Monday, January 27, 2014

காரைக்குடி பயணம் பகுதி 2: மருதுபாண்டியர்கள் மன்னர்களா ? இல்லையா ?


   திருப்பத்தூர் வந்து மெயின்ரோடு அருகிலேயே இருந்த ஓட்டலுக்கு மன்னிக்க பழக்கதோஷம், ரெஸ்டாரன்டுக்குப் போனோம். ஒரு பெரிய ஹால் பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்தது. இடம் கிடைக்க பத்து நிமிடங்கள் ஆயிற்று. சர்வர் விரலை உள்ளே விடாமல் தண்ணீர் கொண்டு வந்து வைத்தார் (ஹும் பார்றா திருந்திட்டாங்களா?) ."என்ன இருக்கு", என்ற  எட்வினின்  வழக்கமான கேள்விக்கு, “இட்லி, தோசை, ஊத்தாப்பம், பூரி, வடை பொங்கல்", என்று அடுக்கினார். வாயில் நீர் ஊற, "ஒவ்வொரு வகையிலும் ரெண்டு கொண்டு வா", என்று சொல்லி............... சாப்பிட ஆசையிருந்தது. ஹும், அந்த கொடுப்பினைதான் எனக்கு இல்லையே.  இந்த பாழாய்ப்போன வயிறு ரெண்டு இட்லிக்கே ஃபுல் ஆயிடுது. பூரி சாப்பிட்டு நாளாச்சுன்னு நெனைச்சு எனக்கு பூரிக்கிழங்கு ஆர்டர் செய்தேன். பூரிக்கிழங்கை பார்த்தவுடன் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். எப்படின்னு கேட்கறீங்களா? வெங்காயம் விலை அதிகம்னா, கிழங்கு அதிகமாயிருக்கும். கிழங்கு விலை அதிகம்னா, வெங்காயம் அதிகமாயிருக்கும், வெரி ஸிம்ப்பிள்.
        உண்டு முடித்து எட்வின், வட்ட கப்பில் டிகிரி காஃபி சாப்பிட்டார். எனக்கு அந்தப் பழக்கமில்லாததால் (காஃபி டீயும் குடிக்க மாட்டியா, நீயெல்லாம் உயிரோடு இருந்து என்ன செய்ய என்று மதுரைத்தமிழன் கூறுவது காதில் விழுகிறது) கவனமாக வாங்கிய பிஸ்லரி தண்ணீரை குடித்துவிட்டு வெளியே வந்தோம்.
        "அண்ணே இங்கே ஒரு கோவில் ரொம்ப விசேஷமாமே, போலாமா?”, என்றேன்.
        "ஆல்ஃபி கோயிலுக்குப் போக நேரமில்லை, இன்னும் ஏராளமாகப் பார்க்க வேண்டியிருக்கு", என்றார். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து, ஆடுபோல தலையாட்டிவிட்டு பின் சென்றேன். கார், ஸ்வீடிஸ் காம்ப்பெளன்டிற்கு வந்து சேர்ந்தது. கொஞ்சம் நடந்து உள்ளே சென்றால் "மருதுபாண்டியர் நினைவுச் சின்னம்" வந்தது.
யார் இந்த  மருதுபாண்டியர்கள் ?

        பலர் நினைப்பதுபோல மருதுபாண்டியர்கள், மன்னர் பரம்பரையில் உதித்தவர்கள் அல்லர். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் படைகளுக்கு தளபதியாக இருந்த, உடையார் சேர்வைக்கு பிறந்தவர்கள்தான் பெரிய மருதுவும் சின்ன மருதுவும். களரி வித்தையில் கற்றுத்தேர்ந்த இருவரும் போர்க்கலையில் சிறந்து விளங்கியதால், ராமநாதபுரம் ராஜா, முத்து விஜய ரகுநாத சேதுபதி இவருக்கு கொடுத்த பட்டம்தான் "பாண்டியர்" என்பது.

        இவர்களுடைய திறமையைக் கேள்விப்பட்ட சிவகங்கை மன்னர் முத்து வடுக நாதத்தேவர், தன்னுடைய படைக்குத் தலைமை தாங்க இவர்களை அனுப்பும்படி ராமநாதபுரம் மன்னரிடம் வேண்டுகோள் விடுக்க, அவரும் அனுப்பி வைத்தார்.
        கி.பி.1722-ல் சிவகங்கைப் படைகளுக்கும் ஆங்கிலேயப்படைகளுக்கும் நடந்த போரில் மன்னர் முத்து வடுகநாதத்தேவர் கொல்லப்பட, அவர் மனைவி ராணி வேலு நாச்சியாருடன் தப்பிய மருதுபாண்டியர், மைசூர் மன்னர் ஹைதர் அலியின் பொறுப்பில் இருந்த திண்டுக்கல் கோட்டையில் அடைக்கலம் புகுந்தனர்.

        ஆங்கிலேயர் உதவியுடன் சிவகங்கையை ஆக்ரமித்திருந்த ஆற்காடு நவாப் அங்கு எட்டு வருடங்களாக இருந்தும், மக்கள் வரிகட்ட மறுத்தனர். இந்த சமயத்தில் ஹைதர் அலி உதவியுடன் 12,000 வீரர்களோடு வந்த மருதுபாண்டியர், ஆற்காட்டின் படையை தங்கள் அதிரடித்தாக்குதலால் முறியடித்து விரட்டியடித்தனர். பின்னர் ராணி வேலு நாச்சியாரை ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். எதிர்த்து வந்த ஆங்கிலப் படையையும் கொல்லங்குடியில் முறியடித்தனர். இது நடந்தது 1789-ல். மருது பாண்டியரின் வீரத்தையும், நேர்மையையும், ஆட்சிப்பொறுப்பையும் கவனித்த ராணி வேலு நாச்சியார், தனக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால்   நாட்டின் எதிர் காலப்பாதுகாப்பு கருதி ஆட்சிப்பொறுப்பை மருதுபாண்டியரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். நாச்சியாரின் உயில்படி, அவரின் மறைவுக்குப் பின்னர், பெரிய மருது அரசராக முடிசூட்டிக்கொள்ள சின்ன மருது சமஸ்தானத்தின் திவான் ஆனார். கி.பி.1783 முதல் 1801 வரை அவர்கள் பொறுப்பில் சிவகங்கை வளமையும் செழுமையும் அடைந்தது.
        கி.பி.1799-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபின், அங்குமிங்கும் ஓடித்திரிந்த அவர் தம்பி ஊமைத்துரை, மருதுபாண்டியரிடம் அடைக்கலம் புகுந்தார். இதனைச் சாக்காக வைத்து பெரும் படையுடன் வந்த ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது போர் தொடுத்தனர். பல இடங்களில் நடந்த போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தது. ஆனாலும் சோழபுரத்தில் 1801-ல் நடந்த இறுதிப் போரில் மருதுபாண்டியர் முறியடிக்கப்பட்டு, திருப்பத்தூர் கோட்டையில் தம் மொத்தக் குடும்பத்துடனும்  எஞ்சிய மெய்க்காப்பாளர்களுடனும் (சுமார் 500 பேர்) .தூக்கிலிடப்பட்டனர். அந்த இடத்தில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம்தான் திருப்பத்தூரில் நான் பார்த்தது. சாவிலும் மன்னிப்பு கேட்காமல் ,கம்பீரமாகச் செத்த அந்த மாவீரர்களின் சிலைகள் அவர்களின் அழியாப்புகழை பறைசாற்றியது.
A
        அதே வளாகத்தில் பூட்டப்பட்டு கிடந்த ஒரு பழைய கட்டிடத்தைப் பார்த்தேன். "இதுதான் பழைய ஸ்வீடிஷ் மருத்துவமனை"என்றார் எட்வின். இது சிவகங்கை ராஜா வழங்கிய இடத்தில், சேவை மனப்பான்மையுடன் ஸ்வீடன் நாட்டிலிருந்து 1909-ல் வந்த கண் மருத்துவர் Dr. F. குகல்பெர்க் ( Dr.F.Kugelberg )என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்வீடனிலிருந்து பல டாக்டர்கள் வந்து சேர்ந்து கொள்ள இது சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் முதற்கொண்டு பல பணக்கார செட்டியார் குடும்பங்கள் இவர்களுக்கு உதவி செய்ய, இதே காம்ப்பெளண்டில் ஒரு நர்சிங் கல்லூரியும் பார்வையற்றோர் பள்ளியும் ஆரம்பித்து நடத்தப்பட்டன.

        சுதந்திரத்திற்குப்பின் இந்த நிறுவனங்கள் தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை (TELC)யிடம் ஒப்படைக்கப்பட்டனவாம். அவர்களும் நம்மூர் டாக்டர்களை வைத்து ஆரம்பித்ததில் சிறப்பாகவே  நடத்தினர்.  கருணாநிதி, ஜெயலலிதா அரசியலைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் தொழில்முறை அரசியல்வாதிகள். ஆனால் ஆண்டவன் பேரைச்சொல்லி ஆலயத்தில் நடக்கிற அரசியல் அதைவிட அசிங்கம். திறமையற்ற நிர்வாகம் மற்றும் உள்குத்து அரசியலால் இந்த சிறப்பு வாய்ந்த நிறுவனங்கள் மூன்றும் ஒவ்வொன்றாக மூடப்பட்டுவிட்டன.

        சோலைபோல மரங்கள் சூழ்ந்த அந்த இடத்தில் ஸ்வீடன் நாட்டு மருத்துவர்கள் தங்கியிருந்த மாபெரும் பங்களாக்கள் பாழடைந்து கிடந்தன. உள்ளே சென்றால் சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் அதன்பின் இருந்த வரலாற்று மனிதர்களை உள்ளடக்கிய கல்லறையும் இருந்தது.  ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் வழிபாடு நடக்கிறதாம்.

கனத்த மனதுடன் காரில் ஏறி உட்கார்ந்து,” அடுத்து எங்கே” என்றேன் ? “நேராக கரைக்குடிதான்”, என்றார் எட்வின் .

தொடரும்>>>>>>>>>>>>>>>>

15 comments:

  1. தமிழ் மணத்தில் இணைத்து த.ம 1 போட்டும் விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

      Delete
  2. ▂ ▃ ▅ ▆ █ வட்ட கப்பில் டிகிரி காஃபி சாப்பிட்டார். எனக்கு அந்தப் பழக்கமில்லாததால்█ ▆ ▅ ▃ ▂

    இப்படியும் ஒருத்தர் மிக அநியாயத்துக்கு உடம்பை கவனமாக பார்த்து கொள்கிறாரப்பா?

    ReplyDelete
    Replies
    1. உங்களை நினைத்துக்கொண்டேதான் எழுதினேன் .

      Delete
  3. ▂ ▃ ▅ ▆ █ அண்ணே இங்கே ஒரு கோவில் ரொம்ப விசேஷமாமே, போலாமா?”, என்றேன்.
    "ஆல்ஃபி கோயிலுக்குப் போக நேரமில்லை, இன்னும் ஏராளமாகப் பார்க்க வேண்டியிருக்கு", என்றார்█ ▆ ▅ ▃ ▂

    இவரு உங்களுக்கு நண்பர் இல்லைங்க துரோகிங்க...கோயில்ல அழகுஅழகா உயிருள்ள கடவுள் நடமாடுவதை பார்க்க நினைச்ச உங்களை இப்படி ஏமாத்தி புட்டாருங்க உங்க நணபர்

    ReplyDelete
    Replies
    1. அட அப்படி ஒன்று இருப்பதை எப்படி மறந்தேன்?
      அடுத்த தடவை கோயில்களுக்கு தனி பயணம் போவதற்கு ஆவலைத்தூண்டிவிட்டுவிட்டீர்கள்

      Delete
  4. மருது பாணடியர்கள் பற்றி நல்ல விளக்கம் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத்தமிழன்.

      Delete
  5. மருது பாண்டியர்கள் பற்றிய தகவல்கள் அனைத்திற்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
  6. மருது பாண்டியர்கள் பற்றிய தகவல்களும் படங்களும் மிக நன்று. பார்க்கத் தூண்டிய பதிவு.

    ReplyDelete
  7. நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. நன்றி பேராசிரியர் விசுAWESOME.

    ReplyDelete
  10. இன்னாது, மருதபாண்டியா நான் இதனை நாளா மதுரபாண்டின்னு இல்ல நினைச்சேன். அருமையான படைப்பு அண்ணே, வாழ்த்துக்கள்.

    ReplyDelete