Monday, June 20, 2016

பரதேசியைப் பிடிக்க வந்த சீன ராணுவம் !!!!!!!!!!!!



சீனாவில் பரதேசி -12
Forbidden city Entrance

அவன் என்னவோ சொல்ல, நான் உடனே என்னுடைய அனுமதிச்சீட்டை எடுத்துக் காண்பித்தேன். அந்தக் கையைத் தள்ளிவிட்டு மேலும் ஏதோ சொன்னான். ஒன்றும் புரியாமல் நான் திரு திருவென்று முழிக்க, என் கையைப்பிடித்து இழுத்துச் சென்றான். ஒரு கம்யூனிச நாட்டிலா நம் கதை முடியணும் என்று நொந்தவாறே அவன் இழுத்த இழுவைக்கு பின்னால் சென்றேன். ஒரு ஓரமாய் இழுத்துக் கொண்டு சென்று கையைப் பிடித்துக் கொண்டே வாக்கி டாக்கியில் ஏதோ பேசினான். சிறிது நேரத்தில் வாத்தியங்கள் முழங்க ஒரு சிறு இராணுவப்பிரிவு அணிவகுத்து வந்தது. என்னடா இது இந்தச்சிறு பரதேசியைப் பிடிக்க பெரும் ராணுவமே வருகிறதே என்பதை நினைத்து பயப்படுவதா சந்தோஷப்படுவதா என்று ஸ்தம்பித்து நின்றேன். இந்த தாவரவாதியை தீவிரவாதி என்று நினைத்து விட்டார்களோ என்று அச்சமாய் இருந்தது.

Chinese Army 

   நல்ல குளிரிலும் எனக்கு  வியர்த்து விட்டது. ஆனால் ராணுவ அணிவகுப்பு எங்களைக் கடந்து போனது. சீன ராணுவத்தின் இளம் வீரர்கள் மிடுக்கான யூனிபார்ம் உடுத்தி துடுக்கான நடை நடந்து சென்றனர் .சும்மா சொல்லக்கூடாது நம் எதிரி ராணுவம்தான். ஆனால் அந்த ஒழுக்கம் , கூர்மை , கவனம் என்னை ரொம்பவே ஈர்த்தது . அணிவகுப்புக்கு இடைஞ்சலாக நான் ரோட்டின் நடுவில் வந்ததால் என்னை ஓரமாக இழுத்துசென்றான்   என்று அப்போதுதான் புரிந்தது. அதன் பின்  வீரன் என் கையை விட்டுவிட உடனே கொஞ்சம் தள்ளி நின்று அணிவகுப்பை படமெடுத்தேன்.  திரும்பவும் என்னை நோக்கி ஓடி வந்த மஞ்சள் வீரன், நோநோ என்று சொல்லித் துரத்திவிட்டான்.


வருகின்ற வழியில் ஒரு பெரிய சதுரமான பல அடுக்கு மாளிகை வந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள், அதுதான் சீனப்பேரரசரின் கேளிக்கை மண்டபம். அங்கே பைப் ஆர்கன் போன்ற ஒரு  இசைக்கருவி இருந்தது. ஒருபுறம் இருந்த பெரிய ஹாலில் நாடகங்கள், ஓப்ரா நிகழ்ச்சிகள் நடக்க, அதன் எதிரே மாடியில் பேரரசர் தன் குடும்பத்துடன் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பாராம். நடுவில் கீழே உள்ள இடத்தில் மற்றவர்கள் அமர்ந்து ரசிப்பார்களாம். 

Emperor's Opera Hall


உடனே எனக்கு திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள நாடக சபா ஞாபகம் வந்தது. அதில் மன்னர் உயரத்தில் உள்ள மேடையில் உட்கார்ந்து ரசிக்க, நடனங்கள், நாடகங்கள் ஆகியவை எதிரே இருந்த பள்ளமான இடத்தில் நடக்குமாம்.

இதைத்தான் உடைக்கவேண்டும் என்று சீமான் சொல்கிறார். ஏன் என்று கேட்டால் அது தமிழனை மற்றவன் ஆண்ட அவமானச் சின்னமாம். அப்படிப்பார்த்தால் தமிழ்நாட்டில் ஏன் இந்தியா முழுவதும் ஒரு வரலாற்று நினைவுச்சின்னமும் மிஞ்சாது. மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரம், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சியம்மன் அம்மன் கோவில் என்று ஒன்று கூட மிஞ்சாது. சென்னையிலும் ஏன் டெல்லி ஆக்ராவிலும் ஒன்றும் மிஞ்சாது. இதைப் போல பைத்தியக் காரப்பேச்சுகளை சீமான் நிறுத்த வேண்டும்.

மன்னிக்கவும் எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் விட்டேன். மீண்டும் விலக்கப்பட்ட நகருக்கே போவோம்.

சில பகுதிகள் மராமத்து வேலைக்காக மூடி இருந்தன. அதின் முன்னால் எழுதியிருந்த ஆங்கில அறிவிப்புகள் சிரிப்பை வரவழைத்தன. ஆனால் ஆங்காங்கு மஞ்சள் வீரர்கள் இருந்ததால் சிரிப்பதற்கும் பயமாக இருந்தது.


வெளியே வருவதற்கே ரொம்ப நேரம் ஆனது, உலகத்தின் மிகப்பெரிய வரலாற்று சின்னத்தின், உலகத்தின் மிக மூத்த நாகரிகமான சீன நாகரிகத்தின் பிறப்பிடத்தையும், ஒரு காலத்தில் உலகத்தின் மிகப்பெரிய சீன சாம் ராஜ்யத்தின் மைய இடத்தையும் பார்த்த மகிழ்ச்சியில் வெளியே வந்தேன்.

வரும் வழியில் ஒரு வெள்ளைக்காரக் கும்பல் நின்றிருந்தது. அதன் வெள்ளைக்கார வழிகாட்டி சொன்ன சம்மர் சொல்லத்தவறிய சில தகவல்களை கீழே தருகிறேன்.
“தி ஃபர்பிட்டன் சிட்டி” (The Forbidden City) என்ற படம் இங்கே எடுக்கப்பட்டதாம். சீனப் பேரரசரைச் சந்தித்த ஒரு அமெரிக்கனைப் பற்றிய படம் இது. பார்க்கவேண்டும்.


1987ல் வந்த “தி.லாஸ்ட் எம்பெரர்” (The Last Emperor) என்ற படம்தான் சீனமக்கள் குடியரசின் அரசால் முதன்முதலில் அனுமதிக்கப்பட்டு, இந்த அரண்மனை வளாகத்தில் எடுக்கப்பட்ட படம். கடைசிப் பேரரசரான 'புயி' அவர்களின் வரலாற்றைக் குறிக்கும் இந்தப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு புகழ் பெற்றது. நான் சென்னையில் இருக்கும்போதே இந்தப்படத்தைப் பார்த்தேன்.

அடுத்தது மார்க்கோ போலோ (Marco polo) என்ற தொலைக்காட்சித் தொடர் இங்கே எடுக்கப்பட்டது. இது NBC  மற்றும் RAI  டெலிவிஷனும் இணைந்து தயாரித்த தொடர். மார்கோ போலோ, சீனாவில்  குப்லாய் கானை சந்திப்பது பற்றிய தொடர் இது. நெட்ப்லிக்சில்    இருக்கிறது.

அது தவிர விலக்கப்பட்ட நகரத்தில் பலவித இசை நிகழ்ச்சிகள், ஓபரா காட்சிகள் நடந்திருக்கின்றன என்று கூகிளில் அறிந்துகொண்டேன்.
Yanni Program in Forbidden city


1997ல் கிரீசைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் யான்னி (yanni) இங்கே மாபெரும் இசைநிகழ்ச்சியை நடத்தினார். அது அங்கேயே லைவ் ஆக ரிக்கார்ட் செய்யப்பட்டு பின்னர் "Tribute Album" - என்ற இசைத் தொகுப்பில் இடம்பெற்றது. இது விலக்கப்பட்ட நகரத்தின் முன்புறத்தில் நடந்தது.

