Thursday, August 4, 2016

நியூயார்க்கில் கபாலி !!!!!!!!!!

Add caption
கலைப்புலி தாணுவின் கனவுப்படம், அட்டக்கத்தி, மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம், விமானத்தில் கூட விளம்பரம், உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியீடு, மலேசியாவிலும், தாய்லாந்திலும் படப்பிடிப்பு, தாய்லாந்து  இளவரசியின் தனிக்கவனிப்பு, ரஜினியின் வெள்ளைத்தாடி, இது போன்ற எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற செய்திகள், விளம்பரம், ஹைப். டீஸரே சாதனை படைத்தது.
விளம்பரம் தேவைதான். அதுவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். கடலளவு எதிர்பார்ப்புடன் ஒருவன் படத்திற்குச சென்றால், மலையளவு அவனுக்குக் கிடைத்தாலும் திருப்தியிருக்காது. இது படத்துக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
என்னிடம் சமீபத்தில் பேசிய நண்பர்கள் இங்கேயும் சரி, இந்தியாவிலும் சரி கேட்ட முதல் கேள்வி "கபாலி பாத்தாச்சா?”, என்றுதான். இங்கே எல்லாப் படத்துக்கும் விரைவில் DVD வந்துவிடும் என்றாலும், ரஜினி படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்பதை தார்மீகக் கடமையாக பலபேர் நினைத்தது எனக்கு உள்ளபடியே ஆச்சரியமளித்தது. ரஜினி படத்தை உண்மையிலேயே பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ,முதல் நாள் முதல் ஷோ என்றெல்லாம் ஆசைப்பட்டால் அது நடக்காது. ஏனென்றால் வெறும் கூச்சலும், குழப்பமும், விசில் சத்தமும் மட்டும்தான் மிஞ்சும்.


"ரஜினி படம் வருது, நாம் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க வேண்டும்.", இது என் மனைவி. பிரதி வெள்ளிக்கிழமை இரவு ஒரு தமிழ்ப்படம் பார்த்து விட வேண்டும் என்பது என் மனைவியின் எழுதப்படாத சட்டம். தமிழ்ப்படம் பார்ப்பதன் மூலம் தமிழ்நாட்டோடு  ஒரு தொடர்பில் இருப்பது போல் அவளுக்குத் தெரிகிறது. அந்த அளவுக்கு நம்ம நாட்டு நினைப்பு இருப்பது மகிழ்ச்சிதான். நானும் அவளுக்கு கம்பெனி கொடுக்கத் தயாராகி உட்காருவேன். ஆனால் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் பார்க்கும்போது, 10 நிமிடம் அல்லது மிஞ்சிப் போனால் 30 நிமிடங்களில், நான் அப்படியே தூங்கிச் சாய்ந்து விடுவேன். இந்த இயக்குநர்கள் பணத்தையும் வாய்ப்பையும் எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள் என்று நினைத்து ஒரு புறம் ஆச்சர்யமும் மறுபுறம் அதிர்ச்சியாகவும் இருக்கும்.
 ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஓடியபின் நண்பர் கவிஞர் சிவபாலன் அவர்கள் அனுப்பிய குறுஞ் செய்தியில் "Bargain Wednesday", கபாலி படம் ஆறு டாலர்கள் மட்டும் என்று வந்ததை என் மனைவிக்கு ஃபார்வேர்டு  செய்தேன்.


அமெரிக்காவில் பல திரையரங்குகளில் இந்தமாதிரி சிஸ்டம் உண்டு. மற்ற நாட்களில் 15முதல் 20 டாலர்கள் வரை உள்ள கட்டணம், வாரத்தில் ஒரு நாள் 'பார்கெய்ன் டியூஸ்டே' அல்லது வெட்னஸ்டே என்று அனைத்து ஷோக்களும் ஆறு அல்லது ஏழு டாலர் மட்டும் இருக்கும்
ஆறு  டாலர் என்பது ரஜினி படத்திற்கு இந்தியாவில் டிக்கட் வாங்குவதை விடக் குறைவு என்பதும் ஊக்கம் கொடுக்க,நான், மனைவி இளைய மகள் மற்றும் இரு நண்பர்களின் குழந்தைகள் என ஆறு பேர் இரவு 10 மணி ஷோக்கு போனோம். போகும் வழியில் எதற்கும் ஃபோன் செய்து அட்வான்ஸ் புக்கிங் செய்துவிடுவோம் என்று அழைத்தபோது, “தேவையில்லை டிக்கட்டுகள் நிறைய உள்ளன, நேராக கவுன்ட்டரில் வாங்கிக் கொள்ளலாம்", என்கிறார்கள்.
நியூயார்க்கில் எனக்குத் தெரிந்து நான்கு தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த டக்ளஸ்டன் பார்க்வேயில் இருந்த,  மூவி வேர்ல்ட் தியேட்டர்தான் நாங்கள் போன இடம். இங்கு அதிகமாக ஹிந்திப் படங்களும், எப்போதாவது தமிழ், தெலுங்குப் படங்களும் வரும்.
My wife with kabali 

நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்தபோது அங்கே தெரிந்த முகங்கள் நிறைய இருந்தன. குறிப்பாக இலங்கைத் தமிழர் அமைப்பான முத்தமிழ் மன்றத் தலைவர் என்னுடைய நியூராலஜிஸ்ட் Dr. நந்தக்குமார் தன் குடும்பம் மற்றும் நண்பர்கள் புடை சூழ இருந்தார். பரவாயில்லை நிறையப் பேர்கள்  இருக்கிறார்கள் என நினைத்தபோது, "என்ன படம் முடிந்தபின் வருகிறீர்களா?”, என்றார் நந்தகுமார். அவர் கேட்டபோது தான் தெரிந்தது, அவர்கள் 6.30 மணிக்கு மாலைக் காட்சி முடித்து வெளியே வருகிறார்கள் என்று. " 10 மணிக்காட்சிக்கு வந்திருக்கிறோம்", என்றேன்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் விமர்சனங்களை வைக்க, நான் நந்தக் குமாரிடம் கேட்டேன் "படம் எப்படியிருந்தது?” என்று. அவர் சிரித்துவிட்டு, "அதான் நீங்களே பார்க்கப் போகிறீர்களே", என்றார். அவரும் குழுவும் விடைபெற்றுச் செல்ல, தியேட்டர் வளாகம் காலியாகி வெறிச்சோடியது.
எனவே என் மனதில் கபாலியின் பிம்பங்கள் விமர்சனங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு உள்ளே சென்று உட்கார்ந்தேன். நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்தபோது மொத்தத் தியேட்டரிலும் நாங்கள் ஆறு பேர்தான் இருந்தோம். படம் ஆரம்பிக்கும் முன்னால் இன்னும் இரண்டு குடும்பங்கள் வந்து சேர்ந்தன.

இதற்கு முன்னால் எப்போது தியேட்டருக்குப் போய் தமிழ்ப்படம் பார்த்தேன்? என்று யோசித்துப் பார்த்த போது அது எந்திரன் என்று ஞாபகம் வந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எந்திரனை ஒற்றை  ஆளாகப் பார்த்ததும் ஞாபகத்துக்கு வந்தது. 
ரஜினி திரையில் தோன்றும் போது , என்னை அறியாமலேயே ஒரு அனிச்சைச் செயல் போல விசிலடிக்க என் கைகள் வாய்க்குப் போனது.அப்புறம்தான்  எனக்கு நினைவு வந்தது எனக்கு விசிலடிக்கத் தெரியாது என்று.

