Monday, July 28, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -11 - தேசியை மிஞ்சிய பரதேசி !!!!!!!!!!

Roasting walnuts
Street vendor selling Chestnut
ரோமப்பேரரசின் பாதாள நீர்நிலையிலிருந்து வெளியே வந்தவுடன் கொஞ்சம் பசித்தது. அருகிலிருந்த இடங்களிலெல்லாம் வாதாம் கொட்டைகளை ( Chestnut) வறுத்து, தள்ளு வண்டிகளில் விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு பொட்டணம் 25 லிரா. ஒன்றை வாங்கிச் சாப்பிட்டேன். வறுத்தவை ஆனாலும் வேக வைத்தவை போல் மெதுவாக இருந்தது. போனால் போகிறது என்று இன்னொரு 25 லிராக்கள் செலவழித்து இன்னொரு பொட்டணம் வாங்கிச்சாப்பிட்டு தண்ணீர் குடித்தேன். அப்பாடா லஞ்ச் முடிஞ்சது. மெல்லிய ஏப்பத்துடன் வயிறு திருப்தியைத் தெரிவித்தது. அதனை அங்கீகரித்து தடவிக் கொடுத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
பக்கத்தில் நிறைய டிராவல் சர்வீஸ்கள் இருந்தன. மீதமுள்ள அரை நாளில் என்ன செய்யலாம் என்று விசாரித்தேன். பாஸ்ஃபரஸ் குரூஸ், அரண்மனை, பிரின்சஸ் தீவு இவற்றுள் ஏதாவது ஒன்றுக்குச் செல்லலாம், $75 அமெரிக்க டாலர்கள் ஆகும் என்றான் ஒரு தேசி (இங்குமா வந்துவிட்டார்கள் பாகிஸ்தான்காரர்கள்?).ஓ அரண்மனை ஏற்கனவே பார்த்தாயிற்று”, என்றேன். எந்த அரண்மனை என்று கேட்டதற்கு 'டொப்கப்பி' என்றேன். அது பழையது. டால்மபாஷே (Dolmabahce) புதிய அரண்மனை என்றான். அப்ப கண்டிப்பாய் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன்.
 75 டாலர் பரவாயில்லை தான். ஆனாலும் வெளியே விசாரித்துவிட்டு திரும்ப வரலாம் என்று நினைத்துவிட்டு வந்தேன்.
 ஆங்கிலம் தெரிந்த ஒருவரைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. இதற்கு பாகிஸ்தான்காரனிடம் $75 டாலர்கள் கொடுத்திருக்கலாமோ என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போது தான் ஒருவரைக் கண்டு பிடித்தேன். டால்மபாஷே அரண்மனை எப்படிப் போக வேண்டும் ?”, என்று அவரிடம் கேட்டேன்.
அவர் சொன்னார், கொஞ்சதூரம் நடந்து போனால் வரும் டிராம் வண்டியில் 5 லிரா கொடுத்தால், பேசிக்டஸ் (Basiktas) என்ற கடைசி ஸ்டாப்பில் இறங்கி சிறிது நடந்தால் அரண்மனை வரும் என்றான்.
Dram 

ஆக 75 டாலர் மிச்சம் என்று நினைத்து, நீளமான டிராம் வண்டியில் ஏறினேன்.  அரை மணிநேரத்தில் கடைசி ஸ்டாப் வந்தது. ஆஹா 'தேசியை மிஞ்சிய பரதேசி' என்று தலைப்புப் போடலாம் என்று அப்பொழுதே முடிவு செய்தேன்.
பாஸ்பரஸ் ஆற்றங்கரையில் கம்பீரமாக இருந்தது, டால்மபாஷே அரண்மனை. டொப்கப்பி போல பெரிய இடம் இல்லை. ஆனால் முற்றிலுமாக ஐரோப்பிய ஸ்டைலில் இருந்தது.
உள்ளே போவதற்கு முன்னால் அரண்மனை பற்றி ஒரு சிறு குறிப்பு.
பாஸ்ஃபரஸ் ஓரத்தில் இயற்கையாகவே அமைந்த துறைமுகத்தில் அக்காலத்தில் சுல்தானின் கப்பற்படை நிறுத்தப்பட்டிருந்தது. எனவே கப்பற்படை அணிவகுப்புகளும் முக்கிய நிகழ்வுகளும் இங்கே 17ஆம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்தன. அதற்குப்பெயர் 'டால்பாஷே' என்பதாகும். அதுவே சுல்தானும் அவர் குடும்பத்தினரும் வந்து மகிழும் "இம்பீரியல் தோட்டம்" ஆகவும் விளங்கியது.  அந்த காம்ப்பிளக்சில் இருந்த 'பேசிக்டஸ் ஷோர் பேலஸ்' என்ற அரண்மனையை இடித்துவிட்டு வேறு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. 
சுல்தான் அப்துல் மெசிது
சுல்தான் அப்துல் மெசிது (1839 - 1861)காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனைக்கு "டால்மபாசே' என்று பெயரிடப்பட்டது. 1843-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த அரண்மனை 1856-ல் கட்டி முடிக்கப்பட்டது. 1856 முதல் கீழ்க்கண்ட ஆறு சுல்தான்கள் இங்கிருந்துதான் ஆட்சி செலுத்தினர்.  
1) சுல்தான் அப்துல் மெசிது (1839 - 1856)
2) சுல்தான் அப்துல் அஜிஸ் (1861 - 1876)
3) சுல்தான் முராட் V  (1876)
4) சுல்தான் அப்துல் ஹமித் II (1876 - 1909)
5) சுல்தான் மெஹ்மது ரெசாத் (1909 1918)
6) சுல்தான் மெஹ்மது VI வாஹித்தீன் (1918 - 1922)
இவர்கள் தவிர ஆட்டமன் பேரரசின் கடைசி காலிஃப் அப்துல் மசிது எஃபன்டி (1922 - 1924) இங்குதான் தங்கியிருந்தார்.
துருக்கி நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் முஸ்தஃபா கெமால் அட்டடுர்க் 1927 முதல் 1938 வரை இங்கேயே தங்கி இங்கேயே மறைந்தார். இவரைப்பற்றி பின்னர் சொல்கிறேன். அதன் பின்னர் 1949 வரை குடியரசுத்தலைவர் மாளிகையாக இருந்த இந்த அரண்மனை 1984ல் மியூசியமாக மாற்றப்பட்டு அதிலிருந்த ஒரிஜினல் பொருட்களுடன் பொதுமக்களுக்காக  திறந்துவிடப்பட்டது.
Clock Tower

அரண்மனையின் முகப்பில் ஒரு பெரிய கிளாக் டவர் இருந்தது. அது சுல்தானின் அம்மா பெயரில் கட்டப்பட்டதாம். அதன் உள்ளே அனுமதிக்கவில்லை. 
Main Entrance


அதன்பின் ஒரு உயர்ந்த வாயில் வந்தது. அது பொதுமக்களும், தலைவர்களும் வந்து செல்வதற்காக. உள்ளே இடது புறத்தில் சுல்தானும் அவருடைய மெய்க்காவலர்களும் மட்டும் வந்து போவதற்கு தனியான அலங்கார நுழைவு வாயில் இருந்தது. அதற்கு "இம்பிரியல் கேட்" என்று பெயர்.  
Imperial gate
போகும் வழியெங்கும் அழகான புல்வெளிகளும், நீருற்றுகளும், புத்தம்புதிதாக மலர்ந்த பூக்கள் உடைய விதவிதமான செடிகளுடன் சூப்பராக இருந்தது.

நடுவில் நீரூற்றுகள் வைத்து சுற்றிச் செல்லும் பாதைகள் மாபெரும் பூங்காக்களை நினைவுபடுத்தின. அரண்மனைக்கு உள்ளே செல்வதற்கு நீண்ட வரிசை காத்திருந்தது. உள்ளே 'கைடட் டூர்' (Guided tour) மட்டுமே. நாம் தனியாக போக முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு மக்களை ஒன்றிணைத்து அதற்கு ஒரு வழிகாட்டி வருகிறார். அவரைப் பின்பற்றித்தான் உள்ளே செல்ல முடியும். அரைமணிநேரத்திற்கு ஒரு குழுவை உள்ளே விட்டார்கள்.
Front Appearance of the Palace


புளு மாஸ்க்கில், உள்ளே காலணிகளுடன் போக முடியாதென்பதால் ஒரு சிறு பாலித்தீன் பையை கொடுத்தார்கள் என்றும், எங்கள் ஷூக்களைக்கழற்றி அதில் போட்டு, கையில் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றோம் என்று சொன்னேன் அல்லவா. ஆனால் இங்கு என்ன செய்தார்கள் என்றால், காலிலே உள்ள ஷூக்கள் மேலே மாட்டிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பாலித்தின் கவர்களை கொடுத்தார்கள். செருப்பு போன்று சுருக்கம் வைத்து உருவாக்கப்பட்ட இந்த உறைகள் ஷூவின் மேல் கச்சிதமாக மாட்டிக்கொள்ள, அதோடு நடக்கும் போது எந்த சிரமமும் இல்லை. அதே நேரத்தில் உள்ளேயும் அழுக்கு ஏறாது. ஆஹா சூப்பர் ஐடியா என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன்.  ஏதோ கனவு மாளிகைக்குள் நுழைந்தாற்போல் இருந்தது.


தொடரும் >>>>>>>>>>>>>>

4 comments:

  1. வோட்டு போட்டுடேன்... உங்கள் பயணக்கதை முடிந்ததும் மெதுவா வந்து உங்கள் பதிவுகளை கலாய்க்கிறேன்.. ஆமாம் பயணப்பதிவு முடிஞ்ச்சுடுமா இல்லை கன்னித்தீவு மாதிரி இழுத்துகிட்டு போவுமா?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி மதுரைத்தமிழன்.இது இன்னும் பல வாரங்கள் ஓடும் . ஆனாலும் கன்னித்தீவை மிஞ்ச யாராலும் முடியாது .

      Delete
  2. super anna varalur ennkku pettkkum

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி Meena Narayanan.

    ReplyDelete