Thursday, August 30, 2018

அசத்திய அந்தோணிதாசனும் சொதப்பிய கார்த்திக்கும் !!!!


FETNA -2018 பகுதி 5.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_23.html
அல்லது தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் கவிதைகளை மட்டும் நான் உன்னிப்பாக கவனித்திருக்கலாம்.
ஹார்வர்டு தமிழ் இருக்கையின் வெற்றிவிழா நடந்தது. உலகத்தமிழர் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் அதிசயங்கள் நடத்தலாம் என்பது இதன் மூலம் விளங்கியது. இந்தக்குழு இதோடு விடுவதாய்த் தெரியவில்லை.  உலகின் அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்களியும் தமிழ் இருக்கைகளை அமைத்துவிட்டுத்தான் ஓய்வார்கள் போலத்தெரிகிறது. இதோ அடுத்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் தமிழ் இருக்கை அமைக்க உழைக்கத் துவங்கிவிட்டனர். இதில் முக்கியமான பணியாற்றிய மருத்துவர் ஜானகிராமன் மற்றும் மருத்துவர் சுந்தரேசன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.    
சிறிய வயதிலேயே தன்னுடைய முதல் நாவலான காவல் கோட்டத்திற்கு சாகித்ய அக்காடெமியின் விருது பெற்ற சு.வெங்கடேசன் கீழடி அகழ்வாராய்ச்சியைக் குறித்தும் தொன்மையான தமிழர் வரலாறு எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது மறைக்கப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கினார். வெளிநாடுகளில் தமிழ் இருக்கை அமைப்பதோடு வெளிநாடு வாழ் தமிழரின் கடமை முடிந்துவிடாது என்பதை உணர்த்தும் போக்கில் அந்த உரை அமைந்தது. தமிழகத்திலும் ஒரு கண் இருக்க வேண்டும்.  இந்த நாவலைப் படித்து நான் எழுதிய உரையைப் படிக்க இங்கே சுட்டவும். http://paradesiatnewyork.blogspot.com/2014/02/blog-post_19.html
இதற்கிடையில் பக்கத்தில் நடந்த இணை நிகழ்வில் திரு. மம்மது அவர்களின் இசை உரையும் நாடகம் பற்றிய பேராசிரியர் ஞானசம்பந்தனின் உரையும் கேட்டு மகிழ்ந்தேன். தமிழிசை மற்றும் கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற மம்மது தன்னுடைய பேத்தி பாடல்களைப் பாட அதனின் ராக தாளங்களை விவரித்துப் பேசினார்.
இவரும் பேராசிரியர் மருதநாயகமும் ஃபெட்னா முடிந்த கையோடு நியூயார்க் வந்து நியூயார்க் தமிழ்ச்சங்கம் ஏற்பட்டு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். இது எங்களுடைய ஆலயமான இம்மானுவேல் லுத்தரன் திருச்சபையின் அரங்கில் நடந்தது.
பின்னர் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. பாடகர் கார்த்திக், டிரம்ஸ் சிவமணி மற்றும் பாடகி சத்திஸ்ரீ கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி, பிரபலமான பேஸ் கிட்டார் வாசிக்கும் கீத் பீட்டர்ஸ் இதற்கு வாசித்தது ஆச்சரியம் அளித்தது.
திரும்பிப்பார்த்தால் அரங்கு முதன்முறையாக நிரம்பி வழிந்தது. எந்த இணை நிகழ்வும் இல்லாமல் இளைஞர், சிறியவர்கள் தவிர இதற்கென்றே வந்தவர்கள் போல ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
பாடகர் கார்த்திக்கின் எனர்ஜியை நான் நேரில் சிலமுறை பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகள் முன்பு சென்னை காமராஜர் அரங்கில் லஷ்மண் ஸ்ருதி அவர்கள் வழங்கிய "சென்னையில் திருவையாறு" என்ற நிகழ்ச்சியில் கார்த்திக் வழங்கிய கர்நாடக இசைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அவரது ஆலாபனை மிக நீண்டது. அதன்பின்பு நியுஜெர்சியில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெகுவாக ரசித்தேன். http://paradesiatnewyork.blogspot.com/2014/06/blog-post_12.html
ஆனால் இந்த முறை கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி என்னைக் கவரவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் சில வருடங்களுக்கு முன்னர் பாடிய அதே பாடல்களை அதே ஸ்டையில் பாடியதால் வெறுத்துவிட்டேன். அவர் பாடிய பாடல்கள் மட்டுமல்ல சில  பழைய பாடல்களும் அதே பாடல்கள் வந்தன. ஓகே கண்மணியில் வந்த சினாமிக்கா தவிர எல்லாம் பழையன. சக்திஸ்ரீ யாவது வேறு பாடல்கள் பாடுவாரென நினைத்தால் அவரும் அதே பாடல்களை பாடியதால் அயர்ந்துவிட்டேன்.
ஆனால் சிறப்பம்சமாக டிரம்ஸ் சிவமணி வந்து கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அவர் கொண்டு வந்திருந்த பல இசை கருவிகளை வாசித்து அசத்தி விட்டார். இத்தனை தோல் கருவிகளை எப்படிக்கொண்டு வந்தார் என்பது ஆச்சரியமாக இருந்தது. சிவமணியும் இல்லையென்றால் சுத்தப்போர்தான். ஆனால் கார்த்திக் சக்திஸ்ரீ இசை நிகழ்ச்சியை முதன்முறையாகப் பார்த்தவர்கள் மிகவும் ரசித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதோடு அன்றைய நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
அந்தோணிதாசன்
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 1, 2018 காலையில் ஃபெட்னா அமைப்பின் நிர்வாகக்குழு கூடியது. அதில்  அடுத்த தலைவராக வாஷிங்டன் DC பகுதியைச் சேர்ந்த சுந்தர் குப்புசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலோ சண்டை சச்சரவோ இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

நான்காவது நாளில் முக்கிய நிகழ்வாக பிரபல நாட்டுப்புறப்பாடகர்கள் ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் அந்தோணிதாசன் அளித்த இசை நிகழ்ச்சி பட்டையைக் கிளப்பியது. நாதஸ்வரம் இல்லாமல் சீவாளி போன்ற ஒன்றை வாயில் வாசித்தது சோபிக்கவில்லை. நாதஸ்வரமும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்தோணிதாசன் பாடி மிகப்பிரபலமடைந்த சொடக்கு மேலே சொடக்கு போடுது என்ற பாடலையும் பாடினார். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கலியமூர்த்தி  அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.

Image result for kaliyamoorthy ips
கலியமூர்த்தி 
இன்னொரு அதிரவைத்த நிகழ்ச்சி நர்த்தகி நடராஜ் அவர்களின் பரதநாட்டியம். வெகு சிறப்பாக இருந்தது. அவர் நாட்டியத்திற்கு வந்த கதை நெகிழ வைக்கும் கதை.
Related image
நர்த்தகி நடராஜ்
அடுத்து மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக முருக பூபதியின்மணல் மகுடி நாடக நிலம்” வழங்கிய பூழிப்பாவை நடைபெற்றது. தெரு நாடகம் (Street Theater) அடிப்படையில் 80 களில் நான் நிஜ நாடக இயங்கங்களில் பெரிதும் கலந்து கொண்டு இருக்கிறேன். இப்போது அது மிகச்சிறப்பான வடிவத்தில் உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அதனைப்பற்றி இன்னும் தெளிவாக அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.
தொடரும்

Monday, August 27, 2018

பரதேசி செய்த கெட்ட செயல் !!!!!!


Blind Creep Ndash Usedwigs
வேர்களைத்தேடி பகுதி 22
  இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_6.html
அப்போது காலை 10.20,  என் அம்மா வரும் நேரம் 10:30 மணி  எனக்கு இருந்தது 10 நிமிடம் மட்டுமே. முன் கதவைப் பூட்டினால் சந்தேகம் வரும் என்பதால் பூட்டவில்லை. ஜன்னலை மூடிவிட்டு டப்பாக்களை  அடுக்கிவிட்டு முன்னறைக்கு வர மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் தான். ஜன்னலை லேசாக திறந்தபோது மெலிதான வெளிச்சக் கீற்று உள்ளே வந்தது. உள்ளே கானும் அவன் மனைவியும்....
இருந்தார்கள். கான் ஒரு ரத்துண்டுடன் அமர்ந்திருக்க கானின் மனைவி அவன் முன்னால் தட்டை வைத்து இட்டலிகளைப் பரிமாறினாள். புதினா சட்னியில் விண்ட இட்லிகளை நன்கு தோய்த்து ஊட்டி விட்டாள். பின்னர் கானும் இட்லிகளை அதே மாதிரி ஊட்டி விட்டான். (ஏலேய் பரதேசி நீ இவ்வளவு மோசமானவனாய் இருந்திருக்கியே ? )
கானின் மனைவி தான் சாப்பிட்டுவிட்டதாகக் கூறினாலும் கான் விடவில்லை. அங்கு தெரிந்த காட்சிகளில் பச்சையாகத் தெரிந்தது சட்னி மட்டும் தான். மிகவும் மெதுவாக ஜன்னலை மூடிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டேன். அதில் தெரிந்தது நிம்மதியா அல்லது ஏமாற்றமா என்று சொல்லத் தெரியவில்லை.

டப்பாக்களை அடுக்கி வைத்துப்பின் முன்னால் வந்து கதவைத் திறந்து வைத்துவிட்டு வழக்கம்போல் ஈஸி சேரில் உட்கார்ந்து கால்களை மேலே போட்டுவிட்டு புத்தகத்தைத் திறக்கவும் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. கலவரமுகத்துடன் வந்தவர் என்னை ஈஸி சேரில் பார்த்ததும் நிம்மதியடைந்தது போல் தெரிந்தது.  "நூலகம் போகவில்லையா" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவர் நேராக சமையலறைக்குப் போனார்கள். "இன்னும் படித்து முடிக்கவில்லையம்மா" என்று சொன்னேன்.
ஒரு 15 நிமிடம் கழித்து வந்த பரபரப்பு மாறாமல் வெளியே வந்தார்கள். முகம் மீண்டும் கலவரமாய் இருந்ததன்  காரணம் தெரியவில்லை.
மதியமும் வழக்கம்போல் சாப்பாடு உண்ண அனைவரும் வந்து சென்றனர். அம்மாவுக்கும் எனக்கும் பெரிதாக பேச்சு ஒன்றும் நடக்கவில்லை. கொஞ்சம் உம்மென்று இருந்தது போலவே எனக்குத் தெரிந்தது. ஏனென்று தெரியவில்லை.
அப்பா மாலை ஊமை ஆசாரியுடன் வந்தபோது கூட எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஊமை ஆசாரி நேராக சமையலறைக்குச் சென்று குறுக்குச் சட்டங்கள் போட்டு ஜன்னலை நிரந்தரமாக மூடியபோது தான் எனக்குத் தெரிந்தது. ஜன்னலைத் திறந்ததை அம்மா எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்கள் என. என் அப்பாவிடம் சொல்லி விடுவார்களோ என்று நான் மிகவும் பயந்தேன். ஆனால் அம்மாவோ அப்பாவே அதனைப்பற்றி என்னிடம் கேட்கவேயில்லை.
அம்மா கண்டுபிடித்தாலும் அப்பாவிடம் சொல்லவில்லை என்று புரிந்து கொண்டேன். ஏனென்றால் அப்பா அப்படியெல்லாம் இருப்பவரல்ல. தெரிந்தால் அடி வெளுத்திருப்பார். ஆனால்  9ம் வகுப்புப் படிக்கும் போது அடிவாங்கிய பின் அடிப்பதை முழுவதுமாய் நிறுத்திவிட்டார்.
அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது என்று யோசித்து யோசித்து  தலை வலித்தது. ஜன்னலைச் சரியாகத் தான் மூடினேன். டப்பாக்களையும் திரும்ப அடுக்கி வைத்துவிட்டேன். அம்மா வரும் போது கதவு திறந்தே இருந்தது. நானும் ஈஸி சேரில் புத்தகம் படித்துக் கொண்டுதான் இருந்தேன். பிறகு எப்படி?.
அப்போதுதான் சட்டெனத் தோன்றியது. அம்மா முன் ஜாக்கிரதையாக டப்பாக்களை ஒரு வரிசைக் கிராமத்தில் அடுக்கியிருக்க வேண்டும். அதனைக் கலைத்தால் கண்டுபிடிக்கும் அளவுக்கு அந்த வரிசையை அமைத்திருக்க வேண்டும்.எவ்வளவு கில்லாடி பாருங்கள். நானும் அது தெரியாமல் டப்பாக்களை எடுத்து என் பாட்டுக்கு அடுக்கி வைத்துவிட்டேன். அதனால்தான் அம்மாவுக்குத் தெரிந்து போனது.
இரண்டு மூன்று நாள் அம்மாவைப் பார்க்கவே ஒருமாதிரி இருந்தது. அதற்குள் லீவு முடிய தம்பித்தோட்டம் விடுதிக்கு கிளம்பி ச் சென்றுவிட்டேன்.
அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் வெட்கமாக இருக்கிறது.
நான் ஒன்பதாவது படித்தபோது நடந்த இன்னொரு சம்பவத்தைச்  சொல்கிறேன். தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் நடந்து செல்லும் போது மேட்டு வளைவு தாண்டி வருவது போலீஸ் ஸ்டேஷன். தேவதானப் பட்டி மற்றும் பக்கத்தில் இருந்த பதினெட்டுப் (?) பட்டிகளுக்கும் அதுவே காவல் நிலையம். அதில் சப் இன்ஸ்பெக்டர் என்று அழைக்கப்படும் உதவி ஆய்வாளர்தான் தலைவர். அதன் பக்கத்தில் பிள்ளையார் கோவில் இருக்கிறது. அதன் பின்புறம் ஊரின் பூங்கா. இந்து நடு நிலைப்பள்ளியில் படிக்கும் போது வருட முடிவில் இங்குதான் வந்து குரூப் போட்டா எடுப்பார்கள். வத்தலக்குண்டிலிருந்து முத்து ஸ்டூடியோக்காரர் வந்து எடுப்பார். அந்தப்பார்க்கின் எதிரில்தான் எங்கள் ஊரின் வாரச் சந்தை புதன்கிழமை தோறும் கூடும். அந்தச் சந்தையைப் பற்றிப் பிறகு கூறுகிறேன். சந்தை இல்லாத நாட்களில் உள்ளே இருக்கும் புளிய மரத்தோப்பில் என் நண்பர்கள் கூடி சீட்டு விளையாடுவார்கள். காசெல்லாம் இருந்தாலும் சும்மாதான் விளையாடுவார்கள். எனக்கும் சில முறை சொல்லித்தர முயன்றாலும் என்னவோ கற்றுக் கொள்ள இஷ்டப்படவேயில்லை. இன்றுவரை சீட்டு விளையாடத் தெரியாது. எனக்குள்ள "தெரியாது" என்ற தலைப்பில் உள்ள நீண்ட வரிசையில் சீட்டு விளையாடுவதும் ஒன்று. ஒரு நாள் கண்ணன் ஓடிவந்தான். "என்னடா இப்படி ஓடி வர்ற" என்று கேட்டேன்." சேகர் நம்ம நண்பர்களை போலீஸ் பிடிச்சிட்டாய்ங்க."
Image result for தேவதானப்பட்டி காவல் நிலையம்

"என்ன போலீஸ் பிடிச்சிட்டாய்ங்களா?" இவிங்க என்னடா பண்ணாங்க?
"ஒண்ணும் பண்ணலடா, சந்தையில சீட்டு விளையாடிட்டு இருந்தாய்ங்க".
"காசு வச்சு விளையாண்டாய்ங்களா?"
“தெரியலடா ஆனா, போலீஸ் பிடிச்சுட்டுப் போய்ட்டாங்க"
வாடா போய்ப் பார்ப்போம்" என்று சொல்லி இருவரும் விரைந்து கரட்டிலிருந்து  இறங்கி பார்க்குக்குள் நுழைந்தோம். பார்க்கிலிருந்த சுவர்வழியே எட்டிப்பார்த்தோம்.
அங்கே முனியாண்டி, முத்தலீப், கன்னையா உள்ளிட்ட ஆறு பேர் குத்தவச்சு உட்கார்ந்திருந்தாய்ங்க. பக்கத்தில் ஓரிரண்டு போலீஸ் கையில் லத்தியோடு. அவங்களை விசாரித்தார் போல தெரிந்தது. கொஞ்சம் காதைத் தீட்டிட்டு கேட்டோம். அதற்கப்புறம் நம்ம பையன்களை   போலீஸ் காரங்க செய்யச் சொன்ன செயல் எங்க இரண்டு பேரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
- தொடரும்.

Thursday, August 23, 2018

சுப வீரபாண்டியனின் பேச்சும் ஞான சம்பந்தனின் வீச்சும் !!!!!


Fetna – 2018 பகுதி 4
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post.html
Image result for fetna 2018 dallas

வெள்ளியன்று நிகழ்ச்சிகள் முடிந்து சனிக்கிழமை காலை கிளம்பி ரெடியாகி அரங்குக்குச் சென்றோம். அருமையான காலை உணவு முடிந்து அரங்கில் அமர்ந்தோம். அரங்கு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. வட்ட மேஜைகள் அகற்றப்பட்டு வெறுமனே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பேரவையின் ஆண்டு விழாவின் பொதுநாளான அன்று மிகத்திரளான தமிழ் மக்கள் வந்திருந்தனர். மொத்த எண்ணிக்கை 5500ஐத்  தாண்டி விட்டது என்று யாரோ சொன்னார்கள். அன்றைய நாளில் நடந்த நான் ரசித்த முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறேன் .
இந்தியாவிலிருந்து வந்திருந்த நாதஸ்வர தவில் குழு மங்களகரமான துவக்கத்தைக் கொடுத்தார்கள். அடுத்தது தமிழ்த்தாய் வாழ்த்தும் அமெரிக்க தேசிய கீதமும் பாடி  முடித்தனர்.
அது முடிந்தபின் திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி நடந்தது. ஓதப்படக் கூடிய ஓதப்படவேண்டிய  ஒன்றுக்கான எல்லாத்தகுதிகளும் திருக்குறளுக்கு நிச்சயமாக உள்ளது தானே.
Chair / Co-Chair person
செந்தாமரை பிரபாகர்
Fetna அமைப்பின் தலைவர், செந்தாமரை பிரபாகர் முகமலர்ச்சியுடன் வரவேற்புரை ஆற்றினார். செந்தாமரையல்லவா மலர்ச்சியில்லாமல் இருக்குமா? அவரைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள் நம்பியும் வரவேற்று மகிழ்ந்தார் நெகிழ்ந்தார். அடுத்து நர்த்தகி நடராஜ் அவர்களின் பயிற்சியில் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் திருக்குறள் நடனம் ஆடி அசத்தினர். இதுவரைக்கும் இப்படியொன்றை நான் பார்த்ததில்லை. அற்புதமாக இருந்தது. பிள்ளைகளின் திறமை மட்டுமல்லாமல் பயிற்சியாளரின் திறமையும் அங்கே ஒருங்கே வெளிப்பட்டது. அதோடு திருக்குறளுக்கு ஆடியது மேனியை சிலிர்க்க வைத்தது.
Chair / Co-Chair person
கால்டுவெல் வேள்நம்பி
சிறப்பாக வந்திருந்த விழா மலர் வெளியீடு முடிய, கன்னியாகுமரியிலிருந்து வந்திருந்த தம்பதியினர், முனைவர் அருள்செல்வி மற்றும் ஆனந்த் குழுவினர் வந்து மரபு சார்ந்த பறை, பம்பை சிலம்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி  அருமையான நிகழ்ச்சியொன்றை நடத்தினர். Fetna முடிந்த கையோடு பல ஊர்களுக்கும் இவர்கள் சென்று பறை பயிலும் பட்டறைகளை நடத்தினர். நியூயார்க்கிலும் நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள் முயற்சியாலும், நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் ஆதரவிலும் ஒரு பயிற்சிப் பட்டறை இங்கும் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் என்னால் இதில் பங்கு கொள்ள முடியவில்லை. என்னவோ தெரியவில்லை. அமெரிக்காவெங்கும் பறை கற்றுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் நிலவுகிறது. குறிப்பாக நியூயார்க், நியூஜெர்சி, கனக் டிக்கட், வாஷிங்டன் ஆகிய ஊர்களில் குழுக்களும் இருக்கின்றன. அருமையாக வாசித்து அசத்துகிறார்கள்.
பறை என்பது தாழ்த்தப்பட்டவர்களின் இசைக்கருவி என்ற தவறான எண்ணம் நீங்கி தமிழரின் பாரம்பரிய இசைக் கருவி என்று மாறி அதனைக் கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்வது அமெரிக்கத் தமிழர் மத்தியில் தான் அதிகம் காணப்படுவதாக தெரிகிறது.
Chair / Co-Chair person
பழனிச்சாமி
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சுப. வீரபாண்டியன் தலைமையில் கருத்துக்களம் நடந்தது. அடியேனும் இதில் கலந்து கொண்டேன். மகளில் மரபு  மற்றும் மழலையர்  மரபு அன்றும் இன்றும் என்ற தலைப்புகளில் இரண்டு அணிகளாக மொத்தம் 10 பேர் உரையாற்றினோம். உரையாற்றுபவர்களை  ஏற்கனவே தேர்ந்தெடுத்து அதற்கு வாட்ஸ்அப் குழு அமைத்து அதற்கு பழனிச்சாமி என்ற நல்ல ஒரு நெறியாளரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் எங்களை எல்லாம் மிகவும் பொறுமையாக வழி நடத்தி, ஆலோசனைகளைச் சொல்லி நெறிப்படுத்தி வந்தார். ஒவ்வொரு  ஞாயிற்றுக் கிழமை இரவும் 9 மணிக்கு தொலைபேசியில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. பல ஊர்களிலிருந்தும்  ஏன் கனடாவிலிருந்தும் கூட இதில் மொத்த பத்துப்பேரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். நான் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல முறை கலந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் பழனி பரவாயில்லை என்று சொன்னது என்னை குற்றப்படுத்தி நெகிழவைத்து விட்டது. பேசிய பலரும் சங்க காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எடுத்துப்பேசி அசத்தினர். ஆனால் சுப வீரபாண்டியன் அவர்களின் தொகுப்புரை மிகவும் அருமை. ஒரு தேர்ந்த பேச்சாளிக்கு என்னென்ன குணங்கள் தேவை என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொருவர் பெயரையும் ஞாபகம் வைத்து அவர்களுடைய  கருத்துகளுக்கான மாற்றுக்  கருத்துகளை நாசூக்காக வைத்ததாகட்டும், பிற்போக்குச் சிந்தனைகளை விட்டு முற்போக்காக எப்படி வரவேண்டும் என்று சொன்னதாகட்டும், நேரத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் சொல்ல வேண்டியவற்றை அருமையாக தொகுத்துச் சொல்லியும் அற்புதமாக இருந்தது. தாம் கொண்ட திராவிட சிந்தனைகளிலிருந்து வழுவாது ஆனால் வேறு எவரையும் புண்படுத்தாது இவர் பேசியபோது இவரை மாதிரியான ஒரு தலைவர் அல்லவா நமக்கு இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர் கூட சில நிமிடங்கள் பழகியதும் மேடையைப் பகிர்ந்து கொண்டதும் எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பென்று நினைக்கிறேன். 

பேசிய கடைசிப் பேர்களில் ஒருவனாக இருந்தாலும் பழனி சீக்கிரமாகப் பேசி முடிக்க வேண்டியதாலும், என் உரை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது என் கருத்து. ஏற்கனவே தயாரித்திருந்த உரையில் நேரக் கட்டுப்பாடு கருதி எங்கே வெட்ட வேண்டும் எங்கே ஒட்ட வேண்டும் என்று உடனுக்குடன் முடிவு செய்வது ஒரு கலை தான்.

அதன்பின் வெவ்வேறு தமிழ்ச் சங்கங்களிலிருந்து சிறப்பு நிகச்சிகள் நடத்தப்பட்டன. மதிய நிகழ்வுகளில் முக்கியமாக  பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. தமிழன்பன் தலைமையில் நடக்க வேண்டிய ஒன்று அவர் வந்து சேர முடியாதலால் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். தமிழன்பன் ஏற்கனவே சொல்லியிருந்த தலைப்புகளில் கவிதைகள் எழுதப்பட்டு தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் மட்டுமே அரங்கேறின.    

கவியரங்கத்தில் ஞானசம்பந்தன் பேசிக் கொண்டே இருந்தார். பல சமயங்களில் அவர் பேசியது சுவையாக இருந்தாலும் சிரிப்பை வரவழைத்தாலும், தொட்டுத்தொட்டு நான்ஸ் டாப்பாக போய்க் கொண்டிருந்தது எல்லோரையும் அயர வைத்துவிட்டது. கவியரங்கத்தில் பேசுவதும் காணாத ஒன்றுதான்.
நிறைய கவிதைகள் சிறப்பாக இருந்தன குறிப்பாக அல்லது வழக்கம்போல் மகேந்திரன் பெரியசாமி மற்றும் கனிமொழி ஆகியோரின் கவிதைகள் சுவையாக இருந்தன.
Image result for fetna 2018 dallas

-தொடரும்.

Monday, August 20, 2018

வாஜ்பாய் நடத்திய கார்கில் யுத்தம் !!!!



Image result for vajpai
Add caption
மறைந்த தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்  வகையில் அவரைப்பற்றி சமீபத்தில் விகடனில் வந்த தமிழ்ப்பரபா எழுதிய கட்டுரையை இங்கே உங்களுக்காக தருகிறேன் .விகடனுக்கு நன்றி .
`நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது!" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்பாய் வீழ்த்திய கதை
வாஜ்பாய்க்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. இது ஒரு துரோகம், அதிர்ச்சிதான்! ஆனால், அவர் அதிலேயே உறைந்து கவலைகொண்டிருக்கவில்லை. இந்தியாவின் முப்படைத் தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் அங்கே நம் நாட்டுக்காகப் போரிட வேண்டுமென கட்டளையிட்டார்.

றைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், ஆட்சியில் இருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம் அல்லது நம்பிக்கைத் துரோகம் என்றால் கார்கில் போரைச் சொல்லலாம். அந்தப் போருக்குக் காரணமாக இருந்த பாகிஸ்தானின் செயல்பாடு வாஜ்பாய்க்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
காரணம், தான் பிரதமராக இருந்தபோது இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவைப் பெரிதும் விரும்பியவர் வாஜ்பாய். விரும்பியதோடு நிற்காமல் அதை நடைமுறைப்படுத்த ஏராளமான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை தாண்டிய ஊடுருவலும் தாக்குதல்களும் தொடர்ந்துகொண்டே இருந்தன. இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்த வண்ணமே இருந்தது. என்றாலும் வாஜ்பாய் மனம் தளரவில்லை. சகோதர நாடான பாகிஸ்தானுடன் இனியும் சண்டை தொடரக்கூடாது என்று கருதி, லாகூர் ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதாவது, டெல்லியிலிருந்து லாகூருக்குப் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார் வாஜ்பாய். மற்ற தலைவர்களைப்போல கையசைத்துத் தொடங்கி வைத்ததோடு நிற்காமல், அந்தப் பேருந்தில் லாகூருக்கே சென்றார். அப்போதைய பாகிஸ்தான் அதிபருடன் கைகுலுக்கினார். 'தம்முடன் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ' என்னும் விதமாகப் பாகிஸ்தானுடன் நட்புறவு தொடர வேண்டும் என்ற உரையாற்றிவிட்டு நாடு திரும்பினார் அவர். ஆனால், அந்த நிகழ்வு நடந்த மூன்றே மாதங்களில் வாஜ்பாய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
Image result for vajpayee kargil war


ஆம், பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியப் பகுதியான கார்கிலுக்குள் ஊடுருவினர். எலும்பை நொறுக்கும் அளவிலான குளிர் அதிகம் உள்ள சமயங்களில் இருநாட்டின் ராணுவத்தினரும் மலை உச்சியில் உள்ள ராணுவ முகாம்களில் இருந்து கீழே இறங்கி சமவெளிக்குத் திரும்புவது வாடிக்கை. அதுபோலத்தான், இந்தியப் பாதுகாப்புப் படையினரும் திரும்பினர். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினரோ, அவர்கள் பகுதிக்குத் திரும்புவதுபோல பாவனைச் செய்துவிட்டு, கீழே இறங்காமல் பதுங்கிக்கொண்டனர். தங்கள் நாட்டு வீரர்களைக் கூடுதலாக அங்கே வரவழைத்தது. கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க வேண்டுமென்கிற நீண்டகாலத் திட்டத்தை, இந்திய எல்லையில் ஆளில்லா நேரம் பார்த்து நிறைவேற்ற எத்தனித்தனர். இந்திய எல்லைக்குள் பதுங்கிப் பதுங்கி, ஊடுருவத் தொடங்கினார்கள். நம்முடைய எல்லையில் சொற்ப இந்திய வீரர்களை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பிடித்து வைத்தனர். அவர்களைக் கொடுமை செய்து பின்னர் கொன்றனர். இன்னொருபுறம் நம்முடைய எல்லைப் பகுதிகள் ஒவ்வொன்றாகப் பாகிஸ்தான் படையினரால் கைப்பற்றப்பட்டன.
அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்தச் செயல் மிகப்பெரிய துரோகம், அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால், அவர் அதிலேயே உறைந்து கவலைகொண்டிருக்கவில்லை. இந்தியாவின் முப்படைத் தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் கார்கில் மலைப்பகுதிக்கு அனுப்பி நம் நாட்டுக்காகப் போரில் ஈடுபட வேண்டுமென கட்டளையிட்டார். கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்திய ராணுவத்தினருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் கலந்தாலோசித்து துரிதமாகச் செய்து கொடுத்தார். 
கார்கில் போர் என்பது சமவெளிப் பகுதியில் நடைபெற்ற சாதாரணப் போர் அல்ல. கடுங்குளிரில், பனிச் சிகரங்களிலும் மலை முகடுகளிலும் நடைபெற்ற மிகக் கடுமையான ஒரு போர். இந்திய வீரர்கள் பல யுக்திகளைப் பயன்படுத்தி போர் புரிந்தனர். பாகிஸ்தானில் அப்போது உள்நாட்டுக் குழப்பம் நிலவிய சூழலில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புக்கும் இடையே கார்கில் போர் தொடர்பாகக் கருத்து மோதல் உருவானது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமராக இருந்த வாஜ்பாயின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளித்து, நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டினர். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் நம் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிய வைத்தார்.

போர் தொடர்ந்துகொண்டிருந்தது..!
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த உக்கிரமான சூழலில் இருநாடுகளுக்கும் இடையே நடக்கும் போரை நிறுத்தி, அமைதி ஏற்பட வேண்டுமென பல சர்வதேச அமைப்புகள் முன் வந்தன. ஆனால், பிரதமராக இருந்த வாஜ்பாய் பின்வாங்கவில்லை. போர்  தொடங்கப்பட்டதற்கான காரணம் யார்? இப்போது போரை நிறுத்தினால் இந்தியாவுக்கு ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன போன்றவற்றை உலக நாடுகளின் தலைவர்களிடம்  விளக்கினார். அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுக்கு இந்தியா சார்பில், போர் குறித்து கடிதம் எழுதினார். போரை தொடங்கியதற்கான தார்மிகக் கோபத்தை வாஜ்பாய் தனக்கே உரிய சொல்நயத்துடன் அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தி இருந்தார். 
இந்தியாவில் எழக்கூடிய உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், வெளிநாட்டு சந்தர்ப்பவாதங்கள், நெருக்குதல்கள் என எல்லாவிதமான எதிர்ப்புகளையும் தாங்கும் ஒற்றை அரணாகப் பாகிஸ்தான் முன்பு நின்றார் வாஜ்பாய். 'நாம் ஏன் போர் தொடுத்தோம்' என்பதற்கான நியாயத்தை உலக நாடுகளிடம் வாஜ்பாய் தெரிவித்த செய்திகள் முக்கியமானவை. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் அழுத்தம் கொடுத்தன. படையைத் திரும்பப் பெறச் சொல்லி நவாஸ் ஷெரீஃப்பிடம் வலியுறுத்தின. மே 3-ல் ஆரம்பித்து ஜூலை 27 வரை இரண்டு மாத காலம் கார்கில் போர் நடைபெற்றது. பிரதமரின் ஊக்கம், தாய் நாட்டின் மீதிருந்த பற்று, போருக்கான நியாயம் என அனைத்தும் இந்திய ராணுவ வீரர்களை உந்தித்தள்ள ஒருவித வெறியுடன் இந்திய வீரர்கள் திறம்பட செயலாற்றினர். பாகிஸ்தான் வீரர்களை ஒட்டுமொத்தமாக நம் மண்ணிலிருந்து வெளியேற்றி வெற்றிவாகை சூடினார்கள். இந்திய நிலங்கள் நம் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்தன. ராணுவ வீரர்கள், கண்ணீர் மல்க, நம் தேசியக்கொடியைக் கார்கில் எல்லையில் நாட்டி மரியாதை செலுத்தினார்கள். 
கார்கில் போரில் வெற்றி பெற்ற அந்தத் தருணத்தை வாஜ்பாய்க்கு கிடைத்த வெற்றியாக இல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றியாக நாடே கொண்டாடியது. இந்த வெற்றிக்கு அச்சாரமாக விளங்கியவர் வாஜ்பாய். அன்பும் பண்பும் பாசமும் எப்போதும் வலியுறுத்துகிற கலாசாரமும் கொண்ட நாடுதான் இந்தியா. அதே சமயம் துரோகத்தால் தாய்நாட்டை அபகரிக்க முயல்வோரை  வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கோழைத்தனம் கொண்ட நாடு அல்ல என்கிற செய்தியை வாஜ்பாய் மூலம் உலகத்துக்குச் சொன்னது இந்தியா. கார்கில் ஊடுருவலின்போது, இக்கட்டான அந்தச் சூழலில் துணிந்து ஒரு முடிவு எடுத்து, போர் தொடுத்ததுடன், அதில் வெற்றியும் கண்டு நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஒரு மாபெரும் தலைவரைத்தான் இன்று நாம் இழந்து இருக்கிறோம். அந்த அடிப்படையில் கார்கில் நாயகன் வாஜ்பாய், காலத்துக்கும் நிலைத்திருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

