Monday, October 29, 2018

கோயில் கதவிற்குப் பூசை ?


வேர்களைத்தேடி பகுதி 30
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.  
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_22.html       
பெயர்க் காரணம் ( நன்றி தினமலர்)
Image result for kamatchi amman temple devadanapatti
Temple Entrance 
அசுரன் ஆண்ட வங்கிசபுரிக்கு தலேச்சுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால், “தெய்வதானப்பதி” என்று அழைக்கப்பெற்றது. பின்னர் இந்தப் பெயர் மருவி “தேவதானம்” என்று ஆனது. தற்போது இது தேவதானப்பட்டி என்று ஆகி விட்டது. இந்த தெய்வதானப்பதி நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் ராஜகம்பள நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாயக்கர் என்பவரின் தலைமையிலான பாளையத்தின் ஆட்சியாக (ஜமீன்தார் ஆட்சி) இருந்து வந்தது. இந்த ஜமீனைச் சேர்ந்த மாடுகளை ஒருவன் மேய்க்கக் கொண்டு செல்வான். அவன் மேய்க்கக் கொண்டு செல்லும் மாடுகளில் ஒன்றான குட்டி போடாத பசு ஒன்று தினமும் அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று மாலையில்தான் திரும்ப வரும். அந்த ஒரு பசு மட்டும் எங்கே செல்கிறது? எதற்குச் செல்கிறது? என்று அறிய ஆவல் கொண்ட அவன் ஒருநாள் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்து சென்றான்.
Image result for kamatchi amman temple devadanapatti

அங்கு மூங்கில் புதர் ஒன்றில் யௌவன வடிவமான தேவ அம்சம் பொருந்திய பெண் அப்பசுவின் பால் அருந்துவது கண்டான். அவன் கண்டது சாதாரணப் பெண் அல்ல. அது காமாட்சியம்மன். ஒளிப்பிழம்பாய் விளங்கும் அன்னையை மாடு மேய்ப்பவன் பார்த்தவுடன் அவன் கண்கள் குருடாகிப் போய்விட்டன. அவன் ஜமீன்தாரரிடம் சென்று நடந்ததைக் கூறினான். இது தெய்வக் குற்றமாக இருக்கும் என்று கருதிய ஜமீன்தாரர் பூசைகள் செய்தார். அப்போது அம்மன் அசரீரியாக, “இந்தப் பகுதியில் வச்சிரதந்தன் என்ற அசுரனை அழித்து அமைதிக்காக தவமிருக்கும் என்னைக் கண்ட மாடு மேய்ப்பவன் என்னுடைய ஒளி தாங்காமல் அவன் கண்களை இழந்தான். இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆற்றில் பெருமழை பெய்து வெள்ளம் வரும். அந்த வெள்ளத்தின் மீது மிதந்து வரும் மூங்கில் பெட்டியில் நான் அமர்ந்து வருவேன். ஒரு இடத்தில் மூங்கில் புதர் கொண்டு அணையிட்டு பெட்டியைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பெட்டியை எடுத்து வழிபட்டால் குருடான உன் மாடு மேய்ப்பவனுக்குக் கண்கள் தெரியும். கன்னித் தெய்வமான என்னருகில் இல்லறத்திலிருப்பவர்கள் குடியிருக்கக் கூடாது. நெய்விளக்கு தவிர வேறு விளக்குகளை ஏற்றக் கூடாது. தேங்காயும் பழமும் நைவேத்தியம் செய்தால் போதும். அன்ன நைவேத்தியம் கூடாது” என்றும் கூறியது.
அம்மனின் வாக்குப்படி மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தது. ஜமீன்தாரரும், அந்த ஊர் மக்களும் மஞ்சளாற்றின் கரையில் காத்து இருந்தனர். ஆற்றில் மூங்கில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. பெட்டியைக் கண்டதும் அவர்கள் மூங்கில் புதர் அணையிட்டு அந்தப் பெட்டியை நிறுத்தினர். கண்கள் குருடான மாடு மேய்ப்பவன் அந்தப் பெட்டியை எடுத்தான். அவன் அந்தப் பெட்டியைத் தொட்டவுடன் அவனுக்கு கண்கள் தெரியத் தொடங்கின. காமாட்சியம்மனின் சக்தியை நேரில் கண்ட மக்கள் பக்தியுடன் வணங்கத் தொடங்கினர். தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து அவசர அவசரமாகப் பூசை செய்தார்கள். தேங்காய் உடைக்காமல், வாழைப்பழம் உரிக்காமல் பூசை செய்த பின்னர்தான் உணர்ந்தார்கள். குட்டி போடாத காரம்பசுவின் பாலருந்திய அம்மன் உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் விரும்புகிறார் என்றும் தெளிவு கொண்டனர். அன்றிலிருந்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை. பூசை செய்த பின்னர்தான் தேங்காய் உடைக்கப்படும். இது வேறு எந்த இந்து சமயக் கோயில்களிலும் இல்லாத ஒன்று. இக்கோயிலில் அன்ன நைவேத்தியமும் செய்யப்படுவதில்லை.
Related image

 கோயில் கதவிற்குப் பூசை
மூங்கில் அணையிட்டு நிறுத்தியதால் இந்த அம்மன் மூங்கிலணைக் காமாட்சி என்று அழைக்கப்படுகிறார். அம்மனின் அருள் வாக்குப்படி பெட்டி எடுத்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. காமாட்சிப்புல்லால் வேயப்பட்ட குச்சுவீட்டுக்குள் அம்மன் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கோயில் பூசை செய்யும் பொறுப்பு மலைமேல் குடியிருக்கும் மன்னாடியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் பூசைப் பணிகளைச் செய்து வந்தனர். இந்நிலையில் மன்னாடியருக்கும், ஜமீந்தாரருக்கும் அவர்களது நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டில் கோபம் கொண்ட மன்னாடியார் கோயில் கதவைப் பூட்டியதுடன் “நான் அடைத்த கதவு என்றும் திறக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து இன்று வரை பூட்டியகதவு திறக்கப்படுவதில்லை. மேலும் அடைத்த கதவிற்கு முன்பாகத்தான் பூசை செய்யப்படுகிறது. தற்போது அந்த அடைத்த கதவின் முன்பாக நாக பீடம் அமைக்கப்பட்டு காமாட்சியம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையிலிருந்தபடி கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
 தொடரும் 

Thursday, October 25, 2018

நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா Part -1

Related image
Nassau County office 

எச்சரிக்கை(Disclaimer): மக்களே கிளர்க் வேலை செய்வதை குறைத்து மதிப்பிட்டு எள்ளி நகையாடுவது என் நோக்கமல்ல .

"அவர் என்ன வேலை செய்றார்ப்பா?
"அவரா அவர் ஒரு குமாஸ்தா"
“என்ன வெறும் குமாஸ்தாவா? இவ்வளவு பந்தா பன்றாரு?”
இந்த உரையாடலை நீங்கள் கேட்பதற்கு வாய்ப்பிருந்திருக்கும். குமாஸ்தா என்பது தமிழ் வார்த்தையல்ல, தமாஷ் அல்லது தமாஷா என்பதும் தமிழ் வார்த்தையில்லை.
Image result for British education system in India macaulay


ஆங்கிலேய அரசாங்கம் மீதிருக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு என்பது அவர்களின் அதிகாரியான மெக்காலே என்பவர் அறிமுகப்படுத்திய கல்வித்திட்டம். அதில் என்ன குறையென்று கேட்டால் அது கிளர்க்குகளை மட்டும் உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட கல்விமுறை என்று சொல்வார்கள். இன்றும் அந்த முறை முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.
பியூன் என்பது எப்படி அட்டண்டென்ட் என்று மாறியதோ அதே போல கிளார்க் என்பது அசிஸ்டென்ட் என்று காலப்போக்கில் மாறியது. அதனை ஜூனியர் அசிஸ்டென்ட் சீனியர் அசிஸ்டென்ட் என்று பிரித்திருக்கிறார்கள். தமிழில் இளநிலை உதவியாளர் முதுநிலை உதவியாளர் என்பர். கிளர்க் வேலையினை நேரடியாக தமிழில் மொழி மாற்றம் செய்தால் எழுத்தர் என்று வரும். சில அரசு அலுவலகங்களில் எழுத்தர் என சில பதவிகளும் இன்னும் இருக்கின்றன. 
அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை முடித்து, சமூகப்பணிக்கல்லூரியில் முதுநிலை முடிக்கும் தருணத்தில், பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தில், இளநிலை உதவியாளர் வேலைக்கு எங்கள் கல்லூரி இசைக்குழுவில் இருந்தோரை அழைக்க முதலில் மறுப்புச் சொன்னது நான். அதன் மேலாண்மை இயக்குநர் அக்கழகத்தில் ஒரு நல்ல  இசைக்குழுவை அமைக்க விரும்பினார்.
முதுகலை முடித்த நான் கிளர்க் வேலைக்குப்போக மாட்டேன் என்று தலைக்கனத்துடன் மறுத்துவிட்டேன். ஆனால் என் சக நண்பர்களில் பலபேர் அங்கு சேர்ந்து இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பிளஸ் டூவில் கிளார்க்ஸ் டேபிள் அறிமுகம் கிடைத்தபோது, நாமதான் கிளர்க்காக மாட்டோமே இதனை எதற்கு படிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டுமென முட்டாள்தனமாக நினைத்தது ஞாபகம் வருகிறது. ஆனால் அதன் ஸ்பெல்லிங் வேற என்று சில நாட்கள் கழித்துத்தான் தெரிந்து கொண்டேன். 
ஆனால்     நாங்கள் செய்யும் HR வேலையினை ஒரு குளோரியஸ் கிளர்க் வேலை என்பேன்.
எதற்கு இத்தனை விளக்கம் இத்தனை பீடிகை என்று தாங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அதுக்குத்தான் வருகிறேன் மக்களே, பொறுமை.
நியூயார்க் நகரின் மேன்மை மிகு மேன்ஹாட்டனில் 1997ல் ஆரம்பிக்கப்பட்ட முகமது சதக் குழுமத்தைச் சேர்ந்த "ஓபன்வேவ் கம்ப்யூட்டிங்" என்பதுதான் நான் வேலை செய்யும் கம்பெனி  என்பது உங்களில் பலபேருக்குத் தெரிந்திருக்கும். இதற்கு உதவியாகச் சென்னையில் "ஆஃப்ஷோர் டெவலெப்மென்ட் சென்ட்டர் ஒன்று நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இவை தவிர சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கிளைகள் உண்டு (www.openwavecomp.com)  

Related image
Openwave Chennai Office 
சமீபத்தில் போன மே  மாதம் நியூயார்க்கின் குயின்சின்  அருகில் உள்ள லாங் ஐலன்ட் பகுதில் உள்ள 'ஹிக்ஸ்வில்' என்ற ஊரில் ஓபன்வேலின் கிளை அலுவலம் ஆரம்பிக்கப்பட்டது. ஹிக்ஸ்வில் இருக்கும் லாங் ஐலண்ட் பகுதி நியூயார்க் மாநிலத்தில் இருந்தாலும் நியூயார்க் நகரம் என்று சொல்லப்படும் 5 போரோவைச்(மேன்ஹாட்டன், குயின்ஸ், புரூக்ளின், பிராங்ஸ் & ஸ்டேட்டன் ஐலன்ட்) சாராதது. எனவே அதெற்கென சில சலுகைகள் உண்டு  அதனால் தான் இங்கே ஒரு கிளை ஆரம்பித்து அதில் நான் வர ஆரம்பித்தேன்.
கடந்த வாரம் மலேசியாவிலிருந்து வந்த என் தலைவர் (President) இந்த இடத்தை ஆய்வு செய்து இதற்கு ஒரு பிஸினஸ் லைசென்ஸ் எடுக்கும்படி சொன்னார். ஏற்கனவே “டிபார்ட்மென்ட் ஆஃப் ஸ்டேட்டில்”  ஒரு நிறுவனமாக பதிவு பெற்ற ஓபன்வேவ் எத்தனை கிளைகளை வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம். அதற்குத்தனியாக லைசென்ஸ் அல்லது ரிஜிஸ்ட்ரேஷன் தேவையில்லை என்று எனக்குத் தெரியும். அதனை முகமதுவிடம் சொன்னாலும், எதற்கும் அதனை கன்ஃபார்ம் செய்துவிடச் சொன்னார்.
கூகுள் செய்து பார்த்ததில் அப்படி ரிஜிஸ்ட்டர் செய்வதற்கு கெளன்ட்டி கிளர்க்கிடம் (County clerk) போகவேண்டும் என்று சொன்னார்கள் .எனவே கடந்த வாரத்தில் ஒரு நாள், டிரைனில் போகாமல் என்னுடைய காரை எடுத்துக் கொண்டு வந்தேன்.
ஓ கிளர்க் தானே என்று இளக்காரமாக நினைத்து அங்கு போன எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
          குறிப்பிட்ட முகவரியில் மிகப்பெரிய ஒரு கட்டிடம் இருந்தது. தவறாக வந்துவிட்டோம் என்று சுற்றிச்சுற்றி வந்தும் ஒன்றும் புரியாமல் முதலில் ஒரு இடத்தில் பார்க் செய்துவிடலாம் என்று வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினேன்.
அங்கு சென்று கொண்டு இருந்தவர்களிடம், “கெளன்டி கிளர்க்கை எங்கே பார்க்கலாம்”, என்று கேட்டேன். அவர்கள் அதே பெரிய கட்டிடத்தைக் காண்பித்தார்கள். பலமாடிகளைக் கொண்ட அந்தக்கட்டிடம் ஒரு சிறிய ஐரோப்பிய அரண்மனைபோல் இருந்தது. அதற்கு முன்னால் நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு வேலை பார்ப்பவருக்கு மட்டும் என்று எழுதப்பட்டிருந்தது. விசிட்டர் பார்க்கிங்கும் நிரம்பி வழிந்ததால் தெருவில் மீட்டர் பார்க்கிங்கில்தான் நான் என்னுடைய காரை நிறுத்தினேன்.
சரி அந்தக்கட்டிடம் பொதுவான கட்டிடமாக இருக்கும் அங்கே ஒரு அலுவலகத்தில் கிளர்க் இருப்பார் என்று நினைத்து கிட்ட நெருங்கினேன்.
எதற்கும் சந்தேகப்பட்டு கிளர்க் ஆபிஸ் எது மற்றொருவரிடம் கேட்டபோது அதே பில்டிங்கைத்தான் காட்டினார். சரி உள்ளே போய்க் கேட்டுக் கொள்வோம் என்று உள்ளே போனால், மெட்டல் டிடக்டர் வைத்து செக் செய்தார்கள். பேக், வாட்ச், செல்போன், வாலட் ஆகியவை அனைத்தையும் ஒரு டிரேயில் போட்டுவிட்டு மெட்டல் டிடக்டர் வழியே உள்ளே நுழைந்தேன். பெரிய ரிஷப் ஷனில் காத்திருந்த வரிசையில் நிற்கச் சொன்னார்கள். மேலும் எனக்கு ஆச்சரியம் அங்கு காத்திருந்தது. அதனை விளக்கமாக அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்


