Monday, October 6, 2014

இளையராஜாவின் மேற்கத்திய காதல் !!!!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா பாடல் 3 -  நான் பேச வந்தேன்.

             1976-ல் வெளி வந்த பாலூட்டி வளர்த்த கிளி என்னும் படத்தில் இடம்பெற்ற   பாடல் இது. இந்தப் பாடலை இதற்கு முன்னால் நான் ஓரிரு முறை தான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது கேட்டபோதுதான் அதன் மெல்லிசை அமைப்பு நன்கு புரிந்து சிலிர்க்க வைத்தது. பாடலின் அனைத்து கோணங்களிலும் ஒரு முழுமை தெரிந்தது. ஒரு முறை கேளுங்கள். காலையில் இந்தப் பாட்டைக் கேட்டுவிடாதீர்கள். அந்த நாள் முழுதும் நீங்கள் அறியாமலேயே முணுமுணுத்துக் கொண்டே இருப்பீர்கள். எச்சரிக்கை.



இசைக்கோர்வு:
டிரம்சில் உள்ள கெட்டிலில் பிரஷ்  (Brush) - கொண்டு எழுப்பிய இசையுடன், “நான் பேச வந்தேன்", எனும் ஆண்குரலில் ஆரம்பிக்கிறது பாடல் . அதற்கு மறுமொழியாக பெண்குரல் திரும்பவும் அதே பல்லவியுடன் சிறிதே மாற்றங்கள் செய்து ஒலிக்கிறது. முதலாவது BGM -ல் டிரம்ஸ் இசையும் நடையும் தொடருகிறது. பின்னர் புல்லாங்குழலும் கிடாரும் இசைத்து முடிக்க, "ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்", என்று பாடல் ஆண்குரலில் ஆரம்பிக்க தபேலா இணைந்து இசை சேர்த்து அப்படியே உள்ளத்தைத் தழுவுகிறது. இரண்டாவது BGM-ல் ஆர்கன் / கீபோர்டு இசையோடு அதே டிரம்ஸ் நடை தொடர்ந்து வர "கார்குழல் மேகத்தில்" தபேலா மென்மையாக சேர்ந்து சரணம் முடிய பல்லவி மீண்டும் இருகுரல்களில் வந்து முடிகிறது. இளையராஜாவின் முதல் மேற்கத்திய மெல்லிசை என்று இதனைச் சொல்லலாம்.
பாடலின் சூழல்:
தலைவனும் தலைவியும் நேரில் சந்திக்கிறார்கள் இருவருக்கும் பேசுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் வார்த்தைகள் வரவில்லை. ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் பந்தத்தில் கண்கள் பேச, சுவாசம் எகிற, கன்னங்கள் சிவக்க, இதயம் துடிக்க, உதடுகள் நடுங்க உடல் மொழி சுறுசுறுப்பாக, வாய்மொழி மட்டும் மிஸ்ஸிங். அவர்கள் மனதில் உள்ள எண்ணங்கள் வெளியே கேட்டால்/சொல்லப்பட்டால்  எப்படி இருக்கும் என்பதே இந்தப்பாடல். இசையும் வரிகளும் அந்த மூடை அப்படியே பிரதிபலிக்க குரல்களும் அவற்றை உள்ளபடியே வெளிப்படுத்தும் அற்புதமான பாடல். முதலிடம் இளையராஜாவுக்கு, இரண்டாமிடம் கண்ணதாசனுக்கு ,மூன்றாமிடம் பாலு- ஜானகிக்கு.
பாடல்  வரிகள்:

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
படபட படபட படவென வரும் பாவங்கள்
ஆலிலை மீது தழுவிடும் காற்று
சலசல சலசல சலவென வரும் கீதங்கள்
குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே  இறைவன்  தூது
ஒரு கிளி ஊமைஒரு கிளி பேதை
இடையில் தீராத போதைஹா

