Thursday, March 30, 2017

இயக்குனர் மகேந்திரனின் வெற்றிகளும் தோல்விகளும் !!!!!!!

Image result for director mahendran movies

சினிமாவும் நானும், இயக்குனர் மகேந்திரன் பகுதி 3 

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post.html

இந்தப்புத்தகத்தில் ஆரம்ப முதல் முடிவு வரை மகேந்திரனைப் பற்றி ஏராளமான விவரங்கள் அதுவும் நமக்கு அல்லது குறைந்த பட்சம் எனக்குத் தெரியாத பல விவரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இதோ.
Image result for director mahendran movies
நெஞ்சத்தைக் கிள்ளாதே
1.   மகேந்திரன் என்றால்  நமக்கு ஞாபகம் வருவது முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் தான். ஏனென்றால் இவையெல்லாமே வெள்ளிவிழாக் கொண்டாடிய படங்கள். மகேந்திரன் முதல் படம் எது என்றால் "முள்ளும் மலரும்" என்று எல்லோரும் சொல்வீர்கள் . ஆனால் அது அவர் முதன் முதலில் இயக்கிய படம்தான். அதற்கு முன்பு 25 படங்களுக்கு மேலாக கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
2.   நடிகர் திலகம் சிவாஜி நடித்து வெளிவந்த 'தங்கப்பதக்கம்', மகேந்திரனின் கதைதான். அதற்கு மிகச்சிறந்த வசனங்களை எழுதியதும் அவர்தான். தங்கப்பதக்கம் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டு அதனைத் வந்து பார்த்த சிவாஜி ஆசைப்பட்டு பின்னர் திரைப்படமாக வந்தது. தங்கப்பதக்கம், கன்னடத்தில் ராஜ்குமார் நடித்தும் “ஜஸ்டிஸ்  செளத்ரி” என்று தெலுங்கில் NT.ராமராவ் நடித்தும், இந்தியில் ஷக்தி என்ற பெயரில் திலீப் அமிதாப் நடித்தும் வெளிவந்தது. எல்லா இடங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Image result for Thanga Pathakkam

3.   சிவாஜி நடித்த "ரிஷிமூலம்" படத்தின் கதை வசனம் மகேந்திரன் தான், இதுவும் வெற்றிப்படமே.
4.   இவை தவிர, வாழ்ந்து காட்டுகிறேன். நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்காரப்பிள்ளை, நிறைகுடம், மோகம் முப்பது வருஷம் போன்ற 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதைவசனம் இவர்தான்.
5.   சினிமாவில் வெற்றிப்படங்கள் எடுப்பதைவிட பெருமைக்குரிய படங்களை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்ப் படங்கள் உலகம் செல்லும் என்கிறார்.
6.   சினிமாவின் அபாயக் கவர்ச்சியில் படைப்பாளிகள் அமிழ்ந்து போகக் கூடாது என்கிறார்.
7.   இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்திய இயக்குநர் சத்யஜித்ரே என்று சொல்லி அவர் இயக்கிய 'பதர் பஞ்சாலி' படத்தை சிலாகிக்கிறார்.
8.   அவருக்கு மிகவும் பிடித்த மற்றொரு  இயக்குநர் திரிபுராவைச் சேர்ந்த "ஜோசப் புலிந்தநாத்".
9.   உலக அளவில் அவரை ஈர்த்தவர்கள், இத்தாலிய இயக்குநர், பை சைக்கிஸ் தீவ்ஸ் எடுத்த விக்டோரியா டிசிகா (1902-1974) அகிரா குரோசாவா, சார்லி சாப்ளின்.
10.                தமிழில் பெருமைக்குரிய படமாக அவர் குறிப்பிடுவது 1948ல் வெளிவந்த "சந்திரலேகா".
11.                தமிழில் பிடித்த இயக்குநர்கள், ஸ்ரீதர், பாரதிராஜா, வீணை பாலச்சந்தர் (அந்த நாள்) பாலு மகேந்திரா, மணிரத்னம் & பாலா.  
12.                அவருக்குப்பிடித்த படைப்பாளிகள், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கி.ராஜநாராயன்.
13.                முள்ளும் மலரும் படத்தை ஒரு இயக்குநராக அல்லாது ஒரு ரசிகனாய் எடுத்தேன் என்று சொல்லி அதனால்தான் அது ஒரு நல்ல யதார்த்த சினிமாவாக அமைந்தது என்கிறார்.
14.                அமெரிக்காவில் பிராட்வே ஷோ என்று இன்னும் பிரபலமாக விளங்கும் நாடகத்துறை தமிழ்நாட்டில் அழிந்து போனதைக் குறித்து ஆதங்கப்படுகிறார்.
15.                நாவலைப் படமாக்கும் கலை வளர வேண்டும் என்று சொல்லும் இவரின் முள்ளும் மலரும், உமாசந்திரன் எழுதிய கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. அதேபோல் உதிரிப்பூக்கள் மூலம் புதுமைப்பித்தனின் "சிற்றன்னை" என்ற கதை.
16.                மகேந்திரன் இயக்கிய, மெட்டி, கண்ணுக்கு மை  எழுது, ஊர்ப் பஞ்சாயத்து ஆகியவை தோல்வி அடைந்தன.
17.                இவரின் நெஞ்சத்தைக் கிள்ளாதே 1 வருடம் ஓடி மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது.
18.                மோகன் சுகாஷினி ஆகியோர் இந்தப் படத்தில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப் பட்டனர்.
19.                பொருந்தாக் காதலை முன்னிலைப் படுத்தியதால் இவரது "பூட்டாத பூட்டுக்கள்" தோல்வியடைந்தது என்கிறார்.
20.                மகேந்திரனின் முதல் வேலை 'இன முழக்கம்' என்ற திமுக பத்திரிகையில் உதவி ஆசிரியர்.
21.                மகேந்திரன் 3 1/2 வருட காலம் துக்ளக்கில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். அதுவே தன் வாழ்வின் மகிழ்ச்சி மிக்க காலங்கள் என்கிறார்.
22.                முள்ளும் மலரும் படத்தின் 'செந்தாழம்பூவே' பாடலை எடுக்க தயாரிப்பாளர் வேணு செட்டியார் மறுத்துவிட, கமல்ஹாசன் உதவியுடன் தான் அது படமாக்கப்பட்டது.
Image result for kai kodukkum kai

23.                கைகொடுக்கும் கையில் ஒரு முக்கிய இடத்தில் தயாரிப்பாளர் கதையினை மாற்றியதால் தான் தோல்வியடைந்தது என்கிறார்.
24.                மகேந்திரன் கடைசியாக இயக்கிய படம் "சாசனம்". NFDC -யால் தயாரிக்கப்பட்ட அந்தப்படம் சென்னையில் மட்டுமே திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நாடெங்கிலும் திரையிடப்படாததற்கான காரணம் இவருக்கே தெரியவில்லை.
25.                இளையராஜாவின் இசை தன் படங்களின் ஜீவன் என்கிறார்.
26.                ரஜினிகாந்தின் எளிமையை வெகுவாகப் புகழ்கிறார்.
27.                இலங்கையின் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களுக்கு திரைப்படம் எடுக்க மூன்று மாதம் பயிற்சி எடுத்தார். துரதிர்ஷவசமாக அவர்கள் அனைவருமே போரில் கொல்லப்பட்டுவிட்டனர்.
28.                தனது யாழ்ப்பாணப் பயணத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர் அவர்களைச் சந்தித்தது மிகவும் மறக்க முடியாத நிகழ்வு என்கிறார்.
மகேந்திரன் என்ற இயக்குநர் தமிழ் நாட்டின் கொடை என்பதில் சந்தேகமில்லை. தமிழ்த் திரையுலகம் அவரை இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.


- முற்றும்.

Tuesday, March 28, 2017

அழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே !!!!!!