'கபாலி' முழுப்படத்தையும் தூங்காமல் பார்த்தேன். இப்படிச்சொல்லும்போதே படம் எனக்குப் பிடித்தது என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.
படத்தைப்பற்றி என்னுடைய கருத்துக்களை கீழே தருகிறேன்.
இது ரஞ்சித் படமா அல்லது ரஜினிபடமா என்று கேட்டால் நான் சொல்வேன் இது ரஜினிபடம் தான் என்று. ஏனென்றால் கீழ்க்கண்ட ரஜினிபட அம்சங்கள் வழக்கம் போலவே இருந்தன.
1.   அதிரடி ஓசையுடன் ரஜினியின் அறிமுகம்
2.   ரஜினி வரும்போதெல்லாம் உரக்க ஒலிக்கும் BGM.
3.   கைதட்டல் கிடைப்பதற்காகவே ரஜினி வழக்கம்போல் பேசும் பஞ்ச் வசனங்கள் (நெருப்புடா, கபாலிடா, மகிழ்ச்சி )
4.   'உலகம் உனக்காக’ , ‘வீர துரந்திரா’ என்று ரஜினியைப் போற்றிப்பாடும் பாடல்கள்.
5.   ரஜினி சுடும்போது மட்டும் தவறாது இலக்கைத் தாக்கும் தோட்டாக்கள்.
6.   பல இடங்களில் லாஜிக் இல்லாத தருணங்கள்.
7.   ரஜினியின் எல்லாப் படத்திலும் வரும் ஸ்டைல் மேனரிசங்கள்.
8.   ரஜினியை பலம் மிகுந்த வஸ்தாதுவாக மட்டுமே காட்டும் சண்டைக் காட்சிகள். தனி ஆளாக ஒரு கூட்டத்தையே பதம் பார்த்தல்.
9.    ரஜினியைத் தவிர அங்கே நடிப்பதற்கோ ஸ்கேன் செய்வதற்கோ வாய்ப்பேயில்லை. (ராதிகா ஆப்தே ஒரு முறை விக்கிவிக்கி அழுது விட்டால் போதுமா?)
10.               படம் முழுதும் ஒவ்வொரு பிரேமிலும் வரும் ரஜினி.
11.               ரஜினியின் பிரமாண்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வில்லன்கள்.
12.               எதிரிகள் அனைவரும் குண்டடிபட்டு செத்துப் போதல். அதே சமயத்தில் குடும்பத்தில் செத்தவர்கள் மீண்டு வருதல்.
இதையெல்லாம் பார்த்துவிட்டும் இது ரஞ்சித் படம் என்று எப்படி சொல்லமுடியும். ரஞ்சித் முற்றிலுமாகத் தொலைந்து போனார் என்றுதான் நினைக்கிறேன். ரஜினி படத்தின் எல்லா இயக்குனர்களுக்கும் இது பொருந்தும்.
ஆறுதல் தருபவை:
1.   தொங்கிப் போன முகத்தில் விக்கைப்பொறுத்தி பேத்திகளுடன் காதல் டூயட ஆடாதது.
2.   'கபாலிடா' என்ற பன்ஞ் வசனத்தை ஒருமுறை மட்டுமே சொல்வது.
3.   சந்தோஷ் நாராயணனின் மெலடி பாடல்கள் (மாய நதி போன்றவை)
4.   அருமையான, அழகான, திறமையான ஒளிப்பதிவு.
5.   ஒரிஜினல் வெள்ளைத் தாடியுடன் அதிக நேரம் தோன்றுவது. (பின்னால் ஏன்தான் ஷேவ் செய்தார்களோ ?)
6.   பன்ச் வசனங்கள் போக மீதமுள்ள நல்ல உரையாடல்கள்.
7.   கார் ரேஸ்/ பைக் ரேஸ் மற்றும் வானத்தில் நிகழும் சாகசங்கள் இல்லாமை. 
தேவையில்லாதவை:
1.   கொஞ்சம் கூட பொருந்தாத விக்கில் வரும் இளமைக்கால ஃபிளாஸ்பேக் .
2.   சென்னை பாண்டிச்சேரி எபிசோட்.
3.   'உலகம் உன்னை' பாடலும் ரஜினி ஆடுவதும்.
லாஜிக் இல்லாத விஷயங்கள்.
அடப்போப்பா ரஜினி படத்துல போய் யாராவது லாஜிக் பாப்பாங்களா?
ரஞ்சித் ஓரிரு இடங்களில் திரைக்கதையை கிரிஸ்ப் ஆக்கி, ஒதுக்கி செதுக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் அவருக்கு எவ்வளவு பிரஷர் இருந்திருக்கும் எனவும் தெரிகிறது. ரஜினி படத்தில் காமடி நன்றாக இருக்கும். ஆனால் யோசித்துப் பார்த்தால் இந்தப் படத்தில் எந்த இடத்திலும் அது சாத்தியமில்லை.
மொத்தத்தில் இது லிங்காவை விட சிறப்பான படம். நன்றாகவே இருந்தது. பார்க்கவே முடியாது என்றளவுக்கு மோசமில்லை.
"ஆறிலிருந்து அறுபது வரை" இது ரஜினி நடித்த படம். ரஜினியின் வித்தியாச நடிப்பைப் பார்க்க விரும்புவர்கள் ஒருமுறை இந்தப் படத்தைப் பாருங்களேன். ஆனால் ஆறிலிருந்து அறுபது வயது வரை  முப்பது வருடத்திற்கு மேல் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பது ரஜினி மேஜிக்.
ரஜினி நல்ல நடிகர்தான். ஆனால் அவர் தன்னை இழந்து, தயாரிப்பாளரின் நடிகர் ஆகி வெகுகாலம் ஆகிவிட்டது . ரசிகர்களின் எதிர்பார்ப்பு,  படங்களின் உலக வணிகம் என்று அவரின் நடிப்புத்திறமை அமிழ்ந்து போனது.
ரஜினி சமீபத்திய அமிதாப் படங்களைப் பார்த்து தானும் மாறிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ரஜினி மேஜிக் இதற்கு மேல் தாங்காது.

முற்றும்.  

20 comments:

  1. இன்னொரு ரசிக்கக் கூடிய படம் முள்ளும் மலரும் மற்றும் புவனா ஒரு ?

    ReplyDelete
    Replies
    1. முள்ளும் மலரும் நல்ல படம்தான் , புவனா ஒரு கேள்விக்குறி நல்ல படமா
      என்பது கேள்விக்குறிதான் ஸ்ரீராம்.

      Delete
    2. Alfi just now I read urs.fine.butmy opinion is rajini and thanu r cheated by the director.First the director should prepare the audience about the Malaysia tamil people's problems clearly.The director unnecessarily talks about dalits and Ambetkar .All r scolding rajini plainly,u see he is a don in this film(is it ranjith's touch)In his past films no one ever can treat him like that.Ranjith wants to break rajini 's popularity as super star in different angle,but he smashed it.Midst of all minus points rajini only saves the picture.Makeup,dress,action all r simply super.story suits to him very well.There is no need for the sad ending.

      Delete
  2. //ரஜினி நல்ல நடிகர்தான். ஆனால் அவர் தன்னை இழந்து, தயாரிப்பாளரின் நடிகர் ஆகி வெகுகாலம் ஆகிவிட்டது// முற்றிலும் உண்மை. சூப்பர் ஸ்டாரை தாண்டி ஓரு நல்ல நடிகரை எதிர்பார்க்கிறோம். ரஜினி மனது வைப்பாரா?

    ReplyDelete
    Replies
    1. மனது வைக்கவேண்டிய சூழ்நிலை வந்து விட்டது என்றே நினைக்கிறேன் பாஸ்கர்

      Delete
  3. அருமையான அலசல்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில்குமார்

      Delete
  4. **'கபாலி' முழுப்படத்தையும் தூங்காமல் பார்த்தேன். இப்படிச்சொல்லும்போதே படம் எனக்குப் பிடித்தது என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். ***

    அழகா சொல்லீட்டீங்க, ஆல்ஃபி! :)

    ReplyDelete
  5. Perfect review ��

    ReplyDelete
  6. Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But some extraordinary smart people in TN say it is a Dalit movie. I say strongly that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. Director has not used any caste name. Director has not criticized any caste. He has spoken for all common people ***Watch more***

    Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

    Even After 10-20-100-1000 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

    Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

    Watch more Kabali!

    By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Unfortunately, these leaders did not do enough to bring change in Tamil society.

    Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.

    ReplyDelete
    Replies
    1. kabali is a good entertainer like all Rajini movies intends to do and I do not see anything beyond.I agree Cinema is a powerful media which could bring in changes in the society.But violence is not the solution for social change.

      Delete
  7. உங்க வீட்டாம்மாவை போல நாங்களும் வெள்ளிக்கிழமை இரவு புதிய தமிழ்படங்களை வீட்டில் பார்ப்போம் நான் படங்களை பார்பதைவிட அதிக அளவில் கேட்பேன் அதாவது பதிவுகள் எழுதிக் கொண்டே கபாலி படத்தை தியோட்டரில் சென்று பார்க்க ஆசைதான் ஆனால் பாடல்களை பார்வேர்டு செய்து பார்க்க முடியாது என்பதால் போகவில்லை

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அப்படித்தானா ?

      Delete
  8. நல்லதொரு விமர்சனம். நானும் பார்த்து விட்டேன்.

    ReplyDelete
  9. In one single movie, it's only possible to show this much scenes. You cannot expect beyond (more than) what has been shown in Kabali.

    I don't know where do I live, But read the history of Indeoendence of world countries. It's all done by fighting. Without fight, u cannot get nothing in this world. Even, India did not get independence without losing any life or without any violent events.

    Not all super-hit movies in the world are voilence-free. Many movies had even more voilence.

    Social change also cannot happen easily and polite talk. It that is the route, we now do not bend to talk about Change. It has not happened.

    ReplyDelete
    Replies
    1. The above mentioned points are for replies to Paradesi comment

      Delete
    2. I am not talking about Kabali . But generally saying, violence will not take us anywhere in modern days. There are several examples including the recent disaster happened at Srilanka.

      Delete