Friday, May 31, 2013

கொலையா ? தற்கொலையா ?

சுஜாதா எழுதிய "ஜோதி"


            கொஞ்சம் இடைவெளிக்குப்பின், புதுமை எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'ஜோதி' என்ற குறுநாவலை படித்தேன், முதல் முறையாக. இது எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை. ஏனெனில், என்னுடைய வீட்டு நூலகத்தில் அநேகமாக சுஜாதா எழுதிய எல்லாப் புத்தகங்களும் இருக்கின்றன. (டேய் சேகரூ, அத்தனை புத்தகங்களை வைத்து என்ன பூஜை செய்றியா, எல்லாருக்கும் படிக்கக்கொடு: மகேந்திரா, எனக்குக்கூட சும்மா வைத்திருப்பதற்கு வருத்தம்தான், யார் இப்பல்லாம் தமிழ் படிக்கிறாய்ங்க, அதுவும் இங்க நியூயார்க்கில்)
            'ஜோதி' தினமணிக்கதிரில் வெளிவந்தது. எந்த வருடம் என்று தெரியவில்லை இப்போது கிழக்கு பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
எனக்குத் தெரிந்து சுஜாதாவின் எந்த புத்தகமும் போர் அடித்ததில்லை. அது நாவலாகவோ, சிறுகதையாகவோ, கட்டுரையாகவோ, கேள்வி பதிலாகவோ எதுவாக இருந்தாலும், சுவாரஸ்யம் மட்டும்  குறைந்ததில்லை. என்னுடைய வாசிப்புப்பரிணாமத்தில், அம்புலி மாமா, வாண்டு மாமா, கோகுலம் பத்திரிகை (இப்போதும் வருகிறதா?) முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ், தமிழ்வாணன் ஆகியவற்றுக்குப்பிறகு வந்த சுஜாதா (70 களிலிருந்து) இன்றுவரை அதே இடத்தில் இருக்கிறார்.  அதன்பின், புதுமைப்பித்தன், சா.கந்தசாமி,அசோகமித்திரன்  லாசாரா ,இந்திரா  பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன் , கி .ரா . சுந்தர ராமசாமி ,ஜெயமோகன்,சாரு நிவேதிதா என்று என் வாசிப்புத்தளங்கள் விரிந்தாலும்,  இன்றும் என்னை விடாதது சுஜாதாவும், காமிக்ஸ் புத்தகங்களும் மட்டும்தான்   .
இது சுமார்தான், சரக்கு தீர்ந்திருச்சு, சுஜாதாவுக்கு வயசாயிருச்சு என்று ஒருபய நாக்கு மேல பல்லைப்போட்டு சொல்ல முடியாத அளவுக்கு இறுதிவரை வாசிப்பு இன்பத்தைக் கொடுத்தவர், கொடுப்பவர் சுஜாதா.
அவருடைய திணிக்கப்படாத இயல்பான புதுமையும், நகைச்சுவை உணர்ச்சியும் எப்போதும் மேலோங்கி இருக்கும் கிண்டலும், அவருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக்கொடுத்தது. இருந்தாலும், தமிழ் கூறும் நல்லுலகம் அவரை இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும்.

அவரால் பாதிக்கப்படவில்லை என்று அவருக்குப்பின் வந்த எந்த எழுத்தாளரும் சொல்லமுடியாது. நிறையப்பேர் அதைப்போல் முயற்சி செய்து குப்பைகளாக எழுதிக்குமித்தனர். குறிப்பாக ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார் இவர்களைச் சொல்லலாம்.
சரி 'ஜோதிக்கு' வருவோம். மறுபடியும் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும், ஊகிக்க முடியாத முடிவுள்ள கதை இது. நான் கதைச்சுருக்கம் சொல்லப்போவதில்லை, ஏனென்றால் நீங்கள் வாங்கிப்படிக்க வேண்டும் என்பதற்காக.
முதல் அத்தியாயத்திலேயே ஒரு வாசிக்கத்தூண்டும் ஆர்வத்தைத் தூண்டியிருப்பார். "ஆம்புலன்ஸ் வந்தபோது அந்தப்பெண் இறந்து போயிருந்தாள்". இந்த ஒரு வரிதான் முதலாவது அத்தியாயம். கேள்விகளை எழுப்பவைக்கும் இந்த முதல் அத்தியாயம் மட்டுமின்றி, "என்னதான் நடந்தது ?" என்று இறுதியில் கேள்வியினை எழுப்பி, முடிவினை நமது ஊகத்திற்கே விட்டுவிட்டிருக்கிறார். இது அவருடைய தலையாய உத்தி.
இன்னொரு ஆச்சரியப்படும் சிறப்பம்சம் என்னவென்றால், சுஜாதாவின் எந்தப்புத்தகத்திலும், எந்த ஒரு இடத்திலும் அநாவசிய வசனிப்போ, வார்த்தைகளோ இருக்காது. ஒரு வார்த்தை கூட தேவைக்கு அதிகமாக இருக்காது. சிறுகதையை இழுத்து நாவலாக்குவதோ, தொடர்கதைகளில் அநாவசிய ஆச்சரியங்களை அள்ளித்தெளிப்பதோ அவருடைய படைப்புகளில் எப்பொழுதும் இருந்ததில்லை.
                அதோடு ஒரு நாவலின் மூலமாகவே, திணிக்கப்படாமல், மேதாவித்தனம் காட்டும் முயற்சியில்லாமல் பல உலக புத்தகங்களையோ, எழுத்தாளர்களையோ, விஷயங்களையோ அள்ளித்தெளித்திருப்பார்.  அவருடைய தனிப்பட்ட வாசிப்பு, பல தளங்களின் அறிவு ஆங்காங்கே வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அவருடைய ஞாபகசக்தியும்  அபாரமானது. “ஜோதி”யிலும் இடையில் வெகு இயல்பாக ,நீட்ஷே, டெனிஸ் ராபின்சன், Sex and the single girl, கலீல் கிப்ரான் என்று தெளித்திருப்பார் .
கல்யாணமான புதிதில், சில சமயம் மாலைவேளையில் சுஜாதாவின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து கீழே வைக்கமுடியாமல் தொடர்ந்து நேரம் போவது தெரியாமல் படித்து 2 மணிக்கும் 3 மணிக்கும் தூங்கப்போக, என் மனைவிக்கு “சுஜாதா” மேல் ஆத்திரமும் பொறாமையும் வந்து என்னை பிலுபிலுவென்று பிடித்துவிட்டு, கோபித்துக்கொண்டு என் மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டாள்.
சுஜாதாங்கிறது பொம்பளையில்லை, ஆம்பளை எழுத்தாளர்னு அவளுக்கு புரிய வைத்து வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் போதும் போதும்னு ஆயிருச்சு. ஆனால் இப்போது அவளும் சுஜாதாவின் ரசிகை.
சுஜாதா, நீங்க எங்கயும் போகலை, ஆத்மார்த்தமா உங்க புத்தகங்கள் மூலமா எப்போதும் எங்களோடுதான் இருக்கீங்க.



Tuesday, May 28, 2013

மெக்சிகோ பயணம் 13: உசுப்பேத்தி உசுப்பேத்தியே உயிரை எடுத்திட்டாய்ங்க

Emperor Maximillian



       மெக்சிகோ சுதந்திரம் பெற்று, குடியரசாகி இருந்தாலும், அதிலுள்ள மக்களில் இருபிரிவு இருந்தனர். பழங்குடி மக்களும் சுதேசிகளும் குடியரசை ஆதரித்தாலும், அங்கேயே வாழ்ந்து, பழந்தின்று கொட்டைபோட்ட ஸ்பானிஷ் மேற்குடியினரும், பெருந்தன நிலக்கிழார்களும் மீண்டும் அரசாட்சியினையே விரும்பினர். எனவே இருவருக்கும் எப்போதும் மோதல் இருந்து கொண்டே இருந்தது. இருவருக்கும் தனித்தனி ராணுவமும் இருந்தது.
      இதற்கிடையே ஆஸ்திரிய நாட்டின் அரசவம்சத்தில் பிறந்து, ஆர்ச் டியூக் பதவியிலிருந்த, ஃபெர்டினன்ட் மேக்ஸிமிலியனை தங்களது பேரரசர் ஆகவேண்டுமென, மெக்சிகோவின் முடியாட்சியை விரும்பும் "Monarchist" சிலர் கேட்டனர். அவர்களுக்கு ஐரோப்பா முழுதும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தலைமை தேவைப்பட்டது. இது நடந்தது 1859ல். அப்போது அவர் ஆஸ்திரிய நாட்டின் ராணுவத்தின் "கமாண்டர் இன் சீஃப்" ஆக பெரிய அந்தஸ்தில் இருந்ததால் அதனை தவிர்த்துவிட்டார். அதே கோரிக்கை மீண்டும் 1861ல் எழுந்த போதும், மறுத்துவிட்டார்.
      ஆனால் விதி அவரை விடவில்லை. மோனார்கிஸ்ட்டுகளுடன் இணைந்து ஃப்ரென்ச் ராணுவம், சுதேசிகளை முறியடித்து மெக்சிகோ சிட்டியை ஆக்ரமித்தது. அப்போது ஃபிரெஞ்ச் நாட்டை ஆண்ட மூன்றாவது நெப்போலியனும் இணைந்து கேட்டுக்கொண்டதால், கி.பி. 1863ல் மெக்சிகோவின் பேரரசராக, மேக்சிமிலியன் ஒத்துக்கொண்டார். அதன் மூலம் ஆஸ்திரியாவில் இருந்த அவருடைய பட்டம் மற்றும் பதவிகளை துறக்க நேர்ந்தது.
      1864, ஏப்ரல் மாதம் அவருடைய அரண்மனை இருந்த மிராமேர் என்ற இடத்தைவிட்டு எஸ். எம். எஸ். நோவாரா என்ற கப்பலில் மெக்சிகோவுக்கு பயணப்பட்டார். அவருக்குத் துணையாகவும், பாதுகாவலாகவும், ஆஸ்திரிய போர்க்கப்பலான SMS பெலோனா , ஃபிரென்ச் போர்க்கப்பலான தீமிஸ் , இம்பீரியல் யாட் ஃபாண்டசி  ஆகியவை துணைக்கு வந்தன . இந்த முயற்சிக்கு அப்போது இருந்த  போப்பாண்டவர் பயஸ் IX  என்பவரின் ஆசியும் இருந்தது. வழியில் வந்த, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்த ஜிப்ரால்டர், விக்டோரியா மகாராணியின் ஆணைப்படி, மேக்சிமில்லியனின் கப்பல் கடக்கும்போது, பீரங்கிகளை வெடித்து மரியாதை செலுத்தியது.

       இதனையெல்லாம் பார்த்து மிகவும் மகிழ்ந்த மேக்ஸிமிலியன், மிகுந்த உற்சாகத்துடன் தன் மனைவியுடன் வெரகுருஸ் என்ற இடத்தில் கி.பி.1864 மே மாதம் 21ஆம் தேதி இறங்கினார். அரசாட்சியினை விரும்பும் மக்கள் திரளாகக்கூடி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். செப்பல்டப்பெக் கோட்டை அவரது அதிகாரபூர்வ இல்லமாயிற்று.


ஆனால் பெனிட்டோ ஜுவாரஸ்-ஐ  பிரசிடண்ட்டாக கொண்டு இயங்கிய சுதேசி அரசாங்கம், அவரை மன்னராக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதனால் ஒரு நாட்டில் இரண்டு அரசாங்கம் இருக்கும் நிலைமை , மேக்ஸிமிலியனுக்கு பெரும் தலைவலியாய்  இருந்தது. தொடர்ந்து மோதல்கள் இருந்துகொண்டே இருந்ததால் முடிசூட்டக்கூட அவருக்கு நேரமில்லாமல் போய்விட்டது.

President Benito Juarez

    “என்னுடைய ஆட்சியை, ஏற்றுக்கொண்டால் பொதுமன்னிப்பு கொடுத்து பிரதமராக ஆக்குவேன்” என்று மேக்ஸிமிலியன் கொடுத்த வாக்குறுதியை ஏற்க பெனிட்டோ மறுத்துவிட்டார்.
       இதற்கிடையில் மேக்சிமிலியன் பலவிதமான் சீர்திருத்தங்களை நாட்டிலே ஏற்படுத்தினார். பெனிட்டோ ஏற்படுத்திய பல மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டார். குறுகிய காலமாகிலும் ,சிறுபான்மை மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தார்.
ஆனால் குடியாட்சியைச்சேர்ந்த பெனிட்டோ, பேரரசரின் விசுவாசிகளை பிடித்துகொல்ல ஆரம்பித்தார். மேக்சிமிலியனும் வேற வழியின்றி அதே தவறைச் செய்தார்.
அப்போதுதான் அமெரிக்கா (வழக்கம்போல் )மூக்கை நுழைத்து, பெனிட்டோவுக்கு உதவ முன்வந்தது. அத்தோடு மூன்றாம் நெப்போலியனை தன்  ஃபிரெஞ்ச் துருப்புகளை திரும்ப அழைத்துக்கொள்ள நிர்ப்பந்தித்தது.
அமெரிக்க உதவியோடு குடியரசுப்படைகள் வெல்வது நச்சயம் என்ற நிலை வந்தபோது, மேக்சிமிலியனின் விசுவாசிகள் பலர் அவரைவிட்டு விலகிச்சென்றனர். இறுதியாக 1866ல் நெப்போலியனும் தன் படைகளை திரும்ப அழைத்ததோடு, மேக்சிமிலியனையும் ஆஸ்திரியாவுக்கே திரும்புமாறு வேண்டினார்.
ஆனால் தன் விசுவாசிகளை கைவிட்டு ஓடுவதற்கு மேக்சிமிலியன் மறுத்துவிட்டார்.
      மேக்சிமிலியனின்  மனைவி கரோல்ட்டா (Her Imperial Majesty Empress Carolta) ஐரோப்பாவுக்கு திரும்பி பல நாடுகளில் உதவி கேட்டார். ஒருவரும் உதவி செய்ய முன்வராததால் அவர் மெக்சிகோ திரும்பவேயில்லை.

Empress Carolta

    மேக்சிமிலியனின்  8000 விசுவாசப்படைகள் அவரைக்காத்து நின்று முற்றுகையை சிலகாலம் சமாளித்தது. இதற்கிடையில் வழக்கம்போல் ஒரு எட்டப்பன் கதவைத்திறந்துவிட, குடியரசுப்படைகள் உள்ளே புகுந்து, எதிர்ப்போரை அழித்து மேக்சிமிலியனை  சிறைப்பிடித்தது.
      பல  நாட்டு மன்னர்களும், தலைவர்களும் மேக்சிமிலியனை கொல்லவேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தும், அவை அனைத்தையும் புறக்கணித்த பெனிட்டோ ஜுவாரஸ், மேக்சிமிலியனுக்கு   மரண தண்டனை  கொடுத்தார் . மேக்சிமிலியனை ,1867 ஜூன் 19ம் தேதியன்று சுட்டுக்கொன்றனர். Viva Mexico, Vivala Independence என்று சொல்லி உயிரைவிட்டார். அவரோடு கொல்லப்பட்ட இரண்டு விசுவாச தளபதிகளான மிகுவேல் மிராமன், லியனார்டோ மார்கஸ் ஆகிய இருவரும், Long Live  the Emperor என்று சொல்லி உயிரைவிட்டனர்.

      அத்தோடு மெக்சிகோவின் முடியாட்சி முற்றிலுமாக ஒரு முடிவுக்கு வந்தது.
அவருடைய உடல் எம்பாம் செய்யப்பட்டு பல நாட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த அடுத்த வருடம் ஆஸ்திரிய அரசு வில்கெம்  என்ற தனது அட்மிரலை அனுப்பி அவரது உடலை பெற்றுக்கொண்டது எந்தக்கப்பலில் முடிசூட தயக்கத்தோடு வந்தாரோ அதே கப்பலான SMS  நோவாரா என்ற கப்பலில் அவருடைய பூத உடல் ஆஸ்திரியாவுக்கு திரும்பி , வியன்னாவில் உள்ள அரசவம்ச கல்லறையில் 1868 ஜனவரியில் புதைக்கப்பட்டது.
        அவருடைய இறப்பை இறுதிவரை ஒத்துக் கொள்ளாத அவர் மனைவி, மனம் பிறழ்ந்து இத்தாலியில் உள்ள மிரமேர் கோட்டையிலும், பெல்ஜியத்தில் மெய்ஸூவில் இருக்கும் கோட்டையிலும், தனியாக தன் எஞ்சிய வாழ்க்கையைக்கழித்து ஜனவரி 1927ல் இறந்து போனார்.
இப்படி சும்மா இருந்தவரை உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ஆசைகாட்டி அழித்தது சமுதாயம்.எம்ப்பெரர் மேக்ஸிமிலியன் வாழ்ந்த அந்த கோட்டையை பார்க்கப்போவது ஒரு புல்லரிப்பைத்தந்தது .வாருங்கள் கோட்டைக்குப் போவோம்.

இன்னும் வரும் ...........

