இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்”
மறுவாசிப்புக்கென சில புத்தகங்கள்
உள்ளன. காலத்தால் அழியாத கிளாசிக் வகை புத்தகங்களை லிஸ்ட் போட்டால் அதில்
இந்திரா பார்த்தசாரதி எழுதிய "குருதிப்புனல்" என்ற நாவலும் வரும். இதற்கும் கமல் எடுத்த "குருதிப்புனல் என்ற படத்துக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை .
பெண்களின் பெயரை முதற்பெயராகக்
கொண்டு புனை பெயரில் எழுதிப் புகழ்பெற்ற
எழுத்தாளர்கள் பலர். சுஜாதா, கலாப்ரியா, சாரு நிவேதிதா,
புஷ்பா தங்கதுரை, ஹேமா ஆனந்ததீர்த்தன், சுபா,சவீதா, ஸிந்துஜா என்று
பல எழுத்தாளர்களைச் சொல்லலாம்.
இதில் இந்திரா பார்த்தசாரதி தலையாய,
சிறந்த இலக்கிய வகை எழுத்தாளர். இவர் எழுதியதில், "குருதிப்புனல்"
மிகவும் முக்கியமான ஒன்று. 70களில்
வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நாவல் "சாகித்ய அக்காடெமி"
பரிசு பெற்றது. பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ஒன்று. 2010-ல் இந்திய அரசாங்கம்
இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவித்தது.
இதை ஜெமினியின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர்ராஜன்
“கண்சிவந்தால் மண்சிவக்கும்” என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து
80 களில் எடுத்தார்.
மறு வாசிப்பில் மிகவும் புதிதாக
இருந்தது. அதோடு இதில் விவாதிக்கப்படும் சமூக அவலங்களும் அப்படியே புதிதாகவே இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல்
இருக்கின்றன. சொல்லப்போனால் அந்த அவலங்கள் இன்னும் அதிகமாகத்தான் பரவியுள்ளது.
குறிப்பாக தஞ்சைப் பகுதியில் நடந்து,
பெரும் பரபரப்பூட்டிய "கீழவெண்மணி" சம்பவத்தைத் தழுவி
எழுதப்பட்டது இந்த நாவல். இன்றைக்கும் அன்று நடந்த, நம்
சமூகத்தின் சாதிவெறியும், ஆதிக்க மனப்பான்மையும் சுட்டெரித்த அப்பாவி மக்களின்
பரிதாப மரணங்கள் ,நடுக்கத்தையும் கோபத்தையும்
ஏற்படுத்துகின்றன.
கலப்பு மணம் புரிந்து கொண்டு தங்கள் ஊரையும் மாநிலத்தையும் விட்டு ஓடி தலைநகர்
டெல்லியில் வாழ்க்கையை ஆரம்பித்த ஒரு தம்பதியின் மகன்,
மீண்டும் தன் தந்தையாரின் ஊருக்கு வருகிறான்.
அவன் பெயர் கோபால். சமூகவியலில் உயர் படிப்பு படித்திருந்தாலும், கிராமத்தில்
இருக்கும் தன் சொந்த சமூகத்தை நன்றாக தெரிந்து கொள்ளாவிட்டால் இழிவு என்று
எண்ணியதால்தான் தஞ்சையில் இருக்கும் தன் குக்கிராமத்துக்குத் திரும்புகிறான்.
அங்குள்ள சமூக அவலங்களை தன் சொந்தக் கண்ணால் பார்க்கும் அவன், அதனை மாற்ற தன்னால்
ஏதும் இயலுமா என்று முயன்று பார்க்கையில், அவனுடைய நண்பன்
வாசு வந்து சேர்கிறான்.
கிராமத்தில் சிறிதாக முளைவிடும்
கம்யூனிச சிந்தனைக்கு தலைமை தாங்கும் பள்ளிக்கூட ஆசிரியர் ராமய்யா தலைமையில்,
அமைப்பு சாரா கிஸான் குழு ஒன்று இயங்க முயல்கிறது.
அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதிக்க
மனப்பான்மை கொண்ட மேல்தட்டு பண்ணைக்காரர் இவர்களை ஒழித்துக்கட்ட முயல்கிறார்.
இடையில் மாட்டிக் கொண்ட கோபாலும் வாசுவும் என்னாகிறார்கள்? அவர்களை நம்பி
பண்ணைக்காரரை எதிர்க்கும் கீழ்த்தட்டு தொழிலாளர்களின் நிலைமை என்னவாகிறது? என்பதுதான்
கதை.
புத்தகத்தில்
சொல்லப்பட்டுள்ள அன்றும் இன்றும் அப்படியே மாறாமல் இருக்கும் நிறைய அவலங்களைக்
கீழே கொடுக்கிறேன்.
1)
பணம் பாதளம் மட்டும் பாயும்.
2)
பணம் ஒரு இடத்திலேயே குவிந்து கிடக்கும்.
3)
ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே தொடரும் அவதி.
4)
பணக்காரர்களுக்கு சட்டமும் போலிசும் வளையும்.
5)
அரசியல்வாதிகள் பணத்திற்கு அடிமைகள்.
6)
அரசியல்வாதிகளின் உண்மை முகம் மறைந்தே
இருக்கும்.
7)
அரசியல்வாதிகளுக்கு பொதுநலன் என்பதில் கிஞ்சித்தும் கவலை இல்லை.
8)
“கரை" வேட்டிகள் "கறை"வேட்டிகளாகவே அலைகிறார்கள்.
9)
தடியெடுத்தவன் தண்டல்காரனாகின். ஆனால் அவர்களும் பணக்காரனுக்கு அடிமை.
10)
சாதி வெறியும், வகுப்புவாதமும் தீராத
சமூக வியாதிகள்.
11)
படிப்பும் பட்டணமும் போலிகளை உருவாக்குகின்றன.
12)
திரைப்பட நபர்களின் பின்னால் போதல் மற்றும் அவர்களின் காதலிகளை
அண்ணி என்று அழைத்து உருகும் வேலையற்ற ரசிகர் கூட்டம்.
13)
பெரியோர்களே தாய்மார்களே என்று விளித்து மேடைகளைக்
களங்கப்படுத்தும் அரசியல் போலிகள்.
14)
கூலி உயர்வு கேட்டால் தாலி அறுக்கும் முதலாளிகள்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ
நம் சமூகம் மாற.
நாளை இங்கு விடுமுறை தினம் என்பதால் பதிவு இன்றைக்கே வருகிறது .மீண்டும் வரும் திங்கள்கிழமை சந்திப்போம் ,சிந்திப்போம் .
Wish you all a happy Thanksgiving