Monday, July 29, 2019

வசந்த முல்லை போலே வந்து !!!!!!!!!!!!!!!!!!!

வசந்த முல்லை போலே வந்து !!!!!!!!!!!!!!!!!!! (ஒரு மீள் பதிவு )


வேர்களைத்தேடி பகுதி 45
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

'டேய் முருகா அழுவாதராஎன்று நான் சொல்லி எவ்வளவு தேத்தியும் முருகன் அழுவறத நிறுத்தல. தேம்பி தேம்பி விசும்பி விசும்பி ரொம்ப அழுதுட்டான். பக்கத்துல இருந்த மகேந்திரனும் சொல்லிப் பார்த்தான். ம்ஹீம் முருகன் அழுவறத நிறுத்தவேயில்லை.
ஆனா அவன் பக்கமிருந்து யோசிச்சாஅவன் அழுவறதுல ஒரு நியாயம் இருக்குன்னுதான் சொல்வேன். தன் சொந்த அப்பா வேற ஒரு பெண்ணைக் கட்டிப்பிடிச்சா எந்த மகனுக்குத்தான் கோபம்வராது ?. சின்ன வயசுப் பசங்களான எங்களுக்கு கோபம் வந்தா அழறதத்தவிர வேறென்ன செய்ய முடியும். கொஞ்சம் இருங்க என்ன நடந்ததுன்னு சொல்றேன். முப்பது வருஷம் முன்னால நடந்ததுன்னாலும்,இப்ப நினைச்சாலும் அப்படியே ஞாபகத்தில் இருக்குது.
எங்கூர் தேவதானப்பட்டி, கிருஷ்ணஜெயந்தி திருவிழாவுக்கு களை கட்டியிருந்துச்சு. ஏழு நாளுக்கு முன்னால பந்தல் கால் நட்டதிலிருந்து நாங்க அதுக்கு ரெடியாக ஆரம்பிச்சுடுவோம். எங்க பள்ளிக்கூடத்துக்கு  அந்த திருவிழா நடக்குற மூணு நாள் லீவு விட்டுருவாங்க. சனி ஞாயிறு சேர்த்து மொத்தம் அஞ்சு நாள் லீவு வந்துரும். மத்த பள்ளிக்கூடம்லாம் லீவு கிடையாது. எங்களுக்கு மட்டும்தான் லீவு. ஏன்னா எங்க பள்ளிக்கூட முகப்புதான் கோவில் ஆயிரும். கிருஷ்ணருக்கு தனியா கோவில் எதுவுமில்லை. எங்க இந்து நடுநிலைப்பள்ளி, போடி ஜமீந்தார்  மாளிகையிலதான் நடந்து வந்துச்சு. போடி ஜமீந்தார் மாளிகை, எங்க ஊர் பிள்ளைமார் சங்கப் பொறுப்பில இருந்துச்சு. ஒவ்வொரு வருஷமும் பிள்ளைமார் சங்கம்தான் கிருஷ்ணஜெயந்தி விழாவை நடத்துவாங்க.

பள்ளிக்கூட முன்னாடி உள்ள மைதானத்துல முழுசா பந்தல் போட்டு ஒரு திடீர் கோவில் உருவாகும். பள்ளிக்கூடம் உள்ளே இருக்கிற ஒரு இருட்டு ரூம்ல ஒரு பெரிய தகர டிரம்மில் நிறைய எண்ணெயை ஊத்திஅதுக்குள்ள கிருஷ்ணரோட ஐம்பொன் விக்கிரகத்தை வச்சிருப்பாங்க. முன்னாடி கோவில் மண்டபம் ரெடியானவுடன்நல்ல நேரம் பார்த்து விக்கிரகத்தை எடுத்து நகையலங்காரம் செஞ்சுபிரதிஸ்டை பண்ணவாங்க கிருஷ்ணன் அலங்காரத்தில் கொள்ளை அழகா இருப்பாரு. அவரு உதட்டோரத்துல ஒரு சின்ன குறும்புப் புன்னகை இருக்கும் பாருங்க அதை எப்படித்தான் வடித்தார்களோன்னு பிரமிப்பா இருக்கும்.
முத நாள் திருவிழாவில தன்னோட மயில் வாகனத்துல உலா வருவாரு. 2வது நாளும் அப்படியே. மூனாவது நாள் டெய்லர் சங்கம் ஜோடிக்கும் பூப்பல்லக்கில் வருவாரு. இதுல அதிசயம் என்னன்னா இந்த டெய்லர் சங்கத்தில நிறைய முஸ்லீம் சகோதரர்களும் இருந்தாங்க. அவங்கள்லாம் வந்து உதிரி செவ்வந்திப் பூவை கிழங்கு மாவில் பசை கிண்டி பல்லக்கு முழுசும் ஒட்டுவாங்க. வெளியே வரும்போது ராத்திரி பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில தங்கப்பல்லக்கு மாறி ஜொலிக்கும். அதைக்காகண்கோடி வேணும். கிருஷ்ணருக்கு மூலவரும் உற்சவரும் ஒரே விக்ரகம்தான்.  

NVS  பட்டணம்பொடி கடைக்காரரும் TAS ரத்தினம் பட்டணம்பொடி கடைக்காரரும் போட்டி போட்டுக் கொண்டு அலங்காரம் செய்வாங்க. ரெண்டுபேரும் பிள்ளைமார் சமூகம்தான். அதுல திருவிழாவுக்கு ரெண்டு நாள் முன்னால TAS கடைக்காரர் ஒரு பெரிய பொம்மையைக் கொண்டுவந்துருவாரு. ஒரு பெரிய உரலில் பொடியை அரைப்பது போன்ற பெரிய மீசை வச்சபொம்மை. இதில அதிசயம் என்னன்னாபொம்மை மின்சாரத்துல இயங்கும். தலையை ஆட்டும்,கண்களை உருட்டும் கைகளால் உலக்கையை வைத்து ஆட்டும். அந்தக் காலத்தில அது எங்களுக்கெல்லாம் பெரிய அதிசயமாயிருக்கும்.
மண்டபம் மட்டுமில்லாமதெருவெல்லாம் கொட்டகை போட்டு குழல்விளக்கு சீரியல் செட் போட்டு சூப்பரா இருக்கும். காலைல 6 மணியிலிருந்து ராத்திரி 11 வரை குழாய்கள் மூலை மூலைக்கு கட்டப்பட்டு பாட்டுகள் அதிரடியாக இருக்கும். சாஸ்திரத்துக்கு ரெண்டு மூணு சாமி பாட்டு போட்டுட்டு அப்புறம் முச்சூடும் சினிமாப் பாட்டுத்தான்.
2ஆவது நாள் திருவிழாவில நாடகம் நடக்கும். 3ஆவது நாள் வழுக்கு மரம் உரியடியோட திருவிழா முடிஞ்சிடும். ஆரம்பத்துல மதுரையிலிருந்து நாடகக்கம்பெனிகள் வந்து வள்ளிதிருமணம் போன்ற நாடகங்கள் நடக்கும். பள்ளிக்கூடத்து முன்னால ஒரு பெரிய பள்ளம் தோண்டி அந்த மண்ணை வச்சே பெரிய மேடை போட்டுருவாங்க.
எங்க பள்ளிக்கூடத்துல எங்க தமிழ் வாத்தியார் பேரு புலவர் தேவகுரு. எனக்கு தமிழ்ல நல்ல ஆர்வம் வந்ததுக்கு அவர் ஒரு முக்கிய காரணம். 'மானங்காத்த மன்னர்கள்னுஅவர் எழுதிய புத்தகம் ஒண்ணு ரொம்ப சூப்பரா இருக்கும். ஓரங்க நாடகங்களின் தொகுப்பு.
அதுக்கப்புறம் பிள்ளைமார் சங்கத்திலிருந்து ஒரு ஐடியா பண்ணி, தேவகுரு ஐயாட்ட சொன்னாங்கநீங்களே நாடகம் எழுதினா என்னன்னு?. அப்புறம் வருஷாவருஷம் அவர்தான் சமூக நாடகங்கள் எழுதுவாரு. ஊரில நடிப்பு ஆசையோட  இருந்த நிறையபேர் அதுல நடிப்பாங்க. பெண் கதாபாத்திரங்களை மட்டும் மதுரையிலிருந்து வரவழைப்பாங்க. ஒரு மாச முன்னால பயிற்சி ஆரம்பிச்சுரும். ஆனா கதாநாயகி மற்றும் சில பெண் கதாபாத்திரங்கள் மட்டும் ஒரு நாள் முன்னாடி வந்து பயிற்சி பண்ணிட்டு திறமையா நடிப்பாங்க. நாடகத்து சீன் செட்டிங்குகள்லைட்டுகள் இசைக்கருவி வாசிப்பவங்க எல்லாம் ஒரு நாள் முன்னாடி வந்து ஸ்கூல்ல தங்கி பயிற்சி செய்வாங்க.நாங்கெல்லாம் வாத்தியார் புள்ளைங்கனால எப்படியாவது உள்ளே போயிருவோம் .கதாநாயகிகளைப்பாக்க ஜன்னல் பூரா மூஞ்சியாய் தெரியும்.
நாடம் ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிச்சுச்சு.
முதல்ல கோமாளி வந்து பாட்டுப் பாடுனான்.  

வாங்க இருங்க உட்காருங்க
வந்த காலில நிக்காதீங்க
வம்பு வழக்கு பேசாதீங்க - இப்படிப்போகும் அந்தப் பாடல்.
 நானுமகேந்திரன்முருகன்சிராஜ்னு எங்க கூட்டாளிக எல்லாரும் முன்னாடி உட்கார்ந்திருந்தோம். அப்புறம் கதாநாயகி அறிமுகத்தில "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு,தென்றலே உனக்கென்ன சொந்த வீடு" - அப்படின்னு பாட்டுக்கு வாயசைச்சு ஆடிக்கிட்டு வந்த கதாநாயகி ஒல்லியா சிவப்பா ரொம்ப அழகா இருந்துச்சு. பாட்டும் இசையும் நடனமும் சூப்பர்.
அதுல கதாநாயகன் யாருன்னா நம்ம இந்திரன் வாத்தியார்தான். மேக்கப் போட்டு மேடையில வந்தாரு அடையாளமே தெரியல, சும்மா கைதட்டும் விசிலும் பறந்துச்சு. முருகனோட அப்பாதான் அவர். இந்திரன் வாத்தியார் எங்க ஸ்கூல்ல ரொம்ப ஃபேமசு. சிவப்பா, உயரமா பார்க்க ஒரு ஹீரோ மாதிரி இருப்பார். அவர்தான் எங்க ஸ்கூலுக்கு ஸ்கவுட் மாஸ்டர் வேற. அந்த யூனிஃபார்ம்  போட்டு அவர் டிரில் பண்ணும் போது கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்.
முருகனுக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. அவனுக்கு பெருமை தாங்கல. அப்புறம் கதை சுவாரஸ்யமா போச்சு. கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் முதலில் வழக்கம் போல் சண்டை வந்து அப்புறம் காதல் வந்துச்சு.  இந்திர வாத்தியார் உள்ளே வந்து கதாநாயகியைக் கையைப்பிடித்து இழுக்ககதாநாயகி வெட்கப்பட பாட்டு ஆரம்பிச்சுச்சு. "வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவேமாயமெல்லாம் நான் அறிவேனேவா வா ஓடிவா", இருவரும் ஓடிப்பிடித்து பாடி ஆடமுருகன் லைட்டாய் அழ ஆரம்பித்தான். எங்களுக்கும் கொஞ்சம் திக்குன்னு இருந்துச்சு. வேகம் கூட கூடஒரு கட்டத்துல ந்திர வாத்தியார் கதாநாயகியை அலேக்கா தூக்கிவிடஎங்க முருகனுக்கும் வேகம் கூடி ஓன்னு அழுதான். எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலசார் உங்க மகன் அழுறான்னு இந்திரன் சாரைக் கூப்பிடலாம்னு ஆயிருச்சு. அப்புறம் அவனைக் கொண்டுபோய் வீட்டுல விட்டுட்டு நாங்களும் வீட்டுக்குப் போனோம். ஏன்னா   எங்களுக்கும் ரொம்ப கோபம் வந்துரிச்சு. வாத்தியார் அப்படி செஞ்சது தப்புன்னு நினைச்சோம்.

