Tuesday, August 4, 2015

கண்ணதாசனுக்கும் கங்கை அமரனுக்கும் நடந்த போட்டி !!!!!!!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 24
தேன்மல்லிப் பூவே
1978ல் வெளிவந்த நடிகர் திலகம் நடித்த, ‘தியாகம்’ என்ற படத்தில் இளையராஜாவின் தேனிசையில் உருவான தேன்மல்லிப்பூ இது. வாருங்கள் சற்றே தேனை உறிஞ்சி மல்லிப்பூவை முகர்வோம்.

பாடல் ஒரு டூயட், என்றும் சலிக்காத காதல்தான் மையக்கருத்து. காதலுக்கு முன்னோ பின்னோ வரும் காமத்திலும் தாபத்திலும் திளைத்து கட்டில் உறவுக்கழைக்கும் பாடல் என்று சொன்னால் கொஞ்சம் பச்சையாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. சிவாஜிக்கு MSV என்பது போய் சிவாஜிக்கு இளையராஜாவும் சிறந்த பாடல்கள் கொடுத்துள்ளார் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு உதாரணம்.  ஆனால் மெட்டமைப்பிலும் சரி இசைக்கோர்வையிலும் சரி MSV -யின் சாயல் சற்று தூக்கலாக தெரிவதாக நினைக்கிறேன். அதே பாரம்பரியத்தில் வந்தர்தானே அதில் ஒன்றும் தவறில்லை. இருவருக்கும் அது பெருமைதான். MSV -யை தன் ஆசான் என்று சமீபத்தில் MSV -யின் இறுதி அஞ்சலி சமயத்தில் கூட சொன்னார். அதோடு சிவாஜி பாடல் TMS பாடுவது அப்படி  இருக்க வேண்டும் என்றும் இயக்குநர் கேட்டிருக்கலாம்.ஆனால் பாடல் மிகச்சிறந்த பாடல் என்பதில் வேற்றுக் கருத்து இருக்க முடியாது.  
இசையமைப்பு:

சிவாஜிபடம் என்பதால் பட்ஜெட் அதிகமாக இருக்க வேண்டும். ஏராளமான வயலின்கள் பின்னனியில் இசைக்கின்றன. அதோடு டெனர் (உச்சஸ்தாயி) மற்றும் பேஸ் என்று இருவிதமாகவும் ஒலிக்கின்றன. ஆர்கன் இசையில் ஆரம்பித்து, வயலின்கள் சேர்ந்து புல்லாங்குழலை அழைத்து, பின்னர் வயலின்கள் சரசரத்து முடிக்க, கம்பீரமான சிவாஜியின், மன்னிக்க 'TMS-ன் குரல்' "தேன் மல்லிப்பூவே"  ஆரம்பிக்கிறது. பல்லவியில் ரிதமுக்கு டிரம்ஸூம் தபேலாவும் இணைந்து ஒரு கலவையான இசையை வெளிப்படுத்துகின்றன. பெண் குரலும் பதில் கொடுத்து முடிந்தபின் எங்கிருந்தோ வந்து வீணை சேர்ந்து கொள்ள, வயலின்கள் மறுபடியும் இணைய இன்ட்டர்லூட் முடிந்தபின் சரணம் ஆரம்பிக்கிறது. 2-ஆவது இன்ட்டர்லூடில் வீணையும் வயலின்களும் சரசமாக உரசி உரசி உரையாட புல்லாங்குழல் வந்து அதனை தடுத்தாட்கொள்ள 2ஆவது சரணம் ஆரம்பித்து முடிகிறது. நீண்ட நாள் நின்று ஒலிக்கும் இசையமைப்பு பாடலுக்கு மிகுந்த சிறப்பு.

பாடலின் வரிகள்:
தேன்மல்லிப் பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணில் என் ராணி
நீயின்றி நான் இல்லையே
தேன்மல்லிப் பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணா என் மன்னா
நீயின்றி நான் இல்லையே

முத்தாரம் மார்மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு
தேருண்டு நீயுண்டு திருநாளுண்டு
திருமகள் நெஞ்சில் துயில் கொள்ள வா
உலகமெல்லாம் ஒரு நிலவு
இதயமெல்லாம் ஒரு நினைவு
என் வாழ்வின் ஆனந்தம் நீயே...... தேன்மல்லிப்பூவே....

செவ்வாழைப் பொன்மேனி துடிக்கின்றது
சிறு தொட்டில் தந்து உறங்கவிடு
தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது
சிறுமுத்தம் தந்து மயங்கவிடு
மலர்களிலே அணை விரிப்போம்
மன்மதனை துணைக்கழைப்போம்
இரவேது பகலேது கண்ணே.... தேன்மல்லிப்பூவே....
Add caption
’செந்தூரப்பூவே’ வந்தபின், பூவரசம்பூ பூத்தாச்சு, கொத்தமல்லிப் பூவே , போன்ற பல பூ பாடல்களை  கங்கை அமரன் எழுதினார். அப்போது ‘தியாகம்’ படத்தில் கண்ணதாசன் பாடல் எழுத வந்த போது  கங்கை அமரனைப் பார்த்து, ‘செருப்பு, சாயபு தவிர எல்லாப் பூவையும் இவனே எழுதிட்டான்’ என்றாராம். அதன்பிறகு கண்ணதாசன் எழுதிய பாட்டுதான், ‘தேன்மல்லிப் பூவே’
தத்துவப்பாடல்கள் என்றாலும் சரி காதல் சத்துவப்பாடல்கள் என்றாலும் சரி கண்ணதாசனுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். மல்லிப்பூவில் தேன் சேர்க்கும் கற்பனை யாருக்காவது வருமா. முதல் சரணத்தில் நாயகன் சொல்கிறான், "உன் மார்மீது முத்தாரம் தவழ்கின்றது எனக்கும் அதில் கொஞ்சம் இடம் கொடு" என்று. அதற்கு நாயகி, "தேரும் உண்டு, திருநாளும் உண்டு, அதிலே நீயும் இருக்கிறாய், மார்பில் அல்ல நெஞ்சில் துயில் கொள்ள வா", என்கிறாள். அதற்கு நாயகன், “உலகமெல்லாம் இருப்பது ஒரு நிலவுதான் உனக்கு இணை நீயே”, என்ற அர்த்தத்தில் சொல்ல, நாயகி, “இதயமெல்லாம் ஒரே நினைவாக நீ இருக்கிறாய், என் வாழ்வின் ஆனந்தம் நீயே”,, என்று சொல்கிறாள்.
-2 ஆவது சரணத்தில் நாயகன் நாயகி காமத் துடிப்பை வெளிப்படுத்தும் வரிகளாக கவிஞர் அமைத்துள்ளார். மன்மதனை துணைக்கழைக்கும் செவ்வாழைப் பொன்மேனி, தித்திக்கும் செவ்வாய், சிறுமுத்தம், மலரணை என்று போய் இரவு பகல் வித்தியாசம் போய்விடும் என்று உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறார், கவிஞர்.
பாடலின் குரல்கள்:
TMS
சிவாஜிக்கு அப்படியே பொருந்தும் TMS -ன் குரல் பாடலுக்கு அணி சேர்க்கிறது என்று நினைத்தால், ஜானகியின் குரல் தேனாக இனிக்கிறது. குறிப்பாக இந்தப் பாடலில் கொஞ்சம் இனிமை அதிகமாகவே தெரிகிறது. TMS -ன் வெடித்த குரலுக்கு ஜானகியின் துடித்தகுரல் அழகு சேர்க்கிறது. கண்ணை மூடிக் கேட்டாலும் TMS -ன் குரல் மறைந்து சிவாஜி பாடுவது போல்தான் கேட்பது TMS -ன் திறமையோ அல்லது சிவாஜியின் திறமையா என்று தெரியவில்லை.

மொத்தத்தில் சிறப்பாக இசையமைக்கப்பட்டு இளையராஜா பெயர் சொல்லும் காதுக்கினிய பாடல் இது என்பதை கேட்டு ரசிக்கும் எல்லோரும் ஒத்துக்கொள்வர்.
தொடரும்



8 comments:

  1. இனிமையான பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கிறேன். நன்றி.....

    த.ம. +1

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  3. Not so sensual as you say. It is sensual but decent - from today as well as common view point. If you are a priest or something, it may sound deeper than what it does to persons like me. The song is sweet - but it's not my favorite. It is one of the many TMS-Sivaji songs that hit the screens during 70s.

    ReplyDelete
    Replies
    1. I agree with you that it is sensual and decent.Only decent songs can be called sensual otherwise its something else.
      But my approach to the songs are not related to the lyrics but to the tune, musicality and the orchestration.. Also I approach the songs not as a priest but as a Isai Rasigan. Thanks for your comments.

      Delete
  4. மிகவும் அருமையாக அலசி ஆராய்ந்து எழுதிய கனமான பதிவு. ஒரு திரைப்பாடலுக்குள் கவிஞர், இசையமைப்பாளர், பாடகர், கருவி இசைப்போர் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. அனைவரின் பங்களிப்பையும் நியாயமாக எடுத்துரைத்தீர்கள். உறங்கும் முன் படித்த அருமையான பதிவும் பாடலும் இது. வாழ்த்துக்கள். -இராய செல்லப்பா. (2) நியூ யார்க் வரும்போது சந்திக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு. செல்லப்பா. நியூயார்க் வரும்போது தொடர்பு கொள்ளுங்கள் அவசியம் சந்திப்போம் .

      Delete
  5. அருமையான பாட்டு அதிகம் இலங்கை வானொலியில் ஒலித்ததும் மறக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி தனிமரம்.

      Delete