Monday, July 21, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -10 : மெடுசாவின் காதல்!!!!!

Blue Mosque

ஏப்ரல் 27 - ஞாயிற்றுக்கிழமை
காலையில் எழுந்து ரெடியாகி, சுல்தானா மெட்டுக்கு எப்படிப்போக வேண்டும் என்று விசாரித்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு ரெண்டு பிளாக் நடந்தால் மெயின் சாலை வந்தது. அதில் ஒருவகையான மினிபஸ்கள் ஓடுகின்றன. அதற்கென்று பஸ் ஸ்டாப்புகள் இருந்தாலும், வழியில் எங்கு  வேண்டுமென்றாலும் கைகாட்டி நிறுத்தி ஏறிக்கொள்ளலாம். கட்டணம் 1.50 லிராக்கள் தான். அங்கு போய் மினிபஸ் ஏறி பக்கத்தில் உள்ள டிராம் ஸ்டேஷனில் இறங்கினேன். இந்த மெட்ரோ டிராம் வண்டி இஸ்தான்புல்லின் முக்கிய பகுதிகளை இணைக்கிறது.
சுமார் 1 மணி நேரத்தில் சுல்தானாமெட் வந்து சேர்ந்தேன். மாரத்தான் ஓட்டத்தைக் காணோம். ஆனால் வழக்கம் போல் கூட்டம் கூட்டமாக டூரிஸ்ட்கள் இருந்தனர்.
நேற்று இரவு கூகுளில் தேடி திட்டமிட்டபடி ரோமப்பேரரசின் மிச்சங்களை பார்க்கப்போனேன்.

அங்கே ஒரு இடத்தில் டூரிஸ்ட் கைடைச் சுற்றி  ஒரு சிறிய கூட்டம் சூழ்ந்திருந்தது. ஒரு தூண் அங்கே இருந்தது. அதில் கைகாட்டிப் பலகைகள் போல ரோம், இத்தாலி என்று பல ஊர்களின் பெயர்ப்பலகைகள் பல திசைகளைச் சுட்டிக் கொண்டிருந்தன. அந்த டூரிஸ்ட் கைடு என்ன சொல்கிறார் என்று ஒட்டுக்கேட்டால் ஒன்றும் புரியவில்லை. வேறு ஏதோ மொழி.  

அதற்கு மறுபுறம் வேறொரு சிறிய கும்பல் இருந்தது. தெரிந்து கொள்ளும் ஆவலில் வெட்கத்தை விட்டு பக்கத்தில் சென்றேன். நல்லவேளை ஆங்கிலத்தில் விளக்கம் நடந்து கொண்டிருந்தது.
Cistern
பைஜான்டியம் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கத்திய ரோமப்பேரரசு பல நாடுகளை உள்ளடக்கியது, அந்த நாடுகளுக்கெல்லாம் இதுதான் மையப்புள்ளியாம். இங்கிருந்து பேரரசைச் சேர்ந்த எல்லா நாடுகளுக்கும், எவ்வளவு தூரம் என்பதை துல்லியமாய்க் கணித்து, அந்த தூணில் குறித்து வைத்திருந்தார்களாம். அது இன்றும் பார்வைக்குக் கிடைத்தது.
சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்னால், எப்படித்தான் தூரத்தைக் கணித்தார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது. அதோடு அவ்வளவு நாடுகளும் அவர்களுக்கு கீழே இருந்தவை. இவ்வளவு தூரத்திலிருந்து அத்தனையையும் பிடித்து ஒரு மாபெரும் பேரரசாக விளங்கிய ரோமப்பேரரசையும் அதனை ஆண்ட மாமன்னர்களையும் நினைத்தால் மெய் சிலிர்த்தது.
ரோமப்பேரரசில் இன்னும் என்னவெல்லாம் அதிசயம் இருக்குமோ என்று நினைத்த வண்ணம், "ரோமன் சிஸ்டர்ன்" எங்கிருக்கிறது என்று கேட்டேன். இதோ என்று அதன் பின்  பக்கத்தைக் காண்பித்தார்கள். அங்கு ஒரு சிறிய கட்டடம் இருந்தது. 
Outside
இதுவா அதிசய சிஸ்டர்ன், கொஞ்சம் ஓவரா பில்டப் கொடுத்துட்டாய்ங்களா என்று நினைத்துக் கொண்டே அதனருகில் சென்று அங்கிருந்த லைனில் நின்றேன். நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தால், கீழே படிக்கட்டுகள் சென்றன.  

கீழே இறங்கினால் அங்கே அதல பாதாளத்தில் ஒரு அதிசயம் கண்முன் விரிந்தது.
அண்டர் கிரவுண்டில் ஒரு பெரும் மண்டபம் இருந்தது. சீரான மிக உயரமான தூண்கள் தாங்கிய அந்த மாபெரும் இடம் குடி நீர் சேமிக்கும் இடமாக இருந்ததாம்.

இந்த இடத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இதன் எதிரே 'ஹாகியா சோஃபியா' என்னும் ரோம ஆலயம், அதன் கொஞ்சம் தள்ளியிருக்கும் "புளுமாஸ்க்" அந்த புளுமாஸ்க் இருந்த இடம்தான் ரோமப் பேரரசர்களின் அரண்மனை இருந்த இடம். இவை எல்லாவற்றிகும் குடிநீர் தேவையை இந்த பாதாள அரங்கம் தான் தீர்த்து வைத்ததாம்.

பேசிலிக்கா சிஸ்டர்ன் (Basilica Cistern) அல்லது "மூழ்கிய அரண்மனை" (Sunken Palace) என்று அழைக்கப்படும் இந்த அரங்கம் ரோமப்பேரரசர் ஜஸ்டினியன் (R 527-565)  அவர்களால் கட்டப்பட்டது. இவர்தான் ஹாகியா சோஃபியாவையும் கட்டியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த இடத்தில் ஒரு பெரிய கத்தீட்றல் இருந்ததாம். அதனால்தான் அந்தக் காலத்திலிருந்தே இது பேசிலிக்கா சிஸ்டர்ன் என்று அழைக்கப்படுகிறது.

460 அடி நீளமும் 230 அடி அகலமும் உள்ள இந்த செவ்வக வடிவ கட்டிடம் 30 அடி உயரமுள்ள 336 தூண்களால் தாங்கப்படுகிறது. மொத்தம் 12 வரிசையில் வரிசைக்கு 28 தூண்கள். ஒவ்வொரு தூணுக்கும் இடைவெளி 16 அடி.  மேற்கூரையின் எடை முழுவதையும் அழகான வடிவமைக்கப்பட்ட வளைவுகள் கொண்டு வந்து தூணில் நிறுத்துகின்றன. எல்லாத்தூண்களும் மார்பிளால் அமைந்து பல்வேறு ஸ்டைல்களில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் 98 தூண்கள் கொரிந்திய ஸ்டைல் மற்றவை தாரிக் ஸ்டைல் என்று சொன்னார்கள்.
1.6 லட்சம் அடி சதுர பரப்பளவுள்ள இந்த அரங்கில் சுமார் ஒரு லட்சம் டன் நீரை சேமித்து வைக்க முடியும். தரையும், சுவர்களும் தூண்களும் வாட்டர் புரூப் செய்யப்பட்டனவாம். இவ்வளவும் 1500 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது என்பதுதான் அதிசயம்.
இந்த முழுக் கட்டடத்திற்கும் மூலைக்கல்லாக அதாவது ஹெட் ஸ்டோனாக தென்மேற்குப் பகுதியில் இரண்டு மெடுசா தலைகள் இருக்கின்றன. ஆனால் தலைகீழாக இருந்தன.
Medusa
பழைய கால புராணக்கதையின் படி அழகிய உருவமும் கவர்ச்சியான கருப்புக்கண்களும், நீண்ட முடியும் உடைய மெடுசா என்னும் பெண், ஜீயஸின் மகன் பெர்சியஸ் மேல் காதல் கொண்டாள். 
Medusa
ஆனால் பெர்சியஸ் மேல் ஏற்கனவே காதல் கொண்டிருந்த ஏத்தெனா சக்களத்திச் சண்டையில் மெடுசா மேல் பொறாமை கொண்டு அவளுடைய நீண்ட முடியை பாம்புகளாக மாற்றி விட்டாள். அப்போதிலிருந்து மெடுசா யாரைப்பார்த்தாலும் அவர்கள் கல்லாக மாறிவிட்டனர். எனவே பெர்சியஸ் மெடுசாவின் தலையை வெட்டி அதன் சக்தி மூலம் பல எதிரிகளை வென்றானாம். எனவே பைஜான்டியன் காலத்தில் கட்டடத்திற்கு பாதுகாப்பாக மெடுசா தலைகளைச் செய்து அதைப்பார்க்கும் யாரும் கல்லாக மாறிவிடக் கூடாது என்று தலைகீழாக வைத்துவிடுவார்களாம்.    
ஆட்டமன் காலத்திலும் பலமுறை இந்த சிஸ்டர்ன் பராமரிக்கப்பட்டாலும் பின்னர் இதன் தேவை சுருங்கிப்போய் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

 பைஜான்டிய காலத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வந்த பி.ஜிலியஸ்  (P.Gylius) இதனைக் கண்டுபிடித்து மறுபடியும் வெளி உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அதன்பின் துருக்கி அரசாங்கம் 1985-87ல் சுமார் 50000 டன் சேற்றை எடுத்துவிட்டு இதனை மியூசியம் ஆக்கி உள்ளே நடந்துபோக நடைமேடைகள் உருவாக்கி பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. இஸ்தான்புல்லில் இன்னும் வெறென்ன அதிசயங்கள் நமக்கு காத்திருக்கிறதோ?
 - தொடரும்.


2 comments:

  1. ஆச்சர்யம்... 1500 வருடங்களுக்கு முன்பே தரைக்கடியில் தண்ணீர் தொட்டி.. தரைக்கடியில் இருந்தா எப்புடிண்ணே மேல பம்ப் பண்ணுவாங்க..?

    ReplyDelete
    Replies
    1. தம்பி ஆனந்த் , தரைக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீரை கொண்டு சென்றனராம் .ஆனாலும் ஆச்சரியம்தான்.

      Delete