இலங்கையில் பரதேசி பகுதி -7

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_21.html

Image result for colombo town hall
Town Hall 
          கொழும்புவின் டவுன் ஹால் மிக அழகிய கட்டடம். வாஷிங்டன் DC  யில் உள்ள கேப்பிடல் பில்டிங் போல தூரத்திலிருந்து தெரிந்தது. ஆனால் கிட்டப் போய்ப் பார்த்ததில் அவ்வளவு பிரமாண்டம் இல்லாவிட்டாலும் , மிகஅழகிய வடிவத்தில் சிறிதாக இருந்தது.
          நம்மூர் சென்னையின் ரிப்பன் பில்டிங் போன்று, இங்குதான் கொழும்பின் மேயர் அலுவலகம் இருக்கிறது. கொழும்பின் முனிசிபல் கவுன்சிலும் இங்குதான் கூடுகிறது. விகார மகா தேவி பார்க்கின் முன்புறம் இது அமைந்திருக்கிறது. ஐரோப்பியக் கட்டிடக்கலையை கட்டியம் கூறும் கட்டடம் இது . இந்த பில்டிங் வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.
Image result for Professor Patrick Geddes
Professor Patric Geddes
          1921ல் ஸ்காட்லாந்தின் பிரசித்தி பெற்ற நிபுணர், பேராசிரியர் பேட்ரிக் கெட்டஸ் (Professor Patric Geddes) கொழும்பில் கவுன்சில் பில்டிங், மேயர் அலுவலகம், பொது ரிசப்ஷன் ஹால், பொது நூலகம் ஆகியவை கட்டப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
          கொழும்பிற்காக ஒரு பொது நூலகம் அமைக்க, 1925ல் Dr.W.ஆர்தர் சில்வா என்பவர் தன் பெரிய கட்டிடத்தை அளித்தார். அந்தக் கட்டிடத்தின் பெயர் "ஸ்ரீனிவாசா" என்பது. அது தான் இப்பொழுது மேயருக்கான அரசாங்க வீடாக இருக்கிறதாம்.
          அதன்பின் 1922ல் கொழும்புவின்  முனிசிபல் கவுன்சில் தங்கள் பில்டிங்கை கட்டுவதற்கு வரைபடங்கள் தேவை என்பதை ஒரு போட்டி போன்று அமைத்து உலகமெங்கும் தெரிவித்தனர். அதன் மூலம் மொத்தத்தில் 32 டிசைன்கள் வெவ்வேறு கட்டிடக் கலை நிபுனர்களால் உலகமெங்கிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றுள் 'ரால்ஃப் பூட்டி' என்ற கம்பெனியிலிருந்து, ஆர்க்கிடட் S.J.எட்வர்ட்ஸ்  அவர்கள் தயாரித்த வரைபடம் தேர்ந்த்தெடுக்கப்பட்டது.
          1924 மாதம் அப்போதிருந்த மேயர் தாமஸ் ரெய்ட் இதற்கு அடிக்கல் நாட்டினார். A.A. காம்மன் என்ற கம்பெனி அதனை கட்டுவதற்கு பொறுப்பெடுத்து ஆகஸ்ட் 1928ல் நான்கு வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதிருந்த கவர்னர் சர். ஹெர்பர்ட் ஸ்டான்லி இதனைத் திறந்து வைத்தார்.
          முழுக்கட்டிடத்திலும் மேலிருந்த டூம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. சுற்றிலும் இருந்த கொரிந்தியன் தூண்கள் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 360 அடி நீளமும் 168அடி அகலமும் கொண்டது இந்தக்கவின்மிகு கட்டிடம். பிரிட்டிஷ் அரசால் பல தீமைகள் இருந்திருந்தாலும் இது போன்ற பல நன்மைகளும் நடந்திருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
          வெளியே வந்தோம் ."அம்ரி அதோ இளநீர்" என்று கூவினேன். பார்க்கின் அருகில் ஒரு பெட்டிக் கடையின் முன்னால் இளநீர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ரோட்டைத் தாண்டி அங்கு சென்றோம். மிகச்சிறியதாக இருக்கின்றனவே”, என்றேன். "இல்லை சார் நீர் அதிகம் இருக்கும்", என்றான். “எனக்கு ஜெல்லி வேண்டும்”, என்றேன். அம்ரிக்கு ஜெல்லி என்றால் புரியவில்லை.
               நியூயார்க்கில் இளநீர்கள் சம்மர் நேரத்தில் ஃபிளாரிடா மாநிலத்திலிருந்து ஏராளமாக வந்திறங்கும். இந்திய மற்றும் கயானா கடைகளில் கிடைக்கும். ஒன்று 4 டாலர் முதல் 5 டாலர் வரை. உள்ளே இருக்கும் வழுக்கையைத் தான் இங்கே ஜெல்லி என்று  சொல்லுவார்கள். அம்ரிக்கு புரியாதலால் வழுக்கை என்று சொன்னேன். அந்த வார்த்தையும் அவனுக்குப் புரியவில்லை என்றாலும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்து கொண்டான்.  

      உடனே எனக்கு ஒரு பாடல் ஞாபகம் வந்தது. "அழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே, அருகில் ஒருத்தன் உருகி நிற்கிறான் குமரி அழகிலே ". ஆஹா அந்தப் பாட்டை சிறிது சத்தமாகவே பாடிக்கொண்டு அம்ரி பின்னால் போனேன். அம்ரிக்கு அந்தப் பாட்டுக் கூடத் தெரியவில்லை சின்னப்பையன். ஆமாம் கொஞ்சம் பழைய பாட்டுத்தான். இதனை படிக்கும் உங்களுக்குக் கூட தெரியுமா என்று தெரியவில்லை. இதோ அந்தப் பாடலின் கிளிப் உங்களுக்காக.

          அங்கு போய் கடையின் உள்ளே அம்ரி செல்ல, வெளியே நடந்து வந்தாள் ஒரு பெண். அட மீண்டும் அந்தப் பாடலைப் பாடினேன். ஒரு விதமான அரிவாளோடு அந்தப் பெண் வருவதைப் பார்த்து பாடலை நிறுத்திவிட்டேன். பதமான அரிவாளால் மூன்றே மூன்று சீவலில் இளநீரின் நீர் கொப்பளிக்க என்னிடம் கொடுத்தாள். என் கழுத்தைத் தடவிப்பார்த்துக்கொண்டேன். இவ்வளவு சிறிய கழுத்துக்கு ஒரே சீவு போதும்.கொஞ்சம் தள்ளி  நின்று கொண்டேன்.

Image result for Girl selling Tender coconuts in colombo

              
  அப்படியே வாயில் வைத்து உறிஞ்ச, "தேவாமிர்தம் ஜீவாமிர்தம் தந்தாள்" என்ற பாடல் நியாபகம் வந்தது. அட மனசுக்குள்ள தான் பாஸ் . சும்மா சொல்லக் கூடாது அந்த மாதிரி சுவையுள்ள இளநியை என் வாழ்நாளில் என்றுமே குடித்ததில்லை. உருவத்தில் சின்னதாக இருந்தாலும் குவாலிட்டி மற்றும் குவான்டிட்டி இரண்டும் சிறப்பாகவே இருந்தன. ரெண்டு சாப்பிட வேண்டும் என நினைத்து வந்த எனக்கு ஒன்றிலேயே நெஞ்சு வரை நிறைந்து விட்டது, வயிறும் உப்பிவிட்டது. விலையும் சகாயம்தான்.
          மதிய நேரத்தில் சுகமாக இருந்தது. காற்றும் சிலுசிலுவென்று அடிக்க ஏகாந்தமாக ஒரு சிறு தூக்கம்  போட்டால் நன்றாக இருக்கும். ஆனால் ஊர் சுற்ற வந்திருக்கும் இடத்தில் ஓய்வாவது ஒழிச்சலாவது, இன்னும் எத்தனையோ இடங்களைக் கவர் பண்ண வேண்டியதிருக்கிறதே என்று நினைத்துவிட்டு நடையைக் கட்டினோம்.
          “ஏலேய் சேகரு”
          “ வாடா மகேந்திரா என்னடா என்னா விசேஷம் ஊரில”.
          “ஊர் விசேஷத்தைவிடு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாம            கடந்து போயிட்டியே”.
          “என்னடா முக்கியமான விஷயம்”.
          “அதாண்டா பாட்டுப் பாடினயே”
           “ ஆமாம் அதுக்கென்னடா?”
          “ இல்லை எளனியை வெட்டிக் கொடுக்க வந்தது பொன்னுன்னு சொன்னல்லே”
          “ ஆமாம்”
          “அதுல கொழும்பு வீதின்னு சொன்னது நிஜம்,
          “ஆமாம்”
          “இளநி வித்ததும்  அதை நீ வாங்கினதும் சரிதான்”
          ”ஆமாம்”
         “பொண்ணு வித்ததும் நீ சொன்ன”
          “ அட         ஆமாண்டா எல்லாம் சரிதான்”.
          “இல்ல, அவ அழகியா இல்லையான்னு சொல்லலயே”
         “அடப்பாவி மகேந்திரா நீ அதைக் கேக்கறயா? அட அமாவாசையில் பொறந்தவனே. எல்லாத்துக்கும் ஒரு கவலைன்னா  உனக்கு வேற ஒரு கவலை”.
“இல்லை நீ பாட்டு பாடினாயே”
          “இல்லடா அவ அழகியில்ல”
“அடப்போடா சப்புன்னு போயிருச்சு”.
          “ஆமா அவ தமிழா சிங்களமா?”
சிங்களம் தான்”.
          “ஓ அதனாலதான்டா”
“சரிசரி நான் பிஸியாக இருக்கேன். போனை வச்சிரேன்”
லைனை ஏன் விரசா கட் பன்னென்னா மக்களே அவன் பாடலின் அடுத்த வரியைப் பத்தி கேட்டிடக்  கூடாதில்லே அதனாலதான் .

- தொடரும்.

Thursday, March 23, 2017

கறிக்குழம்பும் பிரெஞ்சு படமும் !!!!!!

பார்த்ததில் பிடித்தது - டிப்லமேட்

Diplomatie poster.jpg

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் மனைவி செய்த கறிக்குழம்பை உண்டு,லேசான மயக்கத்தில் நெளிந்த வண்ணம் நெட் பிலிக்சில் மேய்ந்த போது கிடைத்த பிரெஞ்சுப்படம் இது. தமிழ்ப் பாரம்பர்ய உணவை உண்டுவிட்டு ஆங்கிலம் தவிர வேறு மொழித் திரைப்படங்களைப் பார்த்துப்பாருங்களேன், சீக்கிரம் செரித்துவிடும். எப்படி என்று கேட்கிறீர்களா? பிறமொழிப் படங்களை பார்ப்பதற்கு கடின உழைப்பு தேவைப் படுகிறதல்லவா. படத்தைப் பார்க்க வேண்டும், முக பாவங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்,சப் டைட்டில்களையும் மாறுவதற்கு முன் அதிவிரைவாகப் படிக்க வேண்டும். ஓரிரு வார்த்தைகளையும் கற்றுக் கொண்டால் அது மிகவும் நல்லது,  பிற்காலத்தில் உதவும். இவ்வளவு கடின உழைப்பு தேவைப்படுவதால்தான், உங்கள் மதிய அசைவ உணவு கொஞ்சம் அதிகமாயிருந்தாலும் செமித்துவிடும் என்றேன். ஆனால் உண்டதற்கு மேல் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் நொறுக்குத்தீனிகளை கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிட்டு கலோரிகள் பெருகினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

இந்தப் படம் ஒரு பீரியட் படமென்பதால் அது என் ஆவலைத் தூண்டியது. 'டிப்ளமசி' என்பது 2014ல் வெளிவந்த பிரெஞ்சு ஜெர்மனி நாடுகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்றுப்   படம் . கதைச்சுருக்கத்தை கொஞ்சம் லைட்டாய் பார்க்கலாம் .

இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில், ஜெர்மனி தன்னுடைய நிலைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவரும் சூழ்நிலை.

பாரிஸ் நகரத்தில் தன்னிச்சையாக பொது மக்கள் எழுந்த போராட்டத்தில் ஜெர்மானிய வீரர்களை எதிர்த்து நின்றதால் தெருவெங்கிலும் கலவரம் சூழ்ந்து இருந்தது. ஜெர்மனிக்கு எதிரான கூட்டுப் படைகளும் எந்த நேரத்திலும் உள்ளே நுழையக்கூடும் என்ற நிலை.
Bundesarchiv Bild 183-2003-1112-500, Dietrich v. Choltitz-2.png
General Dietrich Van Cholitz 
அந்தச் சமயத்திலே பாரிஸ் நகரத்தில் இருந்த ஜெர்மானியப் படைகளுக்குத் தலைவராக ஜெனரல் டையட்ரிச் வான் சோளிட்ஸ் (General Dietrich Van Cholitz) என்பவர் இருந்தார். வெற்றியை இழந்து வருகிறோம்  என்று நினைத்த ஹிட்லர் தனது வெறித்தனத்தின் உச்சகட்டமாக பாரிஸ் நகரத்தை அழிக்கும்படி உத்தரவிடுகிறார். குறிப்பாக பாரிஸில் உள்ள முக்கிய இடங்களான 'ஐஃபில் டவர்', 'லூவர் மியூசியம்', 'நாட்ரி டேம் டி பாரிஸ்' “பிளேஸ் டி ல கார்கார்ட்” ஆகியவை முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. இல்லாவிட்டால் அதிகாரிகளின் குடும்பம் தண்டிக்கப்படும். வேறு வழியில்லாத ஜெனரல் சோளிட்ஸ் ஒரு சிறு குழுவை லூட்டினைட் ஹெக்கர் தலைமையில் அனுப்புகிறார்.

Related image
RAOUL NORDLING

ஜெனரல் சோளிட்ஸ் தங்கியிருந்த ஹோட்டல் மியூரைஸ் (Hotel Meurice) இடமே அவரது அலுவலகமாகவும் செயல்பட்டது. அந்த ரூமுக்கு வேறொரு ரகசிய பாதையும் உண்டு. அதன் வழியாக உள்ளே நுழைகிறார் ,ஸ்வீடன் நாட்டின் தூதுவரான ரவுல்  நார்ட்லிங் (RAOUL NORDLING). அவர் ஜெனரல் சோளிட்ஸிடன் உரையாடி அவருடைய குடும்பத்தை தான் பாதுகாப்பதாகவும் பாரிஸ் நகரின் முக்கிய சின்னங்களை அழிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.
ஜெனரல் சோளிட்ஸ் ஒத்துக்கொண்டாரா? எப்படி அந்த அழிவு முயற்சி முறியடிக்கப் பட்டது என்பது தான் கதை. 

உலகப்போரின் மிக முக்கியமான நிகழ்வு இது.

Related image
Niels Arestrup
முக்கிய கதாபாத்திரங்களான ஜெனரல் வான் சோளிட்சாக  நீல்ஸ் எரெஸ்டிரப் (Niels Arestrup) -ம் ஸ்வீடன்  நாட்டில் டிப்ளமேட் ரவுல் நார்ட்லிங்காக ஆண்ட்ரே டூசொல்லியரும் (Andre Dussollier)-ம் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

Image result for Andre Dussollier
Andre Dussollier
இந்தப் படத்தை 93 சதவீத விமர்சகர்கள் நன்றாகவே வரவேற்று சராசரியாக பத்துக்கு 7.5 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள். மக்களே முக்கியமாக, முக்கிய கதா பாத்திரங்கள் இருவரும் நிறைய பேசுவார்கள். பேச்சில்லாமல் வெறுமனே செயலை (Action) எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் உதவாது.

இந்தப்படத்தை இயக்கியவர், “வால்கர் ஸ்லோண்டொர்ஃப்”  (Volker Schlondorf). இது சிரில் கெலி (Cyril Gely) எழுதிய நாடகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

இந்தப்படம் 64ஆவது பெர்லின் சர்வதேச திரைப்படத் திருவிழாவில் பெப்ரவரி 2014ல் திரையிடப்பட்டது. ஆகஸ்ட் 2014ல் டைலுரைட் (Telluride Film Festival) திரைப்பட விழாவிலும் பங்கு பெற்றது. நாற்பதாவது சிசர் விருது விழாவில் (Cesar Awards) அதன் விருதைப் பெற்றது.

உலக வரலாற்றில் குறிப்பாக இரண்டாம் உலகப்போர் மற்றும் நாஜிகளின் ஆதிக்கம் பற்றி அறிந்து கொள்ள விழையும் ரசிகர்கள் இதனைப் பார்த்து மகிழலாம்.

முற்றும்.

Tuesday, March 21, 2017

விகார மகாதேவி ஆகிப்போன விக்டோரியா மகாராணி !!!!!!!!!!!!

இலங்கையில் பரதேசி - பகுதி -6

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_7.html

Image result for queen victoria height
Queen Victoria 
"அம்ரி என்னப்பா கெஸ்ட் ஹவுஸ்னு போட்டிருந்த வொர்ஸ்ட் ஹவுசிலிருந்து இப்ப கோஸ்ட் ஹவுசுக்கு கூட்டிட்டு வந்துட்ட" என்றேன். "சார் கொஞ்சம் பொறுமையா இரிங்க", என்று சொல்லிவிட்டு அந்த வீட்டையும் கடந்து இடது புறம் திரும்பினால் ஆஹா  நந்தவனம் எதிரில் தெரிந்தது. அந்த நந்தவனத்தின் ஒரு பகுதியில்  அமைந்திருந்தது  ஒரு அழகிய தங்கும் விடுதி. போல்கோடா  பார்க் என்பது அதன் பெயர். நடுவில் இருந்த சிறிய குடில்தான் வரவேற்பரை. அம்ரி போய் அங்கே போய் பேசிவிட்டு என்னை அழைத்துச் சென்றான். அட்வான்ஸ் பணத்தை கட்டிவிட்டு வெளியே இடதுபுற மூலையில் ஒரு அறை கொடுத்தனர். நல்ல அகலமான இரண்டு பெட் உள்ள அறை, பாத்ரூம் என சகல வசதிகளோடு இருந்தது.


"சார் நீங்க ரெடியாகி இருங்க, நான் வீட்டுக்குப் போய் விட்டு வந்துவிடுகிறேன். இங்கே பக்கத்தில்தான் என் வீடு", என்றான். பரவாயில்லை  அவனும் வந்து போவதற்கு வசதிதான் என்று எண்ணிவிட்டு உள்ளே போனேன். அரை மணி நேரத்தில் குளித்து ரெடியாகிரூம் சர்வீசை அழைத்து சாண்ட்விச் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன். இட்லி தோசை அங்கு கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் மன வருத்தம்தான். நிர்மலமான நீல வானம் பளிச்சிட அது ஒரு அருமையான நாள். ரூமின் பின்புறம் அழகிய நீச்சல் குளம் இருந்தது. முன்புறம் அழகிய பூந்தோட்டம். அதன் அருகில் பெரிய திறந்தவெளி அரங்கம், மாலை நடக்கவிருக்கும் திருமண வரவேற்பு விழாவுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.


அதன்பின் ஒரு அழகிய ஏரி இருந்தது. இயற்கை அழகு சூழ்ந்த அந்த இடத்தை தேர்வு செய்த அம்ரிக்கு நன்றி சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அம்ரி வந்து சேர்ந்தான். "இன்றைக்கு எங்கே போகலாம்?”, என்ற போது மணி 11 ஆகிவிட்டது. “கொழும்பு நகரின் சில பகுதிகளைப் பார்க்கலாம்", என்றான்.
Fountain at Hotel 

"முதலில் சிறிது தூரத்தில் இருக்கும் பார்லிமென்ட் பில்டிங்கைப் பார்க்கலாம்", என்று அழைத்துச் சென்றான்.
நகருக்கு வெளியே இருந்த கட்டிடத்திற்குச் செல்ல சிறிது நேரமானது. 'ஜெயவர்த்தனபுர கோட்டே' என்ற இடத்தில் இது அமைந்திருக்கிறது. இதுவே தலைநகரம் என்றாலும் கொழும்பினருகிலேயே இருப்பதால் இதனை யாரும் தனி நகராகப் பார்ப்பதில்லை.
Related image
Srilankan  Parliament
இந்த இடம் கொழும்பிலிருந்து  சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள தியாவன்னா ஓயா (Diyawanna Oya) என்ற ஏரியில் உள்ள தீவில் அமைந்துள்ளது. இங்குதான் மூன்றாவது விக்கிரமபாகு என்ற மன்னனின் மந்திரியான நிசாகா அளகேஸ்வராவின் அரண்மனை இருந்ததாம்.
பாதுகாப்பான இடம் என்பதால் இதனைத் தேர்ந்தெடுத்து இலங்கையைச் சேர்ந்த தேஷமான்ய ஜாஃப்ரி பாவா (Geoffry Bawa)  என்ற ஆர்கிடெட் வடிவமைக்க, ஜப்பானிய கம்பெனியான மிட்சுய் (Mitsui) குரூப்பால் கட்டி முடிக்கப்பட்டது. அவர்கள் திட்டமிட்டபடி 26 மாதத்திற்குள் கட்டினார்களாம். கட்டி முடிக்கப்பட்டபோது இதன் மொத்த மதிப்பீடு 25.4 மில்லியன் US டாலர்கள்.
Image result for night view of Srilankan parliament
Night view
1979ல் பிரதம மந்திரியாக இருந்த ரத்னசிங்கே பிரேமதாசா முடிவெடுத்து, ஏப்ரல் 1982ல் அதிபர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனேவால்  திறந்து வைக்கப்பட்டது.
பழமையும் புதுமையும் சேர்ந்து கட்டப்பட்ட இந்தக் கட்டடம் தூரத்திலிருந்து பார்த்தாலும் மிக அழகாக இருந்தது. ஏரிக்குள் இருக்கும் இந்தத்தீவின் உள்ளே 12 ஏக்கர் பரப்பளவில் இது கட்டப்பட்டு மதிய வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
என்ன, பிரேமதாசா, ஜெயவர்த்தனே என்ற பெயர்கள்தான் கோபத்தைக் கிளறின. அந்தச் சமயத்தில் நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் பொது ஜெயவர்த்தனேவிற்கு எதிராக ஊர்வலம் போனது ஞாபகத்தில் வந்தது.
சிங்களப் பெயர்களுக்கும் தமிழ்ப்பெயர்களுக்கும் வித்தியாசம் எப்படிக் கண்டுபிடிப்பது என்பது சுலபமாய் இருந்தது. முற்றுப்பெற்று ஒலித்தால் தமிழ்ப்பெயர், முற்றுபெறாமல் தொக்கி நின்று விளித்தால் அது சிங்களப் பெயர். உதாரணத்திற்கு ரத்ன சிங்கம் என்றால் அது தமிழ்ப் பெயர், ரத்ன சிங்கே என்றால் அது சிங்களப் பெயர் எப்பூடி?