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கலகல கல கலவென வரும் எண்ணங்கள்
ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்
சொல் என கண்ணும்நில் என நெஞ்சும்
சொல் என கண்ணும்நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை

நான் பேச வந்தேன்ஹா
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை


கண்ணதாசன், பாடலின் சூழலுக்கு வரிகள் அமைப்பதில் வல்லவரென நம் எல்லோருக்கும் தெரியும். அதுவும் கனவிலும் காதலிலும் ஊறிய கண்ணதாசன் இப்படி ஒரு சூழல் கிடைத்தால் விடுவாரா? பல்லவியிலே அதனை வெளிப்படுத்துகிறார், “நான் பேசவந்தேன், சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை”. அதன்பின் தலைவன் சொல்கிறான் தலைவியின் "திரு வாய்மொழி திருவாசகம்" போல உயர்ந்தது. அதனைக் கேட்காமல் அவனுக்கு ராகங்கள் ஏதுமில்லை என்கிறான். பதிலுக்கு தலைவி "உன் வாய்மொழி மணிவாசகம்" என்று சொல்கிறாள். வாய் மொழி ,திருவாசகம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராய் இருந்தாலும் , கவிதைக்கு பொய் அழகல்லவா ?.
முதல் சரணத்தில், தலைவன் கூறுகிறான், உன் இமைகளில் படபடபடவென பாவங்கள் வருவது ஏழிசை பாடுவது போல் இருக்கிறதென்று. தலைவி நினைக்கிறாள், தழுவிடும் காற்று கீதங்கள் இசைகிறதாம். அடுத்து ஆண் சொல்கிறான், “குலமகளான உனது இயற்கையான நாணத்தில் வரும் மெளனம், இறைவனின் தூது போன்றது" , என்று. இரு கிளிகளில் ஒன்று ஊமை மற்றொன்று பேதை ஆனால் அவ்விரண்டின் இடையில் தீராத காதல் போதை என்கிறார். கண்ணதாசனின் அழகான கற்பனைக்கனவு இங்கே சிறகடித்துப் பறந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
2ஆவது சரணத்தில் தலைவி ஆரம்பிக்கிறாள், கார்குழலைக் கொண்டு எப்படித்தான் என் நெஞ்சை மூடினாலும், என் எண்ணங்கள் கலகலவென வெளியே வந்துவிடுகின்றன. அதற்கு தலைவன் சொல்கிறான், “அந்த எண்ணங்கள் கிண்ணங்கள் போன்ற உன் கன்னங்களில் ஓவியமாக தீட்டப்பட்டு வெளியே தெரிகிறது", என்று.
அதற்கு தலைவி சொல்கிறாள், “சொல்லிவிடு என்று கண்கள் சொன்னாலும், சொல்லாதே என்று நெஞ்சம் தடுக்கிறது. இதுதானய்யா பெண்களுக்கு ஒரு பெரும் தொல்லை. ஆனாலும் சிறுகதையாய் இருக்கும் இந்தக் கூடல் தொடர்கதையாய் தொடர்ந்தால் அதுதான் ஆனந்தத்தின் எல்லை", என்று.
இந்த மாதிரி கற்பனைகள் அருகிவிட்ட இந்தக் காலத்தில் இந்த மாதிரி காதல்களும் அருகிவிட்டன என்றே தோன்றுகிறது.
குரல்கள்:

இந்த டூயட் பாடலைப் பாடியது SP. பாலசுப்பிரமணியம் - ஜானகி ஜோடி இளையராஜாவின் இசையில் பின்னர் இந்த ஜோடி பல ஹிட் பாடல்களைப் பாடியிருந்தாலும், இது அவற்றுக் கெல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். ஹஸ்கி குரலில் பாடும் இருவரும், பாடலின் நாயக நாயகியரின் எண்ண ஓட்டத்தை தெரிவிக்கும் வரிகளில் அப்படியே பாவத்தை ஊற்றியிருக்கிறார்கள். குறிப்பாக அது சரணத்தில் கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது. ஜானகி புகுந்து விளையாடியிருக்கிறார். முதல் சரணத்தில் “ஆலிலை மீது தழுவிடும் காற்று”, என்ற இடத்தில் உண்மையிலேயே வாடைக்காற்று தழுவினால் வரும் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார். இருவரின் பொடி சங்கதிகள் பாடலுக்கு செறிவூட்டுகின்றன. உண்மையில் பாடலின் அர்த்தத்திற்கும் சூழலுக்கும் அழகு சேர்க்கும் அற்புதக்குரலாய் இருவரின் குரல்களும் ஒலிக்கிறது.
இசைக் கருவிகள்:
புல்லாங்குழலும், தபேலாவும் தவிர முழுதும் மேல் நாட்டுக் கருவிகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டிரம்ஸ், கீபோர்டு, கிடார், பேஸ் கிடார் ஆகியவை அவற்றுள் சில. குறிப்பாக லீட் கிடாரின் இழைவுகள் பல இடங்களில் வருகின்றன.


ஒருமுறை மீண்டும் கேட்டுப் பாருங்கள்.

அடுத்த வாரம் , "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்". 

12 comments:

  1. செம அலசல் சார்...

    //“ஆலிலை மீது தழுவிடும் காற்று”, என்ற இடத்தில் உண்மையிலேயே வாடைக்காற்று தழுவினால் வரும் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்//

    அவர் எல்லாவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் வல்லவராச்சே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி, ஸ்கூல் பையன்.

      Delete
  2. வாவ்! இதை படித்த பிறகு இந்த பாடலே வித்தியாசமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, வடுவூர் குமார்.

      Delete
  3. பாடல் அருமை. ஆனால்இதுவரை கேட்காத பாடல். அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் நன்றி, டி.என்.முரளிதரன் .

      Delete
  4. மிஸ்டர் alfy

    ஆகா எனக்கொரு நண்பர் கிடைத்து விட்டார். இளையராஜா ரசிகரா நீங்கள்? நானும்தான் . இந்தப் பாட்டை அணு அணுவாக ரசித்திருப்பீர்கள் போலிருக்கிறதே ! மேலோங்கிய ரசனைதான் . என்னுடைய பதிவிலும் இந்த எதிரொலி இருக்கும் . ஒரு விசிட் அடியுங்கள் .

    http://puthukaatru.blogspot.in/2014/10/i.html

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்லஸ்.நீங்களும் இளையராஜா ரசிகர் என்பதில் மகிழ்ச்சி .யார்தான் இல்லை ?
    உங்கள் தளத்திற்கு கண்டிப்பாய் விரைவில் வருகிறேன் .

    ReplyDelete
  6. மிக அருமையான ரசிப்பு.. நல்ல எழுத்து நடை..
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    இந்த வரி --> மௌனமே இடைதான் தூது --> மௌனமே இறைவன் தூது??. சரியா?

    ReplyDelete
    Replies
    1. சரிதான் நண்பா .தவறுக்கு வருந்துகிறேன் .
      வருகைக்கு நன்றி .

      Delete
    2. வருந்த ஒன்றும் இல்லை :)
      இந்த அருமையான பாடலுக்கு உங்களின் ரசிப்பான எழுத்து நடை அழகு!!!
      மிகவும் நன்றி..பதிவுக்கும்..நட்புக்கும்..

      Delete
  7. பாடலின் வரிகளைப்பற்றி எழுதும்போது சரியாகத்தான் எழுதி இருக்கிறேன் .
    பாடலை வேறு ஒரு இடத்திலிருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்யும்போது அதில் இருந்த இந்த தவறை கவனிக்கவில்லை.
    தவறுகளை சுட்டிககாட்டுபவர்கள்தான் உண்மையான அல்லது நெருக்கமான நண்பர்கள் .மீண்டும் நன்றி

    ReplyDelete