தமிழ்ப்பிரபா



Thursday, August 16, 2018

வாட்ஸாப்பில் கலைஞர் !

 கலைஞர் அவர்கள் மறைவுக்குப்பின் நெட்டிசன்கள் ஓவர் டைம் செய்து வெளியிட்ட நெகிழ்வான மீம்ஸுகளில்  சிலவற்றை உங்களுக்கு தொகுத்துத்
  தந்துள்ளேன்.

Add caption
Image result for karunanidhi in whatsapp

Image result for karunanidhi in whatsapp

Image result for karunanidhi in whatsapp












Monday, August 13, 2018

கலைஞர் ஆரம்பித்த திட்டங்கள் !

Image result for karunanidhi

கலைஞர் மறைவுக்கு ஆச்சரியமாக வாட்ஸாப்பில் பெரும்பாலும் நேர்மறை கருத்துக்களே வந்தன .அதிலும் திமுக காரர்களிடமிருந்து இல்லை .பொதுவான எந்தக்கட்சியையும் சேராதவர்களிடமிருந்துதான்   வந்தன .அவற்றுள் முக்கியமான ஒன்று அவர் தமிழகத்தில் செய்த   பணிகளைப் பட்டியலிட்டன.அவற்றை கீழே தருகிறேன்.குறைகளை நீக்கி  நிறைகளைப்பார்த்து நன்றி செலுத்துவோம், அன்னாரின் நினைவைப்போற்றுவோம் .
நீத்தாரைத்   தூற்றுதல் நம்  மரபல்லவே

அணைகளை காமராஜர் கட்டினார். சத்துணவு எம்ஜிஆர் ஆரம்பித்தார் என்று பதிவிடும் போது அரசியல் பார்க்காத நாம் கலைஞர் ஆரம்பித்த திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்வோம். இதனையும் அரசியலாக பார்க்காமல் இதனை தெரிந்து கொள்வதற்காக படிப்போம்.*
💐💐💐💐💐💐💐💐💐💐


1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்

9. கையில் இழுக்கும் ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்

10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்

11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்

15. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்

16. P.U.C வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்

17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்

21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம் " தந்தது கலைஞர்

24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

28. SIDCO உருவாக்கியது கலைஞர்

29. SIPCOT உருவாக்கியது கலைஞர்

30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்

31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்

32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தது கலைஞர்

36. மிக பிறப்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்

37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

38. தாழ்த்தப்பட்டோருக்கு18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

40. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்.

43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்

44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்

45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்தது கலைஞர்

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்

51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு

60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்

61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்

66. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்

67. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்

68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்

69. செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்

70. சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்

71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் கலைஞர்

72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர்.
(2006-2011 வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)

73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் கலைஞர்.
விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)

74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர்* கலைஞர்.
********** இதை சொல்வது அரசியல் வாதி அல்ல வரலாறு.🌹

Image result for karunanidhi