Tuesday, March 27, 2018

பத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் !


வேர்களைத்தேடி பகுதி: 11
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_19.html

Image result for ஜவ்வு மிட்டாய்
            ஏப்  நடராஜன் ஒல்லியாய் எப்போதும் சிடுமூஞ்சியாய் இருப்பார். பல பண்டங்களை விற்பார். குறிப்பாக அவர் கடையில் அதிர்ஷ்ட அட்டைகள் இருக்கும். அட்டையின் மேற்புறத்தில் பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற சில பரிசுகள் இருக்கும். ஐந்து பைசாவுக்கு அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு சதுர வடிவத்தில் மடித்த காகிதத்தை பிரித்துப் பார்த்தால், அதில் நம்பர் இருக்கும். அந்த எண்ணுக்கு அட்டையின் பின்புறத்தில் பார்த்தால் நமக்கு என்ன பரிசு விழுந்திருக்கும் எனத் தெரியும். சிறிய அளவு லாட்டரி போல. ஆனால் எல்லா எண்களுக்கும் ஏதாவது ஒரு பரிசு இருக்கும். பெரும்பாலும் சிறு சிறு மிட்டாய்கள்தான் விழும்.
          சரி அவருக்கு ஏன் ஏப் நடராஜன் என்ற பெயர் வந்ததென்றால், அவருக்கு  ஏதோ ஒரு கோளாறினால் அடிக்கடி ஏப்பம் வரும். ஏப்பம் என்றால் சாதாரண ஒன்றல்ல. மிகவும் சத்தமாக மிகவும் நீண்ட ஒன்றாக இருக்கும். லேசாக வாயைத்திறந்தாலே நாங்களெல்லாம் தெறித்து ஓடிவிடுவோம். அந்தளவுக்கு கர்ண கடூரமாய் இருக்கும். அதனால் நாங்கள் வைத்த பெயர்தான் "ஏப் நடராஜ்" என்பது. அதோடு அவர் ஏப்பம் விட ஆரம்பித்தால் எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாது. இப்பொழுது நினைத்தால் பாவமாயிருக்கிறது.
A fruit vendor selling ice-apple in Cuttack

          தினமும் கிடைத்த 5 பைசா 10 பைசாவை செலவழித்த விதம் இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாயிருக்கிறது. தினமும் என் மனதுக்குள் பட்ஜெட் போட்டுவிடுவேன். 5 பைசா கிடைக்கும் போது ரெண்டு தேன்மிட்டாய், ரெண்டு ஜவ்வுமிட்டாய், ஒரு காசுக்கு கடுகு மிட்டாய்கள் 5. பத்து பைசா கிடைக்க ஆரம்பித்தவுடன் ஒரு நாள் 5 பைசாவுக்கு மிட்டாய்கள் 5 பைசாவுக்கு ஐஸ், மறுநாள் மிட்டாயும் மாங்காய் இல்லையென்றால் கரும்பு. ஆகமொத்தம் ஏதாவது மாறி மாறி வாங்கி அந்தப் பத்துப் பைசாவும்  பத்து நிமிடத்தில் செலவழித்தால் தான் திருப்தி. சிலசமயங்களில் சவ்வுமிட்டாயை ஒரு மூங்கில் கழியில் வைத்து எடுத்துவருவார் ஒருவர். கழியின் மேலே ஒரு பொம்மை இருக்கும். நாங்கள் அருகில் போனால் அந்த பொம்மை தன் கைகளை கொட்டிக் கொட்டி ஆடும். கைகளில் சிறு சலங்கைகள் இருக்குமென்பதால் ஜல் ஜல் என்று சத்தமும் கேட்கும், ஆச்சரியமாக இருக்கும்.
Related image

