Tuesday, February 23, 2021

காதலர் தினக்கவிதை-2021



 காதலர் தினத்தை  முன்னிட்டு கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் நாள் மாலை தமெரிக்கா தொலைக்காட்சியில் நண்பர் மகேந்திரன்  பெரியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அடியேன் பங்கு கொண்டு வாசித்த கவிதை இதோ உங்களுக்காக  

https://www.youtube.com/watch?t=2182&v=eIhYOHMYwHQ&feature=youtu.be  

மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும்

பேச்சுக்கொடுத்த அன்னைக்கும்

வாய்ப்புக்கொடுத்த தமெரிக்காவுக்கும்

வணக்கங்கள் பலப்பல

 

கவியரங்கத்தலைவர்

மகேந்திரன் பெரியசாமி

எந்திர வாழ்க்கையில்

நொந்தவர்க்கு

மந்திரச்சொற்கள் பேசி

மனதைத்தொடுபவர்

 

இந்திர மகேந்திர ஜாலங்களால்

இதயம் இணைத்தவர்

பழகுவதற்கு இனியவர்

பண்பாளர்

 வணக்கம் .

 

சனிக்கிழமை காலை

சடுதியில் அழைப்பு வந்தது

கவிதை பாடச் சொல்லி

கவனம் ஈர்த்தது

பெரியசாமி கூப்பிட்டால் இந்தச்

சின்னசாமி மறுக்கமுடியுமா?

பாவலர் கூப்பிட்டால் ,இந்த

பரதேசி மறுக்கமுடியுமா ?

 

 கவிதைத்தலைப்பு என்னவென்றேன் ?

காதல் என்றார்

 

வெள்ளிவிழா கொண்டாடி

தள்ளாடி அல்லாடி

தயங்கி மயங்கி தள்ளிப்படுத்து

சாய்ந்து ஓய்ந்திருக்கும்

எனக்கு காதலா என்றேன்?

காதலுக்கு ஓய்வேதென்றார்

உடனே

உள்ளமும் உடலும்

விழித்துக்கொண்டன

 

மெல்லினம்

இடையினமாகி

வல்லினமாகிப்பின்

மல்லினமாகி  

மாயமாய்ப்போன

மனதைத்  தோண்டினேன்

 

ஆஹா அங்கு

காதல் இன்னும்

கனன்றுகொண்டிருந்தது

 நீறு நீக்கி

நிரவிவிட்டேன்

படக்கென்று

பற்றிக்கொண்டது , மீண்டும்

தொற்றிக்கொண்டது  என்னை .

 

தீக்குள் விரலை  வைத்த

பாரதீ யின் பாடலை

நாக்கு நவின்றது

 

சங்க காலத்தை

தங்க காலமாக்கிய

காதல் இது !

 குறுந்தொகையில்

பெருந்தொகையாய்

இருந்த காதல் இது!

 

காயாத கானகத்தே

மேயாத மானா க

கடவுள்கள் போற்றிய

காதல் இது !

 

காற்று வெளியிடை

களித்திட்ட காதல் இது !

 

சில்லென்று பூத்த

சிறுநெரிஞ்சிக்காட்டில்

மெல்லென்று பூத்த காதல் இது !

 

விழியில் விழுந்து

இதயம் நுழைந்து

உயிரில் கலந்த

காதல் இது!

 

 

ஆனால் இன்றோ

சாதியெனும் சாக்காட்டில்

அய்யகோ

அமிழ்ந்து போனதென்ன

அழிந்து  போனதென்ன?

 

களவொழுக்கம்

கற்பொழுக்கம் என்ற

அற்றைக்காதல்

இற்றைக்காலத்தில்

கற்பழிக்கும் காமமாக

கட ந்து போனதேன் ?

 

அன்புக்கு நான் அடிமை என்று

அன்றை ய நாளில் இருந்த காதல்

அன்பு கிடைக்காவிட்டால்

அமிலம் ஊற்றி

துன்பு செய்யும் துயரமாக

தூர்ந்து  போனதேன்?

 

காதல் போதின்  சாதல்

காதலுக்காக  உயிரை விட்ட

காலம்போய்

காதலிக்காவிட்டால்

உயிரை எடுக்கும் காலமாக இன்று

உறைந்து போனதேன் >

 

இன்றய நாளில் உறுதி எடுப்போம்

சாதியெனும்

சாக்காட்டை

தூக்கியெறிவோம்

மதமெனும்  பிரிவினையை

மாற்றி அமைப்போம்

 

எல்லோரும் அன்புற்றிருக்க

எல்லோரும் இன்புற்றிருக்க

 

காதலால்

கசிந்துருகி

மனங் கனிந்து

இனம் மறந்து

குலம் துறந்து

சாதி நீக்கி

ஆதிக்காதலை

அமரவைப்போம்

 

ஆதலினால்

காதல் செய்வோம்

 

நன்றி வணக்கம்


Wednesday, February 10, 2021

ஹீரோவான பரதேசி !

                                              பரதேசியின் வாகனங்கள் - பகுதி-5

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post_25.html



அவர் என்னுடைய TVS சேம்பைப் பார்த்த பார்வையில் இருந்தது ஏளனமா, இளக்காரமா, கேவலமா? பரிதாபமா ஏமாற்றமா? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. கார் கொண்டு வரவில்லையா? என்று கேட்டதும் கூட சாதாரணமாகத்தான் இருந்து. நல்லவேளை அவர் பின்னால் உட்கார்ந்து கொண்டு TVS -ஐ ஓட்டச்சொல்லி இருந்தால் என்னுடைய நிலைமை திண்டாட்டமாயிருந்திருக்கும். இந்தச் சிறிய உருவம், அவ்வளவு பெரிய ஆஜானுபாகரை பின்னால் உட்கார வைத்திருந்தால் வண்டி சர்வ நிச்சயமாய் குடை சாய்ந்திருக்கும்.

ஐந்து நிமிடத்தில் ஊரை விட்டு வெளியே வந்தோம். ஊர் என்ன ஊர் ஒரு மூன்று நான்கு தெருக்கள் தான் இருக்கும். ஒரு அரைமணிநேரம் கர்ணத்தின் பின்னால் ஓட்டமும் நடையுமாக உப்புச் சத்யாக் கிரகத்தின் போது காந்தியின் பின்னால் போவது போல இருந்தது. போனால் என்னுடைய  டைரக்டர் சுசில் அவர்களின் இடம் வந்தது. மொத்தம் 50 ஏக்கர். அதன் ஒரு பகுதியில் சோளப்பயிர் செழித்து வளர்ந்திருந்தது.

கர்ணத்திடம் ஒரு முறைக்கு இருமுறை வரைபடம் வைத்து அந்த நிலத்தின் அகல நீளத்தைத் தெரிந்து கொண்டு மீண்டும் சென்னைக்கு கிளம்பினேன். வந்து சேர 3 மணியாகிவிட்டதால்  நேராக திருவல்லிக்கேனியின் பேச்சிலர் பேரடைஸ் ரூமில் போய் வியர்வைக் குளியலைப் போக்க குளிர்ந்த தண்ணீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு, தரையில் போடப்பட்டிருந்த மெத்தையில் சாய்ந்தேன். கையில் தி.ஜா.ராவின் மோகமுள் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். முள் கொஞ்சம்  குத்தியது. எட்டு மணி போல் சைலண்ட் மெஸ்ஸுக்குப் போனால் போதும்.



(எலேய் சேகரு அதென்னடா சைலண்ட் மெஸ்? =- அதைப்பத்தி இன்னொரு நாள் சொல்றேன் மகேந்திரா)

அடுத்த நாள் அலுவலகம் சென்றபோது, என்னுடைய டைரக்டர் சுசில் பெர்ஷாத் என்னைத்தேடி வந்தார்.

"என்னாச்சு நேத்து?"

"சார் போய்ப்பார்த்தேன், நிலம் நல்லபடியாக இருக்கிறது”.

“ஆர் யூ ஸ்சுயர்?”,

“நீங்கள் போட்ட சோளப்பயிறும் நன்றாக வளர்ந்து வந்திருக்கிறது. நிலம் முழுவதும்  போட்டால்  கூட நன்கு வளரும்"

"வாட் நான்சென்ஸ்?"

" பெக் யுவர் பார்டன்?"

“நான் எங்க சோளப்பயிர் போட்டேன். இதைத்தான நான் மேலிருந்து பார்த்தேன். யாரோ நிலத்தை ஆக்கிரமித்து பயிர் செய்திருக்கிறார்கள். போச்சு என் நிலம் போச்சு”.

"கவலைப்படாதீங்க, நான் திரும்பப் போய் நிலம் முழுவதையும் சர்வேயர் வைத்து அளந்து சுற்றி கருங்கல் வேலி போட்டு ஒரு போர்டும் வைத்துவிடுகிறேன்”.

"ஓக்கே, ஆமா நேத்து முழுநாளும் உன்னைப் பார்கலேயே"

(என்னடா வாகனத்தைப்பத்திச் சொல்றேன்னு அதப்பத்தி பேசாம ஒரு பதிவே முடியப்போவுது - பொறுமை மகேந்திரா, வருது வருது)

 "சார் போய்ட்டு வர்றதுக்கு நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. அதுக்கப்புறம் ஆபிசுக்கு வந்து சேர ஐந்து மணியாயிடும். அதனால தான் நேரா ரூமுக்குப் போயிட்டேன்"

"எத்தனை மணிக்கு கிளம்பின?"

"எட்டுமணிக்கு"

"ஆமா நீ என்ன வண்டி வச்சிருக்கிற?"

"டி.வி.எஸ் சேம்ப்"

"என்ன மொபட்லயா அவ்வளவு தூரம் போன, அதான் இவ்வளவு நேரமாயிருக்கு. என் ரூமுக்கு வா" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று படிகளில் இறங்கினார். அவருடைய கேபின் கிழே இருந்த யூனிட்டில் இருந்தது. அந்த கண்ணாடி அறையைத்திறந்து உள்ளே போனேன். கண்களால் உட்காரச் சொல்லிவிட்டு, செக்புக்கை எடுத்தார். நம்பினால் நம்புங்க ஒரு பிளாங்க் செக்கை கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, "நீ உடனே போய் ஒரு புல்லட்டை வாங்கிரு" என்கிறார்.

எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது, தயங்கி நின்றேன்.

"என்ன ஆல்ஃபி என்ன தயங்கிற, இது உனக்கு நல்லது. ஒரு அரை நாள்ல வேலையை முடிச்சுட்டு ஆபிஸ் வந்துறலாம்"

"அதுக்கில்ல சார், அது---- ரொம்ப செலவாகும்"

“அதான் பிளாங்க் செக் கொடுத்திருக்கேனே போய் ஒரு ஏஜென்ட்டை பார்த்து விசாரித்து அமௌண்ட்டை எழுதிக் கொடுத்துரு"

"அதுக்கில்ல சார்?"

“ என்ன சொல்லுப்பா?”

"புல்லட் வாங்கினா டிரைவர் வைக்கணுமே?”

"என்ன டிரைவரா?"

"ஆமா சார் என்னுடைய உருவத்துக்கு புல்லட்டெல்லாம் ஓட்ட முடியாது, உருட்டவும் முடியாது, அதான்"

"ஹா ஹா ஹா, உன்னால ஓட்ட முடியாதுன்னு நீ சொல்றத என்னால ஏத்துக்க முடியல", ஓகே ஒரு நல்ல 100CC  பைக் வாங்கிக்க"

(மகேந்திரா இப்ப புரியுதா நான் எங்கிருந்து வரேன்னு?)

நான் தேர்ந்தெடுத்த வண்டி "ஹீரோ ஹோண்டா"

(எலேய் சேகரு ஹீரோ நெனப்பில வாங்கினயா": சேச்சே என் உயரம் எனக்குத் தெரியும், மகேந்திரா)

 அப்போதிருந்த 100CC பைக்குகளில் எனக்கு மிகவும் பிடித்த வண்டி இது. நான் வாங்கியது கறுப்பும் சிவப்பும் கலந்த வண்டி. பார்க்க அம்சமாக இருக்கும். அதோடு நல்ல மைலேஜ் கொடுக்கும். அந்த விளம்பரம் ஞாபகமிருக்கா? ஃபில் இட், ஷட் இட் and ஃபர்கட் இட். இதெல்லாம் விட எனக்குப் பிடித்த மற்றொன்று அதன் சத்தம் புல்லட்டின் தம்பி

போலவே  ஒலிக்கும்.

டி.வி. எஸ் சேம்ப்பை நண்பன் மினிசாமிடம் விற்று விட்டு, ஹீரோ ஹோண்டாவில் பயணம் செய்தேன். என்னுடைய தோற்றம் கெட்டப் எல்லாம் மாறிப்போயிருச்சு. இன்ட்டர்கிராப்ட்டில் இருக்கும் வரை 89 லிருந்து 92 வரை ஹீரோ ஹோண்டாதான் என் வாகனம். அழகாக மட்டுமல்ல கம்பீரமாகவும் இருக்கும். அந்தக் காலக்கட்டத்தின் என்னுடைய அடையாளமாக மாறிவிட்டது அந்த வண்டி.    கொஞ்ச தூரத்தில் நான் வரும்போதே மக்களுக்குத் தெரிந்துவிடும். நான் தான் வருகிறேனென்று.

நான் ஓட்டிய வண்டிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த வண்டி என்று சொல்லலாம். அந்த நேரத்தில் ஒரே சமயத்தில் என் வாழ்க்கையின் இரண்டு திருப்புமுனைகள் நடந்தது. ஒன்று என் திருமணம் நிச்சயமானது. இன்னொன்று வேறு வேலைக்குப் போகும் சந்தர்ப்பம் அமைந்தது.

அப்படியென்றால் ஹீரோ ஹோன்டாவை இழக்க வேண்டுமே?

-தொடரும்.


அறிவிப்பு :

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழு வழங்கும் இலக்கிய உலாவில் வரும் வெள்ளிக்கிழமை( Feb 12nd, 2021) மாலை நடக்கும் நிகழ்வுக்கு உங்களை வரவேற்கிறேன் 



Thursday, February 4, 2021

இளமை எழுத்தாளர் சுஜாதா

 

படித்ததில் பிடித்தது

ஸ்ரீரங்கம் to சிவாஜி - சுஜாதாவின் கதை.

ரஞ்சன் குமுதம் பு(து)த்தகம் வெளியீடு -விலை: 130.00


 


 

காமிக்ஸ் எனும் படக்கதையில் ஆரம்பித்த என்னுடைய வாசிப்பு வரலாறு , பின்னர் வாண்டுமாமா , ஆலந்தூர் கோ. மோகனரங்கன் , தமிழ்வாணன் என்று தொடர்ந்து இளமை எழுத்தாளர் சுஜாதாவில் நிலைத்தது. அதன்பின் லா.சாரா, சா.கந்தசாமி, சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று வாசிக்கும் தளம் விரிவடைந்தாலும் சுஜாதாவை என்றும் படிக்கலாம். அதில் கொப்பளிக்கும் இளமையும் புதுமையும் என்றும் எவரையும் கவருபவை. இந்தப் புத்தகத்தை எழுதிய ரஞ்சன் என்ற குமுதத்தின் துணையாசிரியர் சுஜாதாவின் கடைசி காலகட்டங்களில் அவரோடு நெருங்கியிருந்தவர். சுஜாதாவின் வாழ்க்கையைத் தொகுத்து குமுதத்தில் எழுதிய தொடர்தான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.  சமீபத்தில் சென்னைக்குச் செல்லும்போது ஒரு பழைய புத்தகக்கடையில் இதனைக் கண்டெடுத்தேன். இது கூட சுஜாதா சொல்லிக் கொடுத்ததுதான். இனி நான் இந்தப்புத்தகம் மூலம் அறிந்து கொண்ட சில சுஜாதாவின் தகவல்களை கீழே தருகிறேன்.

 

1)    சுஜாதா பிறந்தது 1935-ஆம் வருடம் மே 3 ஆம் தேதி பிறந்த இடம் திருவில்லிக்கேணி, அவரது இயற்பெயர் ரங்கராஜன்.

2)    தந்தை பெயர் சீனிவாசராகவன் தாயார் கண்ணம்மாள் ஒரு அண்ணன் ஒரு தம்பி. அப்பா PWD சீஃப் எஞ்சினியர், அண்ணன் Dr.கிருஷ்ணமாச்சாரி தம்பி ராஜகோபாலன் மத்திய அரசின் MTNL சேர்மன்.

3)    இவர் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் இருந்தபோது தூக்கி வளர்த்தவர் கணித மேதை ராமானுஜரின் மனைவி ஜானகி.

4)    1965ல் குமுதத்தில் இவருடைய 'சசி காத்திருக்கின்றாள்” என்ற சிறுகதை வெளிவந்து பாராட்டுப் பெற்றது. அவருக்கு அனுப்பிய செக் படிவத்தில் அன்றைய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. "அடிக்கடி எழுதுங்கள்"  என்ற வாக்கியம் சுஜாதாவிற்கு பெரும் டானிக்காக அமைந்தது. அதில் ஆரம்பித்த குமுதம் உறவு சுஜாதாவிற்கு கடைசி வரை இருந்தது.

 

5)    ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்த போது அம்மாவும் பாட்டியும் கதைகளை அறிமுகப்படுத்த, கவிதைகளை அறிமுகப்படுத்தியவர் அண்ணன்.

6)    ழு வயது முதல் கல்லூரி முடிக்கும் வரை ஸ்ரீரங்கத்தில் இரு பாட்டிகள் வீட்டில் வளர்ந்தார்.

7)    அவர்கள் அப்போது நடத்திய தென்றல் என்ற கையெழுத்துப் பிரதியில் எழுதிய 'கள்வர் தலைவன்’ என்ற கதைக்கு படங்கள் வரைந்தவர் பின்னர் கவிஞராய் பிரபலமடைந்த வாலி.

8)    ஒரு முறை திருச்சி ரேடியோவில் பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்டு, இவர் பேசியது ஒரே வார்த்தை. அதற்கு பரிசாக ஒரு கதர்த்துண்டு கிடைத்தது. இதுதான் சுஜாதா பள்ளியில் வாங்கிய ஒரே பரிசு.  

9)    சுஜாதாவின் கல்லூரிப்படிப்பு St. ஜோசப் கல்லூரி, திருச்சி. அவருடைய வகுப்புத்தோழர் அப்துல் கலாம். அதன்பின்னர் மேற்படிப்பை MIT யில் படித்த போது அங்கும் கூடப்படித்தவர் அப்துல்கலாம். அங்கு நடந்த அறிவியல் கட்டுரைப் போட்டியில் இருவருமே பங்கு கொள்ள முதல் பரிசைப் பெற்றவர் அப்துல் கலாம்.

10) அந்தக் காலத்துக் கனவுக்கன்னிகளாக, டி.ஆர். ராஜகுமாரி, எம்.வி.ராஜம்மா, அஞ்சலிதேவி, மாதுரி தேவி ஆகியோரைக் குறிப்பிட்டு இதில் முதல்வராக இருந்தவர் வைஜெயந்தி மாலா என்கிறார்.

11) St. ஜோசப் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில இலக்கியத்தை அறிமுகம் செய்து விருப்பத்தை வளர்த்தவர் ஜோசப் சின்னப்பர் என்பவர். அப்போதிருந்த பிரின்சி பாலாயிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஃபாதர் எர்ஹார்ட்  ஆங்கிலத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தினார்.

12) அதன்பின்னர் டெல்லியில் சிலநாள் வேலை செய்து, பெங்களூர் பெல் நிறுவனத்தில் சேர்ந்தார். பெல் நிறுவனப்பள்ளியில் கமிட்டியில் இருந்ததால் தொழிலாளர் மட்டுமே படிக்கும் அந்தப்பள்ளியில் தன்னுடைய பிள்ளைகளையும் சேர்த்தார் அதன் பின் பல அதிகாரிகள் தங்களுடைய பிள்ளைகளையும் அங்கே சேர்த்தார்களாம்.

13) இங்கு வேலை செய்யும் போதுதான் மின்னணு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

14) 1985ல் டெக்சாஸ் தமிழ்ச்சங்க விழாவுக்கு வந்தபோது சுஜாதாவுக்கு திரு.பால்பாண்டியன் அவர்கள் ஒரு கம்ப்யூட்டரை  பரிசாகக் கொடுத்தார். அதனை உள்ளே கொண்டுவர கஸ்டம்ஸ் அதிகாரி வட்டி கட்டச் சொல்ல, அது கம்யூட்டரின் விலையை விட அதிகமாக இருக்க கம்யூட்டரே எனக்கு வேண்டாம் என்று  கிளம்பியிருக்கிறார். லஞ்சமும் கொடுக்க மனதில்லை. அங்கிருந்த இன்னொரு மேலதிகாரி இவரைப்பற்றிக் கேள்விப்பட்டு டூட்டி இல்லாமலேயே கம்யூட்டரை ரிலீஸ் பண்ணிக்கொடுத்திருக்கிறார். அதில் பாரதி ஃபாண்ட் என்ற தமிழ் ஃபாண்ட்டில் முதலில் எழுதியவர் சுஜாதா.

15) சுஜாதாவின் நிறைவேறாத ஆசை பட்ட மேற்படிப்பும் சினிமா இயக்குநர் ஆவதுமாம்.

16) திரைப்படமாக தயாரிக்கப்பட்ட அவர் கதைகள், காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ,ப்ரியா, காகிதச் சங்கிலிகள் ஆகியவை.

17) திரையுலகில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கமல், மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், ஆகியோர். இவருள் ராஜீவ் மேனன் மிகவும் நெருக்கம்.

18) 2008 பிப்ரவரி 27ஆம் தேதி தன்னுடைய 73 ஆவது வயதில் மறைந்தார்.

 

இத்தகைய பல தெரியாத தகவல்களை இணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர் ரஞ்சன். அரிய புகைப்படங்களுடன் அருமையாக தொகுத்த இந்தப்புத்தகம் சுஜாதாவின் ரசிகர்கள் படிக்க வேண்டிய ஒன்று.

- முற்றும்.   

அறிவிப்பு :

காதல் மாதமான பிப்ரவரி மாதத்தில் ,  நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழு வழங்கும் இலக்கிய உலாவில்  வெள்ளியன்று ( பிப்ரவரி 5 ,2021)அன்று நடக்கும்  நிகழ்வின் தகவல்களை கீழே கொடுத்துள்ளேன்.நபர்கள் அனைவரும் வந்து பங்கு கொள்ள அழைக்கிறேன்.

  


Thursday, January 28, 2021

பண்டிகைகள் காட்டும் உறவுகள் !!!

 நண்பர்களே ஏற்கனவே நான் அறிவித்தபடி கடந்த சனிக்கிழமை ஜனவரி 23அன்று , நியூ ஜெர்சியில் செயல்படும் தமிழ் அவை சார்பாக நடந்த கருத்தரங்கத்தில் அடியேன் கலந்து கொண்டு பண்டிகைகள் காட்டும் உறவுகள்  என்ற தலைப்பில் பேசினேன் .அதன் சினைப்பை கீழே கொடுத்திருக்கிறேன் .கேட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள் .நன்றி .

                  https://www.facebook.com/103716554963097/videos/2489469564680351


சிறப்பு அழைப்பிதழ் 

அன்பார்ந்த நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவாளர்களே

 

வணக்கம்

 

நமது சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் அங்கமாகதமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினைக் கொண்டாட இருக்கிறோம்

 

இவ்விழாவில்இளையோர் பங்குபெறும் ஆடல்பாடல்நகைச்சுவை நாடகம்இலக்கியக்குழு சார்பாக நடுவர் கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்கள் தலைமையில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம், 

மகாகவி திரு ஈரோடு தமிழன்பன் அவர்களின் சிறப்புரை மற்றும் பல சுவையான நிகழ்வுகள் நடக்கவுள்ளன



நாள்சனிக்கிழமை ஜனவரி 30, 2021 காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை 

இணையம் வழியாக.(www.youtube.com/nytsponvizha)

 

Facebook è  https://facebook.com/newyorktamilsangam

 

இப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுகளைதாங்கள் தங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கண்டுகளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

 

மேலும் விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் காணவும்.

 

நன்றி

அன்புடன்,

ஆல்ஃபிரட் தியாகராஜன் 

தலைவர்

இலக்கியக்குழு 

நியூ யார்க் தமிழ்ச் சங்கம்

 

 



image.png



Monday, January 25, 2021

“ஆல்ஃபி என் நிலத்தைக்காணோம்”

பரதேசியின் வாகனங்கள் - பகுதி-4

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post_18.html



"சார் முதல்லயே சொல்லக் கூடாதா? போங்க போங்க”

“ஐயாவிடம் எதும் சொல்லாதீங்க"ஒரு சின்ன சல்யூட் அடித்து  வழியனுப்பினார். நீ வா என்ற ஒருமையும், தம்பி என்று விளித்தலும் மாறிப்போனதை கவனித்திருப்பீர்கள்.

அன்று நடந்ததை நஸீரிடம் சொன்னேன்.

 "முதல்ல உன் முகத்தை பாக்கியராஜ் மாதிரி வைப்பதை மாத்து. ஒரு கூலிங் கிளாஸ் வாங்கிக்க, நல்லா நிமிர்ந்து ஒரு கெத்தா வாப்பா யாரும் உன்னை ஓரங்கட்ட மாட்டாங்க."

"சார் டி.வி.எஸ் சேம்ப்புக்கு நீங்க சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர். ஆமாம் உண்மையிலேயே யாராவது இப்படி பொய் சொன்னா தப்பித்தவறி போலீஸ் செக் பண்ணா என்ன ஆவது". 

 "அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா போலீஸ்ல புரோட்டோ கால், ஹையரார்க்கி ரொம்ப முக்கியம். மேலதிகாரிங்க கீழே உள்ளவர்களை வாடா போடான்னு சொல்றதும், கெட்ட வார்த்தையில் திட்டறதும் ரொம்ப சாதாரணம். இது மாதிரி சின்னக்கேஸுகளுக்கு  அப்படிச் செக் பண்ண மாட்டாங்க. அதோடு அவங்களும் பொய்யோ உண்மையோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஒருவேளை உண்மையா இருந்தா என்ன செய்வதுன்னு நினைச்சுத்தான் சும்மா விட்டுருவாங்க. ஆனா அதுக்கும் மேல உன்ட்டதான் தப்பு இல்லையே. சும்மா ஏதாவது தேறுமாதான்னு தான் உன்னைப்பிடிக்கிறாங்க. அதனால நீ சொல்றத நம்பி உன்னைவிடறதத்தவிர வேறொன்றும் வழியில்லை அவர்களுக்கு"

நன்றாகப்புரிந்தது எனக்கு இது நடந்தது 88-90 களில் இப்போதும் இது ஒர்க் அவுட்டாகுமான்னு தெரியல அதனால இதெல்லாம் இப்போது டிரை பண்ணாதீங்க நண்பர்களே.

இப்படியே போய்க் கொண்டிருக்கும்போது , நான் வேலை பார்த்த இன்ட்டர் கிராப்ட்டின் பகுதியான ஸ்டிச் கிராப்ட்டின் டைரக்டர் சுசில் பெர்ஷாத் என்னைக் கூப்பிட்டிருந்தார். இந்த குடும்பத்தைப்பற்றி சிறிது சொல்லிவிடுகிறேன்.

 


 

இன்டர்கிராப்ட் மற்றும் ஸ்டிச்கிராப்ட் நிறுவனங்களின் முதலாளிகள் மல்ஹோத்ரா குடும்பத்தினர். இதன் தலைவர் ரவி மல்ஹோத்ரா. எப்பொழுதும் காட்டன் அல்லது லினன் துணியில் வெள்ளை பேண்டும் வெள்ளை சட்டையும் அணிவார். இவர் வருகிறார் என்றாலே தொழிற்சாலை முழுவதும் அமைதியாகிவிடும். பயமல்ல மரியாதை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டியமைத்தவர் இவர். இவருடைய தம்பி ராஜேஸ் மல்ஹோத்ரா. இவர் கொஞ்சம் ஜாலி டைப். ரவி ஆரம்பித்த இன்னொரு நிறுவனத்தின் MD. இவர்களின் தலைமை அலுவலகம் தம்புச் செட்டி தெருவில் இருந்தது. ஆடை ஏற்றுமதி நிறுவனமான இதன் தொழிற்சாலைகளின் ஒரு யூனிட் தம்பிச்செட்டி தெருவிலும் 2 யூனிட்கள் பழைய பிராட்வேயின் அருகிலிருந்த மினர்வா  தியேட்டரின் அருகிலிருந்த டேவிட்சன் தெருவிலும், இன்னொரு பெரிய யூனிட் பாலவாக்கத்தில் இருந்தன. இதில் யூனிட் 1 மற்றும் யூனிட் 3க்கு நான் மனித வள அதிகாரி. இந்த இரண்டு இடத்திலும் எனக்கு அலுவலகம் உண்டு. ரவி மல்ஹோத்ரா ஒரு ரேஸ் பிரியர். இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் முதற்கொண்டு பல கார்கள் இருந்தன. சென்னை சென்டாஃப்  சாலையிலிருக்கும் இவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது நானே எண்ணிப்பார்த்ததில் சுமார் 30 கார்கள் வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. எப்போதாவது நானும் கார் வாங்குவேன்  என்று நினைத்துக்கொண்டேன் .

