Monday, February 12, 2018

ரேடியோ பெட்டியும் குள்ள மனிதர்களும்

வேர்களைத்தேடி பகுதி: 5 ( ஒரு மீள் பதிவு )




இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/02/blog-post_5.html
.
       அன்னிக்கு ராத்திரி தூக்கமே வரல. ஏன்னா அடுத்த நாள் எங்கப்பா தேனிக்குப்போய் ரேடியோ வாங்கப்போறார்னு என் அம்மாட்ட சொன்னதை கேட்டுட்டேன். அப்ப எனக்கு வயசு ஏழு இல்லாட்டி எட்டு இருக்கும். நாந்தேன் எங்கப்பாட்ட கேட்டுட்டே இருந்தேன். அப்துல்லா அவிங்க வீட்டுல வாங்கிட்டோம்னு ரொம்ப பீத்திட்டு இருந்தான். எங்க வீட்ல கரண்ட் வந்தே ஆறுமாசந்தேன் ஆச்சு. வீட்டு ஓனர் வத்தலக்குண்டு ராவுத்தர் வந்து ரெண்டு நாள் தங்கி கரண்ட் கனெக்ஷன் கொடுத்துட்டு முப்பது ரூபாய் இருந்த  வாடகையை பத்து ரூபா ஏத்தினார்.
       அது வரை ஹரிக்கேன் லைட்தான். தெனம் சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், எங்கப்பா ஹரிக்கேன் விளக்கை எடுத்து துடைச்சுஅதன் கண்ணாடிக் குமிழில கொஞ்சம் கோலப்பொடியை போட்டு கிழிஞ்ச பனியனை வச்சு துடைச்சா பளிச்சுன்னு ஆயிரும். நானும் அதே மாதிரி துடைக்கனும்னு ஆசையா இருந்தாலும் எங்கப்பா கொடுக்க மாட்டாரு. கொஞ்சம் சீமத்தண்ணியை ஊத்தி திரியை ஏத்திவிட்டா முதல்ல கொஞ்சம் புகை வந்து அப்புறம் சீரா எரியும். கரண்ட் வந்த பெரவு அதுக்கு அவ்வளவா வேலையில்லை. எப்பனாச்சும் கரண்ட் போனா பரண்மேல இருந்து எடுத்துப்பொருத்துவோம். இல்லேனா எனக்கு தடுமன் பிடிச்சுருச்சுன்னாஎங்கம்மா அதை எடுத்து பொருத்திஅது மேலே துண்டை மடிச்சு வெச்சுகொஞ்சம் சூடானவுடன் தலையிலும் நெத்தியிலும் வைப்பாங்க. தடுமனுக்கு ரொம்ப இதம்மா இருக்கும்.
       பள்ளிக்கூடத்துலயும் அன்னிக்கு எனக்கு ஒண்ணும் ஓடலை. எங்கப்பா பள்ளிக்கூடம் முடிச்சுதேனி பொறப்பட்டுப் போனார். என்னையும் கூப்பிட்டுப் போகக்கூடாதான்னு நெனைச்சேன். ஆனா கேட்கத் தைரியம் இல்ல.
       அன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு ஒரு பெரிய அட்டைப் பெட்டியோடு வந்து சேர்ந்தார் என் அப்பா. நாளைக்குப் பூட்டலாம்னு சொல்லிட்டு படுத்தார். நான் மெதுவா எந்திரிச்சு அட்டைப் பெட்டியில காது ச்சுப் பார்த்தேன். ஒண்ணும் கேட்கல.
       அடுத்த நாள் எல்லாத்தையும் வெளிய எடுத்தார். பளபளன்னு நல்லா ஜோரா இருந்துச்சு. UMS னு போட்டுருந்துச்சு. பீரோ மேல  வைச்சுபோட்டவுடன் கரகரன்னு ஏதோ கேட்டுச்சு. அதுக்குள்ள பக்கத்து வீடுகளில இருந்து ஆட்கள் வந்து கூட்டம் கூடிருச்சு. "பக்கத்து வீட்டு பினாங்குக்காரரை கூப்பிடவா",ன்னு எங்கப்பாட்ட கேட்டேன். பதிலே சொல்லாம நோண்டி நோண்டி பார்த்த போது,தீடீர்னு பாட்டு வந்துரிச்சு. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபத்தின் தமிழ்ச்சேவை" என்று சொன்னதும்முதல்ல நான் கைதட்ட அப்புறம் எல்லோரும் கைதட்டினாங்க. எங்கப்பாவின் முகத்தில கொஞ்சம் சிரிப்பு வந்துச்சு. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நோண்டி 2 நாள்ளதிருச்சி வானொலி நிலையம்சென்னை வானொலி நிலையம் எல்லாம் கண்டுபிடிச்சார் அப்பா. ஆனா முக்காவாசிஇலங்கையும்திருச்சியும்தான் கேப்போம். டெல்லியிலிருந்து தமிழ் நியூசும் வரும். சரோஜ் நாராயணசாமின்னு ஒரு குரல்  பொம்பள குரலா ஆம்பள குரலானு தெரியாது.
       இதுக்கிடையில அடுத்த வாரத்தில ஒரு நாள் எனக்கு காய்ச்சல்னு பள்ளிக்கூடம் போகல. அப்பாவும் அம்மாவும் பள்ளிக்கூடம் போய்ட்டாங்க. வகுப்புல என்னைக் காணாத என் நண்பன் மகேந்திரன் என் வீட்டுக்கு வந்துட்டான். "என்னடா சேகர் என்னாச்சு?", ன்னு கேட்டு நெத்தியை தொட்டெல்லாம் பார்த்தான்.
       எனக்கு உப்புபோட்டு கல்லாமக்கா மாங்காய் ஒரு கீத்து வாங்கிட்டு வந்திருந்தான். தீடீர்னு பீரோ மேல பாத்துட்டு, "ஏலே இதான் நீங்க வாங்கின லேடியோ பொட்டியாரொம்ப நல்லாருக்கு. எலே லேடியோவைப் போடலாமா",ன்னு என்ட்ட கேட்டான். "வேணாண்டா  எங்கப்பா கொன்றுவாருன்னு", சொன்னேன். ஆனா நான் சொன்னதக் கேக்காம ஸ்டூலைப்போட்டு ஏறி, எட்டாம மேசையைப் போட்டு ஏறி திருப்பி திருப்பி நோண்ட ஏதோ இங்கிலிஸ்ல வந்துச்சு. 

 
       மேசையியிருந்து குதிச்ச அவன் சொன்னான்,
எலே சேகருஉனக்கு குட்டி மனுசன்களை பாக்க ஆசையா?
"எங்கடா இருக்காய்ங்கன்னு?
 "சேகரு நீ சொன்னா நம்பமாட்டேஎன் கண்ணால பார்த்தேண்டா,மேட்டுவளவு ஜமிந்தார் வீட்டிலேஇதவிட பெரிய பெட்டி ஒண்ணு இருக்கு. அதுல அன்னிக்கு துடைச்சு சுத்தம் பண்ண தெறக்கும்போதுநான் எட்டிப்பாத்தேன். குட்டி குட்டியாய் 4 பேர் நல்லா உடுத்தி உள்ளே உட்காந்திருந்தாய்ங்க. அவய்ங்கதான் பேசறதுபாடறது. எல்லாம்".
"எனக்கு நம்ப முடியல". போடா லூசு கரண்ட்ல வேலை செய்யுதுடா இந்த ரேடியா".
"நான் காமிச்சிட்டாஎன்னா பந்தயம்".
"சரி வாடா ஜமீந்தார் வீட்டுக்குப் போவோம்".
"எங்கடா போறதுலேடியோ இங்கயே இருக்கே. உள்ளுக்குள்ள குட்டை மனுசங்க இல்லாட்டி உனக்கு என் பொன்வண்டைக் கொடுத்திர்றேன்."
 லேசா திறந்து காண்பிச்சான்.அது தீப்பெட்டிக்குள்ள கையையும் காலையும் ஆட்டிக்கிட்டு இருந்துச்சு.
 "ஐயையோ சும்மார்ரா வம்பா", என்றேன். நீ பேசாம இருநான் காமிக்கிறேன்னு, திரும்ப மேல ஏறினான்.  
       வட்ட ஒரு பைசா காசை எடுத்து, ஸ்குரூவை நோண்டி மேலே உள்ள கூடை அப்படியே டோப்பா எடுத்திட்டான். பார்ரா,இவனுக்கு எவ்வளவு திறமைன்னு திகைச்சுப் போயிட்டேன். பயமாயிருந்தாலும் உள்ள பார்க்க ஆசையா இருந்துச்சு. உள்ள ஒண்ணுமில்லாட்டி பந்தயத்துல ஜெயிச்சு  பொன்வண்டு கிடைக்கும்லன்னு நெனச்சு ஒரு தெம்பு வந்துச்சு.
       ரேடியோ உள்ள பாத்தா கண்ணாடில குமிழ் குமிழா இருந்துச்சு. அது உள்ள என்னா இருக்குன்னு வெளியே தெரியல. அது எடுக்க முயற்சி செஞ்சப்பபடீர்ன்னு ஒடைஞ்சு போச்சு. ஐயையோன்னு நான் போட்ட கூச்சல்லஅந்த குச்சிக்காலன் குதிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். பயபுள்ள பொன் வண்டையும் கொடுக்காம போயிட்டான்.

       இன்னும் கொஞ்ச நேரத்திலபள்ளிக்கூடம் இன்டர்வல்ல எங்கம்மா வரும்காலைல நேரம் இருக்காதுன்னு இன்டர்வல்லதான் எங்கம்மா வீட்டுக்கு வந்து டிபன் சாப்புடும். அது கூட எனக்கு பயமில்லஎங்கப்பாரு மதியம் வந்தா என்ன நடக்கும்னு நெனைச்சு,எனக்கு ஜூரம் கூடிப்போச்சு. கதவை திறக்கற சத்தம் கேட்டு,அம்மான்னேன்ஆனா நுழைஞ்சது எங்கப்பா.அப்புறம்   என்ன நடந்ததுன்னு நான் சொல்லனுமா என்ன ?  
தொடரும் 

2 comments:

  1. இந்த மேட்டர் முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்பாகிட்ட போட்டுக்குடுத்திருப்பேனே. ஓ...நான் தான் அப்போ பொறக்கவேயி்ல்லயே!!!!

    ReplyDelete
  2. அய்யய்யோ, அப்ப நல்லவேளை நீ பொறக்கலை .

    ReplyDelete