Thursday, September 25, 2014

பிளேபாய்ஸ்சும் உசிலம்பட்டி பெண்குட்டியும் !!!!!!!!!!!

With Minisam and Vanaraj in front of Washburn Hall

"என்னடா காலங்காத்தால வந்திருக்கிற"
"வெள்ளிக்கிழமை சாயந்திரம் உசிலம்பட்டில கச்சேரி. நாலு மணிக்கெல்லாம் ரெடியா இரு", என்றான் குச்சி. குச்சி, டிரம்ஸ் வாசிப்பவன், எங்கள் குழுத்தலைவன், டிரம்ஸ் வாசிக்கிற குச்சி மாதிரியே ஒல்லியா இருக்கிறதால அவன் செல்லப் பெயர் குச்சி அவனுடைய உண்மையான பேர் மணி என்ற ஆனந்தராஜ். இப்படி கிட்டத்தட்ட எல்லோருக்கும் பேர் உண்டு.
"உசிலம்பட்டியா, என் பக்கத்து ஊருதான். டேய் ஒழுங்கா பிராக்டிஸ் பண்ணி ஒழுங்கா பாடுங்க, குறிப்பா, நேரத்துக்கு போகனும் டோய் இல்லேன்னா வெட்டிருவாய்ங்க”,என்றேன்.
இந்தப்பயலுக ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி, ஒருத்தனும் யார் சொல்றதையும் கேட்க மாட்டாய்ங்க. விளையாட்டுப்பயக, அதனால்தான் பேர் 'பிளேபாய்ஸ் இசைக்குழு" (Playboys Orchestra).  ப்ளே பாய்ஸ்னா தப்பா எடுத்துக்காதீங்க, ம்ஹீம் அந்தத் தைரியமெல்லாம் யாருக்கும் கிடையாது. தவிர எல்லோருமே பாய்ஸ்ங்கிறதால அந்தப்பேர்.
“அமெரிக்கன் காலேஜ் இசைக்குழு”, காலங்காலமாக புகழ் பெற்றது. ஒவ்வொரு வருடமும் டிகிரி முடித்து பையன்கள் போகும்போது, ஆடிட்டோரியத்தில் ஆடிஷன் வைத்து, பாடுவதற்கு, மற்றும் கருவிகள் வாசிப்பதற்கு ஆள் எடுப்பாங்க. ஒரே கூட்டமா இருக்கும். குறிப்பா கிடார் வாசிப்பதற்கும், பாடுவதற்கும் பலத்த போட்டி இருக்கும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இசைக்குழு, எங்கெங்கெல்லாம் இன்டர் காலேஜ் போட்டி நடக்குமோ அங்கெல்லாம் போய் பரிசு வாங்கிட்டு வந்துருவோம். அமெரிக்கன் கல்லூரி ஆர்கெஸ்ட்ரா வருதுன்னா, முதல் பரிசு அதுக்குத்தான்னு எல்லோருக்கும் தெரியும். இப்படி நாங்க ஃபேமஸ் ஆனதால, காலேஜ்ல எந்த விழா நடந்தாலும் எங்க கச்சேரி நடக்கும். பல ஊர்களிலிருந்து வந்து படிச்ச மாணவர்கள் எங்களை அவங்க ஊர் திருவிழாவுக்கு கச்சேரி வாசிக்க கூப்பிட்டாங்க. அப்படியே ரொம்ப பிரபலமாகி, ஒரு கட்டத்துல தமிழ் நாட்டுல பல பெரிய கச்சேரிகள் வாசிக்க ஆரம்பிச்சோம்.  
Babu, Muthramalingam,Mani,Mini Sam,Shaji Simon,Vanaraj,Prabahar -Playboys met after 25 years in Kodaikanal-May 2012
எல்லோருக்கும் இளவயது, மேடையில் நாங்கள் நின்றாலே அவ்வளவு ஜோரா இருக்கும். சின்னப் பையன்க மேடையில தப்பு விட்டாலும் பெரிசா எடுத்துக்க மாட்டங்க. ஆனா சும்மா சொல்லக்கூடாது, எல்லாரும் நல்லாவே வாசிப்போம். புளு ஜீன்ஸ் பேன்ட்டும், வெள்ளைச் சட்டையில் பிளேபாய்ஸ் என்று ஸ்டிக்கர் இருக்கும் அதான் எங்க யூனிபார்ம்.
ஆடிஷன் இல்லாம சேர்ந்த ஆள் நான் ஒருத்தன்தான். பின்ன ஆடிஷன்லா வெச்சா, என்னை எவன் எடுப்பான்? அப்படி என்ன இசைக்கருவின்னு கேட்கறீங்களா? நான்  வாசிச்சது டிரிப்பிள் காங்கோ. அப்படின்னா என்னன்னு படத்தைப் பார்த்து தெரிஞ்சிக்கங்க. 

இளையராஜாவின் பொற்காலமான 80 களில்  வந்த கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களிலும் இந்த இசைக்கருவி பயன்படுத்தப்பட்டிருக்கும். இதை வாசிப்பதால எல்லோரும் என்னை "முக்கொட்டு"ன்னு கூப்பிடுவாய்ங்க. இதை எங்க கத்துக்கிட்டேன்னு கேட்கறீங்களா? நான் எங்க கத்துக்கிட்டேன்?. எல்லாம் இந்த ப்ரபாவால  வந்தது. இந்தாளுக்கு பல  திறமைகள் இருப்பதால நாங்கள்லாம் இவரைப் பார்த்து ஆச்சரியப்படுவோம். காலேஜ் போட்டின்னு வந்தா, ஓவியப் போட்டி, ரங்கோலி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டின்னு எல்லாத்திலும் முதல் பரிசு. நல்லா மிமிக்கிரியும் பண்ணுவார். அந்த சமயத்தில இவரோட கதை ஒண்ணு ஆனந்த விகடன்ல வேற முதல் பரிசு வாங்கி பிரசுரம் ஆனதால எல்லோருக்கும் ஹீரோ ஆயிட்டார். பார்க்கறதுக்கும்  ஹீரோ மாதிரிதான் இருப்பார். எனக்கு ஒரு வருஷம் சீனியர். சமீபத்தில் வெளி வந்த சிநேகாவின் காதலர்கள்" என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  
Prabahar -Professor -Music Director
நான் முதலாண்டு படிக்கும்போது, காலேஜ் ஆர்கெஸ்ட்ராவுக்கு காங்கோ வாசிச்சது இவர்தான். விரல்களை நாசூக்காகவும் லாவகமாகவும் பிரயோகித்து "கிட்டக்கிடகிட கிட்டக்கிடகிட" என்று இளையராஜாவின் பாப்புலர் பீட்டை இவர் வாசிக்கும்போது பரவசமாய்ப் பார்த்தேன். இவர் நோகாமா வாசிச்சாலும் நல்லா இசை வருகிறதேன்னு ஒரு நாள் நான் வாசித்துப் பார்த்தேன். கொஞ்சம் எனக்கும் வந்தது. ஆனா கையெல்லாம் வீங்கிப்போச்சு. அப்புறம் சில நிகழ்ச்சிகளில்  ஓரிரு பாட்டுகளுக்கு எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அவர் நன்றாக பாடுவார். குறிப்பாக இளையராஜா குரல் அவருக்கு நன்றாக பொருந்தும். அச்சமயம் இளையராஜா நிறைய பாடல்கள் பாட ஆரம்பிக்க, ப்ரபா முற்றிலுமாக காங்கோவைக் கைவிட, அவர்களுக்கு வேறு வழியின்றி என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். ஒன்றும் பிரமாதமாக வாசிக்கத் தெரியாது. குச்சிமணி வந்து காங்கோவை செட்பண்ணி, நட்டை முறுக்கி, சுதி சேர்த்துக் கொடுத்து, பாடலின் பீட்டைச் சொல்லிக் கொடுப்பான். நான் அப்படியே வாசித்துவிடுவேன். எனக்கு கிடாரிஸ்ட் ஆகனும்னு தான் ஆசை. கொஞ்சம் கொஞ்சம் ரிதம் வாசிப்பேன். நான் மட்டும் காங்கோவில உட்காரல, பெரிய கிட்டாரிஸ்ட் அல்லது பாடகராக ஆயிருப்பேன். ம் என்ன சொல்றது எல்லாம் ப்ரபா செஞ்ச சதி.
ஸ்டான்டர்ட் வேன் வந்து சேர மணி ஆறாயிருச்சி. "என்னடா குச்சி லேட்டாயிருச்சு", என்றேன். "திருவிழாக் காலம்கிறதால வேன் கிடைக்கலடா" என்றான். வாஸ்பர்னில் தங்கியிருந்த நானும் ப்ரபாவும் ரெடியா இருந்தோம். ஜேசுதாஸ் குரல் ஷாஜி சைமன் கொஞ்சம் லேட்டா வந்தான். அங்கிருந்து வேலஸ் ஹால் போய் எஸ்பிபி குரல் வனராஜையும், பேஸ்கிட்டார் ஜேம்சையும் கூப்பிட்டுக்கொண்டு கிளம்பினோம். St.மேரீஸ் சர்ச் பக்கத்தில் லீட் கிடார் Y.ஜேம்ஸ் ஏறிக்கொண்டான். கீ போர்டு ரவியும் அங்குதான் இருந்தான். புல்லாங்குழல் டிரம்பட், தபேலா வாசிக்க வெளியிலிருந்து ஆட்களை குச்சி அரேஞ்ச் பண்ணிருந்தான். அப்புறம் மேலவாசல்ல டிஎம்ஸ் குரல் கிடதா (பட்டப்பெயர்தான், தாக்கிட தரிகிட கிடதான்னு சுரம் பாடுவதால கிடதா. அவர் பேர் செல்வராஜ்). ஜானகி குரல் ஹரிநாத் பாபு (ஆமா பையன்தான் லேசா குரலை மாத்தி தேன் மாதிரி பாடுவான். பேபின்னு செல்லமா கூப்பிடுவோம், பார்க்கவும் ஒடிசலா சிவப்பா அழகா இருப்பான்.)
Baby yenra Harinath 
அப்பதான் குச்சிமணி சொன்னான், "டேய் உசிலம்பட்டிக்கு பெண் பாடகி கண்டிப்பா வேணும்னு சொன்னாங்க, நாம வஹிதா வைக் கூப்பிடுவோம்" .
"மணி, நேரமாயிருச்சுடா, உசிலம்பட்டிரா", என்றேன். இதற்கிடையில் நியூலிங்கம் சவுண்ட் சர்வீசையையும் ஏத்திக் கொண்டு வஹிதா வீட்டுக்குப் போனா, அதுக்கு காய்ச்சல் வரமுடியாதுன்னு சொல்லிருச்சு.
ஒரு வழியா 11 மணிக்குத்தான் போய்ச்சேர்ந்தோம். எனக்கு கைகாலெல்லாம் நடுக்கம், வந்தது லேட், 9 மணிக்கு வரச்சொன்னா 11 மணிக்குப்போனதோடு பெண் பாடகியும் இல்ல. உசிலம்பட்டியில் பாட ஒரு பெண்குட்டி இல்லையேன்னு ஒரே கலவரமாப்போச்சு. பெண் குரலில் பாட எங்க பேபி இருந்தாலும் மேடையில ஒரு கிளாமருக்கு ஒரு பெண் அவசியம் வேணும் . கேட்டா என்ன சொல்றதுன்னு பயந்து கிட்டே இருந்தோம் .ஒரு வழியா  கருவிகளையும் மைக்குகளையும் செட் பண்ணிட்டு, பிரபா வந்து நன்றி சொல்லி ஆரம்பிக்க, வனா மேடைக்கு வந்தார். ஆர்கனில் லேசாக சோக கீதம் வாசிக்க, வனா சொன்னார். "எங்கள் குழுவின் பாடகிக்கு ஆக்சிடென்ட் ஆகி, ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமாக இருப்பதைப் போய் பார்த்துவிட்டு, வாக்கு மாறக்கூடாது என்று இங்கு வந்திருக்கிறோம். லேட்டாயிருச்சு மன்னித்துவிடுங்கள்,"என்றாரே பார்க்கலாம் ஒரே பொய்யில் ரெண்டு பிராபளத்தையும், சால்வ் செய்துட்டார். அப்புறமென்ன 'நாதமெனும் கோவிலிலே" என்று  பேபி பாட கச்சேரி களை கட்ட ஆரம்பிச்சது. உசிலம்பட்டிக்காரங்க வாயைத்திறக்கவேயில்லை.
இப்படி “பிளேபாய்ஸ்” செஞ்ச அட்டகாச  அக்கிரமங்களை  அப்பப்ப சொல்றேன். மீண்டும் விரைவில் சந்திக்கலாம் .

இப்போதைக்கு முற்றும், ஆனா தொடரும் .

4 comments:

  1. தலைப்ப பார்த்ததும் கொஞ்சம் தடு மாறிவிட்டேன். ஆனாலும் இந்த மாதிரி போட்டிகளில் வேலூர் ஊரீஸ் கல்லூரிக்கு பிறகு தன் மதுரை அமெரிக்கன் கல்லூரி.

    ReplyDelete
    Replies
    1. மாநில அளவில் நடைபெறும் , IIT Mardi Grass, REC Festember, Fantasia என்று ஒரு போட்டிகளிலும் ஊரிசை பார்த்ததில்லையே தம்பி .

      Delete
  2. இனிய நினைவுகள்....

    நல்ல சமாளிப்புதான்! :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete