Monday, July 30, 2018

கஞ்சியும் துவையலும் !


Image result for Teenage boys in rural Tamilnadu
Thank you Flicker 
வேர்களைத்தேடி பகுதி -20
    இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_23.html
ஒரு திடுக்கிடும் திருப்பம் கதையில் வரும் சமயத்தில் இன்னொரு திடுக்கிடும் திருப்பமாக எங்கம்மாவின் தலை ஏணி வழியாகத் தெரிந்தது. கதையின் சுவாரஸ்யத்தில் எங்கம்மா ஏறி வருவதை நாங்கள் இருவருமே கவனிக்கவில்லை. எங்கம்மா எவ்வளவு ஸ்டிரிக்ட்டுன்னு உங்களுக்கும் தெரியும்தானே. கதைப் புத்தகம் படித்தால் கூட என்ன புத்தகம் படிக்கிறேன் என்று முதல் சில பக்கங்கள்  நடுவில் கொஞ்சம் இறுதியில் கொஞ்சம் என்று படித்துத்தான் ஒப்புதல் கொடுப்பார்கள். கையில் முருகனுக்கு காப்பியையும், கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையையும் வைத்திருந்தார்கள்.
"என்னடா படிக்கிறீங்க"
அவரசத்தில் முருகன், "கதை டீச்சர்"
“என்ன கதையா?”
“அதாம்மா வரலாற்றுப் பாடத்தில் உள்ள கதைகள்"
“சரி சரி இதை வாங்கிட்டுப்போ”
நல்லவேளை அம்மா மேலே ஏறி வரவில்லை. கடைசிப் படிக்கட்டில் நின்று கொடுத்துவிட்டு இறங்கிவிட்டார்கள். போகும்போது ஒன்றைச் சொல்லிவிட்டுப் போனது இருவருக்கும் சிரிப்பை வரவழைத்துவிட்டது.
"சத்தமாகப் படிங்கடா, அப்பத்தான் மண்டையில் ஏறும்".
அதற்கு மேலும் பொறுமையிழந்த நான். “முருகா வேண்டாம்டா போதும் சகிக்கல, நான் பாடத்தைப் படிக்கணும்”, என்று சொன்னேன். வந்த வேர்க்கடலையை கொறித்துவிட்டு, காப்பியையும் குடித்தவுடன் சுவாரஸ்யம் குறைந்துபோன முருகன் விடைபெற்றுச் சென்றான். அதற்குப்புறம் பாடத்தை எவ்வளவோ படிக்க முயன்றும் என்னால் படிக்க முடியவில்லை.
இரவு சீக்கிரமாய்ப் படுக்கைக்குச் சென்றும் தூக்கம் வரவில்லை. வைரமுத்து சொன்னதுபோல் "படுக்கையில் பாம்பு நெளியுது" சிட்டுவேசன் தான். காலையில் 4 மணிக்கு எழுந்து ஜெபித்துவிட்டு படிக்க ஆரம்பித்தேன். இரண்டு பாடங்கள் முழுவதையும் ஒரு ரெண்டு மணி நேரத்தில் எப்படி படித்து  முடிக்க முடியும். ஆனால் எப்படியோ பாஸ் செய்துவிட்டேன். பத்தாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்களைப் பார்த்தால் தெரியும். எல்லாப் பாடங்களிலும்  ஓரளவுக்கு நல்ல மார்க்குகள் எடுத்த நான் வரலாறு புவியியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருந்தேன். அந்த முதல் அனுபவத்தை மறக்க முடியாது.

அந்த மாதிரிப் புத்தகங்கள் கல்லூரி போனபிறகும் கூட என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அட நம்புங்க பாஸ். அந்த வயதில் நடந்த இன்னொரு சுவாரஸ்ய சம்பவத்தைச் சொல்கிறேன்.
எங்கம்மா அப்பா வேலை செய்த இந்து நடுநிலைப்பள்ளி ஏப்ரல் கடைசி நாள்வரை நடக்கும். மே மாதம் 1-ஆம் தேதி முதல் விடுமுறை. ஜூன் 1 அல்லது வருகின்ற முதல் திங்களன்று தான் பள்ளி துவங்கும். நீங்கள் ஆசிரியர் வீட்டில் பிறந்திருந்தால், “மே மாசம் பண்ணிரலாம், மே மாசம் பாத்துக்கலாம், மே மாசம் கண்டிப்பாய் வர்றேன்", என்று அடிக்கடி சொல்லுவதை கேட்டிருப்பீர்கள். நானும் அப்படித்தான், ஆனால் நான் தம்பித்தோட்டம் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் போது மார்ச்சு மாதத்திலேயே பரீட்சை முடிந்துவிடும் என்பதால், விடுமுறைக்கு ஏப்ரல் மாதத்திலேயே ஊருக்கு வந்துவிடுவேன்.
Image result for easy chair wooden with hands

   என்னுடைய பெரிய பொழுதுபோக்கு நூலகம் சென்று புத்தகங்களை எடுத்து வந்து முன்  ஹாலில் உள்ள ஈஸி சேரை ஃபேனுக்கு அடியில் போட்டுக் கொண்டு, இரு கைப்பிடிகளிலும் இரு கால்களை வைத்துக் கொண்டு,  சுவாரஸ்யமாக படிப்பதுதான்.  1 மணிக்கு மதிய இடைவேளையில்  பெற்றோரும் தம்பிகளும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். நான் ரேடியோ ரூமில் பெருக்கிவிட்டு பாயை விரித்து தட்டுகளைக் கழுவி வைத்துவிடுவேன். எனக்கும் என் அப்பாவுக்கும் மட்டும் குறிப்பிட்ட தட்டு இருக்கும். அம்மாவுக்கு ஓவல் ஷேப், என்னது வட்ட வடிவம். கொஞ்சம் நேரத்திற்கு முன்னால் நூலகம் சென்று திரும்பி வரும்போது நல்ல கல்லாமை மாங்காய்களை வாங்கி நன்கு கழுவி காம்பை வெட்டிவிட்டு வரும் பாலைத் துடைத்துவிட்டு சிறு  துண்டுகளாக நறுக்கி உப்பு மிளகாய்த்தூள் போட்டு கலந்து வைத்துவிடுவேன். அம்மா வந்ததும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டுவர அனைவரும் ஒன்றாக  உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பது அப்பாவின் கண்டிப்பு. அப்பாதான் சாப்பாட்டைப் பரிமாறுவார்கள். காலையில் பொதுவாக மற்ற நாள்கள் தினமும் இட்லி தான். திங்கள் கிழமைகளில் மட்டும் சுடுகஞ்சி அகத்திக்கீரை அல்லது தேங்காய்த்துவையல் இருக்கும். கஞ்சி என்றால் வடித்த சோறில் சுடுதண்ணீர் ஊற்றித்தருவார்கள். சோற்றை உண்டுவிட்டு கடைசியில் இருக்கும் தண்ணீரில் மிச்சத் துவையலை கலந்து குடிப்பேன். அமிர்தமாக இருக்கும். எங்கப்பா மட்டும் சுடுநீருக்குப்பதிலாக ரசம் ஊற்றிச் சாப்பிடுவார். அவருக்கு மட்டும் சலுகை.


