Monday, September 30, 2013

மெய்ன் பயணம் Part 3 : வஷிஸ்டர் வாயால் ப்ரும்ம ரிஷி பட்டம் !!.

        

     எப்படித்தான் பார்த்தாளோ? குதிரை வண்டியில் போனால் முன்னால் பார்த்து போக வேண்டியதுதானே என்று நினைத்த வண்ணம், அவசர அவசரமாக ஐபாடின் இயர் பிளக்கை காதில் சொருகினேன். இவெள்ட்ட பாட்டு வாங்கும்போது, என் பாட்டுக்கு  நான் போடுறுது, நம்ம இளையராஜா பாட்டுதேன். இளையராஜா "அந்தியில் பூத்த செவ்வந்திப்பூவைத்தேடத்துவங்கினார்". என்றுமே வாடாத பூ அல்லவா இந்த பூ .கஷ்டத்திலும், நஷ்டத்திலும், இஷ்டத்திலும் இளையராஜாதானே நமக்குத்துணை. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்துவிட்டது. எல்லாருமே வெள்ளைக்காரர்கள், நாங்கள் மட்டுமே இந்தியர். கறுப்பர்களையும் காணோம்.
        ஆற்றுக்கு அக்கறையில், ஒரு பெரிய மிதவையில இரண்டு ஆட்கள் வந்து வெடிகளை ஒழுங்கு செய்தனர். சிறிது நேரத்தில் இருட்டிவிட,  வாணவேடிக்கை ஆரம்பித்தது. விண்ணில் சீறிப்பாய்ந்து, வெடித்து, பூமழையையும், நட்சத்திர மழையையும் தூவியது, கண்கொள்ளாக் காட்சியாகும். நியூயார்க் மேசிஸ் ஃபயர் வொர்க்ஸ், கோனி ஐலன்ட், வாஷிங்டன் டிசி, நியூஜெர்சி, பென்சில்வேனியா என்று பல இடங்களில் பார்த்திருந்தாலும் இது சலிக்கவே சலிக்காது.
       
   
ஒரே ஒரு வித்தியாசம், மற்ற எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர் மூலம் இயக்குவார்கள். இங்கு அந்த இரண்டு ஆட்களும் ஓடி ஓடிக்கொளுத்தியது சிறிது வேடிக்கையாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு அற்புதமாய் இருந்தது.கூடியிருந்த மக்கள் வித்தியாசமான வாணத்தைப் பார்க்கும் போதெல்லாம், ஆரவாரித்து கைதட்டி மகிழ்ந்தனர். 


        ஒளி வெள்ளத்தில் சலசலத்து ஓடிய கென்னபெக் ஆறு தங்கப்பாளமாய் மின்னியது பேரழகாய் இருந்தது. முடிந்தவுடன் மக்கள் ஒரு 5 நிமிடம் விடாது கைதட்டி தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
        எவ்வளவு கூட்டம் இருந்தாலும், யாரும் முண்டியடிக்காமல் ஒருவரை ஒருவர் இடிக்காமலும், முந்தாமலும் கலைந்தனர். ரூமுக்கு திரும்பியதும், சில நிமிடங்களில் சூடான இட்லியும், மிளகாய்ப்பொடியும் கொடுத்தாள் ரூத். அட எப்ப செய்து எடுத்து வந்தாள் என ஆச்சரியப்பட்டுப் பாராட்டினேன். ஒரு பேக் பொன்னி அரிசி, குக்கர் மற்றும் காரக்குழம்பு, ருச்சி தக்காளி மிக்ஸ், புளியோதரை மிக்ஸ், வத்தக்குழம்பு மிக்ஸ் என பல வகைகள் இருப்பதால் ஒவ்வொரு இரவும் பிரச்சனையில்லை.
        மற்றவர்கள் எல்லாம் சாதத்தில் கத்தரிக்காய் காரக்குழம்பை குழப்பி அடித்தனர். “பின்னி” என் மனைவியை நோக்கி வழக்கம் போல், "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" என்று பாடிக்கொண்டே ஒரு பிடி பிடித்தான். அவன் மனைவி கிப்ஃடாவுக்கும் சமையலுக்கும் எந்த சம்பந்தமுமில்லையாதலால், என் மனைவிதான் அவனுக்கு அன்னலட்சுமி.
        அந்த நாளில் நடந்தவற்றை அசைபோட்டபடி படுக்கைக்குச்சென்றோம்.  ஃபோம் தலையணையில் தலையை நுழைத்து, ஸ்பிரிங் மெத்தையில் குப்புறப்படுத்து, ஆஹா ஆஹா, உழைத்து, களைத்த இந்த இளைத்த உடம்பை, ஃபோமில் இழைத்த மெத்தையில் கிடத்தி தலையை பஞ்சுப்பொதி தலையணையில் நுழைத்த போது ஆஹா ஆஹா.
****************************************************************************************************
          மறுநாள் சனிக்கிழமை (July 5, 2013) காலையில் எழுந்து, யோகா, மெடிட்டேஷன், ஓட்டப்பயிற்சி ஆகியவற்றையெல்லாம் வழக்கம் போல் !!!!!!!!!!, இருங்க அவசரப்படாதீங்க, ஏன் டென்ஷன் ஆகிறீங்க, வழக்கம் போலவே, செய்யாமல், ரெடியாகி, இவர்களையும் கிளப்பினேன். (டேய் சேகர், ஸ்கூலில் நீ மாவட்ட அளவில் விளையாடிய பெரிய ஸ்போர்ட்ஸ்மென் அல்லவா? / ஒன்னோட லந்துக்கு ஒரு அளவில்லையா மகேந்திரா?) நானும் இதை அமெரிக்கன் காலேஜில் பெருமையாக சொன்னபோது, எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்று எனக்கு விளங்கவேயில்லை. அது என்ன கேமுன்னு நீங்க யோசிச்சு வைய்ங்க. நான் அப்புறம் சொல்றேன்.
        ஒரு வழியாக 11 பேரும் ரெடியாகி (ஐயையோ எனக்கு தான் தாவு தீர்ந்துபோச்சு) அங்கு இலவசமாக கொடுத்த காண்டினெண்டல் பிரேக்ஃபஸ்ட்டை ஒரு வெட்டு வெட்டினோம். நான் ஓட்மீலை எடுத்தபோது, என் மனைவி திட்டி, "இங்கேயும் இத விடமாட்டீங்களா? வேற ஏதாவது சாப்பிடுங்கன்னு” சொன்னா. அப்புறம் நானே வாஃபில் (Waffle) செய்தேன். நல்லவேளை தரையெல்லாம் கொட்டியதை என் மனைவி பார்க்கவில்லை. சட்டென்று குனிந்து துடைத்துவிட்டேன். துடைத்து எழுந்த போது, என்னைப் பார்த்து முறைத்த என் மனைவியைப் பார்த்ததால், வழிந்த அசடையும் சேர்த்து துடைத்துவிட்டு எழுந்தேன். அவர் சிரித்தாளா முறைத்தாளா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்குள் வாஃபில் மெஷின் கூவ, அதனை லாவகமாக எடுத்து தட்டில்போட்டு, என் மனைவியிடம் கொடுக்கப் போனேன். "ஒரு வேலை ஒரு வேலை உருப்படியா செய்றீங்களா, ஒன்னும் தெரியாது" என்று சொன்னவள், என் கையில் இருந்த வாஃபிலைப்பார்த்துவிட்டாள். நிறம், மணம், குணம் நிறைந்த, அந்த வாஃபிலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, "பரவாயில்லையே சூப்பர்", என்று பாராட்டினாள். வஷிஸ்டர் வாயால ப்ரும்ம ரிஷி பட்டம் போல இருந்தது.

        பெருமிதத்தேடு கொஞ்சம் “மேப்பில் சிரப்”பை அதில் ஊற்றிக்கொடுத்தேன். வாஃபில் நன்றாகவே இருந்தது. அது ஒன்னும் பிரமாதமில்லிங்க. ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் மாவை, அதெற்கென வைக்கப்பட்டிருக்கும் கப்பில் சரியான அளவில் நிரப்பி, வாஃபில் மெஷினில் ஊற்றி விட்டு மெஷினை மறுபுறம் திருப்ப வேண்டும். உடனே டிஜிட்டலில் 3 நிமிட கவுன்ட் டவுன் ஆரம்பிக்கும். நேரம் முடிந்தவுடன் அதுவே “பீப்” பிட்டுக் கூப்பிடும். திறந்து எடுத்தால் சூடான வாஃபில் ரெடி. இதில் தவறாகப் போவதற்கோ கருகுவதற்கோ வாய்ப்பே இல்லை.
       இருந்த பல வகை ஜுஸ்களில் எனக்குப் பிடித்த கிரேன்பெர்ரி ஜூஸைக்கொஞ்சம் குடித்துவிட்டு வெளியே கிளம்பினோம். ஒன்றரை மணி நேரப்பயணத்தில் 'போர்ட்லேண்ட்" வந்து சேர்ந்தோம்.
    
பயணம் தொடரும் >>>>>>>>>>>
    
பின் குறிப்பு : சொல்ல மறந்திட்டேன்.நான் டிஸ்ட்ரிக்ட் லெவெலில் விளையாடியது “டென்னிக்காய்ட்”. அமெரிக்கன் கல்லூரி நண்பர்கள் சிரித்த காரணம், அது அதிகமாய் பெண்கள் விளையாடும் கேம்  என்பதால்.


Thursday, September 26, 2013

யுஎஸ் ஓபன் டென்னிஸ் - 2013


       இரண்டு வாரத்திற்கு முன்னால் 34-ஆவது தெரு “மேசிஸ் ஸ்டோர்” முன்னால் ஒரு ஸ்மார்ட் ஆள்  கடந்து போனபோது, யார் இது, தெரிந்த முகமாக இருக்கிறதே?, என்று யோசித்தபோது சட்டென்று ஞாபகம் வந்தது. ஆஹா இது “லியாண்டர் பெயஸ்” அல்லவா? என்று. ஷாப்பிங் முடித்து வெளியே வந்து கொண்டிருந்தான். சில வருடங்கள் முன்னால் இதே இடத்தில், காதல் மனைவியுடனும் மகளுடனும் பார்த்தேன் .

இப்போது தனியாக. ஏனென்று தெரியவில்லை.  திரும்பவும் விரைந்து, "லியாண்டர், வெல்கம் டு நியூயார்க்" என்று சொன்னேன். (அட மடையா அவன்தான் அடிக்கடி வருபவனாச்சே, வெல்கம் பேக் டு நியூயார்க் என்றுதானே சொல்லியிருக்கனும்). புன்னகையுடன் கைகொடுத்து விட்டுச்சென்றான்.
       நான் ஒரு மட்டி, யு.எஸ் ஓபனுக்குத்தான் அவன் வந்திருக்க வேண்டும் என்பதை நினைக்காமல், வாழ்த்துச்சொல்லக்கூட மறந்து போனேன்.
       அலுவலகம் திரும்பி, யு.எஸ் ஓபன் ஷெட்யூல் பார்த்தபோது, ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டரின் பெயரும் இருந்தது.
       மனைவியிடம் சொன்னபோது, "ஆமா நம்மாட்கள் ஜெயிக்கவா போறாங்க, சும்மாருங்க. முந்திகூட இப்படித்தான் சானியா மிர்ஸா  மேல நம்பிக்கை வச்சு என்னாச்சு ?" என்றாள்.


       2007 என்று நினைக்கிறேன். சானியா மிர்ஸா விளையாடிய மூன்றாம் கேம். போயிருந்தேன். ஏற்கனவே முதலிரண்டில் வென்றிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. US ஓபன் நேரில் பார்ப்பது அப்போதுதான் முதன்முறை எனக்கு. சானியா மிர்ஸா உலகின் 32ஆவது ஆட்டக்காரியாக இருந்து, முன்னேறிக் கொண்டிருந்தாள்.
       ஆட்டத்தைப்பார்க்க பல இந்தியர்கள் யு.எஸ்ஸின் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்தனர். மேலும் லண்டன், ஐரோப்பா மற்றும் இந்தியாவில் இருந்தும் வந்திருந்தனர். அதுமட்டுமல்ல, அமெரிக்க யூத் சிலர் வந்து ஆர்ப்பரித்து சப்போர்ட் செய்தனர். சில கொல்டிப்  பசங்கதான், “ஹைதராபாத் பிரியாணி ஜிந்தாபாத்”, என்று கத்திக்கொண்டு இருந்தது எரிச்சலை மூட்டியது. இறுதியில் சானியா ஜெயித்தது ஒரு கிரேட் ஃபீலிங். ஆனால் அதன்பின் சானியா வெகுவாக முன்னேறிப் போகமுடியல. நம்மாளுகளும் அவளை விளையாட விட்டாய்ங்களா , குட்டைப்பாவாடை அது இதுன்னு சொல்லி, கடசியில பாகிஸ்தான் ஆளை கல்யாணம் செய்து எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்ப US  ஓபன்ல கூட பெண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடுகிறார்கள். பெரிதாக சோபிக்கவில்லை.
       நம்பாள் லியாண்டர் தன் ஜோடி ரேடக்குடன், பல கேம்கள் முன்னேறி இறுதியாட்டம் வரை வந்துவிட்டான். "மாப்ள நீ இவ்வளவு வந்ததே சந்தோசம்டா" என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் ஒரு நப்பாசை, ஃபைனலில் ஜெயித்தால் நல்லா இருக்குமே.
       மகேஸ் பூபதியை விட லியாண்டரை எனக்குப் பிடிக்கும். ஏன்னா லியாண்டர் சென்னையில் பயிற்சி பெற்றவன். எம். சி.சி.ஸ்கூல்ல   பெஞ்சி கூட படிச்சவன். இருவரும் நிறைய கிராண்ட் ஸ்லாம் ஜெயித்திருக்கிறார்கள். அதுக்குள்ள யார் கண் பட்டதோ, ஈகோ வந்து விளையாடி, சண்டைபோட்டு பிரிஞ்சிட்டாய்ங்க.
       ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தைவிட, டபுள்ஸ் அவ்வளவு கஷ்டமில்லை. இருந்தாலும் அதுலயும் ஜெயிக்கணுமே. டென்னிஸ் விளையாடி ஜெயிக்க நல்ல ஸ்டெமினா வேணும்.
       ஃபைனல்ஸ் நாளும் வந்தது. அரங்கம் நிறையவில்லை. நம்மாள் லியாண்டர் ரொம்ப உயரமில்லை. ஆனால் லேசான தொப்பை இருந்தது. 40 வயதுக்கு தோஷமில்லை ஆனால் ஜெயிக்கனுமே. பார்ட்னர் ரேடக் ஸ்டெபநெக் (Radek Stepanek) நன்றாக விளையாடினான். எதிர் டீம் “அலெக்சாண்டர் பேயா” மற்றும் “புருனோ சோரஸ்” சூப்பர் டீம். ஆனா பேயா (Peya) பேயாவும் விளையாடல, தீயாவும் வெளையாடல. சமீபத்தில்தான் வின்ஸ்டன் சேலம் ஓபனை ஜெயித்த கையோடு வந்திருந்த லியாண்டர் டீம் சுறுசுறுப்பாகவே இருந்தது. பந்தை அடிக்கடி தவறவிட்ட லியாண்டர் பக்கமே அதிகம் அடித்தார்கள். ஆனாலும் சமாளித்து விளையாடிய லியாண்டர் பாயிண்ட்களையும் எடுக்க ஆரம்பித்தான். இறுதியில் 6-1, 6-3 நேர்செட்களில் ஜெயித்தது லியாண்டர் டீம். போன வருடம் ஆஸ்திரேலியன் ஓபனிலும் இதே ஜோடிதான் ஜெயித்தது.

       கப் வாங்கும்போது, பின்னால் நமது தேசியக்கொடியைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பட்டொளி வீசிப்பறந்த மூவர்ணக் கொடியைப் பார்த்தபோது மெய் சிலிர்த்தது. லியாண்டருக்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இது எட்டாவது டைட்டில். மொத்த போட்டிகளில் 14ஆவது. US ஓபனில் மூன்றாவது.

       அதுமட்டுமல்ல 40-வயதில் இந்த கேட்டகிரியில்  கிராண்ட் ஸ்லாம் போட்டியினை யாருமே ஜெயித்ததில்லை. ஹேட்ஸ் ஆஃப் டு  யு, லியாண்டர், யு ஹேவ்  மெய்ட்  ஆல்  இண்டியன்ஸ் ப்ரௌட்.

Monday, September 23, 2013

மெய்ன் பயணம் Part 2 : என் வழி!!!!!!!!!! தனி வழி !!!!!!!!

          
       உள்ளே ரிசப்ஷனில் உக்கிரமாய் சண்டை நடந்து கொண்டிருந்தது. நான் உள்ளே சென்று சண்டை போடுவதில்  பயனில்லை என்று விளக்கி , ஐபாடை எடுத்து தட்டினேன். பிறகு போனில் திரும்ப ப்ரைஸ் லைனை பிடித்து ஒரு மணிநேரம் போராடியபின், அதிர்ஷ்டவசமாக பக்கத்திலேயே இருந்த "கம்ஃபர்ட் இன்"னில் இடம் கிடைத்தது. மூன்று ரூமில் இரண்டு ரூம் இன்டர் கனெக்டட்.ரூம்கள் சுத்தமாகவும் அருமையாகவும் இருந்தது, ஒரு திருப்தியைத்தந்தது. இரண்டு குயின் சைஸ் பெட் இருந்ததால் நான்கு பேர் தாராளமாகப்படுக்கலாம்.
     வந்ததும் வராததுமாக ,எல்லோரும் ஸ்விம்  சூட்டும், ஷார்ட்ஸும் மாட்டிக்கொண்டு நாலு  வயசு ஜெருஷா முதற்கொண்டு ,இண்டோர் நீச்சல் குளத்திற்கு சென்று இறங்கினர். என் மனைவி என்னையும் கூப்பிட்டாள். "வெள்ளிக்கிழமையெல்லாம் நான் நீந்துவதில்லை" என்றேன். " நீங்கள் அந்த குழந்தைகள் பகுதியில் இறங்கலாமே? என்று மனைவி சொன்னதும் கற்றுக்கொடுக்காத என் அம்மா அப்பா மேல் கோவம் கோவமாய் வந்தது.
      கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டு, ஜூலை 4 வாணவேடிக்கையைப்பார்க்க கிளம்பினோம். சுதந்திர தினமான, அன்று எல்லா பெரிய நகரங்களிலும் இருட்டியபின் வாணவேடிக்கை நடக்கும்.  இன்னும் நேரம் இருந்தது. அந்த நேரம் பார்த்து சோவென்று சத்தத்துடன் "தண்டர் ஸ்டார்ம்" ஆரம்பித்தது. கோடையில் இது சகஜம்தான். ஆனாலும் ரம்மியமான மாலை நேரத்தையும், வாணவேடிக்கையையும் கெடுத்து  விடுமோ என்று அஞ்சினோம். ஒரு அரைமணி நேரம் மழை கொட்டோ கொட்டென  கொட்டி ஒய்ந்தது. அதுவும் ஒருவகைக்கு நல்லதுதான். நாள் முழுவதும் கொளுத்திய 90 டிகிரி வெயிலை சாந்தப்படுத்தி, நல்ல ஒரு குளிர்ந்த சூழ்நிலை வந்தது.
            வாணவேடிக்கை நடக்குமுன், பல நிகழ்ச்சிகள் இருந்தன. எல்லோரும் கிளம்பி அந்த இடத்திற்கு சென்றோம். பார்க்கிங் அருகில் ஒரு சிறிய கோட்டை இருந்ததைப் பார்த்தவுடன் துள்ளிக்குதித்தேன். ஆஹா அஜென்டாவில் இதைப்பற்றி சொல்லவே இல்லையே என்று நினைத்த வண்ணம், “இங்கு போகவேண்டுமென” சொன்னேன்,. "ஐயா ஆளைவிடு, எங்களை இறக்கிவிட்டுவிட்டு எங்கே வேணாலும் போ" என்றால் என் மனைவி. அவளுக்குத்தான் "ஹிஸ்டரி அலர்ஜி" ஆச்சே. ஆனாலும் 11 பேரில் ஒருவர் கூட என் கூட வரவில்லையாதலால் நான் தனியாகவே சென்றேன். என்ன செய்வது என்னுடைய இண்டரஸ்ட் வேற யாருக்கும் இல்லை. என் வழி!!!!!!! தனி வழி!!!!!!!! என்று சொல்லிவிட்டு கோட்டைக்குப்போனேன்.
            என் மனைவி போலவே ஹிஸ்டரி அலர்ஜி உள்ளவர்கள் ஒரு பத்தி மட்டும் தள்ளிப்படிக்கவும்.
            ஓல்ட் ஃபோர்ட் வெஸ்டர்ன் (Old Fort Western) என்று அழைக்கப்படும் இது ஒரு தேசிய நினைவுச்சின்னம். கென்னபெக் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இது கிபி 1754-ல் கட்டப்பட்டது. வெறும் மரத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, இதுமாதிரி கட்டப்பட்டவைகளுள் மிகவும் பழமையானது. நியூ இங்லான்டின் காலனிக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தக்கோட்டையில் நேரடியாக எந்தச் சண்டையும் நடந்ததில்லை. ஆனால் அமெரிக்க சிவில் வார் நடக்கும்போது, பெனடிக்ட் அர்னால்டு என்பவர், கியூபெக் பகுதியைத்தாக்குவதற்கு இதனைத்தான் பாசறையாக பயன்படுத்தினாராம்.
         கோட்டையைப் பார்த்து முடித்து, வண்டியை ஆற்றங்கரையில் உள்ள தெருவில் பார்க் செய்யலாம் என்று செல்லும்போது, பெரிய குதிரை வண்டி (Horse Carriage) அந்தப்பக்கம் வந்தது. வண்டியில் இருந்தவர்கள் தெரிந்த மூஞ்சிகளாய் இருந்தது. உற்றுப்பார்த்தால் அட நம்ம ஆட்கள்தான். குதூகலமாய் கைகளை ஆட்டிக்கொண்டு சென்றனர். அந்த 20 பேர் உட்காரக்கூடிய பெரிய வண்டியை இரண்டு குதிரைகள் அநாயசமாக இழுத்துச் சென்றன. குதிரைகளா அவை ஒவ்வொன்றும் குட்டியானை சைசில் இருந்தன. என்னத்தைப் போட்டு வளர்ப்பாய்ங்க்களோ? போகிறபோக்கில் தும்பிக்கை போன்ற வாலைத்தூக்கி போட்டது பாருங்க சாணியை அம்மம்மா எவ்வளவு சாப்பிட்டிருந்தால் இவ்வளவு????.

         பார்க் செய்த இடத்திற்கு முன்னால் ஒரு ஆன்டிக் கடை (Antique) இருந்தது. நல்லவேளை வண்டியில் என் மனைவி போய்விட்டாள். ஏற்கனவே வீட்டில் இடங்கொள்ளாமட்டும் கலைப்பொருட்கள் நிறைந்து இருந்தன. வைப்பதற்கு இடமேயில்லை. சுவர்களிலும் ஒரு இடம் விடாது மாட்டி வைத்தாயிற்று. ஆனாலும் என் கலை ஆசை விடாததால், உள்ளே நுழைந்தேன். ராஜ மரியாதை கொடுத்து, கணவன் மனைவி என்னை வரவேற்றதால் உச்சி குளிர்ந்து, பலவற்றை வாங்கிவிட்டேன். நல்ல பொருட்கள் தாம், விலையும்  பரவாயில்லை. நன்கு பேக் செய்து, ஒரு பிளாஸ்டிக் பின்னில்  போட்டுக் கொடுத்தார்கள். தூக்கிக்கொண்டு வந்து காரிலும் வைத்தார்கள். மகிழ்ச்சியோடு ஆற்றங்கரைப்பக்கம் நடையைக் கட்டினேன். 
Kennebec River
நம் ஆட்கள் கரையில் பெட்ஷீட்டை விரித்து உட்கார்ந்து செட்டில் ஆகி, பிட்சாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மணி எட்டரை ஆகியும் சூரியன் அஸ்தமனம் ஆகாமல் நல்ல வெளிச்சம் இருந்தது. இருட்டிய பின்னர்தான் ஃபயர் வொர்க்ஸ் போடுவார்கள். என்னைப் பார்த்தவுடன் "என்ன வாங்கினாய்?", என்று மனைவி கேட்டது" என்ன வாங்கி  நாய்", என்று ஒலித்தது. "ஒன்னுமில்லையே", என்று நான்  அப்பாவியாய் சொன்னதும், "ஏய் கதைவிடாதே, நீதான் அந்தக்கடையில் நுழைஞ்சதைப் பார்த்தேனே " என்றாள். 

Thursday, September 19, 2013

சேர்ந்திருந்நால் திருஓணம்


            கடந்த வாரம் ஒரு வேலையாக லாங் ஐலண்ட், நியூ ஹைட்  பார்க் சென்றிருக்கும் போது, அருகில் (மலையாள) 'மகாராஜா' (பலசரக்குக்கடை) இருப்பதும் அதன் ஆமை வடையும் (பருப்பு வடையைத்தான் மதுரைப் பசங்க ஆமை வடைன்னு சொல்லுவோம். அது காரணப்பெயர்) ஞாபகம் வர அங்கு சென்றேன். அதன் பக்கத்தில் நம்மூர் "ஹாட்பிரட்" இருக்க, முதலில் அதில் நுழைந்து 'பானிபூரி' சாப்பிட்டுவிட்டு பிறகு மகாராஜா சென்றேன். அங்கு போய்  முதலில் கப்பக்கிழங்கு சிப்ஸ் பின்னர் ஆமை வடை (3 வடை ஒரு டாலர்) வாங்கிக்  கொண்டு விளம்பரப்பகுதியில் இருந்த ஏராளமான அறிவிப்புகளை மேய்ந்தேன். வாழை இலையில் சாப்பாடு போட்டு ஏதோ மலையாளத்தில் எழுதியிருந்தது. மேலே அதில் இருந்த உணவு வகைகளைப் பார்த்தவுடன் எச்சில் ஊறியது. "டேஸ்ட் ஆஃப் கொச்சின்" என்று ரெஸ்டாரண்ட் பெயர் மட்டும் ஆங்கிலத்தில்  இருந்தது. உடனே என்னிடம் ஓடி வந்த ஒருவர்   மலையாளத்தில் சம்சாரித்ததை நான் விளங்கிக் கொண்டது என்னன்னா   , டேஸ்ட் ஆப்  கொச்சின் என்ற அவர்கள் நடத்தும், ரெஸ்டாரண்ட்டில், ஓணம் ஸ்பெஷலாக, வெள்ளி, சனி ஞாயிறு சிறப்பு சாப்பாடு இருக்கிறதாம். அவசியம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
            என் மனைவியிடம் சொன்னவுடன்,” ஓ போகலாமே”, என்றாள். ஒரு நாள் ஒரு நேரம் சமைப்பதிலிருந்து விடுதலை கிடைத்தால் மகிழ்ச்சிதானே. செப்டம்பர் 14, 2013, சனிக்கிழமை காலை என் மனைவியின் போடியாட்ரிஸ்ட் (Podiatrist) அப்பாய்ண்ட்மெண்ட் முடித்து வீட்டுக்கு வந்து பிள்ளைகளை பிக்கப் செய்தோம். திவ்யாவும் ஜெருஷாவும் கடைசி நிமிட பிளானாக சேர்ந்துகொள்ள, கிளம்பினோம். தூக்கத்தில் இருந்து விடுபட்ட சின்னவள் அபிஷா கேட்டாள், "எங்கே போகிறோம்?" என்று. நான் சொன்னேன், "நமது மன்த்லி லஞ்ச் அவுட்டிங்குக்காக டேஸ்ட் ஆஃப் கொச்சின் போகிறோம்", என்று. “ஐயையோ அங்கு வேண்டாம், பிரியாணியில் நிறைய முந்திரிப்பருப்பையும் ரெய்சினை (கிஸ்மிஸ் பழம்)யும் போட்டு ஒரே இனிப்பாக இருக்கும்" என்றாள்.

            போனமுறை மதுரை வனராஜ் வந்திருந்த சமயம், என்னுடைய திருமண நாளைக் கொண்டாட இங்கு சென்றிருந்தோம். அதைச் சொல்கிறாள். "சரி சரி நீ பிரியாணி சாப்பிடாதே" என்றேன்.
            அவர்களை இறக்கிவிட்டு விட்டு, காரை பார்க்கிங் செய்துவிட்டு உள்ளே போனால், அந்த ரெஸ்ட்டாரண்ட்டை முற்றிலும் மாற்றி, திருமணப்பந்தி போல் வரிசை வரிசையாய் போட்டிருந்தார்கள். இலை போடப்பட்டு, வரிசையாக வந்து பரிமாறிக் கொண்டிருந்தனர். சமீபத்தில் வேறு நண்பர் கலிபோர்னியா விசு  தான் இலையில் சாப்பிடுவதை ஃபேஸ் புக்கில் போட்டதைப் பார்த்து வயிற்றெரிச்சலில் இருந்தேன் . 

எனவே ஆஹா ஆஹா என்று சொல்லிக் கொண்டே, ஆசையுடன்   கிட்ட வந்து, என் சீட்டில் உட்கார்ந்த போதுதான் தெரிந்தது. அது இலை  இல்லை, இலை போல் வெட்டப்பட்ட பச்சைக்கலர்  காகிதம். அதான பார்த்தேன். நியூயார்க்கில் இலைக்கு எங்க போறது. சரி பரவாயில்லை விடு.நம்மூர் கல்யாணப் பந்தியை மிஞ்சும் வகையில் மலையாள சகோதரர்கள் வெள்ளை வேட்டி சட்டையில் அசத்தி ஓடி ஓடிக் கவனித்தனர். மொத்தம் 22 வகை என்று சொன்னபோது அபிஷா  24 என்றாள்.

            மலையாளத்தில் ஓணம்  என்பது அனைத்து மதத்தாராலும் உற்சாகமாய் கொண்டாடப்படும் புத்தாண்டு. அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஓணத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
            நாமளும்தான் இருக்கிறோமே. நமது தமிழ்ப்புத்தாண்டு எதுன்னே நமக்குத்தெரியல. சித்திரையா தையான்னு கருணாநிதி ஜெயலலிதாவின் தையா தக்கா விளையாட்டில் அதுவும் மறந்து போச்சு.
            அறுசுவை உணவு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றுதான் அறுசுவையையும் ஒரே நேரத்தில் உண்டேன். அதுதான் வழக்கமாம். "ஓணம் சத்யா" (Sadya) என்று அழைக்கப்படும் அந்த உணவில் 1) இனிப்பு 2) புளிப்பு 3) துவர்ப்பு) 4) உவர்ப்பு 5) கசப்பு 6) உரைப்பு என்று அறுசுவைக்கும் தனித்தனி உணவு வகைகள் வந்தன. அப்பளம், பொரியல், அவியல், கூட்டு, சட்னி வகைகள், பச்சடி வகைகள், ஊறுகாய் வகைகள், சிப்ஸ் வகைகள் பரிமாறப்பட்டு, பின்னர் குண்டு சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், தயிர் மோர், வாழைப்பழம் என்று பரிமாறப்பட்டு, அதன் பின்னர் இருவகைப் பாயாசங்கள் (சக்கப்பிரதமன்) தரப்பட்டன. திவ்யா சாதத்தில் வாழைப்பழத்தைப் போட்டு அதில் சிறிது மோர் விட்டு அதின் மேல் அப்பளத்தைப் போட்டு சாப்பிட்டாள். அப்போதுதான் ஞாபகம் வந்தது, அவள் 50% மலையாளியாச்சே. பாயாசம் சாப்பிட இடமில்லாமல், “ரெண்டு பாயாசம் பார்சல்”, என்றேன். “உஷ் சும்மா இருங்க”, என்றாள் மனைவி. ஒவ்வொன்றிலும் சிறிது சிறிதே சாப்பிட்ட எனக்கு வயிறு நிரம்பிவிட, நன்றாக சாப்பிடும் திடகாத்ர மலையாளிகளைப் பார்த்து பொறாமை கலந்த அழுவாச்சி வந்தது. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை  வேணும் பாஸ் என்று மனதில்    நினைத்துக்கொண்டேன். இவர்கள் வேறு திரும்பத் திரும்ப என்ன வேணும் என்ன வேணும் என்று கேட்டார்கள்.
            நான்வெஜ் இல்லையானு
 முதலில் கேட்ட என் பிள்ளைகளும் விரும்பிச் சாப்பிட்டனர். இது எப்போதாவது அமையும் சந்தர்ப்பம் அல்லவா. அதோடு இங்குள்ள ரெஸ்டாரண்ட்களில் முதன் முறையாக கையில் சாப்பிட்டதும் நிறைவைத்தந்தது.


            $15.95 ஒரு சாப்பாடு என்றாலும் பரம திருப்தி. இலையில் சாப்பிட்ட மாதிரி திருப்தியும் இருந்தது. உப்பிய வயிறோடும், நிறைந்த மனதோடும் வெளியே வந்தேன். என் மனைவி கேட்டாள், இது "ஓணம் சத்யா" வா இல்லை ஓணம் சதியா ? என்று. ஒரு வேளை நான்வெஜ் இல்லாததை சொல்கிறாள் என்று பார்த்தால், அப்போது தான் அவள் முன்தினம்தான் டயட்டில் இருக்கப்போவதாக சொன்னது ஞாபகம் வந்தது. பின்னால் திரும்பிப்பார்த்தால் நடக்கமுடியாமல் வந்து கொண்டிருந்தாள். பின்ன ஒரு ஆயிரம் கலோரியை அசால்ட்டா அள்ளிட்டாள்ல.

Monday, September 16, 2013

மெய்ன் பயணம் பகுதி 1 : ஜிபிஎஸ்-ஆல் போன மானம்


            ஜூலை 4 - அமெரிக்க சுதந்திர தினம்.இம்முறை வியாழக்கிழமை வந்தது. வெள்ளி லீவ் போட்டால் நான்கு நாட்கள் சுளையாகக்கிடைக்குமென்பதால், எங்கேயாவது டிரைவ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். பக்கத்து மாநிலங்கள் எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டதால், கொஞ்சம் தூரமான மாநிலங்கள் இன்னும் மூன்று பாக்கி இருந்தன. அவை வெர்மான்ட், ஒகாயோ மற்றும் மெயின். மூன்றுமே சாலை வழியாக ஒரு ஐந்து முதல் ஆறு  மணி நேரத்தில் செல்லலாம். 65- 70 மைல்  வேகத்தில் (100, 120கி.மீ வேகம்) சென்றால், டிராபிக்கில் மாட்டாமல் இருந்தால் இது சாத்தியம்தான். மற்றவை யெல்லாம் விமானப்பயணம் மூலம்தான் செல்லமுடியும்
            வெர்மான்ட் கோடைக்காலத்தை விட இலையுதிர் காலத்தில் நன்றாக இருக்கும் என்பதால், மெயின் போகலாம் (Maine) என்று முடிவு செய்தேன். நான் முடிவு செய்தவுடன், பெஞ்சியின் மனைவி திவ்யா, அவளும் வருவதாகச் சொன்னாள். என் மாமனாரும், மாமியாரும் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். கீழ்போர்ஷனில் குடியிருக்கும் பின்னியும் கிஃப்டாவும் சேர்ந்து கொள்ள மொத்தம் 11 பேர் ஆனது. சரியென்று சொன்னதற்கு தண்டனையாக என் வேனையே கேட்டனர். வோக்ஸ் வேகன் ரூட்டன் ( Volks Wagon Routan) - 8 பேர் உட்காரலாம். அதோடு, என் மகளின் பிஎம்டபுள்யூ- X1 ஐ நான் எடுக்க திவ்யா, கிஃப்டா வயிற்றில் உள்ளதைச்சேர்க்காமல் 11 பேர்.
            வியாழன் அதிகாலையில்  கிளம்பி, ஞாயிறு மாலை திரும்புவதாக திட்டம் போட்டு, இம்முறை ஒரு மாற்றாக ஹோட்டல் புக்கிங், பார்க்குமிடங்கள் ஆகியவற்றை திவ்யா, கிஃப்டா கையில் கொடுத்தேன்.
            வியாழன் காலை நான் 5 மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி, மனைவி பிள்ளைகளை எழுப்பிக்கிளப்பி 6 மணிக்கெல்லாம் ரெடியாகி, காருக்கு வர, மேலே ஒரு சத்தத்தையும் காணோம். கடுப்பாகி “நாம் சிறிது முன்னால் கிளம்பலாம்”, என்றேன். என் மனைவியின் அப்ஜெக்சனையும் ஓவர்ரூல் பண்ணி, ஜிபிஎஸ்-ல் அட்ரசை போட்டேன். 740 மைல்  என்றும் இரவில் தான் போய்ச்சேருவோம் என்றும் போட்டிருந்தது. ஆனால் மெயின் 360 மைல்தான். ஏற்கனவே கடுப்பில் இருந்த நான், யோசிக்காமல், டக்கென்று வண்டியை எடுத்தேன். வண்டி டிரைபோரோ பிரிட்ஜ் தாண்டி I-80-  ல் ஆல்பெனி நோக்கிச் சென்றது.
            கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் டிரைவ் செய்தபின் என் மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்தது. "ஏங்க  சரியான வழியில்தான் போகிறோமா?" என்றாள். “பேசாம இரு உனக்குத் தெரியாது”,என்று அதட்டினாலும், எனக்கும் சந்தேகம் வந்தது. பிள்ளைகளிடத்தில் சொல்லி, ஐபோனில் செக் செய்யலாம் என்றால், அவர்களிருவரும் விட்ட தூக்கத்தை  கண்டினியூ பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
            அப்போழுது திவ்யா போன் வந்தது. “எங்கேயிருக்கிறீர்கள்” என்று கேட்டபோது “கனெக்டிக்கட்” தாண்டுகிறோம் என்றார்கள். என்ன கனெக்டிக்கட்டா, நாங்கள் ஆல்பெனி வழியில்ல போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தவுடன் பகீரென்றது. வேனை ஓரங்கட்டி, ஆராய்ந்ததில், இந்த முட்டாள் BMW GPS எங்களை தப்பாக வழிகாட்டியிருக்கிறது. 2 மணி நேரம் தவறான வழியில் போனதால், எங்களுக்குப் பின்னர் கிளம்பியவர்கள் இப்போது எங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள். முன்னால் கிளம்பிய எனக்கு அவமானமாய் இருக்க என் மனைவி நல்லவேளை ஏளனமாய் சிரிக்கவில்லை. அந்தக்காரில் உள்ளவர்கள் நிச்சயமாய் சிரித்திருப்பார்கள். என் பெண்ணை எழுப்பி ஐபோனில் டைரக்ன் போட்டோம். மறுபடியும் திரும்பி, கனெக்டிக்கட் மாநிலம்   வந்து, மசாசுசெட்ஸ் மாநிலம்     தாண்டி, நியூஹாம்ஷையரில் மதிய உணவுக்காக நிறுத்தினோம். அப்படியே கேசும் (பெட்ரோல்) போட்டுவிடலாம் என ஒரு எக்சிட்டில் வெளியே வந்தோம். இங்கே பெரும்பாலான கேஸ் ஸ்டேனில், டெலி (Deli) என்று சொல்லப்படுகிற கன்வீனியன்ட் ஸ்டோரும் இருக்கும். அதில் பேகல், பிரட்ஜெல்  மற்றும் சான்விட்ச்சுகளும் கிடைக்குமென்பதால் அங்கே நிறுத்தினோம். BMW என்பதால் பிரிமியம் கேஸ்தான் போட வேண்டும். அது கேலனுக்கு ரெகுலர் கேஸை விட குறைந்தது ஒரு 50 Cents அதிகம். இங்கே பெட்ரோலில் நான்கு வகைகள் உண்டு.
            டெலியினுள் நுழைந்து, சேஃபாக ஒரு வெஜ்ஜி சான்ட்விச்சை ஆர்டர் செய்தேன். என் மனைவி பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லி விட நான் மட்டும் சாப்பிட வேண்டியதிருந்தது. டோஸ்ட் செய்த ஹீரோவில் (ஒரு வகை ரொட்டி) ஒரு அமெரிக்கன் சீஸ், லேட்டூஸ், தக்காளி, ஆலிவ், கேப்சிகம் மற்றும் உப்புத்தண்ணீரில் ஊற வைத்த வெள்ளரி ஆகியவை போட்டு நன்றாகவே இருந்தது. மேயனீஸ் வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.
            டெலியினுள் இருந்த ஆள் சிவப்பாகஉயரமாக வாட்ட சாட்டமாக இருந்தான் பாகிஸ்தானி அல்லது பஞ்சாபியாக இருக்கவேண்டும் என நினைத்து கேட்கலாமா வேண்டாமா? என்று யோசித்தேன். சரி கேட்டுவிடுவோம் என்று நினைத்து, பாகிஸ்தானா? என்று கேட்டேன். “இல்லை ஹைதராபாத்”, என்றான். ஆச்சரியமாக இருந்தது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் Gas station, பெரிய கன்வீனியன்ஸ் ஸ்டோர், மற்றும் அந்த உணவகத்தையும் சேர்த்து ஒரே ஆள்  பார்த்துக் கொண்டிருந்தான். ஆட்கள் பற்றாக்குறையால் இங்கே எல்லா இடத்திலும் இப்படித்தான். மல்டை  டாஸ்கிங் (Multitasking). 
            என் மனைவி, பெஞ்சிக்கு போன் செய்தபோது அவர்களும் பக்கத்தில்தான் இருந்தனர் என்று தெரிந்தது. ஒரு அரை மணி நேரத்தில் அவர்களை 'வெண்டி' (Wendy) உணவகத்தில் பிடித்தோம். என் கார் உள்ளே நுழையும் போது, பார்க்கிங்கில் அவர்கள் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். "ஏன்  ரெஸ்டாரண்ட் உள்ளே  உட்கார்ந்து சாப்பிட வேண்டியதானே ?", என்று என் மனைவியிடம் சொல்லிக்கொண்டே காரை பக்கத்தில் நிறுத்தினால், இவர்கள் வெண்டி பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த தென் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இந்தக் கட்டுச்சோறு பழக்கத்தை அமெரிக்கா வந்தாலும் விடுவதில்லை என நினைத்து தலையில் அடித்துக்கொண்டேன்.
            சாண்ட்விச்சுக்கு  விரதம் இருந்த என் மனைவி, தயிர்சாதம் என்றதும் ஆவலாக ஒரு பிளேட் வாங்கி பசியாறினாள். என் பிள்ளைகள்"வேண்டாம், வி ஆர் குட்" என்று சொல்லிவிட்டனர்.
            மீண்டும் அங்கிருந்து ஒன்றாகவேகிளம்பி “அகஸ்டா”  என்ற சிறிய நகரத்தில் நான்கு மணியளவில் நுழைந்தோம். அங்கிருந்த  "பெஸ்ட் வெஸ்டர்ன்" ஹோட்டலில் மூன்று ரூம்கள் புக் செய்திருந்தாள் திவ்யா.
            பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டுநான் காரில் இருக்க, உள்ளே  சென்ற திவ்யா கலவரமாக வெளியே வந்தாள். என்னவென்றால் பிரைஸ்லைன் மூலமாக புக் செய்த எதுவும் இங்கு வந்து சேரவில்லை. ரூம் எதுவும் காலியாக ,இல்லை என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.ஜூலை 4 வீக்கெண்ட், கோடைகாலத்தின் முதல் விடுமுறை. எனவே அநேகமாக எல்லோருமே வெளியே போய்விடுவார்கள். அதனால் முன்னால் புக்கிங் செய்யாவிட்டால் ரூம்கள் கிடைப்பது அரிது.

   ஐயையோ இப்ப என்ன செய்வது, எங்கு தங்குவது என நினைத்து கலக்கமாக இருந்தது.

தொடரும் 

Thursday, September 12, 2013

மாற்றம் வேண்டும் மனதில் (செப்டம்பர் 11,2001)

(செப்டம்பர் 11 நினைவாக அதற்கு அடுத்த வாரம்  நியூயார்க் கிறிஸ்தவ தமிழ் கோயிலில் அடியேன்  எழுதி வாசித்தது  )


ஓ என் பிரிய சகி !
இதுகாரும்
இன்பத்தை மட்டுமே
பகிர்ந்த உன்னோடு
துன்பத்தை பகிர
துணைக்கழைக்கிறேன்
துரிதமாய்க்கேள் !

இது என்
இதயம் கவர்ந்த
இரட்டையர் கதை 

உழைக்க வந்தோரை எல்லாம்
அழைத்து வந்து அகத்தினில் வைத்து
பிழைக்க வைத்த பேராளரை
குலைத்துப் போட்ட கதை இது !

மண்ணில் கால்களை விதைத்து
விண்ணில் முகங்களை புதைத்து
எண்ணில் அடங்காதோர் அழைத்து
தன்னில் தஞ்சமாய் அணைத்து
கண்ணில் அடங்கா காவலரே நீர்
கருகிப்போன காரணம் என்ன?


நிலவோடு உறவாடி
முகிலோடு விளையாடி
காற்றோடு கதை பேசி
கதிரவன் சதுராடி
உயிர்கள் ஆயிரமாய்
உயர்ந்து நின்றவரே - நீவீர்
உருகிப்போன மாயம் என்ன?

புயலுக்கு அசராது
மழையிலும் கரையாது பூமி
அதிர்ச்சிக்கும் அசையாது
சூறாவளிக்கும் சுழலாது
சுயம்புவாய் நின்றவரே, நீர்
நெருப்பில் கருகிய
நிலை வந்ததெப்படி?

நீவிர்
உயர்ந்து வளர்ந்த அதிசயத்தை
உலகம் உணரும் முன்னே
பெயர்ந்து போன பேரழிவு கண்டு
அயர்ந்து போனது அகிலமே!

தானும் வாழ்ந்து
பிறரை வாழவைத்த
தாராளர்  அறிவேன்

தன்னை அழித்து
பிறரை வளர்த்த
தகைமையாளர் அறிவேன்

தான்  வாழ
பிறரைக் கெடுக்கும்
தற்குறிகளையும் அறிவேன்.

ஆனால் ஈதென்ன கொடுமை
தன்னை அழித்து
பிறரையும் அழிக்கும் பகைமை
உலகம் எங்கே போகிறது?

ஆகையால்
உலகோரே ஒன்று சேர்வோம், இந்தக்
கொடுமை எதிர்த்துக்
குரல் கொடுப்போம்
தேவையென்றால் உயிரையும் கொடுப்போம்
உலக ஒற்றுமைக்காய் உயிரையும் கொடுப்போம்.

உயிர் துறந்தவர்கள் யாவரும்
உன்மத்தரும் அல்லர்
உயிரோடு இருக்கும் நாமெல்லாம்
உத்தமரும் அல்ல.

நமக்குத் தெரிந்த உண்மை...
நவிலட்டுமா?
நாம்
உயிரோடிருக்கும் அருமை
நம்
ஆண்டவரின் சுத்தக்கிருபை.

அதனால் உலகோரே
நம்மால்
நாட்டில் சமாதானத்தை 
நாட்டமுடியாது , ஆனால் நம்
வீட்டில் சண்டையில்லாமல்
காக்கலாம் அல்லவா?

ஆப்கானிஸ்தானில் அமைதியை
அளிக்கமுடியுமா, ஆனால் நம்
அலுவலகத்தில் அன்பை
அதிகரிக்கலாம்

தேசத்தில் சண்டையை
தடுக்க முடியாது ஆனால்
தேவாலயத்தில் ஒற்றுமை
காக்க முடியும்.

அமெரிக்காவில் தீவிரவாதத்தை
அழிக்கமுடியாது, ஆனால்
அனுதினம் அமைதிக்காய்
ஜெபிக்கலாம்

நம்மால்
இந்தியாவில் ஊழலை
அகற்ற முடியாது, ஆனால்
இதயத்தை பரிசுத்தம்
பண்ணலாம்


காஷ்மீர் பிரச்சனையை
களைய முடியாது ஆனால்
கண்முன் கஷ்டப்படுவோருக்கு
கண்டிப்பாய் உதவலாம்.

எனவே
நம்மால் முடியும்
நன்மைகள் செய்து
இம்மைக்குரிய சிந்தனையில்
இசைந்தே வாழ்வோம்.





Wednesday, September 11, 2013

வேர்ல்ட் டிரேட் சென்டர் - ட்வின் டவர்: Part 2

       செப்டம்பர் 11, 2001

      12 வருடங்களுக்கு முன்னால் இதே நாளில், புதிதாக வந்த என் மகள்களை பள்ளியில் சேர்ப்பதற்காக பிரையர்வுட்டில் (Briarwood) (B-க்கும் P-க்கும் தமிழில் 'பி' தானா?) இருக்கும் ஆரம்பப்பள்ளிக்குச் சென்றேன். ஒரு கஷ்டமுமில்லை, சிறிய நேர்முகம் முடிந்து, ஆங்கில அறிவைச் சோதனை செய்துவிட்டு, அட்மிஷனை உறுதி செய்தார்கள். பிரின்ஸ்பாலை பார்த்து நன்றி சொல்லப் போனபோது, அங்கே எல்லோரும் கூடிக்கூடி குசுகுசுத்தனர்.என்னவென்று விசாரித்தபோது, ஒரு பெரிய ஆக்சிடன்ட், "வேர்ல்ட் டிரேட் சென்டரில் ஒரு விமானம் மோதிவிட்டது" என்றனர். ஐயோ பாவமே எத்தனை பேர் பலியானார்களோ? என்று நினைத்த வண்ணம், வீடு திரும்பி டிவியை ஆன் செய்தேன். சற்று நேரத்தில், என் கண்ணுக்கு நேரே மற்றொரு விமானம், அதன் இன்னொரு டவரை ஊடுருவி உள்ளே செல்ல, அப்படியே திகைத்துவிட்டேன். இது ஆக்சிடெண்ட் மாதிரி தெரியலையே, என நினைத்துக் கொண்டு அதிர்ந்து உட்கார்ந்துவிட்டேன். ட்வின் டவர் இரண்டும் பற்றியெரியத் தொடங்க, என் மனமும் பதைபதைத்து பற்றி எரிந்தது. சில நிமிடங்களில் 110 மாடி ட்வின் டவர் அப்படியே சீட்டுக்கட்டு போல உருகி, மண்ணோடு மண்ணாகியது.

 மாபெரும் புகைமூட்டம் எழுந்து, டெளன் டவுன் முழுவதும் படர்ந்தது. உள்ளே மாட்டிக்கொண்டு செத்தவர்கள் தவிர, தீயணைப்பு வீரர்கள், போலிஸ்காரர்கள், தூசியில் மூச்சுத்திணறி இறந்த, வெளியேயிருந்த பொதுமக்கள் என கிட்டத்தட்ட 4000 பேர் இறந்தனர்.

 சப்வே அனைத்தும் நிறுத்தப்பட, வேலைக்கு அன்று மன்ஹட்டனுக்கு சென்றவர்கள் நடந்தே திரும்பினர்.

இறந்தவர்கள் பட்டியலில் நம் இந்திய மென்பொருள் பொறியாளர்களும் அடங்குவர்.நியூயார்க்கின் ஸ்கைலைன் நிரந்த-ரமாக மாறிப்போனது. 

Skyline with Twin towers

              அந்தச்  சம்பவத்தை இப்போதுநினைத்தாலும் உள்ளமும் உடலும் நடுங்குகிறது. அப்பாவிகளைக்கொன்ற இந்த மனதில் ஈரமில்லாத பிற்போக்குவாதிகளை அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்,ஜெஹோவா,கடவுள், இறைவன் மற்றும் கர்த்தர் என்று அழைக்கப்படுகிற பரம்பொருள் மன்னிப்பாராக.
Skyline without Twin towers

            சிறிது நேரத்தில் எனக்கு நான் அப்போது வேலைபார்த்த கம்பெனியின் பிரசிடன்டிருந்து ஃபோன் வந்தது. "ஆல்ஃபி எங்கே இருக்கிறாய்? வேர்ல்ட் டிரேட் சென்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். சப்வே ஒன்றும் ஓடவில்லை. நீ வீட்டிலேயே இரு. ஆஃபிஸ் எப்போது வருவது குறித்து இரண்டு நாட்களில் சொல்கிறேன்" என்று.
Skyline now with Freedom Tower

            அந்த முதல் காலுக்குப்பின்னர், எனக்கு பல போன்கள்,  உலகின் பல இடங்களிலிருந்து வந்து கொண்டே இருந்தது. நான் சேஃபாக இருக்கிறேனா? என்று அறிய.ஏனென்றால், ட்வின் டவரிலிருந்து வந்து மிட்டவுனில் வேறு வேலை எடுத்துவிட்டேன் என்று பலருக்குத் தெரியாது. 
        H4 விசா உறுதியாகி, மனைவி பிள்ளைகள் செப்டம்பர் 6, 2001 வியாழன் மதியம் ஜான் F. கென்னடி விமான நிலையத்தில் வந்திறங்கினர். 14 மாத பிரிவுக்குப்பின் குடும்பம் ஒன்றிணைந்தது. வெள்ளியன்று ஆபிஸ் போய்விட்டு, சனிக்கிழமை செப்டம்பர் 8, 2001 அன்று மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றேன். WTC-யும், சுதந்திர தேவி சிலையையும், எல்லிஸ் தீவையும் பார்க்க திட்டம்.
            E-டிரைனில் கடைசி ஸ்டாப்பில் இறங்கி மேலே வர, வானளாவி நின்ற இரட்டைக் கோபுரங்கள் லேசாக மிக லேசாக அசைந்து வரவேற்றன. வாருங்கள் மேலே போகலாம் என்று அழைக்க, மனைவி சொன்னாள், "இது வானத்தை முட்டிக்கொண்டிருக்கிறது, பயமா இருக்கு இன்னொரு நாளைக்குப் போகலாம்". அன்று நிஜமாகவே, சிகரம் அப்படித்தான்  மேகங்களிலே மூடப்பட்டு இருந்தது. என் மனைவி அதுவரை சென்னை LIC  கட்டடம் தவிர வேறு உயரமான கட்டிடம் பார்த்ததில்லை. ஏற்கனவே ஜெட் லாகினால்  கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவளை வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.
            அதன்பின் கடைசிவரைக்கும் மேலே போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவேயில்லை.
            அன்றைய நாளில் சுதந்திர தேவிசிலையில் நாங்கள் எடுத்த பல போட்டாக்களிலும், கம்பீரமாய் இரட்டைக் கோபுரங்கள் நின்றிருந்தன.
            இரண்டே நாட்களில் "டாப் ஆஃப் தி வேர்ல்ட்", "கிரவுண்ட் ஜீரோ" ஆனது. என் மனைவி கண்பட்டதால் இப்படி ஆயிருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதால் இன்றுவரை அவளை "எம்பயர் ஸ்டேட் பில்டிங்குக்கு கூப்பிட்டுப் போகவேயில்லை. “ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர்” அழைத்துப்போகும்உத்தேசமும் இல்லை.


முற்றியது.