Monday, July 29, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 1 :பணக்காரர் வீட்டில் பரதேசி !!!!!!!!!!



ஒரு மிகப்பெரிய தொழிலதிபரும் அவர் மகனும் ஒரு வியாபார கருத்தரங்கத்திற்கு, வந்திருக்கும்போது, அப்பா ஒரு சிறிய ஹோட்டலிலும், மகன் இருப்பதிலேயே பெரிய ஹோட்டலில் இருந்த லக்சரி சூட்டிலும் தங்கியிருந்தாராம். பத்திரிக்கைக்காரர்கள் அப்பாவிடம் இதனைப்பற்றி வினவிய போது, " என்னுடைய அப்பா அவ்வளவு வசதியானவர் இல்லை. ஆனால் அவனுடைய அப்பா பணக்காரர் அல்லவா?" என்று சொன்னாராம்.
அவர்தான்,இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழிலதிபரும், கொடைவள்ளலும் உலகின் முதல் பணக்காரருமான ஜான் டி ராக்கஃபெல்லர். ராக்கஃபெல்லர் நிறுவனம் இன்றும் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். சப்வேயில் செல்லும் போது வரும் 47-50 தெரு ஸ்டாப்பின் பெயர் ராக்கஃபெல்லர் சென்ட்டர். இறங்கிப்பார்த்தால், விண்ணைத்தொடும் அந்தக்கட்டிடம் ஒன்று போதுமே அவர்கள் குழுமம் எவ்வளவு பெரியதென்று அறிய.

அவர் எவ்வாறு வாழ்ந்திருப்பார் என்று 
அறிந்து கொள்ள எனக்கு ஒரு ஆசை பிறந்தது. கூகுளில் தேடியபோது, upstate ல் உள்ள ஹட்சன் வேலியில் அவரது வீடு, இன்று ஒரு பிரைவேட் மியூசியம் ஆக, 'ஓபன் டு  பப்ளிக்' என்று அறிந்ததும் என் மனம் துள்ளிக்குதித்தது.
'மெமோரியல் டே' விடுமுறையும் வர (May 27,2013) எங்கேயாவது போகவேண்டுமென ஆசைப்பட்ட முழுக்குடும்பத்தையும் கன்வின்ஸ் செய்து, இரண்டு காரில் கிளம்பினோம். அதிகத்தூரமில்லை, காலையில் 9 மணிக்கு கிளம்பி பத்து மணிக்கெல்லாம் 'ஹட்சன் வேலி' டூரிஸ்ட் இன்ஃபர்மேஷன் சென்டருக்கு சென்றுவிட்டோம். எங்கள் வீட்டிலிருந்து, "வேன்விக் எக்ஸ்பிரஸ் வே" எடுத்து "ஒயிட்ஸ்டோன் பிரிட்ஜை" தாண்டி ஹட்ச்சின்சன் பார்க்வே எடுத்தால், அழகான ஹட்சன் வேலி வருகிறது. அதில் உள்ள "ஸ்லீப்பி ஹாலோ" என்ற கிராமத்திற்கு ஒரு ஹலோ சொல்லி, ஒரு ஆழமான இறக்கத்தில் இறங்கித்திரும்ப, "இன்ஃபர்மேஷன் சென்டர்" வந்தது. ஆன்லைனில் 10.45 டூருக்கு புக் செய்திருந்ததை உறுதி செய்துகொண்டு ரிலாக்ஸ் ஆனோம்.
அந்த சென்டருக்கு அருகில் வாத்துகளும்,நீர்க்கோழிகளும் நீந்தியும் மேய்ந்தும் ஆட்சி செலுத்திய ஒரு அழகிய குளம் இருந்தது. அதன் மேட்டுக்கரையில் பல பிக்னிக் மேஜைகள் இருந்தன. "உட்கார்ந்து சாப்பிடுவதற்கு சரியான "இடம்" என்றாள் என் மனைவி. அவள் கவலை அவளுக்கு.

