Thursday, August 29, 2019

கண்ணதாசனின் மோசமான வரிகள் !


Image result for வான் மேகங்களே

வான் மேகங்களே !
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 43

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்

1979ல் வெளிவந்த பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த புகழ்பெற்ற டூயட் பாடல் “வான் மேகங்களே”.
முதலில் பாடலைக் கேளுங்கள்.


பாடலின் பின்னணி:

காதலை வெளிப்படுத்தி, இருவருக்கும் ஒரே சமயத்தில் காதல் தோன்றி, இருவருக்கும் பூரண சம்மதம் என்ற நிலையில் காதலர்களுக்கு வரும் காதல் கனவில் தேவதைகள் புடை சூழ பாடப்படும் பாடலிது.

இசையமைப்பு:

எந்த சந்தேகமில்லாமல் இளையராஜாவின் பாடல் என்று சொல்லக்கூடிய  மெலடியுள்ள பாடல் இது. அவருடைய சிக்நேச்சர் இசையமைப்பை பாடல் முழுதும் பார்க்கலாம். கிட்டார், வயலின் குழுமம், புல்லாங்குழல், கீ போர்டு, வீணை, நாதஸ்வரம், டிரம்ஸ், தவில் மற்றும் தபேலா ஆகிய இசைக்கருவிகள்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாடலின் ப்ரிலூடாக பிசிக்காட்டோ இசையுடன் துவங்கி புல்லாங்குழல், வீணையோடும் அதன்பின் மணியோசையோடும் இசைத்து முடிக்க "வான் மேகங்களே" என்று பெண் குரலுடன் பாடல் ஆரம்பிக்கிறது. குரலுடனும், இசையுடனும் தாளம் சேர்க்க தபேலா இணைந்து கொள்ள பாடல் நம்மை ஆட்கொள்கிறது. பெண் குரல் முடிந்தவுடன் தாளத்தோடு கைகள் இரண்டு முறை தட்டப்பட, "வான் மேகங்களே" என்று ஆண் குரலில் பாடலின் பல்லவி ஆரம்பிக்கிறது. BGM இன்ட்டர்லூடாக மீண்டும் வீணை வயலின் குழுமம், புல்லாங்குழல், தபேலா மூலம் மெல்லிசை இன்னிசையாக ஒலித்து முடிக்க "பாலிலே பழம் விழுந்து" என்று பெண் குரலில் சரணம் ஆரம்பிக்கிறது. இடையில் குயில்  கூவ குயிலோடு இணைந்து பெண் கூவ இந்த முழுச்சரணமும் பெண்குரலில் பாடி முடிகிறது. வயலின் குழுமம், வீணை, பிசிக்காட்டோ இசையுடன் இரண்டாவது BGM  முடிய இப்போது ஆண் குரலில் "தென்றலே ஆசை கொண்டு" என்று இரண்டாவது சரணம் ஆரம்பித்து முழுவதும் ஆண்குரலில் வந்து முடிகிறது. பாட்டு முடியப்போகிறதே என்ற கவலை வரும் போது வழக்கத்திற்கு மாறாக மூன்றாவது சரணமொன்றும் இருக்கிறது. 
மூன்றாவது BGM ல் மணியோசை, நாதஸ்வரம், தவில் போன்ற கல்யாண மங்கல இசை முழங்க "பள்ளியில் பாடம் சொல்லி" என்று மறுபடியும் பெண்குரலில் மூன்றாவது  சரணம் ஆரம்பிக்க, இப்போது இரண்டாவது வரியில் ஆண்குரலும் மாற்றி மாற்றி ஒலிக்க பாடல் இனிதே நிறைவடைகிறது. 

பாடலின் வரிகள்:

வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை
வான மேகங்களே

பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா (2)
பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும்  நேரம் கண்டேன்
வான் மேகங்களே ...

தென்றலே  ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா (2)
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
வா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்
வான் மேகங்களே ....

பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்
பாவையின் கோவில் மணி ஓசையை நீ கண்ணே
தா தன்னன்னா
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ?
வான் மேகங்களே ....

பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். மிகவும் சாதாரண வரிகள்தான். கண்ணதாசனின் கவிதை வரிகள் என்று சொல்லுமளவிற்கு சிறப்பில்லை. ஆனால் மெட்டுக்கு மிகச் சரியாகப் பொருந்துகின்றன. ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் எந்த கனெசஷனும் இல்லை உதாரணத்திற்கு, “தென்றலே ஆசை கொண்டு, “தோகையை கலந்ததம்மா”, என்ற வரிகளுக்கும் அதன் அடுத்த வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . பாடல் முழுவதுமே இப்படித்தான் அடுத்தடுத்த வரிகளுக்கும் எந்த தொடர்புமில்லை. கடைசி வரியில் "பள்ளியின் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்" என்ற வரியில் கண்ணதாசன் லேசாக எட்டிப்பார்க்கிறார். ஏனென்றால் நாயகன் ஒரு பள்ளிக் கூட ஆசிரியர். நாயகி இப்படிச் சொல்லும்போது அதில் இரண்டு அர்த்தங்கள் வருகின்றன. பள்ளி என்றால் படுக்கையறையென்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதற்கடுத்த வரியும் சம்பந்தமில்லை. அதோடு டான் டன்  டன்  டான் என்ற மணியோசைக்குப்பின் "சங்கின் ஓசை கேட்கும் நேரம்" என்று எந்தச் சங்கைச் சொல்கிறார் என்றும் விளங்கவில்லை. ஒரு வேளை இந்த வரிகளுக்கு வேறு அர்த்தம் ஏதாவது இருக்குமென்றால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பாடியவர்கள்:
Ilayaraja with Malaysia Vasudevan


பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி என்ற ஈடில்லாத இரு அற்புதக் குரல்கள். இருவர் குரல்களிலும் சாந்தமும், மகிழ்ச்சியும், பாசமும், காதலும் ஒருங்கே ஒலிக்கின்றன. ஒவ்வொரு சரணத்தின் முதல் வரியும் திரும்ப வரும்போது வரும் அனுக்கங்கள் அத்தனை  அழகு, அத்தனை நளினம். இருவரும் மிக இளமையாக  இருந்தபோது பாடிய குரல்கள் என்பதால் தேன் சொட்டுகிறது.
Image result for malaysia vasudevan with Janaki  old photo

- இளையராஜாவின் ஆகச்சிறந்த எழுபதுகளின் பாடல்களில் இந்தப் பாடல் மிக முக்கியமான ஒன்று. இசையும் குரலும் வரிகளை கடந்து ஒலிக்கின்றது.

தொடரும்


Thursday, August 15, 2019

இத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் ! )

இந்திய பயணக் கடிதங்கள்


படித்ததில் பிடித்தது
இந்தியப் பயணக் கடிதங்கள்.
எலிஸா ஃபே, சந்தியா பதிப்பகம்
தமிழில் அக்களூர் ரவி.
இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, கிரேட் பிரிட்டன் என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டிலிருந்து, ஆளும் தரப்பின் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும், இராணுவ வீரர்களாகவும், வியாபாரம் செய்பவர்களாவும்  இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்தவர்கள் ஏராளமானவர்கள்.
இங்கிலாந்திலிருந்து மட்டுமல்ல, ஃபிரான்சு, ஜெர்மனி, ஹாலன்ட் போன்ற பல நாட்டவர் நாடு பிடிக்க இங்கு வந்தனர். வணிகம் செய்ய  வந்தவர்களைச் சொன்னால் கணக்கிலிடங்காது.
Eliza Fay
இப்படி உலகின் பல பகுதிகளிலிருப்பவர்களையும் ஈர்த்திழுக்கும் வகையில் செல்வ வளமிகுந்த நாடாக இருந்தது இந்தியத் திருநாடு.
இங்கிலாந்தின் முதல் நுழைவாயிலாக இருந்தது, கல்கத்தா என்பதால் அதிகளவில் அங்கு ஆங்கிலேயர் வரத்துவங்கினர். அதன்பின் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை அமைந்தபின் சென்னை ஆங்கிலேயர் ஆட்சிக்கும் வர்த்தகத்திற்கும்  மையமானது.  
இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனியின் மையமாக கல்கத்தா விளங்கியபோது அங்கு பிழைப்புத்தேடி வந்த ஒரு வழக்கறிஞர் புதிதாக திருமணமான தன் மனைவியையும் தன்னோடு அழைத்துவந்தார். அந்த மனைவியின் பெயர்தான் எலிஸா ஃ பே (Elissa Fay) விமான வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு ஒரே வழி கப்பற்பயணம் தான்.
எலிஸா ஃபே அவர்கள் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த பயணத்தின் போது ஊரிலிருந்த உறவினர்களுக்கு அவருடைய பயண அனுபவங்களை அப்படியே அவ்வப்போது கடிதங்களாக எழுதினார்.  அந்தக் கடிதங்களில் தன்னுடைய பயணத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளையும், இக்கட்டுகளையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதன் தொகுப்புதான் இந்தப்புத்தகம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் அக்களூர் ரவி அவர்கள். சில இடங்களில் சில ஆங்கிலப்பதங்களை  (slang) அப்படியே மொழி பெயர்த்திருந்தது பொருந்தவில்லை, ஆனால் பெரும்பாலும் நன்றாகவே மொழிபெயர்த்திருக்கிறார்.
Front Cover

1779ல் லண்டனிலிருந்து கிளம்பி காலே வரை வந்த பயணத்தில் அந்தக் காலக்கட்ட வரலாற்று சமூக சூழல்கள் வெளிப்படுகின்றன. அது படிப்பதற்கு ஒரு நாவல் போலச் சுவையாக இருக்கின்றன. அதில் சில  தகவல்களை மட்டும் கீழே தருகிறேன். முழுவதுமாக அறிந்து கொள்ள புத்தகத்தை வாங்கிப்படியுங்கள்.

1)   முதலில் அவர் இந்தியப்பயணத்தை பெரும்பாலும் சாலைவழியாக ஏன் மேற்கொள்ள வேண்டுமென தெரியவில்லை. அதுவும் ஐரோப்பா வழியாக வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
2)   ஐரோப்பாவில் தெருவில் கரடி, முள்ளம்பன்றி போன்றவற்றை வைத்து வித்தைகள் நடந்து கொண்டு இருந்ததையும், கழைக்கூத்தாடிகள் நம் இந்தியாவைப்போல் அங்கு இருந்ததையும் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது.
3)   சாலைப்பயணத்தில் ஒரு சமயம் எட்டுக்குதிரைகள் பூட்டிய அஞ்சல் வண்டியில் இடம் கேட்டு சென்றதாகக் குறிப்பிடுகிறார்.
4)   செயின்ட் டென்னிஸ் என்ற கத்தோலிக்க ஆலயத்தில் புனிதர் தாமஸின் கண், மேரியின் பால் என்று வினோத பொருட்கள் இருப்பதை எழுதி கேலி செய்கிறார்.
5)   பாரிசின் வழியாக பயணம் செய்யும்போது பிரெஞ்சு பேரரசி மேரி அன்டைனட்டைப் பார்த்ததாகவும். அந்தப் பேரரசி  மிகவும் நல்லவள் என்றும் சொல்லுகிறார்.
6)   யூதர்கள் கொல்லப்படுவது சீன் நதியில் தள்ளப்படுவது என்பதையெல்லாம் எழுதி கண்டிக்கிறார்.
7)   பாரிசு நகரில் நுழையும் போது, அது பெரிய ஒரு குப்பைத் தொட்டி போல இருந்தது என்று சொல்கிறார். அங்கு தங்கிய விடுதியை மிகவும் மோசம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் இப்போது பாரிசு எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்பதைப் பார்க்கும்போது நம்நாடும் மிகவும் விரைவில் முன்னேற வேண்டுமெனத் தோன்றுகிறது.
8)   தேயிலை தயாரிக்க அங்கு மண்பாண்டங்கள் பயன்படுத்தப் பட்டன என்கிறார்.
9)   பாரிசில் சலோன் சர் சாவோன் என்ற இடத்தில் பார்த்த லெகான் கோழிகளைப் பற்றி எழுதுகிறார்.
10)               கப்பல் பயணம் செய்யும்போது ஜோடியைப் பிரிந்த புறா தற்கொலை செய்ததைப்பார்க்க நேரிட்டதை உருக்கமாக விவரிக்கிறார்.
11)               அலெக்சாண்டிரியாவில் குதிரைகளை முஸ்லீம்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு கழுதைதான் என்பதைச் சாடுகிறார்.
12)               அங்கு செயின்ட் ஏதோனேசியஸ் என்ற பாரம்பரிய கிறிஸ்துவ ஆலயம் மசூதியாக மாற்றப்பட்டது, கிறிஸ்துவர்களுக்கு தனி வரி ஆகியவைச் சொல்லிச் செல்கிறார்.
13)               சிதைந்துபோயிருந்த கிளியோபாட்ராவின் அரண்மணையைப் பார்வையிட்டதை விளக்குகிறார்.
14)               கெய்ரோவில் உள்ள நைல் நதி, அங்கு நடந்த பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஜோசப்பின் கதையை நினைவு கூர்வதோடு, அங்குள்ள பிரமிடுகளை கட்டியது அடிமையாக இருந்த யூதர்கள் என்று சொல்லுகிறார்.
15)               பெரிய நகரமாக இருந்தாலும் அழகு, மேன்மை மற்றும் ஒழுங்கில்லாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்.
16)               கிறிஸ்தவர்களை அங்கு Frank என்று அழைக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
17)               மோச்சா பாலை நிலப்பயணத்தில் கொள்ளையரிடம் சிக்கி உயிர் தப்பித்து பின்னர் கடற்பயணத்தின் மூலம் மலபார் கள்ளிக்கோட்டைக்கு (calicut) வந்திறங்கியிருக்கிறார். அப்போது அது ஹைதர் அலி வசம் இருந்திருக்கிறது. ஹைதர் அலியின் கேப்டன் அய்ரேஸ் அவர்களை சிறைப்பிடித்து 15 வாரம் அடைத்து வைத்து விட்டிருக்கிறார். அங்கு தேளும் பூரானும் நிறைந்திருந்தனவாம்.
18)               அங்கிருந்து கொச்சி வழியாக இலங்கையின் காலே சென்று பின்னர் சென்னை சென்றடைகிறார்கள்.
19)               சென்னை இத்தாலிய நகரம்   போன்ற மிக அழகிய நகரம் என்றும், மக்கள் விரும்பும் எந்த மதத்தையும் சுதந்திரமாக  அங்கு பின்பற்றலாம் என்று எழுதியிருப்பது பெருமையாக இருந்தது.
20)               சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட் சாலை மரங்கள் சூழ்ந்து அழகாக இருந்தது. அடையாறு ஆலமரம் சென்றது என்று விவரிக்கிறார்.
21)               அதன்பின் கல்கத்தா வந்து சேருகிறார். பூரி ஜெகன்னாதர் உற்சவத்தில் தேரடியில் விழுந்து உயிர்விடும் மக்கள் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள் என்று பின்பற்றப்பட்ட மூடநம்பிக்கையைச் சாடுகிறார்.
22)               ஹுக்ளி நதி தேம்ஸை விட அழகானது  அகலமானது என்று சொல்லுகிறார்.
23)               வில்லியம் கோட்டையில் வாரன் ஹேஸ்டிங்சை சந்தித்தது, அவருடைய மனைவி ஆன் மரியாவுடன் நட்பு பாராட்டியது என்று விளக்குகிறார்.
24)               கல்கத்தாவில் வக்கீல்களின் கட்டணம் இங்கிலாந்தை விட அதிகம் என்று சொல்கிறார்.
25)               சதி, வியாதியஸ்தரை களிமண் பூசிக்கொல்தல் போன்ற கொடிய பழக்கங்களைச் சாடுகிறார்.
          இப்படி இப்புத்தகத்தைப்  படித்தால் அந்தக் கால கட்ட பல சமூக வரலாற்று சூழ்நிலைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

முற்றும்

Image result for சுதந்திர நாள் வாழ்த்துக்கள்


Monday, August 12, 2019

டங்டங் டிகடிக டங்டங்



டங்டங் டிகடிக டங்டங் (  மீள் பதிவு 

வேர்களைத்தேடி பகுதி 47
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்

             திடுக்கிட்டு எழுந்தேன். டக் டக்,டக் டக் என்று ஒரே சீரான ஒலி வீட்
மேற்புறத்தில் கேட்க, எனது எல்லாப் புலன்களும் விழித்துக் கொண்டன. டிங் டங் டிங் டங் என்ற சத்தம் கேட்க,அதிர்ந்து திரும்பிப்பார்த்தேன். எங்கள் வீட்டுப் பழைய பெண்டுலம் கடிகாரம் 2 தடவை அடித்து ஓய்ந்தது. ஓ இரவு 2மணி ஆகி விட்டது.
டக்டக் டக்டக் என்று மறுபடியும் அதே ஒலி. நான் முன்ஹாலில் மரக்கட்டிலில் படுத்திருக்க, என் தம்பிகள் மனோவும், பாசுவும் கீழே படுத்திருக்க, என் அம்மா மறுபுறம்படுத்திருந்தார். உள்ளிருந்த ரேடியோ ரூமில் இருந்த இரும்புக் கட்டிலில், என் அப்பா படுத்திருந்தார். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
          உன்னிப்பாக கவனித்த போது, வீட்டின் மேல்புறத்தில் மொட்டை மாடியையும், எங்கள் வீட்டையும் இணைக்கும் கதவில்தான் சத்தம் கேட்டது. ஒரு வேளை பேயாக இருக்குமோ? என்ற பயம் வர, இருக்காது இது திருடன்தான் என்று பட்சி சொன்னது. அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிற்கு நான்தான் பெரியவன். சாகசங்கள் செய்யத்தூண்டும் டீனேஜ் பருவம். என்ன செய்தாலும் அதுவரை அப்பாவின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் தான் ஆளாகினேன் தவிர பாராட்டு, ம்ஹீம் மருந்துக்கூட கிடைக்கவில்லை.
          முந்தின நாள் படித்த முத்து காமிக்சின் "மஞ்சள் பூ மர்மத்தில்" சாகசங்கள் செய்யும் லாரன்ஸ் & ஜூடோ டேவிட் கண்முன் தோன்றி உற்சாகப்படுத்தினர்.
          ஒரு முறை என்னைக் கிள்ளிப் பார்த்து, அது கனவல்ல என்று உறுதி செய்து கொண்டேன்.
          மறுபடியும் சத்தம் கேட்டது. நிச்சயமாய் யாரோ திருடன் மொட்டைமாடியின் கதவைத் திறக்க முயற்சி செய்கிறான். நிசப்தமான இரவில் அந்தச் சத்தம் பெரிதாகவே கேட்டு என்னுடைய இதயத்துடிப்பை அதிகரித்தது.
          அப்பாவை எழுப்பலாமா? என்று ஒரு நினைவு தோன்ற, என்னுள் இருந்த சாகச வீரன், வேண்டாம் என்று தடுத்து சொந்தமாய் ஏதாவது முயற்சி செய்யத்தூண்டினான்.
          நான் மெதுவாகக் கட்டிலிலிருந்து இறங்கி துப்பறியும் சங்கர்லால் எப்படி தன் "ரப்பர் நடையணிகள்" மூலம் சத்தம் செய்யாமல் நடப்பாரோ, அப்படியே முன்னங்கால்களால் நடந்தேன். படுத்திருந்த அம்மாவின் பக்கத்திலிருந்த சாய்வு நாற்காலியிலிருந்த (Easy chair) கம்பை உருவினேன். எவ்வளவு முயன்றும் சத்தம் கேட்காமல் எடுக்கமுடியவில்லை.
          கொஞ்சம் நேரமாக, மேலிருந்து சத்தம் கேட்கவில்லை. நான் கம்பை எடுக்க எழுப்பிய சத்தத்தில் ஒருவேளை திருடன் உஷாராகி விட்டானோ? என்ற சந்தேகம் எழுந்தது.
          சிறிது நேரம் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருக்க, டொக் டொக் டொக் டொக் என்று சத்தம் மறுபடியும் தெளிவாகக் கேட்டது.கம்பை இறுக்கப்பிடித்துக் கொண்டு உஷாராக நின்றேன். இறங்கி வந்தால் ஒரே போடு. அதோடு மேலிருந்து வைக்கோல் கொத்து கொஞ்சம் கீழே விழுந்தது. "சுசி, நம்ம சேகர் ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளைடி", என்று என் அப்பா பெருமையாக என் அம்மாவிடம் சொல்வது போல் வந்த கற்பனை மகிழ்ச்சியையும் புன்முறுவலையும் வரவழைத்தது.
          "சேகர் உனக்கு என்னடா பரிசு வேணும்னு”, எங்கப்பா கேட்டால், “இந்த கோகுலம் பத்திரிகைக்கு சந்தாதாரர் ஆக்கிவிடுங்கள்," என்று கேட்க முடிவு செய்தேன். ஆமாம் ஒவ்வொரு தடவையும் முத்துரெங்கனிடம் ஓசி வாங்க வெட்கமாக இருக்கிறது.
          அதோடு தேவதானப்பட்டி போலிஸ் சப் இன்ஸ்பெக்டர், என் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவது, ஊர் மக்கள் என் அப்பாவைப் புகழ்வது என்று வித விதமான கற்பனைகள்வந்து போயின. அது என்ன ஒரு திருக்குறள் வருமே,அவசரத்துக்கு ஞாபகம் வரமாட்டேங்குது. இவன் தந்தை என்னோற்றான் என்று, சரி அத விடு.
          மீண்டும் டக் டக் என்று ஒலி கேட்க, நான் சற்றே மாடிப்படிகள் ஓரத்தில் நகர்ந்து வாகாக நிற்க முயன்றேன். கைகளில் வேர்த்து ஈரமாகி ஈஸிசேர் கம்பில் பிசுபிசுவென ஒட்டியது.
          அப்போது பட்டென ஏதோ உடைந்ததுபோல் ஒரு சத்தம். என் தம்பிகள் இருவரும் சிலிர்த்து அலறி எழுந்தனர், கையில் ஓங்கிய கம்புடன் என்னைப் பார்த்து அவர்கள் மேலும் அலற,எங்கம்மா எழுந்து ,"ஏசுவே ஏசுவே என்னாச்சு" என்று கத்த, "என்னடாது சத்தம்”, என்று உறுமிக் கொண்டு வந்தார் "எம்டன்" அப்பா. அவர்  வந்து லைட்டைப் போட்ட பின்தான் தெரிந்தது,படியருகில் குடிக்க வைத்திருந்த மண்பானைத்தண்ணீரை நான் தெரியாமல் தட்டி விட்டிருக்கிறேன் என்று. அந்த ஜில் தண்ணி உருண்டோடி என் தம்பிகளின் தலையணையையும் பாயையும் நனைத்ததால் அவர்கள் எழுந்துவிட்டிருந்தனர்.
          கம்பும் கையுமாக நின்ற என்னைப் பார்த்து என் அப்பா ஒன்றும் புரியாமல், "என்னாச்சுரா?”, என்று கேட்டார்".
          "உஷ் சத்தம் போடாதீங்க என்று லைட்டை ஆஃப் செய்தேன். என் தம்பிகள் அம்மாவிடம் ஒண்ட, என் அப்பாவிடம் குசுகுசுன்னு மேலே திருடன் இருப்பதைச் சொன்னேன். அவர் மெதுவாக உள்ளே சென்று பீரோவில் பத்திரமாய் வைத்திருந்த தன் பிரத்யேக, பளபள எவரடி எவர்சில்வர் டார்ச் லைட்டை எடுத்து வந்து மேலே அடித்தார்.
          அங்கே பார்த்தால் ஒரு மாடப்புறா உட்கார்ந்து கொண்டு மரக்கதவில் தன் அலகால் கொத்திக் கொத்தி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அலகை சுத்தம் செய்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அதன் கூட்டிலிருந்துதான் வைக்கோல், குப்பையெல்லாம் விழுந்தது என்று பின்னர் தெரிந்துகொண்டேன். (ஓஹோ .இந்த பட்சி சொன்னதுன்னுசொன்னியே அது இந்தப்பட்சிதானா)

          "என்னை முறைத்துப் பார்த்த என் அப்பா, “சரிசரி எல்லாம் படுங்க”, என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். முறைத்துப்பார்த்தாரா இல்லை கேவலமாக பார்த்தாரா என்று இருட்டில்  சரியாகத் தெரியவில்லை (ரொம்ப முக்கியம்)

        என்னுடைய வீரத்தைக்காட்ட முயன்று இப்படி விகாரமாகப் போச்சேன்னு மனம் குன்றிப்போச்சு. ராத்திரிபூரா தூங்காம, காலைல வெள்ளன எழுந்துரிச்சு, என் தம்பிகள்ட்ட, "யாருக்கும் சொல்லாதீங்க", என்று சொல்லிவைச்சேன். குளிச்சுட்டு தலைதுவட்டிக் கொண்டே வந்தபோது பேச்சுக்குரல் கேட்டது. தன் வீட்டில் காய்த்த முருங்கைக்காய்களை வாத்தியார் வீட்டுக்கு கொடுக்கும் நோக்கத்தில் வந்த மகேந்திரனிடம் என் அம்மா விலாவரியா நடந்ததை சொல்லிட்டிருந்தாங்க. நீங்களே சொல்லுங்க பின்ன எப்படி மகேந்திரன் என்னை மதிப்பான்?.
தொடரும் 



Thursday, August 8, 2019

கலைஞர் :அகழ்வாரைத் தாங்கும் நிலம் !





கடந்த சனிக்கிழமை ,2019 ,ஆகஸ்ட் 3 ஆம் தேதி , நியூஜெர்சியில்  பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டம் சார்பில் கலைஞர் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி  நடத்தப்பட்டது .அவ்வமயம் நடந்த  கவியரங்கத்தில் அடியேன் கலந்து கொண்டு வாசித்த  கவிதை இது .

மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும்
பேச்சுக் கொடுத்த தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த மன்றத்திற்கும் 
வணக்கங்கள் பலப்பல.

பெரியார் வட்டத்தில்
இறை வணக்கமா? எனச்சில
புருவங்கள் உயர்வது எனக்குப்
புரிகிறது .
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற
திராவிட முழக்கத்தில்
திரண்ட துகள் நான்
உருண்ட துளி நான்
புரிகிறதா இப்போது
புருவங்கள் தாழட்டும் !

அதோடு அம்பேத்காரும்
அதில் உள்ளாரே
ஆன்மீக வாதியன்றோ அவர் !.

தோழர் என்று கூப்பிட்டால் - கனிமொழி
தோழர் என்று கூப்பிட்டால்
பாலரும் வருவர் ஏன்
பாராளுமன்றமும் பறந்து வரும் !
இந்தப் பரதேசி வரமாட்டானா?
நன்றி தோழர்.
அந்தக்கனிமொழியையல்ல
இந்தக்கனிமொழி, நம்
சொந்தக் கனிமொழியைத்தான்
சொல்லுகிறேன்!
அந்தக்கனிமொழி
கலைஞரின் ரத்த வாரிசு
இந்தக்கனிமொழி,
கலைஞரின் யுத்த வாரிசு !

கலைஞர் 
அகழ்வாரைத் தாங்கும் நிலம்,
ஆம் அவர் அதோடு
தொட்டனைத்தூறும் அறிவுக் கேணி !