Monday, October 22, 2018

அசுரனைக்கொன்ற காமாட்சி !!!!


Image result for வச்சிரதந்தன்

வேர்களைத்தேடி பகுதி 29
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.          
https://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_8.html
தல வரலாறு ( நன்றி தினமலர்)
            கோவிலின் சிறப்புகளைச் சொல்வதற்கு முன் அதன் தல வரலாறை சொல்வது முக்கியம் என்பதால் அதனை இந்தப்பதிவில் பார்த்து விடலாம் .
            இந்து சமயக் கதையின்படி, முன்பொரு காலத்தில், காஞ்சனா எனும் காட்டுப்பகுதியை, சூலபாணி எனும் அசுர மன்னன் வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான். அதில் தனக்குத் தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன், தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்பதும் ஒன்று. இந்த தவத்தின் பலனால் அவனுக்கு வலிமையான ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு வச்சிரதந்தன் எனும் பெயரிட்டு வளர்த்து வந்தான். பின்னர் அவனை அப்பகுதியின் அரசனாக்கினான். அவனுக்கு மாங்குசானன் என்பவன் அமைச்சராகவும், துட்டபுத்தி என்பவன் தளபதியாகவும் இருந்தனர். இவர்களிருவரின் ஆலோசனைப்படி காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும், வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால் அவனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.
              பாதிக்கப்பட்டவர்கள் அவனுடைய தொல்லைகள் பற்றி பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். அவரும் வச்சிரதந்தனை அழிக்க தேவேந்திரனை அனுப்பி வைத்தார். தேவேந்திரன் வச்சிரதந்தனின் தளபதியான துட்டபுத்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது படையையும் இழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான். இப்படி ஓடிய தேவேந்திரன் வச்சிரதந்தனை பராசக்தியால்தான் அழிக்க முடியும் என்று கருதி பிற தேவர்களுடன் பராசக்தி காமாட்சியம்மனாக எழுந்தருளியுள்ள காஞ்சிபுரம் சென்று அன்னையிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற காமாட்சியம்மன் அவனை அழிக்கப் புறப்பட்டார். வங்கிசபுரி வரும் வழியில் பன்றிமலை என்ற வராகமலையில் இறங்கி துர்க்கையை வச்சிரதந்தனுடன் போரிட அனுப்பி வைத்தார்.
Image result for அசுரன்

         துர்க்கை அங்கிருந்து புறப்பட்டு வங்கிசபுரி வந்து வச்சிரதந்தனுடன் போர் புரிந்தார். அவனுடைய தலையைத் துண்டித்தார். மீண்டெழுந்து சிங்கத்தலையுடன் நின்றான். அதையும் துண்டித்தார். பின்னர் புலி, கரடி, காட்டெருமை என ஒவ்வொரு தலையுடன் தோன்ற அனைத்தையும் துண்டித்தார் துர்க்கை. இவனை ஒழிக்க காமாட்சியம்மனாலேயே முடியும் என்ற நோக்குடன் துர்க்கை அங்கிருந்து திரும்பினார்.
            துர்க்கை தோல்வியுடன் திரும்பியது கண்டு காமாட்சியம்மன் கோபத்துடன் துர்க்காதேவியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வங்கிசபுரி வந்தார். வச்சிரதந்தன் ஏவிய ஆயுதங்கள் காமாட்சியம்மனை மூன்றுமுறை வலம் வந்து அவனிடமே திரும்பிச் சென்றது. வச்சிரதந்தனும் அந்த அம்மனை வணங்கினான். பின்னர் அம்மனுடன் போரிடத் தொடங்கினான். துர்க்கையுடன் போரிட்டது போல் பல்வேறு தலைகளுக்கு மாறினான். காமாட்சியம்மன் துர்க்கையிடம் வச்சிரதந்தன் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தவுடன் அதைக் காலால் நசுக்கி அழித்து விடும்படி கூறி வச்சிரதந்தனின் தலையைத் துண்டித்தார். துர்க்கையும் அந்தத் தலையைக் காலால் நசுக்கி அழித்தார். அசுரன் மறுதலை எடுக்க முடியாமல் அழிந்தான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
                     அசுரனது தலையை மிதித்த இடம் தலையாறு எனவும், மூளை சிதறிப் போய் விழுந்த இடம் மூளையாறு எனவும், குலைகாய் ஈரல் விழுந்த இடம் குலையூத்து எனவும், உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை எனவும் பெயர் பெற்றன. இன்றும் இந்தப் பகுதியில் இந்தப் பெயர்கள் வழக்கத்திலுள்ளன.
               வங்கிசபுரிக்கு அருகில் வேகவதி என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஆறு மாணிக்கமலைத் தொடரிலிருக்கும் தலையாறு எனுமிடத்தில் மூங்கில் காடுகளுக்கிடையே பாய்கிறது. அசுரனைக் கொன்ற அம்மன் யௌவன வடிவம் கொண்டு இந்நதி அருகில் தவமிருந்தாள். அசுரனைக் கொன்ற பாவம் அம்மனுக்கு நீங்குவதற்காக சப்த கன்னியர்கள், தெய்வப் பெண்கள், துர்க்கை அனைவரும் சேர்ந்து ஆயிரத்தெட்டு தங்கக் குடங்களில் நீரெடுத்து வாசனைத் திரவியங்களுடன் மஞ்சளும் கலந்து அபிசேகம் செய்தனர். கன்னித் தெய்வமாய் பொலிவுறும் காமாட்சியம்மனுக்கு அபிசேகம் செய்த மஞ்சள் நீர் ஆற்றில் கலந்ததால் வேகவதி ஆறாக இருந்த ஆறு மஞ்சளாறு எனப் பெயர் மாற்றமடைந்தது. அம்மன் தலையாற்றின் மூங்கில் காடுகளில் தவமிருந்த இடத்தில் சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இது “அம்மா மச்சு” என்று அழைக்கப்படுகிறது.
இன்னும் கொஞ்சம் தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
தொடரும்










Thursday, October 18, 2018

ஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் !


Six days ver6.jpg
அந்த ஆறு நாட்கள்
பார்த்ததில் பிடித்தது.
Six days
1980ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி ஈரானைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய ஆறு பேர் லண்டனில் உள்ள ஈரானின் எம்பஸியை ஆக்ரமித்து அதிலிருந்த 26 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். சலீம் என்பவரின் தலைமையில் இயங்கிய இந்தக்குழு ஈரானில் அடைபட்டிருக்கும் 91 அரேபிய கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் பிணைக் கைதிகளை ஒவ்வொருவராகக் கொல்வோம் என்று எச்சரித்தான். இந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில்  எடுக்கப்பட்ட படம்தான் 6 Days.
சீஃப் இன்ஸ்பெக்டர் மேக்ஸ் வெர்னன்  தலைமையில் பக்கத்துக் கட்டிடத்தில் ஒரு குழு இயங்கி சலீமிடம் தொலைபேசியில் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்கள். உள்ளே இருந்த பிணைக்கைதிகளோடு அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும் சேர்த்து உணவினை அனுப்புகிறார் மேக்ஸ். இங்கிலாந்தின் அதிகாரிகளோடு ஒத்துழைக்க மறுத்த ஈரான் அரசாங்கம் திவீரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்கவில்லை. இதற்கிடையில் அவர்களுடைய கோரிக்கை BBC -யில் ஒலி பரப்பப்பட வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையை வைத்தான் சலீம்.
இறுதியாக சலீம் இரண்டு பஸ்களைக் கேட்டு, அவர்களை பத்திரமாக விமானமேற்றி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். இப்படியே நாட்கள் கடந்துபோக சுகமில்லாதிருந்த ஒரு பிணைக்கைதியை விடுதலை செய்தார்கள். ஆனால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கு மேலும் பொறுக்காத அதிரடிப்படை பின்புறமாக உள்ள கட்டிடத்திலிருந்து உள்ளே நுழைந்தார்கள். எப்படிச் சண்டையிட்டார்கள்?  பிணைக் கைதிகள் எல்லோரும் காப்பாற்றப்பட்டனரா? தீவிரவாதிகளுக்கு என்ன ஆயிற்று என்பவற்றை வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் காண்க.
Image result for Kate Adie
Kate Adie
இந்த நிகழ்வு முழுவதையும் தொடர்ந்து ஒலிபரப்பிய BBC ரிப்போர்ட்டர் கேட் ஆடி (Kate Adie) இதன்பின் மிகவும் பிரபலமானார்.
இந்தப் படத்தை  பிரிட்டிஷ் - நியூசிலாந்து கூட்டுத் தலைமையில் ஜெனரல் ஃபிலிம் கார்ப்பரேஷன், xyz  ஃபிலிம்ஸ், மற்றும் நியூசிலாந்து   ஃபிலிம் கமிஷன் ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரித்தன. நியூசிலாந்தில் நவம்பர் 2017ம் இது வெளியிடப்பட்டது. இதற்கு திரைக்கதை அமைத்தவர் கிளன் ஸ்டாண்ட்ரிங் (Glen Standring) இயக்கியவர் டோவா ஃபிரேசர் (Toa Fraser)

Mark Strong (Berlin Film Festival 2011).jpg
Mark Strong
மேக்ஸ் வெர்னன் ஆக மார்க் ஸ்ட்ராங்கும், கேட் ஆடியாக ஆபி கார்னிஷ் -ம் (Abbie Cornish) சலீமாக பென் டர்னரும் ( Ben Turner) நடித்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம்.
-முற்றும்.
 

Thursday, October 11, 2018

அரசியல்வாதியான ஒரு திருடன்!


Image result for திருடன் மணியன்பிள்ளை

படித்ததில் பிடித்தது
திருடன் மணியன்பிள்ளை – ஜி.ஆர். இந்து கோபன்.
தமிழில் குளச்சல் மு.யூசுப்
காலச்சுவடு பதிப்பகம்
மலையாள எழுத்தாளர் ஜி.ஆர். இந்து கோபன் அவர்கள்  வாழத்துங்கலில் பிறந்தவர். திருடன் மணியின் பிள்ளையின் ஊரும் இதுதான். மணியன் பிள்ளை சொல்லச்சொல்ல எழுதப்பட்ட இந்த நாவல் மலையாள உலகில் மட்டுமின்றி பல இடங்களில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியது. வாழத்துங்கல் என்ற இடம் கொல்லம் மாவட்டத்தில் இரவிபுரத்தினருகில் இருக்கிறது. இந்துகோபன் மலையாள மனோரமாவில் உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியிருக்கிறார். திரைப்படங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.
Image result for g r indugopan
இந்து கோபன்
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட தரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
திருடன் மணியன்பிள்ளை என்பது ஒரு கற்பனைக் கதையல்ல. சந்தர்ப்ப சூழ்நிலையால் திருட்டுத் தொழிலுக்குத் தள்ளப்பட்ட ஒரு அப்பாவியின் உண்மைக்கதை. இப்படி ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் நான் படித்ததில்லை. நீங்களும் படித்திருக்க மாட்டீர்கள். மிக நீண்ட ஒன்று என்றாலும் நாமும் கூட கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப்பாடங்கள் இதில் நிறையவே இருக்கின்றன.
Image result for திருடன் மணியன்பிள்ளை
மணியன்பிள்ளை
மணியன்பிள்ளை அவன் வீட்டில் ஒரே பையன் .ஒரு அக்கா ஒரு தங்கை. சேரூர் வடக்கத்தில் வீட்டைச் சேர்ந்த சேரூர் சி.பி என்றழைக்கப்பட்ட பாரிஸ்டர் பட்டம் பெற்ற சி. பரமேஸ்வரன் பிள்ளையின் பரம்பரையில் நாயர் உயர் வகுப்பில் பிறந்தவர் மணியன். அவருடைய அப்பாதான் ஒரே வாரிசு. ஆனால் குடிப்பழக்கத்தினால் குடிகெட்டு, சொந்தக் காரர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டு, சொத்து சுகங்களை எல்லாம் இழந்துபோனார்கள். மணியனுடைய சிறு வயதிலேயே இது நடந்துவிட்டதால் படிப்பும் போய் குடிசை வீட்டில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலைமையில் தான் இது நடந்தது. அத்தை திருடச்சொல்லி அந்தப் பழியை மணியன் மேல் போட்டது முதலாவது. இரண்டாவது தன் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து கோயில் உண்டியலை உடைக்க முயன்றது. அதன்பின் செய்யாத திருட்டுக்கு பழியேற்று திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது கொடூரம். அதன்பின் நிரந்தரத்திருடனாகும் நிலை ஏற்பட்டது.
மணியன் சொல்கிறார் அந்த திருச்சூர் சிறைதான் பல்கலைக் கழகம் போல்  அவருக்கு திருட்டுக் கலையை கற்றுக் கொடுத்தது.
இதனை மொழி பெயர்த்த குளச்சல் மு.யூசுப் இயல்பான நடையில் எழுதி எந்த இடத்திலும் இது மொழிபெயர்ப்பு என்று தெரியாத வண்ணம் எழுதியிருக்கிறார். இவரின் இன்னொரு மொழி பெயர்ப்பான "நஜினி ஜமீலா" நான் படித்திருக்கிறேன். அதுவும் சிறந்த படைப்பு. ஏனென்றால் மொழி பெயர்க்கிறேன் பேர்வழி என்று சிலர் கிளம்பி மொழியை பெயர்த்த படைப்புகளையும் நான் படித்து நொந்து போன அனுபவம் எனக்கு உண்டு. அந்தக் காலத்து தூர்தர்ஷனில் வந்த ஜுனுன் உங்களுக்கு ஞாபகமிருக்குமென நினைக்கிறேன். இப்போது சில பகுதிகளை மட்டும் உங்களுக்கு புல்லட் பாயிண்ட்டில் கொடுக்கிறேன்.

1.   மணியன் சொல்லுகிறார், அவருடைய திருட்டு வாழ்க்கையில் 200 திருட்டு முயற்சியில் ஒரு 50 முறை வெற்றி கிட்டியதாம்.
2.   திருடுவது சமூகம் மட்டுமே செய்த தவறல்ல. அது திருடனுக்குள்ள ஒரு ரியல் புத்தி. சட்டத்திற்குப் புறம்பான ஒரு அராஜக வாழ்க்கை மீதான ஒரு ஆர்வம், மற்றவர்களுக்கும் போலீசுக்கும் சவால் விடும் சுய திருப்தி என்று மணியன் சொல்கிறார்.
3.   எவ்வளவு வறுமையில் இருந்தாலும் அவனுடைய அம்மாவோ சகோதரிகளோ அவரின் திருட்டுப் பணத்தில் ஒரு ரூபாய் கூட வாங்கிக் கொள்ளாத நேர்மையை பெருமையுடன் சொல்கிறார்.
4.   திருடனாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஜாமீனுக்காக அவனுடைய அம்மா வந்து நின்றதை சோகத்துடன் சொல்கிறார்.
5.   சக கைதிகள் திருடர்கள் சிலரின் வினோத பழக்க வழக்கங்களைச் சொல்கிறார். ஒருவன் எந்த வீட்டில் போனாலும் பாத்ரும் போய்விட்டுத்தான் வருவானாம். அதுபோல் மணியனின் பழக்கம், திருடி முடித்துவிட்டு ஒரு குளியல் போடுவது.
6.   திருடுவதற்கு சிறந்த வீடுகள் என்று இழவு வீடுகளையும் திருமண வீடுகளையும் சொல்கிறார், மக்களே ஜாக்கிரதை.
7.   திருடுவதற்கு சரியான நேரம் 2-3 மணியாம் அந்தச் சமயத்தில்தான் மக்கள் ஆழ்ந்து தூங்குவார்கள்  3 ½ மணிக்குள் திருட்டு முடியவில்லை என்றால் சிக்கல்தானாம்.
8.   கோழிக்கோடு முஸ்லீம் வீடுகளில் நாய் இருக்காது, அங்கு வளைகுடாப் பொருட்கள் கிடைக்கும்.
9.   மனைவிகள் தனியாக வாழும் வீடுகளில் திருட்டு போனாலும் வெளியே சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அக்கம்பக்கத்தவர் அதனை நம்ப மாட்டார்கள். யாரோ இரவில் வந்துபோகிறான் என்றுதான் நினைப்பார்களாம்.
10.                சிறைகள் குற்றவாளிகளை திருத்துவதற்குப் பதிலாக மேலும் குற்றவாளிகளை உருவாக்குமிடமாக இருக்கிறது. திருந்தி வெளியே வந்து வாழ முயற்சித்தாலும் திரும்பவும் போலீஸ் பிடித்து பொய்க்கேசுகளில் உள்ளே பிடித்து போட்டுவிடுகிறார்கள் என்கிறார்
11.                மணியன் எவ்வளவோ ஏழைகளுக்கு அவர்களுக்கும் தெரியாமல் இரவில் வீட்டின் முன் அரிசி மூட்டை. காய்க்கறிகளை வைப்பது பணம் வைப்பது என்று உதவியிருக்கிறார்.
12.                வீட்டை எப்படி பலமாகக் கட்ட வேண்டும்  என்ற ஆலோசனைகளும் திருடனிடமிருந்தே வருகிறது இந்தப் புதினத்தில்.
13.                சிறைத்துறை எவ்வளவு ஊழல் மலிந்த துறை எப்படியெல்லாம் மக்கள் பணம் அங்கே சுரண்டப்படுகிறது என்பதை எழுதியிருக்கிறார்.
14.                திருவனந்தபுரத்தில்  2 ½ வருட சிறை அனுபவம் முடித்து பரோலில் வந்து தலைமறைவாகி மைசூர் சென்று விவசாயம் மற்றும் வியாபாரத்தில் கோடீஸ்வரனாகிறார்.
15.                காங்கிரஸ் குண்டுராவ் அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லும் அளவுக்கு அரசியல் நெருக்கம் பெறுகிறார். ராமகிருஷ்ண ஹெக்டேவின் ஜனதா கட்சியில் MLA சீட்டும் கிடைத்தது. ஏனென்றால் மைசூர் பகுதியின் வியாபாரிகள் சங்கம் மனியனையே முன்னிருத்தியது.
16.                தேர்தல் வருவதற்குள் தமிழ்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சொத்துக்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டு மீண்டும் பழைய நிலைமை.
Image result for திருடன் மணியன்பிள்ளை

இப்படி பல சுவாரஷ்ய தகவல்கள் இந்த நாவல் முழுதும் இருக்கின்றன. 600 பக்கங்கள் கொண்டது என்றாலும் படித்துப் பாருங்கள். விறுவிறுப்பு குறையாமல் இருக்கும். ஒரு புதிய உலகத்தை இந்த நாவல் மூலம் அறிய முடியும்.
தமிழ்ப் புத்தகங்களைப் படிப்போம். எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் ஆதரிப்பதோடு அது தமிழ் நம்மில் வாழவும் வளரவும் உதவும்.

-முற்றும்.
    


Monday, October 8, 2018

திருவிழாவில் சாப்பிட்ட பீம புஷ்டி அல்வா !!!!!

Image result for பீம புஷ்டி அல்வா


வேர்களைத்தேடி பகுதி 28
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post.html
தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டி சேவை செய்வதற்காக தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் இது தெய்வதானப்பட்டி என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தேவதானப்பட்டி என்று ஆனது. எனவே இங்கே நிறைய கோவில்கள் உண்டு. பிள்ளையார் கோவில், கொண்டைத்தாத்தா கோவில், முத்தாளம்மன் கோயில், ஐயப்பன் கோவில், பத்ரகாளி கோயில், கிருஷ்ணன் கோவில் எனப் பல கோவில்கள் இங்கே இருக்கிறது.
மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் என்பது தேவதானப் பட்டியின் அருகில் ஓடும் மஞ்சளாறு அணையின் கரையில் ஊருக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. மாசி மாதத்தில் நடக்கும் இந்தத் திருவிழா மிகப்பெரிய அளவில் நடக்கும். ஊரே அந்த ஒரு வாரம் ஒரு சிறு நகரம் போல் மாறிவிடும்.
வத்தலக்குண்டு மற்றும் பெரியகுளம் நகரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவை தவிர தேவதானப்பட்டிக்குள் வரும் பெரும்பாலான டவுன் பஸ்கள் நடுவில் கோவில் சென்று திரும்பும். தேவதானப்பட்டியின் அருகே சுமார் 1 1/2 கி.மீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் திடீரென்று புற்றீசல் போல 'ஜட்கா' என்று சொல்லக்கூடிய குதிரை வண்டிகள் ஏராளமாக வந்துவிடும். தேவதானப்பட்டி பஸ்ஸ்டான்டிலிருந்து கோவில் வரை சென்று வரும் சில வாடகைக்கார்கள் கூட வந்துவிடும்.
இக்கோவிலின் பரம்பரை  அறங்காவலர்களாக பாண்டியர் பரம்பரையில் வந்த தேவதானப்பட்டி ஜமீன்தார் அவர்களின் மகன்கள் கனகராஜ் பாண்டியன் தனராஜ் பாண்டியன் இருந்து வருகிறார்கள். வசதி வாய்ப்பில் அவர்கள் நொடிந்து போயிருந்தாலும் அவர்களுக்குரிய முதல் மரியாதையை கோவில் நிர்வாகம் அளிக்கத்  தவறுவதில்லை.
திருவிழா நடக்கும் ஐந்து நாட்களும் ஊர் விழாக்கோலம் பூண்டிருக்கும். பலவிதமான கடைகள் கோவிலைச் சுற்றி முளைத்திருக்கும். அதில் முழுச்சந்தை போல், துணிமணிகள், விளையாட்டு சாமான்கள், பொம்மைக் கடைகள், தின் பண்டங்கள் போன்றவை இருக்கும்.
ஒரு நாள் மாட்டுத்தாவணியும் மற்றொரு நாள் குதிரைத் தாவணியும் நடக்கும். பல ஊர்களிலிருந்து  பலவகையான ஆடுகள், மாடுகள் என்று ஒரு நாளும், குதிரைகள் வந்து குவியும் நாளாக இன்னொரு நாளும் நடக்கும். வாங்குவதும் விற்பதும் ஏராளமாக நடக்கும் இங்கு கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும். பல நூறு ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இப்போதும் இது நடக்கிறது என்றே நினைக்கிறேன்.
இந்தக் கோவிலின் பரம்பரை பூசாரிகளாக இருப்பது சர்க்கரைத் தேவர் குடும்பம். நான் வாழ்ந்த வளர்ந்த அதே தெருவான  சின்னப்ப நாடார் தெருவில் என் வீட்டுக்குப் போகும் வழியில் அவர்கள் வீடு இருக்கிறது. அவர்களின் மூத்த புதல்வன் முருகேசன் எனக்கு ஒரு வயது பெரியவர். 2-வது மகனான கணேசன் எனக்கு ஒரு வயது சிறியவர். கடைசி மகன் பத்மநாபன். சர்க்கரைத்தேவர் இறந்துபோனபின் இவர்கள்தான் இப்போது கோவிலின் பூசாரிகளாக இருக்கின்றனர்.
Image result for pithukuli murugadas
பித்துக்குளி முருகதாஸ்
சிறிய வயதில் நடந்தும் குதிரை வண்டியிலும் பலமுறை கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு நாள் மாலையிலும் கலை நிகழ்ச்சிகளாக, கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் ஆகியவை நடக்கும். சிறப்பு நிகழ்ச்சியாக இரவில் பித்துக்குளி முருகதாஸ் கச்சேரி  பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. இவர் யாரென்றால் தேவரின் 'தெய்வம்” என்ற திரைப்படத்தில் "நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை" என்ற பாடலை தோன்றிப்பாடியவர். ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே பாடும் இவருக்கு கண் தெரியாது. ஆனால் மிக அழகாகப் பாடக்கூடியவர்.


கோவிலுக்கு அருகில் ஓடும் மஞ்சளாறு நதியில் சிறிதளவாவது தண்ணீர் எப்போதும் ஓடும். கோவில் திருவிழாவின் போது மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் போதுமான அளவு திறந்து விடுவார்கள் என நினைக்கிறேன். நேராக மக்கள் ஆற்றுக்குப்போய் நீராடியோ அல்லது கைகால்கள் கழுவிவிட்டோ மேலேறுவார்கள். ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச்  சென்று வணங்கிவிட்டு பின்னர் காமாட்சியம்மன் கோவிலுக்குச் செல்லுவார்கள்.


நன்றி தினகரன் 


மஞ்சளாறும் அதையொட்டி அமைந்திருக்கும் மாஞ்சோலைகளும் அழகான பச்சைப் பசேலென காட்சியளிக்கும் மரங்கள் சூழ்ந்த அந்த இடம் மனதுக்கு மிகுந்த இதமளிக்கும் இடம்.
எங்கம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு பலமுறை திருவிழாவிற்குப் போயிருக்கிறேன். ஓலையால் செய்யப்பட்ட சிறிய சொப்புகள், களிமண்ணால் செய்யப்பட்ட குதிரை, சிறிய விளையாட்டு அடுப்பு, சொப்புகள் ஆகியவற்றை விருப்பமுடன் கேட்டு வாங்கிக் கொள்வேன். இது தவிர ஓலையில் செய்த பீப்பி, பலூன், கடிகார மிட்டாய் எனப் பலவற்றை வாங்குவேன். பிளாஸ்ட்டிக் சாமான்களும் அப்போதுதான் அதிகமாக வரத்துவங்கியிருந்தன.
இன்னொரு முக்கிய பொருள் நாங்கள் கட்டாயம் வாங்குவது 'பீமபுஷ்டி அல்வா” என்பது. இந்தமாதிரி சுவையான அல்வாவை நான் எங்கும் சாப்பிட்டதில்லை. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல குழகுழவென்று இருக்காது. சுவையோ அபாரமாமிருக்கும். இந்தக் கடைக்கு நான் சென்றது அல்வா வாங்க மட்டுமல்ல. அதன் பின்னே உள்ள படத்தில் பீமன் கதாயுதத்துடன் நிற்க , மல்யுத்த வீரர்கள் போலக் காட்சியளிக்கும் பலர் வரிசையில் நிற்பதுபோன்று இருக்கும். பெரிய போட்டோ பிரேமில் அதே மாதிரி இன்னொரு காட்சியும் வைத்திருப்பார்கள்.
Related image

இந்த அல்வாவைச் சாப்பிட்டவர்கள் பீமனைப் போல் புஷ்டியாகி பலம் பெறுவார்கள் என்று சொல்வது போல் அந்தப் படங்கள் அமைந்திருக்கும். ஆண்டுதோறும் எது தவறினாலும் பீமபுஷ்டி அல்வாக்கடை வரத்தவறாது. அந்த அல்வாவை இன்றுவரை நான் வேறெங்கும் பார்த்ததில்லை.
ஒல்லியாக இருக்கும் நான் பீமனைப்போல் பலம் பெறுவேன் என்ற நப்பாசையில் சிறிய வயதில் பலமுறை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். ம்ஹும் ஒன்றும் நடக்கவில்லை. பிற்காலத்தில் சர்க்கரை நோய் வந்ததுதான் மிச்சம்.
அதுசரி காமாட்சியம்மன் கோவிலில் கதவுக்குத்தான் பூஜை நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? சாமியை உள்ளே பார்க்க முடியாது. மீறி பார்த்தவர்கள் தலை வெடித்துச் சிதறியிருக்கிறதாம். அடுத்த வாரம் அதனைப்பற்றி விரிவாகச் சொல்கிறேன்.
தொடரும்

Thursday, October 4, 2018

ஜென்சியின் இசைப் பயணம் பாதியில் முடிந்து போனது ஏன்?

Related image


எழுபதுகளில்  இளையராஜா பாடல் எண்: 40
இரு பறவைகள் மலை முழுவதும்
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_13.html
1979-ல் வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்து புகழ்பெற்ற பாடல் இது.முதலில்   பாடலைக்கேளுங்கள்.


பாடலின் சூழல்:
மகிழ்ச்சியான சூழ்நிலையில், இயற்கையுடன் ஒன்றிணைந்து, அதனை சிலாகித்தும் காதல் கொண்ட தன்  மன ரம்மியத்தை வெளிப்படுத்தியும் பாடுகின்ற பாடல் இது.
இசையமைப்பு:
Image result for ilayaraja young photos

குதூகல மன நிலை இந்தப்பாடலில் தெளிவாகத் தெரியும் வண்ணம் இளையராஜா இசையமைத்திருக்கிறார். பாடலின் இடையே வரும் கோரஸ்கள் பாடலுக்கு வலுசேர்க்கும் இவ்விதமாக அமைந்திருக்கின்றன. கோரஸுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலுடன் வயலின் குழுமமும்  புல்லாங்குழலும் இணைந்து முன்னிசையை முடிக்க, "இரு பறவைகள் மலை முழுதும்", என்று பாடல் ஆரம்பிக்கிறது. முதலாவது BGM -ல்  டிரம்ஸ், கிடார், கீபோர்டு ஆகியவற்றுடன் மறுபடியும் கோரஸ் வந்து ஒலித்து முடிய, "சாரல் தூவும் முகில்களும்" என்று முதலாவது சரணம் ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM-ம் அதே போல் ஒலிக்க இரண்டாவது சரணம் "பூவில் பொங்கும் நிறங்களே" என்று ஆரம்பித்து முடிந்து மீண்டும் பல்லவி வந்து கோரஸுடன் பாடல் நிறைவு பெறுகிறது .
பாடலின் வரிகள்:
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம் (இரு பறவைகள்)

1)சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும் (2)
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோடு கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே (இரு பறவைகள்)

2) பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன்
அங்கங்கே எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும் இனி நானென்றும்
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
லலலாலா லாலா லலல்லலா(இரு பறவைகள்)
Image result for Ilayaraja with kannadasan

பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். இயற்கையை வியந்து எழுதிய பாடலில் கண்ணதாசனுக்கு அவ்வளவு ஸ்கோப் இல்லாதது போல் தெரிகிறது. சாதாரண வரிகள் தாம் என்றாலும்  சந்தங்களில் அழகாக உட்காருகிறது.
தோட்டத்தில் கனிமரங்கள் இருந்து அதனை நன்கு கவனித்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உற்று உற்றுப் பார்த்தாலும் தெரியாமல் சில பழுத்த கனிகள் இலை மறைவில் மறைந்திருக்கும். என் நியூயார்க் வீட்டுத் தோட்டத்தில் உள்ள அத்திமரத்தில் நான் கண்டுபிடிக்க முடியாத சில பழங்களை என் மனைவி  கண்டுபிடித்துக் கொண்டு வருவாள்.
"இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன", என்னும் வரிகளில் நேரடியாக வரும் அர்த்தத்தில் அப்படித்தோன்றுகிறது. ஆனால் காதலில் கனிந்த இரு மனங்களையும் சேர்த்து கண்ணதாசன் அப்படி உவமையாகச் சொல்வது சற்று உற்றுப் பார்த்தால் தெரியும். இலை முடிய கனிகளை கண்டுபிடிப்பது போன்று அது அவ்வளவு கடினமல்ல. அதன் அடுத்த வரிகளைக் கேட்கும் போது இன்னும் அது சுலபமாக புரிந்து விடும், "அது கண்கள் சொல்லும் ரகசியம், இது தெய்வம் தந்த அதிசயம்". காதலும் காமமும் தெய்வம் தந்த அதிசயம் என்பது எவ்வளவு உண்மையான கூற்று. அதே போல இரண்டாவது சரணத்தில் இருவர் மனதும் ஒன்றாகிவிட்டன என்பதனை "எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன் அங்கங்கே எனைப்போல அவர் காண்கிறார்", என்று சொல்லி "நீயென்றும் இனி நானென்றும் அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா", என்று அழியா உறவை அழகாகச் சொல்வதில்தான் கண்ணதாசன் தெரிகிறார். இப்போது புரிகிறதா, சாதாரண வரிகளுக்குள் இருக்கும் அசாதாரணமான உண்மை, கண்ணதாசன் என்றால் சும்மாவா?
பாடலின் குரல்:
Image result for ilayaraja with jency

பாடலைப்பாடியவர் ஜென்சி அவர்கள். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த படங்களில் நல்ல பல பாடல்களை பாடியிருக்கிறார். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல். 1978ல் ஆரம்பித்த அவருடைய இசைப் பயணம் 1982ல் முடிந்துபோனது துரதிர்ஷ்டம் தான். ஜென்சியை கேரளாவிலிருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்திய ஜேசுதாஸ் அவர்களே சித்ராவையும் கொண்டு வந்து இளையராஜாவிடம் பரிந்துரை செய்தபடியால் அப்போதிருந்து சித்ரா ஜென்சியின் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
1983ல் திருமணமானதுதான் காரணமா? அவரைக் கேட்டால் ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டதால் இதனை விட்டுவிட்டேன் என்று சொன்னார்.
திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட கிறித்துவ கணவன் இவர் திரைப்படங்களில் பாடுவதை விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். வாய்ப்புக் கேட்டுப் போவதில் எனக்கு விருப்பமில்லை, எனவே கிடைத்த ஆசிரியர் வேலைக்குப் போய்விட்டேன் என்று ஒரு  பேட்டியில்  தெரிவித்திருக்கிறார்.
அதிகப் பாடல்கள் பாடியதால் கிடைத்த நட்சத்திர அந்தஸ்தை தலைக்கேற்றி இளையராஜாவிடம் பிணக்கு கொண்டு அவருக்கு வேண்டுமென்றால் என்னை கேரளாவிலிருந்து வரவழைக்க ஆளனுப்பட்டும் என்று சொல்லவிட்டுச் சென்றதால் இளையராஜா அப்படியே கை கழுவி விட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு.
இது எல்லாவற்றுக்கும் மேலாக இளையராஜா ஜென்சி மேல் ஒரு தலைக்காதல் கொண்டு விரும்பியதால், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருப்பதால் அவரிடமிருந்து ஒதுங்கி கேரளாவுக்குத் திரும்பியதாகச் சிலர் சொல்லுகிறார்கள். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை மக்களே.
ஆனால் ஜென்சியின் குரலைப் பிடித்த அளவுக்கு அவரின் உச்சரிப்பு எனக்குப் பிடிக்கவில்லை. ல,, ழ மற்றும் ன்,ண் ஆகியவை நன்றுதான் என்றாலும் ர, , வின் உச்சரிப்பு மிகக் கொடுமையாக இருக்கிறது. இதே பிழை சித்ராவிடமும் இருக்கிறது. ஆனால் இவ்வளவு மோசமில்லை. ஜேசுதாசுக்கு சில இடங்களில் ழ வும் பல இடங்களில் ''வும் வராது. வெளி மாநிலங்களிலிருந்து பாட வந்தவர்களின் உச்சரிப்புச் சுத்தம் என்று  சொன்னால் பி.சுசிலா அம்மாவைச் சொல்லலாம். ஆனால் தமிழில் பேசத்தான் இத்தனை நாட்களாகியும் வரவில்லை. பழைய பாடகிகளில் வாணி ஜெயராமின் உச்சரிப்பு மிகச் சுத்தமாக இருக்கும்.
ஜானகி கூட ஆசை என்பதை ஆஷை என்றுதான் உச்சரிப்பார். அந்தக் காலத்துப் பாடகர்கள் மட்டுமல்ல இந்தக் காலத்து கர்நாடக சங்கீதப் பாடகர்களும் இதே உச்சரிப்புப் பிழையைச்  செய்கிறார்கள்.அதுபோல் SP. பாலசுப்ரமணியம் மற்றும் மனோவின் உச்சரிப்பு நன்றாகவே இருக்கும். தமிழ் உச்சரிப்பை ஆரம்பத்தில் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இருந்தது AR.ரகுமான்தான்.
உற்சாகத்துடன் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலைக் கேட்டால் உங்கள் மனதும் களிப்பாகி  அதே உற்சாகம் தொற்றிக் கொள்வதோடு உங்களை இளமைக் காலத்திற்கும் இந்தப் பாடல் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
தொடரும்