Thursday, September 4, 2014

சாரு நிவேதிதாவின் "காமலீலா" !!!!!!!!!!!!


பரதேசியுடன் ஒரு நேர்காணல்

அதென்ன சாருவின் காமலீலா?
"சாரு எழுதிய "ராஸலீலா" வைத்தான் காமலீலா என்று மொழி பெயர்த்திருக்கிறேன்."
அப்படியென்றால் "ராஸலீலா" என்றால் என்ன?
"பொதுவாக  கண்ணனின் லீலைகளை ராஸலீலா என்று சொல்வார்கள்"
ராஸலீலாவும் காமலீலாவும் ஒன்றா?"
 "ஆமாம் ரெண்டும் ஒன்றுதான்".
ராஸலீலா என்றால் காதல் லீலைகள் இல்லையா?
"காதலின் அதீத நிலைதான் காமம். காதல் இல்லாத காமம்தான் விரசம். ஆனால் காமம் இல்லாத காதல் என்று ஒன்று இல்லை".
"ராஸலீலா" பல சம்பவங்கள் சேர்ந்த கட்டுரை என்று சொல்லலாமா?
"பல சம்பவங்கள் சேர்ந்த நாவல் என்று சொல்லலாம்"
ராஸலீலா முற்றிலும் ஒரு கதையா?
இல்லை பல கதைகள் சேர்ந்த ஒரு புத்தகம்,
கதைகளா? உண்மைச் சம்பவங்களா?
உண்மைச் சம்பவங்கள் நிறைந்த கதைகள்
உண்மைச் சம்பவங்களா? கற்பனையா?
கற்பனை கலந்த உண்மைச் சம்பவங்களாகத்தான் தெரிகிறது .
அப்படியென்றால் ராஸலீலா ஒரு நாவல் என்று எப்படிச் சொல்லமுடியும்”
"நாவல் என்றால் புதினம் என்றுதானே அர்த்தம்"
கண்ணாயிரம் பெருமாள் என்னும் கதாபாத்திரம் தான் சாருவா?

Charu Nivedita
“அது சாருவைப்போல மனநிலையுள்ள யாரையும் குறிக்கும். சாருவாகவும் இருக்கலாம்”.
அலெக்ஸ் என்ற கதாபாத்திரம் கவிஞர் மனுஷ்யபுத்திரன் என்று சொல்கிறார்களே?
“ஆம் அப்படித்தான் சொல்கிறார்கள்”
மணி என்பது யார்?
“தினமலர் அந்து மணிதான் மணி”.
அதுசரி அந்துமணி யார்?
“தெரியும் ஆனால் தெரியாது”.
மீரா என்பது சாருவின் மனைவிதானே.
ஆம்.
அப்ப கார்த்திக்?  
மீராவின் மகன்.
அப்பா சாருவின் மகன் இல்லையா?
மீராவின் முதல் திருமணம் மூலம் பிறந்தவர்.
"ராஸலீலா" வெறும் கிசுகிசுக்களின் தொகுப்பு என்கிறார்களே?
 சாருவைப் பிடிக்காதவர்கள் சொல்லும் வெற்றுக் கூச்சல் அது. ஆனால் இதில் கிசுகிசுக்களும் உண்டு.
ராஸலீலாவில் உங்களுக்குப் பிடித்த அம்சம் என்ன?
கால, நேர, இடங்களை மீறிய, எல்லாக்கட்டுப்பாடுகளையும் தகர்த்த ஒரு ரங்கராட்டின  (Roller Coaster) வாசிப்பு அனுபவம். ஆங்காங்கே தெறிக்கும் சிரிப்பை வரவழைக்கும். நகைச்சுவை உணர்ச்சி.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?
எமினெம்மின் முன்னுரையில் ஆரம்பித்து, மேல்தட்டு மக்களின் டிஸ்கொதே கலாச்சாரம், அவருடைய டெல்லி கால அனுபவம், வேலூர் சென்னையில் தபால் தந்தி அலுவலகத்தில் சேவகம் செய்தது, திடீரென்று பாரிஸ் அனுபவங்கள், பின்னர் தாய்லந்தில் சிவப்பு விளக்கு, நாகூர், உலக  சினிமா, உலக  இலக்கியம், உலக  உணவு, காதல்கள், காதலிகள். நடித்து ஏமாற்றுபவர்கள், நல்லவர்களின் தொல்லை, மனதின் காம நினைவுகள், அம்மாடியோ ஒரு புத்தகத்தில் இவ்வளவு விஷயங்களா? மொத்தத்தில் அவர் சொல்வது போல் இது ஒரு பித்தனின் பித்த நிலை( Schizophrenic  state) .
ராஸலீலாவில் வாசகரும் ஒரு கதாபாத்திரம் என்கிறார்களே ?.
ஆமாம் அப்படித்தான். நானும் அங்கே இருக்கிறேன்.
நீங்களா? எப்படி?
குழப்பமான மனநிலையின் வெளிப்படைத்தன்மையில், கதாபாத்திரங்கள் அமையும்போது வாசகன் எவனும் அதில் தன்னைக் காணத்தவறினால், அவன் புத்தகத்தை ஆழ்ந்து படிக்கவில்லை என்று அர்த்தம்.
ராஸலீலாவில் உங்களைக் கவர்ந்த மற்ற இடங்கள்?
ஆங்காங்கே பட்டினத்தார் பாடல்கள், அதர்வ வேதம் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம், திருகூட ராசப்பக் கவிஞரின் குற்றாலக் குறவஞ்சி வருவது, ஏன் பைபிள் கூட வருகிறது.
சாருவை ஒரு திறந்த புத்தகம் என்று சொல்கிறார்களே?
அவர் ஒரு மூடாப்புத்தகம் என்று சொல்வேன். ஏனென்றால் எப்பொழுதாவது மூடியிருந்தால் தானே திறப்பதற்கு?
சாரு ஒரு ஆணா? இல்லை பெண்ணா?.
சாரு முதலில் பெண்மை கலந்த ஆண் என்பேன். ஆனால் ஆண்மை கலந்த பெண்ணாகவும் சில இடங்களில் வெளிப்படுகிறார். இரண்டு அல்லது மூன்று தன்மைகளையும் உணர்ந்து அறிபவர்கள்தானே எழுத்தாளராய் ஆக முடியும்.
ராஸலீலா என்ன மாதிரி ஒரு படைப்பு?
ஒரு பின் நவீனத்துவ (Post Modern) ஆட்டோ ஃபிக் ஷன் (Autofication) என்று சொல்லலாம்.
சாருவுக்கு சமூகம் சார்ந்த அக்கறை இல்லையென சொல்கிறார்களே?
அப்படி ஒரு போலியான முகமூடியை அவர் எப்போதும் அணிய விரும்புவதில்லை.
ராஸலீலா ஒரு போர்னோ நாவல் என்று  தள்ளுகிறார்களே?
நம் மனதில் சூப்பர் ஈகோ கட்டுப்படுத்துகிற இட் (Id) என்பதும் கிட்டத்தட்ட போர்னோ நினைவுகளைத்தானே. அதனை அப்படியே சொல்லவும், எழுதவும் யாருக்குத் துணிவு வரும்.
சாரு எழுதியதில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் எவை?
ஜீரோ டிகிரி, கோணல் பக்கங்கள், எக்சைல்
சாருவை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியுமா?
அவர் எழுத்து மூலம் வந்த நெருக்கம்தான். ஓரிரு முறை chat செய்திருக்கிறோம். பலமுறை ஈமெயில் எக்ஸ்சேஞ் செய்திருக்கிறோம்.
சாரு உங்களை பணமோ உதவியோ கேட்டு தொந்தரவு செய்திருக்கிறாரா?
ஒருபோதும் இல்லை. அப்படிப்பட்ட தவறான அபிப்ராயம் பலருக்கு இருக்கிறது. ஒரு சமயம் சில புத்தகங்களை வாங்கி அனுப்பியிருக்கிறேன் அதனையெல்லாம் உதவி என்று சொல்லவே முடியாது.
சாரு ,நியூயார்க்கில் உங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்ததாமே? ஏன் வரவில்லை.
சில பல காரணங்களால் அவர் கோடை காலத்தில் வரவேண்டியது வரமுடியாமல் போய்விட்டது. ஆனால் அவர் விரைவில் வருவார்.
கடைசியாக என்ன சொல்ல விழைகிறீர்கள்?
கொண்டாட வேண்டிய அடுத்த தலைமுறை எழுத்தாளரை திண்டாட வைத்துவிட்டதே இந்தத் தமிழ் கூறும் நல் (?) உலகம்.
மகேந்திரன்:- 'பரதேசியின் நேர்காணல்' என்று உன்னிடம் பேட்டி எடுத்திருகிறார்கள். ஆனால் பேட்டி எடுத்தது யார்? என்று சொல்லவில்லையே.

பரதேசி:- கேள்வியும் நானே, பதிலும் நானே.

******************************************

5 comments:

  1. கேள்வியும் பதிலும் அட்டகாசம் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைதமிழன் அவர்களே
      எல்லாம் உங்களிடம் கற்றுக்கொண்டதுதான்

      Delete
  2. கேள்வியின் நாயகனே என்று அழைக்கலாமென நினைத்தால், பதில்களிலும் நாயகனாக இருப்பது நீங்கள் தானே! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. படித்தவுடன் தோன்றியதை கேள்வி பதில் போல எழுதினேன் .நாயகன் என்பதெல்லாம்
      பெரிய வார்த்தை .நன்றிகள் வெங்கட் நாகராஜ்.

      Delete
  3. அருமையான கேள்விகளும் பதில்களும்! ரசித்தோம்!

    ReplyDelete