Thursday, December 19, 2013

காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!!!!!! பகுதி 2


யாரு குரல் இது உரல்ல இடிச்சாப்லனு திரும்பிப்பார்த்தா, ராஜிதான் கூப்பிட்டா. முக்குலத்தில பொண்ணு  குரல் கூட கடுமையாத்தேன் இருக்குமோ? என்று நெனச்சிக்கிட்டே,  “என்னா ராஜி?”, என்றேன். அவ பேரைச் சொல்லி கூப்பிட்டபோது கடுக்கு மிட்டாயை விட இனிச்சுச்சு. "சேகர், இந்தக் கணக்கு வரமாட்டேங்குது கொஞ்சம் சொல்லித்தரியா ?" என்று கேட்டாள். ஆகா என் மேதாவித்தனத்தை காட்டுறதுக்கு இதவிட நல்ல சந்தர்ப்பம், கெடைக்காதுன்னு நெனச்சு கிட்டப்போனேன். பார்த்தா, கையெல்லாம் கடுக்கு மிட்டாய் கசிந்து பரவி, இழிப்பிக்கொண்டிருந்துச்சு. “ஐயே என்னாது இது" என்று அவள் கேட்டதும் நான் வெக்கத்தோடு, “கையைக்கழுவிட்டு வந்துறேன்”னு ஓடிப்போய் விரசா கழுவிட்டு ஓடிவந்தேன். வந்து பார்த்தா, "அறிஞர் அண்ணா" அணித்தலைவன், அந்த செவத்த  பன்னி  ராகவன் சொல்லிக் கொடுத்துட்டிருந்தான். நல்ல சான்ஸ விட்டது எனக்கு ரொம்ப வெறுப்பாயிருச்சு. "சேகர், ராகவன் நல்லா சொல்லித்தந்துட்டான்"னு  வேற எரியற கொள்ளில எண்ணெயை ஊத்துனா ராஜி. இந்த ராகவன் வேற செவசெவன்னு என்னவிட ரொம்பவே அழகா இருந்தான். எனக்கு மனசே விட்டுப்போச்சு. அன்னைக்குதான் முத தடவை, ஏன் நான் எங்கப்பா மாறி செவப்பா பிறக்காம கறுப்பா பிறந்தேன்னு நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்.
 ராஜலச்சுமி ராஜசேகர்னு பெயர்ப் பொருத்தம் கூட நல்லாத்தானே இருந்துச்சுன்னு நெனைச்சு ரொம்ப கவலையாப் போச்சு. தூக்கமும் போச்சு . என்னடா ஒடம்பு சரியில்லையான்னு எங்கம்மா தொட்டு தொட்டு பார்த்தாங்க.
அப்பத்தான் வைகை அணைக்கு இன்பச்சுற்றுலா போக முடிவெடுத்து, அணித்தலைவர்களெல்லாம் கூடிப்பேசச் சொன்னார் தேவரு. என்னவோ தெரியல, நான் சொன்ன எல்லாத்துக்கும் ராஜி கரெக்ட் கரெக்ட்டுன்னு சொன்னா. அவ மனசுலயும் நான் இருந்தேன்போலன்னு நெனச்சு, ஒரே குதூகலமாயிருந்துச்சு. அன்னைக்குத்தான் அவள ரொம்பக்கிட்டத்துல பார்த்தேன். அவ ஒதடு ரெண்டும் சேமியா ஐஸ் சாப்பிடாமயே செவந்து கெடந்துச்சு.
வைகை அணையில வச்சு எப்படியாச்சும் என் மனசுல இருக்கிறதை சொல்லிடனும்னு நெனைச்சேன். எங்கப்பாவை நெனச்சாலும் பகீர் பகீர்னு பயம் வந்துச்சு. வைகை அணைக்கு எங்கப்பாதான் வரமாட்டாரேன்னு நினைச்சு மனசைத் தேத்திக்கிட்டேன்.
இதுக்கிடையில 10 அணித்தலைவரும் ஒன்னு சேர்ந்து வகுப்புத்தலைவனை தேர்ந்தெடுக்கச் சொல்லி தேவரு சொன்னார். ராகவன் என்னை எதுத்து நின்னான். அவன்  நாலு ஓட்டு வாங்கித் தோத்துப்போக, நான் ஆறு ஓட்டு வாங்கி வகுப்புத் தலைவன் ஆனது பெருமையா இருந்துச்சு. யார் ஓட்டு போட்டாலும் ராஜி ஓட்டு விழுந்துச்சான்னு தெரிய ஆசையா இருந்துச்சு. வேற யார்ட்டையும் கேட்க ரொம்ப தயக்கமா இருந்துச்சு. அதையும் வைகை அணையில வச்சு கேட்கனும்னு நெனைச்சேன்.
இன்பச்சுற்றுலா நாளும் வந்துச்சு. என்ட்ட இருந்த ஒரே ஒரு பேண்டையும், செவப்புக்கலர் முழுக்கை சட்டையையும் போடலாம்னு எடுத்தா, அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு, ஐயையோ யூனிபார்ம்ல போடனும்னு. எனவே வழக்கம் போல் வெள்ளைச் சட்டையையும், காக்கி டவுசரையும் போட்டுக்கிட்டு வெளியே வந்தேன். எங்கப்பா செலவுக்கு வழக்கத்துக்கு மாறாக ஒரு ரூபாய் கொடுத்தார். எங்கம்மா ஒரு எட்டனாவை உள்ளங்கையில் வைத்து அழுத்தினாங்க. பள்ளிக்குச் சென்றேன். பஸ் இன்னும் வரல. பசங்களை வழியனுப்ப நெறைய அம்மா அப்பா வந்திருந்தார்கள். "சூதானம்" என்ற வார்த்தை அடிக்கடி கேட்டது. என்னைப்பார்த்ததும், "சேகரு புள்ளையைப் பார்த்துக்கப்பா" என்றனர் பலர். ஆட்டும் ஆட்டும்னு தலையாட்டினேன்.
கடுக்கு மிட்டாய் வாங்க குருசாமி நாடார் கடைக்கு போனால், அன்னிக்கு லீவுனால புது மிட்டாய் எதுவும் போடலன்னு குருசாமி நாடார் பொண்டாட்டி சொல்லுச்சு. “லதாவை பார்த்துக்க சேகர்”னு சொல்லி, ரெண்டு தேன் மிட்டாயை ஓசியா கொடுத்துச்சு. அதெல்லாம் வேணாம்னு வாய் சொல்ல, கை அதனை வாங்கி வாயில் போட்டது.
  "ரஹீம்" பஸ்ஸீம் பெரியகுளத்திலிருந்து வந்து சேர்ந்தது. வண்டி போட்ட தடதடத்த சத்தம் எட்டூருக்கு கேக்கும் போல இருந்துச்சு. பசங்க ஜன்னலோரம் எடம்பிடிக்க ஒரே கூச்சல் போட்டுக்கிட்டு ஏறினாய்ங்க. ராஜியைத்தேடி கண்கள் அலைபாஞ்சது. பஸ் கிளம்ப நேரமாகி, நான் தேவரு வாத்தியார்ட்ட, "சார் இன்னும் முத்துப்பாண்டி வரலே”ன்னு சொன்னேன். ராஜி வரலன்னு சொல்ல தயக்கமாக இருந்துச்சு. தேவரு வாத்தியார், "அவுக வரமாட்டாக, நாம போலாம்", என்றதும் என் உற்சாகம் எல்லாம் வடிகஞ்சி, வழிஞ்சாப்போல் அப்படி வடிஞ்சி போச்சி.
ரஹீம் வண்டி தடதடத்து ஓடும்போதும் சரளைக்கல் பாதையில் தூக்கி தூக்கிப்போடும் போதும், நம்ம பசங்க பலபேர் வாந்தி எடுத்தாய்ங்க. கருமம் காலங்காத்தால என்னத்தை தின்னாய்ங்களோ,பஸ்பூரா  ஒரே நாத்தம் தாங்க முடியல. ஒருவழியா வைகையும் போய்ச் சேர்ந்தாலும் எனக்கு எதையுமே பார்க்க பிடிக்கல.
“எலே சேகர் என்னடா ஒரு மாதிரி இருக்க,”ன்னு சிராஜ் சும்மா நோண்டி நோண்டி கேக்கும் போது எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. யாரிட்டயும் பேசாமல் தனியாவே இருந்தேன். வரும்போது ஊரே இருண்டு கிடந்துச்சு. கடையெல்லாம் சாத்திக்கிடந்துச்சு. என்ன அதுக்குள்ள சாத்திட்டாய்ங்கன்னு யோசனையாய் இருந்துச்சு.
வீடு வந்து சேரும்போது, எங்கப்பாவும், எங்கம்மாவும் குசுகுசுன்னு பேசினதிலிருந்து, நான் தெரிஞ்சிக்கிட்டது என்னன்னா, மாயத்தேவரை யாரோ கொலை செஞ்ச்சிட்டாங்களாம். ஊரே ஒரே கலவரமாப்போச்சு. ஐயோ பாவம் ராஜி, அவளைப் பாத்து நெஞ்சில   சாச்சு ஆறுதல் சொல்லனும்போல இருந்துச்சு. எங்கப்பாட்ட கேட்கவும் பயமா இருந்துச்சு.
மறுநாளும் கடையெல்லாம், லேட்டாத்தேன் தெறந்தாய்ங்க. அதுக்குள்ள நாங்க சர்ச்சுக்கு போய்ட்டு வந்தோம். எங்கப்பாவும் எங்கயும் வெளியே போகாததினால நானும் வெளியே போகமுடியல. திங்கக்கிழமை, கொடியேத்தம் முடிஞ்சும் அவ வரல. அப்புறம் விசாரிச்சதில, பாதுகாப்புக்காக, அவளை தேவாரம் அனுப்பிச்சட்டதாக சொன்னாக. ராஜியை அதற்கப்புறம் நான் பார்க்கவேயில்லை. ஆனா  அவ  மின்னும்  கண்களும், விடைக்கும் மூக்கும், ஜொலிக்கும்   மூக்குத்தியும், துடிக்கும்  உதடுகளும் என்றும்  என்  ஞாபகத்தில்.யாராவது  பாத்தா  சொல்றீகளா?
@@@@@@@@@@@@@@@.
கையில் இருந்த கடுக்கு மிட்டாய் ஞாபகம் வர , இன்னொன்றை எடுத்து வாயில் போட்டேன். ஏனோ இந்த முறை அது இனிக்கவில்லை.

முற்றியது.


12 comments:

  1. வணக்கம்
    சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சில நினைவுகள் மறக்கவே முடியாது... இது கதை தானே...?!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன். ஆமாம் இது கற்பனைக்கதைதான்.

      Delete
  4. அடப்பாவி.. உன்னையெல்லாம் ரெம்ப நல்லவன்னு தப்பா நெனச்சிட்டேன்... சகோதரி ரூத்திற்கு தமிழ் வாசிக்க வராதோ

    ReplyDelete
  5. அடப்பாவி.. உன்னையெல்லாம் ரெம்ப நல்லவன்னு தப்பா நெனச்சிட்டேன்... சகோதரி ரூத்திற்கு தமிழ் வாசிக்க வராதோ

    ReplyDelete
    Replies
    1. தப்பாதானே நினைச்சீங்க இப்ப மாத்திக்கிட்டாபோச்சு.

      ரூத் தான் இதன் முதல் வாசகி.

      Delete
  6. அடடா.....

    காதல் கசக்குதைய்யா..... தலைப்பிற்கேற்ற கதை.

    ReplyDelete
  7. நன்றி, வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  8. ithanai varusamaahiyum marakkaliya? athusari en character varave illa! antha perai paperla cut panni appakita naan adi vanginathu ungaluku theriyaatha?

    ReplyDelete
  9. ஆஹா அற்புதமான காதல் கதையைப்
    படித்த சுகம்
    ஆனால் முடிவு இத்தனை சோகமாய்
    முடியும் என நினைக்கவில்லை

    ஜாலியாகச் சொல்லிச் சென்ற விதம் படிக்க படிக்க
    இந்தக் காதல் வெற்றி அடைந்திருக்கும் எனத்தான்
    தோன்றச் செய்தது

    அதுவே எழுத்தின் சிறப்பு

    ReplyDelete