Thursday, October 5, 2017

சிவாஜிக்குப் பாடிய SPB

Image result for கவரிமான்

பூப்போலே உன் புன்னகையில்
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 35
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/05/sp.html

            1979ல் வெளிவந்த கவரிமான் என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல் இது. சிவாஜியின் சிம்மக் குரலுக்கு  TM செளந்திரராஜனைத்தவிர வேறு யாரும் சரியாக மேட்ச் ஆகமாட்டார்கள் என நினைத்த காலம் அது. இளையராஜாவும் பல பாடல்களில் அதனையே பின்பற்றினார். "அந்தப்புரத்தில் ஒரு மகாராணி", "தேன் மல்லிப்பூவே" ஆகிய பாடல்கள்  அதற்கு சாட்சி. ஆனால் கவரிமான் படத்தில் SPB  பாடிய இந்தப் பாடல் சிவாஜிக்கு மிகவும் பொருத்தமாகவே இருந்தது. அதற்காக இதற்கு முன்னால் சிவாஜிக்கு SPB பாடியதேயில்லை என்று சொல்லிவிடமுடியாது. MS விஸ்வநாதன் இசையில் கூட SPB குரலை சிவாஜிக்குப் பயன்படுத்தியிருக்கிறார். திரிசூலம் படத்தில் 'காதல் ராணி', கெளரவம் படத்தில் "யமுனா நதி இங்கே" போன்ற பல பாடல்கள் இருக்கின்றன. யேசுதாசும் கூடப்பாடியிருக்கிறார் .ஆனால் பெரும்பாலும் சிவாஜியின் இளைய வேடத்திற்காக இருக்கும். ‘பூப்போலே’ என்ற அந்தப்பாடலை முதலில் கேட்டுவிடுங்கள்.


Image result for Ilayaraja with sivaji
Sivaji with Ilayaraja
இசையமைப்பு:
           தாய் அல்லது தந்தை தங்கள் பிள்ளைகளுக்குப் பாடும் பாடல்கள்  பொதுவாக சென்டிமெண்டலாக  கொஞ்சம் ஸ்லோவாக  தழுதழுக்க இருக்கும். ஆனால் இந்தப்பாடல் வேகப்பாடலாக இருக்கிறது. ஆரம்பத்திலேயே தபேலா இசையுடன் வேகமெடுக்கும் பாடல் கடைசி வரை வேகத்துடன் இருந்து முடிகிறது. அதற்குத்தகுந்தாற்போல் பல இசைக்கருவிகளை இணைத்து இசையமைத்திருக்கிறார் இளையராஜா. வழக்கம்போல் புல்லாங்குழலும் கிடாரும் இருக்கிறது. வயலின் குழுமம் மிஸ்ஸிங். இந்தப்பாடலை முழுவதுமாக வரும் தபேலாப் பாடல் என்று சொல்லலாம். துள்ளல் இசைக்கும் மகிழ்ச்சி மூடுக்கும்  இந்த மெட்டு பெரிதும் துணையாக இருக்கிறது.

பாடல்வரிகள்:


பொன் உலகினை கண்டேனம்மா

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

(
பூ போலே

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே

மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே

(
பூ போலே )

அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி
அது தாய்மையை கொண்டாடுது

குக்கூ என்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே



Related image

          பாடலை எழுதியவர் எழுபதுகளில் இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியராகத் திகழ்ந்த பஞ்சு அருணாச்சலம் அவர்கள். இவருக்குப்பாடல்கள் கொடுத்தது இளையராஜாவின் நன்றிக்கடனாகவும் இருக்கலாம். ஆனால் வழக்கம்போல்  இல்லாமல் நல்ல வரிகளைக் கொடுத்திருக்கிறார் பஞ்சு. அவருடைய பிள்ளைகளையும் நினைத்து எழுதியிருக்கலாம். முதல் சரணத்தில் வரும், "பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே, மூங்கிலிலே வரும் சங்கீதம்  போல் நீ சிரிப்பது காவியமே" என்பவை நல்ல வரிகள். ஆனாலும் புதிய சிந்தனை அல்ல. இரண்டாவது சரணத்தில் "நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது கண்ணோடு நேசம் ஆறாகுமே", என்று ஆனந்தக் கண்ணீரைக் குறித்துச் சொல்லும்போது மனத்தைத் தொடுகிறார் பஞ்சு. மெட்டுக்கு ஈடு கொடுக்கும்  வரிகள் என்று முழுப்பாடலையும் சொல்லலாம்.
பாடலின் குரல்:
Image result for ilayaraja with SPB

          கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் இந்தப்பாடலில்  SPB -ன் குரல் சற்றே வித்தியாசமாக ஒலிப்பதைப் பார்ப்பீர்கள். இது, இளையராஜா, ஸ்கேல் என்று சொல்லப்படும் சுருதியில் செய்த மாற்றமாக இருக்கலாம். அல்லது சிவாஜிக்காக SPB சற்றே மாற்றிப்பாடியதாக எடுத்துக் கொள்ளலாம். எது எப்படியென்றாலும் பாடல் அருமையாக ஒலிக்கிறது. அவரவர் பிள்ளைகளை நினைத்துக் கொண்டு பாடினால் பாடலின் சுவை இன்னும் கூடும் என்பதில் சந்தேகமில்லை.
இளையராஜாவின் ஆரம்ப கட்ட இசையில் ஒலிக்கும் நல்ல பாடல் இது. மறுபடியும் ஒருமுறை கேட்டுப்பாருங்களேன். 

தொடரும்



5 comments:

  1. SPB சிவாஜிக்கு 1972 இலேயே விஸ்வநாதன் இசையில் பாடியிருக்கிறார்.
    பொட்டு வைத்த முகமோ எனும் இந்த ஹிட் பாடல் சுமதி என் சுந்தரி படத்தில் இடம்பெற்றது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பகிர்வுக்கு நன்றி.

      Delete
  2. அதை தொடர்ந்து ராஜா , சிவகாமியின் செல்வன் , கொளரவம் போன்ற பல படங்களுக்கு பாடியிருக்கிறார்.

    ReplyDelete
  3. நல்ல அலசல்...! ராஜா ராஜா தான் !

    ReplyDelete