          ரொம்ப நாள் கழித்துத்தான் அதை எப்படி என்று கண்டுபிடித்தேன். மூங்கில் கிழியின் கீழே ஒரு கயிறு இருக்கும். அது அந்த விற்பவரின் கால் பெருவிரலில் மாட்டியிருக்கும். அவர் அதனை லாவகமாக மேலும் கீழும் ஆட்டும்போது  பொம்மை கைகளைத் தட்டும். அந்த சவ்வுமிட்டாய்க்காரர் மிகவும் கலை விற்பண்ணர். நமக்குத் தேவையான உருவத்தை செய்து கொடுப்பார். வண்ணத்துப்பூச்சி, விமானம், சைக்கிள் போன்ற பல உருவங்களைச் செய்து கொடுப்பார். இதில் சிறப்பானது கைக்கெடிகாரம். பல வண்ணங்களில் கைக்கெடிகாரம் செய்து கையில் மாட்டிவிட்டுவிடுவார்.  பார்க்க அற்புதமாக இருக்கும். கழட்டவே மனசு வராது. ஆனால் பிசுபிசுவென்று ஒட்டுமென்பதால் கொஞ்சம் நேரம் கட்டிவிட்டு அப்படியே வாயில் வைத்து கடித்து சாப்பிட்டு விடுவோம்.
Image result for விரால் மீன்
விரால்
             அது போலவே  காற்றாடி   விற்பவர், சோன் பப்டி விற்பவர் , கப் ஐஸ் பால் ஐஸ்  விற்பவர்,இவர்களெல்லாம் எப்போதாவதுதான் வருவார்கள்.ராட்டினமும் அப்படித்தான். குடை ராட்டினம் மற்றும் ரங்க ராட்டினம் ஆகியவை வரும் .ஆனால் எனக்கு அதில் ஏற பயம் .தூர இருந்து மட்டும்தான் பார்ப்பேன், அதுவரை அந்த ராட்டினங்கள் எதிலும் எங்கேயும் நான் ஏறினதே இல்லை . அதற்கப்புறம்   புத்த ஆசை வந்ததிலிருந்து எனக்குக்கிடைக்கும் பெரும்பாலான காசை புத்தகம் வாங்கவே செலவழித்தேன்.அவ்வப்போது கைச்செலவுக்கு அப்பாவுக்குத்தெரியாமல் அம்மாவிடம் வாங்கிக்கொள்வேன் . வார இறுதி நாட்களில் வீட்டின் திண்ணையில் பாஸ்கர் நூல்நிலையத்தோடு உட்கார்ந்தால்   நேரம் போவதே தெரியாது .அதோடு தெருவில்  பல விற்பனைகள் நடக்கும் .காலையில் பதநீர், காய்கறி,நுங்கு, மீன் , பழம்,கப்பக்கிழங்கு, வெள்ளரிக்காய், மாலையில் பூ விற்கும் பெண்கள் என்று வந்து கொண்டே இருப்பார்கள்.
மீன் வகைகளில் ஆத்து மீன் மட்டும்தான் கிடைக்கும் .விரால் , கெண்டை, கெளுத்தி, அயிரை, குரவை, போன்ற மீன்கள் வரும். இதில் விரால் எப்போதாவது மட்டும்தான் கிடைக்கும் .

Related image
கெண்டை
                 பெரும்பாலும் ஜிலேபிக்கெண்டை என்ற மீனைத்தான் எங்கம்மா வாங்குவார்கள். அதைச் சுத்தப்படுத்தி செய்து முடித்தாலும் ஒரு வாரம் அந்த மீன் வாடை வீட்டில் இருக்கும். அதனால் எனக்கு மீன் பிடிக்காமல் போய்விட்டது . இப்போதும் மீன் சாப்பிடுவதில்லை. எப்போதாவது நெய்மீன் (கிங் ஃபிஷ்) செய்தால் மட்டுமே சாப்பிடுவேன். ஆனால் கருவாடு சாப்பிடுவேன். அதிலும் நெய்மீன் மற்றும் நெத்திலி மட்டும்தான்.
          கோடைக்காலத்தில் மிகவும் சுவையான வெள்ளரிக்காய்கள் கிடைக்கும். பிஞ்சுக்காய்களை  வாங்கி வந்து கழுவி சிறுசிறு கீத்துகளாக வெட்டி மிளகாய் உப்பில் தொட்டுக் கொண்டே கையில் முத்துகாமிக்ஸ் வைத்துக் கொண்டு வயிறு புடைக்க சாப்பிட்டு விடுவேன். இங்கு நியூயார்க்கில் அந்த மாதிரி வெள்ளரிக்காய்கள் கிடைப்பதில்லை. ஆனால் கிர்பி என்று ஒரு வகையுண்டு, இரண்டுபுறம் வெட்டி, அதின் பாலை சுத்தி சுத்தி எடுத்துவிட்டு, தோலை நீக்கி வெட்டிச் சாப்பிட்டுப்பாருங்கள். ஓரளவுக்கு நம்மூர் சுவை கிடைக்கும். அதோடு வெள்ளரிப்பழங்கள் ஆகா என்ன சுவை , லேசாக சீனி போட்டு சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும் அவைகளைச் சாப்பிட்டு 30 வருடமிருக்கும்.
Related image
வெள்ளரிப்பழம்
          இது தவிர சனிக்கிழமைகளில் நண்பர்களின் தோட்டத்துக்கு போவதுண்டு. அங்கே நான் என்னென்ன சாப்பிட்டேன் என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.
-தொடரும்.  

4 comments:

  1. படித்து முடித்தவுடன் குழந்தையானேன்...!

    ReplyDelete
    Replies
    1. குழந்தைப்பருவம் ஒரு குதூகல பருவம்தான்

      Delete
  2. எனக்குத் தான் பழைய நினைவுகள் வருகிறதென்றால் 40, 50, 60 வயதுகளில் உள்ள எல்லோருக்குமே வருவது தவிர்க்க இயலாதது. நான் விரும்பிப் படிக்கும் தொடர் இது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முத்துச்சாமி

      Delete