Thursday, May 23, 2013

வெளியரங்கமான அந்தரங்கங்கள்


கவிஞர் கண்ணதாசனின் "அரங்கமும் அந்தரங்கமும்"


"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு" என்று வெளிப்படையாக எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் என்ன நமக்குத் தெரியாத அந்தரங்கம் இருந்துவிடப்போகிறது என்ற நினைப்புதான் இருந்தது, இப்புத்தகத்தை நான் வாங்கும்போது.
ஆனால் இது முற்றிலுமாக வேறு. கண்ணதாசன் இப்படி ஒன்றை எழுதினாரா? என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் எழுதிய, "சேரமான் காதலி", அர்த்தமுள்ள இந்து மதம்  போன்ற பல புத்தகங்களை நான் படித்துள்ளேன். அவற்றில் பல என் நூலகத்திலும் இருக்கிறது.
நான் நினைத்ததுபோலவே இது அவரின் சொந்த அந்தரங்கங்களை அல்ல அவர் நாளும் கூடிப்பேசி பழகிய பலரின் அந்தரங்கங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
1978ல் ராணி பத்திரிகையில் தொடராக வந்தபோது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு போற்றிய ஒரு மாபெரும் கவிஞன், தன்னுடைய சொந்த குடும்பவாழ்க்கையில் நொந்த மனிதராகவும், தன் இளம்பிராயத்து காதலை என்றும் மறக்க முடியாது கோப்பையில் வெந்த மனிதராகவும்  இருந்த ஒரு சில சம்பவங்களைத் தவிர, மற்ற அனைத்தும் கூட இருந்தவர்களின் ஏடாகூடல்கள்.
அநேக  இடங்களில் தான் கற்றுத்தேர்ந்த, அனுபவத்தில் உணர்ந்த வாழ்க்கையின் நிதர்சன உண்மைகளை தத்துவங்களாக உதிர்க்கும் கவிஞர், அப்பொழுதே புரையோடிப்போன சமூகத்தின் அவல நிலைகளுக்கான காரணங்களை அலசுகிறார்.
தங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையில் (Public Life) முகமூடி அணியாத நபர்கள் மிகச்சிலர்தான். அவர்களில் கண்ணதாசன் மிக முக்கியமானவர். தயக்கம், மூடநம்பிக்கை, போலி கெளரவம், பயம், முகஸ்துதி செய்தல் என்ற எதுவும் இல்லாமல், திறந்த  புத்தகமாக இருப்பது சாதாரண மனிதர்களுக்கே கடினம். அதிலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர் அப்படி இருக்கிறார், இருந்தார் என்றால் அது ஆச்சரியமூட்டும் உண்மை.
இந்தப்புத்தகத்தில் ,அன்றைய நாளில் இருந்து மறைந்த, இப்பொழுது இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிற சிலரின் பொய்முகத்தை தோலுரித்துக் காட்டுகிறார் கவிஞர்.
தன சுய நலத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தாங்கள் மனைவிகளை பிறர் படுக்கைக்கு பலி கொடுத்தவர்கள், கணவன் வேறு ஒருவரைத் தேடியதால், தானும் சோரம் போன மனைவிகள், பம்பாயில் நடக்கும் கீ எக்ஸ்சேஞ்சில் சகஜமாக பங்குகொள்ளும் நம் தமிழ்நாட்டு பிரமுகர்கள், என்று பலரின் முகமூடிகளை உரித்துக்காட்டுகிறார்.
ஒன்றைக் கண்டிப்பாக சொல்லவேண்டும், இவை எல்லாம் இருந்தாலும், இது  ஒரு கிசுகிசு அல்லது ஒரு மஞ்சள் புத்தகத்தை படிப்பது போல் அல்லாமல், ஒரு தேர்ந்த மர்ம நாவலைப்படிக்கும் உணர்வைத்தான் எனக்குத்தந்தது .
ஒரு உயர்ந்த போலிஸ் அதிகாரி, சாதாரண வக்கீலாக இருந்து அரசாங்க தலைமை வக்கீலாக உயர்ந்த ஒருவர், தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு தேர்ந்த அரசியல்வாதி, ஒரு சமூக சேவகி, நடிகராக இருந்து தலைவராய் உயர்ந்த ஒருவர் ஆகியோரைப் பற்றித்தான் இதில் அதிகம் இருக்கிறது.
ஆவி or ஜூவியில் இப்படி ஒரு தொடர் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்தப்பட்டது ஞாபகம் வருகிறது.
இவர்களெல்லாம் யார் என்று அறிய உங்கள் மனம் துடிக்கிறதா? புத்தகத்தை வாங்கிப்படித்துப் பாருங்கள். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லையா. என்னைக் கேளுங்கள். 

Tuesday, May 21, 2013

மெக்சிகோ பயணம் 12 : எய்ட்ஸ் ஃப்ரீயா அல்லது ஃப்ரீ எய்ட்ஸா?


     டிசம்பர் 2, 2012

      நேற்று போட்ட டீல்படி டேனியல், காலை எட்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். நானும் அதற்கு முன்பே விரதம் முறிக்கும் காலை உணவை (அதாங்க பிரேக் ஃபாஸ்ட்) முடித்து காத்திருந்தேன். தன்னுடைய கருப்பு கலர் ஃபோர்டில், ஒரு கருப்பு கலர் டி ஷர்ட் போட்டுக்கொண்டு , இந்த கருப்பு கலர்  ஆளை ( நாந்தேன் )கூப்பிட வந்திருந்தான் . “ஓலா அமிகோ” என்று கைகுலுக்கி முன்பகுதியில் அமர்ந்தேன். “இன்று ஞாயிற்றுக்கிழமை டிராஃபிக் அவ்வளவாக இருக்காது” என்றபடி பறந்தான். வழியெங்கும் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சான் ஏஞ்சல் செல்வதாக திட்டம். “எவ்வளவு நேரமாகும்” என்று கேட்டபோது அரை மணி நேரம் ஆகுமென்றான். “அப்படியென்றால் ஒரு மணி நேரம் தானே?” என்று சிரித்தேன். அவன் சிரிக்காமல்,“ இன்று அப்படியாகாது” என்றான். வெளியே லேசான குளிர் இருந்தது.
அந்தச்சமயத்தில் வலதுபுறம் வரிசையாக மோட்டல்கள் வந்தன. அவனிடம் விசாரிப்பதற்கு முன், வழியில் ஒரு பெண், காரின் முன்பகுதியில் ஏறி நின்றுகொண்டு கையாட்டிக் கொண்டிருந்தாள். கொடுமை என்னவென்றால், வெறும் ஜட்டி பிரா மட்டுமே அணிந்திருந்தாள். அதிர்ந்து போனேன்? “அழகான மாடல் போன்றிருக்கும் இவள் ஏன் இங்கு இப்படி அலங்கோலமாக நிற்கிறாள்?” என்று கேட்டேன். டானியல் சொன்னான், “இதுதான் பிக்கப் ஏரியா, இங்கு பிக்கப் செய்துவிட்டு, பக்கத்திலிருந்த மோட்டலுக்கு செல்வார்கள்”. இந்தப்பகுதி மோட்டல்களில் நாள் கணக்கில் மட்டுமல்லாது மணிக்கணக்கிலும் அறைகள் கிடைக்குமாம்.
ஏய் ஏய் உங்க கற்பனைக்குதிரைகளை நிறுத்துங்க. டேனியலிடம் நான் போட்ட டீல் இதில்லை. இன்று காலையில் மெக்ஸி டூரில் நான் ஏதும் புக்பண்ணவில்லையாதலால் டேனியலும் இன்று காலை ஃப்ரீயாய் இருந்ததால், சில பார்க்கத்தவறிய இடங்களை அரைநாளில் பார்த்துவிடலாம் என்று அவனிடம் பேரம்பேசி தனியாக அமர்த்திக்கொண்டேன். அதுதாங்க டீல். வேறொன்னுமில்லை என்னை நம்புங்க.
         இந்த புராதன தொழில் ,இவ்வளவு ஓபனாக நடக்கிறதே, என்று நினைத்த வண்ணம் டேனியலிடம், "அது சரி இதெல்லாம் எய்ட்ஸ் ஃப்ரீயா அல்லது ஃப்ரீ எய்ட்ஸா? என்றேன், டேனியல் பலமாக சிரித்து (அப்பாடா சிரித்துவிட்டான்), “எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றான். “ஏஞ்சல் பகுதின்னு சொல்லிட்டு , இப்படி சாத்தான் பகுதிக்கு கூட்டிட்டு வரியேன்னு” கேட்டேன்.நல்லவேளை சாமி நான் லுத்தரன், மார்மன் அல்ல என்று நினைத்தபடி, " கண் போன போக்கிலே கால் போனாத்தான தப்புன்னிட்டு ,இன்று ஞாயிற்றுக்கிழமை, சர்ச்சுக்கு காரை விடு, முதலில் , கருமம் , இந்தப்பாவத்தைஎல்லாம் தொலைக்க வேண்டும் " என்று சொன்னேன். இன்று நிறைய சர்ச்சுக்குப் போகிறோம் என்றான். சோதனைக்கென்றே ஒவ்வொரு  தெரு  முனையிலும் ஓரிருவர் நின்றிருந்தனர் .  விரைவாக கடந்து ,சான் ஏஞ்சல் என்ற கலோனியல் பகுதியில் இருந்த பிரமாண்டமான சர்ச்சுக்கு சென்றோம்.

 இங்குள்ள சர்ச்சுகள் எல்லாமே பெரிது மிகப்பெரிது. மிக அழகாக தங்க நிறத்தில் (தங்கம்தானோ?) அலங்கரிக்கப்பட்ட ஆல்டர் முன் முழங்காற்படியிட்டு ஜெபித்து, மனசு லேசானபின் எழுந்து திரும்பினேன்.

சான் ஏஞ்சல்
    மெக்சிகோ நகரின் அருகில் உள்ள சான் ஏஞ்சல்  என்பது ஒரு காலத்தில் ஸ்பானிஷ் காலனி. ஹிஸ்பானிக்ஸ் வருவதற்கு முன்னால் இது ஆஸ்டெக் மக்கள் வசித்த
டெனிட்லா என்றழைக்கப்பட்ட ஒரு கிராமம். ஸ்பானிஷ் குடியேறிய பின்னர், 1617-ல் இங்கே எல் கார்மன் என்ற கான்வென்ட்  உருவானது . சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த கான்வென்ட்  ஒரு கோட்டையாக உருவெடுத்தது. அமெரிக்கர்களோடு சண்டையும் இங்கேதான்  நடந்தது. இப்போது இது ஒரு மியூசியம்.

     சான் ஏஞ்சல் பகுதி முழுவதும் பல பழைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அனுமதி இலவசம். உள்ளே பல படங்கள், ஓவியங்கள், ராணுவ தளவாடங்கள், போர் வாள்கள், துப்பாக்கிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. போர்க்காலத்தில் பயன்படுத்திய பீரங்கிகள்,


 பாதாள அறைகள், சுரங்கங்கள் ஆகியவை இருந்தன. பாதாள அறைகளில் இருந்த மம்மிகளைப் பார்க்க, அன்று காவலிருந்த செக்யூரிட்டி மம்மிகள்  அனுமதிக்கவில்லை.

      இந்தப் பகுதிகளில் எரிமலைகள் இருந்து வெடித்ததாம். அதிர்ச்சியுடன் எப்போது என்றபோது 2000 வருடங்களுக்கு முன் என்றனர். அப்பாடா தப்பித்தேன் என்று நினைத்து, காருக்குத் திரும்பினோம்.
அங்கிருந்து நேராக மெக்சிகோ சிட்டி டெளன் டவுனுக்கு சென்று பார்க் செய்துவிட்டு (எச்சரிக்கை :காரில் ஏதும் வைக்கவேண்டாம்), சிறிது தூரம் தெருக்களை தாண்டி நடந்தவுடன் மாபெரும் சதுக்கம் வந்தது. நடுவில் ஏராளமான வெற்று இடத்தின் நடுவில் மெக்சிகோவின் கொடி உயரமாய் பறக்க, அதன் ஒரு பகுதியில் இருந்தது மெட்ரோபாலிடன் கதீட்ரல்.

 இதுவே மெக்சிகோவின் பழமையானதும் (கி.பி.1573) பெரிதானதும்  ஆகும். இதுதான்  மெக்சிகோவின் ரோமன் கத்தோலிக்க ஆர்ச் டயோசிஸின் தலைமையகமும்  ஆகும்.  ஸ்பெயினில் உள்ள காதிக் கதீட்ரல்களின் அடிப்படையில் ஸ்பானிஷ் ஆர்க்கிடெக்ட் "கிளாடியோ டி ஆர்ஸ்னிகா" (Claudia de Arciniega) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

        நான்கு அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் பிரமாண்டமான தூண்களையும் சிலைகளையும் பல ஆல்டர்களையும் உடையது. இதில் உள்ள இரண்டு மணிக்கோபுரங்களில் 25 மணிகள் உள்ளன. பெல் டவருக்கு ஒரு வழிகாட்டி அழைத்துப்போக, ஸ்பைரல் படிக்கட்டுகளில் ஏறி ஏறி ஏறி ஏறி தலை கிறுகிறுத்துப்போனது.
       மெக்சிகோ டெளன் டவுனில் உள்ள பல கட்டிடங்களைப் போலவே கத்தீட்ரலும் சிறிது சிறிதாக புதைந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு புதைகிறது என்பதைக்கண்டுபிடிக்க பெல் டவரிலிருந்து ஒரு உருளையில் ஒரு உருக்குக் கம்பியை கட்டி வைத்திருந்தனர். அதன் மறுபகுதியில்  ஒரு துளை அமைக்கப்பட்டு கீழே கீழே தரையில் புதைக்கப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு 5 செ.மீ புதைகிறதாம்.

கதீட்ரலில் இரண்டு பெரிய ஆல்டர்களும் 16 சிறிய சேப்பல்களும் உள்ளன. ஒவ்வொரு சிறிய ஆல்டரும் ஒவ்வொரு புனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உள்ளே நடந்த வழிபாட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
          அங்கிருந்த 18 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய இரண்டு ஆர்கன்கள் சிறப்பு வாய்ந்தவை. கிரிப்ட் என்று சொல்லப்படுகிற, பாதாள அறையில் பல முந்தைய ஆர்ச் பிஷப்புகள் புதைக்கப்பட்டிருந்தனர்.
1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீயில் பெரும் பகுதி அழிந்து பின்னர் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது என்று சொன்னது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு சுவடும் தெரியவில்லை.
 ஸ்பெயின் படையை வழிநடத்திவந்த ஹெர்னன் கார்டஸ், ஆஸ்டெக் பேரரசை முற்றிலுமாக முறியடித்ததின் ஞாபகமாக, அவர்களுடைய போர்க்கடவுளின் ஆலயமான டெம்ப்லோ மேயரை (Templo  Mayor) அழித்து, அதே கற்களை பயன்படுத்தி அதன்மேலேயே கட்டப்பட்டது தான் இந்த கதீட்ரல். அடப்பாவிகளா வெற்றிச்சின்னமாக , அமைதிச் சின்னமான ஆலயத்தையா கட்டுவது ?நல்லவேளை ஆஸ்டெக் மக்களில் இன்று கர சேவகர்கள் இல்லை. தப்பித்தது மெக்சிகோ சிட்டி.
      டெம்ப்லோ மேயரின் சில பகுதிகளை அப்படியே விட்டு வைத்துள்ளனர். அது கதீட்ரலுக்கு பின்புறத்தில் இருக்கிறது. அதன் பல நிலைகளையும் சென்று பார்த்தேன்.
கதீட்ரலுக்கு அருகில் உள்ள வெட்ட வெளியில், புராதன உடையணிந்த ஒரு ஆஸ்டெக் பழங்குடி ஆள் ஒருவர் ஒருவித டிரம்மை தொடர்ந்து அடித்து ஒலியெழுப்ப, 

இன்னொருவர் சாமியாடி, வரிசையாக வந்தவர்களுக்கு தலையில் இறகுக்குவியலை வைத்து மந்திரித்தார். “போகிறாயா?” என்று டேனியல் கேட்க, “ஐயா ஆள விடு, ஏற்கனேவே காலையில் இருந்து மந்திருச்சி விட்ட மாதிரித்தான் இருக்கேன்” என்று சொல்லி நகர்ந்தேன். 
       ஆலயத்தின் அருகில் பலர் பெட்டி போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு விசையைச் சுற்ற அதில் இசைப்பாடல் வந்தது. இனிமையாக இருந்தது. அவர்கள் கிட்டே போனால் இசையை நிறுத்திவிட்டு காசு கேட்டனர். காசு கொடுக்க இசை தொடர்ந்தது. நான் சுற்றலாமா? என்று டேனியல் மூலம் கேட்டபோது அவன் மறுத்துவிட்டான். (அவனோ பிச்சைக்காரன் ,நானோ பரதேசி)

கதீட்ரலின் அருகிலேயே மற்றொருபுறம் "நேஷனல் பாலஸ்" இருந்தது. அங்குதான் பிரசிடன்ட் ஆபிஸ் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் இருந்தன. அங்குள்ள ஒரு மியூசியத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மெக்சிகோ ஓவியரான Diego Rivera வின்,  ஓவியங்கள் நிறைய இருக்கின்றனவாம். அன்று அனுமதியில்லை.
அதனை முடித்து, அங்கிருந்து சப்பல்டெபக்  கோட்டைக்குச் சென்றோம். (Chapultepec Castle). இங்குதான் பேரரசர் மேக்சிமிலியன் தங்கியிருந்தாராம். மேக்சிமிலியன் வெளியிட்ட சில நாணயங்கள் என்னிடத்தில் உண்டு. மேக்சிமிலியன் கதை மனதை உருக்கும் ஒரு சோகக்கதை.

இன்னும் வரும் …….

Friday, May 17, 2013

பேர் போன கதை -தாத்தாவின் அதே அவஸ்தை பேரனுக்கு


Social Security Card sample
நியூயார்க் புது நண்பர் :  ஹலோ தியாகராஜன்  How are you?.
ஆல்ஃபி : நல்லாயிருக்கேன், ஆனா என் பெயர் தியாகராஜன் இல்லை.
என்ன அது உங்க பெயர் இல்லையா? உங்க லாஸ்ட் நேம் என்ன?
“தியாகராஜன்”.
என்னங்க குழப்புறீங்க. அப்ப  அது யார் பெயர்?
அது என் அப்பா பெயர்
அப்ப  உங்க பெயர் என்ன?


“ ராஜசேகரன் “
ராஜசேகரனா, சொல்லவேயில்லை? அப்ப  ஆல்ஃபிரட் ?

அது என் first name

ஆல்ஃபி ?

அதுவும் என் பெயர்தான்
ஐயையோ, என்னங்க இடியாப்பச் சிக்கலா இருக்கு. உங்க உண்மையான பெயர் என்ன?
T.A. ராஜசேகரன்
இப்ப ?
ஆல்ஃபிரட்  தியாகராஜன்.
அப்ப  ராஜசேகரன்?.
அது என் மிடில் நேம் ஆயிருச்சு. அதனால் வெறும் R னு சுருங்கியிருச்சு.
உங்கப்பா ஒரு இந்துவா? 
இல்லை கிறிஸ்தவர்தான்.
அப்ப  எப்படி தியாகராஜன்?
உங்களுக்கு டைம் இருந்தா சொல்றேன்.
சரி சுருக்கமா சொல்லுங்க.

ஆச்சுவலா, என் முப்பாட்டன் சந்தியாகு.
ஐயா ஆளவிடு, போன நூற்றாண்டு கதையெல்லாம் எடுத்தா, ரொம்ப கஷ்டம், நான் அழுதுருவேன்.
     இல்ல சுருக்கமா சொல்றேன். என் தாத்தா பேர் “செபஸ்டியான்”. அவரோட மாமா சந்தியாகு, சமூகப்பணி செய்யும்படி, என் தாத்தாவை தேவதானப்பட்டி அனுப்பினார். அங்கு சென்று பள்ளி ஒன்றினை ஆரம்பித்து, பல சமூக மாற்றங்களை செய்தார். ஊருக்கு வரும் வெள்ளைக்காரர்களிடம் சரிக்கு சரிஆங்கிலம் பேசி ஊருக்கு பல நன்மைகளை செய்தார் ."பெரிய வாத்தியார்" என்று அவரை அழைத்த ஊர் மக்களுக்கு அவர் பேரை சரியாக உச்சரிக்க தெரியாமல் 'செவத்தியான்' என்று அழைத்தார்கள். முதலில் கோபத்தை வரவழைத்தாலும், என்ன செய்வது என்று இருந்துவிட்டார். அதனால் மக்கள் கூப்பிடுவதற்கு இலகுவாக இருப்பதற்காக, பிறந்த மூன்று மகன்களுக்கும், ஜெயராஜன், தியாகராஜன் மற்றும் ஜீவராஜன் என்று பெயர் சூட்டினார்.

என் அப்பா, அவருக்குப் பிறந்த மூன்று மகன்களுக்கும், ஒரு ஆங்கில மற்றும் ஒரு தமிழ்ப்பெயரை சூட்டினார். எனவே என் பெயர் T.A.ராஜசேகரன் ஆயிற்று. அதாவது, T.ஆல்ஃபிரட் ராஜசேகரன். என்னை வீட்டில் “சேகர்” என்றும் பள்ளியில் “ராஜசேகரன்” என்றும் கூப்பிட்டனர். எங்கப்பா அம்மா "சேகப்பன்" என்று கூப்பிட்டனர்.
  இதற்கிடையில்,காந்திகிராமம் ,தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் +1 சேர்ந்தேன். அங்கே என் வகுப்பறையில் இன்னொரு ராஜசேகரன் இருந்ததால், என்னை ஆல்ஃபிரட் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதிலிருந்து என்னை இஷ்டத்துக்கு பல பேரிட்டு கூப்பிட்டனர்.
பலபேரா?
ஆம், Albert, Albred, Albret, Alfret, Alfert, Alferd, மற்றும் Alfraud என்று கூட கூப்பிட்டனர்.


ஷ் அப்பாடா, இப்பவே கண்ணைக்கட்டுதே? அப்புறம் 'ஆல்ஃபி'ன்னு எப்ப வந்துச்சு?
    அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த போது, அங்கிருந்த பிற நாட்டு நண்பர்கள், என்னை Alfy என்று கூப்பிட ஆரம்பித்து அதுவே இன்றுவரை நிலைத்துவிட்டது.

அப்ப Alfred Thiagarajan?
     US  வரும்போது பாஸ்போட்டில் இனிஷியல் எக்ஸ்பேன்ட் பண்ணி “தியாகராஜன் ஆல்ஃபிரட் ராஜசேகரன்” என்று இருந்தது. இங்கே சோஷியல் செக்யூரிட்டி கார்டுக்காக ஃபர்ஸ்ட் நேம், லாஸ்ட் நேம் என்று கேட்டார்கள். எனவே ஃபர்ஸ்ட் நேம் ஆல்ஃபிரட் என்றும் லாஸ்ட் நேம் தியாகராஜன் என்றும் மிடில் இனிஷியல் R  என்றும் ஆகிவிட்டது. இங்க லாஸ்ட் நேம் வைத்துத்தான் கூப்பிடுகிறார்கள் என்பதால், என் தாத்தா பட்ட அவஸ்தையை நான் பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கே தமிழ்
  மக்கள் ஆங்கிலப் பெயரில் தடுமாறியது போல, இங்கே ஆங்கில மக்கள் என் தமிழ்ப் பெயரில் தடுக்கி விழுகிறார்கள் .
இந்த பேர் போனவன்னு சொல்றது இதைத்தானா?. நல்லவேளை வேறு பெயர்கள் எதுவும் இல்லை.
இதோட முடிச்சிட்டீங்க.

 இல்ல இல்ல நிறைய பட்டப்பெயர் இருக்கு. கவிப்பித்தன், ஊமை, புல்தடுக்கி, புலவர், ஒல்லிப்பிச்சா அப்புறம் இப்ப பரதேசி.
இந்தப் பேர் போதுமா ? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?

இல்லை, பாணன் என்று ஒரு புனை பெயர் இருக்கு. அத ஏன்  வச்சேன்னா?
ஐயா ஆள விடு சாமி.
(விரைந்து எழுந்து ஓடுகிறார்)

 

Wednesday, May 15, 2013

மெக்சிகோ பயணம்-11 : கமல்ஹாசனுக்கே கத்துக்கொடுப்பாய்ங்க போல இருக்கு

Xochimilco River


     சாப்பிடுவதற்கு பெரிய ஹோட்டல் போக வேண்டுமா? அல்லது பாரம்பர்ய ரோட்டுக்கடையா? என்று கேட்டான். சுத்தம் சுகாதாரமாய் இருக்கும் எந்த இடத்திலும் சாப்பிடலாம் என்றேன்.
     அரை மணி நேரத்தில் போய்  விடலாம் என்று சொல்லிவிட்டு, சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பின்னர், ஒரு மார்க்கெட்டுக்குச் சென்றோம். புரிந்துவிட்டது மெக்சிகோவில் 1/2 மணிநேரம் என்றால் 1மணிநேரம் ஆகுமென்று. சாட்சாத் நம்மூர் சைதாப்பேட்டை மார்க்கெட் போலவே இருந்தது.
     வேகவைத்த கப்பைக்கிழங்கை, வெட்கத்தைவிட்டு வாங்கிக்கொண்டேன். உள்ளே, உள்ளே,உள்ளே நுழைந்து பார்த்தால், பலசிறிய உணவகங்களும் பலவிதமான பண்டங்களும் சுடச்சுட உடனடியாக கண்முன்னால் செய்து தந்தனர்.
Xochimilco Market


