Thursday, August 28, 2014

பரதேசி பார்த்த பரதேசி (மறு பதிவு )

          பாலாவின் பரதேசி பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதால், எப்படியாவது தியேட்டர் சென்று பார்த்துவிடுவது என முடிவு செய்தேன். தியேட்டர் போய்ப் பார்ப்பது அவ்வளவு கஷ்டமா? என்று கேட்பது காதில் விழுகிறது . ஆமங்க கொஞ்சம் கஷ்டம்தான். நியூயார்க்கில் தமிழ்ப்படம் தற்சமயம் எங்கும் இல்லை.எனவே ஒரு மணி நேரம்  டிரைவ் செய்து, பக்கத்தில் உள்ள நியூஜெர்சி மாநிலம் சென்றுதான் படம் பார்க்க முடியும்.சுமார் 60 மைல் , நன்றாக படிக்கவும் "மைல் ", கிலோ மீட்டர் அல்ல. சில வேளைகளில் ட்ராபிக்கில் மாட்டினால்  மூன்று மணி நேரம் கூட ஆகிவிடும் .


            பாலாவின் மீது எப்போதும் எனக்கு பாசம் உண்டு. காரணங்கள் இரண்டு

1) அம்மூர் மதுரைக்காரன் 2) எங்க “தி அமெரிக்கன் கல்லூரி” மாணவன். அமெரிக்கன் கல்லூரி கொடுத்த இயக்குநர் மகேந்திரனுக்குப்பின் பேசப்படுபவர்.பாலா இயக்கியதில் பிதாமகன் மற்றும் நான் கடவுள் என்ற இரு படங்கள் எனக்குப்பிடித்தவை.
   

            எதிர்பார்ப்புகளோடு போகாதே என்று மனம் சற்றே எச்சரித்தது. இப்படித்தான், இதற்கு முன்னால், "அவன் இவன்" வந்தபோது, எவன் இவன்? என்று பார்க்கப்போய், நடுவில் தூங்கி  எழுந்த சமயத்தில், அம்மண ஜமீந்தாரைப் பார்த்து அலறி, கண்கள் கோனி ஒரு வாரமா விஷால் மாதிரியே பார்த்துட்டு அலைஞ்சது ஞாபகம் வந்தது. 
ஆனாலும், இது "நம்ம பாலா" படம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, பிளான் பண்னேன். அந்தச் சமயத்தில்தான், நண்பன் முத்துராமலிங்கம் (hellotamilcinema .com ) ஃபேஸ்புக் ஸ்டேடசில், "மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள்தான் இந்தப்படத்தைப் பார்க்கமுடியும்" என்று பயமுறுத்தியதைப்  படிக்கும் போது, எதுக்கும் என் மனைவியையும் அழைத்துச்செல்லலாம் என்று அழைத்தேன். அதோடு நியூஜெர்சி வரை போவதால் துணையாகவும் இருக்கும்.

     அவள் தியேட்டரில் படம் பார்ப்பது அரிது. எப்போதாவது ரஜினி படம் வந்தால் போவாள். அப்போதெல்லாம் சில தமிழ்ப்படங்கள் நியூயார்க்கிலேயே பார்க்கலாம். 

     அவள் சில தோழிகளோடு எந்திரன் சென்றதுதான் கடைசி. அன்று எனக்கு வேறுவேலை இருந்தது. கூட்டத்தில் சிக்க வேண்டாம் என்று நினைத்து ஒரு மூன்று நாட்கள் கழித்துச் சென்றேன். ஜாக்சன் ஹெய்ட்சில் உள்ள, அந்த புராதன தியேட்டர் தூண்கள் சூழ்ந்து, சிதிலமடைந்த அஜந்தா ஓவியங்களுடன் தொல்பொருளாக இருந்தது. ஒரு இலங்கைத்தமிழர் புதிதாக அதனை லீசில் எடுத்து ஒரு தெலுங்குப்படம் மற்றும் எந்திரனை ரிலீஸ் செய்திருந்தார்.டிக்கட் வாங்கும்போது படம் ஆறுமணிக்கென்று சொன்னார்கள். எனக்கு ஆரம்பத்தில் இருந்து வணக்கம் போடும் வரை பார்த்தால்தான் திருப்தி என்பதால் 5.30 மணிக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தேன். மேலே பார்த்தால் சில இடங்களில் காரையோ எதுவோ பெயர்ந்து இருந்தது, திகிலைக் கூட்டியது. சேஃப்டி ஹெல்மட் வேற தரவில்லை.

     6.30 ஆகியும் படம் போடாததால் வெளியே சென்று விசாரித்தால், படம் போட்டாச்சே, அதோ பக்கத்தில் இருக்கிற சின்ன தியேட்டர் என்றார்கள். சொல்லவேயில்லை என்று முறைத்துவிட்டு, அந்த சிறிய தியேட்டரில் நுழைந்தால் "காதல் அணுக்களை" எண்ணியபடி, ரஜினி தப்புத்தப்பாக கிடாரை தடவிக்கொண்டிருந்தார். நம்பினால் நம்புங்கள். அங்கே ஒருவரும் இல்லை,  ரஜினியும் உலக அழகியும் தவிர. 15 டாலரில் ஒரு பிரத்யேக காட்சி ரஜினிக்குக்கூட கிடைத்திருக்காது. ஆனால் ஒவ்வொரு குளோஸ் அப் காட்சி வரும்போதும் கொஞ்சம் பயமாக இருந்தது, குறிப்பாக ரஜினியின் குளோஸ் அப். பாதிக்கு மேல் ஒரு ஸ்பானிஸ் பையன் வந்து உட்கார்ந்தான். அவனும் சிறிது நேரத்தில் ஒன்றும் புரியாது அல்லது ரஜினியை சகிக்க முடியாமல் வெளியே போய்விட்டான். 
     டிவின் டவர்  உயர கனவுகளோடு தியேட்டர் ஆரம்பித்த, இலங்கைத்தமிழர் ஜீரோகிரவுண்ட்  ஆகி முதல் படமான எந்திரன்  ரிலீஸ்லெயே, நொந்திரன் ஆகி தியேட்டரை மூடிவிட்டதில், நியூயார்க்கில், இப்ப தமிழ்ப்படம் போட எந்த தியேட்டரும் இல்லை. மன்னிச்சுடுங்க எங்கயோ டிராக் மாறிட்டேன்.

     நானும் என் மனைவியும் எங்கள் காரில் கிளம்பி, நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள எடிசன் என்ற பகுதிக்கு வந்தோம். இந்தியர்கள் அதிகமாக வாழும் அந்தப் பகுதியில் இருந்தது, "பிக் சினிமா" என்ற தியேட்டர் காம்ப்ளக்ஸ். நம்மூர் ரிலையன்ஸ் கம்பெனி இதுபோன்ற செயின் தியேட்டர் காம்ளக்ஸ் -ஐ பல இடங்களில் நடத்துகின்றனர். பிக் சினிமா , ஓக் ட்ரீ ரோடில் இருந்தது .அங்கேதான் நிறைய நகைக்கடைகள் இருப்பது நல்ல வேளை நியாபகம் வர , குறுக்கு வழியில் நுழைந்து , நகைக்கடைகளை தவிர்த்து விட்டு போய்ச்சேர்ந்தேன். தப்பிச்சேன்டா சாமி.

        ஒரே கூட்டமாய் இருந்தது. ஆஹா பரதேசிக்கு நல்ல கூட்டம்னு நினைத்தேன். எந்தப் படம் என்றாலும் டிக்கெட் வாங்க  ஒரே லைன். அப்புறம்தான் தெரிந்தது, அது தெலுங்குலு  படம்லு  பார்க்கலு வந்த கூட்டம்லு.

     டிக்கட் வாங்கி உள்ளே சென்றால் அது "பிக் சினிமா" இல்லை "ஸ்மால் சினிமா" என்று தெரிந்தது, நீளமாக குகை போல இருந்தது. மதுரை மினிப்பிரியா ஞாபகம் வந்தது. ஆனால் அது சூப்பரா, இருக்கும். தட்டையாக இருந்ததால், முன்னால் உட்கார்ந்தவர்களின் தலை மறைத்தது. அதுவும் என் முன்னால் அமர்ந்தவரின் கழுத்து, அதீத நீளமாய், கால்வாசி திரையை மறைத்தது. முன்பிறவியில் ஒட்டகமோ என்னவோ?

     படம் ஆரம்பித்தவுடன் கலரைப்பார்த்துவிட்டு என்னைத் திரும்பிப்பார்த்த என் மனைவி "புதுப்படம்தானே" என்றாள். "புதுப்படம்தான் ஆனால் பழைய படம்", என்றேன். முறைத்துப் பார்த்ததில், அவள் விழிகள் ரெண்டும் இருட்டிலும் பயமுறுத்தியது "புதுப்படம்தான் ஆனால் பழைய கதை, பீரியட் பிலிம்". என்றேன்.

     சூலூர் கிராமம் சுத்தமாகவே இருந்தது. நானும் கிராமத்தான் தான். ஆனால் என்னவோ தெரியல, என்னால அவங்களோட ஒட்ட முடியல. கால்வாசி படம் முடியும்போது, " ஆமா எங்க ஹீரோ? என்றாள் என் மனைவி, "இவந்தான் வட்டுறுப்பி, பேர் ஓட்டுப்பொறுக்கி" என்று காண்பித்த போது, "இவனா, அப்ப ஹீரோயின்", காண்பித்தேன். கலவரமடைந்தாள் என் காதல் மனைவி. டென்சன் ஆகாதிங்க பாஸ், ஒரு ரைமிங்க்கு சொன்னேன். ஒரே மனைவிதான் எனக்கு.

     என் மனைவி எழுந்தாள், என்ன என்று கேட்டதற்கு, ஒன்றுமில்லை, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன்னு சொன்னா. சரின்னு அனுப்ப, சமூசா வாங்கி வந்தாள். சில நொடிகளில் திரும்ப எழுந்தாள். என்ன என்றதற்கு, "சனியன் சமூசாவும் நல்லாயில்ல", என்று எழுந்து குப்பையில் போட்டு வந்தாள்.  என் மனைவி மட்டுமல்ல, அங்கு பலபேர் ரெஸ்ட்லஸ் ஆகி, வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்தனர். சிலர் திரும்பி வரவேயில்லை .

     “வா வீட்டுக்குப் போகலாம்” என்றவளை, நான் தான் கொஞ்சம் கெஞ்சி, கூத்தாடி உட்கார வைத்தேன். உங்களுக்குத் தெரியும்ல, எனக்கு எளகின மனசு. ஏதாவது சோகக்காட்சிகள் வந்தா அழுதுருவேன்.  ஆனால் என்னவோ தெரியல, சோகத்தை பிழியும் எந்தக் காட்சி வந்தாலும் அது எரிச்சலைத்தான் கூட்டியது.

     பாட்டு ஒவ்வொன்னும் நல்லா  இருந்துச்சு, ஆனா தனியாக கேட்டபோது. படத்தோடு ஒன்னுகூட ஒட்டல. அட இந்த, பேக்ரவுண்டு மியூசிக்கும் சுத்தமா ஒட்டவேயில்லை என்னாச்சு பாலாவுக்கு?. அந்த பரிசுத்தம் கேரக்டர், வெள்ளைக்கார மனைவியோட குத்தாட்டம் எல்லாம் ரொம்பவே ஓவர். வாழ்க்கையை வாழ்றதுக்கு ஒரு நம்பிக்கை ஒளின்றது படத்துல சுத்தமா இல்லை. 
     இன்னொரு விஷயம் எந்த இடத்திலும் எதார்த்தமே இல்லை. கொடூர ராட்சத உலகத்தில வாழவே வேண்டாம் செத்தொழின்னு சொல்லுறது படம். அடக்கொடுமையே.

     என் மனைவி பொறுத்து பொறுத்துப் பார்த்து தள்ளுங்கன்னு சொல்லிட்டு வெளியே போயிட்டா. நல்லவேளை கார் சாவி என்டயிருந்துசு. படம் முடிஞ்சி, வெளியே வந்த தமிழ் மூஞ்ச்சிகள் எல்லாம் நீளமாகி பாக்கச் சகிக்கல. சோகத்தில இல்லை ,வெறுப்பில.ஒரு நல்ல வீக்கென்ட் தொலைந்துபோன வெறுப்பு.

     வெளியே என் மனைவி ஐஸ்கீரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சூடான மூடை குளிரவைக்கிறாள் என்று நினைத்தேன். ஆனாலும் என்னைப் பார்த்து முறைத்தாள். 
 56 மார்க் போட்ட ஆனந்தவிகடன் மேல் ஆத்திர ஆத்திரமாய் வந்தது. சாரு நிவேதிதா(http://charuonline.com/blog/?p=258),முத்துராமலிங்கம் http://hellotamilcinema.com/index.php?option=com_content&view=article&id=1611:bala-paradesi-review-hot-review&catid=79:space&Itemid=422) மற்றும் முருகவேள் (http://charuonline.com/blog/?p=271) எழுதிய விமர்சனங்கள் முற்றிலும் சரி. முருகவேள் தான் , மூல நாவலான "ரெட் டி" ஐ தமிழில் மொழி பெயர்த்தவர். இவ்வளவு கொடூர  சோகத்துல எனக்கு ரொம்பப்பிடித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் காணாப்போயிட்டார்.

     என்னத்தைச் சொல்றது, என் மனைவி வழக்கத்துக்குமாறா பின்னாடி உட்கார்ந்து தூங்கிப்போக, வெரஜோனா  பாலத்தில் டிராஃபிக்ல மாட்டி, வீடு வந்து சேரும்போது, நடுராத்திரி தாண்டிருச்சு. நியாயமாரேன்னு எழுப்பினா , ஆமா வெளக்குமாரேன்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டா என் பாரியாள் .

     மூடை மாத்த சிரிப்பு டிவியைப் போட்டாலும், ஒன்னும் முடியாமல் அவஸ்தையாகி, அப்புறம் எப்ப தூங்கினேன்னு எனக்கே தெரியல.

     பரதேசி படத்தாலே நடந்த ஒரே நல்லவிஷயம் ஒரு நாலு நாள், என் மனைவி என்ட்ட பேசல நியாயமாரே.

13 comments:

  1. என்ன தலைவரே இவ்வளவு கஷ்டப்பட்டு தியோட்டரில் போய் படம் பாக்கணுமா என்ன? நம்ம ஊர் டிவீலதான் படம் ரீலீஸ் ஆனா கொஞ்ச நாளா போட்டுடுறாங்களே .அது சரி மில்லியனருக்கு எல்லாம் நேரமும் காசை கரியாக்கா இப்படி எல்லாம் செஞ்சாதான் உண்டு

    ReplyDelete
    Replies
    1. அட நம்மூருக்காரன் படத்தை தியேட்டரில் பார்க்கலாமே அப்படின்னு ஒரு நல்லெண்ணத்தில போயிட்டேன், விடுங்க பாஸ்.
      ஆமா அடிக்கடி இந்த மில்லியனர்னு யாரையோ சொல்றீங்களே , அது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா ?

      Delete
  2. நீயூஜெர்ஸியில் இருக்கும் நானே எடிசன்(அதாவது oaktree road) பக்கம் போய் 9 வருசம் ஆயிடுச்சு ஐ ஹேட் டு கோ தட் ஏரியா எப்படி சார் நீங்க எல்லாம் அந்த பகுதிக்கு???

    ReplyDelete
    Replies
    1. அட ஆச்சரியமாய் இருக்கே , நீங்க போகாவிட்டாலும் உங்க வீட்டுக்காரம்மா விட மாட்டாங்களே, அங்கேதான தங்கம், வைரம் எல்லாம் கொட்டிக்கிடக்குது.

      Delete
    2. அது சரி மில்லியனர்தான் அடிக்கடி தங்கம் வாங்க வருவாங்க நீங்க அங்கு வந்த காரணம் புரிஞ்சு போச்சி

      என் பொண்டாடியே தங்கம்தான் சார்....அதுனால அங்க எல்லாம் போறது கிடையாது...

      Delete
  3. ஆரம்பித்த சில நிமிஷங்களிலே என்னால் இதுவரை பார்க்க முடியாத தமிழ் படம் எந்திரன் கோச்சடையான் பரதேசி இதுல கோச்சடையான் படம் ஆரம்பித்தாலே என் பொண்ணு காத தூரம் ஒடிப் போகிறா/// கடந்த மூன்று வாராம எங்க வூட்டு டிவிலே தொடர்ந்து போடுறான்.. இதையே தொடர்ந்து போட்டால் அந்த டிவி சேனலை கேன்சல் பண்ணிட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை கோச்சடையான் படம் பக்கம் நான் போகவே இல்லை ..
      கோ என்றால் பெரிய, சடையான் என்றால் சடைப்படம் என்று அர்த்தமாமே ?

      Delete
  4. மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள்தான் இந்தப்படத்தைப் பார்க்கமுடியும்" என்று பயமுறுத்தியதைப் படிக்கும் போது, எதுக்கும் என் மனைவியையும் அழைத்துச்செல்லலாம் என்று அழைத்தேன். அதோடு நியூஜெர்சி வரை போவதால் துணையாகவும் இருக்கும்.//

    நியாயமாரேன்னு எழுப்பினா , ஆமா வெளக்குமாரேன்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டா என் பாரியாள் .//

    விமர்சனம் ரசிக்கவைத்தது.!

    ReplyDelete
    Replies
    1. இந்த படத்தைப்பார்த்தால் மனப்புரட்சி வரும்னு சிலர் சொன்னாங்க. ஆனா மனப்பிறழ்ச்சி தான் ஆகும்னு வேறு சிலர் சொன்னாங்க.நல்லவேளை , ரெண்டும் நடக்கலை .தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

      Delete
  5. paradesi i like it;this true estate life (recent i visit moonoru tamil pepole do not speak paradesi; avoid;bad memories; but TRUE; (kaskkum)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Meena Narayanan.

      Delete
  6. இந்த படத்தினை டி.வியில் போட்டா கூட பார்க்கும் ஐடியா இல்லை.யாரு அழுறது?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா.

      Delete