தொண்டு செய்து பழுத்த பழத்தை 
கண்டு உண்டு விண்டு வந்த
கலைஞர் இவர் !.

பேச்சாற்றல் மிகுந்த அண்ணா
மூச்சாற்றால் இல்லாமல்
முடிந்த போன சோகத்தில்
இடிந்து போன தமிழகம்
இருண்டு  போன நேரத்தில்
விடிந்து வந்த வெளிச்சம் இவர்
எழுந்து வந்த சூரியன் இவர் !

கொள்கை என்றால்
வெறும் கொள்ளையென மாறிய
கொடுமையான சமூகத்தில்
பேச்சில் உயிர் மூச்சில்
தமிழ் வீச்சில் வாழ்ந்த
தலைவர் அவர் !

உரையாற்றி சிறைபோற்றி
உரமேற்றி உணர்வூட்டி
கரமுயர்த்தி இனம் காத்த
 கலைஞர் அவர் !

கல்லக்குடி தொடர்ந்து
கல்லறைக்குடி வரை
களம் கண்டு வென்ற
கலைஞர் அவர் !

அரிதாரம் சில பார்த்து
அவதாரம் என நினைத்து
அறிவார்ந்த இவரை
ஆட்சியில்  இருந்து
அகற்றியது
அன்றைய  தமிழகம் .
அகற்றினாலும் அகலாது
அகழ்வாரைத் தாங்கிய நிலமவர் !

அகழ்வாருக்கும்
அன்பு செலுத்தி
இகழ்வாருக்கும்
இன்முகம் காட்டிய
இனமான வீரர் அவர் !

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித்
தூற்றுவார் தூற்றட்டும் என்று
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும்
புன்சிரிப்போடு எதிர்கொண்ட
புனிதர் இவர்!

ஆளுங்கட்சியாக இருந்தாலும்
எதிர்க்கட்சியாக இருந்தாலும்
அகழ்வாரை தாங்கிய நிலமவர் !.

வேதனைகள் பொறுத்து
சோதனைகள் கெலித்து
சாதனைகள் படைத்த
சரித்திர நாயகன் அவர் !

சமரசம் உலவும்
சமத்துவக்கல்வி !
சமூக ஒற்றுமைக்கு
சமத்துவபுரம் !
சமூக மேம்பாட்டுக்கு
இட ஒதுக்கீடு !
செழுமையான தமிழுக்கு
செம்மொழிப்பட்டம் !
உழைப்பவர் முன்னேற
உழவர் சந்தை !
பெண்களுக்கு சொத்துரிமை
பெண்கள் சுய உதவிக்குழு !
                           
சிறுபான்மையோர் போல்
பெருங்கரிசனம் !
மதசார்பின்மை என
சொல்லிக்கொண்டே போகலாம் !

கலைஞர் வாழ்க்கை
காவியமாகும் இவ் வேளை
நம் நாடு
காவிமயமாவதுதான்
கவலையளிக்கிறது
அதனை மாற்ற
மஞ்சள் துண்டணிந்த மாமனிதர்
மறுபடியும் வருவாரா ?

நிலம் காத்தவர் இப்போது
நிலத்தின் உள்ளே !
களம் கண்டவர் இன்று
கல்லறையின் உள்ளே !
இனம் காத்தவர் இப்போது
இருட்டுப் பெட்டிக்குள் !

தாங்கிய நிலமவர் இப்போது
தூங்கிய நிலமானார் !

ஆனால்
சூரியனுக்கு அழிவேது!
சந்திரனுக்கு முடிவேது!
உலகமிருக்கும் வரை தமிழ்
உணர்வுகள் இருக்கும் வரை
திராவிடக் களம்  இருக்கும் வரை
கலைஞரும் இருப்பார்!
 அவர் தம்
நினைவைப் போற்றுவோம்
கனவைக்காப்பாற்றுவோம் !

மிகைநாடி மிக்க கொளல்  என
தக்க கருத்தை தந்துவிட்டேன்
வாய்ப்புக்கு நன்றி
வணக்கம்
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
நன்றி வணக்கம்.

 முற்றும் 

Image may contain: 1 person