தமிழ்ப்பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொருட்டு, அவள் அதிகாலையில் எழுந்து கணவரின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு- (ச்ச்சும்மா ஒரு கற்பனை) தக்காளி சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு மசியல் மற்றும் பீஃப் சுக்கா வருவல் ஆகியவற்றைச் செய்து ஹாட் பேக்கில் அடைத்துக் கொண்டு வந்திருந்தாள்.நல்லவேளை இதையெல்லாம் பார்த்து வருத்தப்பட ராக்கஃபெல்லர் உயிரோடு இல்லை,.

அந்த "இன்பர்மேஷன் சென்டர்" தான் பக்கத்திலுள்ள பல சுற்றுலாத்தலங்களுக்கு டிக்கட் வாங்கும் ஒரே மையம். பிலிப்ஸ்பர்க் மேனர், டச் சர்ச், மாண்ட்கோமரி, யூனியன் சர்ச், லிண்ட் ஹர்ஸ்ட்  என்று பல சுற்றுலா இடங்கள் அங்கு இருந்தன. மூன்று நான்கு நாட்கள் தங்கினால், எல்லாவற்றையும் கவர் செய்யலாம். ஆனால் நாங்கள்தான் சுற்றுலா வரவில்லையே, இது வெறும் சிற்றுலாதானே.
ராக்கஃபெல்லர்  எஸ்டேட் டூருக்கு பெயர் "கைகட்" (Kyekuit). இது முற்றிலும் ஒரு கைடட் டூர். எஸ்டேட்டுக்கு வேறு தனியார் வாகனங்கள் வர அனுமதியில்லையாததால், இந்த சென்டரிலிருந்து எங்களை அழைத்துப்போக ஒரு மினிபஸ் வந்தது. அதோடு ஒரு கைடும் இருந்தார். நாங்கள் புக் பண்ணியது "கிளாஸிக் டூர்". இதுபோல ராக்கஃபெல்லர் எஸ்டேட்டுக்கு பலவித டூர்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புக் செய்யப்பட்ட பல சிறு குழுக்களை சரியான நேரத்தில் அழைத்துச் சென்று, நேர்த்தியாக நடத்துகிறார்கள்.

பி.ஏ சிஸ்டத்தில் அறிவிப்பு வர, யாரும் சொல்லாமலேயே எல்லோரும் லைனில் நிற்க, டிக்கட் ஸ்டிக்கரை சட்டையில் ஒட்டியவர்களை சரிபார்த்து, அனுப்பினார் சுதேசி ரான். (உள்ளூர்க்காரர் என்பதால்)
அறிமுகப்படலம் முடித்து ராக்கஃபெல்லர் குடும்பத்தைப் பற்றி வரலாற்றுப்பாடம் எடுத்தார். “ஸ் அப்பாடா, இப்பவே கண்ணக்கட்டுதே”, என்றாள் மனைவி. பஸ் மலையில் ஏறத் துவங்கியது."உலகம் முழுவதும் சொத்துக்கள் இருக்கும் ராக்கஃபெல்லரின் எஸ்டேட்களில் ஹட்சன் வேலியில் உள்ளதுதான் பெரியது" என்றார் ரான். சுமார்  4000 ஏக்கராம். அம்மாடியோவ் என்று பெருமூச்சுவிட, "ஆனால் வீடு இருக்கும் பகுதி சிறியது தான்" என்று நிறுத்தி வெறும் 300 ஏக்கர்" என்றார். என்னது 300 ஏக்கர் சிறியதா, ஒரு ஆளுக்கு இது கொஞ்சம் ஓவர் என்று நினைத்தேன்.
சுற்றிலும் கோட்டைச்சுவர் போலிருக்க, ஒரு பெரிய அலங்கார இரும்பு நுழைவாயிலின் வழியாக பஸ் உள்ளே நுழைந்தது. எங்கு பார்த்தாலும், மரங்களும், புல்வெளிகளும், நீரூற்றுகளும் சூழ்நிலையை ரம்மியமாக்கின. சரேலென்ற ஒரு ஏற்றத்தில் பஸ் ஏறி நிற்க, கம்பீரமான வீடு தெரிந்தது. வீடா இது. மாபெரும் மாளிகை, ஏன்  அரண்மனை என்றும் சொல்லலாம். எப்படித்தான் பராமரிக்கிறார்களோ?
அவ்வளவு பெரிய வீட்டுக்கு, படிகள் நேராக, இல்லாமல் பக்கவாட்டில் இருந்தன. ஏனென்றால் கோச் வண்டிகள் வந்து நிற்க தோதாகவும், வீட்டிலிருந்து வருபவர்கள், வண்டிக்குள் நேராக நுழையும் வண்ணமாகவும் வாயில் அமைந்திருந்தது.ஏற்கனவே சொன்னதுபோல ராக்கஃபெல்லர் எளிமையான வாழ்வு வாழவே விரும்பினார். ஆனால் அவர் மகன் ராக்கஃபெல்லர் ஜூனியர்தான் மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார்.


என்ன மக்கா , உள்ளே  போலாமா ?


12 comments:


  1. //என்ன மக்கா , உள்ளே போலாமா ?//

    என்ன பாத்ருமிற்கு போவதற்ககெல்லாம் ஸ்டாப் போட்டு போவீர்களா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் , வேற என்ன செய்வது ? என்னிடம் டையாபர் இல்லையே ?

      Delete
  2. எனக்கு இந்த மாதிரி பில்டிங்கை எல்லாம் பார்க்க இப்போதெல்லாம் பிடிக்கவில்லை. அமெரிக்கா வந்த புதிதில் எல்லாம் சுற்றி பார்ப்போம் ஆனால் இப்ப எல்லாம் போடா டயத்தை வேஷ்ட் பண்னிகிட்டு என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் எழுதுவதை பார்க்கும் போது நீங்கள் சொல்லும் இடங்களுகெல்லாம் போய் பார்க்க வேண்டியது போல இருக்கிறது...

    இதோடு இடத்தை போய் பார்த்து விட்டு வர்ணிப்பதை நிறுத்தி விடுங்கள் இல்லையென்றால் தர்ம அடிதான் கிடைக்கும்


    தெளிவாக சொல்லி வருகிறீர்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஆஹா , ஒரு பக்கம் பாராட்டு , இன்னொரு பக்கம் தர்ம அடி , நன்றி நண்பரே .

      Delete
    2. தர்ம அடி சும்மா இருக்கும் எனக்கு ஊர் சுற்றி வர ஆசையை தூண்டிவிட்டதற்குதான்

      Delete
    3. ஐயா பார்த்து , படாத இடத்தில பட்டுரப்போகுது , நான் ரொம்ப நல்லவன்னு வேறு சொல்ராய்ங்க.

      Delete
    4. நியூயார்க்கில் ஒரு தமிழ்பரதேசி http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post_29.html

      Delete
    5. நட்புக்கும் , அன்புக்கும் நன்றி நண்பரே .

      Delete
  3. அவர்கள் உண்மைகள் தளம் மூலம் உங்கள் தளம் வருகை... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்... அ. உ. நண்பருக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. என் ஊர்க்காரர், என் தளத்தில் இணைவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி

      Delete
  4. மதுரைத் தமிழன் வழிகாட்ட இங்கே வந்து விட்டேன்...... உங்களுடன் நாங்களும் சுற்றிப் பார்க்க இதோ உள்ளே வந்து கொண்டிருக்கிறோம்! :)

    தொடர்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. வாட்டாள் நாகராஜ் தவிர மற்ற எல்லா நாகராஜ்களையும் மனதார வரவேற்கிறேன் ..

      நானும் மதுரைத்தமிழன்தான் .

      தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete