Thursday, February 27, 2014

முதல் ரேடியோ பெட்டி

       அன்னிக்கு ராத்திரி தூக்கமே வரல. ஏன்னா அடுத்த நாள் எங்கப்பா தேனிக்குப்போய் ரேடியோ வாங்கப்போறார்னு என் அம்மாட்ட சொன்னதை கேட்டுட்டேன். அப்ப எனக்கு வயசு ஏழு இல்லாட்டி எட்டு இருக்கும். நாந்தேன் எங்கப்பாட்ட கேட்டுட்டே இருந்தேன். அப்துல்லா அவிங்க வீட்டுல வாங்கிட்டோம்னு ரொம்ப பீத்திட்டு இருந்தான். எங்க வீட்ல கரண்ட் வந்தே ஆறுமாசந்தேன் ஆச்சு. வீட்டு ஓனர் வத்தலக்குண்டு ராவுத்தர் வந்து ரெண்டு நாள் தங்கி கரண்ட் கனெக்ஷன் கொடுத்துட்டு முப்பது ரூபாய் இருந்த   வாடகையை பத்து ரூபா ஏத்தினார்.
       அது வரை ஹரிக்கேன் லைட்தான். தெனம் சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், எங்கப்பா ஹரிக்கேன் விளக்கை எடுத்து துடைச்சு, அதன் கண்ணாடிக் குமிழில கொஞ்சம் கோலப்பொடியை போட்டு கிழிஞ்ச பனியனை வச்சு துடைச்சா பளிச்சுன்னு ஆயிரும். நானும் அதே மாதிரி துடைக்கனும்னு ஆசையா இருந்தாலும் எங்கப்பா கொடுக்க மாட்டாரு. கொஞ்சம் சீமத்தண்ணியை ஊத்தி திரியை ஏத்திவிட்டா முதல்ல கொஞ்சம் புகை வந்து அப்புறம் சீரா எரியும். கரண்ட் வந்த பெரவு அதுக்கு அவ்வளவா வேலையில்லை. எப்பனாச்சும் கரண்ட் போனா பரண்மேல இருந்து எடுத்துப்பொருத்துவோம். இல்லேனா எனக்கு தடுமன் பிடிச்சுருச்சுன்னா, எங்கம்மா அதை எடுத்து பொருத்தி, அது மேலே துண்டை மடிச்சு வெச்சு, கொஞ்சம் சூடானவுடன் தலையிலும் நெத்தியிலும் வைப்பாங்க. தடுமனுக்கு ரொம்ப இதம்மா இருக்கும்.
       பள்ளிக்கூடத்துலயும் அன்னிக்கு எனக்கு ஒண்ணும் ஓடலை. எங்கப்பா பள்ளிக்கூடம் முடிச்சு, தேனி பொறப்பட்டுப் போனார். என்னையும் கூப்பிட்டுப் போகக்கூடாதான்னு நெனைச்சேன். ஆனா கேட்கத் தைரியம் இல்ல.
       அன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு ஒரு பெரிய அட்டைப் பெட்டியோடு வந்து சேர்ந்தார் என் அப்பா. நாளைக்குப் பூட்டலாம்னு சொல்லிட்டு படுத்தார். நான் மெதுவா எந்திரிச்சு அட்டைப் பெட்டியில காது ச்சுப் பார்த்தேன். ஒண்ணும் கேட்கல.
       அடுத்த நாள் எல்லாத்தையும் வெளிய எடுத்தார். பளபளன்னு நல்லா ஜோரா இருந்துச்சு. UMS னு போட்டுருந்துச்சு. பீரோ மேல  வைச்சு, போட்டவுடன் கரகரன்னு ஏதோ கேட்டுச்சு. அதுக்குள்ள பக்கத்து வீடுகளில இருந்து ஆட்கள் வந்து கூட்டம் கூடிருச்சு. "பக்கத்து வீட்டு பினாங்குக்காரரை கூப்பிடவா",ன்னு எங்கப்பாட்ட கேட்டேன். பதிலே சொல்லாம நோண்டி நோண்டி பார்த்த போது, தீடீர்னு பாட்டு வந்துரிச்சு. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபத்தின் தமிழ்ச்சேவை" என்று சொன்னதும், முதல்ல நான் கைதட்ட அப்புறம் எல்லோரும் கைதட்டினாங்க. எங்கப்பாவின் முகத்தில கொஞ்சம் சிரிப்பு வந்துச்சு. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நோண்டி 2 நாள்ள, திருச்சி வானொலி நிலையம், சென்னை வானொலி நிலையம் எல்லாம் கண்டுபிடிச்சார் அப்பா. ஆனா முக்காவாசி, இலங்கையும், திருச்சியும்தான் கேப்போம். டெல்லியிலிருந்து தமிழ் நியூசும் வரும். சரோஜ் நாராயணசாமின்னு ஒரு குரல்  பொம்பள குரலா ஆம்பள குரலானு தெரியாது.
       இதுக்கிடையில அடுத்த வாரத்தில ஒரு நாள் எனக்கு காய்ச்சல்னு பள்ளிக்கூடம் போகல. அப்பாவும் அம்மாவும் பள்ளிக்கூடம் போய்ட்டாங்க. வகுப்புல என்னைக் காணாத என் நண்பன் மகேந்திரன் என் வீட்டுக்கு வந்துட்டான். "என்னடா சேகர் என்னாச்சு?", ன்னு கேட்டு நெத்தியை தொட்டெல்லாம் பார்த்தான்.
       எனக்கு உப்புபோட்டு கல்லாமக்கா மாங்காய் ஒரு கீத்து வாங்கிட்டு வந்திருந்தான். தீடீர்னு பீரோ மேல பாத்துட்டு, "ஏலே இதான் நீங்க வாங்கின லேடியோ பொட்டியா, ரொம்ப நல்லாருக்கு. எலே லேடியோவைப் போடலாமா",ன்னு என்ட்ட கேட்டான். "வேணாண்டா  எங்கப்பா கொன்றுவாருன்னு", சொன்னேன். ஆனா நான் சொன்னதக் கேக்காம ஸ்டூலைப்போட்டு ஏறி, எட்டாம மேசையைப் போட்டு ஏறி திருப்பி திருப்பி நோண்ட ஏதோ இங்கிலிஸ்ல வந்துச்சு. 

