் எதுகை மோனைகள் தூக்கலாக இருப்பதோடு கவிதைத்தனம் நிறைந்திருக்கும்.  சில சமயம் எதுகை மோனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அதிகம் அர்த்தமில்லாத சம்பந்தமில்லாத அல்லது பொருந்தாத வார்த்தைகளும் விழுந்துவிடும்.
இந்தப்பாடலில் துள்ளிக்குதிக்கும் அளவுக்கு வரிகள் இல்லாவிட்டாலும், ராகத்திற்கு பாந்தமாக உட்காருகிறது பாடல்வரிகள். அளவு மீறாத விரசமும் பாடலில் ஒளிந்து இருக்கிறது.
ராகம்:
ராகதேவன் இளையராஜாவின் இந்தப்பாடல் 'மாயா மாளவ கெளளை' என்னும் ராகத்தில் சுகமாக அமைந்த பாடல்.  இளையராஜா இந்த ராகத்தை பல பாடல்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார்.
அதில் சில பாடல்களை கீழே தருகிறேன்.   
அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு
பூவ எடுத்து ஒரு மாலை - அம்மன் கோவில் கிழக்காலே
பூங்கதவே தாழ்திறவாய் - நிழல்கள்

மதுர மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊர் பாட்டுக்காரன்.

Thursday, November 6, 2014

நியூயார்க்கில் மில்லியனர்கள், பில்லியனர்கள் மற்றும் சல்லியனர்கள் !!!!!!!!!

  1. Michael Bloomberg- Former Mayor 
         இந்தியாவில் நாம் லட்சம் என்பதனை ஆங்கிலத்தில் Lakh என்போம். ஆனால் அமெரிக்காவில் Lakh என்றால் ஒருவருக்கும் தெரியாது. இங்கு ஆயிரம், பத்தாயிரத்திற்குப் பின்னர் 90 ஆயிரம் தாண்டி, நூறாயிரம் என்றுதான் சொல்வார்கள். அதன்பின்னர் ஒரு மில்லியன் என்பார்கள். ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும். இங்கு கோடியும் கிடையாது. மில்லியனுக்கு அப்புறம் பில்லியன், டிரில்லியன் என்று போகும். பில்லியன் என்பது 1000 மில்லியன் ஆகும்.
சரி விஷயத்திற்கு வருவோம். ஃபோர்ப்ஸ் (Forbs) மேகஜின் சமீபத்தில் அமெரிக்காவில் வாழும் 400 பெரும் பணக்காரர்களைப் பட்டியலிட்டது. அதில் 53 பெரும் பணக்காரர்கள் நியூயார்க்கில் வாழ்கிறார்கள். அவர்களின் ஆவரேஜ் மதிப்பு ஆறு பில்லியன் டாலர்கள். இதில் நியூயார்க்கை மிஞ்சிய கலிபோர்னியாவில் வாழ்பவர்கள் 93 பில்லியனர்கள். (தம்பி விசு இதில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் அவர் பெயர் எப்படி விடுபட்டுப்போனது   என்று   விளங்கவில்லை)
கீழே நியூயார்க்கின் முதல் 10 பில்லியனர்களைப் பட்டியலிடுகிறேன்.

1) David  Kosh - $ 42 பில்லியன்
David Koch-crop-2007.jpg
David Kosh
2) Michael Bloomberg - $36 பில்லியன் (முன்னாள் மேயர்)

இவர்   மேயர்   ஆனதால்  பில்லியனர் ஆகவில்லை .பில்லியனர் ஆக இருந்ததால்  மேயர்  ஆனார் .

3) Carl Icahn - $26 பில்லியன்
4) Ronald Perelman - $14.5 பில்லியன்
5) Rupert Murdoch - $ 14.2 பில்லியன்  ( Media baron)
  1. Rupert Murdoch
    Owner of the following
    Times Magazin,New York Post,Fox Network,Direct TV,20th Century Fox( Produced Titanic, Avatar etc),Wall Street Journal,Time Warner, CNN and Star TV Network
    *



6) John Paulson - $ 13.7 பில்லியன்
7) James Simons - $ 12.5 பில்லியன்
8) Stephen Schwartzman - $ 10.6 பில்லியன்
9) Samuel Newhouse - $ 10.6 பில்லியன்
10) Leonard Lauda - $ 8.2 பில்லியன்

இந்த லிஸ்டை படிச்சு மண்டை காஞ்சு போச்சு .