"இரவில் விளக்குகளுடன் பார்க்கும்போது அதன் பிம்பம் நீரில் விழுந்து மிக அழகாக இருக்கும்”, என்றான் அம்ரி.
“அடுத்து எங்கே என்று கேட்டதற்கு "விகாரமகா  தேவி பார்க்" என்றான் அம்ரி.
அதுசரி "விக்டோரியா பார்க் எங்கு இருக்கிறது?” என்றேன். விக்டோரியா பார்க் தான் விகாரமகா தேவி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது". என்றான் அம்ரி.
 “பார்க்கெல்லாம் அப்புறம் பார்க்கலாம். ஏதாவது முக்கிய இடங்களுக்கு போகலாம்”
"சரிசார், ஆனால் இதனைச்சுற்றி சில முக்கிய இடங்கள் இருக்கின்றன. அதனையெல்லாம் பார்த்துவிடலாம்".
அம்ரி சொன்னபடி ஒரு விசாலமான பூங்காவிற்கு வந்து சேர்ந்தோம். இந்தப் பூங்காவை அமைத்து அதனை கொழும்புவிற்குக் கொடுத்தவர் பெயர் சார்லஸ் ஹென்றி டிசோசா. இது  நடந்தது பிரிட்டிஷ் ஆட்சியின் போது. இரண்டாவது உலகப்போர் நடக்கும்போது ஆஸ்திரேலியாவின் 17ஆவது படைப்பிரிவு இங்கு வந்து முகாமிட்டிருந்ததாம். உலகப்போர் முடிவுக்கு வந்தபின் இது புனரமைக்கப்பட்டு 1951ல் தான் பொதுமக்களுக்கென திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் விக்டோரியா மகாராணியின் பேரில் அழைக்கப்பட்ட இது சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின் மன்னன் துட்டகாமனுவின் மனைவியான ராணி விகார மகா தேவியின் பெயர் சூட்டப்பட்டது.
Related image
Viharamahadevi Park
அவளைப்போய் ஏன் இந்த மன்னன் திருமணம் செய்தான்?
 “ஏன் சார்?”
“பேரே விகாரமா இருக்கே?. ஒருவேளை மூஞ்சியும் அப்படி இருந்திருக்குமோ?”.      “தெரியாது சார் நான் பார்த்ததில்லை”.  என்று சொன்னானே  பார்க்கலாம். நான் அதன்பின் வாயை மூடிக்கொண்டேன்,

Image result for viharamahadevi park
Add caption
கொழும்பு பகுதியில் இது தான் பழமையான பெரிய ஒரே பார்க். 1927 முதல் 1995 வரை இங்குதான் கிரிக்கெட் விளையாடுவார்களாம். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டீம்கள் இங்கு வந்து விளையாடி இருக்கின்றன.
Related image
Park 
 உள்ளே ஒரு மிகப்பெரிய புத்தர் சிலை, சிறிய மிருகக்காட்சி சாலை, ஒரு சிறுவர் பூங்கா தவிர நிறைய நீர் ஊற்றுகள் அமைந்துள்ளன. இந்தப் பூங்காவின் ஒருபுறம் நேஷனல் மியூசியமும், மறுபுறம் டவுன் ஹால் பில்டிங்கும் இருக்கின்றன. ஒருபுறம் நின்று பார்க்கும்போது வாஷிங்டன் DC -யின் மினியேச்சர் போலத் தெரிந்த டவுன் ஹாலை நோக்கிச் சென்றோம்.

- தொடரும்.