Monday, September 22, 2014

இளையராஜாவின் பறை இசை !!!!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாட்டு-1 மச்சானைப் பாத்தீங்களா



இளையராஜா என்றதும் 80-களில் அவர் இசையமைத்த அற்புதமான பாடல்கள் நினைவுக்குவரும். ஆனால் அவர் ஆரம்பக் கட்டத்தில் எழுபதுகளில் இசையமைத்த சில பாடல்கள் இதுவும் இளையராஜாவின் பாடல்கள்தானா என்று ஆச்சரியப்படுத்தும். அத்தகைய பாடல்களை மீண்டும் நினைவுபடுத்தும் முயற்சியே இது.
"அன்னக்கிளி" இளையராஜா இசையமைத்த முதல் படமென்பதும் அதன் பாடல்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும்என்றாலும் ஆரம்பத்திலிருந்து வரலாம் என்பதால் இந்தப் படத்தில் ஒரு பாடலை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 1976ல் வெளிவந்து பட்டி தொட்டிகளை கலக்கிய "மச்சானைப் பாத்தீங்களா" என்ற பாடல் திரையிசையை முற்றிலுமாக மாற்றி ஒரு புதிய அத்தியாயத்தைத் துவங்கிய பாடல் அல்லவா?பாட்டை ஒரு தடவை கேட்டு விடுவோம்.

கே.வி.மகாதேவனுக்குப்பிறகு, ஜி.கே.வெங்கடேஷ், குமார், வேதாஆகிய பல சமகால இசையமைப்பாளர்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ராஜாவாக  கோலோச்சி வந்த சமயம். அதன்பின் வந்த ஒரு சிலரும் அந்த பசுமை மலையின் ஒரு மரமாகவோ இல்லை கிளையாகவோ மட்டுமே பரிணமிக்க முடிந்தது.
 ஆனால் இதே பட்டறையில் பயின்றாலும், கிராமிய சூழ்நிலையில் வளர்ந்ததால் ஒரு நல்ல கறைபடாத தனித்திறமையுடன், தெளிந்த நீரோடையாய் கிளம்பி, காட்டாறாய் கரைபுரண்டு வந்த இசை வெள்ளமாய் வந்தவர் இன்னொரு ராஜா. அவர்தான் இளையராஜா.
திரைப்பட ரசிகர்களை கிராமத்திற்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா என்றால் கிராமத்தின் தெம்மாங்கை நகரத்திற்கு எடுத்து வந்தவர் இளையராஜா. அந்த தனித்துவம் தான் 1000 படங்களுக்கு  இசையமைத்து உலக சாதனை புரிய வைத்தது.
கீழே உள்ள லின்க்கில் பாடலை ஒரு தடவை கேட்போம்.
"லாலி லாலிலலோ", என்று ஆரம்பிக்கும் பாடல், "ஏ மச்சானை ஏ மச்சானை" என்று தலைவி தலைவனைத் தேடும் ஏக்கமும் தாபமும் வழிந்தோட துவங்குகிறது. தலைவியின் கூவும் குரலின் இடையில் குயில் கூவுவதை உருவகப்படுத்தும் புல்லாங்குழலும் கூவுகிறது. அதன் பின்னர் சடுதியாக கிடார் ஸ்ட்ரம்மிங் துள்ளி வர "மச்சானை பாத்தீங்களா?" என்ற அழுத்தமான கேள்வியுடன் பாடலின் பல்லவி ஆரம்பிக்க இசையின் ஆரோகண அவரோகனங்கள் அலை அலையாய் உதிக்கிறது.    
ஒரு சிறிய புல்லாங்குழல் ஆலாபனையுடன் முதல் BGM வர "வெள்ளிச்சரம் புன்னகையில்" என்று சரணம் ஆரம்பிக்க பல இசைக் கருவிகள் இணைகின்றன. குறிப்பாக தபேலோ ஒரு உருட்டலுடன் வேக நடையில் இணைய, கேட்பவரை தாளம் போட வைக்கிறது.
சரணத்தின் பின்பகுதி, "ஊர்கோல மேகங்களே" என்று பல்லவியின் அதே ராகத்தில் வர, எதிர்பாராத திருப்பமாக உருமியும் தவிலும் பட்டையைக்கிளப்ப துள்ளியெழுகிறது பாடல். சரணத்தின் ஆரம்பத்தில் தாளம் போடவைத்த பாடல், சரணத்தின் பின்பகுதியில் கொஞ்சம் அசந்தால் எழுந்து ஆடத்தூண்டுகிறது.
இரண்டாவது BGM-ல் ஆச்சரியமாக மோர்சிங்கும் சாரங்கியும் காதை வருட இரண்டாவது சரணம் "பச்சைப்புள்ளை போல்" என்று ஆரம்பிக்கிறது. அட தபேலோவின் நடை குதிரையின் மெதுநடையாய் வர, ராகமோ முதல் சரணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒலிக்கிறது. பின்னர் மறுபாதியில் "கஸ்தூரிக் கலைமான்களே"வில் திரும்பவும் உறுமியும் தவிலும் சேர்ந்துகொள்ள மீண்டும் துடிப்பும் கொண்டாட்டமும் திரும்புகிறது. 2ஆவது சரணத்தில் வேறு ட்யூன்/ ராகம் இருப்பது MSV சில பாடல்களில் பயன்படுத்தியிருந்தாலும், இது முற்றிலும் வேறு விதமாக இனிமையாக ஒலிக்கின்றது.
2-ஆவது சரணத்தோடு பல பாடல்கள் முடியுமென்பதால், ஐயோ பாட்டு முடியப்போகிறதோ என்ற ஏக்கத்தில் நம்மையும் நனைக்கும்போது மூன்றாவது BGM-ஆக ஷெனாய்/கிளாரினெட் எழுகிறது. இந்த ஷெனாய் இளையராஜாவின் பல்லாயிரம் பாடல்களின் டிரேட் மார்க்காக அமைகிறது. குறிப்பாக ரெண்டாவது BGM -ம்மாக வரும்.
பின்னர் இரண்டாவது சரணத்தின் அதே ராகத்தில், நடையில் மூன்றாவது சரணம் வருகிறது "கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை".
தலைவி, தலைவனைக் காணாத ஏக்கத்தில் பாடுவதோடு, ஆனால் விரைவில் அவனைப் பார்க்கப் போகிறோம், திருமணம் நடக்கவிருக்கிறது என்ற கனவுக் கொண்டாட்டத்தையும் இணைத்து நம்மை ஜிவ்வென்று உயர்த்துகிறது பாடல்.
இசைக்கருவிகள்:
எதிர்பாராத இடங்களில் எதிர்பாரா இசைக்கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. குறிப்பாக சாவு இசை என்று ஒதுக்கப்பட்ட பறை இசையும் உறுமியும் திரையிசைக்கு அந்தக் கால கட்டத்தில் முற்றிலும் புதிது. விமர்சனங்களும் இதனை நோக்கியே வந்தன. ஆனால் இவையிரண்டும் நம் தமிழகத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள் அல்லவா? காட்டாற்று வெள்ளத்துக்கு யாராவது அணைபோட முடியுமா என்ன? எந்த இடத்திலும் தொய்வில்லாமல் "டைட்" என்று சொல்வார்கள், அப்படிப்பட்ட இசைக்கோர்ப்பு இந்தப் பாடலின் இசை.

பாடல்வரிகள்:
Panchu Arunachalam
மச்சான பாத்தீங்களா
                         விருத்தம்
 லாலிலாலி லாலோ லாலிலாலி லாலி லாலி
என் மச்சான மச்சான
                         பல்லவி
 மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு
வந்தார காணலியே அவர் வந்தார காணலியே
                       சரணம் - 1
 வெள்ளி சரம் புன்னகையில் அல்லி வச்சேன் காணலியே
நான் அல்லி வச்சேன் காணலியே
ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் காட்டில் தனியாக
அவரை பார்த்தாதான் சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
                        சரணம் - 2
 பச்ச புள்ள போல் அவர்பாத்து நிக்க
இச்ச கொடியாட்டம் நான் பாத்து சொக்க
பச்ச புள்ள போல் அவர்பாத்து நிக்க
இச்ச கொடியாட்டம் நான் பாத்து சொக்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன நெஞ்சோடு அல்ல
கஸ்தூரி கலை மான்களே
அவர கண்டாக்க சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும் தோட்டதில் அவர பாத்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே

                       சரணம் - 3
 கல்யாணம் பேசி கண்டாங்கி சேல
தந்தாக்க என்ன மாட்டேன்னு சொல்வேன்
கல்யாணம் பேசி கண்டாங்கி சேல
தந்தாக்க என்ன மாட்டேன்னு சொல்வேன்
புது மஞ்சள் பூசி பொன் மேடை இட்டு
மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக
மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக
தல வாழ எல போடுங்க ஊர
விருந்துக்கு வர சொல்லுங்க
தல வாழ எல போடுங்க ஊர
விருந்துக்கு வர சொல்லுங்க
பூ போட்டு மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம்
மனசாற வாழ்த்துங்களேன் எங்க
குலம் வாழ வாழ்த்துங்களேன்
மனசாற வாழ்த்துங்களேன் எங்க
குலம் வாழ வாழ்த்துங்களேன் 


இந்தப்பாடலின் முதல் வரி "மச்சானைப் பாத்தீங்களா மதியான நேரத்தில" என்ற கிராமியப் பாடலின் முதல்வரியாய் இருந்தாலும் முழுப் பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம் அவர்கள். 'நாழி' என்ற ஒரு வார்த்தையைத்தவிர கிராமத்து மெட்டுக்கு ஏற்ற நல்ல வரிகளை எளிமையான உருவகங்களோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக "பச்சைப்புள்ளை போல் அவர் பாத்து நிற்க, இச்சைக் கிளியாட்டம் நான் பார்த்து சொக்க" என்ற வரிகள். வெள்ளிச் சரம், கண்டாங்கிச் சேலை, புது மஞ்சள் பூசி, தலைவாழை இலை போன்ற கிராமிய எளிய வார்த்தைகள் இயல்பாக வருவது பாட்டுக்கு மண்மணமூட்டுகின்றன. இப்படத்தை தயாரித்தவரும் இவரே. இளையராஜாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே.  இவர் கண்ணதாசனின் உதவியாளராய் இருந்தவர் எனபது உங்களில் சில பேருக்கு தெரிந்திருக்கலாம் .
குரல்:
S Janaki
 “சிங்காரவேலனே தேவா”, என்ற பாடல்மூலம் மெகா என்ட்ரி கொடுத்து பல குறிப்பிட்ட பாடல்களை பாடியிருந்தாலும் நீண்ட நெடிய இடைவேளைக்குப் பின் S.ஜானகி அவர்களுக்கு சிறப்பான மறு இன்னிங்ஸ் கொடுத்தது இந்தப்பாடல்தான். அது மட்டுமல்லாமல் புகழின் உச்சிக்கு செல்லவும், விருதுகள் பல பெறவும் 25 வருடங்களுக்கு அசையா முதல் இடம் பெற்றதும் இந்தப் பாடல் மூலம்தான்.
கள்ளங்கபடமில்லாத கன்னிப் பெண்ணின் ஒரு இன்னசன்ட் குரல். அழுத்தமான தெளிவான உச்சரிப்பு. ஏக்கம், தாபம் கனவு கொஞ்சல் , கெஞ்சல் மற்றும் கொண்டாட்டத்தை மாற்றி மாற்றி வெளிப்படுத்தும் லாவகம். வரிகளுக்கு உயிர் சேர்த்து இசைக்கு இனிமை சேர்க்கும்  பாவம். மனதை வருடும் தேவதைக்குரல். சந்தத்தோடு சந்தம் சேர்க்கும் பொடிச் சங்கதிகளின் சங்கமம்.  ஜானகிக்கு இணை ஜானகிதான்.
இசை, வரிகள், குரல், சூழல் என ஒன்றோடு ஒன்று பிண்ணிப்பிணைந்த எந்த பாசாங்குமில்லாத இந்தப்பாடல் இன்றும் பாட்டுப்போட்டிகளில் தென்னகமெங்கும் பாடப்படும் ஒரு பாடல். 

இளையராஜா என்னும் புது இசையை வெளிப்படுத்திய இந்தப்பாடல்தான் சாதாரண கருப்பு வெள்ளைப்படமான "அன்னக்கிளியை" 196 நாள் ஓடவைத்து சாதனை படைத்தது.\

இப்ப பாட்டைத்திரும்ப ஒரு தடவை கேட்டுப்பாருங்களேன்.

அடுத்த வாரம் - "கண்ணன் ஒரு கைக்குழந்தை".


5 comments:

  1. அருமையான பதிவு. இளையராஜாவின் பரமவிசிறிகளான எங்களுக்கு அறுசுவை தான். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி விசு.

      Delete
  2. ஆல்பிரெட் சார்

    தங்களின் பதிவும் இளையராஜா இசை போல மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்லஸ் .

      Delete
  3. இதில் பறையிசை எங்கு வருகிறது என்பதை தெளிவாக்கவும்..

    ReplyDelete