1998ல் 'Turandot' என்ற ஓபரா நிகழ்ச்சி நடந்தது. இது Giacomo Puccini என்ற ஓபரா குழுவினரால் நடத்தப்பட்ட சீன இளவரசியின் கதை.

2001ல் 'The Three Tenors' என்ற இசைக்குழுவின் மூன்று புகழ் வாய்ந்த பாடகர்கள் 'Placido Domingo Jose carreras  மற்றும் Luciano Pavaroti' ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை நடத்தினார்களாம். முதல் இருவரும் ஸ்பானியர், மூன்றாமவர் இத்தாலி நாட்டுப் பாடகர்.

2004ல் பிரெஞ்சு இசைக் கலைஞர்  Jean Michel Jarre தனது 260 பேர் கொண்ட மிகப்பெரிய இசைக் குழுவுடன் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். 2004; நடந்த  " Year of France in China" என்ற விழாவின் நிமித்தமாக இது நடைபெற்றது.

வெளியே வரும் வழியில் சீன இளவரசர்கள் இளவரசிகள் விளையாடும் பெரிய பூங்காக்களைப் பார்த்தேன். அது தவிர அதனருகில் அவர்கள் பெயரில் வளர்க்கப்பட்ட மாபெரும் மரங்களையும் பார்த்தேன்.

பார்த்துக் களைத்து முடித்து மெதுவாக நடந்து வெளியே வந்தேன். ஓட்டல் வந்து சேர்ந்து அப்பாடா என்று சோபாவில் அமர்ந்தபோது கிரீன் டீயில் தேனைக் கலந்து புன்சிரிப்புடன் நீட்டினாள் ஜோகன்னா. ஆஹா ஆஹா அலைந்து திரிந்து வந்தவனுக்கு அந்த தேநீர் அமிர்தமாக இருந்தது.


- தொடரும்.

7 comments:

  1. அவ்வளவு உயரத்திருந்து பார்த்தால் / கேட்டால் கீழே பள்ளத்தில் நடக்கும் கேளிக்கைகள் காதில் விழுமோ? மைக் இல்லாத காலங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஒப்ரா அல்லது ஆப்பரா என்பது வயிற்றின் ஆழத்தில் இருந்து குரல் எடுத்து சத்தமாக பாடும் ஒரு முறை .நம்மூர் அந்தக்கால தெருக்கூத்து மாதிரி .

      Delete
  2. நேரம் நல்லா இருந்து இருக்கு!!! சீன நாடுக்கு.. :)
    உங்க மேல மட்டும் சீன இராணுவம் கை வச்சி இருந்தா..
    உங்களால பலன் அடைஞ்ச அமெரிக்காவும்., நீங்க பிறந்ததால் பெருமை அடைஞ்சு இருக்குற இந்தியாவும்., உடனே அந்த நாடு மேல படை எடுத்து இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. நண்பா , புல்லரிக்குது.உங்களை மாதிரி நான்கு பேர், இல்லை வேண்டாம் நீர் ஒருவர் போதும். என்னோடு வந்தால் , சீன ராணுவத்தை நொறுக்கிவிடலாம் .

      Delete
    2. நாம ரெண்டு பேரு போயி நொறுகுற அளவுக்கு அந்த நாடு worth இல்ல..
      :) விட்டுருங்க பொழச்சி போகட்டும்

      Delete
  3. உங்களுக்கு எப்படிதான் இதுபோன்ற தலைப்புகள் கிடைக்கிறதோ ?

    ReplyDelete
    Replies
    1. உங்களை வந்து படிக்க வைக்க அப்பப்பா எப்படியெல்லாம் யோசிக்கவேண்டி இருக்கு

      Delete