Monday, September 29, 2014

இளையராஜாவின் மோகனத்தாலாட்டு !!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாட்டு-2கண்ணன் ஒரு கைக்குழந்தை !!!

1976-ல் வெளியான பத்ரகாளி என்னும் படத்தில்  வெளிவந்த இளையராஜாவின் தேனாய் இனிக்கும் பாடல் "கண்ணன் ஒரு கைக்குழந்தை". பாடலை ஒரு தடவை கேட்டுவிடுவோம்.

இசைக்கோர்வை:
சலசலத்து ஓடும் தெள்ளிய நீரோடையில் நீர்க்குமிழிகள் எழுப்பும் இசைபோன்ற ஷைலஃபோன் / ஜலதரங்கம் இசை ஆரம்ப இசையாக (Prelude) காதோரம் கிச்சுக்கிச்சு மூட்டி ஒரு கிடார் கார்டோடு (Chord) நிறுத்த, "கண்ணன் ஒரு கைக்குழந்தை", என்று பி.சுசிலாவின் தேன் தடவிய குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. தபேலா வால்ட்ஸ் நடையில் இணைய ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. முழுப் பல்லவியும் பாடி நிறுத்தி பல்லவி மீண்டும் ஒருமுறை பாடப்பட, “கண்கள் சிந்தும் பூங்கவிதை” -யின் முடிவில் த ராராராராரா  என்று வயலின்களின் கூட்டிசை ஒலிப்பது பாடலுக்கு ஒரு மேஜிக் மோமண்ட்  என்று சொல்லலாம். அதே ராகம் வரும் இன்னும் சில இடங்களில் அவ்வயலின் இசை மீண்டும் வருகிறது.
முதல் BGM-ல் புல்லாங்குழல் வர சிதார் / வீணை இணைந்து  பின் ரிதமுக்கு பாங்கோஸ் சேர்ந்து கொள்ள, திரும்பவும் வீணையுடன் முடிய "உன் மடியில்  நானுறங்க" என்று ஜேசுதாஸின் கந்தர்வக் குரல் கொஞ்சுகிறது. அந்தக் கொஞ்சலுக்கு பதில் சொல்லும்விதத்தில் அதே வரிகளில் சுசிலாவின் குரல் வருகிறது. இம்முறை இன்னும் கொஞ்சம் ஜோடனையுடன் வருகிறது. சரணம் முடிவில் ஒரு நான்கு தடவை வெவ்வேறு சுதியில் மணியிசை ஒலித்தவுடன், "ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா" என்று ஆரம்பிக்க பின்னணி இசையாக வயலின்களும் புல்லாங்குழலும் செகண்ட்ஸில் ஒலிக்க (Seconds) பாட்டு அப்படியே நிறைந்து பரவுகிறது.  
இரண்டாவது BGM-ல் திரும்பவும் புல்லாங்குழல், வீணை மற்றும்  தபேலாவுடன் இணைந்து வந்து முடிய "மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி" என்று தலைவி பாட "வஞ்சி  மகள் வரும்போது" என்று தலைவன் மெச்சுவது வந்து, பல்லவி திரும்பவர "ஆராரிரோ" என்று தலைவனும் தலைவியும் மாறி மாறித் தாலாட்ட முடிகிறது பாடல்.

குரல் : P.சுசிலா.

P.சுசிலாவின் சமீபத்திய நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இத்தனை வருடங்கள் தமிழ் நாட்டை ஒட்டி தமிழ்ப் பாடல்களை பாடியும் தமிழ் இன்னும் அவருக்கு பேசவரவில்லை. ஆனால் பாடும்போது பல தமிழ்ப் பாடகர்களையும் மிஞ்சும் அளவுக்கு உச்சரிப்பு சுத்தமா வருகிறது. பெண் பாடகிகளில் உச்சரிப்பில் சுசிலாவை  மிஞ்ச யாருமில்லை. அதற்குமேல்  இருக்கிற குரலினிமை. ஒரு குடும்பப் பெண்ணுக்கு மிகவும் பாந்தமாக ஒலிக்கும் இனிய குரல். பிசிறு தட்டாத சலிக்காத குரல் இவரது தனித்தன்மை. அதோடு இலகுவாக விழும் சங்கதிகள், இனிய பிர்ஹாக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் தானே சுசிலா என்று நினைக்கும்போது இது மிகுந்த   ஆச்சரியத்தை தருகிறது

கே.ஜே.ஜேசுதாஸ்.

தமிழில் எழுதுவதிலும் சரி, பேசுவதிலும் சரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டால் எனக்கு கெட்டகோபம் வந்துவிடும். தமிழை தமில் என்றும் டமில் என்றும் பேசும் தமிழர்கள் தானே நம் நாட்டில் அதிகம். அதுவும் சில அரசியல் தலைவர்கள். அதிலும் பாடலில் அப்படிப்பாடிய எந்தப் பாடல்களையும் புறக்கணித்து விடுவேன். சில AR.ரகுமான் பாடிய பாடல்கள் உட்பட. அதனால்தான் ஜேசுதாஸ் பாடிய சில பாடல்கள் கடுப்பை உண்டாக்கும். ஆனால் அதையெல்லாம் மீறி இந்தாளின் குரலில் ஒரு வசீகரம் இருப்பதை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். அதிலும் இந்தப் பாடலில் எந்த ஒரு உச்சரிப்புக் குறையும் இல்லாமல் தெளிவாக கனிவைக் குழைத்து வருகிறது. பாட்டின் உச்சரிப்பு சில சமயம் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்சொல்லிக் கொடுப்பதிலும் இருக்கிறது.

பாடல் வரிகள்:

கவிஞர்  வாலி எழுதிய ஆகச்சிறந்த கவிதைப் பாடல்களில்  இது மிகவும்  முக்கியமான ஒன்று. ஒரு பல்லவி இரண்டு அல்லது மூன்று சரணங்கள் என்ற திரைப்பாடலின் பொதுவான விதியை மீறி பல சரணங்கள் உள்ளுக்குள் பிணைந்து வருகிறது இந்தப்பாடலில். தலைவனை குழந்தையாக நினைத்து தலைவி பாடும் தாலாட்டு போல் அமைந்திருக்கிறது.குறிப்பாக இறைவன் கொடுத்த வரத்தால் மனைவி அமைந்துவிட்டால் சொர்க்கம் இங்கேயே கிட்டிவிடுமே. நான் பெரும் தவம் செய்தபடியால்  நீ எனக்கு  மனைவியாய் அமைந்தாய் , ஏழு பிறவிகளிலும் தொடந்து வரும் சொந்தம் இது .நான் உயிரோடு இருக்கும் வரை நீயே ஏன் தஞ்சம் என்கிறார் கவிஞர் . இந்த வரிகளைக் கவனியுங்கள்.
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்ன வென்று சொல்வேனோ.

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா 
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா.
அடுத்த பிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் , “ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா”,  என்ற வரிகளை கேட்கும் போது மனதை பிசைகிறது.
மனைவியை தாயாக நினைத்ததற்கு ஒருபடி மேலே அம்மனாகவும் தன்னை பக்தனாகவும் உருவகித்து தலைவன் பாடும் வரியாக அமைகிறது கீழே உள்ளவரிகள். 

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா.

இத்திரைப்படத்தில் தலைவியின் பெயர் காயத்ரி. கவிஞரின் கற்பனை எப்படியெல்லாம் விரிந்திருக்கிறது பாருங்கள்.

ராகம்:
இளையராஜாவால் வெறும் கிராமத்து இசைமட்டும் தான் கொடுக்க முடியும். பறையிசை, டப்பாங்குத்து, கூத்துப்பாட்டுகள் தான் முடியும். ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் தாங்காது  என்ற அனைத்து அனுமானங்களையும் துரத்தியடித்து, மோகனராகத்தில் அமைந்த அருமையான மெல்லிசைப் பாடல் அமைத்து அழியாப்புகழ் பெற்றார் இளையராஜா. அவர் மெட்டமைத்த மோகன ராகப் பாடல்களில் சில பாடல்களை கீழே தருகிறேன்.
1. நிலவு தூங்கும் நேரம், நினைவு தூங்கிடாது.
2. பூவில் வண்டு கூடும் 
3. ஒரு ராகம் பாடலோடு.  
பின்குறிப்பு : இளையராஜாவின் இந்த பாடலின் டியூன், முதன் முதலில் நடிகர் விஜயின் அம்மா  ஷோபா சந்திரசேகர் அவர்களின் நாடகத்திற்கு மெட்டுப்போட்டு  , கங்கை அமரனால் எழுதப்பட்ட , மூன்று தமிழ் காவியமும்  முருகனுக்கு கொட்டிலடி " என்ற அதே மெட்டில் போட்டதாக  இளையராஜா ஒரு இசை  நிகழ்ச்சியில்   சொல்வதை   நான் கேட்டிருக்கிறேன்.

இன்னும் வரும் >>>>>>>>>>>>>>>>>


10 comments:

  1. ஆனந்த ராகம் கேட்கும் காலம் - Simmendramadhyamam not Mohanam

    ReplyDelete
    Replies
    1. அப்படியா , திரும்பவும் சரி பார்க்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு
      நன்றி .

      Delete
    2. Thanks. Just noted it - didn't mean to find fault. Some additional songs to note the difference between these 2 ragams

      Thalaattum Poongatru - Gopura Vasalilae - Simmendramadhayam
      Poovil Vandu koodum - Kadhal Oviyam - Mohanam

      Delete
    3. திருத்தி விட்டேன், நன்றி

      Delete
  2. அருமையான பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி தனிமரம்.

      Delete
  3. சுசிலா = தேன்

    ஜேசுதாஸ் = என்ன சொல்ல ....?

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர்கள்.தங்கள் வருகைக்கு நன்றி தருமி.

      Delete
  4. அருமையான பாடலிது. எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்.....

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete