Monday, July 14, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி-9 மல்பெர்ரி பழமும் மொச்சைக்குழம்பும் !!!!!!!!!!

Roman Fort Walls 
நம்மூர் என்றால் ரெண்டு கல்லை எடுத்து எறிந்தால் அந்த நாய் ஓடிப்போயிருக்கும். இங்கே டூரிஸ்ட் மக்களே இருந்ததால், சிலர் புகைப்படம் எடுப்பதும், சிலர் வீடியோ எடுப்பதுமாக அந்த நாய் ஒரு செலிப்பிரிட்டி ஆகிவிட்டது. பார்க்க தெரு நாய் போல அல்லாமல் நல்ல ஜாதி நாய் (அடச்சீ இதிலும் ஜாதியா ?) போலவே இருந்தது. ஆனாலும் இப்படி பாங்குவை கேலி செய்வது போல் ஊளையிட்டது எனக்கே சங்கடமாய் இருந்தது. நல்லவேளை சீக்கிரத்தில் 'பாங்கு' சொல்லி முடிய, சொல்லி வைத்ததுபோல் அந்த நாய் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு ஆடி ஆடிச் சென்று மறைந்தது. நிச்சயமாக சுல்தானின் ஆக்ரமிப்பை வெறுக்கும் ரோமப் பேரரசின் மிச்சமாக இந்த நாய் இருந்ததைப் போல் தெரிந்தது. 
அரண்மனையிலிருந்து வெளியே வந்து உர்ஸின் குடையைத் தேடினேன். "ரூமுக்குப் போகிறீர்களா அல்லது இங்கேயே சுல்தானா மேட்டில் இறக்கிவிடவா ?", என்று கேட்டான். ஆஸ்திரேலிய மக்கள் அங்கிருந்து அவர்கள் ஓட்டல் பக்கத்தில் என்றதால் நடந்து சென்றார்கள். சிறிது யோசித்து விட்டு, என்னுடைய ஹோட்டல் இருக்கும் யெனிபோஸ்னா பகுதி தூரம் என்பதால், அங்கேயே சென்று விடுவதாக முடிவெடுத்தேன்.
எனவே வேனில் நான் மட்டும்தான் இருந்தேன். வேன் கிளம்பத்தயாராக, உர்ஸ் ஓடி வந்தான். வழியில் இறங்கிக் கொள்கிறேன் என்று வேனில் ஏறினான். வேன் கிளம்பியதும் ஆட்டமன் பேரரசைப்பற்றியும் பைஜான்டியம் ரோமப் பேரரசைப்பற்றியும் அவனை கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தேன். அவனும் வேண்டா வெறுப்பாக பதில் சொல்லிக் கொண்டே வந்தான். "நாளைக்கும் நீயேதான் வருவாயா?" என்றேன்.
"ஓ சொல்ல மறந்துவிட்டேன். நாளைக்கு டூர் கேன்சல்"
"என்னது டூர் கேன்சலா சொல்லவே இல்லை".
"சாரி மதியமே சொன்னார்கள், நாளைக்கு இந்தப்பகுதியில் மாரத்தான் இருப்பதால் டூர் கேன்சலாகி விட்டது. அதே டூர் திங்கள்கிழமை உண்டு. திங்கள் காலை உங்களை ஹோட்டலில் பிக்கப் செய்து கொள்கிறோம்."
நல்லவேளை இவன் திரும்ப வந்து ஏறினான், நான் இவனைக் கேட்டேன் கடவுளுக்கு நன்றி என்று நினைத்தவாரே அடுத்த கேள்வியைக் கேட்க, "இதோ என் ஸ்டாப் வந்துரிச்சு" என்று சொன்னது, "ஐயா ஆளைவிடு", என்று சொன்னது போல இருந்தது. இறங்குமுன் ஒரு பத்து டாலரைக் கொடுத்தேன். சலாம் போட்டு வாங்கிக் கொண்டான். இதனை முதலியேயே செய்திருந்தால் கேள்விக்குப்பதில் இன்னும் உற்சாகமாய் வந்திருக்கும். என்ன செய்வது கெட்ட பின்தானே சூரிய நமஸ்காரம் செய்ய யோசனை வரும்.
நாளைக்கு என்ன செய்வது என்று யோசனையாய் இருந்தது.வழி நெடுகிலும் ரோமப்பேரரசின் சிதிலமடைந்த கோட்டைச்சுவர்கள் இருந்தன. கான்ஸ்டான்டி நோபில் நகரப்பகுதிகளைச்சுற்றிலும் இந்த பெருஞ்சுவர் இருந்ததாம். எவ்வளவு பெரிய பேரரசாக இருந்தாலும், ஒரு நாள் அழிந்துதான் போகிறது.
உலகை ஆண்ட ரோமப்பேரரசு, எகிப்திய பேரரசு, மாவீரன் அலெக்ஸாண்டர் தலைமையில் இருந்த கிரேக்கப்பேரரசு, நெப்போலியன் தலைமையில் இருந்த பிரெஞ்சுப் பேரரசு, ஆட்டமன் பேரரசு, முகலாயப் பேரரசு, ஆங்கிலேயப் பேரரசு ஆகியவை எல்லாம் அழிந்துதானே போய்விட்டன.
இப்போது இருப்பது வருகிறது அமெரிக்கப் பேரரசு. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. யார் கண்டார்கள் அடுத்த பேரரசு சீனப்பேரரசாகக் கூட இருக்கலாம். இப்போதே ஹாங்க்காங், தைவான், திபெத்  ஆகிய நாடுகள் ஸ்வாகா. கொரியா மேல் ஒரு கண் .நம் இந்தியப்பகுதிகளில் சிலவற்றை பிடித்து வைத்திருக்கிறான். அருணாசல பிரதேசை தன்னுடைய மேப்பில் சேர்த்ததோடு  அவ்வப்போது ராணுவப்பயிற்சி என்ற பெயரில்   பார்டரில் தொல்லை கொடுக்கிறான் .
இதையெல்லாம் யோசித்துக் கொண்டே, ஹோட்டல் வந்து சேர்ந்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலைப் பற்றிச் சொல்ல வேண்டும். சற்றே புதிய ஹோட்டலின் பெயர் "ஹேன்ஸ் ஹாஸ்டல்". ஏர்போர்ட்டிற்கு அருகிலுள்ள யெனிபோஸ்னா பகுதியில் இருக்கிறது.

ரிசப்ஷன் பகுதி, நான் இது வரை பார்த்தறியாத வகையில் கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

அங்கிருந்த கெளச்சுகள் ஏதோ மன்னர் கால இருக்கைகள் போல இருந்தன.
Reception Table

ரிசப்ஷன் மேஜை பல்வேறு கற்களால் அலங்கரிக்கப்பட்டு சுற்றிலும் கண்ணாடியில் மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடியிலும் சென்சார் லைட்டுகள் இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் தானாக எரியும். பின்னர் சில நிமிடங்களில் ஆஃப் ஆகிவிடும்.
என் ரூம்தான் மிகச்சிறியது. ஆனால் டிவி, ஃபிரிட்ஜ், கப்போர்டு, என சகல வசதிகளும் இருந்தன. கீழே  பேஸ்மென்ட்டி மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ரெஸ்டாரன்ட் இருந்தது. அதன் உள்ளே பிரத்யேகப் பகுதியின் சைடில் முழுவதும் கண்ணாடி சுவரின் உள்ளே அழகிய பசுமைத் தோட்டம்.
ரூமில் போய் முகம் கழுவி ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியே வந்தேன். ஏதாவது பழங்கள் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று தேடிப் போனேன். ஸ்டார் சிட்டி மாலுக்கு எதிர்ப்புறம் ஒரு கடை தெரிந்தது. நாம் சூப்பர் மார்க்கெட் என்று சொல்லுவதை துருக்கியர் "ஹைப்பர் மார்க்கெட்" என்று சொல்லுகிறார்கள். (Hiper Market)
மிகவும் கஷ்டப்பட்டு கிராஸ் செய்து கடைக்குள் சென்றேன். 


வழக்கமான பழங்கள் தவிர புதுவகையான பழங்கள் மேல் கண்கள் சென்றது. பெயர் கேட்டால் அவர்கள் துருக்கியில் சொன்ன பெயர்கள் எதுவும் விளங்கவில்லை. இங்கிலிஸ் ம்ஹீம் சுத்தம். அதன் பின்னர் ஒரு ஓட்டை இங்கிலிஸ் விடலை வந்தது உதவி பண்ண. அவளுக்கும் ஆங்கிலப் பெயர்  தெரியவில்லை. ஆனால் டக்கென்று தன ஸ்மார்ட் போனை எடுத்து டிரான்சுலேட் செய்து பெயர்களைச் சொன்னாள், வெரி ஸ்மார்ட். 

Mulberry and Loquat

அவற்றுள் ஒன்று மல்பெரிப் பழங்கள், இதுவரை நான் சாப்பிட்ட பெர்ரி வகைகள் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெரி, பிளாக்பெரி, புளுபெர்ரி, செர்ரி மற்றும் அத்திப்பழங்கள். மல்பெரி புதிய அனுபவம். பார்க்க பிளாக்பெர்ரி போலவே இருந்தாலும் சுவை வேறு. மங்குஸ்தான் போலவே இருந்த லோகுவாட் (Loquat), புருன் பழங்கள், ஒரு குவின்சி ஆப்பிள் கொஞ்சம் பச்சை ஜுஜுபி பழங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ரூம் திரும்பினேன்.

இரவு உணவுக்கு பேஸ்மென்ட் ரெஸ்டாரன்ட் சென்று என்ன இருக்கிறது கண்ணாடிக் கூண்டில், என்று வேடிக்கை பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. ஒரு ஓரத்தில் மொச்சைக்குழம்பு போல ஏதோ இருந்தது. செஃபிடம் சாதம் இருக்கிறதா என்று கேட்டேன். இருக்கிறது என்று வயிற்றில் பாலை வார்த்தான். பிறகென்ன சாதம் கொஞ்சம் மொச்சைக்குழம்பு என்று ஆர்டர் செய்ய, கேட்காமலேயே கொஞ்சம் பிரட் ஸ்லைஸ்கள் கொண்டு வந்தான்.

 அந்த மொச்சை வேறுவகையான வெள்ளை பீன்ஸ். ஆனால் சாதத்திற்கு நன்றாகவே இருந்தது. என் மனைவி அப்போது போன் செய்தாள்.கொஞ்சம் வருத்தத்துடன் , "என்ன சாப்பிடுகிறீர்கள் ?", என்று கேட்டாள். 

“மொச்சைக் குழம்பு”, என்றதும் , என்னது என்று கத்திவிட்டாள். “நீ வெச்சுக்கொடுக்காட்டி எங்களுக்கென்ன கிடைக்காதா?”, என்று   சந்தடி சாக்கில் வாரிவிட்டேன். அந்தப்பக்கம் பதில் இல்லாததால் , "இருந்தாலும் நீ வைக்கிற மாதிரி  இல்லை” , என்று தாஜா செய்துவிட்டு குட் நைட் சொன்னேன் . ஆனால் நன்றாகத்தான் இருந்தது. கொஞ்சம் பிரட்டிலும் தொட்டுச் சாப்பிட்டேன். உலகத்திலேயே பிரட்டுக்கு மொச்சைக் குழம்பு சாப்பிட்ட முதல் மனிதன் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, உண்டு முடித்தேன். அடுத்த நாள் நான் தனியாகவே போக வேண்டும் என்பதால் எங்கு போவது என்று  கொஞ்சம் ப்ளான் பண்ணலாம் என்று ரிசப்ஷனில் இருந்த கம்ப்யூட்டரில் உட்கார்ந்தேன்.


-தொடரும்.

13 comments:

  1. ஒரு நாள் பயணம் நல்ல படியாக முடிந்தது. அடுத்த நாள் நீங்கள் பார்த்த இடங்களைப் பார்க்க நாங்களும் தயாராகிறோம்....

    ReplyDelete
    Replies
    1. என்னோடு தொடர்ந்து பயணம் செய்யும் உங்களுக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  2. ரிஷப்ஷன் சூப்பரா இருக்கு. இஸ்தான்புல்லில் மொச்சைக் குழம்பா?சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. இப்ப நெனைச்சாலும் வாயில் எச்சில் ஊருது .தங்கள் வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா.

      Delete
  3. aahaa! ஒவ்வொரு விஷயமும் விடுபடாமல் கோர்வையாய் கொடுத்திருப்பது உங்களுடன் நாங்களும் இருந்த உணர்வினை ஏற்படுத்தியது. உடன் பயணத்தில் தொடர்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் ஆக்கமும் மட்டுமே என்னை எழுத தூண்டுகிறது .தங்கள் வருகைக்கு நன்றி கிருஷ்ணா ரவி .

      Delete
  4. அண்ணே, வலைசரத்தில் மைதிலி அவர்கள் தம்மை அனைவருக்கும் அட்டகாசமாக அறிமுக படுத்தியுள்ளார்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கு நன்றி தம்பி விசு .

      Delete
  5. வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார்.வாழ்த்துக்கள்.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  6. இஸ்தான் புல் இனிய தேசம் தொடருங்கள் ஐயா ப்ய்ணிக்கின்றேன் .. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
      தாங்கள் தனிமரம் என்று சொல்லிக்கொண்டாலும் ஒரு தோப்பு என்பதை நான் அறிவேன் .

      Delete
    2. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

      Delete