Related image
கல்லாமை மாங்காய்

மற்ற நாட்களில் இட்லிக்கு தேங்காய்ச் சட்டினி அல்லது, பருப்பு கத்திரிக்காய் கடைந்தது அல்லது தக்காளிச்சட்டினி இருக்கும். தினமும் இட்லி என்றாலும் தொட்டுக்க வேறு வேறு சட்னி இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தோசை சுட்டுத் தருவார்கள் எங்கம்மாவின் தாயார், எங்கள் ஆயா இருக்கும் போது இட்லிக்கு ரத்தப் பொரியல்  செய்து தருவது ஞாபகம் இருக்கிறது. புதன். சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டன் குழம்பு இருக்கும். அப்போதெல்லாம் கோழிக்கடைகள் இருக்கவில்லை. 
Image result for mutton shops in india

கோழிக்கறி வேண்டுமென்றால் வத்தலக்குண்டு அல்லது பெரியகுளம் போய் வாங்கி வர வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான வீடுகளில் கோழி வளர்ப்பார்கள். தேவைப்பட்டால் அடித்துச் சாப்பிடுவார்கள். உயிருடன் கோழி விலைக்கும் கிடைக்கும். ஆனால் எங்கம்மாவுக்கு உயிர்க் கோழியை அடித்துச் சமைப்பது தெரியாதென்பதால் எப்போதும் மட்டன்தான். ஏதாவது விசேஷங்களுக்கு அப்பா பெரியகுளம் போய் கோழி வாங்கி வருவார். ஃபிரிட்ஜ்  எல்லாம் இல்லையென்பதால் அன்றைக்கே செய்வது அன்றைக்கே சாப்பிட்டு விடுவோம். மீதமுள்ளது பின் வீட்டுச் சொக்கருக்குப் போய்விடும் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழம்பு. துவரம்பருப்பு சாம்பார், பாசிப்பருப்பு சாம்பார், கத்தரிக்காய் புளிக்குழம்பு, மொச்சை கத்தரிக்காய் குழம்பு ஆகியவை மாறி மாறி வரும்.
Image result for idli chutney

ரீசஸ் என்று சொல்லும் இடைவேளைக்கு 10.30 மணிக்கு வரும்போதுதான் அம்மா  வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போவார்கள். காலையில் 4 மணிக்கு எழுந்தும் வேலை சரியாக இருக்கும். காலை உணவுடன், மத்திய உணவும் தயாரித்து முடித்து 8.30 மணிக்குள் பள்ளிக்குப் போக வேண்டும்.எங்கப்பா சரியான நேரத்திற்குப் போய்விடுவார். அம்மா சிறிது தாமதமாக தன்னுடைய பிள்ளைகள் படை சூழ பள்ளிக்குச் செல்வார்கள்.
அப்போதுதான் எங்கள் வீட்டின் பின்புறம் புதிதாகக் கல்யாணமான ஒரு முஸ்லீம் தம்பதிகள் குடியேறியுள்ளதாக அம்மா சொன்னார்கள். நான் நூலகம் போய் வந்த ஒரு நாள் காலை 10 மணிக்கு தண்ணீர் குடிக்க சமையலறைக்குச் சென்ற போது பின்புறம் சிரிக்கும் சிணுங்கும் சத்தத்தோடு கொலுசு வளையல் சத்தம் கேட்டது.
-தொடரும்.    

Thursday, July 26, 2018

மகளிர் மரபு அன்றும் இன்றும் !


Fetna – 2018 பகுதி  2
 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_12.html

Fetnaவில் நடந்த கருத்துக்களத்தில் அடியேன் கலந்து கொண்டு பேசிய உரை
Image result for suba veerapandian
சுபவீரபாண்டியன்
சுபவீரபாண்டியன் ஐயா உள்ளிட்ட பேரவைக்கு என் பணிவான வணக்கங்கள். மகளிர் மரபு அன்றும் இன்றும் என்ற தலைப்பை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஏனென்றால்  எனக்கு நான்கு பெண்களோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறாக நினைக்க வேண்டாம். ஒன்று என் அம்மா, அவர் நேற்றைய தலைமுறை, இரண்டாவது என் மனைவி அவர் இன்றைய தலைமுறை மூன்றாவது என் இரு மகள்கள் அவர்கள் நாளைய தலைமுறை.
என் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள். மதுரைக்கருகில் ஒரே பள்ளியில் வேலைபார்த்தார்கள் . சம்பள நாளில் அம்மா கையெழுத்து மட்டும்தான் போடுவார். பணத்தை வாங்குவது செலவழிப்பது என் அப்பாதான். ஆனால் என் நல்லவேளை அப்பா அநாவசியச் செலவு செய்யமாட்டார். பிள்ளைகளான எங்களின் படிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் தான் செலவழித்தார்.
நான் அதே பழக்கத்தை என் மனைவியிடம் எதிர்பார்த்தேன். ம்ஹூம் நடக்கவில்லை. என் அம்மா என் அப்பா மேல் வைத்திருந்த மரியாதை கலந்த பயம்,  மதிப்பு ஆகியவற்றை நினைத்தால்  இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் இதையெல்லாம் ஒரு அப்பாவின் மகனாக, மனைவியிடம் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். 1 லட்சம் டாலர் சம்பாதித்தாலும் ஒரு 100 டாலருக்கு அல்லாட வேண்டியிருக்கு. கேட்டால் "உனக்கு விவரம் பத்தாது" என்கிறாள். நல்லவேளை இது என் அம்மாவுக்கு தெரியாது அப்படியே 100 கொடுத்தாலும் நூறு முறை பத்திரம் பத்திரம் என்கிறாள் .

ஒரு நாள் என் அம்மா காலை வேளையில் என் அப்பாவிடம் ஒரு மஞ்சள் நிறக் கயிற்றில் ஒரு மஞ்சளைக் கட்டி கழுத்தில் கட்டச் சொன்னார்கள். என் அப்பாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஏன் என்று திகைப்பாக இருந்தது. ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே தங்கத்தாலி இருந்தது. "என்ன சுசிலா எதுக்கு உனக்கு ரெண்டு தாலி" என் எங்கப்பா கிண்டல் பண்ணார். ஆனா நடந்தது என்னன்னா, தங்கத்தாலியில் கோர்க்கப்பட்ட குண்டு கொஞ்சம் லூசாயிருந்ததால் ஆச்சாரியாரிடமும் கொடுப்பதற்காக, முடிவு செய்த என் அம்மா, வெறும் கழுத்தோடு இருக்கக்கூடாது அப்படி இருந்தா கணவனுக்கு ஏதாவது ஆபத்து வரலாம்னு நினைச்சு. அப்படிச் செய்தாங்க. இது வெறும் மூடநம்பிக்கையா இருக்கலாம். ஆனா தன் கணவன் மேல் வைத்திருந்த பற்று, பாசம் மரியாதை எல்லாவற்றையும் காட்டுவதாகவே அது இருந்ததுன்னு நினைக்கிறேன்.   
நாங்கள் கிறித்தவர் என்றாலும் தமிழ்க்கிறித்தவர் என்பதால் இந்த தாலிகட்டும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
              திருமணமான புதிதில் நடந்த ரோட்டரி சிறப்பு மீட்டிங்கில் தாலியின் சிறப்பு மகிமை, மரபு பாரம்பரியம் பற்றி ஒருவர் பேசினார். அதற்கு நானும் என் மனைவியும் போயிருந்தோம். போய்விட்டு வந்து உடை மாற்றி வந்து பார்த்தால் என் மனைவியின் தாலி கோட்  ஸ்டாண்டில்  தொங்கிக் கொண்டிருந்தது. நானே தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது போல பயந்துவிட்டேன். என்னாச்சுன்னு கேட்டேன், "அது கழுத்தை உறுத்துகிறது" என்றாள். போடுகின்ற பெண்களுக்கு மட்டுமல்ல அதனைப் பார்க்கிற கண்களுக்கும் உறுத்த வேண்டும் என்றுதானே தாலி கட்டுவது வழக்கமாயிற்று.  இதில என் பொண்ணு தாலி கட்டுவது மட்டுமல்ல மோதிரம் போடுவது கூட அடிமைத்தனம் என்கிறாள். இப்படியாக பெண்களின் மரபு மாறிவருகிறது.
மூத்த நாகரிகமான நம் தமிழ் நாகரிகத்தில், நம் சமுதாயம் பெண்வழிச் சமுதாயமாகவே இருந்திருக்கிறது. ராகுல சாங்கிருத்தியன் எழுதிய "வாய்காவிலிருந்து கங்கை வரை என்ற புத்தகத்தில்  இதற்கான சான்றுகள் இருக்கின்றன.
வீடு, விவசாயம், சமூகம் என எல்லாவற்றையும் பெண்கள் தான் நடத்தியிருக்கின்றனர். மேட்ரியார்க் என்று சொல்வார்கள். எந்தக் காலக் கட்டத்தில் இது மாறி ஆணாதிக்க சமுதாயமாக ஆகிவிட்டது என்று தெரியவில்லை. சதி, விதவைக்கோலம், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு போன்ற பிற்போக்குத்தனங்கள் வந்து ஆக்கிரமித்தன. நல்லவேளை அவையெல்லாம் பெரும்பாலும் இன்றைக்கு இல்ல, இவையெல்லாம் நமது மரபுகள் இல்லை. பெண்ணைத்தூக்கிப் பிடித்து தெய்வமாக்கும் மரபு நம் மரபு, நாட்டையும் ஆறுகளையும் கடலையும், ஏன் மொழியையும் கூட பெண்ணாக தாயாக நினைக்கும் மரபு நம் மரபு, மாற்றங்கள் பல நடத்திருந்தாலும் பாசம்  செலுத்துவதிலும், நேசம் காட்டுவதிலும், வீட்டை நிர்வகிப்பதிலும், பிள்ளைகளை உருவாக்குவதிலும் மகளிர் மரபு அன்றும் இன்றும் ஏன் என்றும் மாறாமல் இருக்கிறது. இருக்கும் என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடை பெறுகிறேன், வணக்கம்.
Fetna பதிவுகள் தொடரும் >>>>>>

Monday, July 23, 2018

மொட்டை மாடியில் படித்த கெட்ட புத்தகம் !!!!


வேர்களைத்தேடி பகுதி -19
Related image
Courtesy: Google
                              இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

https://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_16.html
வரலாறு புவியியல் எனக்கு அவ்வளவாக அப்போது பிடிக்காது. ஏனென்றால் சிறுவயதிலிருந்து 10-ஆவது முடிக்கும் வரை அதற்குச் சரியான ஆசிரியர்கள் கிடைக்காதலால் என்று நினைக்கிறேன். ஆனால் இன்று வரலாறுதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சப்ஜக்ட் என்று உங்களுக்கும் கூட தெரியும். அவ்வளவு விருப்பமில்லாத ஒரு பாடத்தின் பரீட்சை. அதோடு நாளையோடு தேர்வுகள் முடியப்போகிறது. அதன்பின் 12ஆம் வகுப்பு எங்கே எப்படி ஆரம்பிக்கப் போகிறது என்று ஒரு பதட்டம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது தேவதானப் பட்டியில் பத்தாவது வரைதான் இருந்தது. நாளைய தினம் தேர்வு முடிந்து ஆரம்பிக்கும் கோடை விடுமுறை என்ற மகிழ்ச்சி இன்னொரு புறமிருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் புத்தகங்களை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று மற்ற தேர்வுகள் போலவே நன்றாக எழுதிவிட வேண்டும் என்ற உந்துதலில் படிக்க ஆரம்பிக்கும் போது நண்பன் முருகன் வந்து சேர்ந்தான். வீட்டுக்கு வந்த அவனை எங்கம்மா மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தார்கள்.
"என்னா சேகரு படிப்பு பலமா?" என்றபடி ஒரு விஷமப் புன்னகையுடன் மேலே வந்தான் முருகன்.
'ஆமடா இன்னும் ஒரு பரீட்சைதானே அதையும் முடிச்சுட்டு அப்புறம் ஜாலியா இருக்கலாம்ல".
"சரிசரி உனக்கு ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறேன்”.
"என்ன புத்தகம் வரலாறு புவியியல் நோட்ஸ் ஏதாவது கொண்டு வந்திருக்கிறாயா?" "இல்லடா வேற புத்தகம்" என்று சொன்ன முருகன் தன சட்டையை ஏற்றி வயிற்றில் சொருகி வைத்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்தான். மங்கலான  எழுத்துக்களில் சாணித்தாளில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் அது புத்தகத்துக்கு அட்டை போட்டு வைத்திருந்தான். அந்த அட்டையை நீக்கி முன் படத்தைக் காண்பித்தான்.
“கதைப்புத்தகம்னா பரீட்சைக்கு அப்புறம் படிக்கலாம்டா”
இல்லடா நீ பாரேன் இதைப்படிச்சுட்டு அப்புறம் பாடத்தைப்  படிக்கலாம்”.
அந்தப் படத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
"முருகா என்னடா இது?"
"இதுதாண்டா வாழ்க்கைப் பாடம். கொஞ்சம் கூட விவரமில்லாத ஒன்னை மாதிரி ஆள்களுக்கே எழுதி வெளியிடற புத்தகம்".
"டே வேனாண்டா முதல்ல பாடத்தை படிச்சுரலாம். லீவு விட்டபின் இதெல்லாம் வச்சுக்கலாம்"
"இல்லடா நம்ம எழுவனம்பட்டி முனியாண்டிதான் இதைக் கொண்டுவந்தான். நாளைக்கு அவன்ட்ட கொடுக்கனும் அப்புறம் நாம அவனை எங்க சந்திக்கப்போறோம்?. அதனாலதான் இன்னக்கி வாங்கிட்டு வந்தேன்”.
வேண்டா வெறுப்பாக அவனிடம் உட்கார்ந்து இருவரும் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிடித்தோம். அதிலிருந்த கதையை என்னால் கொஞ்சம் கூட நம்பமுடியவில்லை. இப்படியும் புத்தகத்தை எழுதுவார்களா? என்று மிகவும் கலவரமாக இருந்தது.
கட்டுப்பெட்டியான ஆசிரியர் வீட்டில் பிறந்த நான் கெட்ட வார்த்தைகளைப் பேசுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. நண்பர்கள் எப்போதாவது கெட்ட வார்த்தைகள் பேசினால் அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன். அதோடு வாத்தியார் பையன் என்பதால் கூடப் படித்தவர்களும் என்னிடம் அப்படியெல்லாம் பேச மாட்டார்கள். அப்படி மீறி ஏதாவது பிரச்சனையில் பேசினாலும் நான் திரும்ப கோபப்பட்டு திட்டினால் 'நீ சொல்றத உனக்கே திரும்பிச் சொல்றேன்" என்பது தான் என்னுடைய அதிகபட்ச திட்டு. அதைச் சொல்லிவிட்டு அடக்க முடியாத அழுகையுடன் ஓடி வந்துவிடுவேன். தனியாக வந்துவிட்டாலும் அப்படிப்பட்ட வார்த்தைகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ இன்று வரை உச்சரித்ததில்லை.
Image result for சரோஜாதேவி செக்ஸ் புத்தகம்
நன்றி :யுவகிருஷ்ணா 
நான் பிறந்த வீட்டிலும் சரி இப்போது நான் இருக்கும் என் வீட்டிலும் சரி இப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்காது. புல்ஷிட்னு நாம இந்தியாவில சொல்ற சாதாரண வார்த்தை கூட ஒரு நாள் சொல்லிவிட்டு என்னோட ரெண்டு மகள்களும் என்னைக் காய்ச்சி எடுத்தத நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
அப்படி ஒரு சூழ்நிலையில் வளர்ந்த நான் அந்தப் புத்தகத்தைப் படித்து அதிர்ந்து போனேன்.  பச்சை பச்சையாக எழுதப்பட்ட நீலப்படத்தில் இருப்பது போன்ற சிவப்பு விளக்குக் காட்சிகளை விவரிக்கும் ஒரு மஞ்சள் பத்திரிகை அது. நிறங்கள் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படுவது பின்னால்தான் எனக்குத் தெரிய வந்தது. அந்தப் புத்தகத்தின் தலைப்பு  "“பதினாறு வயதில் பதினேழு தொல்லைகள்”. அதை எழுதியவர் சரோஜாதேவி என்று போடப் பட்டிருந்தது.  முருகன், நடிகை சரோஜாதேவிதான் அது என்று சத்தியம் செய்தான். ஒரு பெண் இப்படியெல்லாம் எழுதுவாளா? சீச்சி என்ன ஒரு பெண் என்று நினைத்தேன்.
எனக்கு படிக்கவும் பிடிக்கவில்லை. படிக்காமலிருக்கவும் முடியவில்லை. இருவரும் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து உட்கார்ந்து படிக்க இருவருக்கும் வேர்த்துக் கொட்டியது. மாலை நேரத் தென்றலால் எங்களிருவரையும் குளிர வைக்க முடியவில்லை.
கொஞ்சம் இருங்க யாரோ போனில் கூப்பிடுறாங்க.
“ஹலோ சேகரு?”
“ ஐயையோ என்ன இது மகேந்திரன் வர்றான், ஏடா கூடமான நேரத்தில”.
“சொல்றா மகேந்திரா?”
“ஏண்டா ஊமக்குசும்பு ஒல்லிப்பச்சா இதையெல்லாம் படிச்சியா? சொல்லவே இல்லை”.
“மகேந்திரா இதெல்லாம் வெளிய சொல்ற விஷயமா?”
“அட வரலாறு புவியியல் பரீட்சைக்கு நீங்க உயிரியல் படிச்சீங்களா? கருமம்ரா, ஆமா ஏண்டா என்னைக் கூப்பிடல”
“டேய் மகேந்திரா நீ வேற சும்மா இருடா”
“சேகரு, வளவளன்னு எழுதி வளத்தாம அதுல படிச்ச கதையைச் சீக்கிரம் சொல்றா”.
“ஹலோ ஹலோ என்னது சரியாகக் கேட்கலையே சிக்னல் சரியில்லையே”.
“ஏலேய் பரதேசி சும்மா கதைவிடாத, கதையைச் சொல்லாம  உன்னைவிடமாட்டேன்”.
“ஹலோ ஹலோ ஹலோலோ லோ லோ”.  
நல்லவேளை ஒரு சீனைப் போட்டு கழட்டிவிட்டுட்டேன்.
என்னது உங்களுக்கும் கதையைச் சொல்லனுமா?
இதென்ன விவகாரமாப் போச்சு என்ன பெரிய கதை உங்களுக்குத் தெரியாத கதையா? சரி சரி நடந்தத சொல்றேன். கதையைப் பாதி படிச்சிட்டு இருக்கும் போது, யாரோ மேலே ஏறி வர்ற சத்தம் கேட்டுச்சு பாத்தா எங்கம்மா வர்றாங்க?
-தொடரும்.

Thursday, July 19, 2018

தாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி !!!!

8 Most Irritating Habits Of Indian Husband


                          "தாய்லாந்துக்கு போய்விட்டு வரவா?”, என்று மனைவியிடம் கேட்டேன். அதன் பின் என்ன நடந்தது என்று சொல்வதற்கு முன்னால் அதன் பின்னணியைச் சொல்லிவிடுகிறேன். முகமது சதக் குழுமத்தின் அங்கமான பன்வேவ் கம்ப்யுட்டிங் (Openwave Computing LLC, New York) என்ற மென்பொருள் நிறுவனத்தில் நான் வேலை பார்ப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது இக்குழுமத்தின் மொத்த மதிப்பீடு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் பெருகியிருக்கிறது. முகமது சதக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையில் பிறந்த 'முகமது சதக்' தான் என்னுடைய நிறுவனத்தின் தலைவர். லாங் ஐலண்டில் எம்பிஏ படிக்க வந்து, படித்து முடித்தவுடன் ஆரம்பித்த நிறுவனம்தான் பன்வேவ்.
முகமது சதக்கின் அண்ணன் "அஸ்லாம் ஹூசைன்" தான் சென்னையில் உள்ள பன்வேவ் நிறுவனத்தின் "ஆஃப்  ஷோர்" மையத்தின் எம்டி (MD). இவருடைய பையன் ஜலாலுதீன் இரு வருடங்களுக்கு முன்னர் சித்தப்பாவைப் போலவே எம்பிஏ படிக்க நியூயார்க் வந்தார். அப்போதிருந்தே நிறுவன நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ள நேரம் கிடைக்கும்போதெல்லாம் நியூயார்க் மிட்டவுனில் உள்ள எங்கள் நிறுவனத்திற்கு வருவார். படித்து முடித்தவுடன் இங்கேயே முழுநேர வேலையில் சேர்ந்தார்.
இதற்கிடையில் ஜலாலுக்குத் திருமணம் நிச்சயமாகி அது 2018 மே மாதம் 9-ஆம் தேதி என்று முடிவானது. ஜலால் என்னைக் கண்டிப்பாகக் கலந்து கொள்ளக் கேட்டுக் கொண்டதினிமித்தம் நானும் போவதற்கு முடிவு செய்தேன்.
என் மனைவியிடம் சொல்ல, “சித்திரையில் அக்னி நட்சத்திரத்தில் போகாதே, கருகி விடுவாய், நானும் கண்டிப்பாய் வரமுடியாது”, என்று மறுத்துவிட்டாள். போய்த்தான் ஆக வேண்டும் என்று சொல்ல, “நீ வேண்டுமென்றால் போய்விட்டுவா”, என்று சொல்லிவிட்டாள்.
எப்பொழுதும் இந்தியா போகும் வழியில் ஏதாவது ஒரு நாட்டின் வழியாகச் சென்று அங்கே சில நாட்கள் தங்கிச் செல்வது என் வழக்கம் என்று உங்களுக்குத்தெரியும். இதற்கு முன்னர் இப்படி நான் பார்த்தது தான், லண்டன், சீனா, இலங்கை ஆகியவை. இந்தத் தடவையும் ஏதாவது ஒரு நாட்டின் வழியாகச் செல்லலாம் என்றபோது தாய்லாந்து ஞாபகம் வந்தது. "ஆனா அன்ட் தி கிங்" (Anna and  the  King) என்ற படத்தை சில வருடங்களுக்கு முன்னால் பார்த்ததிலிருந்து தாய்லாந்து என்னுடைய பக்கெட் லிஸ்ட்டில் இடம் பெற்றது.
அங்குள்ள பிரமாண்ட புத்தர் கோவில்கள், அரண்மனை மற்றும் மிதக்கும் அங்காடி ஆகியவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை. நம்புங்க பாஸ், அட நம்புங்க சிஸ் இதைத்தவிர வேறொன்றும் அல்லது வேறெங்கும் போவதற்கு எந்த ஐடியாவும் இல்லை.
தாய்லாந்து போகும் இந்தத் திட்டத்தை நண்பர்களிடம் சொன்னேன்.
"டேய் தனியாவா போற, ஏண்டா நாங்கெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து போறப்ப பெரிய உத்தமன் மாதிரி நான் வரலன்னு சொன்னே".
"அடேய் என்னோட ஆர்வங்கள் பார்க்க விரும்பும் இடங்கள் எல்லாம் வேறடா. உங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராது. அதனாலதான் நான் உங்க கூட வரல "
நம்பிட்டோம்,ஏலேய் ஏடாகூடமா எதையாவது செஞ்சு மாட்டிக்காதே ஆமா சொல்லிட்டோம், ஆமா உன் மனைவிட்ட சொல்லிட்டியா?”.
"இல்லடா இனிமேத்தான் சொல்லணும்".
“அடப்பாவி இன்னும் சொல்லலயா, அடேய் தாய்லாந்துக்கு தனியாய் போறேன்னு சொன்னா எந்த மனைவிதான் விடுவா?.
“அப்ப நீங்கெல்லாம் ஒண்ணாப் போகும்போது என்னடா சொல்லிட்டு போனீங்க?”.
"நாங்க சிங்கப்பூர்னு சொல்லிட்டுத்தான் தாய்லாந்து போனோம்".
“அதெல்லாம் முடியாதுறா இதுக்குப்போய் பொய் யெல்லாம் சொல்லத்தேவையில்ல. அதுதவிர பொய் சொல்லிட்டு அதை மெயின்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம்”.
"என்னவோடா நாங்க சொல்றத சொல்லிட்டோம், நீ அப்புறம் உன்பாடு உன் மனைவி பாடு"
இப்போது வீட்டில்  மனைவியிடம்
அப்ப இந்தியாவுக்கு நீ வரலையா?” 
“லூசாப்பா நீ இந்த வெயில்ல யாராவது இந்தியாவுக்குப் போக முடியுமா?”
“நான்தான் சொன்னேனே, இந்தக் கல்யாணம் அவசியம் போக வேண்டிய ஒண்ணு”.
“சரி அதான் போய்ட்டுவான்னு சொல்லிட்டேன்ல”.
 “தேங்க்ஸ் அதோட போற வழில தாய்லாந்துக்கு போய்ட்டு அப்புறம் சென்னைக்குப் போலாம்னு இருக்கேன்”. (தயங்கி தயங்கி மிகவும் தயங்கிக் கேட்டேன்)
“தாய்லாந்துக்கா, சரி போய்ட்டு வா ஆனா பத்திரம்"
என் கற்பனைக்கு சடுதியாக சிறகுகள் முளைக்க, நான் வானவீதியில் பறக்க ஆரம்பித்தேன்.
எந்தச் சண்டையோ, கேள்வியோ, எதுக்கு? அங்க என்ன இருக்கு? என்று எந்த விசாரணையும் இல்லாம, சரின்னு சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சரியம். நண்பர்களிடம் சொன்னால் அவர்களுக்கும் ஆச்சரியம்தான்.
அதனால் கண்கள் பனிக்க, இதயம் நனைய நான் நினைத்தேன். என் மனைவிக்குத்தான் என் மேல் எவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு என்றும் பாத்திரவானாக இருப்பேன். ஒழுக்கம் காப்பேன் உத்தமனாய் நடப்பேன் என்று உளமாற உறுதி கூறினேன். அப்படியே போய்த்திரும்பி வந்துவிட்டேன். என் மனைவியின் மீது அன்பும் மதிப்பும் கூடியது.
திரும்ப நியூயார்க் வந்து சேர்ந்தபின் ஒரு நாள் நான் பாத்ரூமில் இருந்தபோது வெளியே என் மனைவி தன் தோழியிடம் தலைவாரிக் கொண்டே ஸ்பீக்கர் போனில் பேசிக் கொண்டிருந்தாள். பல விஷயங்களைப் பற்றிப்  பேசிவிட்டு என்னுடைய பயணம் பற்றிய பேச்சு வந்தது.
"ஏண்டி எப்படி நீ தாய்லாந்துக்கு  அவரை  தனியா அனுப்பின? நானெல்லாம் இந்த மாதிரி தப்பை செய்யவே மாட்டேன்".
“அடப்போடி முசப்பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பாத்தா தெரியாதா?".
நான் உள்ளே திடுக்கிட்டதில் ஒரு சில துளிகள் தொடையில் விழுந்தன. அதோடு எனக்கு ஒரு சில சந்தேகங்கள் எனக்கு உதித்தன. 
1.   இந்தப் பழமொழியை இவள் எங்கே கற்றுக் கொண்டாள்?
2.   இந்தப்பழமொழியில் முயல் யார்? நாய் யார்?
3.   தாய்லாந்து போவதற்கு முன்னால் இதனைக் கேட்டிருந்தால் ஒருவேளை என்ன நடந்திருக்குமோ?
மகேந்திரன் : “டேய் சேகர்எனக்கு ஒரு சந்தேகம்  தொடையில் விழுந்தது கண்ணீரா சிறு நீரான்னு சொல்லாம முடிச்சிட்டியே?”
(விரைவில் எதிர்பாருங்கள் தாய்லாந்தில் பரதேசி)

Monday, July 16, 2018

பரதேசியின் பதினாறு வயதினிலே !!!!!!


வேர்களைத்தேடி பகுதி -18
                              இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post.html
             உள்ளே பார்த்தால் கோசானும் தனபாலும் நெருங்கி  உட்கார்ந்து   சோமபானம் அருந்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் .ரத்தம் வர அடித்துக்கொண்டு சண்டை போட்ட இருவரும் மிகக்குறுகிய காலத்திலேயே திரும்பவும் ஒன்றிணைந்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது .  கிராமத்தில் இப்படி அடித்துக்கொள்வதும் சேர்ந்து கொள்வதும் சகஜம்தான் .ஆனால் தீராத பகை மூன்று நான்கு ஜென்மங்களுக்குத் தொடர்வதும் கிராமத்தில் நடக்கும் .அது பற்றி இன்னொரு சமயம் சொல்கிறேன் . இப்போது வேறொரு நிகழ்வைப்பார்ப்போம்.
Image result for பள்ளி சீருடை 2018

நானும் சிறிது சிறிதாக வளர்ந்து இப்போது பதின்மப் பருவம் என்று சொல்லக் கூடிய விடலைப் பருவத்துள் நுழைந்தேன். நானோ ஆசிரியர்களின் மகன் என்பதால் எனக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன. ஒரே வீட்டில் பல்லாங்குழி, சொட்டாங்கல் என்று என்னோடு விளையாடிய பல பெண்களும் இப்போது ஒதுங்குகிறார்கள். வெட்கத்தோடு விலகி நடக்கிறார்கள். முதலில் எனக்கும் ஒன்னும் புரியவில்லை. வெறும் சட்டை பாவாடையில் இருந்தவர்கள் மேல், தாவணி ஒன்று புதிதாக முளைத்தது. முஸ்லீம் பெண்களின் தலையில் அதுவே முக்காடாகவும் விழுந்தது. எட்டாவதோடு பள்ளியை முடித்துக் கொண்டவர்களும் சிலர். என்னோடு ஓடியாடி ஆண் பெண் வித்தியாசமில்லாமல் விளையாடியவர்கள் இப்போது பார்த்தாலே குனிந்து கொள்கிறார்கள்.
அவர்கள் மாறினாலும் எங்கள் யூனி ஃபார்ம் மாறவில்லை. வெள்ளைச் சட்டையுடன் காக்கி அரைக்கால் சட்டையும் தான் எங்கள் யூனி ஃபார்ம். ஒரு சமயத்தில் அரைக்கால்  சட்டை போட வெட்கம் வந்தது. அப்போதுதான் நானும் பருவத்தை அடைந்தேன் என நினைக்கிறேன். என் அப்பாவிடம் முழு பேண்ட் கேட்டேன். அதெல்லாம் கல்லூரி போனபின் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி தட்டிக் கழித்ததால் அரைக் கால்ச்சட்டை போடும்போதெல்லாம் வெட்கம் பிடுங்கித்தின்றது. அதுவும் பெண்கள் கூட்டமாக உட்கார்ந்திருக்கும் இடங்களைக் கடக்கும்போது பெரும் அவஸ்தையாக இருந்தது.
Image result for Tamilnadu school girls

 நான் ஒன்பதாவது படித்த அரசினர் உயர்நிலைப்பள்ளி, பெண்களும் ஆண்களும் படிக்கும் பள்ளி என்றாலும் இருவரும் சகஜமாக பேசுவது பழகுவது என்பது கிட்டத்தட்ட நின்றுபோனது. என்னுடைய பார்வையிலும் அப்போதுதான் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. உடம்பில் அதுவரை கண்டு கொள்ளாத சில பாகங்கள் இப்போது தொந்தரவுகளைத் தந்தன. அதோடு பள்ளியாசிரியராக என் அப்பா இல்லை என்பது கண்களுக்கு சில இலவச சுதந்திரங்களை அளித்தன. உதட்டின் மேலே மிக லேசான சில பூனை முடிகள் தென்பட்டன. இது என்றைக்கு பெரிதாகி நான் மீசை வளர்ப்பது என்று ஆயாசமாக இருந்தது.
கண்ணாடி முன் செலவழிக்கும் நேரம் சற்றே அதிகரித்தது. நண்பர்கள் கூடும்போதெல்லாம் பெண்கள் மட்டுமே பேசு பொருளாக இருந்தார்கள். சினிமாவில் வரும் டூயட்கள் இப்போதுதான் விளங்க ஆரம்பித்தன. அதுவரை சாதாரண பெண்களாகத் தெரிந்தவர்கள் எல்லாம் அழகிகளாகத் தெரிந்தார்கள். அந்தச் சமயத்தில்தான் எனக்கு புதிய ஒரு நண்பன் கிடைத்தான். அவனும் ஆசிரியர்களின் மகன். அவன் என்னைவிட மிக விவரமாக இருந்தான். அவன் பெயரை பெருமாள் என்று வைத்துக் கொள்ளுவோம்.
நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தான். இருவரும் அடிக்கடி சந்தித்து குசுகுசுத்தோம் கிசுகிசுத்தோம். அவன்தான் குழந்தை எப்படி தாயிடமிருந்து பிறக்கிறது என்று சொன்னான். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சத்தியமாகச் சொல்லுகிறேன் என்னை நம்புங்கள் திருமணம் முடித்தால் பருவ வயதுவரும்போது குழந்தை தானாகப் பிறக்கும். அதுவும் வயிற்றை அறுத்துத்தான் எடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உடலுறவு என்பதெல்லாம் அசிங்கம் கிராமத்தில் படிக்காதவர் மத்தியில் மட்டுமே இப்படியிருக்கும். படித்தவர்கள் டவுனில் இருப்பவர்கள் இப்படியெல்லாம் அக்கிரமமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். குறிப்பாக குழந்தை பெண்ணுறுப்பின் வழியாகத்தான் வரும் நானும் அப்படித்தான் வந்தேன் என நினைத்தால் பெருத்த அவமானமாக இருந்தது. என்னுடைய பருவ மாற்றங்களை முதலில் கண்டுபிடித்தது என் அம்மாதான். கொஞ்சம் என்னைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.
இசையில் ஆர்வமாக இருந்த நான் என் தம்பிகளுக்குத் தாலாட்டுப்  பாடும்போது கி.வீரமணி, மதுரை சோமு, நாகூர் அனிபா போன்ற பிறமதப் பாடல்களைப் பாடும்போதெல்லாம் கண்டு கொள்ளாத என் அம்மா அப்போது எனக்கு மிகவும் பிடித்துப்போன "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே" என்ற பாடலைப் பாடும்போது விரைவாக வந்து "டேய் என்னடா பாட்டுப்பாடுற வேற பாட்டுக் கிடைக்கலயா?" என்று கடிந்து கொண்ட போது எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆனால் அதன்பின் அதன் அர்த்தத்தை பெருமாள் சொன்னபின்தான் ஓ இது அந்த விவகாரமா என்று எனக்குப் புரிந்தது. பெருமாளிடம் என் சந்தேகங்கள் எல்லாவற்றையும் கேட்டேன். அவனும் படம் வரைந்து பாகங்களைக் குறித்து விளக்கினான்.
நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும்போது திடீரென்று என் அம்மா வந்து புத்தகத்தை வாங்கி முதல் ஒன்றிரண்டு பக்கங்கள், நடுவில் ஒன்றிரண்டு கடைசியில் சில பக்கங்களை படித்து விட்டுத்தான் தொடர்ந்து படிக்க அனுமதிப்பார்கள். தப்பித்தவறி காதல் போன்ற வார்த்தைகள் இருந்துவிட்டால் மிகவும் கண்டித்து படிக்கவிட மாட்டார்கள். கல்கண்டு, கோகுலம், அம்புலிமாமா இவைகளுக்கு மட்டும்தான் அனுமதி. குமுதம், குங்குமம், இவையெல்லாம் நோ சான்ஸ்  எனபதால் நூலகம் சென்று அதிக நேரத்தை அங்கு செலவழித்தேன். புஷ்பா தங்கதுரை எழுதிய “லீனா ரீனா மீனா” என்ற புத்தகத்தை பெருமாள் கொடுத்தான். அந்தப்புத்தகத்தை காலையில் எழுந்து மறைத்து மறைத்துப் படித்து முடித்தேன். அதேபோல் சட்டை செய்யாமல் கிடந்த திருக்குறள் புத்தகத்தில் பெருமாளின் ஆலோசனைப்படி காலையில் எழுந்து காமத்துப் பாடலைப் படித்தேன். ஏன் சொல்லப்போனால் அதுவரை ஆர்வமாய் படிக்காத பைபிளை எடுத்து 'உன்னதப்பாட்டு'களை படிக்க ஆரம்பித்தேன்.
அவ்வப்போது மாலை நேரத்தில் மொட்டை மாடிக்குப் படிக்கப் போவேன். ஒரு நாள் பின்னாடியே எங்கம்மாவும் ஏறி வந்து மொட்டை மாடியின் நாலாபுறங்களிலும் பார்த்தார்கள். ஓரிறு வீடுகள் தள்ளி “அம்ஜத்” அங்கே மொட்டைமாடியில் எதையோ காயப் போட்டுக் கொண்டிருந்தாள். எங்கம்மாவுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. நானும் அப்போதுதான் முதன் முறையாக அவளை மொட்டை மாடியில் பார்த்தேன். அம்ஜத் அங்கே இருக்கும்வரை அம்மாவும் மொட்டைமாடியில் இருந்தார்கள். நானும் மற்றொருபுரம் போய் படிப்பது போல் பாவலா செய்தேன். அதுவரை நன்றாகத்தான் படித்துக் கொண்டிருந்தேன் ஆனால் என் அம்மா என்னிடம் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. அதன்பின் பலமுறை நான் மொட்டை மாடிக்குச் சென்று தேடிப்பார்த்தும்  அம்ஜத்தோ வேறு யாருமோ அங்கே தென்படவேயில்லை. எங்கம்மாதான் அம்ஜத்தை வரவிடாமற் செய்து விட்டார்கள் என்றொரு சந்தேகம். இப்படியே எந்த சுவாரஸ்யமுமில்லாமல் 2 வருடமும் ஓடி பத்தாவது பரீட்சையும் வந்தது. நானும் நன்றாகப்படித்து பரீட்சைகளை எழுதி முடித்தேன். கடைசி பரீட்சையாக வரலாறு புவியியல்  அதற்காக நான் படித்துக் கொண்டிருக்கும் போது பெருமாள் ஒரு புத்தகத்தை கொண்டு வந்தான். அதன் பெயர் “பதினாறு வயதில் பதினேழு தொல்லைகள்”.
தொடரும்


Thursday, July 12, 2018

மன்னர் பாஸ்கர சேதுபதி !!!!



FETNA 2018 -பகுதி 1
பெட்னா 2018  மலரில்  வெளிவந்த அடியேன் எழுதிய கட்டுரையின் முழுப்பகுதியை இங்கே கொடுக்கிறேன் 



சேதுபதி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது மறவர் பூமியான இராமநாதபுரம். மறவர் குல மன்னர்கள் ஆண்டதால் இதனை மறவர் பூமி என்பார்கள். ஆனால் அனைத்து குல மக்களையும் ஆதரித்து மகிழ்ந்தவர்கள் மறவ குல மன்னர்கள். அதில் முக்கியமான ஒருவர் பாஸ்கர சேதுபதி.
இராமநாதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட சேது மன்னர்களில் ஒருவர்தான் இவர். இராமநாதபுரம் என்றதும் நமக்கு உடனே இன்னொன்றும் ஞாபகத்துக்கு வரும் அது இராமேஸ்வரம் திருக்கோவில். இராமநாதபுரத்திலிருந்து வந்த இரத்தினம் அப்துல்கலாம் அவர்களையும் மறக்க முடியாது. தனுஷ்கோடியும் ஞாபகத்துக்கு வரும். அதன் இன்னொரு பெயர் சேது சமுத்திரம்.

இராமபிரான் தம் இலங்கைப் படையெடுப்பை வெற்றிகரமாக முடித்து அன்னை சீதாப்பிராட்டியை மீட்டு அழைத்து வந்த போது, நன்றி செலுத்தும் விதமாக இராமேஸ்வரம் கோவிலை ஏற்படுத்தி அங்கு தொழுது கொண்டு, அக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாக்கவும் ஒருவரை நியமித்தாராம். சேது பூமியையும் சேது சமுத்திரத்தையும் காக்க நியமிக்கப்பட்ட அவருக்கு ‘சேதுபதி’  என்ற பெயர் வந்து நிலைத்தது.
பாண்டியர் காலத்திருலிருந்தே வந்த இந்த சேதுபதி பட்டம், பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு கிட்டத்தட்ட அழிந்து  போனது. ஆனால் அதன்பின் மதுரையை ஆண்ட நாயக்க வம்சத்தில் வந்த மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர், புராதன சேதுபதி பரம்பரையை மீண்டும் தகுதிப்படுத்தி அவர்களுக்கான உரிமையைக் கொடுத்தார். இது நடந்தது 17-ஆம் நூற்றாண்டு. அப்படி முதலில் நியமிக்கப் பட்டவர்தான் சடைக்கத்தேவர். இராமேஸ்வரத்திற்கு  வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு அந்தக் கோவிலின் அறங்காவலர்களாகவும்  அவர்கள் விளங்கி வருகிறார்கள். ஆம் இன்றுவரை அது தொடர்கிறது.   இராமேஸ்வரத்தில் இருக்கும் சொக்கநாதர் ஆலயத்தைக் கட்டியது சடைக்கத் தேவர்தான். இந்த சேதுபதிகள் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்ததோடு நாயக்க மன்னர்கள் நடத்திய போர்களில் முக்கிய பங்காற்றினார்கள். குறிப்பாக திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த பல போர்களில் அப்போதிருந்த ரகுநாத சேதுபதி வெற்றிக்கு உதவியதால் அவருக்கு பட்டங்களோடு பல ஊர்களும் பரிசாகக் கிடைத்தன.
இளவயதில் பாஸ்கர சேதுபதி 

இராமநாதபுரம் பகுதிகள் தவிர, திருப்புவனம், மன்னார் கோவில், திருச்சுளி, தேவகோட்டை, அறந்தாங்கி, பிரான்மலை, சிவகங்கை, திருமயம் ஆகிய பகுதிகளும் இணைக்கப்பட்டன. 
சேதுபதிகளின் வரிசையில் ஏழாவதாக வந்து இரண்டாம் ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதிதான்  இந்த வரிசையில் மிகவும் புகழ் பெற்றவர். அப்போது ஆட்சியிலிருந்த மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கருக்கு இவர் வலதுகரமாய்த் திகழ்ந்தார். ஆனால் சொக்கநாதருக்குப் பின் ராணி மங்கம்மாள் ஆட்சிக்கு வர கிழவன் சேதுபதி தன்னை சுதந்திர மன்னராக அறிவித்ததோடு அதனை எதிர்த்து வந்த ராணி மங்கம்மாவின் சேனையையும் முறியடித்தார். இவர் உருவாக்கியதுதான் சிவகங்கை சீமை என்று அழைக்கப்படும் நாலுகோட்டைபாளையம். அதற்கு ஆட்சியாளராக உடையாத்தேவரை நியமித்தார். கிழவன் சேதுபதியின் மறைவுக்குப் பின்னர் விஜய ரகுநாத சேதுபதி பதவிக்கு வந்தார். அதன்பின் வந்த ஆங்கிலேய ஆட்சியில்  இராமநாத புர சமஸ்தானம் ஒரு ஜமீனாக குறுகியது. விஜய ரகுநாத சேதுபதியின் மகள்தான் வீரமங்கை வேலுநாச்சியார் அவரை சிவகங்கையின் இரண்டாவது மன்னருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அதன் பின்தான்  சிவகங்கையும் சுதந்திரப் பகுதியானது.
அதன்பின்னர் பட்டத்திற்கு வந்த ராஜா இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதிக்கும் அவர்தம் மனைவி ராணி முத்தாத்தாள் நாச்சியாருக்கும் முதல் மகனாக நவம்பர் 3 ஆம் தேதி 1868-ல் பிறந்தவர்தான் ராஜா பாஸ்கர சேதுபதி. இவருடைய முழுப்பெயர், “ஹிரன்யாகர்பயாஜி ரவிகுல முத்து விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி” என்பதாகும். ராஜா முத்துராமலிங்க சேதுபதியின் அண்ணன் பொன்னுச்சாமித்தேவர் தம் தம்பிக்கு உறுதுணையாக இருந்து நாட்டை பாதுகாத்து வந்தார். இவரின் மகன்தான் மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர்.
ஆனால் பாஸ்கர சேதுபதி வெறும் நான்கு வயதாகியிருந்த போது தந்தை மன்னர் முத்துராமலிங்க சேதுபதி இறந்துபோனார். அப்போதிருந்த ஆங்கிலேயே சட்டப்படி பாஸ்கர சேதுபதி கோர்ட் ஆப் வார்ட்ஸ் (Court of Wards)–ன் கட்டுப்பட்டுக்குள் வந்தார். பட்டத்து வாரிசு  வயதுக்கு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும். கோர்ட் ஆப் வார்ட்ஸ் என்பது மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பு.

அதன்படி பாஸ்கர சேதுபதி சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு ஆங்கிலக் கல்வியும், மேற்கத்திய பாணி நடையுடை பாவனைகள், கலாச்சாரம் ஆகியவையும்  கற்றுக் கொடுக்கப்பட்டன. அவருக்கு அமைந்த ஆங்கில ஆசிரியர் அவருக்கு ஆங்கில இலக்கியத்தை அறிமுகப்படுத்தியதோடு இசையையும் கற்றுக் கொடுத்தார். இசையில் இயற்கையான ஆர்வம் கொண்டிருந்த பாஸ்கர சேதுபதி பியானோ வாசிப்பதையும் நன்கு கற்றுக் கொண்டார். அதோடு அவர் இந்தியா  மற்றும் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
                                        
1888 ல் சிவ பாக்கியம் நாச்சியாரை மணந்து கொண்ட கையோடு , ஏப்ரல் 3 1889ல் மகாராஜா பட்டம் பெற்று இராமநாதபுரம் ஜமீனின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
மன்னர் பாஸ்கர சேதுபதி மேற்கத்திய கலை இலக்கிய கலாச்சாரத்தை கற்றுத் தேர்ந்தாலும் தமிழ்க் கலாச்சாரத்திலும் தமிழிசையிலும் தான் ஆர்வமாக இருந்தார்.
சேதுபதிகளின் குலக்கடவுளான இராமேஸ்வரம் அமர் இராமநாத சுவாமி தாயார் ராஜராஜேஸ்வரி ஆகியோர் மீது மிகுந்த பற்றும் பக்தியும் வைத்திருந்தார். பக்கத்தில் இருந்த திருப்புலானியில் அருள் பாலித்த பத்மாசினி தாயாரின் மேல் சுரட்டி ராகத்தில் ஒரு கிருத்தியை இயற்றினார். அதோடு சுவாமி விவேகானந்தர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சிக்காகோ நகரில் நடந்த  சமய மாநாட்டிற்கு தனக்குக் கிடைத்த அழைப்பில் தனக்குப் பதிலாக விவேகானந்தரை அனுப்பினார். அதற்கான அனைத்துப் பொருட் செலவையும் தானே ஏற்றுக் கொண்டார். சுவாமி விவேகானந்தரும் பாஸ்கர சேதுபதி மேல் மதிப்பும் மரியாதை வைத்து அவருக்கு “ராஜரிஷி” என்ற பட்டத்தைக் கொடுத்தார். சுவாமி விவேகானந்தர் தம்முடைய மாநாட்டை வெற்றிகரமாக முடித்து ராமேஸ்வரம் திரும்பும்போது பாஸ்கர சேதுபதி அவருக்கு மிகப்பெரிய வரவேற்புக் கொடுத்து 40 அடி உயரத்தில் ஒரு நினைவுத்துணையும் எழுப்பினார். அதில் “சத்யமேவஜெயதே” என்ற வரிகளைப் பொறித்தார். அதுவே 50 வருடங்களுக்குப்பின் இந்திய நாட்டின் கொள்கையாக உருவெடுத்து அசோகச் சின்னத்தில்  சேர்க்கப்பட்டது.


பாஸ்கர சேதுபதி மிகப்பெரிய வள்ளலாக உருவெடுத்தார். உதவி கேட்டுவந்தவர்களுக்கெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்புக்கு மேலாக அள்ளி அள்ளிக் கொடுத்தார். தான் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். ஆங்கிலேயர் என்ன நினைப்பார்கள் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் அந்த இயக்கத்திற்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்தார். தான் படித்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு ரூபாய் 40000 அளித்து அதன் மூலம் ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவினார். அந்தக் காலத்தில் இவையெல்லாம் மிகப்பெரிய தொகைகள்.  தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே சுவாமிநாத அய்யர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்து பல உதவிகளைச்செய்துள்ளார் .
  சிறு வயதிலிருந்தே டயரி எழுதும் பழக்கம் கொண்ட சேதுபதி தொடர்ந்து எழுதினார். அதனை அப்போதிருந்த ஆங்கிலேயரின் பதிப்பகமான G.W.டெய்லர் என்ற நிறுவனம் புத்தகமாக வெளியிட்டது. இசையில் தீராத ஆர்வம் கொண்ட சேதுபதி அவருடைய ஆட்சிக் காலத்தில் குன்றக்குடி கிருஷ்ண ஐயர், மகா வைத்தியநாத ஐயர், பட்னம் சுப்ரமணிய ஐயர், பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் போன்ற பல இசை விற்பன்னர்களை ஆதரித்து வந்தார்.
அவர் பதவியேற்கும்போதே அவருடைய சிறிய அன்னை வாங்கிய கடனான மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் கடன் அவர் மேல் வந்தது. அதன்பின் தொடர்ந்து தன்னுடைய கொடை  மூலம் அவருடைய சொத்து கரைந்து வந்தது. அதுதவிர அப்போதிருந்த பெரும் பணக்காரர்களான நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மற்றும் ஆலய நிதியிலிருந்து தன் சொத்துக்களை அடகு வைத்து தொடர்ந்து பலருக்கு உதவி செய்தார்.ஒரு கட்டத்தில் அவருடைய முழு ஜமீனும் திவாலாகும் நிலைமை வந்தது அப்போது அவருக்கு வயது 26 தான். கடன்காரர்களின் தொல்லை தொடர்ந்து அதிகரிக்க அவர் தம் பதவியை விட்டிறங்கி அப்போது மைனராக இருந்த தன்னுடைய மகனை அரியணையில் அமர்த்தும்படி ஆனது.


அவரிடம் ஏராளமான உதவிகளை வாங்கிய பலரும் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதோடு அப்போதிருந்த மாவட்ட ஆட்சியாளரிடம் புகார்களும் செய்தார்கள். இதனால் மிகவும் நொந்துபோன நிலையில் இருந்த சேதுபதி, 1903-ல் தனது 35 வயதிலேயே இயற்கை எய்தினார். இந்திய அரசு அவரின் நினைவாக 2004ல்  அவருக்கு தபால் தலை வெளியிட்டு  கௌரவப்படுத்தியது.
அன்னாரின் 150 –ஆவது பிறந்த நாளை கொண்டாடும் முகத்தான், அவர் தமிழுக்கும் தமிழருக்கும் செய்த பணிகளை நினைவு கூர்ந்து அவருடைய நினைவுகளைப் போற்றுவோம்
 தி.ஆல்ஃபிரட் தியாகராஜன், நியூயார்க்.  
(www.paradesiatnewyork.blogspot.com)

ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி நியூயார்க் வாசி. மான்ஹாட்டனில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றி வரும் இவர் தமிழ் மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர்.கவிதை , பேச்சு , பட்டிமன்றம் , இதழியல், வலைப்பதிவு என்ற பல தளங்களில் இயங்கி வரும் இவர் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இணைச்செயலாளராகவும் பணியாற்றிவருகிறார் .