 அதெல்லாம் வெறும் நடிப்புனு அப்ப எங்களுக்குத் தெரியாத வயசு. இப்ப நினைச்சா சிரிப்புதான் வருது . ஆனா இந்திரன் வாத்தியார் மட்டும் சினிமாவில் நடிக்க வந்திருந்தார்னா எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுருப்பாரு.

தொடரும் 

Monday, July 22, 2019

நல்லெண்ணெயும் கெட்டெண்ணெயும்!!!!!!!!!!! (ஒரு மீள் பதிவு )


வேர்களைத்தேடி பகுதி 44
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.



"கொக்கரக்கோகோ"அந்தச் சேவல் மறுபடியும் கூவியது. “இந்தச் சேவலுக்கு வேற வேலையில்லையாமனுசனை தூங்கவிடமாட்டேங்குது” என்று முணுமுணுத்துக்கொண்டே திரும்பிப்படுத்தேன். எங்க வீட்டு முன்னறையில் இருந்த, ஊமை ஆசாரி செஞ்ச மரக்கட்டிலில் பாயை விரித்து அதில்தான் நான் படுப்பேன். மூத்த பையன் என்பதால் இந்த விசேஷ சலுகை. கீழே எனது இரு தம்பிகள் பாயில் படுத்திருந்தார்கள். அரைக் கண்ணால் பார்த்தேன் அவர்களிடத்தில் எந்த அசைவும் இல்லை. மீண்டும் சேவல் கூவுவது காதுகளுக்குள் புகுந்து குடைந்தது.
அடுத்து, "எந்திரிங்கப்பாநேரமாச்சு"இது எங்கம்மாவின் குரல். எங்கம்மா திரும்பி வந்து தனித்தனியாக தொட்டு அசைத்து, "டேய் எந்திரிங்கடா சீக்கிரம்இன்னக்கி சனிக்கிழமை அந்த மனுஷனுக்கு கோபம் வந்துரும்" என்று எழுப்பினார்கள். எங்கப்பாவுக்கு கோபம் வந்தால் பின்னி பெடலெடுத்துருவார். இந்த சனியன் பிடித்த சனிக்கிழமை ஏந்தான் வருதோன்னு சலித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். என் தம்பிகள் இருவரும் மெதுவாக எழுந்தார்கள்.
போய் பல் துலக்கிவிட்டு வருவதற்குள்என் அப்பா லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு 3 மணப்பலகைகளை வைத்துக் கொண்டு ரேடியோ ரூமில் காத்திருந்தார். நாங்கள் மூவரும் உள்ளே நடுரூமில் மறைத்தும் மறைக்காமலும் எங்கள் கால்சட்டைகளைக் கழற்றிவிட்டு கோமணம் கட்டிக் கொண்டு வந்தோம். அப்போதெல்லாம் ஜட்டி கண்டுபிடிக்கலயா இல்லை ஜட்டி வாங்க முடியலையானு தெரியல.
நான் அப்ப ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சனிக்கிழமைகளில் எது நடக்கத்தவறினாலும் இது தவறவே தவறாது.
“ஏய் சுசிலா நல்லெண்ணெய எங்க வச்ச”?
எங்கப்பா நார்மலாக இருக்கும் போது எங்கம்மாவை குழந்தை என்றோ சுசி என்றோ குப்பிடுவார்கோபம் வரும்போதுதான் முழுப்பெயரான சுசிலா என்று கூப்பிடுவார்.
"ஒரு எடத்தில வச்சா அதை மாத்தி வைக்காதன்னு எத்தனை தடவை சொல்றது" இது அப்பா.
அம்மியை அரைத்துக் கொண்டிருந்த அம்மாஅப்படியே விட்டுவிட்டுஈரக்கையுடன் எழுந்து வந்து நல்லெண்ணெயை எடுத்துக் கொடுத்தார்.

