Thursday, June 16, 2016

நியூயார்க் ஈழத்தமிழ் விழாவில் சூப்பர் சிங்கர்ஸ் !!!!!!!!!!!

Add caption

'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்', ஜூன் மாதம் 4-ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரதேசி ஆஜர். நியூயார்க்கில் நான் வசிக்கும், குயின்ஸ் போரோவின் ஃபிளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்பிள் கலையரங்கத்தில் இது நடைபெற்றது. தமிழீழ சகோதரரும் ,தமிழத்தின் மருமகனுமான (இவர் மனைவி காரைக்குடி) கவிஞர் சிவபாலன் வரவேற்றார். பார்க்கிங் கிடைக்காதுன்னு 5 மணி புரோகிராமுக்கு 3 மணிக்கே என் பார்யாளை எழுப்பிக் கிளப்பி நாலு  மணிக்கெல்லாம் வந்துட்டோம். அதிர்ஷ்டவசமாக கலையரங்கத்திலிருந்து ஒரு பிளாக் தள்ளி ஒரு பள்ளிக்கூடம் முன்னால் பார்க்கிங் கிடைத்தது. காரை விட்டு இறங்கிப் பார்த்தால் 'பிரின்ஸ் ஜூவல்ரி' அங்கே எதிரே இருந்தது. ஆஹா இங்கே பார்க்கிங் கிடைத்தது என் அதிர்ஷ்டமில்லை, துரதிர்ஷ்டம் என்பது அப்போதுதான் விளங்கியது.  
  

"நேரமாச்சு சிக்கிரம் வா", என்று என் மனைவியை எதிர்ப்பக்கம் பார்க்கவிடாமல் விறுவிறுவென்று முன்னே விரைந்து சென்றேன். “5 மணி புரோகிராமுக்கு 3 மணிக்கே கிளம்பி வந்தீட்டிங்களே”,  என்று என் மனைவி சொன்னதை கண்டுகொள்ளாமல் 4:30 மணிக்கெல்லாம் நுழைந்தபோது, அங்கே நாலைந்து பேர்தான் இறந்தனர். சரி உள்ளே போய் உட்காருவோம் என்று நுழையப்போனால், அங்கே காவலுக்கு ஆப்பிரிக்க அமெரிக்க ஆஜானுபாகன், சிரித்துக் கொண்டே சொன்னான் "ஆறு மணிக்குத்தான் உள்ளே விடுவோம்" என்று. என் மனைவி என்னை ஒரு முறை முறைக்க, இல்லையே 5 மணி என்றுதானே போட்டிருக்கிறது" என்றேன் அவனிடம்.  

Sathyaprakash

"ஐந்து மணி என்று போட்டிருந்தால் இந்திய நேரப்படி 6 மணி" என்று சிரித்துக்கொண்டே   சொன்னான். அதுவும் ஒரு அந்நியன் சொன்னது கொஞ்சம் அவமானமாக இருந்தது.

என் மனைவி மீண்டும் என்னை முறைத்துவிட்டு, “வாருங்கள் பிரின்ஸ் ஜீவல்ரி போவோம்", என்றாள். ஐயையோ மறுபடியும் மாட்டிக் கொண்டோமே என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது கவிஞர் சிவபாலன் வர, "ரூத் நீ போய்ட்டு வா நான் இவர்ட்ட கொஞ்சம் பேசனும் அதோட உள்ளே போய் இடம் போட்டு வைக்கிறேன்னு', சொல்ல ரூத் நகர்ந்தாள். ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு சிவபாலனிடம் கதைக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய நியூராலஜிஸ்ட் டாக்டர் நந்தகுமார் (முத்தமிழ் மன்றத்தலைவர்), தமிழ்ச் சங்க பொருளாளர் ரங்காவின் மனைவி புனிதா என்று தெரிந்த முகங்கள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன.
Parvathi

சுமார் 6:10 க்கு உள்ளே விட்டார்கள். என் மனைவி வைத்திருந்த 2 பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், டெம்ப்பிள் கேண்டீனில் வாங்கிய மிக்சர் பாக்கெட் ஆகிய எதையும் உள்ளே விட மறுத்து எடுத்துக் கொண்டார்கள். கடோத்கஜனின் பக்கத்தில் இருந்த டேபிள் முழுவதும் பாட்டில்களும் பண்டங்களும் நிரம்பி வழிந்தன.

உள்ளே போய் உட்கார்ந்தோம், அரங்கு நிறையவில்லை. போனதடவை அதே இடத்தில் தமிழ்ச் சங்க விழா நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இடம் கிடைக்காது, மேலே பால்கனியில் உட்கார்ந்து டிவி பார்ப்பது போல் இருந்ததால் தான் இன்றைக்கு சீக்கிரம் வந்தேன். ஆனால் கீழேயே பாதிக்கு மேல் காலியாக இருந்தது ஈழத்தமிழரின் மனநிலையைக் காண்பித்தது போல் தெரிந்தது.

ஆரம்பிக்கும் போது மணி 6.40. இந்திய மணிப்படி ஒரு மணி நேரத்தாமதம் என்றால், இலங்கை மணிப்படி  இன்னும் லேட்டாகும் என்று அப்போதுதான் தெரிந்தது. ஒருவேளை ஆட்கள் சேரவில்லை என்பதால் தாமதமாக ஆரம்பித்திருக்கலாம்.

நண்பர் KS. ராஜா புகழ் ரமேஷ் கிருஷ்ணா வந்து வணக்கம் கூறி, ஈழத்தில் உயிர் துறந்த வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தி, பின்னர் ஈழ விடுதலைப் பாடல் ஒன்றும் இசைக்கப்பட்டது.

 சத்யபிரகாஷ், சந்தோஷ், பிரகதி, பார்வதி, பிரியங்கா ஆகியோர் வரவேண்டியது. இதில் சந்தோஷூக்கும் பிரியங்காவுக்கும் விசா கிடைக்கவில்லை என்றார்கள். ஆனால் நியூஜெர்சியில் வாழும் கிருஷ்ணா ஸ்ரீதரன் அதற்குப் பதிலாக வந்திருந்தார். நாங்கள் எலிவேட்டரில் வரும் போதே சத்யபிரகாஷூம் பார்வதியும்அதில்  எங்களோடு வந்தனர் .



இசைக்குழு நியூஜெர்சியில் இருக்கும், வசந்த் வசீகரன் குழு. ஏற்கனவே இவர்களை பலமுறை பார்த்திருக்கிறேன். 2 கீபோர்டு, ஒரு புல்லாங்குழல், ஒரு பேஸ், டிரம்ஸ், மற்றும் ரோட்டர் டிரம்ஸ் தபேலா ஆகியவைதான்  ஆர்க்கெஸ்ட்ரா, 2ஆவது  கீபோர்டு வாசித்த இளைஞன் சில பாடல்களுக்கு ஹாலோ கிட்டாரில் ரிதம் வாசித்தான்.

ஐந்தாறு  பாடல் வரை கீபோர்டும், புல்லாங்குழலும் கேட்கவில்லை. அவர்களும் என்னென்னவோ பண்ணிப் பார்த்தார்கள். அப்புறம் தீடீரென்று வேலை செய்ய ஆரம்பித்தபின் தான் கச்சேரி களைகட்டியது.

சத்யா பிரகாஷின் சீசனில் வந்தவர்களில் இவர்தான் இப்போது மோஸ்ட் வான்ட்டட்  சிங்கர். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் பாடி வருகிறார். சமீபத்தில் தாரை தப்பட்டையில் இளையராஜாவுக்கும் பாடியுள்ளார். அந்தப் பாடலுடன்தான், அவரின் பாடல் வரிசைகள் ஆரம்பித்தது. அதன்பின் அவர் “ ஒரு காதல் கண்மணி”யில் பாடிய “சின்னஞ்சிறு ரகசியமே”, வெள்ளைக்கார துரையில் பாடிய "அம்மாடி உன் அழகு", “காதல் சடுகுடு” போன்ற பாடல்கள் சூப்பராக அமைந்தன. அதுதவிர பிரகதியுடன் இணைந்து பாடிய "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை', “தூங்காத விழிகள் ரெண்டு”, “உதயா உதயா”, ஆகிய பாடல்கள் சத்யபிரகாஷ் எந்த வகைப்பாடல்களையும் பாட வல்லவர் என்பதை நிரூபித்தன. அதோடு பார்வதியுடன் டூயட் பாடி " ஏ மிஸ்டர்” (காவியத்தலைவன்) “வெள்ளைபுறா ஒன்று”, “ஆத்தங்கரை மரமே” ஆகிய பாடல்களும் நன்றாகவே அமைந்தன.

அமெரிக்காவின் டார்லிங் பிரகதி வரும்போது மிகுந்த ஆரவாரம் எழுந்தது. இன்னும் அழகாகி இருந்தாள். இப்போது மாடலாகவும் ஜொலிக்கிறாள். தமிழ்ப் படத்தில் தமிழ்பேசி நடிக்க ஒரு கதாநாயகி ரெடி. "ஒசக்க ஒசக்க " என்று தான் பாடிய பாடலுடன் தன் கணக்கை ஆரம்பித்து நிறைய டூயட் பாடல்கள் பாடினாள். அதில் கிருஷ்ணாவுடன் பாடிய "அழகே சுகமா”, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, “டார்லிங் டம்பக்”, ஆகிய பாடல்கள் அருமை.


பார்வதியின் குரலில் இன்னும் இனிமை கூடியிருக்கிறது. அவர் பாடிய “கள்வரே கள்வரே”, “ஊருசனம்”, “சின்னத்தாயவள்” மற்றும் கிருஷ்ணாவுடன் பாடிய "தென்றல் என்னை முத்தமிடும்", “ஜிங்கனமணி”,  ஆகிய பாடல்கள் மிக இனிமையுடன் ஒலித்தன. பிரகதியை விட பார்வதியின் குரல் மெருகேறி ஒலித்தது. தற்சமயம் சென்னையில் செட்டில் ஆகி எத்திராஜ் கல்லூரியில்  வேறு படிப்பதால் தமிழ் இப்போது தகராறு இல்லை.

Uruthirakumar 
இடையில் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு  உருத்திரகுமார் வந்து, தமிழீழ தாகத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சி வேக உரையொன்றை நிகழ்த்தினார். ஆனால் வந்திருந்த ஆடியன்ஸ் மத்தியில் அதே உணர்வு காணப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் இப்போது அமைந்துள்ள தமிழ் அரசோடு இணைந்து அரசியல் தீர்வு எட்டுவதுதான் இப்போதுள்ள சிறந்த வழி என்று நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ அதிக மக்கள் வரவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் அன்றைய நாள் இனிய மாலையாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
முற்றும்


4 comments:

  1. இங்கே புதுகையில் இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைப்பதில்லை... http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீராம். ஆமாம் நான் ஜனவரியில் புதுகைக்கு வரும்போது தங்களை சந்தித்தேனா ?

      Delete
  2. நல்ல தொகுப்பு. 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' எனக்கு புது விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி பாஸ்கர்.

      Delete