இவர்களின் செல்லத்தங்கையை மணந்தவர்தான் சுசில் பெர்ஷாத் அவரும் இதில் ஒரு இயக்குநர் . என்னுடைய நேர் முதலாளி. மிகவும் கோபக்காரர் ஆனால் மிகவும் நல்லவர்.

ஒரு நாள் டென்ஷனுடன் அலுவலகம் வந்தவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார்.

“ஆல்ஃபி என்  நிலத்தைக்காணோம்”

“என்ன சார் சொல்லறீங்க”

" நம் நிலத்தில் ஏதோ ஆக்கிரமிப்பு நடந்துள்ளது"

"நீங்கள் டெல்லிக்கு அல்லவா போயிருந்தீர்கள்"

"ஆமா டெல்லியிருந்து வரும் வழியில் பார்த்தேன்"

"ஏர்போர்ட்டிலிருந்து நேரே நிலத்திற்குப் போனீர்களா?"

"இல்லையப்பா பிளேனில் இருந்து பார்த்தேன்"

எனக்கு நம்பமுடியவில்லை. சிரிப்பாக வந்தது. அடக்கிக் கொண்டே கேட்டேன்.

விமானத்திலிருந்து பார்த்தால் எப்படி நம்ம நிலம் என்று தெரியும்?

ஆர் யு ஸ்யுர் ?”

"நூறு சதவீதம் நான் பார்த்தது உண்மை"

"சரி நான் என்ன செய்ய வேண்டும்"

"நீ உடனே போய்ப்பார் நாளைக்கே போய்ப்பார். காலையில் வீட்டுக்கு வந்து டாக்குமென்ட் காப்பியை வாங்கிக் கொள்"

திருப்பெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் கோர்ஸ் அருகிலுள்ள வளர்புரம் என்ற கிராமத்தில் இருந்தது அந்த நிலம். எப்படிப் போய்க் கண்டுபிடிப்பது என்று திகைப்பாக இருந்தது. இருந்தாலும் முதலாளி சொல்லிவிட்டார் என்பதால், காலையில் கிளம்பி அவர்கள் வீட்டுக்குச் சென்று நிலப்பத்திரங்களின் நகலை வாங்கிக் கொண்டு என்னுடைய டி.வி.எஸ் சேம்பில் மெதுவாகக் கிளம்பிப் போய்சசேர்ந்தேன்.

வளர்புரம் கிராமத்தின் அதிகாரியைப் பார்த்த போது கர்ணத்தைப் பார்க்கச் சொன்னார். அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்த போது உள்ளிருந்து ஆஜானு பாகனாக ஆறு அடி உயரத்தில் கருத்த உடலில் இடுப்பில் வெறும் வேட்டியுடன் ஒருவர் வந்தார். அறுபது வயதிருக்கும். கர்ணம் இருக்கிறாரா என்ற கேள்வியைக் கேட்டவுடன் விறுவிறுவென்று வெளியே வந்து மூலைக்கு போனார். எனக்கு ஒண்ணும் புரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது. அவர் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலைத்துப்புவதற்கு மூலைக்குச் சென்றார் என்று.

“வாங்க சார் நான்தான் கர்ணம்" என்றார். நான் எதிர்பார்க்கவே யில்லை. வந்த விவரத்தைச் சொன்னேன்.

அப்புறம் திண்ணையில் உட்கார்ந்துடாக்குமென்ட்டைப்  பார்த்தார்.

"அடேய் பரதேசி என்னடா பரதேசியின் வாகனங்கள்" னு தலைப்புப் போட்டுட்டு கதையை எங்கேயோ கொண்டுட்டு போற"

"அட மண்டு மகேந்திரா கொஞ்சம் பொறுமையாக் கேளு"

வெளியே போகும்போதாவது சட்டையைப் போடுவார்னு நினைச்சேன். ஆனா, ஒரு துண்டைத்தோளில் போட்டுட்டு வினோபாஜி மாதிரி டயர் செருப்பைப்போட்டுவிட்டு கர்ணம் கிளம்பினார். வண்டி எங்க நிறுத்தியிருக்கீங்கன்னு கேட்க நான் டி.வி.எஸ் சேம்ப்பை காண்பிக்கவும், “கார் கொண்டு வரலயான்னு”, கேட்டுட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்தார். அவர் பின்னால் நான் ஓடினேன் - தொடரும்.