மூவரும் போய் மணப்பலகையில் உட்காரவும்எங்கப்பா நல்லெண்ணெயை வாங்கிக் கொண்டு வந்தார்.
அப்போதெல்லாம் சனிக்கிழமையும் பள்ளி இருக்கும். எங்கம்மாஅப்பா இருவரும் ஒரே பள்ளியில் ஆசிரியர்கள். அது ஒரு நடுநிலைப்பள்ளிபெயர் இந்து நடுநிலைப்பள்ளி. அங்கேதான் நானும் என் தம்பிகளும் எட்டாவது வரை படித்தோம்.
எங்கம்மாவுக்கு காலையில் 4 மணிக்கு எழுந்தால்தான் வேலை முடியும். பாத்திரம் விளக்கி முடித்துசாணியைக் கரைத்து இருபுற வாசலையும் தெளித்துகோலம் போட்டு முடித்து உள்ளே வருவார்கள்.
அடுப்பைப்பற்ற வைத்து கருப்பட்டிக் காப்பி போட்டு முடிக்க, எங்கப்பா வெளியில் போய் காலைக்கடன்களை முடித்துவர சரியாக இருக்கும். வீட்டில் கழிவறை இருந்தாலும் ஒரு நாளும் அவர் அதை பயன்படுத்தமாட்டார்.
அவர் வந்தவுடன் ஆலங்குச்சியில் பல்துலக்கி முடிக்ககாப்பி ரெடியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கோபம் வந்துவிடும்.
இதற்கிடையில் எங்கம்மாஆட்டுரலில் தேங்காய் சட்னி ஆட்டிமுடித்துஇட்லியை அடுப்பில் வைத்துவிட்டு வந்து அம்மியில் கலர் கலராக மசாலாக்களை அரைப்பார்கள். சாதத்தை ஒரு புறம் வடித்துவிட்டு  சாம்பாரோபுளிக்குழம்போ வைத்துவிட்டு  பள்ளிக்கு ஓட வேண்டும். இதிலே அவர்களுக்கு பாவம் சாப்பிடமட்டும் நேரமிருக்காது. இடைவேளையில் வந்து ரசத்தைக் கூட்டிவிட்டுப் போவார்கள்.
ஆனால் சனிக்கிழமை கொஞ்சம் வித்தியாசம்.
நல்லெண்ணெயை எடுத்து எங்கப்பா என் தலையில் வைத்து கரகரவென்று தேய்த்து மடமடவென்று தலையில் தட்டினார். எனக்குப் பொறி கலங்கியது. எண்ணெய் கண்களுக்குள்  இறங்கி எரிச்சலைத்தந்தது. என் அடுத்த தம்பிஅதைப் பார்த்து விக்கித்து உட்கார்ந்திருக்கஎன் சின்னத்தம்பி வழக்கம்போல் அழத்துவங்கினான்.

எங்கப்பா நாக்கை மடித்து அவனைப்பேசாமலிரு என்று மிரட்டஅவன் மேலும் அழ ஆரம்பித்தான். அவனுக்கு எண்ணெய் வைக்க ஆரம்பிக்க, அவன் அழுகை உச்சஸ்தாயிக்கு போனது. உடம்பு முழுவதும் எண்ணெய் வைத்துவிட்டு கைகால்களை உருவிவிடுவார்.
எண்ணெய் வைக்கும் படலம் முடிய, எங்கப்பா இப்போது ஒவ்வொருவராக குளிப்பாட்ட ஆரம்பிப்பார்.
          அதற்கு சிறப்பாக தயாரிக்கப்பட்ட சீயக்காய் பயன்படுத்தப்படும். எங்கம்மா இதற்காக வருடமொருமுறை மதுரைக்குச் சென்று தேர்முட்டித் தெருவில் சீயக்காய் வாங்கி காய வைத்து பதப்படுத்திகஸ்தூரி மஞ்சள்கடலைப்பருப்புஉலர்ந்த எலுமிச்சைத் தோல்போன்ற பலவற்றை கலந்து அரைத்து சிறப்பாக செய்வார்கள்.  
மறந்துகூட கொஞ்சம் கண்ணைத் திறந்தாலும்சீயக்காய் உள்ளேபோய் எரியத்துவங்கும். கண்கள் கொவ்வைப் பழமாய்ச் சிவந்துவிடும். குளிச்சி முடித்து தலையை துவட்டி எங்கப்பா பவுடரை தலையிலும் கொஞ்சம் போட்டுவிடுவார். அன்றைக்கு ஸ்கூலுக்கு போனா என்னோட நண்பர்கள் குஷியாக தலையைத் தட்டுவார்கள். அப்போது பறக்கும் பாண்ட்ஸ் பவுடரைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்.
இதெல்லாம் தேவையா என்று பலமுறை நினைத்து நொந்திருக்கிறேன்.
எங்கப்பாவிடம் கேட்கத்தைரியம் இல்லாததால் ஒருநாள் எங்கம்மாவைக் கேட்டேன்.
அவர் சொன்னார், “ இது ரொம்பவும் நல்லதுப்பாமுடி நன்றாக வளரும்சீக்கிரம் நரைக்காது. கண்கள் ஒளி வீசும்உடம்பு சூடு தனிந்து குளிர்ச்சியாகும் என்று பல நன்மைகளை அடுக்கினார். அதன் பின்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த துன்பத்தைத் தாங்கிக் கொண்டேன்.   
அந்த நப்பாசை தப்பாசை என்பது பிறகுதான் தெரிந்தது. முப்பது வயசில கண்ணாடி போட்டு 35 வயசுல டை அடிக்க ஆரம்பிச்சு நாற்பது வயசுல முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சு ....ஹீம் .
நல்லெண்ணெய் நம்ம கணக்குல கெட்ட எண்ணெய் ஆயிப்போச்சேசேசேசே. இதுக்குத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டேன்.

தொடரும்

அறிவிப்பு .
வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடக்கும் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் அடியேன் கலந்து கொண்டு கவிதையொன்று வாசிக்கிறேன் .நான் திமுக காரன் இல்லை .ஆனால் கலைஞரைப்பிடிக்கும் .அருகில் வசிக்கும் நண்பர்கள் உங்களுக்கு விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். 

Image may contain: 1 person
Add caption

Thursday, July 18, 2019

காதல் என்பது சுகமா சோகமா ?


படித்ததில் பிடித்தது.
Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
வாசக சாலை வெளியீடு – மலர் விசு

Image result for Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
          
            இப்புத்தகத்தை எழுதிய இரட்டை எழுத்தாளர்களான மலர் – விசு ஆகியோரில் விசுவை எனக்கு ஒரு 20 வருடங்களாகத்  தெரியும். விசுவுக்கு முன்னால் அவருடைய மூத்த சகோதரரையும் தெரியும். நாடு விட்டு நாடு வந்தாலும் இந்தக் குடும்பத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஆனால் விசுவுடன் எனக்கு நெருக்கமான சிநேகம் ஏற்படக் காரணம் இருக்கிறது. அவர் அமெரிக்காவுக்கு வந்த முதல் நாளிலிருந்து அவரைத் தெரியும். (உடனே என்னுடைய வயதைக் கணக்குப்பண்ண ஆரம்பிக்காதீர்கள்) கலிபோர்னியாவில் இருக்கும் அவருடைய வீட்டிற்கும், நியூயார்க்கில் இருக்கும் என்னுடைய வீட்டிற்கும் நாங்கள் மாறி மாறி வந்து போயிருக்கிறோம்.
         தம்பி  விசுவை  CPA படித்த உயர் பதவியில் இருக்கும் ஒரு இளைஞனாக , சிறப்பான கணவனாக பொறுப்பான தந்தையாக, அவர் பங்கு கொள்ளும் ஆலயத்தின் தூணாக பாத்திருக்கிறேன். அதற்கும் மேலாக ஒரு சிறந்த வலைப்பதிவராக பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு விதத்திலும் என்னை வியக்க வைத்திருக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவர் எழுதிய முதல் புத்தகமான “விசுவாசத்தின் சகவாசம்”  வெளிவந்து சிறந்த வரவேற்பைப் பெற்றபோது என் மதிப்பில் மேலும் உயர்ந்தார். அதனைப்பற்றி நான் எழுதிய பதிவை இங்கே சுட்டினால் பார்க்கலாம். https://www.blogger.com/blogger.g?blogID=7175449567746300500#editor/target=post;postID=2560275818374627401;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=35;src=postname ஆனால் “Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்” என்ற நாவல் முற்றிலுமாக வேற லெவல் என்று சொல்லும்போது எனக்குள் வியப்பை மீறிய ஒரு பொறாமை  வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
          இந்தப் புத்தகத்தில் வரும் நாயகியான கிமுவை , நாயகன் கிச்சா எப்படி ஆச்சர்யப் படுத்துகிறானோ அதுபோலவே இதைப் படிப்பவர்களையும் கிச்சா ஆக்கரமிப்பு செய்வது நம்மை அறியாமலேயே நிறைவேறுகிறது. அருமையான புத்தகத்தைப் படித்து முடித்த ஆத்ம திருப்தியுடன் இந்தப்பதிவை எழுதுவதற்கும் கிச்சாதான் காரணம்.
          இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் வரும் காதலோ, புத்தகத்தில் படிக்கும் காதலோ எனக்கு பெரும் அயர்வைத் தருவதால், ஒருவேளை நமக்கு வயதாகி விட்டதோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அந்த மென்மையான உணர்வுகள் என்றைக்கும் சாகாது என்பது எனக்குப் புரிந்து போனது.
          பள்ளி, கல்லூரி காலங்களில் எதிர் பாலினம் மேல் ஈர்ப்பு ஏற்படுவது  இயற்கை. இவற்றில் சொல்ல மறந்த, சொல்லப்  பயந்த, சொல்லி சொதப்பிய, கனவோடு முடிந்த, கண்கள் மட்டும் பேசி முடித்த, நிறைவேறி வெற்றி பெற்ற, நிறைவேறி தோல்வியடைந்த, நிறைவேறாமல் வெற்றி பெற்ற, இப்படிப் பலக் காதல்களைப் பார்த்திருக்கலாம். இவற்றில் பல நினைத்துப் பார்த்தால் சிரிப்பை வரவழைப்பவை. ஒரு சில தான் சோகத்தையோ கண்ணீரையோ வரவழைப்பவை. இதில் இந்த நாவல் இரண்டாவது ரகம்.    
          பெரும்பாலான காதல் கதைகளில் அது சினிமாவாகட்டும் அல்லது நாவல்கள் ஆகட்டும், வில்லன் வடிவில் காதலுக்கு எதிர்ப்பாக சிலர் இருப்பர் சிலர் முளைப்பர். அப்படி எதுவும் எவரும் இல்லாத இந்த ஆச்சரியக் கதையில் நாயகனும் நாயகியுமே அவரவர்க்கு எதிரியாக இருக்கிறது ஒரு நிலையில் வாசிப்பவர்களை சோகத்தில் தள்ளிவிடுகிறது. எனக்கும் அப்படி ஒரு வருத்தம், சோகம், கோபம், இயலாமை ஏற்பட்டதை நினைக்கும் போது இந்தப் புத்தகம் கொடுத்த வாசிப்பனுபவம் இணையில்லாத ஒன்று.
          ஆங்கிலம் கலந்த உரையாடல்கள், இளமைத் துடிப்புள்ள கதாபாத்திரங்கள், ரசிக்க வைக்கக் கூடிய கதை நகர்வுகள், தூக்கலாக இருக்கும் நகைச்சுவை ஆகியனவற்றை படிக்கும்போது சுஜாதா எழுதிய புத்தகங்கள் மனதுக்குள் வந்து போகின்றன. இந்தப் புத்தகமும் சுஜாதா எழுதிய “பிரிவோம் சந்திப்போம்” நாவலில் ஆரம்பித்து அதே தலைப்பில் முடிகிறது.
          தலைப்பிலிருந்தே ஒரு எதிர்பார்ப்பு ஆரம்பமாகி விடுகிறது. விஸ்வநாதனுக்கும் ரிச்சர்ட்டுக்கும் இருக்கும் பொருந்தாநிலை, அதன் கீழேயுள்ள 1920-1983 என்று வர வேண்டிய ஆண்டு 1983-1920 என்று வருவது என்று நம்முடைய ஆவலைத்தூண்ட, உள்ளே படிக்க ஆரம்பித்தால் நாவல் உங்களை கால எந்திரம் போல  எண்பதுகளுக்கு  இழுத்துச் சென்று அங்கேயே உங்களை உலாவ விடுகிறது. ஒரு பீரியட் நாவலுக்கு இருக்க வேண்டிய அனைத்தையும் ஆசிரியர் புகுத்தாமல் புகுத்தி , ஒரு தேர்ந்த ஆர்ட் டைரக்டர் போல்  செயல்பட்டிருக்கிறார். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை, உச்சத்திற்குப் போன இலங்கைத் தமிழர் பிரச்சனை, மத்திய மாநில அரசுகளில் நடந்த மாற்றங்கள், கிரிக்கெட் போட்டிகள் போன்ற பல விவரங்கள் கதையோடு ஒட்டி வரும்போது ஆசிரியர் நம்மை கையைப் பிடித்து அழைத்துச் சென்று அந்தக் காலக்கட்டங்களில் நடைபோட வைக்கிறார். நாவலைப் படித்து முடித்து விட்டாலும் அந்தக் காலக் கட்டதிலிருந்து வெளியே வர கொஞ்சம் காலம் பிடித்தது. அப்படியே இருந்து விடக் கூடாதா? என்றும் தோன்றியது,.
          எண்பதுகளிலும் 90களிலும் கல்லூரியில் இருந்த நண்பர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் அது அவர்களை ஆட்கொண்டுவிடும் என்பது திண்ணம். குறிப்பாக அந்தக்கால கட்டத்தில் இளைஞராக இருந்தவர்கள் கூட சேர்ந்து பயணித்தது இளையராஜாவின் இசை. இளையராஜாவின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நினைவலைகளை எழுப்பும் ஆற்றல் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆசிரியர் அப்படிப்பட்ட பாடல்களை  ங்காங்கே  சேர்த்திருப்பது மனதில் பதுங்கியிருந்த நுண்ணிய உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.  
          ஒரு புதினத்தைப் படிக்கும்போது படிப்பவர், அந்தப்புனை கதையின் யாராவது ஒரு கதாப்பாத்திரத்தோடு தன்னை இணைத்துப் பார்த்து உணர ஆரம்பித்துவிட்டால் அதுதான் அந்தக்கதை எழுதிய ஆசிரியரின் வெற்றி . விசு அந்த விதத்தில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.  
          புத்தகத்தில் இயல்பாகவும் இயற்கையாகவும் இழையோடும் சிலர் நகைச்சுவை சமயத்தில் புன்னகையையும், சில சமயங்களில் சிரிப்பையும்,  பல சமயங்களில் வெடிச்சிரிப் பையும் வரவழைத்து விடுகிறது. உதாரணத்திற்கு எப்பொழுதும் பாட்டை நடுவிலிருந்து பாடுவது, எலிமாம்ஸ்சின் பலமொழி வித்தைகள், சுகவனம் என்ற பாத்திரம், கிணற்றில் நடக்கும் டைவ் நிகழ்வு , வேலூரைக் குறித்துச் சொல்லும் போது வெயிலும் வெயில் சார்ந்த இடமும் என்று சொல்வது எனப்பலவற்றைச் சொல்லலாம்.          அதோடு 80களிலிருந்து 20-களுக்குச் சென்று நடந்த கலப்புத் திருமணம் ஒரு நல்ல இணைப்பு. ஆசிரியர் பல இடங்களில் நல்ல ப்புவமைகளைப் பயன்படுத்தியிருப்பது வாசிப்பு அனுபவத்தை மேலும் மெருகாக்குகிறது. உதாரணமாக “மயில் பாம்பைப் பார்ப்பது போல” போன்றவை. இதற்கு நடுவில் வேலூரின் கிறித்தவக் கல்லூரி வந்த கதை, டாக்டர் ஐடா ஸ்கடர்  பற்றிய குறிப்பு, வேலூரில் நடந்த  சிப்பாய்க்கலகம் போன்றவை ஆங்காங்கே திணிக்காமல் வருவது சிறப்பு.
          கிறிஸ்மஸ் கால பாடகர் பவனி , அமிர்த்தி காட்டு நிகழ்வுகள், வேட்டைக்குப்போதல், பாலாறு, கிணற்றுக்குளியல் என்று பல இயற்கையை ஒட்டிய நிகழ்வுகள் , கிரிக்கெட் போட்டித் தகறாறுகள், லேடீஸ் காலேஜ் Quiz போட்டி என பல துணை நிகழ்வுகள் கதைக்கு மெருகூட்டுகின்றன.     
          கடைசியில்  ஒரு வழியாக ,எதிர்பார்த்த எதிர்பார்க்காத திருப்பங்களுடன் கிச்சாவும் கிமுவும் இணைய வேண்டும் என்று கிச்சாவின் அம்மா, அத்தை, கிமுவின் அப்பா, நண்பர்கள் என பல பேர் ஆசைப்பட, நானும் ஆசைப்பட  அட என்னதான் நடந்தது என தெரியவேண்டுமென்றால் புத்தகத்தை வாங்கிப்படியுங்களேன் .இதோ இங்கு சுட்டுங்கள்  https://www.commonfolks.in/books/d/mrs-viswanathan-richards-1983-1920 .
         மொத்தத்தில் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்த விசு மற்றும் மலருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக தம்பி விசு உனக்கு எழுத்தும் நகைச்சுவையும் நன்றாகவே வருகிறது. இன்னும் நிறைய உன்னிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.   

முற்றும்

Monday, July 15, 2019

பரோட்டாவின் கதை !!!!!!!!



வேர்களைத்தேடி பகுதி 43
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
          
           மதுரைப்பக்கம் பரோட்டாவை புரோட்டா என்றுதான் சொல்வார்கள் என்பதால் நானும் அப்படியே சொல்கிறேன் .

Image result for புரோட்டா
              பொதுவாக புரோட்டாவை மைதா மாவில்தான் செய்வார்கள். சமீபமாக கோதுமை புரோட்டாக்களும் வந்துவிட்டன. முக்கியமாக என்னைப்போன்ற  நடுத்தர மற்றும் ஏழை மக்கள் புரோட்டாவை விரும்பிச் சாப்பிடுவதற்கான காரணம் விலை குறைவு மற்றும் மதியம் 2 புரோட்டா சாப்பிட்டால் இரவு வரை பசி தாங்கும். வயிறு கல்லைத்தின்றது போல் கம்மென்று இருக்கும். மதுரையிலும் அதனருகில் இருக்கும் மற்ற பகுதிகளிலும், புரோட்டா ஆர்டர் செய்தால், அதனைக் கொண்டு வரும் சர்வர்கள் பிய்த்துப்போட வேண்டும். சூடான கல்லிலிருந்து எடுக்கும் போதே புரோட்டா மாஸ்டர்கள் அதனை செங்குத்தாக நிறுத்தி மேலும் கீழும் தட்டி அதனை லூஸாக ஆக்கித்தான் தருவார்கள். அது மிகுந்த சூடாக இருக்கும். எனவே பெரும்பாலும் அப்போதெல்லாம்  எவ்வளவு அழுக்காக இருக்கிறது, கைகள் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்று எப்போதும் பார்த்ததில்லை. அவர்களும் இரு கைகளுக்கு நடுவில் வைத்து மேலும் கீழும் இரண்டு தட்டுதட்டி பிய்த்துப் போடுவார்கள். அது இலையில் பல பகுதிகளாய் பிரிந்து கீழே விழும். ஆனால் நாங்கள் அதனையும் இன்னும் சிறிது சிறிதாக பிய்த்துவிடுவோம். அதன்பின் சூடாக அதன் மேல் சால்னாவை ஊத்தி புரோட்டாவின்   விள்ளல்களை நனைய விடவேண்டும். அது நனைந்து ஊறி சால்னாவை விழுங்கிவிடும். இப்போது திரும்பவும் சால்னாவை ஊற்றி கலகலவென்று பிரட்டி அப்படியே சால்னா சொட்ட வாயில் போட்டால் திவ்யமாக இருக்கும்.
          தொட்டுக்கொள்ள காசு இருந்தால் ,வெங்காயம் சேர்த்த மட்டன் சுக்கா வருவல், அல்லது கோழி 65 அல்லது காசு கொஞ்சம் குறைவாக இருந்தால் முட்டைப்பொரியல் ஆகியவை சிறந்த காம்பினேஷன்.
Related image

          இதில் முக்கியமாக நிதானமாக நன்றாக மென்று சாப்பிட  வேண்டும். அப்படியே விழுங்கக்கூடாது. ஆறிப்போனாலும் நன்றாக இருக்காது. ரொம்ப சூடாக இருந்தாலும் ருசி தெரியாது. எனவே இளஞ்சூட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலையில் இருக்கும்போது ஆறிவிட்டால் தயங்காமல் சர்வரைக் கூப்பிட்டு சூடாக சிறிது சால்னாவை மேலே ஊற்றினால் போதும் திரும்பவும் சூடு கிடைத்துவிடும்.
          நன்றாக இருக்கிறது என்பதற்காக நிறைய சாப்பிடக் கூடாது அதோடு புரோட்டா சாப்பிடுகிற நாளில் கொஞ்சம் சீக்கிரமாக சாப்பிட்டு விடவேண்டும். இரவு 10 மணிக்குச் சாப்பிட்டுவிட்டு 10.30 க்கெல்லாம் படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு முடித்து குறைந்தது மூன்று மணிநேரம் கழித்துத்தான் தூங்கச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் செமிக்காது அடுத்த நாள் படுத்திவிடும். 
          இந்த பரோட்டா தமிழ்நாட்டுக்கு எப்படி வந்ததுன்னு சொல்கிறேன். உண்மையைச் சொன்னா இது தமிழ் நாட்டிலிருந்து தான் மற்ற ஊர்களுக்குப் போயிருக்கிறது.
          தமிழ் நாட்டின் தூத்துக்குடியின் துறைமுகத்தில் இலங்கையைச் சேர்ந்த மூர் என்று சொல்லக்கூடிய தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதர்கள் தான் இந்தப் பரோட்டோவை அறிமுகம் செய்தனர். பின்னர் இங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய  பகுதிகளுக்குச் சென்றது. இங்கிருந்துதான் மலேசியாவுக்குச் சென்றது. அவர்கள் அறிமுகம் செய்து வைத்ததுதான் சால்னா என்று சொல்லக்கூடிய எலும்புக்குழம்பு. சர்வர் நன்கு தெரிந்தவராக இருந்தாலோ அல்லது டிப்ஸ் அதிகம் கொடுத்தால் மட்டும்தான் சால்னாவின் அடியில் இருக்கும் சில எலும்புத்துண்டுகள் கிடைக்கும். இல்லையென்றால் வெறும் குழம்புதான்.