 
       மேசையியிருந்து குதிச்ச அவன் சொன்னான்,
எலே சேகரு, உனக்கு குட்டி மனுசன்களை பாக்க ஆசையா?
"எங்கடா இருக்காய்ங்கன்னு?
 "சேகரு நீ சொன்னா நம்பமாட்டே, என் கண்ணால பார்த்தேண்டா, மேட்டுவளவு ஜமிந்தார் வீட்டிலே, இதவிட பெரிய பெட்டி ஒண்ணு இருக்கு. அதுல அன்னிக்கு துடைச்சு சுத்தம் பண்ண தெறக்கும்போது, நான் எட்டிப்பாத்தேன். குட்டி குட்டியாய் 4 பேர் நல்லா உடுத்தி உள்ளே உட்காந்திருந்தாய்ங்க. அவய்ங்கதான் பேசறது, பாடறது. எல்லாம்".
"எனக்கு நம்ப முடியல". போடா லூசு கரண்ட்ல வேலை செய்யுதுடா இந்த ரேடியா".
"நான் காமிச்சிட்டா? என்னா பந்தயம்".
"சரி வாடா ஜமீந்தார் வீட்டுக்குப் போவோம்".
"எங்கடா போறது, லேடியோ இங்கயே இருக்கே. உள்ளுக்குள்ள குட்டை மனுசங்க இல்லாட்டி உனக்கு என் பொன்வண்டைக் கொடுத்திர்றேன்."
 லேசா திறந்து காண்பிச்சான்.அது தீப்பெட்டிக்குள்ள கையையும் காலையும் ஆட்டிக்கிட்டு இருந்துச்சு.
 "ஐயையோ சும்மார்ரா வம்பா", என்றேன். நீ பேசாம இரு, நான் காமிக்கிறேன்னு, திரும்ப மேல ஏறினான்.  
       வட்ட ஒரு பைசா காசை எடுத்து, ஸ்குரூவை நோண்டி மேலே உள்ள கூடை அப்படியே டோப்பா எடுத்திட்டான். பார்ரா, இவனுக்கு எவ்வளவு திறமைன்னு திகைச்சுப் போயிட்டேன். பயமாயிருந்தாலும் உள்ள பார்க்க ஆசையா இருந்துச்சு. உள்ள ஒண்ணுமில்லாட்டி பந்தயத்துல ஜெயிச்சு  பொன்வண்டு  கிடைக்கும்லன்னு நெனச்சு ஒரு தெம்பு வந்துச்சு.
       ரேடியோ உள்ள பாத்தா கண்ணாடில குமிழ் குமிழா இருந்துச்சு. அது உள்ள என்னா இருக்குன்னு வெளியே தெரியல. அது எடுக்க முயற்சி செஞ்சப்ப, படீர்ன்னு ஒடைஞ்சு போச்சு. ஐயையோன்னு நான் போட்ட கூச்சல்ல, அந்த குச்சிக்காலன் குதிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். பயபுள்ள பொன் வண்டையும் கொடுக்காம போயிட்டான்.

       இன்னும் கொஞ்ச நேரத்தில, பள்ளிக்கூடம் இன்டர்வல்ல எங்கம்மா வரும், காலைல நேரம் இருக்காதுன்னு இன்டர்வல்லதான் எங்கம்மா வீட்டுக்கு வந்து டிபன் சாப்புடும். அது கூட எனக்கு பயமில்ல, எங்கப்பாரு மதியம் வந்தா என்ன நடக்கும்னு நெனைச்சு, எனக்கு ஜூரம் கூடிப்போச்சு. கதவை திறக்கற சத்தம் கேட்டு, அம்மான்னேன், ஆனா நுழைஞ்சது எங்கப்பா.

Monday, February 24, 2014

காரைக்குடி பயணம் பகுதி 6: ராஜாதி ராஜன் ராஜ கம்பீர ராஜ பரதேசி வருகிறார் !!!!!! பராக் !!!!!!!!


       இந்தப்பாம்புகளுக்கும் எனக்கும் ஏதோ ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் எங்கே போனாலும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அதனைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்ப நம்ம சித்தன்னவாசல் "சமண கட்டுவிரியன்" என்ன ஆனது என்று பார்ப்போம்.
       தலையைத்தூக்கி என்னையே பார்த்துக்கொண்டிருந்த 'விரியன் பாம்புக்குட்டி' யைப் பார்த்து என் வீரம் எல்லாம் சோரம் போனது. என் கலவர முகத்தைப் பார்த்த மாவீரன் எட்வின், ஒரு நீண்ட குச்சியை எடுத்து அதனைப்பிடித்து அப்புறமுள்ள புதர்ப்பகுதியில் விட்டார்.
       "அண்ணே போவோம், 'சமண மரணம்' என் உடம்புக்கு ஒத்துக்காது”, என்று சொல்லி மலையிறங்கினோம். விரைவாக கீழே வந்து சேர்ந்தோம். அந்த வழுக்குப்பாறையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஏறுவதுதான் கடினம், இறங்குவது மிக எளிது (பரதேசியின் தத்துவம்-12).
         கார் கிளம்பி மதுரை வழியில் சென்றது."என்னன்னே இன்னிக்கு அவ்வளவுதானா?" என்றேன். "இன்னும் ஒரு இடம் பாக்கி", என்று சொன்னனார். சில நிமிடங்களில் ஒரு கம்பீரமான கோட்டைக்கு முன்னால் காரை நிறுத்தினார். அது என்னவோ தெரியல இந்த அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், மன்னர்கள் வரலாறு இதனை அறிவதிலும் பார்ப்பதிலும் எனக்கு அதீத ஆர்வம். நான் நினைக்கிறேன் என் DNA யில் உள்ள அரச பரம்பரையின் வீர ரத்தம் கொஞ்சம் நஞ்சம் மிச்சம் சொச்சம் இன்னும் இருக்கும் போல.
       "ஆமா நீ ஒரு தொடை நடுங்கின்னு ஊருக்கே தெரியும் இதுல ராஜ பரம்பரையாம்".
       "வந்துட்டான்யா வந்துட்டான்யா, நல்ல குடி நாயகம் தூத்துக்குடி வெங்கலம்".
       "இப்பதான் பாம்பைப் பார்த்து அந்த நடுநடுங்கின. இதில இவர் பரம்பரை பெருமை வேற".
       "மகேந்திரா பாம்பென்றால் படையும் நடுங்கும்னு சொல்வாங்கல்ல, அது அரச பரம்பரைக்கும் விதிவிலக்கல்ல".
திருமயம் கோட்டை
Thirumayam Fort, Tamil Nadu
       புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கும் இது ஒரு அழகான மலைக்கோட்டை. இது நமக்கு ஏற்கனவே அறிமுகமான ராமநாதபுர மன்னர் விஜய ரகுநாத சேதுபதியால் (கிழவன் சேதுபதி) 1687-ல் கட்டப்பட்டது. அதன்பின் முதலில் இதன் தலைவராகத்தான் ரகுநாத ராய தொண்டைமான் நியமிக்கப்பட்டார். இவர் படே கில்லாடிதான். தன் கோதரியை திருமணம் செய்து கொடுத்ததால் தொண்டை மண்டலத்திற்கே அரசராகி விட்டாரே. இதுக்குப்பேர்தான் பெண்ணைக்கொடுத்து மண்ணைப்பெறுவதா? 

       ஆரம்பத்தில் 7 அடுக்குகளாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் (Ring Fort) இப்போது நான்கு பகுதிகள்தான் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Archeological Survey of India)  கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டை, பாளையக்காரர்கள் போரில் ஈடுபட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகும்.  

    
        மூன்று வெவ்வேறு நுழைவாயில்களைக் கொண்ட கோட்டையான இதில் ஒவ்வொரு புறமும், அனுமார், சக்தி, கணபதி ஆகியோருக்கான கோயில்கள் உள்ளன. அது தவிர கள்ளர்களின் காவல் தெய்வமான கருப்பருக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. மேலே போகிற வழியில் இருபுறமும் வெடி மருந்துக் கிடங்குகள் இருக்கின்றன (Magazine). இன்னும் சில சந்நிதிகளும் உட்புறத்தில் இருக்கின்றன. குறிப்பாக வைணவர்களுக்குத் தனியாக ஸ்ரீ சத்திய மூர்த்தி உய்யவன நாச்சியார் சந்நிதியும், சைவர்களுக்கு சத்யகிரீஸ்வரர் -வேனுவனேஸ்வரி ஆகிய சந்நிதியும் குடைவரைக் கோயில்களாக பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில்களுக்கு செல்வதும் சற்றே கடினம்.

       மேலே இரு பகுதிகளிலும் இயற்கையான குங்கள் இருக்கின்றன. மொட்டைப் பாறையில் நீருற்றினைப் படைத்த இந்தக் கடவுளை புரிந்து கொள்ளவே முடியவில்லை போங்கள்.  


       கோட்டையில் ஆங்காங்கே பீரங்கிகளைக் காண முடிந்தது. நடுவிலே ஒரு   உயரமான பீடத்தில் ஒரு பெரிய பீரங்கி இருந்தது. செங்குத்துப் படிகளில் ஏறி இரண்டு பேரும் பீடத்தின் மேலே சென்று பீரங்கி ஆராய்ச்சி செய்து திரும்பினோம்.
       இந்தக் கோட்டையில் தான், ஊமைத்துரை ஒளிந்திருந்த சமயத்தில் பிரிட்டிஷ் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதனால் இக்கோட்டைக்கு ஊமையன் கோட்டை என்ற மற்றொரு பெயர் சொல்லப்படுகிறது. கோட்டை விஜயம் முடிந்து கீழிறங்க சூரியன் மறையத்துவங்கியது.
       “என்ன ஆல்ஃபி இன்னிக்கு பார்த்த இடங்கள் திருப்திதானே", என்றார் எட்வின்.
       “அண்ணே ஒரே நாளில் இவ்வளவு இடங்கள் பார்த்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி, ரொம்ப நன்றின்னே", என்றேன்.
       "அதுக்குள்ள நன்றி சொல்லாதே, திருமலை நாயக்கர் மஹாலை ராத்திரியில் பார்த்திருக்கிறாயா", என்றார்.
       “இல்லையே "என்று யோசிக்கும் போது, “அதான்பா ஒலி ஒளிக்காட்சி", என்றார்.
       "அண்ணே போலாம்னே, சின்ன வயசில பார்த்தது, டைம் இருக்கா".
       “எட்டுமணிக்குத்தான் நிகழ்ச்சி. குயூரேட்டர் என் நண்பர்தான் நேராப் போயிரலாம்”னு சொன்னார். ஆஹா பிரபாவுக்கும் போன் செய்தேன். அதிசயமாக அவரும் ஃப்ரீயாக இருந்ததால், மனைவியையும், மகளையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தார். எட்வினின் நண்பர்கள் என்பதால் ராஜமரியாதை.  
       திருமலை நாயக்கரின்  வரலாற்று நிகழ்வுகள் கண்ணுக்கு ஒளியாகவும் காதுக்கு ஒலியாகவும் நன்றாக நடந்தது. "ரொம்பப் பழசு, புதிய டெக்னிக்கில் இதனை இன்னும் சிறப்பாக பண்ணலாம்", என்று சொன்னார் பிரபா. விசுவல் கம்யூனிகேஷன் HOD மட்டுமல்லாமல், அவர் ஒரு இசையமைப்பாளர் அல்லவா.
       ஒரே ஒரு குறை என்னவென்றால் “ஈ” என்ற படத்தில், இறந்தவன் ஈயாக மாறி வந்து பழிவாங்குவது போல், மஹாலில் வேலை பார்த்த பழைய படைவீரர்கள் எல்லாம் கொசுக்களாக மாறி ரத்தம் குடிக்க வந்தனர். என்னிடம் மட்டும் பாச்சா பலிக்கவில்லை. என்னிடம் ரத்தமில்லாமல் ஏமாந்ததோடு, எலும்பில் கடி விழுந்து பல் உடைந்து பொக்கை வாயாகிப் போனார்கள், யார்ட்ட ம்ம் யார்ட்ட.
       எட்வினுக்கு நன்றி சொல்லி, டிரைவர் சரவணணையும் அனுப்பிவிட்டு, காரில் திரும்பும் போது, வனராஜிடமிருந்து போன் வந்தது. "டேய் சிவகங்கை போகனும்னு சொன்னியே, நாளைக்குப் போகலாமா?”, என்று. உற்சாகமாக ஓகே  என்று உடனே சொன்னேன் .
என்ன நண்பர்களே , சிவகங்கைக்கு ஒரு எட்டு போயிட்டு வந்திராம்ல ?
காரைக்குடி பயணம் முற்றுப்பெற்றது.
விரைவில் எதிர்பாருங்கள்  சிவகங்கை பயணம் .

பின் குறிப்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் கல்யாண மாலை பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா நடுவராக பங்கு கொண்ட ,  பட்டிமன்ற ராஜா அணியில், “ குடும்ப வாழ்வு சுவைப்பது  அமெரிக்காவில்தான்” என்ற  தலைப்பில் அடியேன் பேசுகிறேன்.
 



Wednesday, February 19, 2014

காவல் கோட்டமும் அரவானும் !!!!!!!!!!!!!!

காவல் கோட்டம் - சு வெங்கடேசன்.
தமிழினி பதிப்பகம்.


       "மாரத்தான் ஓட்டம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். மாரத்தான் வாசிப்பு என்று ஒன்று இருந்தால், என் அனுபவத்தில் "காவல் கோட்டம்" வாசித்த முயற்சிதான் அது. 1050 பக்கங்கள் மிகச்சிறிய எழுத்துக்கள். ஆனால் எந்த இடத்திலும் தொய்வில்லாமல், சோர்வடையச் செய்யாமல் நல்ல ஒரு புத்தகத்தை வாசித்த ஒரு அனுபவம் கிடைத்தது.
       மாரத்தான் வாசிப்பு என்பதைவிட, இந்தப்புத்தகத்தை "மாரத்தான் எழுத்து" என்றுதான் சொல்ல வேண்டும். சு.வெங்கடேசன் அவர்கள் பல மைல்கள் பயணம் செய்து, பல நூறுபேரைச் சந்தித்து, பல்வேறு புத்தகங்களை ஆய்வு செய்து சுமார் 10 வருடங்கள் செலவழித்து எழுதிய புத்தகம் இது. 2011-ன் "சாகித்ய அக்காடெமி" பரிசை இப்புத்தகம் வென்றது என்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. முற்றிலுமாக மதுரையின் வரலாறு சார்ந்தது என்பது இதனைப் படிக்க இன்னொரு காரணம். இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்தப் புத்தகம் முதல் பகுதியில் 'முடியரசு' என்ற தலைப்பிலும் 2ஆவது பகுதி "குடிமக்கள்" என்ற தலைப்பிலும் எழுதப்பட்டிருக்கிறது.
       மாலிக்காபூரின் படையெடுப்போடும் கற்பழிப்புகளோடும் ஆரம்பிக்கிறது இப்புத்தகம். அதன்பின் மதுரைப் பகுதியில் முஸ்லிம் மதம் இயல்பாகப் பரவியது என்பது ச்சு முகமது, விருமாயி ஆத்தா மகள் பாத்திமா என்று சொல்லும்போது விளங்குகிறது.
       அதன் பின்னர் விஜயநகர நிறுவனர் புக்கரின் மகன் குமாரகம்பனின் நாயக்கர் படைகள், ஜீனாகான் ஆட்சியை முறியடித்து, பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிறுவியது. நாயக்கர் படையின் முன்னே விரைந்து வரும் வேட்டை நாய்களின் படை ஆச்சரியமூட்டியது. 500 ஆண்டுகள் பூட்டிக்கிடந்த மீனாட்சியம்மன் ஆலயமும் திறக்கப்படுகிறது.
       நடுவில் விஜயநகர கதை வருகிறது. மதுரை நாயக்க மன்னர்கள் அங்கிருந்து வந்தவர்கள் ஆதலால் அதன் பின்னனியை அறிவது அவசியமாகிறது. விஜய நகரப் பேரரசின் பெருமைமிகு மன்னர் கிருஷ்ணதேவராயர், ஹரிஹர புக்கர் வழியில் வந்தவரல்ல. அவர்கள் ஆட்சியின் கீழ் சந்திரகிரியை ஆண்ட ஆளுனர் சாளுவ நரசிம்மனின் வழி வந்த புது வம்சமான துளுவ வம்சத்தைச் சேர்ந்தவர்.
       இடையில் மதுரையைப் பிடித்துக் கொண்ட வீரசோழனை விரட்டி தளபதி நாகம நாயக்கரின் படை வந்து வீரசோழனை அப்புறப்படுத்தி தானே அரசாளத்துவங்கினார். அதனைக் கேள்விப்பட்டு ஆத்திரமடையும் கிருஷ்ணதேவராயர், நாகம நாயக்கரின் மகனும் தனக்கு தாம்பூலம் மடித்துக்கொடுக்கும் மெய்க்காப்பாளனான விஸ்வநாதன் தலைமையில் படையை அனுப்புகிறார். மகன் தந்தையை முறியடித்து சிறைப்படுத்தி திருப்பி அனுப்பி ராயரிடம் மன்னிப்பு பெற்றுத்தருகிறான். இந்த விஸ்வநாதனே 'அரவ நாடு' என்று அவர்கள் அழைத்த மதுரைக்கு ஆளுநராக்கப்பட்டார். இவர் வழித்தோன்றல்களே தொடர்ந்து மதுரையை ஆண்டனர். கிருஷ்ணதேவராயருக்குப் பின்னால் விஜய நகரப்பேரரசு நலியத்துவங்க, நாயக்க ஆளுநர்களே அரசர்களாக தொடர்ந்தனர். அவர்கள்  வழி வந்தவர்தான் திருமலை நாயக்கர். தொடர்ந்து பல நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்த அரியநாத முதலிதான் பாளையங்களை உருவாக்கியவர்.  
       ராணி மங்கம்மாள், முத்துவீரப்பன், விஜயரங்க சொக்க நாதன் ஆகியோரோடு நாயக்க ஆட்சி முடிவு பெற்று, ஆற்காடு நவாப் ஆட்சி வருகிறது. பின்னர் வந்த மருத நாயகன் யூசுப்கான் ஆட்சியும் முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி அமைகிறது.
       இதற்கிடையில் சிறந்த பாளையக்காரர்களான கட்டப்பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் ஆகியோர் ஒழிக்கப்பட்டனர்.
       பிரிட்டிஷ் ஆட்சியின் சமயம் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் (Black burn) முடிவின்படி விஸ்வனாத நாயக்கர் கட்டிய மதுரைக்கோட்டை இடித்தொழிக்கப் படுகிறது. இடிப்பதில் பெரும் பங்கு கொண்ட மாரட் மற்றும் பெருமாள் மேஸ்திரி போன்றோர் பெயர்களில் தெருக்கள் உருவாகின. மதுரையில் போலிஸ்படை எப்படி உருவாக்கப் பட்டது என்பதைப்படிக்கும் போது வியப்பு மேலிடுகிறது.
       நாவலின் அடுத்த பகுதியில் கள்ளர் தொழிலிலும், காவல் தொழிலிலும் கொடிகட்டிப் பறந்த தாதனூர் பகுதியைப்பற்றி  வருகிறது .களவையும் காவலையும் ஒழிக்க தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அதனால் இறந்துபோன அப்பாவி மக்களையும் பற்றி மிகவும்  விரிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.தாதனூரின் களவு ஒழிக்கப்படுவதோடு நாவல் முற்றுப்பெறுகிறது.
       இப்பொழுது நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் இது எவ்வளவு பெரிய இமாலய முயற்சியென்பதை. இந்த மாதிரி வரலாறு அல்லது நடந்த நிகழ்சிகளை விவரித்து எடுக்கப்படும் படங்களை டாக்குஃபிக்சன் ( Docufiction) என்பார்கள் . இதனையும் அப்படியே   அழைக்கலாம்.
Add caption
 திரைப்பட இயக்குனரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த “அரவான்” திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
சு.வெங்கடேசன்
       தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் விளங்கும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியின் முழுநேர ஊழியராக உள்ளார். 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தலில் தோற்றாலும் நாவலில் ஜெயித்திருக்கிறார்.
       வரலாற்றில் ஆர்வமுள்ளவர், குறிப்பாக மதுரைக்காரர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.
Old Madurai

       

Monday, February 17, 2014

காரைக்குடி பயணம் பகுதி 5: கதை கேளு! கதை கேளு! புதுக்கோட்டை கதை கேளு!

Portrait of His Highness Dambadas Ramachandra Thondaiman Bahadur. Oil painting on canvas by Raja Ravi Varma 
       
ஊரிலே நுழைந்ததுமே தெரிந்தது, தமிழக நகர்களில் புதுக்கோட்டை வேறஜாதி என்று. அகலமான வீதிகள், திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நாற்சந்திப்புகள் என சிறிதே வித்தியாசமாக இருந்தன. ஏற்கனவே பார்த்த திருப்பத்தூர் மற்றும் காரைக்குடியை விட இது நிச்சயமாக பெரிய ஊர். சாலையெங்கும் பறந்த புழுதிதான் இதுவும் நம்மூர்தாங்கோ என்று  சொன்னது.
District court
பிரிட்டிஷ் கால சிவப்புக் கட்டிடம் வழியாக கார் ஊர, அதுதான் மாவட்ட நீதிமன்றம் என்றார்கள். அதன் முன்னால் கம்பீரமான புதுக்கோட்டை மன்னர் மாட்சிமை தங்கிய மார்த்தாண்டவர்ம பைரவ தொண்டைமான் சிலை இருந்தது.
புதுக்கோட்டை சமஸ்தானம் பிறந்த கதை
       புதுக்கோட்டை, முதலில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் சேதுபதி ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. ராமநாதபுரத்தைச்சேர்ந்த திருமயத்தின் ஆளுநராக ரகுநாத தொண்டைமான் இருந்து வந்தார். அச்சமயத்தில் ராமநாதபுரத்தின் சிறப்பு வாய்ந்த மன்னர் ரகுநாத கிழவன் சேதுபதி, (கிழவன் என்றால் இங்கு வயதானவன் என்று அர்த்தம் இல்லை) தொண்டைமான் சகோதரியான கதலி நாச்சியாரை மணக்கிறார். சில காலம் கழித்து, சிறப்பாக திருமயத்தை ஆளும் தொண்டைமானுக்கு புதுக்கோட்டைப் பகுதியையும் சேர்த்து அளிக்கிறார். கிழவன் சேதுபதி இறந்தவுடன் ரகுநாத தொண்டைமான் தன்னை சுதந்திர அரசராக பிரகடணம்  செய்கிறார்.
Tondaiman Durbar by Raja Ravivarma 
       அப்போதிருந்து மற்ற பாளையங்கள் சமஸ்தானங்கள் அழிந்தாலும் இந்தியா சுதந்திரம் வாங்கும் வரை இந்த சமஸ்தானம் நிலைத்து நின்றதற்குக் காரணம் இவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடங்கிப்போனதால்தான். ஆங்கிலப்படைகளுக்கு உதவியாக, ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகிய மன்னர்களை புதுக்கோட்டை எதிர்த்து போர்புரிந்தது. எனவே தான் தமிழ்நாட்டில் மற்ற பாளைத்தார் சமஸ்தானங்கள் எல்லாம் அழிந்து போக, புதுக்கோட்டை நிலைத்ததோடு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 17 முறை பீரங்கி ஒலிக்கும் (Gun salute)  மரியாதை தரப்பட்டது.
       பிரிட்டிஷ் அரசாங்கம் தனக்கு உதவியாக இருந்த அரசர்களுக்கு, அவர்கள் எந்தக் கோட்டைக்கு விஜயம் செய்தாலும் அவரவர் தகுதிக்கு ஏற்ப பீரங்கி முழக்க வரவேற்பு கொடுத்தனர். அதில் புதுக்கோட்டை மன்னருக்கு 17 முறை.
       இந்தியா சுதந்திரம் வாங்கும்போது புதுக்கோட்டை ஒரு தனிப்பட்ட நாடாக இருந்தது. ஆனால் அப்போதிருந்த ராஜா ராஜகோபால தொண்டைமான் (1928-1948) அவர்களின் முடிவின்படி, ஏப்ரல் மாதம் 1948-ல் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இணைந்தது. கிபி.1686-ல் உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் 1948 அதாவது 262 ஆண்டு காலம் கழித்து முடிவுக்கு வந்தது.


       புதுக்கோட்டை மன்னரின் அழகான அரண்மனை இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்படுகிறது. 

புதுக்கோட்டையில்  நன்கு பராமரிக்கப்படும் மியூசியம் ஒன்று இருக்கிறது. புதுக்கோட்டை மன்னர்கள் பயன்படுத்திய அரிய பொருட்களோடு, குடுமியான் மலை, சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அரிய பொருட்கள் காட்சிக்கு இருக்கின்றன.

 புதுக்கோட்டைக்கு செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு கண்டிப்பாக செல்லுங்கள். என்னுடைய நாணயங்கள் சேகரிப்பில் புதுக்கோட்டை நாணயங்களும் உண்டு.

        “எட்வின் அண்ணா, ரொம்ப தேங்க்ஸ்னா. மணி மூன்று ஆகிறது, அடுத்து எங்கே”, என்றேன். "அடுத்து சித்தன்ன வாசல்", என்றார்.

 சூப்பரோ சூப்பர் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் போகிறோம் என்று முதலிலேயே சொல்லாமல், ஒரு இடம் பார்த்து முடித்தவுடன், அடுத்த இடத்தைச் சொல்லி அசத்தியது, எனக்கு ரொம்பப்பிடித்தது.

 முழுவதுமாக எப்போதும் திட்டமிடும் எனக்கு, இது ஒரு வித்தியாசமான அனுபவம். இது புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதி, ஒரு நல்ல மொட்டைப்பாறை.

 உயரமான இந்தப் பாறைப் பகுதியில் ஏறிச்சென்றால் சமணர்களின் குடைவரைக் கோயிலான இந்தச் சிறிய குகையில்  சித்தன்னவாசலின் ஓவியம் சிரித்தது.

 மிகச் சிதிலமடைந்து இருந்த அந்த ஓவியத்தின் முழுப்பகுதி, எப்படி இருந்திருக்கும் என்று  பக்கத்தில் இருந்த தற்கால ஓவியத்தைப் பார்த்துத் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதிலே இருந்த அலுவலர் ஒருவரும் வந்து அதனை விளக்கிக் கூறினார். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
       இந்த மாதிரி மொட்டைப் பாறைகள் கிடைத்தால் சமணர்கள் விடுவதில்லை. அதனைக் குடைந்து மண்டபங்கள் உருவாக்கி, கற்படுக்கைகளை உருவாக்கி தவம் செயயத்துவங்கி விடுவார்கள். பெரும்பாலும் பொதுமக்களை விட்டு விலகியே இவர்கள் வாழ்ந்தனர். இந்த இடத்தில் கி.மு.2ஆம் நூற்றாண்டு (நன்றாகப் பாருங்கள் கி.மு. கி.பி இல்லை) முதற்கொண்டு சமணர் வாழ்ந்து வந்தார்களாம். இங்குள்ள பிராமி எழுத்துக்களே அதற்கு சாட்சி.
       இந்தக் குகைக்கோவிலில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. முதலாவது உள்ள 'அர்த்தமண்டபத்தில்' தீர்த்தங்கரர்களின் சிலை இருக்கிறது. அதன் உட்பகுதியில்தான் கருவறை இருக்கிறது. அர்த்த மண்டபத்தின் கூரையில்தான் ஓவியம் இருக்கிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான ஒன்றாம் இது. தவம் செய்து செய்து போர் அடித்துப்போன முனிவர்கள் பொழுதுபோக்குக்காக இதனை வரைந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.


       நண்பர்களே முற்றிலும் அழிவதற்குள் ஒருமுறை பார்த்துவிட்டு வந்து விடுங்கள்.

       இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கருவறையை நோக்கும்போது ம் அல்லது ஓம் என்ற சத்தம் அப்படியே குகையை நிரப்புகிறது. அது எப்படி என்று தெரியவில்லை. வெளியே வந்தால் குகையை சுற்றியிருந்த கம்பி வலைகளில் ஒரு கட்டுவிரியன் சுற்றிக்கிடந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும் >>>>>>>>>>>>>>>

பின் குறிப்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி  23 ) சன் டிவியில் கல்யாண மாலை பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா நடுவராக பங்கு கொண்ட ,  பட்டிமன்ற ராஜா அணியில், “ குடும்ப வாழ்வு சுவைப்பது  அமெரிக்காவில்தான்” என்ற  தலைப்பில் அடியேன் பேசுகிறேன். 

Thursday, February 13, 2014

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !!!!!!!!!!!!!!!!!


வேலண்டைன் தின சிறப்புப்பதிவு
            “கிண்கிணி கினி கினி” “கிண் கிணி  கினி கினி”. யாரது காலங்காத்தால இசை எழுப்புவது என்று யோசிக்கையில், ஊப்ஸ் அப்போதுதான் ஞாபகம் வந்தது, அது என் மனைவி வாங்கிக் கொடுத்த புதிய சாம்சங் கேலக்சி நோட் 3-யில் வந்த அலாரம் எழுப்பிய நாதம். அட அதுக்குள்ள மணி அஞ்சாயிருச்சா?. ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் மனைவியை எழுப்பாமல், அலுங்காமல் குலுங்காமல் எழுந்து, அவள் போர்வையை சரிசெய்து விட்டு கட்டிலைவிட்டு கீழிறங்கினேன். அன்றைய நாளின் வேலைகள் ஞாபகம் வர, ஒரு பெருமூச்சுடன் காலை ஜெபத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு எழுந்து சமையலறைக்குச் சென்றேன்.
        ஸ்டவ்வைப் பற்றவைத்துவிட்டு, நீரைச்சுடவைத்து ஃபோல்ஜெர்ஸ் (Folgers)காப்பித்தூளை போட்டேன். 2% பாலை எடுத்து அடுத்த பர்னரில் வைத்துப் பதமாக காய்ச்சி, காப்பி தயாரித்து "வெட்ஜ்வுட் " (Wedge wood) கப்பில் ஊற்றி சிறிது ஆறவிட்டு (தமான சூட்டில்தான் அவள் குடிப்பாள்) குவிந்து கிடந்த பாத்திரங்களை மடமடவென்று விளக்கிப்போட்டேன்.
        ஃபிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து வெளியே வைத்து, சிறிது நீர் விட்டுக்கரைத்தேன். ஓ இந்த ஒரு நேரத்திற்குத்தான் வரும், சாயந்திரம் வந்து மாவாட்டி வைக்க வேண்டும் என்று நினைத்து, கேலக்சியில் ஒரு அலாரம் வைத்துக்கொண்டேன்.
        கீழே அவனில் இருந்த இட்லி குக்கரை எடுத்து சிறிது அலசிவிட்டு ஒரே சைசில் வருவது போல் இட்லியை எடுத்து ஊற்றி ஸ்டவ்வில் வைத்தேன். என் மனைவிக்கு இட்லி நல்ல வடிவாக ஓரங்கள் சிதையாமல் இருக்க வேண்டும். அதற்குள் மணி ஆறாகிவிட, ஐயோ அவளை எழுப்ப வேண்டுமே என நினைத்து கப்பில் இருந்த காப்பியின் சூடும் இனிப்பும் சரியாக இருக்கிறதா மறுபடியும் செக்செய்து விட்டு உள்ளே கொண்டுபோனேன்.
        "அம்மா, கண்ணம்மா கொஞ்சம் எழுந்திருக்கியா? மணி ஆறாயிருச்சு."
        நெட்டி முறித்த அவள், ", அம்மா" என்றாள் நடுங்கிப்போன நான்," ஐயோ என்னம்மா என்னாச்சு" என்று பதறினேன் " கெண்டைக்கால் லேசாக  வலிக்கிறது", என்றாள்.
        இதோ, என்று காப்பியைக் கையில் கொடுத்துவிட்டு, ஜண்டு பாமுடன் உள்ளே வந்து, காலை மடியில் வாங்கி சூடு பறக்க ஜண்டு பாமைத் தடவிவிட்டேன். போதும் போதுமென்ற சொல்லுமளவுக்கு கெண்டைக்காலை நீவிவிட்டுக் கொண்டிருக்கும்போது, இட்லிக்குக்கர் விசிலடித்துக் கூப்பிட்டது. “இப்போது வலி தேவலையா?”, என்று கேட்டேன். "காப்பி எப்படியிருந்தது", என்று தயங்கித் தயங்கி கேட்டபோது, “அதான் நல்லா இல்லேன்னா சொல்லி இருப்பேனே, என்று எரிந்து விழுந்தாள். ஆஹா அப்ப நல்லாருக்குன்னு தான் அர்த்தம், அப்பாடா.
காப்பி குடித்தபின்,”இன்னிக்கு என்ன டிபன்?”, என்றபடி மனைவி மெதுவாக எழ, நான் கைத்தாங்கலாக அவளை கீழிறக்கினேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது, ஐயையோ பிரஸ்ஸில் பேஸ்ட் வைக்க மறந்துட்டேன், பெரிய கோவக்காரி ஆச்சே என்று நினைத்து சடாரென்று பாத்ரூமில் நுழைத்து நீம் பேஸ்ட்டைப் பிதுக்கி, ஓரல்-B​​​​ பிரஸ்ஸில் வைத்துக்கொடுத்தேன்.
                அவள் பாத்ரூமுக்குள் நுழைய, நான் கிச்சனுக்கு ஓடினேன். இட்லிக்கு இன்னொரு விசில் வரட்டும் என்று எண்ணி, தக்காளியை எடுத்து நறுக்கி வைத்துவிட்டு, சிறிது பெரிய வெங்காயத்தையும் நறுக்கி, வாணலியில் எண்ணையிட்டு தளதளவென்று வதக்கி, கொஞ்சம் கடுகு போட்டு நெய்யில் தாளித்து இறக்கினேன். “தக்காளி கொத்சு” மணமணத்தது. முந்தின நாள் வாங்கிய தேங்காயை உடைத்துப்பார்த்தால் அது சரியில்லை. உடனே ஃப்ரீசரைத் திறந்து அவசரத்துக்கு வாங்கி வைத்திருந்த ஃப்ரோஜன் தேங்காய்த்துருவலை எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து, 2 பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மிக்சியில் வைத்து அரைத்து, பின்னர் தாளித்து வைத்தேன். ஃப்ரோஜன் தேங்காய்க்கு என்ன சொல்லப்போகிறாளோ? இட்லிக்கு  என் மனைவிக்கு கண்டிப்பாய் ரெண்டு சட்னி வேண்டும் இல்லாவிட்டால் அவளுக்கு கெட்ட கோபம் வந்துவிடும்.
        அற்குள் உள்ளிருந்து சத்தம் கேட்க, விரைவாக பெட்ரூமுக்கு ஓடினேன். "என்னாச்சு ஒனக்கு இன்னிக்கு"என்றாள். "என்ன என்ன" என்று பதறினேன்.“ஏன் என்னோட டிரஸ்யை எடுத்து வைக்கல? லாண்டிரியும் பண்ணல”, என்றாள்.
        ஐயையோ நேத்து ரெண்டு டிவி சீரியலில் உட்கார்ந்ததுல லாண்டரியையும் அவள் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணவும் மறந்துட்டேன் என அப்பதான் ஞாபகம் வந்தது.
        “நீங்க டிபன் சாப்பிடறதுக்குள்ள ரெடி பண்ணிடறேன்”, என்று கெஞ்சும் குரலில் சொல்லிவிட்டு 4 இட்லியையும் ரெண்டு சட்னியையும் வைத்து ராயல் டவ்ல்டன் (Royal Dautlon)தட்டில் வைத்து கொடுத்தேன் (அவள் சாப்பிடுவதற்கு தனித்தட்டு உண்டு)
        உள்ளே வந்து மடமடவென்று அயர்ன் செய்யும் போது தான் ஞாபகம் வந்தது, ஐயையோ குடிக்க தண்ணீர் வைக்கவில்லை என்று. ஓடிப்போய் தண்ணீரில் ரெண்டு ஐஸ் கட்டிகளைப்போட்டு கொடுத்துவிட்டு, இன்னொரு வாட்டர்போர்டு (Waterford) கிறிஸ்டல் கிளாசில் ஆரஞ்சு ஜூசை வைத்துவிட்டு, நிமிர்ந்த போது, உள்ளே ஏதோ கருகும் வாடை அடித்தது.
        ஐயையோ இன்னிக்கு வீடு ரெண்டாகப்போகுது என்று உள்ளே ஓடினால் அவளுக்கு மிகவும் பிடித்த Forever 21 ஜீன்ஸ் ஓட்டையாகி, புகை வந்து கொண்டிருந்தது.
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))       
எரியுது ஜீன்ஸ் எரியுது, என்று பக்கத்தில் படுத்திருந்த மனைவி சத்தம் போட்டாள்.
        "ஏய் ரூத் என்னாச்சு, இன்னுமா எந்திரிக்கல", என்றேன்.  நான் படுத்தபடி கவனித்துக் கொண்டிருக்க, என் மனைவி ஜெபித்துவிட்டு, சமையலறைக்குப்போனாள். கனவு கண்டிருப்பாள் போல. அங்கே இட்லித்தட்டை எடுக்கும் சத்தம் கேட்டது
   பின்குறிப்பு:
        நம் மனைவிகளுக்கு கனவில்தான் இத்தனை சுகபோகம் அமைகிறது. நமக்காக வேலையும் செய்துவிட்டு வீட்டிலும் வந்து சமைத்து 24/7 365 நாளும் லீவு எடுக்காமல் வேலை செய்யும் நம் மனைவிகளை நேசிப்போம், காதலிப்போம்.

வேலண்டைன் தின வாழ்த்துக்கள்+++++++