    இரு அழகிய விடலைப்பெண்களும், ஒரு பையனும் கூவிக்கூவி அழைத்தனர். டானியல் அவர்களைத்தவிர்த்து, அதன் பக்கத்து கடைக்கு ஒரு வயதான தம்பதியிடம் அழைத்துச் சென்றான். (ரசனையில்லாதவன்).
     டேனியல் என் முகத்தைப் பார்த்து, “இங்கே தான் நன்றாக இருக்கு”மென்று சொன்னான். (கண்டு புடிச்சுட்டான் போல) அவன் சொன்னது போலவே அந்த விடலைக்கடைக்கு யாரும் போவதாகக் காணோம். அந்த வி.பையன் திரும்பி அந்த வி.பெண்களில் ஒருவரை முத்தமிடத் தொடங்கினான். மெக்சிகோ இதுலேயும் நன்றாகவே முன்னேறியிருந்தது. கமல்ஹாசனுக்கே கத்துக்கொடுப்பாய்ங்க போல இருக்கு.
    எனக்கு ஒன்றும் தெரியாதென்பதால், டேனியலை ஆர்டர் செய்யச் சொல்லிவிட்டு, உயர்ந்த ஸ்டூல்களில் அமர்ந்தோம். ஒரே நேரத்தில் அந்த ஒரு கடையில் அதிகபட்சம் நான்குபேர்தான் உட்காரமுடியும். எங்கள் கண்முன்னால் ஒரு சிறிய தோசைச்சட்டியில் ரொட்டிகளைச்சுட்டு தந்தார்கள். மக்காச்சோள ரொட்டி, ஆனால் பச்சை நிறத்தில் இருந்தது. எனக்கு வெஜிடேரியன் போதுமென்றதால், ஒருவகைப் பூக்களால் செய்த கூட்டு கொடுத்தார்கள். அந்த காம்பினேஷன் நன்றாகவே இருந்தது. இரண்டே ரொட்டிகளில் வயிறு திம்மென்றாயிற்று, டேனியல், அதே ரொட்டிக்கு போர்க் கிரேவி தொட்டுச் சாப்பிட்டான். சாப்பிட்டான் , சாப்பிட்டான்  சாப்பிட்டுக்கொண்டே  இருந்தான் . சரியான பாம்பு  வயிறான் போல இருக்கு.
    பக்கத்துக்கடையில் முத்தம், மொத்தமாகவும் சற்றே சத்தமாகவும் இருந்தது. வரவர அறுவெறுப்பாயிருந்தது. ஒரு அளவு வேண்டாம், பசியெடுத்தால் சாப்பிட வேண்டியதுதானே என கோபம் கோபமாய் வந்தது. அதனால்தான் அங்கு யாரும் போகவில்லை என நினைத்தேன்  (சரி விட்றா விட்றா உனக்கேன் இவ்வளவு கோபம்?. இல்லை மச்சான் ஒரு நாகரிகம் வேணாம்? பப்ளிக் பிலேஸ்ல).
     உண்டு முடித்து Xochimilco ஆற்றுக்குச் சென்றோம். சோஷிமில்கோ என்பது மெக்சிகோவின் ஃபெடரல் மாவட்டங்களான 16 மாவட்டங்களுள் ஒன்று. ஸ்பெயினின் ஆக்ரமிப்புக்கு முன்பே, இங்கிருந்த பெரிய ஏரியோடு இணைந்து, மெக்சிகோ பள்ளத்தாக்கின் பல பகுதிகளை இணைக்கும் வண்ணம், வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. 110 மைல்கள் நீளமுள்ள இந்த வாய்க்கால்கள் ஆங்காங்கே சிறுசிறு தீவுகளை (Chinampas) உண்டாக்கின. அப்போது போக்குவரத்திற்கு பெரிதும் பயன்பட்ட இவை, இப்போது, வெனிஸ் நகரத்தில் உள்ள கொண்டலா  (Gondola) போல பல உல்லாசப்படகுகள் (Trajineras) செல்லும் உலக ஹெரிடேஜ் இடமாகும்.

     பார்க்கிங் லாட்டில் இடம் இல்லாததால் அங்கிருந்த சிறுசிறு உணவங்களின் முன்னே  இருந்த இடங்களும் கார்கள் நிறுத்துமிடமாக மாறி காசு வாங்கிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு பெரிய கார்னிவல் நடப்பது போல், நடைபாதையெங்கும் பெட்டிக்கடைகளும், ரோட்டோரக் கடைகளும் நிறைய முளைத்திருந்தன. ஒரு சந்தில் படக்கென திரும்பியதும், ஏராளமான படகுகள் நீரை மறைத்து நின்றிருந்தன.
    டேனியல் மெக்சி டூர் நிறுவனத்தின் ஆளைக் கண்டுபிடித்து, முகமன் கூறி என்னை அறிமுகம் செய்தான்.  வாருங்கள் ஆல்ஃபிரடோ (?) என்று கைகுலுக்கிய தண்டுவலித்து முண்டு கட்டியிருந்த இறுகிய கைகளிலிருந்து, விண்டு விடுமென்று என்னுடைய என்புதோல் போர்த்திய கைகளை லாவகமாக தப்பித்துப்பின்பற்றினேன்.
     பல படகுகளின் வழியே நடந்து எங்கள் படகுக்குச் செல்லுமுன் எனக்கு இரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. சதா ஆடும் படகுகளில் ஓடும் அந்த ஆளை சற்று நேரத்தில் தேடும் நிலை வந்துவிட்டது. (ஏய் வந்துட்டான்யா வந்துட்டான்யா ஒரு பழைய கவிஞன்).

     படகுகளை தாண்டி தாண்டிச் செல்வது பெரிய சாகச சர்க்கஸ் ஆக இருந்தது. எதுக்கு ரிஸ்க்கஸ் என்று அப்படியே ஒரு படகின் நடுவில் இருந்த பெஞ்ச்சில்  உட்கார்ந்துவிட்டேன். சிறிது நேரத்தில் டேனியல் தேடிக்கொண்டு வந்தான். “என்னாச்சு?” என்று சிரித்தான். “ஐயா சாமி, நட்டாத்துல விடறது என்பது இதானா? எங்கூடவே வாப்பா” என்றேன். படகுவிட்டு படகு தாண்டும் இடங்களில் மட்டும், வெட்கத்தைவிட்டு (உயிர் அதைவிட முக்யம்ல) அவன் கட்கத்தைப்பிடித்துக் கொண்டு நடந்து நடந்து கடந்து கடந்து, ஒரு ஐம்பதுக்கும் மேல் கடந்த பிறகுதான், சிறிது இடைவெளியில் நீர் தெரிந்தது. படகுகள் விடுவதற்கு ஒரு அளவில்லையா என்று டேனியலைக் கடிந்து கொண்டு (அட முட்டாளு  டேனியல் மெக்சிகோவின் இளவரசனா!), எங்களுக்கான படகில் ஏறினோம்.
     ஆறு முழுவதும் அலங்கரிக்கப்பட்ட படகுகள் மிதந்தன. ஒவ்வொரு படகிலும் ஆட்டமும் பாட்டமுமாக ஒரே அமர்க்களம்தான் போங்க. இதுல நடுநடுவே "மாரியாச்சி" பாடகர்கள் குழு தனிப்படகுகளில் அருகில் வந்தது. ஒரு 100 பீசோ கொடுத்தால் உங்களுக்காக இரண்டு மூனு பாடல்கள் பாடுவார்கள்.
     இந்த மரியாச்சி என்பது (ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்யா - ஆர்வம் இருப்பவர்களை மட்டும்தானே படிக்கச் சொல்றேன். - இந்த மைண்ட் வாய்ஸ் மகேந்திரன் தொல்லை வேறு), ஒருவிதமான மெக்சிகன் ஃபோல்க் இசை, இரண்டு நூற்றாண்டுகளாக தழைத்து வளர்ந்திருக்கிறது. யூடியூபில் தேடினால் கேட்கக்கிடைக்கும். (www.youtube.com/ watch?v =tmUJyeJehsM).
Mariachi Singers

     பியர்களை குடித்துக்கொண்டும் (நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லையே) அதிரடி இசைக்கு துடித்துக்கொண்டும் இருந்தனர். தண்ணி மேலே படகு, படகு மேலே தண்ணி (எப்பூடி). உள்ளேயும் தண்ணி , வெளியேயும் தண்ணி. படகிலும் தண்ணியிலும் மிதந்து கொண்டு இருந்தவர்களைப் பார்த்தபோது, ஏதோ வேறு உலகத்திற்கு வந்ததுபோல் இருந்தது.
T

     படகுப்பயணம் முடித்து திரும்பும்போது, சல்லிசாக கிடைத்த இளநீரை பருகிவிட்டு (டேஸ்ட்டு  வேஸ்ட்டு, நம்மூர் போல இல்லிங்கோ) நிற்கும் போதுதான் ஞாபகம் வந்தது. நாளைமாலைதான் அடுத்த எங்கேஜ்மென்ட் என்று. டேனியலை ஒரு ஓரமாகத் தள்ளிக்கொண்டுபோய், “நீ நாளைக்காலைல ஃப்ரீயா” என்று கேட்டேன். “ஆம், ஏன்?” என்று வினவியபோது, காதோடு கதைபேசி ஒரு டீல் போட்டேன். அத  அப்புறமா சொல்றேனே.


Friday, May 10, 2013

ஆஹா, வடை போச்சே !!!!!!!!!

Jackson Heights, Queens

     என்னுடைய சால்ட்பெப்பர் சிகையில் சால்ட் அதிகமானதாலும், பின்பகுதியில் குடுமிபோடுமளவுக்கு முடி வளர்ந்ததாலும் (முன் பகுதியிலும் இப்படியே வளர்ந்தால் நல்லாயிருக்கும், ஹீம்வயசுதான் ஏறுதுன்னு  பார்த்தால், இந்த நெத்தியும் ஏறிக்கொண்டே போகுது ) ஜாக்சன் ஹெய்ட்ஸீக்கு போக முடிவெடுத்தேன்.
      பத்து வருடங்களுக்கு முன் அந்த சலூனை தேர்ந்தெடுத்தது ஞாபகம் வந்தது. முதன் முதலில் போன போது, இந்தியப்பகுதி என்று சொன்னதால், இந்திய சலூனைத்தேடி, இல்லாததால் கட்டண அடிப்படையில் மூன்பிரதர்ஸ்-ஐ தேர்ந்தெடுத்தேன். அன்றும் இன்றும் இங்கே முடிவெட்டுவதற்கு $ 8 டாலர் மட்டுமே. கட்டு(டிங்)படி எப்படி ஆவுதுன்னு தெரியலை . டை அடிப்பதற்கு $10 டாலர், டிப்ஸ் 2 டாலர், ஆகமொத்தம் $ 20 டாலரில் தலைக்கு மேல் வேலை முடிந்துவிடும். சுறு சுருவென்று உள்ளே செல்லும் நான், கருகரு வென்று வெளியே வந்துவிடுவேன். இங்கே பார்ட்னர்களாக இருக்கும் இரண்டு சகோதரர்களுக்கும் சுத்தமாக முடியில்லை. முடியேயில்லாத இவர்கள் முடி வெட்டினால் நன்றாகயிருக்குமா? என்ற பெருத்த சந்தேகம் வந்தது .மூன் பிரதர்ஸ் என்பது காரணப்பெயராக இருக்குமோ என்றும் சந்தேகித்தேன்.  பாகிஸ்தான்காரர்கள் என்றவுடன் நான் இந்தியன் என்பதால், சிகை வெட்டுவதற்கு பதில் சிரம் வெட்டிவிடுவார்களோ  என்ற பயமும் இருந்தது. அந்தி  சாயும் வேளையில் ,இந்தியும் தெரியாததால் மந்திபோல் முழித்துக் கொண்டு ஒரு ஓரத்தில்  குந்தி இருந்த போது, ஸ்டைலாக ஒருவன் உள்ளே நுழைந்தான். மூத்த மூன் சகோதரரின் மூத்த மகன் என்று அறிந்து மகிழ்ந்து நீ நீ நீதான், எனக்கு வெட்டவேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க நேரிட்டது. அவன் வெட்டியது பிடித்துப்போக, இதோ இன்றுவரை காசியஃப்தான் என் ஆஸ்தான முடிவெட்டி.  என் தற்போதைய  பாலிசி என்னன்னா ? முடி வெட்டவேண்டும் , ஆனா வெட்டினது போல தெரியக்கூடாது . (ஏன்னா இது என் பணம்) மாணவ காலங்களில் என் பழைய பாலிசி என்னன்னா ? முடி வெட்டவே கூடாது , ஆனா வெட்டினது போல தெரியவேண்டும்.( அது என் அப்பா பணம்).

                அங்கு இன்னும் பல இளைஞர்கள் இருந்தாலும்,  அதிகப்பேர்  காசியஃப்பை நாடியது, அவன் ஹேர்ஸ்டைல் போல நமக்கும் வந்துவிடாதா என்ற, நப்பாசைதான் என்று நினைக்கிறேன். அது பங்க்கும் இல்லை, ஸ்பைக்கும் இல்லாத ஒருவித புதுஸ்டைல். என்னென்னவோ ஸ்டைல் ட்ரை பண்ணி முடியாது  , நம் கோரை முடிக்கு இந்த அகோர ஸ்டைலைத்தவிர வேறென்றும் செட்டாகாது என்று மனசைத் தேற்றிக் கொண்டேன்.
     மதுரையில் படிக்கும்போது , என் தோழிக்கு பிடிக்கும் என்பதால் , "டிஸ்கோ" ஸ்டைல் வெட்டி , குளித்தபின் ,முடி முள்ளம்பன்றி மாதிரி நிற்க , கர்சீப்பை தலையில் கட்டிக்கொண்டு நான்கு வெவ்வேறு சலூன் கடைகளுக்கு  சென்று , ஹீட்டர் போட்டும் , முடி அடங்கவில்லையாதலால் ,மீண்டும் தேவர் சிலை பக்கத்தில் உள்ள ஸ்டூடெண்ட்ஸ் சலூனில் போய் ஒட்ட  வெட்டினேன் .  ஆமா அன்று முடியும் காலி , பணம் இருந்த மடியும் காலி.

            முதலில்  விடலைப் பையனாகப் பார்த்த, காசியஃப்பும் இப்போது பெரியவனாகி, தன்  உடன் வேலை பார்த்த, பெண்கள்  பகுதியின் பியூட்டீசியனை, மூன்களை எதிர்த்துக்கொண்டு கல்யாணம் முடித்து, இப்போது இரண்டு மகன்களுக்கு தகப்பன். இது எப்படி நடந்தது என்றே எனக்குப் புரியவில்லை. மூத்த மூன் சகோ எப்பொழுதும் அந்தப்பெண்ணை சீண்டிக்கொண்டும், கிள்ளிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும் இருப்பார். மகன் எதிரிலே எல்லாம் நடந்தாலும், காசியஃப் அதனை கண்டு கொண்டதாகவே காண்பிக்க மாட்டான்.
            ஒருமுறை நான் முடி வெட்டிக்கொண்டிருந்த போது ,மூமூ, அவளைச்சீண்டி, வலுக்கட்டாயமாகக் கன்னத்தில் முத்தமிட்டதை, (சரியாக தெரியவில்லை, கன்னமா?  உதடா?) நான் பார்க்க முயன்றபோது, காசியஃப் என் தலையை திரும்பமுடியாமல் இறுக்கி, கழுத்தில் கத்தியை வைத்தான்.  இது எல்லாவற்றையும் மீறி, காசியஃப் அந்தப் பெண்ணை நிக்காவும் செய்தது எனக்கு பக்கா  அதிர்ச்சி. 
      நேரம்  ஓடிக்கொண்டிருந்தது. காசியஃப்பை இன்னும் காணோம், பஞ்சாப்பைச் சேர்ந்த (இது பாகிஸ்தானின் பஞ்சாப்) அஸ்ரப் அலி வந்து என்னைக் கேட்டான், "கட்டிங்கா கலரா?" என்று. ஐயாசாமி ஆளைவிடு என்று நினைத்துக்கொண்டு, “காசியஃப் வரட்டும்” என்றேன்.
    அவன் என்னவோ பஞ்சாபி கலந்த உருதுவில் சொன்னது எனக்குப்புரியவில்லை. யாரிடம் போனாலும், இவனிடம் போகமாட்டேன்.  ஒருமுறை காசியப் இல்லாமல், ஒரு பரீட்சார்த்த முறையாக இவனிடம் செல்ல, நான் என்ன சொல்லியும் புரியாமல் , கதற கதற ,கிட்டத்தட்ட மொட்டை அடித்ததோடு, ஒரு அட்டைக் கறுப்பு சாயத்தை தேய்த்துவிட, கழுவி முடித்தால், எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது, கறுப்புச்சாயத்திலேயே பலவகை உண்டு என்று. அது ஆப்பிரிக்கர்களுக்கு போடும் கருப்பாம். நீ ட்ரைனிங் எடுக்க என் தலைதானா கிடைச்சுது .
     சிறிது நேரத்தில் காசியஃப் பரபரப்புடன் வந்து சேர்ந்தான். பார்த்தால் அடையாளமே தெரியாது, முழு சூட் அணிந்து தலையை படிய வாரியிருந்தான். என்னடா என்று கேட்டால், அவன் இப்போது மேன்ஹாட்டனில் உள்ள ஒரு “ஹெல்த் கேர்” கம்பெனியில் “குவாலிட்டி அனலிஸ்ட்டாக” பணிபுரிவதாய்ச் சொன்னான். இதிலே எனக்கொன்னும் ஆச்சரியம் இல்லை .நம்ம தேசி ஆளுங்க , ஈரைப் பேணாக்கி ,பேணை பெருமாளாக்கிருவாய்ங்க.   பக்கத்தில் உள்ள கம்ப்- யூட்டர் 
 நிறுவனத்தில்( Computech Computers Inc) டிரைனிங் எடுத்து, அவர்களே வேலை வங்கிக் கொடுத்ததாகச் சொன்னான். கம்ப்யூடெக்கில் சிலரை எனக்குத் தெரியுமென்பதால், யார் மூலம் என்று  கேட்டபோது ஆனந்த் காமிநேனி என்றான். என் கம்பெனியும் இதனை செய்திருக்க முடியுமாதலால், ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டேன். "பலமுறை உங்களிடம் பேசிப்பார்த்தேன் நீங்கள் கண்டு கொள்ளவில்லை" என்றான். (எலேய் சேகரு, யார்லே உனக்கு இனிமேல் முடி வெட்டுவாய்ங்கே ?) வழக்கம்போல், ஆந்திராக்காரன் முந்திக்கொள்ள, “அடடா, வடை
போச்சே” என்று எழுந்தேன்.

Monday, May 6, 2013

மெக்சிகோ பயணம்-10 : மெக்சிகோவின் விடுதலைப்போராட்டம்


விடுதலைப் போராட்டம் மற்றும் அமெரிக்க ஆதிக்கம் பற்றி பின்னர் சொல்கிறேன்.
     முதலில் டானியல் எங்களை அழைத்துச் சென்றது, ஆந்த்ரபாலஜி மியூசியம். போகும் வழியில் “காந்தி சாலை”யைப் பார்த்தேன். ஒருவேளை இங்குள்ள ஏதாவது பெயராக இருக்கும் என நினைத்தபோதுதான், மியூசியம் நுழைவாயிலருகில் காந்தி சிலையைப் பார்த்தேன். எங்கேயெல்லாம் காந்தி ஆகர்ஷித்திருக்கிறார்  என நினைத்து பெருமையாக இருந்தது. அதே சமயத்தில் இந்தியர் அனைவருமே இப்படித்தான் அரை நிர்வாணமாய் இருப்பார்களோ? என்று மற்றவர்கள் நினைப்பார்களோ என்று பயமாகவும் இருந்தது.