          அப்போது தேவதானப்பட்டியில் ஒவ்வொரு கடையும்  வேறு வேறு பண்டங்களுக்கு பெயர் பெற்றிருந்தன.
          இட்லி சட்னி என்றால் ஆச்சி கடை அல்லது சுப்பையா கடை. மெயின் ரோட்டிலிருந்து காந்திமைதானம் போகும் வழியில் மூலையில் சாவடியின் அருகில் இருந்தது சுப்பையா கடை. இங்கு உட்கார்ந்து சாப்பிட முடியாதென்றாலும், ஆச்சி கடையில் இட்லி கிடைக்கவில்லை யென்றால் இங்குதான் பார்சல் வாங்குவோம்.
          தேவி விலாஸ் கடையில் தோசையும், பூரியும் நன்றாக இருக்கும். ராகவன் நாயர்  கடையில் போண்டா,  பஜ்ஜி, மற்றும் வடை 11 மணிக்கு சூடாகக் கிடைக்கும். எப்போதும் இங்குதான் வாங்குவோம். அதோடு மேட்டு வளைவிலிருந்து ஒருவர் தள்ளு வண்டியில் மாலை நேரத்தில் மிக்சர், ஓமப்பொடி, பக்கோடா ஆகியவற்றை விற்பார். பெயர் மறந்து விட்டது. நண்பர் கண்ணனுக்கு ஞாபகம் இருந்தால் கீழே குறிப்பிடவும். அவருடைய தள்ளுவண்டியில் வாங்கிச்சாப்பிட்ட பக்கோடாவுக்கு இணையாக வேறெங்கிலும் இதுவரை நான் வாங்கிச் சாப்பிட்டதில்லை.
அதுதவிர மாலை நேரங்களில் சுப்பையா கடையருகில் கிடைக்கும் பருத்திப் பால் பாயாசம். அங்கு சாப்பிட்டதோடு வேறெங்கும் அதன்பிறகு அதனை சாப்பிட்டதேயில்லை.
          புதன் கிழமை சந்தைகளில் கிடைக்கும் சீரணி. அதுவும் எங்கும் கிடைத்ததில்லை. சிறிது மணல் கலந்திருந்தாலும் கருப்பட்டியில் செய்யப்பட்ட இந்தப்பண்டம் மிகவும் சுவை மிகுந்தது.  இவையெதுவும் இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
          இவை தவிர இந்து நடுநிலைப்பள்ளியில் முன்னால் விற்கும் கல்லாமை மாங்காய், கொடை க்கானலிலிருந்து வரும் புளிப்பான பீச்சஸ் பழங்கள், பேரிக்காய்கள், முருகமலைக் காட்டிலிருந்து வரும் இலந்தைப் பழங்கள், நாவற் பழங்கள், ஈச்சம்பழம், வெள்ளரிப் பழம், பனம்பழம், முந்திரி, கொடுக்காப்புளி, அரை நெல்லிக்காய், முழு நெல்லிக்காய், புளியம்பழம், கோவைப்பழம், பக்கத்தில் பெரியகுளம் தோட்டக்கலை நிறுவனத்திலிருந்து வரும் வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா, ராவுத்தர் தோட்டத்திலிருந்து வரும் மணம்  மிகுந்த காசா லட்டு மாம்பழங்கள், வாடிப்பட்டியிலிருந்து வரும் திராட்சைப்பழங்கள், விளாம்பழம், நுங்கு என்று வாயில் எச்சிலை ஊறவைக்கும் பழங்களில் பலவற்றைச் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன.
          இப்படி கிராமத்து நினைவுகளோடு அதன் மண்ணின் மணம், மண்ணின் சுவை இவையெல்லாமே நினைத்துப் பார்த்தால் என்றென்றும் இனிக்கும் நினைவுகளே.
          இந்த நினைவுகளைத் துறந்துவிட்டு நிறையப்பேர்வெளிநாடுகளில் வாழ முயல்கின்றனர். அவர்கள் தங்கள் அடையாளங்களை அழிக்க நினைப்பவர்கள். அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். நாம் நம் நாட்டை, நம் கிராமத்தை, நம் மக்களை, நம் மொழியை நம் சுவைகளைப் போற்றுவோம், மனமகிழ்வோம்.  
          மக்களே மேலே ஏதாவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில்  தெரிவிக்க வேண்டுகிறேன். என் கிராமத்து நினைவுகளில் இன்னும் ஏதாவது இருக்கிறதா என மேலும் தோண்டிப் பார்த்து எடுத்துக் கொண்டு மீண்டும் வருகிறேன்.
-தொடரும்.

பின்குறிப்பு :
நண்பர்களே அதிக வேலைப்பளு மற்றும் இன்னொரு  பட்டப்படிப்பு படிக்க வேண்டியது இருந்ததால் , உங்களை ரொம்ப நாள் சந்திக்கமுடியவில்லை .மன்னிக்கவும் .என்னை மறந்திருக்க மாட்டீர்கள்  என நினைக்கிறேன் .இனிமேல் முடிந்த அளவுக்கு அடிக்கடி வருவேன்.
பரதேசி & நியூயார்க்