மகேந்திரன்: ஏலேய் சேகரு, மில்லியனர் மற்றும் பில்லியனர் பற்றிச் சொன்ன சரி, அதென்ன சல்லியனர்?
பரதேசி : சல்லியனர் என்றால் சல்லிக்காசுகளை அதாவது பென்னிகளை மட்டுமே வைத்திருப்பவர் என்று அர்த்தம்.
மகேந்திரன்: அது யாருடா அந்த சல்லியனர்?

My Penny Collection 

பரதேசி :வேறுயாருமல்ல 'பஞ்சப்பராரி' என்று செல்லமாக அழைக்கப்படும் பரதேசியான நாந்தேன்.
மகேந்திரன் : -15 வருஷமா நியூயார்க்கில நீ சேத்து வைச்சது வெறும் சல்லிகளையா, போடா சல்லிப்பயலே.

பரதேசி: ???????????????

Monday, November 3, 2014

இளையராஜாவின் “விழியிலே மலர்ந்தது” !!!!!!!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா பாட்டு 7 - விழியிலே மலர்ந்தது.
1977-ல் வெளிவந்த "புவனா ஒரு கேள்விக்குறி" என்ற படத்தில் வந்தது இந்தப்பாடல். பாடலை முதலில்   கேட்டுவிடலாமா?

பாடலின் மூட்:
எக்ஸ்டசி என்று சொல்லப்படும் பரவச நிலையில் இருக்கும் காதலன் தன் காதலியை வியந்து அவளுடைய அழகில் மயங்கி வர்ணிக்கும் பாடல் இது.பாடலின் இசை மற்றும் ராகம்,பாடல் காதலனின் கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தும் வேக நடையில் அமைந்துள்ளது.  
இசைக்கோர்வை:
துள்ளலான நடையில் கிடார் ஸ்டிரம்மிங் வர ஜாக்கிங் போன்ற ஓடும் இசை நடை தீவிரமடைய, "விழியிலே மலர்ந்தது" என்று பாடல் ஆரம்பிக்கிறது. 'உயிரிலே கலந்தது' என்று 2-ஆவது வரியின் முடிவில் புல்லாங்குழல் குயிலைப்போல கூவ, "பெண்ணென்னும் பொன்னழகே", என அடுத்த வரி ஒலிக்கிறது. ஒவ்வொரு தடவையும் அது ரிபீட் ஆகிறது. முழு பல்லவியும் முடிந்தபிறகு, அதே பீட் தொடர, "உன் நினைவே போதுமடி", என்ற தொகையறா வருகிறது. வேகப்பாடலின் இடையே பீட் மாறாமல் இசை தொடரும்போது வரும் இந்த தொகையறா ஒரு ஆச்சரியமான செருகல். அது முடிந்தபின் மீண்டும் வேகம் பிடிக்கும் பாடலில் பல்லவி மீண்டும் வருகிறது.   
முதலாவது BGM புல்லாங்குழலுடன் ஆரம்பிக்க எங்கிருந்தோ இணையும் வயலின்கள் சரசரசரவென இணைந்து  இசைக்க, கிடார் ஸ்ரம்மிங்கில் முடிய, சரணம் ஆரம்பிக்கிறது, "ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்" .அதோடு இணைந்து தபேலா ஓடும் நடையில் வழக்கமான தபேலா நடை போலல்லாது வித்தியாசமாக வருகிறது. "காவியத்தின் நாயகி", என்ற இடத்தில்தான் வழக்கமான தபேலா நடைக்குத்திரும்பி "காதலுக்கு வளர்ந்த பூங்கொடி" என்ற வரியில் முத்தாய்ப்புடன் முடிய, ஓடும் பீட் மறுபடியும் ஆரம்பிக்க, பல்லவி ஆரம்பிக்கிறது. இம்முறை பல்லவியின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் வயலின் குழுமம் அந்த வரிகளுக்கு பதில் அளிப்பது போல் இசைக்கப்படுகிறது.
2-ஆவது BGM வயலின் இசையுடன் ஆரம்பித்து, பின்னர் கிடார் இசை இணைந்து அதன்பின் புல்லாங்குழலின் இசைமேல் வயலின் இசை பிரவாகிக்க, மகுடியிசை போல் வந்து முடிய, 2-ஆவது சரணம் "கையளவு பழுத்த மாதுளை", என்று ஆரம்பிக்கிறது. அதே தபேலா நடை இணைந்து கொள்ள முத்தாய்ப்புடன் 2-ஆவது சரணம் முடிய, பல்லவி ஆரம்பிக்கிறது "விழியிலே".- இப்பொழுது வயலின் பதில்கள் இன்னும் வேகமெடுத்து சத்தமாக ஒலிப்பதுபோல் கேட்கிறது. முடிவிலே அதே டியூன் ஹம்மிங்குடன் வந்து பாடல்  முடிகிறது. பாடலின் வேகமும் இசையும் நம் ஹார்ட் பீட்டையும் அதிகரிக்கிறது. ஆனால் பதட்டமாக அல்ல பரவசமாக.
பாடலின் குரல்:

என்ன காரணமோ தெரியவில்லை, தமிழ்த்திரைப்படங்களில் ஒலித்த ஒலிக்கின்ற பின்னனிப் பாடகர்கள் பெரும்பாலும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். ஜேசுதாஸ், S.P. பாலசுப்பிரமணியம், பி.சுசிலா, ஜானகி, மனோ, சித்ரா, ஜெயச்சந்திரன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் தமிழை நன்கு கற்று பாடல்களை அருமையான உச்சரிப்பில் கொடுத்த ஆண் குரல்களில் S.P.பாலசுப்ரமணியத்திற்கு ஈடு இணையில்லை. ல,ள,ழ மட்டுமின்றி ன,ண வையும், ர, ற வை தெளிவாக உச்சரிப்பவர். இந்தப்பாட்டின் ட்யூனுக்கும் வரிகளுக்கும் அழகுக்கு அழகு சேர்க்கும் அதிசயக்குரல்.  இந்தப்பாடல் SPB பாடிய பாடல்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று என்று கூட சொல்லலாம். காதல் ததும்பும் குரலில் அப்படியே கொஞ்சி வர்ணித்து உருகுகிறார். ஏதோ தானே காதலில் விழுந்து, தன் காதலியைப் பார்த்து பாடுவது போல் பாடுகிறார். குறிப்பாக பல்லவிக்குப்பின் வரும் தொகையறாவில் "உன் நினைவே போதுமடி" - என்ற வரிகளைக் குறிப்பாக கேட்டுப்பாருங்கள். "மனம் மயங்கும் மெய் மறக்கும்" என்ற வரிகளில் தானே மனம் மயங்கி, மெய் மறந்து பாடியிருக்கிறார். உண்மையிலேயே யாரைத்தான் நினைத்துப் பாடினாரோ பாலுவுக்கே வெளிச்சம்.

பாடல் வரிகள்:  

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
  
ஓவியனும் வரைந்ததில்லையே
 உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
 உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி


 கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே


பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். எப்பொழுதும் சாதாரண வரிகளில் எழுதி பாடலை உயிரூட்டுவதில் சிறந்தவர். காதல் எனும் மலர், விழியிலேதான் முதல் முதல் மலர்கிறது. பின்னர் உயிரிலே கலக்கிறது என்று முதல் வரியிலேயே சொல்லுகிறார். "விழியில் விழுந்து, இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" என்று பின்னர் “அலைகள் ஓய்வதில்லை", படத்தில் வைரமுத்து எழுதியிருப்பார். அந்தப்பாடலின் முன்னோடி இதுதான் என்று கூடச் சொல்லலாம். முதல் சரணத்தில் "ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்", என்ற தன் அதீத கற்பனையை அவிழ்க்கிறார். 2-ஆவது சரணத்தில், "கையளவு பழுத்த மாதுளை, பாலில், நெய்யளவு பரந்த புன்னகை" என்கிறார். பாலில் நெய் எப்படி தெரிந்தும் தெரியாமல், இருந்தும் இல்லாமல் இருக்குமோ அப்படி இருக்கிறது உன் புன்னகை என்பது ஒரு புதுமையான யாருக்கும் தோனாத கற்பனை.

பாடல், இசை, ராகம், வரிகள் மற்றும் குரல் என்பவை சரியான அளவிலும் விகிதத்திலும் இணையும்போது பாடல் பெரும் வெற்றி பெறும் என்பதற்கு உதாரணம் இப்பாடல்.  

குறுகிய  காலத்தில்  ஒரு லட்சம் ஹிட்கள் கொடுத்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . 

Thursday, October 30, 2014

பன்னீர் விட்ட கண்ணீர்!!!!!!!!!!!!!!

 ஒரு கற்பனை உரையாடல்

செயலாளர்: ஐயா உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்.
பன்னீர்: நான்தான் யாரையும் பார்க்க விரும்பலன்னு சொன்னேன்ல.
செயலாளர்: இல்லை ஐயா உங்க ஊர்னு சொல்றாரு.
பன்னீர்: ஓ அம்மூரா, அத முதல்ல சொல்லக்கூடாதா? சரி வரச்சொல்.
பரதேசி: முதல் அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
பன்னீர்: யோவ் யாருய்யா இங்க முதலமைச்சர்? வாயை மூடு .கொஞ்ச நாள் இருக்கலாம்னு பாத்தா கெடுத்துருவாய்ங்க போலிருக்கு. ஆமா உன்னை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லையே. எந்தூரு நீ?
பரதேசி: நம்மூர்தான் பன்னீர், பெரியகுளம் பக்கத்தில தேவதானப்பட்டி. ஆனா இப்ப அமெரிக்காவில் இருக்கேன்.
பன்னீர்: ஓ அப்படியா நம்ம பய அமெரிக்காவில் இருப்பது ரொம்ப சந்தோஷம். ஆமா உன் பேரென்ன?
பரதேசி: பரதேசி.
பன்னீர்: கலவரப்பட்டு, ஏய் யாரப்பா அங்ஙன. பக்கி,பரதேசியை யெல்லாம் பார்க்கமுடியாது. இவனை வெளியே தள்ளி கடையை  அடை.
பரதேசி: என்ன பன்னீர் ஒங்க டீக்கடை ஞாபகம் வந்துருச்சா, கடையை அடைன்னு சொல்றீங்க ?

பன்னீர்: நீ யாருப்பா, விவகாரம் புடிச்சவனா இருக்க. ஆமா ஒனக்கு என்ன வேணும்?
பரதேசி: அம்மா அனுப்பினாக.
பன்னீர்: பதறி எழுந்து, குனிந்து ஒரு கும்பிடு போட்டு, ஏம்ப்பா இத முதல்லயே சொல்லக்கூடாது? சரி சின்னம்மாவா? பெரியம்மாவா, இளவம்மாவா?
பரதேசி: எந்த அம்மாவும் அனுப்பல, சும்மா சொல்லிப்பாத்தேன். அது சரி யாரு இந்த இளவம்மா? 

பன்னீர்: இளவரசியைத்தான் இளவம்மான்னு சொன்னேன்.
பரதேசி: ஓ அவர்களும் அம்மா வரிசையில் சேந்தாச்சா?
பன்னீர்: ரொம்ப குசும்பு ஒனக்கு. ஆனா எதுக்கு வந்திருக்க?. நான் எதுவும் உதவி செய்யமுடியாத நிலையிலிருக்கிறேன்.
பரதேசி: அது எல்லோருக்கும் தெரியும் பன்னீர், உங்களுக்கு உதவி செய்யத்தான் நான் வந்திருக்கிறேன்.
பன்னீர்: எனக்கு உதவியா? என்ன உதவி?
பரதேசி: யாரைப்பாத்தாலும் எதைப் பார்த்தாலும் பயம்மா இருக்கா?
பன்னீர்: ஆமா, அதான் எல்லாத்துக்கும் தெரியுமே?
பரதேசி: யாரையும் நம்பமுடியல, எதையும் பேசமுடியல?
பன்னீர்: அட ஆமா.
பரதேசி: இப்படி உள்ளுக்குள்ளயே எல்லாத்தையும் அடக்கி வச்சிருந்தா மாரடைப்பு வந்துரும்.
பன்னீர்: ஐயையோ என்னப்பா பயமுறுத்துற?
பரதேசி: அதனால யார்ட்டயாவது மனசுவிட்டுப் பேசினா இந்தப் பாரமெல்லாம் குறைஞ்சுரும்.
பன்னீர்: சரி யார்ட்ட  அப்படி பேச முடியும்?
பரதேசி: அதுக்குத்தானே நான் வந்துருக்கேன். என்ட்ட நீங்க மனந்திறந்து பேசலாம்.
பன்னீர்: உன்னை எப்படி நம்பறது?
பரதேசி: நான் நம்மூர்க்காரன், அதோட அமெரிக்காவில இருக்கிறவன். இங்க இருக்கப்போவதில்லை. எதையும் ரெக்கார்டு பண்ணல, இந்த ரூம்ல பேசினதை இங்கயே மறந்துரலாம்.
பன்னீர்: சரிப்பா நான் ரெடி (எழுந்து சென்று கதவுகளையும் ஜன்னல்களையும் அடைக்கிறார்)
பரதேசி: உங்களுக்கு கிடைத்த முதலமைச்சர் பதவியைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?
பன்னீர்: மாண்புமிகு இதயதெய்வம், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மா>>>>>>>.
பரதேசி: போதும் நிறுத்துங்க பன்னீர். நான்தான் சொன்னேன்ல. மனந்திறந்து பேசுங்கன்னு.
 பன்னீர்: ஹிஹி சரிவிடு பழக்க தோசம். முதலமைச்சர் பதவி எப்படியிருக்குன்னா (பாடுகிறார்) "உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி".

பரதேசி: ஆமா என்னது தாடி வளர்த்து கண்ணீர் விட்டு பெரிய உலக நடிப்பா இருக்கே? எல்லோரும் உங்களை கண்ணீர் செல்வம்ல கூப்பிடுறாங்க.
பன்னீர்: நீ வேற என்னவிட பெரிய நடிகருங்க இருக்காய்ங்க.
பரதேசி: அம்மாவுக்கு இதெல்லாம் விளங்காதா?  
பன்னீர்: அவுங்களும் ஒரு நடிகைதானே. அதனால எல்லாவகை நடிப்பும் அவுங்களுக்குப் பிடிக்கும் (பாடுகிறார்) உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்.
பரதேசி: கண்டுபிடிச்சிர மாட்டாங்களா?
பன்னீர்: பக்கத்திலே இருக்கிற சசிகலா, இளவரசி நடிப்பையே கண்டுபிடிக்க முடியலயே. ஆனாலும் எனக்கு நடிப்புன்னா ரொம்பப் பிடிக்கும். எம்ஜியார் நடிப்பைப் பார்த்து வளர்ந்தவேன்ல.  
பரதேசி: அதெப்படி உங்களால அவ்வளவு குனிய முடியுது.சாஷ்டாங்கமா விழ முடியுது, இந்த வயசிலும்.

பன்னீர்: அதெல்லாம் யோகாவில் வேற வேற ஆசனம். நீதான் பாக்குறியே மந்திரி சபையில் எனக்கு மட்டும்தான் தொப்பை கம்மி.


பரதேசி: ஓஹோ அதான் விஷயமா? அதுசரி முதலமைச்சர் ஆயும் ஏன் அந்த அறையில உட்காரல? அவ்வளவு மரியாதையா?
பன்னீர்: நீ வேற அந்த ராசியில்லாத ரூமில போய் நான் உட்காருவேனா? ஏற்கனவே ஒரு தடவ உட்கார்ந்து ரொம்ப கொஞ்சக் காலத்தில பதவி போயிருச்சு.
பரதேசி: ஓ அப்படியா? ஆனா சமீபத்தில கார்டனில அம்மாவைப் பார்த்து கண்ணீர் விட்டீங்களே.
பன்னீர்: அது சோகக் கண்ணீர்தான். அதுக்குள்ள வெளியே வந்துட்டாங்களேன்னு.
பரதேசி: அடப்பாவி, அப்ப உள்ளே போன போது அழுதது.
பன்னீர்: அது ஆனந்தக் கண்ணீரப்பா. இனி நான்தேன் முதல்வர்னு நெனச்சு வந்தது. பரதேசி: ஓ இவ்வளவு விஷயம் இருக்கா. ஆமா எந்தத்துறை யெல்லாம் உங்க கீழே வருகிறது.?
பன்னீர்: அதெல்லாம் ஒன்னும் கிடையாது. எல்லாம் அம்மா துறை தான். அதான் IAS  அதிகாரிங்க இருக்காங்கல்ல. அம்மாகிட்டே நேரடியா ரிப்போர்ட் செய்றாய்ங்க.
பரதேசி: அப்ப உங்கள் யாருகிட்டயும் ஒரு அதிகாரமும் இல்லையா?
பன்னீர்: யாருக்கு வேணும் அதிகாரம்? பதவியை தக்கவைக்கிறதே பகீரதப் பிரயத்யனமா இருக்கு.
பரதேசி: அதான் OPS, OP அடிக்கிறாருன்னு சொல்றாங்களா? ஆமா அரசியல்ல உங்களுக்கு என்ன அனுபவம்?
பன்னீர்: என்ன இப்படி கேட்டுட்ட? என்னோட டீக்கடையில தினத்தந்தியும் மாலைமுரசும் தவறாம வாங்கிருவேன். வர்றவங்க படிச்சிட்டு பேசிக்கிட்டு இருப்பாய்ங்க. அதுலயிருந்து நிறைய கத்துக்கிட்டேன். எங்கடையில டீ ஆறினாலும் அரசியல் ஆறாதுல்ல.
பரதேசி: அப்ப பேப்பர் கூட நீங்க படிக்க மாட்டீங்க. சரி அண்ணா தி.மு.க -வில் எப்படி சேந்தீங்க?
பன்னீர்: ஓ அதுவா எனக்கு எம்ஜியார் படம்னா உசுரு. எங்கூரில்   ஜெயா டாக்கீஸ் அல்லது ரஹீம் தியேட்டர்னு எதில போட்டாலும் டெய்லி செகண்ட் ஷோ போயிருவேன். எங்கடையில எப்பவும் எம்ஜியார் பாட்டுதான் போடுவேன். அப்புறம் என்ன அதிமுகவில சேர்ந்திட்டேன்.
பரதேசி: அப்படின்னா திராவிட இயக்கம், பகுத்தறிவுக் கொள்கைகள் எல்லாம்?
 பன்னீர்: என்னப்பா என்னென்னவோ கேக்குற, அம்மாவுக்கே அதெல்லாம் தெரியாது.
பரதேசி: அப்ப நீங்க சேரும்போது உங்க கொள்கைகள் என்னவா இருந்துச்சு?.
பன்னீர்: அதான் சொன்னேன்ல, எம்ஜியார் படத்தை டெய்லி பாக்குறது. எம்ஜியார் பாட்டு மட்டும்தான் கேட்குறது. எம்ஜியார் படம் ரிலீசாகும்போது போஸ்டர் ஒட்டி, மாலை போட்டு தீபம் காண்பிக்கிறது.
பரதேசி: டீ கடைக்காரரெல்லாம் முதலமைச்சர் ஆயிட்டாருன்னு  சொல்றாங்களே?
பன்னீர்: என்னா அப்படி சொல்ற? டீக்கடை வச்சவர் நாட்டுக்கே பிரதமர் ஆகும்போது நான் ஆகக் கூடாதா. யாரு கண்டா நானும் ஒரு நாள் பிரதமர் ஆனாலும் ஆயிருவேன்.
பரதேசி: என்ன இப்படி பால் விலையை அநிநாயமா  ஏத்தீட்டீங்க ?
பன்னீர்: என்னாது பால் விலையை ஏத்தீட்டாய்ங்களா? அப்ப டீ விலையை ஏத்தச்சொல்லனும்.

பரதேசி: உங்க நீண்ட கால ஆசை எது?
பன்னீர் :ஒரு தடவையாவது ஹெலிகாப்டரல போயிரனும்.
பரதேசி: உங்க எதிர்கால திட்டம் என்ன?
பன்னீர்: அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. இன்னிக்கி நான்தான் முதலமைச்சர். அம்புட்டுத்தான்.

 பரதேசி: அப்ப பதவி போயிருச்சுன்னா ?
 பன்னீர்: இருக்கவே இருக்கு டீக்கடை.