     ஆந்த்ரபாலஜி மியூசியம் 70களில் கட்டப்பட்ட நேர்த்தியான கட்டிடம். மெக்சிகோவின் மிகப்பிரபலமான ஆர்க்கிடெக்ட் “பெட்ரோ  ராமிரெஸ்” (Pedro Ramirez) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஞாபகம் இருக்கிறதா ? இவர்தான் , புதிய குவாடலுப் பேராலயத்தைக்கட்டியவர்
Aztec Model Village

     மியூசியத்தில் மாயன் மற்றும் ஆஸ்டெக் நாகரிகத்தைக் குறித்து விலாவரியான தகவல்கள் கலைப்பொருட்கள், புராதனச் சின்னங்கள் இருந்தன. அதில் முக்கியமானது, மாயன் காலண்டர் மற்றும் ஆஸ்டெக் காலண்டர். நடுவில் நாக்கைத்துருத்தி பயமுறுத்திய தலையுடன் சுற்றிலும் பல உருவங்கள் செதுக்கப்பட்டிருந்த, மிகப்பெரிய கல்லில்  வட்டவடிவில் இருந்த ஆஸ்டெக் காலண்டரில் போட்டோ எடுத்துக் கொண்டேன். மாயன் காலண்டர் பற்றி உலகமெங்கும் புரளி இருந்தாலும், ஆச்சரியமாக மெக்சிகோவில் ஒன்றுமே இல்லை.
Aztec calender

     வெளியே வந்தபோது, எங்கெங்கு நோக்கினாலும் போலிஸ் படை திரள்திரளாக இருந்தது. டானியலிடம் கேட்டேன், “இன்று என்ன விசேஷம்”? என்று. அப்பொழுதுதான் சொன்னான், அன்று அவர்களின் புதிய பிரசிடன்ட்  பதவியேற்க விருப்பதாக. ஒவ்வொரு ஆறு வருடமும் புதிய பிரசிடன்ட்  மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் பெயர் , என்றிக் பினா நியடோ (Enrique  Pena  Nieto) எனும் 46 வயது இளைஞன். குற்றப்பின்னணி உள்ள குடும்பம் என்பதால் ஏகப்பட்ட எதிர்ப்பு (இங்கேயுமா?). எனவே பல இடங்களுக்கு நம்மால் இன்றுபோகமுடியாது என்று குண்டைப்போட்டான். அப்பொழுதுதான் புரிந்தது ஏன் இன்றைய டூரில் ஆளே இல்லை என்று (சொல்லவேயில்லை...)
     அதன்பின்னர் தத்தித்தடவி, பேலஸ் ஆஃப் ஆர்ட்ஸ் சென்றோம். பலவித எண்ணெய் ஓவியங்கள் நிறைந்த அந்த அரண்மனைக் கட்டிடம் மிக அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தது. 
Palace of Arts

மெயின் சிட்டியான, டெளன் டவுன் (Down Town) செல்லும் எல்லாப்பாதைகளிலும் தடுப்புகள் போடப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.
     சிறிது நேரத்தில் தெருவெங்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது. ஏராளமான பேர் பதாகைகளை ஏந்திக்கொண்டு, எதிர்ப்புக் கோஷங்களுடன் நடந்தனர். மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் சைக்கிள் பேரணி நடத்தினர். குறுக்குவழியில் ஜெயித்துவிட்டார் என்று ஒரே புரளி. திரும்பிவிடலாம் என்று திட்டமிட்டு, அந்த டொமினிக்கன் தம்பதியினரை ஹோட்டலில் இறக்கிவிடச் சென்றோம். அவர்கள் பாதிநாள்  மட்டுமே புக் செய்திருந்தார்கள். (தப்பித்தார்கள் ஆனால் சுத்த வேஸ்ட்).
     போகும் வழியில் சுதந்திரதேவியின் நினைவுச்சின்னம் இருந்தது. டேனியல் விவரித்த சுதந்திரப்போராட்டத்தை சுருக்கமாக சொல்கிறேன். Pls feel free to skip.
     மாவீரன் நெப்போலியன் ஸ்பெயினை வென்று பரம்பரை ஸ்பெயின் நாட்டு மன்னனான, ஏழாவது ஃபெர்டினாண்டை தள்ளிவைத்துவிட்டு தன்னுடைய தம்பியான ஜோசப்பை அரியணையில் அமர்த்தினான். ஆரம்பித்தது மெக்சிகோவிலும் குழப்பம். அதிகப்படி வரி, நிலையில்லாத அரசாங்கம், சரிசமமான மதிப்பின்மை ஆகியவை சுதந்திரப் போராட்டத்திற்கு அடிகோலியது.
     மிகுவேல் ஹிடால்கோ (Miguel Hidalgo) என்று கத்தோலிக்க பாதிரியார் செப்டம்பர் 16, 1810ல் சுதந்திரப்போராட்ட முழக்கத்தை எழுப்பினார். எழுந்தது சிவப்பிந்தியர்களின் கூட்டம்.எதிர்ப்பட்ட ஸ்பானிஸ்காரர்களை கொன்று குவித்தது. அதற்குள் கருத்து வேறுபாடு கொண்டு இக்னேசியோ என்னும் பாதிரியார் பாதி ஆட்களை கழற்றிக்கொண்டு போய்விட்டார். அவ்வளவுதான் முடிந்தது கதை. இரண்டு பட்டுப்போன கூட்டத்தை, ஸ்பெயின் ராணுவம் சுலபமாக முறியடித்தது, இருவரையும் தனித்தனியே பிடித்து தூக்கிலிட்டது. இருவர் தலையையும் முச்சந்தியில் தொங்கவிட்டு மக்களை எச்சரித்தது.

     ஆனாலும் ஜோஸ் மரியா மோரலஸ் என்ற இன்னொரு பாதிரியின் தலைமையில் அணி திரண்ட படையினர் தொடர்ந்து போராடினர். (பாதிரியார்கள் அப்போல்லாம் வீரர்களாய்  இருந்திருக்கிறார்களாம்ப்பு). பூர்வகுடி மக்களுக்கு சமஉரிமை வேண்டி சுதந்திர பிரகடனம் செய்த அவர்  கதியும், அதோகதி மற்றும் அதே கதி ஆனது.

     அதன் பின்னர் போராட்டம், வின்சென்ட் குவாரோ மற்றும் குவாடலுப் விக்டோரியா ஆகிய கொரில்லாக்கள் தலைமையில் சென்று சூடுபிடித்தது. வைஸ்ராய் அவர்களை அடக்க இருர்பைட் என்பவரை அனுப்பினார். இவர் எதிர்க்கட்சியில் சேர்ந்து சுதந்திரம் வாங்கி ஸ்பானிஸ் முடியாட்சியுடன் ஒப்பந்தம் செய்தார். எப்படியாவது ஃபெர்டினாண்ட் அல்லது ஏதாவது ஐரோப்பியரை அரசராக்கி மெக்சிகோவை சுதந்திர முடியாட்சியாக்கிவிட வேண்டும் என்பது அவர் விருப்பம். ஒருவரும் சிக்காத சமயத்தில் விடுதலைத் தலைவர்கள் அசந்திருக்கும் சந்தர்ப்பத்தில் தன்னைத்தானே பேரரசாக முடிசூட்டிக் கொண்டார். சும்மாவிடுவார்களா விடுதலை வீரர்கள், கூட இருந்தே குழிபறித்த அகஸ்டின் இருர்பைடை, ஒரு வருடத்திற்குள் அகற்றிவிட்டு ஜனநாயக நாடாக அறிவித்தனர். ஹிடால்கோ  இட்ட முதல் அறிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் 16 சுதந்திர தினமாகியது. அவரே நாட்டின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்.
Father Hidalgo

      எங்களோடு வந்த, டொமினிக்கன் நாட்டைச்சேர்ந்த இருவரையும் இறக்கிவிட்டபின், டானியலைப் பார்த்தேன். மணி மதியம் 12.30, எங்கேயாவது சாப்பிட்டுவிட்டு அடுத்த இடத்திற்கு செல்வோம் என்றேன். அடுத்தபடியாக ஷோஸிமில்கோ ரிவர் குருஸ். அங்கே கூட்டமிருக்குமா? இதே பிரச்சனை இருக்குமா? என வினவியபோது, அது நகரைவிட்டு தள்ளி இருக்கிறது, எனவே ஒன்னும் பிரச்சனையிருக்காது பயப்படாதே என்று தைரியமூட்டினான், டானியல்.